Image

http://www.pustaka.co.in

லாரா

Lara

Author:

ரா. கி. ரங்கராஜன்

Ra. Ki. Rangarajan

For more books

http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

அத்தியாயம் 33

அத்தியாயம் 34

அத்தியாயம் 35

அத்தியாயம் 36

அத்தியாயம் 37

அத்தியாயம் 38

அத்தியாயம் 39

அத்தியாயம் 40

அத்தியாயம் 41

அத்தியாயம் 42

அத்தியாயம் 43

அத்தியாயம் 44

அத்தியாயம் 45

அத்தியாயம் 46

அத்தியாயம் 47

அத்தியாயம் 48

அத்தியாயம் 49

அத்தியாயம் 50

அத்தியாயம் 51

அத்தியாயம் 52

அத்தியாயம் 53

அத்தியாயம் 54

அத்தியாயம் 55

அத்தியாயம் 56

அத்தியாயம் 57

அத்தியாயம் 58

அத்தியாயம் 59

அத்தியாயம் 60

அத்தியாயம் 61

அத்தியாயம் 62

அத்தியாயம் 63

அத்தியாயம் 64

அத்தியாயம் 65

அத்தியாயம் 66

அத்தியாயம் 67

அத்தியாயம் 68

அத்தியாயம் 69

அத்தியாயம் 70

முன்னுரை

ஸிட்னி ஷெல்டன் எழுதிய மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று லாரா. எப்போதும்போல் இதையும் எடிட்டர் எஸ்.ஏ.பி. அவர்கள்தான் தேர்ந்தெடுத்து என்னிடம் தந்து மொழி பெயர்க்கும்படி சொன்னார். அவருடைய ஆசியினாலும் வரி காட்டுதலினாலும் இக்கதை வாசகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றது. நல்ல மொழிபெயர்ப்பாளன் என்று எனக்குப் பெயர் வாங்கித் தந்தது.

லாரா தொடர்கதை முடிவிலிருந்த சமயம் நான் எழுதிய நிகழ்ச்சியை இங்கே சேர்ப்பது பொருத்தமாக இருக்கும். அது:

லாரா தொடர்கதை வெளியான தினத்தன்று ஆசிரியரவர்கள் என்னைக் கூப்பிட்டு, "நீங்கள் பார்த்தீர்களா?" என்று விளையாட்டுச் செய்திகள் கொண்ட பக்கத்தைப் பிரித்து ஒரு செய்தியைக் காட்டினார்.

‘லாரா - 277’ என்று தலைப்புப் போடப்பட்டிருந்தது. மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் வீரர் லாரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மாட்சில் 277 ரன்கள் குவித்திருந்தார். ‘அங்கே ஒரு லாரா - இங்கே ஒரு லாரா! எப்படி!" - என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ஆசிரியர். எங்கள் இருவருக்குமே கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு.

லாரா கதை முடியும் சமயம் அதே லாரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்சில் 375 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்திருக்கிறார்.

ஆசிரியரவர்களின் அறைக்குள்ளே போய், பேப்பரைக் காட்டி, ‘இது எப்படி!’ என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது. அவர்தான் இல்லை.

விசேஷம் என்னவென்றால், ப்ரையன் லாரா மேலும் மேலும் கிரிக்கெட் சாதனைகளைப் புரிந்து கொண்டு வருகிறார். இங்கிலாந்தில் ஒரே இன்னிங்ஸில் 501 ரன்கள் எடுத்து, அவர் செய்துள்ள சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது.

இந்த நாவலை வாசிக்கப் போகும் எல்லா வாசகர்களும், கற்பனைப் பாத்திரமான லாராவையும் அசல் பாத்திரமான லாராவையும் போல வெற்றிகள் பெற வாழ்த்துகள்.

- ரா. கி. ரங்கராஜன்

லாரா

1

‘1991’ ம் வருடம், செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி, இரவு எட்டு மணி.

ராட்சத வெள்ளைச் சிறகு போல் ஆகாயத்தில் நீந்திக் கொண்டிருந்த அந்தத் தனியார் விமானத்தை அடர்த்தியான கருமேகங்கள் ஆட்டிப் படைத்து கொண்டிருந்தன.

"மிஸ் லாரா, தங்கள் சீட்பெல்ட்டை இறுக்கமாய்க் கட்டிக்கொள்கிறீர்களா?’ என்று பைலட் தன் இருக்கையிலிருந்த வண்ணம் ஒலிபெருக்கியில் கேட்டார். அவர் குரலில் கவலை தெரிந்தது.

பதில் இல்லை.

"மிஸ் லாரா... மிஸ் லாரா... உங்களைத்தான்..."

ஆழ்ந்த சிந்தனைகளிலிருந்து அவள் விடுபட்டு, "ஒ... ஆமாம்." என்றாள். மகிழ்ச்சி நிறைந்த கடந்த காலங்களில், மகிழ்ச்சி நிறைந்த இடங்களில் அவள் மனம் மூழ்கியிருந்தது.

"வசதியாக இருக்கிறீர்களா? இந்த ஆட்டம் இன்னும் கொஞ்சம் நேரத்தில் சரியாகிவிடும்."

"ஓ, சௌகரியமாக இருக்கிறேன், ரோஜர்."

‘ஹூம் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கக் கூடாதா? இருந்து, இந்த விமானம் முறிந்து விழக்கூடாதா’ என்று எண்ணிக் கொண்டாள் லாரா. அப்படி நேர்ந்தால் எவ்வளவு பொருத்தமான முடிவாக இருக்கும்! ஆனால் எங்கேயோ ஏதோவொன்று தப்பாகிவிட்டது. எல்லாமே தப்பாகி விட்டது. அதைத்தான் விதி என்கிறார்கள் போலிருக்கிறது. விதியை எதிர்த்துப் போராட யாரால் முடியும்?

கடந்த வருடத்தில் அவளுடைய வாழ்க்கை கட்டு மீறிக் கன்னா பின்னாவென்று சீர்குலைந்துவிட்டது. அனைத்தையுமே இழந்துவிடும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

இனிமேல் எதுவும், எதுவுமே தப்பாகப் போகாது என்று எண்ணிக் கசப்புடன் சிரித்துக் கொண்டாள் லாரா. தப்பாகப் போவதற்கு என்ன மிச்சம் இருக்கிறது!

காக்பிட்டின் கதவைத் திறந்து கொண்டு பைலட் வெளியே வந்தார். தன் பிரயாணியை வியந்து போற்றும் பார்வையுடன் ஒரு நிமிடம் நின்றார். என்ன அழகான பெண்மணி! பளபளக்கும் கரிய கூந்தல் தூக்கி வாரப்பட்டு மகுடம் போல் முடியப்பட்டிருந்தது. அப்பழுக்கில்லாத சருமம், அறிவுக் கூர்மை நிறைந்த பூனைக் கண்கள். ரெனோவிலிருந்து புறப்பட்ட பிறகு உடை மாற்றிக் கொண்டிருந்தாள். வெள்ளை நிற இரவு கவுன் சற்றே தோளிலிருந்து இறங்கி, ஆளை மயக்கும் மேனி லேசாய்த் தெரிந்தது. வைரமும் மாணிக்கமும் கலந்த நெக்லெஸ் கழுத்தை அலங்கரித்தது.

பைலட்டுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவளைச் சுற்றியிருந்த சாம்ராஜ்யம் இடிந்து நொறுங்கிச் சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதமாகப் பத்திரிகைகள் அவளை ஈவிரக்கமில்லாமல் தாக்கிக் கொண்டிருக்கின்றன, அப்படியும் இவளால் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது!

"போன் வேலை செய்கிறதா, ரோஜர்?"

"இல்லை என்று தோன்றுகிறது மிஸ் லாரா. இந்தப் புயல் காரணமாகப் பல கோளாறுகள். லா கார்டாவை அடைய ஒரு மணி நேரம் தாமதமாகும். ஸாரி..."

‘என் பிறந்த நாள் பார்ட்டிக்கு லேட்டாகத்தான் போக முடியும்.’ என்று எண்ணிக் கொண்டாள் லாரா. இன்னேரம் எல்லாரும் வந்திருப்பார்கள். அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதி, நியூயார்க் கவர்னர், மேயர், ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரை டஜன் நாடுகளிலிருந்து - பைனான்சியர்கள்... யாரையெல்லாம் கூப்பிட வேண்டும் என்று அவளே பட்டியல் தயாரித்துத் தந்திருந்தாள்.

காமெரான் பினாஸா என்று தன் ஒட்டலின் விருந்து மண்டபம் இந்த நிமிடம் எப்படி இருக்கும் என்று அவளால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. பெரிய பெரிய லஸ்தர் விளக்குகள் வைரம் போல் வெளிச்சத்தை வாரியிறைக்கும்... இரு நாறு விருந்தினர்களுக்காக இருபது மேஜைகள் போடப்பட்டிருக்கும். அவற்றின்மீது அருமையான லினன் துணி விரிக்கப்பட்டு, வெள்ளியிலும் உயர்ந்த ரகப் பீங்கான்களிலும் பாத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். மேஜைகளின் நடுவே வெள்ளை வெளேரென்ற பூங்கொத்துக்கள் வைக்கப்பட்டிருக்கும்...

வெளியே பரந்த வரவேற்பறையில், இரண்டு புறத்திலும் மதுபான பார்கள், நடுவே ஏராளமாய் உணவு வகைகள்- பஃபே விருந்து. பக்கெட் பக்கெட்டாக ஐஸில் போட்டு வைத்துள்ள ஷாம்பேய்ன் புட்டிகள். பத்து அடுக்குக் கொண்ட பர்த்டே கேக் சமையலறையில் தயாராகிக் கொண்டிருக்கும். வேலையாட்களும் பணிப் பெண்களும் அவரவர் இடத்தில் தயாராக நின்றிருப்பார்கள்.

நடன மண்டபத்தில் ஓர் இசைக் குழு காத்திருக்கும். அவர்கள் இசைக்கப் போகும் சங்கீதத்திற்கேற்ப விருந்தினர்கள் நடனமாடுவார்கள். ராத்திரி பூரா கேளிக்கை

அவளுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக.

நாற்பதாவது பிறந்த நாளை.

டின்னர் அற்புதமாக இருக்கும். என்னென்ன ஐட்டம் இருக்க வேண்டுமென்று அவளே பார்த்துப் பார்த்து மெனு தயாரித்துத் தந்திருந்தாள்.

மூச்சை நிறுத்தக்கூடிய பிரமிப்பான பார்ட்டி நடக்கப் போகிறது.

நான் தலையை நிமிர்த்தி நடப்பேன். விருந்தினர்களை நேருக்கு நேராகச் சந்தித்துப் பேசுவேன்.

எனக்கு எதுவுமே நேரவில்லை என்பது போல.

நான் சாதாரணப் பெண் அல்ல. நான் லாரா லாரா காமெரான்.

விமான தளத்தில் இறங்கியபோது ஒன்றரை மணி லேட்டாகிவிட்டது.

பைலட்டை நோக்கித் திரும்பினாள் லாரா. "இன்று ராத்திரி நாம் ரெனோவுக்குத் திரும்ப வேண்டும், ரோஜர். எத்தனை நேரமானாலும் பரவாயில்லை."

"நான் தயாராக இருப்பேன், மிஸ் லாரா."

வெளியே அவளுக்காக லிமோஸின் காருடன் டிரைவர் காத்திருந்தான்.

"நீங்கள் இன்னும் வரவில்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன், மிஸ் லாரா."

"பருவ நிலை சரியில்லாததால் விமானம் தாமத மாகிவிட்டது. சீக்கிரமாய் வண்டியை ஓட்டு"

"இதோ மேடம்."

காருக்குள்ளிருந்த டெலிபோனை எடுத்து ஜெர்ரியின் நம்பரைச் சுழற்றினாள்.

பார்ட்டிக்கான எல்லா ஏற்பாடுகளையும் அவன்தான் கவனித்துக் கொண்டிருந்தான். விருந்தினர்கள் வசதியாக இருக்கிறார்களா என்று அவனை விசாரிக்க விரும்பினாள்.

ஆனால் மணி அடித்துக் கொண்டிருந்தது. யாரும் எடுக்கவில்லை.

நடன மண்டபத்தில் இருக்கிறான் போலிருக்கிறது.

"வேகமாய்ப் போ, மாக்ஸ்."

"சரி மேடம்."

காமெரான் பிளானபா ஒட்டலைக் காணும் போதெல்லாம் அவள் நெஞ்சு பெருமையில் விம்முவது வழக்கம், காரணம், அது அவளே கட்டிய சொந்தப் படைப்பு. ஆனால் இப்போது அதைப் பற்றி நினைக்கக் கூட நேரம் இருக்க வில்லை. நடன மண்டபத்தில் எல்லாரும் காத்துக் கொண்டிருப்பார்கள்.

சுழல் கதவைத் திறந்து கொண்டு பிரம்மாண்டமான வெராந்தாவுக்குள் நுழைந்தாள். உதவி மானேஜரான கார்லோஸ் அவளைக் கண்டதும் விரைந்து வந்தார்.

"மிஸ் காமெரான். வந்து..."

"எல்லாம் அப்புறம்." என்று கூறிவிட்டு, நடையைத் தொடர்ந்தாள்.

நடன மண்டபத்தின் கதவுக்கு வெளியே நின்று சீராக மூச்சு விட்டு, தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

அவர்களை எதிர்நோக்க நான் தயார்.

புன்சிரிப்புடன் கதவைத் திறந்தவன்.

அடுத்த வினாடி அதிர்ச்சியில் சிலையாகி நின்றாள்.

மண்டபம் இருட்டில் மூழ்கியிருந்தது.

தனக்கு ஸர்ப்ரைஸ் தர வேண்டுமென்று திட்ட மிட்டிருக்கிறார்களா, என்ன?

கையைத் துழாவி, கதவின் அருகேயிருந்த ஸ்விட்சைப் போட்டாள்.

அந்த விஸ்தாரமான மண்டபமெங்கும் விளக்குகள் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சின. ஆனால்-

யாரும் இல்லை. ஒருத்தரென்றால் ஒருத்தர் கூட இல்லை.

உறைந்து போய் நின்றாள் லாரா.

இருநூறு விருந்தினர்களும் எங்கேதான் போனார்கள்? என்னதான் ஆயிற்று?

சரியாய் எட்டு மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தோமே? இப்போது மணி எட்டாகப் போகிறதே!

அவ்வளவு பேரும் எப்படி மாயமாய் மறைந்திருக்க முடியும்? ஏதோ இட்சிணி வேலை மாதிரியால்லவா இருக்கிறது?

ஆளே இல்லாது மண்டபத்தின் எல்லாப் பக்கங்களிலும் பார்வையைச் சுழற்றினாள்.

காலி காலி!

அவள் உடம்பு நடுங்கியது.

போன வருஷம் இதே நாள், இதே பிறந்த நாள் பார்ட்டியின் போது, இதே மண்டபம்-

அவளுடைய நண்பர்களால் நிறைந்து வழிந்தது. சங்கீதமும் சிரிப்பும் அலைமோதின.

நன்றாய் நினைவிருக்கிறது...

சரியாய் ஒரு வருஷம் முன்பு, இதே தேதியில்.

காலை ஐந்து மணிக்குத் தேகப் பயிற்சியில் ஆரம்பித்து அடுக்கடுக்காக எவ்வளவு வேலைகள் இருந்தன!

டி.வி. யில் பேட்டி, ஜப்பானிய பாங்க்கர்களுடன் விவாதம், போன் கால்கள், கடிதங்கள், மேயருடன் சந்திப்பு, பெரிய பெரிய தொழிலதிபர்களுடன் விருந்து, பேச்சு வார்த்தை...

எல்லாம் முடிந்து இரவு எட்டு மணிக்கு, கேமரான் பிளாஸா நடன மண்டபத்தில் பிறந்த நாள் பார்ட்டி நடை பெற்றது.

அன்று காலை ஐந்து மணிக்கு அவள் தேகப் பயிற்சிக்கான உடைகளை அணிந்துகொண்டு காத்திருந்தாள். பயிற்சியாளர் கென் லேட்டாக வந்தான்.

"ஸாரி மிஸ் லாரா. அலாரம் அடிக்காமல் இருந்து விட்டது..."

"சரி, சரி. சீக்கிரம் ஆரம்பி. இன்று எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது."

அரை மணி நேரம் தண்டால் எடுத்த பிறகு விறுவிறு வென்று மற்ற உடற்பயிற்சிகளைச் செய்தாள்.

‘அப்பா இவளுக்கு எப்படிப்பட்ட உடம்பு’ இருபத்தொரு வயசு இளம் பெண் தோற்றாள்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் கென். இங்கே வருவதென்றால் அவனுக்குத் தனி மகிழ்ச்சி. லாராவைப் பார்க்க... லாராவின் அருகில் இருக்க... லாரா எப்படி என்று யாரேனும் கேட்டால், ‘அவள் வயது பத்து’ என்று சொல்வான்.

கடினமான பயிற்சிகளைச் சுலபமாகச் செய்து முடித்தாள் அவள். ஆனால் அவள் மனம் அதிலே ஈடுபடவில்லை.

பயிற்சிகள் முடிந்ததும் கென் புறப்பட்டான். "வருகிறேன், மேடம். உங்களை டி.வி. யில் ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் பார்க்கப் போகிறேன்." என்றான்.

"என்னது" என்றாள் லாரா. அந்தத் தொடர் நிகழ்ச்சியில் அன்று அவள் பேச வேண்டுமென்று ஏற்பாடு. மறந்தே போய் விட்டது. ஜப்பானிய பாங்க்காரர்களைச் சந்திக்கப் போவது குறித்தே எண்ணிக் கொண்டு இருந்து விட்டாள்.

"நாளை வருகிறேன் மேடம்."

"நாளைக்கும் லேட்டாய் வராதே."

ஷவரில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு காலைச் சிற்றுண்டி அருந்தினாள். திராட்சைப் பழம், பயறு பருப்பு வகைகள், பாலில்லாத டீ இவைதான் அவளுடைய காலை உணவு.

சாப்பிட்டு முடித்ததும் படிப்பு அறைக்குச் சென்றாள். செக்ரட்டரியைக் கூப்பிட்டு, "வெளிநாடுகளுக்குப் போட வேண்டிய கால்களை நான் ஆபீஸ் வந்த பிறகு போட்டுக் கொடு, ஏழு மணிக்கு டி.வி. நிலையத்தில் இருக்க வேண்டும். டிரைவர் மாக்ஸிடம் காரைக் கொண்டு வரும்படி சொல்லு."

‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சி நல்லபடி நடந்தது. அதை நடத்தும் ஜோன் லண்டன் என்ற பெண் மணி வழக்கம் போல் மதிப்பும் மரியாதையுமாகப் பேசினாள்.

"நீங்கள் கடைசியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது உலகத்திலேயே மிக உயரமான அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, கடைக்கால் எடுத்திருந்தீர்கள். நினைவிருக்கிறதா? ஏறத்தாழ நாலு வருஷம் இருக்கும்..."

லாரா தலையசைத்தாள். "ஆமாம், ஆமாம். அடுத்த வருஷம் கட்டிடம் முடிந்துவிடும்."

"வீட்டு மனைகள் வாங்குவது, விற்பது, கட்டிடம் கட்டுவது - இது போன்ற ரியல் எஸ்டேட் பிஸினளெல்லாம் பொதுவாக ஆண்களின் சாம்ராஜ்யமாயிற்றே? அதிலே நீங்கள் புகுந்து ரொம்ப வெற்றிகரமாக விளங்குகிறீர்கள்? உதாரணமாக ஒரு கட்டிடம் எழுப்ப மனை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?"

"மனையை நான் தேர்ந்தெடுப்பதில்லை. மனைதான் என்னைத் தேர்ந்தெடுக்கிறது." என்றாள் லாரா, "காரில் போய்க் கொண்டிருப்பேன். ஒரு காலி மனை எதிர்ப்படும். ஆனால் அதைக் காலி மனையாக நான் பார்க்க மாட்டேன். அதிலே ஓர் அழகான ஆபீஸ் கட்டிடத்தைத்தான் பார்ப்பேன். அல்லது அருமையான குடியிருப்பு அபார்ட்மெண்ட்டைப் பார்ப்பேன். அங்கே ஜனங்கள் சந்தோஷமாக, வசதியாக வசிப்பதைக் காண்பேன். நான் கனவு காண்கிறேன்.

"கனவுகளைப் பலிக்கும்படி செய்கிறீர்களே, அது தான் விசேஷம்" என்று பாராட்டினாள் அந்தப் பெண்.

ஜப்பானிய பாங்க்காரர்கள் ஏழே முக்காலுக்கு வருவதென்று ஏற்பாடாகியிருந்தது.

முந்தின இரவுதான் அவர்கள் டோக்கியோவிலிருந்து வந்திருந்தார்கள். பன்னிரண்டு மணி நேர விமானப் பயணம்.

"அவ்வளவு காலையில் நாங்கள் வருவது கஷ்டமாக இருக்குமோ?" என்று அவர்கள் முணுமுணுத்தார்கள். ஆனால் லாரா, "ஸாரி, ஜென்ட்டில்மென். எனக்கு வேறு நேரமே கிடையாது. நமது மீட்டிங் முடிந்தவுடனேயே நான் தென் அமெரிக்காவுக்குக் கிளம்ப வேண்டியிருக்கிறது" என்று சொல்லிவிட்டாள்.

இரவு பகல் மாறிப் போன குழப்பத்தால் இரவு பூரா அவர்கள் சரியாகத் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்டிருப்பார்கள். அது தெரிந்து, வேண்டுமென்றேதான் காலையில் பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்திருந்தாள் லாரா.

2

ப்பானிய ஃபைனான்ஸியர்கள் மொத்தம் நாலு பேர் வந்திருந்தார்கள். குள்ளமான தோற்றம், மரியாதையான நடத்தை. ஜப்பானிய மன்னர்களின் பட்டாக்கத்தியை போலக் கூர்மையான அறிவு.

நியூயார்க் ஆறாவது அவென்யூவில் இருந்த காமெரான் ஸென்ட்டர் என்னும் அலுவலகத்தில் சந்திப்பு நடை பெற்றது. லாரா திட்டமிட்டிருக்கும் ஓட்டல் காம்ப்ளெக்ஸில் நூறு கோடி டாலர் முதலீடு செய்வதற்காக அவர்கள் வந்திருந்தார்கள். விஸ்தாரமான கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வந்ததும் ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுகளை லாராவிடம் கொடுத்து வணக்கம் சொன்னார்கள். லாரா நன்றி கூறி, பதிலுக்குத் தானும் பரிசுகள் வழங்கினாள். பரிசுகள் சாதாரண மணிலா அல்லது பழுப்புக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்தன. அது லாரா தன் செக்ரட்டரிக்கு இட்டிருந்த கட்டளை. ஜப்பானியர்களுக்கு வெள்ளை நிறம் மரணத்தைக் குறிக்கும் என்பதும், கண்ணை உறுத்தும் வண்ணங்கள் அவர்களுக்குப் பிடிக்காது என்றும் லாராவுக்குத் தெரியும்.

லாரா திட்டமிட்டிருந்தபடியே அந்த ஜப்பானியர்கள் இன்னும் தூக்கக் கலக்கம் அகலாமல் இருந்தார்கள். லாராவின் உதவிப் பெண் ட்ரிஷியா, லாரா சொல்லியிருந்தபடி அவர்களுக்கு டீயும் லாராவுக்குக் காப்பியும் கொண்டு வந்து வழங்கினாள். காப்பியாயிருந்தால் தேவலை என்று வந்திருந்தவர்களுக்குத் தோன்றியது. மரியாதையை முன்னிட்டு மறுப்புச் சொல்லாமல் டீயையே அருந்தினார்கள்.

கோப்பைகள் காலியானவுடன் ட்ரிஷியா மறுபடியும் டீயையே நிரப்பினாள். அதுவும் லாரா முன்னதாகவே சொல்லியதிருந்ததுதான்.

லாராவின் இணை நிர்வாகியான கெல்லர் உள்ளே வந்தார். ஐம்பது வயதிருக்கும். சோனி மனிதர். தலை கலைந்து, உடைகள் கசங்கியிருந்தன. அப்போது தான் படுக்கையிலிருந்து எழுந்து வந்தவர் மாதிரியே எப்போதும் காட்சியளிப்பார் அவர்.

வந்திருந்தவர்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தாள் லாரா. முதலீடு சம்பந்தமான விவரங்களை அவர்களுக்கு வழங்கினார் கெல்லர்.

"பார்த்தால் உங்களுக்கே தெரியும், ஜென்டில்மென்." என்றாள் லாரா. "இந்த ஓட்டல் காம்ப்ளெக்ஸ்க்கான முதல் ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. விருந்தாளிகளுக்காக எழுநூற்றிருபது பகுதிகள் இருக்கும். பொதுவான இடம் முப்பதாயிரம் சதுர அடி... ஆயிரம் கார்களை நிறுத்துவதற்காக இட வசதி செய்திருக்கிறோம்."

லாராவின் குரல் சுறுசுறுப்புடன் இயங்கியது. அவ்வளவுக்கவ்வளவு அந்த ஜப்பானியர்கள் தங்கள் தூக்கக் கலக்கத்தை விரட்டியடிக்கப் படாத பாடுபட்டார்கள். பன்னிரண்டு மணி நேர விமானப் பயணத்துக்குப் பிறகு நேற்றிரவுதான் வந்திருந்தார்கள். எனவே ‘ஜெட்லாக்’ என்னும் பகலிரவுக் குழப்பத்திலிருந்து இன்னும் விடுபட வில்லை.

இரண்டு மணி நேரத்தில் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது- முற்ற முழுக்க வெற்றிகரமாக. அது லாரா எதிர்பார்த்ததுதான். ஐம்பதாயிரம் டாலர் கடன் வாங்குவதைக் காட்டிலும் நாறு கோடி டாலர் முதலீடு செய்யும்படி பண்ணுவது சுலபமான காரியம் என்பதை அவள் அனுபவ பூர்வமாக எப்போதோ அறிந்திருந்தாள்.

ஜப்பானியர்கள் புறப்பட்டு சென்றதும், லாராவின் பொதுத் தொடர்பு அதிகாரியான ஜெர்ரி வந்தான். ஹாலிவுட்டில் விளம்பர நிர்வாகியாக இருந்து அனுபவம் பெற்றவன்.

அன்று காலை டி.வி. யில் லாரா கொடுத்த பேட்டி பிரமாதமாக அமைந்திருந்தது என்று கூறிவிட்டு, "ஏகப்பட்ட பேர் டெலிபோனில் கூப்பிட்டுப் பாராட்டினார்கள்." என்று தெரிவித்தான். பிறகு என்னென்ன பிரபலமான பத்திரிகைகளில் அவளைப் பற்றிய கட்டுரையோ அட்டைப் படமோ வருகிறதென்பதை விவரித்தான்.

லாரா தன் மேஜையை நோக்கி நடந்தபடி, "ம்... பரவாயில்லை" என்று மட்டும் சொன்னான்.

"ஃபார்ச்சூன் பத்திரிகையிலிருந்து பேட்டிக்காக இன்று மாலை வருகிறார்கள்" என்றான் ஜெர்ரி.

"இல்லை. அதை மாற்றிவிட்டேன்."

ஜெர்ரிக்கு ஆச்சரியம். "ஏன்?"

"அந்தப் பத்திரிகையின் நிருபரை இன்று என்னுடன் பகலுணவுக்கு வரும்படி சொல்லியிருக்கிறேன்."

"ஆ. ஆமாம். அவர்களைக் கொஞ்சம் சரிப்படுத்த வேண்டியதுதான்."

இன்டர்காம் பட்டனை அழுத்தி, "கேத்தி, நீ வரலாம்." என்றாள்.

"எஸ் மேடம்," என்று பதில் வந்தது.

"நீங்கள் போகலாம் ஜெர்ரி" என்று விடை கொடுத்தாள் லாரா. "நீங்களும் உங்கள் ஆட்களும் லாரா டவர்ஸ் பற்றியே முழுக் கவனம் செலுத்த வேண்டும்... என்ன?"

"செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம், மேடம்..."

"போதாது. இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். லாரா டவர்ஸ் பற்றிய கட்டுரை ஒவ்வொரு தினசரியிலும் ஒவ்வொரு பத்திரிகையிலும் வரவேண்டும். உலகத்திலேயே உயரமான கட்டிடமாக இருக்கப் போகிறது அது. ஆமாம், உலகத்திலேயே! யாரைப் பார்த்தாலும் அதைப் பற்றியே பேச வேண்டும். கட்டி முடிக்கப்பட்டதும், நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு ஜனங்கள் வந்து, கடைக்கு இடம் வேண்டும் என்றும், குடியிருக்க அபார்ட்மெண்ட் வேண்டும் என்றும் நம்மைக் கெஞ்ச வேண்டும்."

"சரி மேடம்."

அவன் புறப்பட்டுச் சென்றதும் லாராவின் அலுவலக செக்ரட்டரியான கேத்தி வந்தாள். முப்பது வயதுள்ள நீக்ரோ பெண். கச்சிதமாக உடையுடுத்தி, பளிச்சென்று இருந்தாள்.

"அந்தப் பத்திரிகை நிருபரைச் சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறோமே, அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை விசாரித்து வைத்துக் கொண்டாயா?"

"தெரிந்து கொண்டேன், மேடம். நன்றாக ரசித்து ருசித்துச் சாப்பிடுகிறவராம் அவர்." என்று கூறிய கேத்தி, என்னென்ன உணவுகளுக்குப் பிரத்தியேகமாக ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்தாள்.

"நல்லது. என்னுடைய பிரைவேட் டைனிங் அறையில் நாங்கள் சாப்பிடும்படி ஏற்பாடு செய்."

"அந்தப் பேட்டி அதிக நேரம் போய்விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும், மேடம். ஏனென்றால் மெட் ரோபாலிட்டன் பாங்க்கர்களுடன் உங்களுக்கு இரண்டரை மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறது."

"அதை மூன்று மணிக்கு மாற்று. அவர்கள் இங்கேயே வரும்படி ஏற்பாடு பண்ணு."

கேத்தி அதைக் குறித்துக் கொண்டாள். "உங்களுக்கு வந்திருக்கும் கடிதங்களைப் படித்துச் சொல்லட்டுமா மேடம்?"

"சொல்லு."

"குழந்தைகளுக்கான ஃபௌண்டேஷன் உங்களைச் சிறப்பு விருந்தினராக வரும்படி அழைத்திருக்கிறது. இருபத்தெட்டாம் தேதி."

"வேண்டாம். நான் மிகவும் சந்தோஷப்பட்டதாக எழுதி, நன்கொடை செக் அனுப்பிவிடு."

"செவ்வாய்க்கிழமையன்று டுல்ஸாவில் ஒரு மீட்டிங்..."

"ரத்து செய்துவிடு."

"மன்ஹாட்டன் மகளிர் சங்கம் உங்களை விருந்துக்குக் கூப்பிட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை."

"வேண்டாம். நன்கொடைக்காகத்தான் - கூப்பிடுகிறார்கள் என்று தோன்றினால் செக் அனுப்பு."

"நீங்கள் விருந்துக்கு வந்து சொற்பொழிவு ஆற்று வேண்டுமென்று அறிவியக்கக் கூட்டமைப்பு அழைத்திருக்கிறது. நாலாம் தேதி."

"அதற்கு என்ன பண்ணலாம் என்று யோசனை பண்ணி வை."

"உடற்பயிற்சியாளர் கழகத்தில் நன்கொடை திரட்டுவதற்காக ஒரு கூட்டம் நடக்கிறதாம். சிறப்பு விருந்தினராக நீங்கள் வரவேண்டுமென்று கூப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அதே தேதியில் நீங்கள் சான் பிரான்ஸிஸ்கோவில் இருக்க வேண்டும்."

"சரி, இவர்களுக்கும் நன்கொடை செக் அனுப்பி விடு."

"ஸர்ப் தம்பதி அடுத்த சனிக்கிழமை ஒரு டின்னர் பார்ட்டி வைத்திருக்கிறார்கள்."

"போனால் நன்றாயிருக்கும். பார்க்கலாம்" என்றாள் லாரா. க்றிஸ்டியன் சர்பும் அவர் மனைவி டெபோராம் நல்ல நண்பர்கள், அவர்களைப் பார்ப்பது லாராவுக்குப் பிடித்தமான விஷயம்.

அன்றைய நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டாள் லாரா.

"கேத்தி, என்னைப் பார்த்தால் எவ்வளவு பேர் தெரிகிறது?"

"என்னமேடம்?"

"என்னை நன்றாகப் பார். எவ்வளவு பேர் தெரிகிறேன்?"

"நீங்கள் ஒருத்தர்தான், மேடம்."

"ஆமாம். இருப்பது நான் ஒருத்திதான். இன்று ஒரே நாளில் இரண்டரை மணிக்கு மெட்ரோபாலிடன் பாங்க்கர்ஸ், நாலு மணிக்கு வட்டாரக் கமிஷன், ஐந்து மணிக்கு மேயர், ஆறேகால் மணிக்கு ஆர்க்கிடெக்டுகள், ஆறரை மணிக்கு ஹவுசிங் கமிஷன், ஏழரைக்குக் காக்டெயில் பார்ட்டி, எட்டு மணிக்கு என் பிறந்த நாள் பார்ட்டி. இவ்வளவையும் என் ஒருத்தியாலே சமாளிக்க முடியுமா? அடுத்த தடவை எனக்காக நிகழ்ச்சிகள் தயாரிக்கும்போது மூளையை உபயோகிக்கப் பார்..."

"ஸாரி மேடம். நீங்கள் சொன்னபடி...’

"நான் சொல்வதெல்லாம் நீ உன் மூளையை உபயோகித்து வேலை செய்ய வேண்டும் என்பதுதான். என்னைச் சுற்றி மக்குகள் இருப்பது எனக்குப் பிடிக்காது. ஆர்க்கி டெக்டடுகள், ஹவுசிங் கமிஷன் இரண்டையும் வேறு நேரத்துக்கு மாற்றி அமை."

"சரிமேடம்." என்றாள் கேத்தி, கொஞ்சம் ரோஷத்துடன்.

"குழந்தை எப்படி இருக்கிறது?"

அந்தக் கேள்வி கேத்தியை ஆச்சரியப்படுத்தியது. "டேவிட் டேவிட்டைக் கேட்கிறீர்களா? நன்றாயிருக்கிறான். ஃபைன்."

"இப்ப நன்றாய் வளர்ந்திருப்பானே?"

"இரண்டு வயசாகிறது. மேடம்."

"எந்த ஸ்கூலில் சேர்ப்பது என்று ஏதாவது யோசனை பண்ணி வைத்திருக்கிறாயா?"

"இன்னும் இல்லை. அதற்குள்ளேயா..."

"அப்படி எண்ணாதே. தப்பு. நியூயார்க்கில் குழந்தையை நல்ல ஸ்கூலில் சேர்க்க வேண்டுமென்றால், குழந்தை பிறப்பதற்கு முன்பே யோசனை செய்ய ஆரம்பிக்கணும்."

மேஜை மீதிருந்த சின்ன நோட்டில் குறித்து வைத்துக் கொண்டான் லாரா. "டால்ட்டன் ஸ்கூலின் பிரின்ஸிபாளை எனக்குத் தெரியும். டேவிட்டின் பெயரை பதிவு செய்து வைத்துக் கொள்ளுபடி சொல்கிறேன்."

"ரொ... ரொம்பத் தாங்க்ஸ் மேடம்."

லாரா அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை, "சரி, நீ போகலாம்."

கேத்தி வெளியேறினாள். தன் எஜமானியம்மாளை நேசிப்பதா, வெறுப்பதா என்று அவளுக்குத் தெரியவில்லை. லாரா என்ட்டர்ப்ரைஸஸ் நிறுவனத்தில் அவள் வேலைக்குச் சேர்ந்தபோது, பலபேர் அவளைப் பயமுறுத்தினார்கள். "அந்த பொம்பளை ஒரு இரும்புப் பட்டாம் பூச்சி, காலில் சக்கரம் கட்டிக் கொண்டிருக்கிற பிசாசு" என்றார்கள். "லாராவிடம் செக்ரட்டரியாக இருப்பவர்கள், எத்தனை நாள் வேலை செய்தோம் என்று கேலண்டரைப் பார்ப்பதில்லை. கடிகாரத்தைத்தான் பார்ப்பார்கள்" என்றார்கள்.

முதல்முறை லாரா அவளைப் பேட்டி கண்டது கேத்திக்கு நன்றாய் நினைவிருந்தது.

அரை டஜன் பத்திரிகைகளில் அவள் லாராவின் புகைப்படங்களைப் பார்த்திருந்தாள். ஆனால் அதையெல்லாம் தூக்கி அடிக்கிற மாதிரி இருந்தார் நேரில் பார்த்த போது. என்ன அசத்தலான அழகு!

கேத்தியைப் பற்றிய விவரங்களை லாரா தெரிந்து வைத்திருந்தாள், நிமிர்ந்து பார்த்து, "உட்கார் கேத்தி." என்றாள். அவளிடமிருந்து ஒரு சுறுசுறுப்பு அலை புறப்பட்டு, சுற்றுப்புறச் சூழ்நிலைகளையெல்லாம் வியாபிப்பது போல இருந்தது கேத்திக்கு.

"என்னோட ரெண்டு செக்ரட்டரிகள் போய்விட்டார்கள். எல்லாம் ஒரே கந்தல் கூளமாக இருக்கிறது இங்கே. அவசரம், தெருக்கடி என்றால் உன்னால் சமாளிக்க முடியுமா?’

"முடியுமென்றுதான் நினைக்கிறேன்."

"நினைக்கிறேன் கினைக்கிறேனெல்லாம் வேண்டாம். முடியுமா, முடியாதா?"

இந்த வேலையே வேண்டாம் என்று அந்த நிமிடம் கேத்திக்குத் தோன்றியது. இருந்தாலும், "முடியும், மேடம்" என்றாள்.

"நல்லது. ஒரு வாரத்துக்கு நீ எப்படி வேலை செய்கிறாய் என்று பார்க்கிறேன். இங்கே லாரா என்ட்டர் பிரைஸஸில் செய்யும் வேலையை பற்றியோ, என்னைப் பற்றியோ வெளியே மூச்சு விடமாட்டேன் என்று நீ எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும். அதாவது, பேட்டி, புத்தகம் முதலிய சமாசாரம் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது. இங்கே நடப்பது அத்தனையும் அந்தரங்கமானவை புரிகிறதா?"

"புரிகிறது."

"ஆல்ரைட்."

இப்படித்தான் கேத்தியின் வேலை ஆரம்பமாயிற்று. ஐந்து வருடங்களுக்கு முன்பு, இந்தக் காலத்தில் எஜமானியம்மாளைக் கேத்தி வெறுத்திருக்கிறாள்; நேசித்திருக்கிறாள்; வியந்திருக்கிறாள்; சபித்திருக்கிறாள். ஆரம்பத்தில் ஒருநாள் அவள் கணவன், "அந்தம்மாளைப் பற்றி என்னென்னவோ சொல்கிறார்களே, எப்படி இருக்கிறாள்?" என்று கேட்டான்.

கஷ்டமான கேள்வி. "வித்தியாசமான பெண். பார்த்ததும் மயக்கம் போட்டு விழுகிற மாதிரி அழகு, எனக்குத் தெரிந்து இந்த மாதிரி உழைக்கிறவர் யாருமே கிடையாது. எப்போதுதான் தாங்குவாளோ, கடவுளுக்கே வெளிச்சம். எந்த வேலையும் அப்பழுக்குச் சொல்ல முடியாதபடி கனகச்சிதமாக இருக்க வேண்டும். அவள் கீழே வேலை செய்கிறவர்கள் செத்தார்கள்! அவள் அலாதியான மேதை. சில சமயம் அற்பத்தனமாக இருப்பாள். சில சமயம் வஞ்சம் தீர்க்கிற மாதிரி இருப்பாள், சில சமயம் நம்பவே முடியாத அளவுக்குத் தாராளமாய் இருப்பாள்."

கேத்தியின் கணவன் புன்னகை செய்து, "மொத்தத்தில் ஒரு பெண் என்கிறாய்?’ என்றான்.

கேத்தி புன்னகை செய்யவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்து.

"அவள் எப்படிப்பட்டவள் என்று எனக்குப் புரிய வில்லை. ஒரோர் சமயம் பயமாய்க்கூட இருக்கிறது."

"சேசே ரொம்பத்தான் ஒவராகச் சொல்கிறாய்?"

"இல்லை... நிஜமாய்த்தான் சொல்கிறேன். யாராவது அவளுக்குக் குறுக்கே நின்றால்... கொலை கூடச் செய்வாள்." என்றாள் கேத்தி.

வெளிநாட்டுக் கால்களையும், ஃபேக்ஸ்களையும் கவனத்தானதும், பஸ்ஸரை அழுத்தி சார்லியை வரச் சொன்னாள் லாரா. நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் அவனுடைய பொறுப்பில் இருந்தன.

ஒரு நிமிடத்துக்கெல்லாம் சார்லி வந்தான். "என்ன, மேடம்?"

"நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு நீ கொடுத்திருக்கும் பேட்டியைப் படித்தேன்." என்றாள் லாரா.

அவன் முகம் பிரகாசமாயிற்று. "நான் இன்னும் பார்க்கவில்லை. எப்படி இருந்தது மேடம்?"

"லாரா என்ட்டர்ப்ரைஸஸ் பற்றியும் நமக்கு இருக்கும் சில பிரச்சினைகனைப் பற்றியும் நீ அதில் சொல்லியிருந்தாய்."

அவன் முகம் கறுத்தது. "வந்து... அந்த ரிப்போர்ட்டர்... நான் சொன்னது சிலதை... தப்பாய் எழுதியிருக்கலாம்..."

"ரைட், நீ வேலையிலிருந்து நின்று கொள்."

"என்ன... ஏன்?"

"நீ வேலையில் சேர்ந்தபோது, யாருக்கும் எந்தப் பேட்டியும் கொடுப்பதில்லை என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறாய்."

"வந்து... யார்... யார் என் வேலையைப் பார்ப்பார்கள்?"

"அதற்கெல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது. நீ போகலாம்..." என்றாள் லாரா.

3

பார்ச்சூன் பத்திரிகை நிருபருடன் விருந்து சாப்பிட்டு முடித்தாள் லாரா. நிருபர் பெயர் தாம்ஸன். தடித்த பிரேம் மூக்குக் கண்ணாடி அணிந்து, அறிவு ஜீவி போன்ற தோற்றத்தில் இருந்தார்.

"சாப்பாடு ரொம்பப் பிரமாதம். எல்லாமே எனக்குப் பிடித்த வகைகள். தாங்க்ஸ்." என்றார்.

"எனக்கும் ரொம்ப சந்தோஷம்." என்றாள் லாரா.

"எனக்காக நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம்."

"இதிலே சிரமம் என்ன?" என்று லாரா புன்னகை செய்தாள். "ஓர் ஆண் மகனின் இதயத்தைப் பிடிக்க வேண்டும் மென்றால் வயிற்று வழியாகப் போக வேண்டும் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார்."

"பேட்டியைத் தொடங்குவதற்கு முன்னால் என் இருதயத்தைப் பிடிக்க வேண்டும் என்பது உங்கள் எண்ணம். அப்படித்தானே?"

"கரெக்ட்," என்று லாரா புன்னகை செய்தாள்.

"உங்கள் நிறுவனத்துக்கு ஏகப்பட்ட தலைவலிகள் ஏற்பட்டிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்களே? அது எவ்வளவு தூரம் உண்மை"

லாராவின் புன்னகை மறைந்தது. "என்ன சொல்கிறீர்கள் புரியவில்லையே?"

"சும்மா சொல்லுங்கள். இதையெல்லாம் மறைத்துக் கொண்டிருக்க முடியாது. உங்கள் சொத்துக்களில் பெரும் பாலானவை ஏகப்பட்ட கடன் பாக்கிகளில் சிக்கி முழுகிக் கொண்டிருக்கிறதாம். நீங்கள் கொடுத்திருக்கும் செக் சூரிட்டிகள் பைசா பெறாதவையாம். லாரா என்ட்டர்ப்ரைஸஸ் ஏகப்பட்ட கோல்மால்கள் செய்து தாக்குப் பிடிக்கப் பார்க்கிறதாம். ஊரில் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள்."

லாரா சிரித்தாள். "அப்படியா பேசிக் கொள்கிறார்கள்! என் வார்த்தையை நம்புங்கள், மிஸ்டர் தாம்பன். இந்த மாதிரி அசட்டு வதந்திகளையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். ஒன்று செய்கிறேன். என் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய விளக்கமான அறிக்கை அனுப்புகிறேன் உங்களுக்கு. அதைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். சரிதானா?"

"ஓ, அது போதும். அப்புறம் இன்னொரு விஷயம், புதிய ஒட்டல் திறப்பு விழாவின்போது உங்கள் கணவர் கண்ணில் படவில்லையே?"

லாரா ஒரு பெருமூச்சு விட்டாள், "வர வேண்டுமென்று ரொம்ப ஆசைப்பட்டார் பிலிப். துரதிர்ஷ்டவசமாக இசை நிகழ்ச்சிக்காக வெளியூரில் இருக்கும்படி நேர்ந்துவிட்டது."

"மூன்று வருஷத்துக்கு முன்னால் அவருடைய இசை நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். அற்புதமான கலைஞர். உங்களுக்குக் கல்யாணமாகி ஒரு வருடம் ஆகியிருக்கும் இல்லை?"

"ஆமாம், என் வாழ்க்கையிலேயே மிகச் சந்தோஷமான வருஷம். தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி." என்றாள் லாரா. "நான் அடிக்கடி வெளியூர்களுக்குப் போக வேண்டியிருக்கிறது. பிலிப்புக்கும் அப்படித்தான். ஆனால் எப்போது வெளியூர் போனாலும் அவருடைய ரெகார்டுகளைக் கேட்டுக் கொண்டே இருப்பேன்."

தாம்ஸன் புன்னகை செய்தார், "அவருக்கும் அப்படித் தான். எந்த ஊருக்குப் போனாலும் நீங்கள் கட்டிய கட்டிடத்தைப் பார்க்க முடியுமே!"

"நீங்கள் என்னை ரொம்பப் புகழ்கிறீர்கள்."

"இல்லை, உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நீங்கள் கட்டிடங்கள் கட்டியிருக்கிறீர்கள். குடியிருப்புக் கட்டிடங்கள், அலுவலகக் கட்டிடங்கள், சங்கிலித் தொடரான ஓட்டல்கள் - இப்படி எவ்வளவோ உங்களுக்குச் சொந்தமாக இருக்கின்றன, இல்லையா? எப்படி இவ்வளவும் செய்திருக்கிறீர்கள்?"

லாரா புன்சிரிப்புடன், "எல்லாம் மாஜிக்தான்." என்றாள்.

"விளையாடாதீர்கள். நீங்கள் ஒரு புதிர்."

"புதிரா? நானா? எப்படி?"

"இந்த நிமிஷம், நியூயார்க்கிலேயே கட்டிடம் கட்டுவோரில் நீங்கள்தான் மிக வெற்றிகரமானவராக இருக்கிறீர்கள். இந்த நகரத்தில், காலி மனைகளில் பாதிக்கு மேல் உங்கள் பெயரில்தான் இருக்கின்றன. உலகத்திலேயே உயரமான கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் போட்டியாளர்கள் உங்களுக்கு இரும்புப் பட்டாம் பூச்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காலம் காலமாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் துறை இது. இதிலே புகுந்து கொடி கட்டிப் பறக்கிறீர்கள்..."

"அதிலே உங்களுக்கு வருத்தமா மிஸ்டர் தாம்ஸன்"

"அதில் வருத்தமில்லை. ஆனால் உண்மையில் எப்படிப்பட்டவர் நீங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிய வில்லையே என்பதுதான் வருத்தம். உங்களைப் பற்றி இரண்டு பேரிடம் அபிப்பிராயம் கேட்டால் மூன்று விதமான அபிப்பிராயம் வருகிறது. நீங்கள் அற்புதமான பிஸினஸ் வுமன் என்று எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். இதெல்லாம் வெறுமே அதிர்ஷ்டத்தால் வந்தது என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நான் எவ்வளவோ கட்டிடக் கம்பெனிகளைப் பார்த்திருக்கிறேன். கட்டிட வேலை செய்யும் அத்தனை பேரும் முரட்டு ஆண்கள். அவர்களிடம் வேலை வாங்குவது ரொம்பக் கஷ்டம். உங்களைப் போன்று ஒரு பெண் எப்படி அவர்களிடம் ஒழுங்காக வேலை வாங்க முடியும்?"

"உங்களைப் போன்ற பெண் என்றா சொன்னீர்கள்? என்னை போன்ற பெண் யாருமே கிடையாது" என்று புன்னகை செய்தாள் லாரா. "சரியஸாகச் சொல்வதானால். அந்தந்தத் துறையில் மிகச் சிறந்தவர்கள் யார் உண்டோ அவர்களை நான் வேலைக்கு அமர்த்திக் கொள்கிறேன். அவர்களுக்குக் கை நிறையச் சம்பளம் தருகிறேன்."

ரொம்பச் சாதாரணம் மாதிரி இந்தப் பெண்பிள்ளை சொல்கிறாள். என்று நினைத்துக் கொண்டார் அந்த நிருபர். இவள் எதைச் சொல்லாமல் இருக்கிறாளோ, அதில்தான் உண்மையான கதை இருக்கிறது.

"கடையில் தொங்கும் எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் சரி, நீங்கள் எவ்வளவு வெற்றிகரமான பெண் மணி என்று எழுதிவிட்டார்கள். நான் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எழுதலாமென்று பார்க்கிறேன். உங்கள் வாழ்க்கையின் பின்னணி என்னவென்று எந்தப் பத்திரிகையிலும் வந்தது கிடையாது."

அவளுக்குப் பின் புறம், சுவரில் மாட்டியிருக்கும் ஓர் உருவப் படத்தைக் காட்டினாள். "அவர்தான் என் தந்தை ஜேம்ஸ் காமெரான்." அவள் குரல் மென்மையாக ஒலித்தது. "என் வெற்றிகளுக்கு அவர்தான் காரணம், நான் அவருக்கு ஒரே குழந்தை. என் சின்ன வயதிலேயே அம்மா இறந்து விட்டாள். என்னை வளர்த்ததெல்லாம் என் அப்பா தான். எங்கள் குடும்பம் ஸ்காட்லந்தில் இருந்தது. ரொம்ப ரொம்ப வருடங்களுக்குமுன் அங்கிருந்து இங்கே வந்து நோவா ஸ்கோஷியாவில் குடியேறிவிட்டது - கிளேஸ் பே என்ற இடத்தில்."

"க்ளேஸ் பேயா?"

"ஆமாம். அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டி யுள்ள இடம். மீனவர்கள் நிறைந்த சின்னக் கிராமம், பிரெஞ்சுக் காரர்கள் முதல் முதலில் அங்கே குடியேறி க்ளோஸ் பே என்று பெயர் வைத்தார்கள். ஐஸ் வளைகுடா என்று அர்த்தம். இன்னும் கொஞ்சம் காப்பி சாப்பிடுகிறீர்களா. மிஸ்டர் தாம்ஸன்?"

"வேண்டாம். தாங்க்ஸ்."

"ஸ்காட்லந்தில் என் தாத்தாவுக்கு ஏராளமான நிலம் இருந்தது. என் அப்பா மேலும் சேர்த்தார். பெரும் பணக் காரர் அவர். இன்றும்கூட ஸ்காட்லாந்தில் எங்களுக்குச் சொந்தமான கோட்டை இருக்கிறது. எட்டு வயதானபோது எனக்கென்று சொந்தமாக ஒரு குதிரை இருந்தது. என் உடைகளை லண்டனில்தான் வாங்குவார்கள். பிரம்மாண்டமான மாளிகையரில் நாங்கள் வசித்தோம். ஏகப்பட்ட வேலைக் காரர்கள். தேவதைக் கதைகளில் வருமே, அந்த மாதிரியான வாழ்க்கை!" பழைய நினைவுகளின் எதிரொலி போல் அவள் குரலில் ஜீவன் ததும்பியது.

"குளிர் காலம் வந்தால் போதும், பனிச்சறுக்கு விளையாடப் போய்விடுவோம். ஹாக்கிப் போட்டிகளைப் பார்ப்போம். கோடை காலம் வந்தால் கடற்கரைதான் எங்கள் வாசஸ்தலம். நீச்சல்கள், விருந்துகள், நடனங்கள்..."

லாரா பேசப் பேச, நிருபர் வேகமாய்க் குறித்துக் கொண்டிருந்தார்.

"எட்மான்ட்டன், கால்காரி. ஒன்ட்டாரியோ முதலிய நகரங்களில் என் தந்தை நிறையக் கட்டிடங்கள் கட்டினார். வீட்டு மனைகள் வாங்குவதும், கட்டுவது மாசு, ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்பது அவருக்கு ஒரு விளையாட்டுப் போல் ஆகிவிட்டது. அதில் அவருக்கு ஒரே மோகம். நான் ரொம்பச் சின்னவளாயிருந்தபோதே அந்த விளையாட்டை எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டார். எனக்கும் அதிலே மோகம் ஏற்பட்டு விட்டது."

அவள் குரல் உணர்ச்சி நிரம்பியதாக இருந்தது. "ஒன்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மிஸ்டர் தாம்ஸன். கட்டிடம் கட்டுவதற்குத் தேவையான பணம், செங்கல், இரும்பு அதெல்லாம் எனக்கு முக்கிய மில்லாத விஷயம். மனிதர்கள்! மனிதர்கள்தான் எனக்கு முக்கியம், வேலை செய்வதற்கும் வசிப்பதற்கும் செளகரியமான இடம் மனிதர்களுக்குத் தேவை. குழந்தை குட்டிகள் பெற்று, குடும்பம் நடத்த அவர்களுக்கு இடம் தேவை. அதை என்னால் கட்டித் தர முடிகிறது. என் தந்தை அதைத்தான் முக்கியமாக நினைத்தார். எனக்கும் அதுதான் முக்கியமென்று ஆகிவிட்டது."

தாம்ஸன் நிமிர்ந்து பார்த்தார். "முதன் முதல் நீங்கள் ரியல் எஸ்டேட் பிஸினஸைத் தொடங்கியது எப்போது? நினைவிருக்கிறதா?"

"நிச்சயமாய்" லாரா முன்புறமாய்க் குனிந்து கொண்டு சொன்னாள். "அது என்னுடைய பதினெட்டாவது பிறந்த நாள். எனக்கு என்ன பரிசு வேண்டுமென்று என் அப்பா கேட்டார். அப்போது எங்கள் காரில் புதிது புதிதாக மனிதர்கள் வந்து குடியேறிக் கொண்டிருந்த சமயம். நாளுக்கு நாள் நெரிசல் அதிகமாகி கொண்டிருந்தது. நிறைய வீடுகள் தேவை என்று என் தந்தையிடம் சொன்னேன். அபார்ட் மெண்ட்டுகள் கொண்ட சின்னக் கட்டிடம் ஒன்று கட்ட ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன். அதற்குத் தேவையான பணத்தை என் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார். ஆனால் இரண்டு வருஷத்தில் சம்பாதித்து அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். பிறகு பாங்க்கில் கடன் வாங்கி இரண்டாவது கட்டிடம் கட்டினேன். இருபத்தொரு வயதான போது மூன்று கட்டிடங்கள் எனக்குச் சொந்தமாக இருந்தன. எல்லாமே வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டவை."

"உங்கள் தந்தைக்கு உங்களைப் பற்றி ரொம்பப் பெருமையாக இருந்திருக்கும். இல்லையா?"

கதகதப்பான புன்னகையொன்று லாராவின் உதட்டில் மலர்ந்தது. "ஆமாம், ரொம்பப் பெருமை. எனக்கு லாரா என்று பெயர் வைத்தவர் அவர்தான். அது ஒரு பழைய ஸ்காட்லந்து பெயர். லத்தீன் மொழியிலிருந்து வந்தது. ‘பிரபலமான,’ ‘புகழ் பெற்ற’ என்று அதற்கு அர்த்தம். நான் ரொம்பப் புகழ் பெற்றவளாக விளங்கப் போகிறேன் என்று என் சின்ன வயது முதல் தந்தை சொல்லி வந்திருக்கிறார்." அவள் புன்னகை தேய்ந்தது. "ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். அதற்கான வயதில்லை, இளம் வயது." கொஞ்சம் நிறுத்தி விட்டுச் சொன்னாள், "வருடம் தவறாமல் நான் ஸ்காட்லந்துக்குப் போய் அவருடைய கல்லறையரில் அஞ்சலி செலுத்திவிட்டு வருகிறேன்.

"ஒரு வகையில் என் பிஸினஸ் சாம்ராஜ்யம் நான் என், தந்தையின் நினைவுக்குச் செலுத்தும் காணிக்கை என்று சொல்வேன். என் தந்தை ஜேம்ஸ் கேமரான் ஓர் அற்புதமான மனிதர். அவர் மாதிரி ஒருவரை நான் பார்த்ததில்லை."

"உங்களுக்கு அவர்மீது ரொம்பப் பிரியம். இல்லையா?"

"எக்கச்சக்கமான பிரியம். அவருக்கும் என்னிடம் எக்கச்சக்கமான பிரியம்."

தாம்ஸன் சொன்னார். "ஆக, எல்லாமே கிளேஸ் பே என்கிற ஊரில் தான் ஆரம்பித்தது. அப்படித்தானே?"

"கரெக்ட்" என்றாள் லாரா. "ஆமாம். எல்லாம் அங்கே தான் ஆரம்பித்தது. ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்."

எல்லாம்... எல்லாமே...

சரியாக நாற்பது வருடங்களுக்கு முன், 1952 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி.

கிளேஸ் பேயில், ஒரு மட்டமான வேசியின் வீட்டில், குடி போதையில் விழுந்து கிடந்தான் ஜேம்ஸ் கேமரான். அவனுக்கு இரண்டு புறமும் இரண்டு வேசிகள் படுத்திருந்தார்கள்.

அந்த விபசார விடுதியின் தலைவியான கிறிஸ்டி கதவைத் தட்டினாள்.

"ஜேம்ஸ்!" என்று குரல் கொடுத்து விட்டு, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

"ச்சீ போ" என்று கத்தினான் ஜேம்ஸ். "இந்த வீட்டில் கூட நான் கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்கக் கூடாதா?"

"உன் சந்தோஷத்தைக் கெடுக்க வரலே நான். உன் பெண்டாட்டிக்கு ரெட்டைக் குழந்தை பிறந்திருக்கிறதாம். ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை! அதைச் சொல்லத் தான் வந்தேன்."

"பொம்பளைகளுக்குக் குழந்தை பெத்துக்கறதைத் தவிர வேறென்ன தெரியும். சரி, அதுக்கென்ன இப்ப?"

"டாக்டர் இப்பத்தான் போன் பண்ணினார். ஊர் பூரா உன்னைத் தேடிட்டி இருக்கிறாராம். உன் பெண்சாதிக்கு உடம்பு ரொம்ப மோசமாக இருக்குதாம். சீக்கிரம் புறப்பட்டுப் போ."

ஜேம்ஸ் கட்டில் முனைக்கு வந்தான். குடி போதை தெளிவதற்காகக் கண்ணைத் தேய்த்து விட்டுக் கொண்டான், "சனியன் பிடிச்ச பொண்டாட்டி! மனுஷனை ஒரு நிமிஷம் நிம்மதியாய் இருக்கவிட மாட்டாள். சரி, சரி, போய்த் தொலைகிறேன்.!"

ஜேம்ஸ் - லாராவின் தகப்பன் குடி போதையுடன் எழுந்து கொண்டான்.

4

லாராவின் தகப்பனான ஜேம்ஸ் கேமரான் ஒரு காலத்தில் அழகானவனாக இருந்தான். இப்போது அவன் முகத்தில் செய்த பாவங்களின் முத்திரை ஆழப் பதிந்திருந்தது. பார்ப்பதற்கு ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறவன் மாதிரி தோன்றினாலும் உண்மையில் முப்பது வயதானவன்.

மெக்காலிஸ்டர் என்ற ஒரு பாங்க்கருக்குச் சொந்தமான பல லாட்ஜ்களுள் ஒன்றில் அவன் வேலைக்கு இருந்தான்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக லாட்ஜ் வேலைகளை அவனும் அவன் மனைவியுமாகப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அதாவது, லாட்ஜில் தங்குகிறவர்களின் அறைகளைச் சுத்தம் செய்வது. அவர்களுக்கு உணவு தயாரிப்பது ஆகியவற்றை அவள் செய்து வந்தாள். ஜேம்ஸ் தன் பங்குக்குக் குடித்துக் கொண்டு கிடந்தான்.

இந்த லாட்ஜைத் தவிர வேறு நான்கு லாட்ஜுகள் மெக்காலிஸ்டருக்குச் சொந்தமாக இருந்தன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்குள்ள குடித்தனக்காரர்களிடம் வாடகை வசூலித்து மெக்காலிஸ்டரிடம் சேர்ப்பிப்பது ஜேம்ஸின் வேலை. ஊர் சுற்றிக் கொண்டிருக்கவும் குடித்து விட்டுக் கிடக்கவும் இந்த வேலை ரொம்ப செளகரியமாக இருந்தது அவனுக்கு.

வெறுப்பும் கசப்பும் நிறைந்த மனிதன் ஜேம்ஸ். அந்த வெறுப்பில் ரொம்ப சந்தோஷப்படுகிறவன் அவன். தன் வாழ்க்கை ஒரு தோல்வி. அந்தத் தோல்விக்குத் தன்னைத் தவிர மற்ற அத்தனை பேரும் பொறுப்பாளிகள் என்று நினைப்பவன். நாளாக நாளாக அந்தத் தோல்விகளைக் குறித்துச் சந்தோஷப்பட ஆரம்பித்தான் அவன். தன்னை ஒரு தியாகியாகக் காட்டிக் கொள்ள அது வசதியாக இருந்தது.

அவன் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது அவன் தந்தை ஸ்காட்லாந்திலிருந்து இங்கே கிளோஸ் பேக்குக் குடி பெயர்ந்தார். இரண்டொரு தட்டு முட்டுச் சாமான்களைத் தவிர அவர் கொண்டு வந்தது எதுவும் கிடையாது. வாழ்க்கை நடத்துவது பெரும் போராட்டமாக இருந்தது. ஜேம்ஸுக்கு முதுகில் ஒரு சிறுகாயம் ஏற்பட்டது. அதுதான் சாக்கு என்று உடனே வேலையை விட்டு விட்டான். அடுத்த வருஷம் அவன் தாயும், தகப்பனும் ஒரு ரயில் விபத்தில் இறந்து போனார்கள். அன்றே ஜேம்ஸ் தீர்மானத்துக்கு வந்துவிட்டான். தனக்கு வரும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் விதி செய்கிற சதி தான் என்று முடிவு செய்து கொண்டான்.

ஜேம்ஸிடம் இரண்டு ஆயுதம் இருந்தது. ஒன்று, அவனுடைய அசாதாரனாமான அழகு. இரண்டாவது.

இனிக்க இனிக்கப் பேசிப் பழகும் சாமர்த்தியம். தேவைப் படுகிற சமயங்களில் மட்டும்தான் இது.

ஒரு விடுமுறை தினத்தன்று அவன் பக்கத்து டவுனுக்குப் போயிருந்தபோது பெக்கி என்கிற பெண்ணைச் சந்தித்தான். இளம் வயதுப்பெண். விடுமுறைக்காக குடும்பத்தோடு வந்திருந்தாள்.

பெக்கி அப்படியொன்றும் அழகான பெண் அல்ல. ஆனால் அவளுடைய அப்பாவும் அம்மாவும் மகா பணக் காரர்கள் என்று ஜேம்ஸுக்குத் தெரிந்தது. ஜேம்ஸோ ரொம்ப ரொம்ப ஏழை

பெக்கி அவனிடம் கண்மண் தெரியாமல் காதல் கொண்டான். தந்தை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார், பெக்கி கேட்கவில்லை. அவனையே மணந்து கொண்டாள்.

ஜேம்ஸிடம் சொன்னார் மாக்ஸ்வெல்: "என் பெண்ணுக்கு வரதட்சணையாக ஐயாயிரம் டாலர் தருகிறேன். அந்தப் பணத்தைக் கொண்டு நீ முன்னுக்கு வரமுடியும். ரியல் எஸ்டேட் பிஸினஸில் முதலீடு செய். ஐந்து வருடத்தில் அது இரட்டிப்பாகிவிடும். பிறகு நீ பிழைத்துக் கொள்ளலாம்."

ஐந்து வருட காலம் யார் பொறுப்பது? ஜேம்ஸ்க்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. எவரையும் கேட்காமல் அந்தப் பணத்தை ஒரு சினேகிதனின் பெட்ரோல் எடுக்கும் கம்பெனியில் போட்டான். அறுபதே நாள், ஆசாமி திவால்.

அவன் மாமனாருக்குக் கடும் கோபம். இன்னொரு முறை உதவி செய்யக் கட்டோடு மறுத்துவிட்டார். "நான் கஷ்டப் பட்டுச் சம்பாதித்தது. நீ தெருவிலே இறைப்பதற்குக் கால் பைசா கொடுக்க மாட்டேன்," என்று சொல்லிவிட்டார்.

ஆகக் கூடி, கல்யாணம் செய்து கொண்டால் ஜாலியாக இருக்கலாம் என்ற ஜேம்ஸின் கனவு நொறுங்கிப் போயிற்று. வேலை எதுவும் கிடையாது. மனைவிக்கு வேறு சோறு போட்டாக வேண்டும்.

இந்தச் சமயத்தில்தான் மெக்காலிஸ்டர் என்கிற பாங்க்கர் அவனுக்குக் கை கொடுத்தார். ஐம்பது வயதுக்காரர். மகாகுண்டு. தங்கச் சங்கிலியில் கோத் கடியாரத்துடனேயே சதா காட்சியளிப்பார். பேச்செல்லாம் அட்டகாசமாக இருக்கும். இருபது வருடத்துக்கு முன்பு இந்தக் கிளேஸ் பேக்கு வந்தவர். வந்தவுடனேயே பணம் சம்பாதிப்பதற்கு அருமையான வழி இருப்பதைக் கண்டுகொண்டார்.

சுரங்கங்களும் காடு களும் நிரம்பிய ஊர் கிளாஸ் பே. பிழைப்புத் தேடித் தினம் தினம் மக்கள் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். தங்குவதற்குச் செளகரியமான வீடுகள் இல்லாமல் திண்டாடினார்கள். மெக்காலிஸ்டர் விரும்பியிருந்தால் அவர்கள் வீடு கட்டிக் கொள்ளப் பணம் கடன் கொடுத்திருக்கலாம். ஆனால் அதைவிட லாபகரமான வேறொரு வழி தோன்றியது அவருக்கு. லாட்ஜ்கள் கட்டினால் அவர்களுக்கு நல்ல வாடகைக்கு விடலாம் என்று கண்டுகொண்டார். இரண்டே வருடத்தில் ஓர் ஒட்டலும் ஐந்து லாட்ஜ்களும் கட்டி விட்டார். எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்தது...

இவைகளை நிர்வாகம் செய்வதற்குத் தோதான ஆள் தான் அகப்படவில்லை அவருக்கு. ஏனென்றால் இடுப்பை யொடிக்கும் வேலை இது. ஜாகைகள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சாப்பாடு தயாரிக்கவேண்டும். வினியோகிக்க வேண்டும். மெக்காலிஸ்ட்டர் சரியான கஞ்சப் பேர்வழி. சம்பளம் தாராளமாய்க் கொடுத்து விடமாட்டார்.

அவருடைய வட்டிக் கடையில் ஜேம்ஸ் கடன் வாங்கி யிருந்தான். அதை அடைக்க முடியாமல் அவன் விழித்த சமயம், மெக்காலிஸ்டரின் லாட்ஜ் மானேஜர் ஒருவர் வேலையிலிருந்து நின்று விட்டார். அந்த இடத்துக்கு ஜேம்ஸைப் போட்டாலென்ன என்று தோன்றவே, அவனைக் கூப்பிட்டனுப்பினார்.

"உனக்கு ஓர் அதிர்ஷ்டம் வந்திருக்கிறது. அருமைமான வேலை தரப்போகிறேன். அதிலே நீ பிரமாதமாகப் பிழைக்கலாம்." என்றார்.

"உங்கள் பாங்க்கில் எனக்கு வேலை தரப் போகிறீர்களா?" என்று ஜேம்ஸ் ஆவலுடன் கேட்டான். பாங்க் வேலை என்றால் பணம் புரளும். தேனை எடுக்கிற போது நடுநடுவே புறங்கையை நக்கிக் கொள்ளலாம்.

"பாங்க் வேலை அல்ல. நீ நாலு பேரிடம் நன்றாய்ப் பேசிப் பழகுகிறவன். பாங்க்கில் போய் முடங்குவானேன்? நான் சொல்வது என்னுடைய லாட்ஜில் ஒன்றை நீ பார்த்துக் கொள்ள வேண்டும்"

"லாட்ஜா... பார்த்துக் கொள்வதா?" ஜேம்ஸின் குரலில் இகழ்ச்சி.

"இதோ பார், உனக்கு எப்படியும் குடியிருக்க ஓர் இடம் வேண்டும். இல்லையா? அதை நான் தருகிறேன்." என்றார். மெக்காலிஸ்டர்.

"உனக்கும் உன் மனைவிக்கும் இலவசமாய் ஜாகையும் சாப்பாடும் கிடைக்கும். அதோடு கொஞ்சம் சம்பளமும் போட்டுத் தருகிறேன்."

"கொஞ்சம் என்றால் எவ்வளவு?"

"உனக்காகக் கூட்டிப் போட்டே தருகிறேன், ஜேம்ஸ். வாரம் இருபத்தைந்து டாலர்."

"இருபத்தைந்துதானா?"

"சம்மதமென்றால் வா. இல்லாவிட்டால் விடும். இந்த வேலைக்காக எவ்வளவோ பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்."

ஜேம்ஸுக்கு வேறு வழி எதுவும் இல்லை. சரி என்றான்.

"நல்லது. இன்னொரு விஷயம். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லாட்ஜ்காரர்களிடம் வாடகை வசூல் பண்ணி, சனிக்கிழமை என்னிடம் கொண்டு வந்து தரணும்."

ஜேம்ஸ் வீடு திரும்பி விஷயத்தைச் சொன்னபோது பெக்கிக்குக் கலவரமாகிவிட்டது. "லாட்ஜ் நடத்துவதைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாதே? என்றாள்...

"போகப் போகத் தெரிந்து கொள்வோம், வேலையை நாம் இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டால் போச்சு."

அவள் அவனை நம்பி, "சரி, எப்படியாவது சமாளிக்கபோம்." என்றாள்.

ஆனால் வழக்கம் போல அவள் தான் சமாளிப்பது என்றாயிற்று.

வருடங்கள் ஓடின. வேறு பல வேலைகள் வந்தன ஜேம்ஸுக்கு. அதிலே கெளரவமாகவும் இருந்திருக்கலாம். பணமும் சேர்த்திருக்கலாம். ஆனால் ஜேம்ஸ் அந்த வேலைக் கெல்லாம் போகத் தயாராயில்லை. தோல்விகளில் அவனுக்கு ஆனந்தம், அதை விட்டுவிட அவனுக்கு மன மில்லை.

"எதுக்கு அந்த வேலையெல்லாம்? விதி எனக்கு எதிராக இருக்கிறது. எந்த நல்லதும் எனக்கு நடக்காது." என்று முன்னு முணுப்பதே அவனுக்கு வாடிக்கையாகி விட்டது.

அன்று விபசார விடுதியின் தலைவி விரட்டியதால் வீட்டுக்குப் புறப்பட்ட போதும் அப்படித்தான் அவனுக்கு வெறுப்பாகவே இருந்தது. ‘பெண்டாட்டி யாம் பெண்டாட்டி! வேசி வீட்டில் நிம்மதியாய் இருக்கக்கூட விடமாட்டேன் என்கிறாளே’ என்று திட்டிக் கொண்டே நடந்தான். செப்டம்பர் மாதக் குளிர்க் காற்று உடலைக் குத்தியது.

‘வீட்டில் பல தலைவலி காத்திருக்கும். கொஞ்சம் சரக்கு உள்ளே போனால்தான் தெம்பு வரும்.’ என்று சொல்லிக் கொண்டு ஒரு சாராயக் கடைக்குள் நுழைத்தான்.

ஒரு மணி நேரம் கழித்து வீட்டை அடைந்தபோது, லாட்ஜ் வாசிகள் ஆறேழு பேர் அவனுக்காகக் கவலையுடன் காத்திருந்தார்கள்.

உள்ளே உன் பெண்சாதியை டாக்டர் கவனித்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் போய்யா," என்றார் ஒருவர்.

குப்பையும் களமுமாக இருந்த சின்னஞ்சிறு அறைக்குள் போதையில் தள்ளாடிக் கொண்டு போனான் ஜேம்ஸ். அதற்கு அடுத்த அறையில் அப்போதுதான் பிறந்த சிசுவின் சிணுங்கல் கேட்டது.

பெக்கி அசைவற்றுப் படுத்திருந்தாள். ஒரு டாக்டர் குனிந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்ன ஆச்சு?" என்று ஜேம்ஸ் கேட்டான்.

டாக்டர் அவனை நோக்கித் திரும்பினார். முகத்தில் ஒரே எரிச்சல். "உன் பெண்சாதியை முன்னாலேயே என்னிடம் அழைத்து வந்து காட்டியிருக்கலாம் இல்லையா? ஏன் செய்யவில்லை?" என்றார்.

ஜேம்ஸ் சீறினான்: "பாடுபட்டுச் சம்பாதிக்கிறதை வைத்தியத்துக்குச் செலவழிக்கச் சொல்கிறீரா? எல்லாரும் பிள்ளை பெத்துக்கிற மாதிரி இவளும் பெத்திருக்கிறாள். என்ன வந்தது இப்ப?"

"என்ன வந்ததா? உன் பெண்டாட்டி இறந்து விட்டாள். இரட்டைக் குழந்தை பிறந்தது. ஆண் ஒன்று, பெண் ஒன்று. அதிலேயும் ஆண் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. இறந்து விட்டது."

"விதி விதி" என்று ஜேம்ஸ் முனகினான்.

"என்ன சொல்கிறாய்?"

"விதி என்கிறேன். எல்லாம் என் விதி. அதுதான் எப்பவும் எனக்கு எதிராய்ச் சதி பண்ணுகிறது. இப்ப என் பெண்டாட்டியையும் சாகடித்து விட்டது. இனிமேல்..."

ஒரு நர்ஸ் உள்ளே வந்தான். ஒரு சிசுவை நன்றாகப் போர்த்திக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள். "உங்கள் பெண் மிஸ்டர் ஜேம்ஸ்." என்றான்.

"பெண்ணாட அடச் சே! பொம்பளைக் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன இரவைச் செய்வது?" என்றான் ஜேம்ஸ். நிமிடத்துக்கு நிமிடம் அவன் குமுறல் அதிகரித்துக் கொண்டிருந்தது.

"சீ! உன்னைப் பார்க்கவே வெறுப்பாயிருக்கிறது" என்றார் டாக்டர்.

நர்ஸ் அவனிடம், "நான் நாளைவரை இங்கே இருப்பேன். குழந்தையை எப்படிப் பார்த்துக் கொள்வது என்று உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்." என்றாள்.

போர்வைக்குள் சுருண்டு கொண்டு கிடக்கும் குழந்தையைப் பார்த்தான் ஜேம்ஸ். ‘இதுவும் செத்துத் தொலைந்தால் நன்றாயிருக்கும்’ என்று எண்ணிக் கொண்டான்.

அடுத்த மூன்று வாரம் வரையில் அந்தக் குழந்தை உயிரோடு இருக்குமா இருக்காதா என்று யாராலும் சொல்ல முடியாவில்லை. பால் கொடுக்கும் ஆயா ஒருத்தி வந்து குழந்தைக்குப் பாலூட்டினாள். கடைசியில் ஒரு நாள் டாக்டர், "இனிமேல் உன் பெண் பிழைத்துக் கொள்வாள்." என்று சொல்லிவிட்டு ஜேம்ஸை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். ஒரு பெருமூச்சு விட்டார். "ஹூம்! பாவம் அந்தக் குழந்தை கடவுள்தான் காப்பாற்றணும்" என்றார்.

பால் கொடுத்த ஆயா, "மிஸ்டர் ஜேம்ஸ், உங்கள் குழந்தைக்கு ஒரு பெயர் வைக்க வேண்டாமா?" என்றாள்.

"ஆமாம், அது ஒன்றுதான் குறைச்சல்! நீயே ஏதாவது வை." என்றான் ஜேம்ஸ்.

"லாரா என்று பெயர் வைக்கட்டுமா? அழகான பெயர்."

"உன் இஷ்டம், என்னத்தை வேணுமானாலும் வை" என்றான் ஜேம்ஸ்.

லாரா என்ற பெயர் வந்தது இப்படித்தான்.

5

லாராவைப் பற்றிக் கவலைப்படவோ வேளா வேளைக்கு உணவு கொடுத்துப் பார்த்துக் கொள்ளவோ யாரும் இருக்கவில்லை.

லாட்ஜ்களில் இருந்தவர்கள் மொத்தப் பேரும் ஆண்கள். அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையைக் கவனித்துக் கொள்ளவோ நேரம் சரியாக இருந்தது.

கூடமாட ஒத்தாசைக்கு இருந்த ஒரு பெண்மணி பெர்த்தா என்பவள்தான். வாட்டசாட்டமான ஸ்வீடன் தேசத்துக் காரி, சமையலும் மற்ற வீட்டு வேலைகளும் அவன் தான் பார்த்து வந்தாள்.

தன் மகளுக்காகத் துரும்பும் எடுத்துப் போடுவதில்லை என்பதில் ஜேம்ஸ் வெகு உறுதியாக இருந்தான். குழந்தை உயிரோடு இருப்பதே விதி தனக்கு எதிராகச் செய்த சதி என்பது அவன் எண்ணம். ராத்திரியில் விஸ்கி புட்டியை எடுத்து வைத்துக்கொண்டு, "விதிதான் என் பெண்டாட்டியையும் பிள்ளையையும் கொலை பண்ணிவிட்டது." என்று புலம்பிக்கொண்டேயிருப்பான்.

அருகிலிருப்பவர்கள், "அப்படி யெல்லாம் சொல்லாதே, ஜேம்ஸ்." என்பார்கள்.

"பின்னே என்ன? என் மகன் உயிரோடு இருந்திருந்தால் வளர்ந்து பெரிய ஆளாகி, கெட்டிக்காரனாக, சம்பாதித்துப் பெரிய பணக்காரனாக ஆகியிருப்பான். வயசுக் காலத்தில் இந்தத் தகப்பனைக் காப்பாற்றியிருப்பான். இப்ப என்னடா வென்றால்..."

அவன் புலம்பிக் கொண்டே கிடக்கட்டும் என்று மற்றவர்கள் எழுந்து போய்விடுவார்கள்.

தன் மாமனார் எங்கே இருக்கிறார் என்று பலமுறை தேடிப் பார்த்தான் ஜேம்ஸ். குழந்தையை அவர் எடுத்துப் போய் வளர்ப்பார் என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் அவர் எங்கே போனார் என்பதே தெரியவில்லை. ஆள் செத்து விட்டான் போலிருக்கிறது! அதுவும் என் விதி’ என்று சொல்லிக் கொண்டான்.

கிளேஸ் பே ஒரு விசித்திரமான ஊர். லாட்ஜ்களில் யாராவது வந்து கொண்டிருப்பார்கள். யாராவது போய்க் கொண்டிருப்பார்கள். பிரான்ஸிலிருந்தும் வந்தவர்கள் உண்டு. இத்தாலியர்கள், அயர்லாந்துக்காரர்கள், கிரேக் கர்கள் இப்படிப் பலர். தச்சு வேலை, குழாய் போடுவது, செருப்புத் தயாரிப்பது - இவ்வாறு பல வகையான தொழில் செய்பவர்கள் ஊரில் எங்கு பார்த்தாலும் புற்றீசல் போலத் திரிந்து கொண்டிருந்தார்கள். சுரங்கங்களில் இறங்கி வேலை பார்ப்பார்கள். காடுகளில் மரம் வெட்டு வார்கள். கடலில் மீன் பிடிப்பார்கள். கனடாவின் கடைசிக் கோடியில் கினேஸ் பே இருந்ததால் முன்னேற்றங்கள் இல்லாமல் ஆதிவாசிகளின் ஊர் போல் கரடு முரடாக இருந்தது. பருவ நிலையோ பயங்கரம். குளிர் காலத்தில் பனி உறைந்து, ஏப்ரல் மே மாதங்களில் கூடக் கடும் குளிராக இருக்கும். ஜூலை முதல் அக்டோபர் வரை மழை கொட்டும்.

ஊரில் பதினெட்டு லாட்ஜ்கள் இருந்தன. சிலவற்றில் எழுபதுக்கு மேற்பட்ட பேர் குடியிருந்தார்கள். ஜேம்ஸின் மேற்பார்வையில் உள்ள லாட்ஜில் இருபத்து நாலு பேர் இருந்தார்கள். பெரும்பாலும் ஸ்காட்லாந்துக்காரர்கள்.

லாரா அன்புக்கு ஏங்கியவளாகவே வளர்ந்தாள். கொஞ்சி விளையாடப் பொம்மைகளோ விளையாட்டுப் பொருளோ எதுவும் கிடையாது. தோழிகளும் யாருமில்லை. தகப்பன் மட்டும்தான் இருந்தான். தானே ஏதாவது விளையாட்டுப் பொருள் செய்து அவனிடம் கொடுப்பாள். அவன் சந்தோஷப் படுவான் என்று நினைப்பாள். அவனோ பார்க்காமலே போய்விடுவான், அப்படியே பார்த்தாலும் கேலி பண்ணுவான்.

அவளுக்கு ஐந்து வயதான போது ஒருநாள்.

"என் பிள்ளை செத்ததற்குப் பதில் இந்தச் சனியன் செத்துத் தொலைந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்." என்று தன் தகப்பன் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டாள்.

அன்றிரவு லாரா அழுது கொண்டே தூங்கிப் போனான்.

அது வரை தந்தை மீது மட்டற்ற பரியம் வைத்திருந்தவள், அன்று முதல் அவனைக் கட்டோடு வெறுத்தாள்.

லாராவுக்கு ஆறு வயதாயிற்று. ஓவியம் மாதிரி அழகாக இருந்தாள். சோகையான, மெலிந்த முகத்தில் கண்கள் மட்டும் பெரிதாசு, அழகாக விளங்கின.

அந்த வருடம் ஒரு புது ஆள் லாட்ஜில் குடியேறினார். மங்கோ என்று பெயர். கரடி மாதிரி பெரிய உருவம், குழந்தை லாராவைப் பார்த்த மாத்திரத்திலேயே அவள் மீது பாசம் ஏற்பட்டுவிட்டது அவருக்கு.

"உன் பேரென்ன, கண்ணு?"

"லாரா"

"அழகான பெண், அழகான பெயர். பள்ளிக்கூடத்துக்குப் போகிறாயோ?"

"பள்ளிக்கூடமா?"

"ஏன்?"

"தெரியாது."

"சரி, நான் கண்டு பிடிக்கிறேன்." என்றவர் ஜேம்ஸிடம் போனார். "உன் பெண் பள்ளிக் கூடத்துக்குப் போவதில்லையாமே" என்று கேட்டார்.

"எதுக்காகப் போகணும்? பெட்டைப் பிள்ளைக்குப் பள்ளிக்கூடமெல்லாம் எதற்கு?" என்றான் ஜேம்ஸ்.

"நீ சொல்வது தப்பு, ஐயா. அவளுக்குப் படிப்பு முக்கியம். நாளைக்கு அவள் வாழ்க்கையில் முன்னேற வேண்டாமா?

"எதுவும் வேண்டாம். தொண தொணக்காதே." என்றான் ஜேம்ஸ்.

ஆனால் மங்கோ விடவில்லை. அவருடைய நச்சரிப்புத் தாங்காமல் லாராவைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப ஜேம்ஸ் சம்மதித்தான். அதுகூட, கொஞ்ச நேரத்துக்காவது அந்தச் சனியன் கண்ணில் படாமல் தொலையட்டும் என்றுதான்.

பள்ளிக்கூடத்துக்குப் போவதா! லாரா பயத்தில் நடுங்கினாள். இத்தனை காலமும் அவன் பெரியவர்கள் மத்தியில் தான் வாழ்ந்து வந்திருக்கிறாள். எந்தக் குழந்தையுடனும் அவள் பழகியது கிடையாது.

வேலைக்காரி பெர்த்தா அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போனான். தலைமையாசிரியை லாராவைக் கூப்பிட்டனுப்பினாள்.

தலைமையாசிரியையின் பெயர் மிஸஸ் கமிங்ஸ். தலை நரைத்த நடு வயதுக்காரி. விதவை, மூன்று குழந்தைகளின் தாய். கந்தலும் சுசங்கலுமான உடையணிந்து தன் முன்னே நிற்கும் குழந்தையைப் பார்த்துப் பரிதாபம் கொண்டாள். "உன் பெயர் லாராவா? எத்தனை அழகான பெயர்! உன் வயசு என்னம்மா?"

"ஆறு." கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது லாராவின் கண்களில்.

பாவம், ரொம்பப் பயந்து போயிருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டாள் மிஸஸ் கமிங்ஸ். "நீ இங்கே வந்ததில் ரொம்ப சந்தோஷம். இங்கே நீ நல்லா படிக்கலாம். ஜோராய்ப் பொழுது போகும்."

"நான்... நான்... இங்கே இருக்க முடியாது..." என்று திக்கித் திணறிச் சொன்னாள் லாரா.

"அடடே ஏம்மா?"

"எங்கப்பாவுக்கு என்னை விட்டுட்டு இருக்க முடியாது." என்றாள் லாரா, அழுகை வந்தது. ஆனால் அழக் கூடாது என்று தீர்மானமாக இருந்தாள்.

"அதனாலென்ன? தினம் சில மணி நேரம்தானே இங்கே இருக்கப் போகிறாய்?"

லாரா மனசைச் சமாதானப் படுத்திக் கொண்டு வகுப்பறைக்குச் சென்றாள்.

வகுப்பிலேயே வயதில் மிகச் சிறியவள் லாராதான். ஆனால் பல வகைகளில் மிகவும் வயதானவள் போல் ஆசிரியைக்குத் தோன்றியது.

முதல் நாளன்று இடைவேளையின்போது எல்லாக் குழந்தைகளும் தங்கள் தங்கள் சாப்பாட்டுக் கூடைகளைப் பிரித்துக் கொண்டு உட்கார்ந்தார்கள். ஆப்பிள், சிற்றுண்டி, ஸாண்ட் விச்...

லாராவுக்குச் சாப்பாடு கட்டித்தர யாரும் இருக்கவில்லை. "நீ சாப்பாடு கொண்டு வரவில்லையா?" என்று ஆசிரியை கேட்டாள்.

"எனக்குப் பசிக்கவில்லை. காலையில் மூக்கைப் பிடிக்கச் சாப்பிட்டு விட்டுத்தான் வந்தேன்." என்றாள் லாரா, குரலில் வீம்புடன்.

பள்ளிக்கூடத்தில் எல்லாப் பெண்களுமே சுத்தமான அழகான ஸ்கர்ட்டும் பிளவுசும் அமைந்திருந்தார்கள். லாராவின் உடைகள் சாயம் போயிருந்தன. அவள் வளர்ந்து விட்டதால் உடம்பைப் பிடித்தன.

தகப்பனிடம் ஒருநாள், "ஸ்கூலுக்குப் போக எனக்கு டிரெஸ் வேண்டும்." என்றாள்.

"ஸால்வேஷன் ஆர்மிக்காரர்கள் அனாதை விடுதி நடத்துகிறார்கள். அங்கே போய்க் கேள். டிரெஸ் தருவார்கள்."

"அது பிச்சை, அப்பா."

ஜேம்ஸ் பளாரென்று ஓர் அறை விட்டான் அவள் முகத்தில்.

பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் என்னென்ன விளையாட்டெல்லாமோ விளையாடினார்கள். அதன் பெயர்கள் கூட லாரா கேள்விப்பட்டதில்லை. பெண் குழந்தைகள் பொம்மைகளும் விளையாட்டுச் சாமான்களும் வைத்திருந்தார்கள். சில பேர் தங்களுடன் சேர்ந்து விளையாட வரும் படி லாராவைக் கூப்பிட்டதும் உண்டு. ஆனால் தனக்குச் சொந்தமில்லாத பொருள்கனை வைத்துக் கொண்டு விளையாட லாராவுக்குப் பிடிக்கவில்லை.

வருடங்கள் செல்லச் செல்ல, லாரா இன்னொரு வேதனையையும் உணர்ந்தாள். எல்லாக் குழந்தைகளுக்கும் அம்மாக்கள் இருக்கிறார்கள். அப்பாக்கள் இருக்கிறார்கள். பிறந்த நாள் பார்ட்டி நடத்துகிறார்கள். பரிசு கொடுக்கிறார்கள். சீராட்டிப் பாராட்டுகிறார்கள். கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறார்கள்...

தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் இல்லாமல் போய்விட்டது என்பதை முதன் முதலாக லாரா உணரத் தொடங்கினாள். அதன் விளைவாக, தான் தன்ந்ன தனியவள் என்ற எண்ணம் மேலும் மேலும் வளர்ந்தது.

ஒரு வகையில் லாட்ஜும்கூட ஒரு பள்ளிக்கூடமாகவே இருந்தது லாராவுக்கு. அனைத்துலகத்தையும் அங்கே ஒரு டப்பாவுக்குள் அடைத்து வைத்த மாதிரி இருந்தது. யார் எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை அவர்களுடைய பெயர்களைக் கொண்டே லாராவினால் கண்டு கொள்ள முடிந்தது. காலையிலும் இரவிலும் எல்லா விதமான தொழிலாளர்களும் சேர்ந்து உட்கார்ந்து பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் பரிபாஷைகள் வேடிக்கையாக இருக்கும் லாராவுக்கு.

ஒருமுறை மரம் அறுக்கும் தொழிலாளர்கள் ‘போர்டு அடி’ என்ற ஒரு வார்த்தையைச் சொன்னபோது, அது என்ன என்று கேட்டாள்.

"அது ஒரு அடிக் கணக்கு, நீ பெரியவனாகிக் கல்யாணம் செய்து கொண்டு சொந்த வீடு கட்டிக்கொள்வாய் இல்லையா? மரத்தில் ஐந்து அறை கொண்டதாக ஒரு வீடு கட்டப் போகிறாய் என்று வைத்துக் கொள், அதற்குப் பலகை பன்னிரண்டாயிரம் போர்டு அடி தேவைப்படும்", என்று ஒருவர் விளக்கினார்.

"நான் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை", என்றான் லாரா.

லாராவுக்குப் பதினைந்து வயதாயிற்று. உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்தாள். நீண்ட கால்களும் சரியாக வாரப் படாத கருங்கூந்தலுமாகக் கசாமுசாவென்று இருந்தாள்.

அவள் தகப்பன் ஜேம்ஸைப் பொறுத்த வரையில் அவள் விகாரமாகவள்தான்.

"இதோ பார், என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா என்று எந்த முட்டாளாவது கேட்டால் உடனே சரியென்று சொல்லிவிடு. உன் முகரைக்கு இப்படிப் பட்டவன் வேண்டும், அப்படிப்பட்டவன் வேண்டும். என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. புரிகிறதா? என்றான் ஒரு நாள்.

லாரா எதுவும் சொல்லாமல் சிலை போல் நின்றாள்.

"என்னிடமிருந்து பைசாகூட வரதட்சிணை எதிர் பார்க்கக் கூடாது என்பதையும் அந்த ஆளிடம் சொல்லி விடு."

மங்கோ அப்போது உள்ளே வந்தார். ஜேம்ஸ் பேசுவதையெல்லாம் கேட்டு அவருக்குக் கடுங்கோபம்.

"சரி, சரி. சமையலறைக்குப் போய் வேலையைப் பார்." என்று ஜேம்ஸ் சொன்னதும், லாரா அழுகையை அடக்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.

"சே, குழந்தையிடம் போய் என்ன பேச்செல்லாம் பேசுகிறாய் ஜேம்ஸ்?" என்று மங்கோ கடித்து கொண்டார்.

போதை கண்களைச் செருக நிமிர்ந்து பார்த்தான் ஜேம்ஸ், "உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ!" என்று சீறினான்.

மங்கோ சமையலறைக்கு போனார். குழாயடியில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் லாரா. சூடான கண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

மங்கோ அவன் தோளை அனைத்துக் கொண்டு, "அவன் கிடக்கிறான், விடு, தெரிந்தா பேசுகிறான்?" என்றார்.

"அவருக்கு என்னைக் கண்டாலே வெறுப்பு." என்றாள்

"சீசீ, அப்படியெல்லாம் இல்லை."

"என்கிட்டே ஒரு தடவை கூட அன்பாய் ஒரு வார்த்தை பேசியதில்லை! ஒரு தடவை! ஒரே ஒரு தட கூட இல்லை."

பொங்கிப் பொங்கி அழுதாள் லாரா.

6

கோடை காலத்தில் உல்லாசப் பிரயாணிகள் சொகுசு சொகுசான கார்களில் கிளேஸ் பேக்கு வந்தார்கள். கடைத் தெருவில் விதம் விதமான பொருள்களை அனாவசியமாக விலை கொடுத்து வாங்கினார்கள். பெரிய பெரிய உணவு விடுதிகளில் விருந்துண்டார்கள். கடற்கரையில் அவர்களுடைய கூட்டம் மொய்த்தது.

அவர்கள் எல்லோரும் வேறு ஏதோவோர் உலகத்திலிருந்து வந்த உயர்ஜாதிப் பிறவிகள் போல் லாராவுக்குத் தோன்றினார்கள். அவர்களைப் பார்க்கப் பார்க்க அவளுக்குப் பொறாமை ஏற்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து அவர்கள் திரும்பிச் செல்லும்போது அவர்களுடன் தானும் தப்பி ஓடி விட வேண்டுமென்று எண்ணிக் கொள்வாள்.

ஆனால் எப்படி ஓடுவது? அதுதான் தெரியவில்லை.

தன் அம்மா வழித் தாத்தாவான செல்வந்தர் மாக்ஸ் வெல்லைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாள். ஜேம்ஸ் அவரைத் திட்டுவதைப் பலமுறை அவள் கேட்டிருந்தாள். "அயோக்கியக் கிழவன் அந்த ஆள் தன் பெண்ணை நான் கட்டிக் கொள்ளக்கூடாது என்று தலைகீழாய் நின்று பார்த்தான். நடக்கவில்லை. என்ன கொள்ளைப் பணம் வைத்திருந்தான் தெரியுமா? எனக்கு ஒரு பைசா கொடுத்தான் என்கிறாயா? கிடையாது." என்று அவன் சொல்வதைக் கேட்கும்போதெல்லாம்-

அவள் உள்ளம் கனவு காணும்.

என்றாவது ஒரு நாள் தாத்தா வந்து என்னை அழைத்துப் போவார்.

லண்டன், ரோம், பாரிஸ் என்று நான் படித்துள்ள பள பளப்பான நகரங்களுக்கெல்லாம் என்னைக் கூட்டிப் போவார். அழகழகான டிரெஸ்கள் நான் கட்டிக் கொள்வேன்... நூற்றுக்கணக்கான ஷூக்கள்.

மாதங்கள் ஓடின. வருடங்கள் ஓடின.

எந்தத் தாத்தாவும் வரவில்லை.

இனி எந்தத் தாத்தாவும் வர மாட்டார் என்பது திண்ணமாகத் தெரிந்துவிட்டது அவளுக்கு. இனி வாழ்நாள் பூரா இந்தக் கிளேஸ் பேயில் கிடத்து உழல வேண்டியதுதான்...

இளம் பெண்கள் ஆசைப்படக் கூடிய அத்தனை கேளிக்கைகளும், அத்தனை வேடிக்கை விளையாட்டுக்களும் கிளேஸ் பேயில் இருந்தன. கால்பந்து, ஹாக்கி. ஸ்கேட்டிங், நீச்சல், மீன் பிடிப்பு... மதுபானக் கடைகள். இரண்டு சினிமாத் தியேட்டர்கள், நடன அரங்குகள்.

எதையும் லாராவினால் அனுபவிக்க முடியவில்லை.

காலையில் ஐந்துக்கெல்லாம் எழுந்து கொள்வாள். லாட்ஜ்காரர்களுக்குக் காலையுணவு தயாரிப்பதில் பெர்த்தாவுக்குக் கூடமாட ஒத்தாசை செய்வாள். அவர்களுடைய படுக்கைகளைத் தட்டிக் கொட்டி ஒழுங்குபடுத்துவாள். பிறகு பள்ளிக்கூடம் கிளம்புவாள். சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டதும் வேகமாக வீடு திரும்பி, இரவு உணவு தயாரிக்கப் பெர்த்தாவுக்கு உதவி செய்வாள். எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறுவதில் பெர்த்தாவுக்குத் துணை நிற்பாள். சாப்பாடு முடிந்ததும் மேஜைகளைச் சுத்தம் செய்து தட்டுக்களைக் கழுவித் துடைத்து எடுத்து வைப்பாள்.

லாட்ஜில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்காட்லந்து மலைப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அதுவே தன் சொந்த நாடு என்று லாராவுக்குத் தெரியும். அவர்கள் ஸ்காடலந்தின் பெருமைகளைப் பேசிக் கொள்வதைக் கேட்டு அவளுக்குப் பெருமையாக இருக்கும்.

முன்னூறு வருடங்களுக்குமுன் தங்கள் நாட்டில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி அவர்கள் காரசாரமாகப் பேசிக் கொள்வார்கள். வாக்குவாதம் தடித்துக் கைகலப்பில் முடிவதுண்டு. ஆனால் வருடத்தில் ஒரு நாள் அவர்களுடைய பண்டிகையின்போது வண்ணவண்ணமான தேசிய உடைகளை அணிந்து கொண்டு ஊர்வலம் வருவார்கள். கண் கொள்ளாக் காட்சி அது.

ஸ்காட்லந்து நாட்டுக் கவிஞரான சர்வால்ட்டர் ஸ்காட் எழுதிய கவிதைகள் அவள் மனத்தைக் கவர்ந்தன. குறிப்பாக அந்த ஹீரோ.

காதலிலே தீரன்.

போரிலே வீரன்,

இவனைப் போல் ஒருவனை

நீங்கள் எங்காணும் கண்டதுண்டோ?

- என்னும் வரிகளைப் படிக்கும்போது எனக்கும் அப்படி ஒரு ஹீரோ வருவான்’ என்று லாரா எண்ணிக் கொள்வாள். வந்து இங்கிருந்து என்னை மீட்டுச் செல்வான்.

ஒரு நாள் சமையல்கட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு பத்திரிகையில் அழகான இளைஞன் ஒருவனின் படத்தைப் பார்த்தாள். கோட் சூட் அணிந்து வெள்ளை டை கட்டிக் கொண்டு... என்ன அழகு! நீலக் கண்கள். அன்பு நிறைந்த புன்னகை. காலோடு தலை ஒரு ராஜகுமாரனைப் போல இருந்தான்.

நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஹீரோ இவன் தான். எங்கேயோ இருக்கிறான். என்னைத் தேடிக் கொண்டிருக்கிறான். என்னிடம் வருவான். என்னை மீட்பான். நான் தட்டுக் கழுவிக் கொண்டிருப்பேன். அவன் என்னை நெருங்கி வருவான். என் பின்னால் நின்று, நான் காதில் ரகசியமாக, ‘நான் உதவி செய்யட்டுமா?’ என்று கிசுகிசுப்பான். நான் மெல்லத் திரும்பி அவன் கண்களைப் பார்ப்பேன். உனக்குத் தட்டுக் கழுவத் தெரியுமா...?’

பெர்த்தாவின் குரல்: "என்னது? தட்டுக் கழுவத் தெரியுமா என்றா கேட்டார்?"

லாரா சரேலென்று திரும்பினாள். பெர்த்தா நின்றிருந்தாள். தன்னை அறியாமல் உரக்கப் பேசிவிட்டோம் என்று புரிந்தது.

"ஒன்றுமில்லை..." என்று வெட்கத்துடன் பதிலளித்தாள்.

லாட்ஜ்காரர்கள் தங்கள் முன்னோரின் வீரப் பிரதாபங்களை அடிக்கடி பேசிக் கொள்வார்கள். எவ்வளவு முறை கேட்டாலும் லாராவுக்கு அலுக்காது. பெரியவர் மங்கோவிடம் துருவித் துருவிக் கேட்பாள்.

"ஸ்காட்லந்தில் ஏழை எளிய மக்கள் விவசாயம் பார்த்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு இடம் கொடுத்திருந்த பண்ணை முதலாளிகள், விவசாயத்தைக் காட்டிலும் ஆடு வளர்ப்பது லாபம் என்று தினைத்தார்கள். விவசாயிகளை அடித்துத் துரத்தி அவர்களுடைய வீடு வாசல்களைப் பறித்துக் கொண்டார்கள்." என்றார் மங்கோ.

"அரசு என்ன செய்தது?" என்று லாரா கேட்டாள்.

"அரசும் அந்தப் பணக்காரப் பண்ணையார்களுக்குத் தான் உதவி செய்தது. பட்டாளம் பட்டாளமாகச் சிப்பாய்கள் வருவார்கள். ஆறு மணி நேரத்துக்குள் இடத்தைக் காலி பண்ணிவிட்டு ஓட வேண்டும் என்று உத்தரவிடுவார்கள்."

"போக மாட்டேன் என்று சொன்னால்?"

"அவர்களைக் குடிசைக்குள் வைத்தே கொளுத்தி விடுவார்கள். அப்பப்பா! மகா கொடுமையான காலம் அது. மக்கள் தின்பதற்கு எதுவும் கிடையாது. காலராவும் வெள்ளை நோய்களும் காட்டுத் தீயாகப் பரவின."

"ஐயோ!"

"ஆமாம், குழந்தாய், மக்கள் இண்டு இடுக்குகளில் சண்டிக்கொன்டு கஞ்சியோ ரொட்டித் துண்டோ எது கிடைக்கிறதோ அதைத் தின்று உயிர் வாழ்ந்தார்கள். அரசாங்கம் எவ்வளவோ பறித்தது. ஆனால் ஒன்றை மட்டும் பறிக்க முடியவில்லை. ஸ்காட்லாந்துக்கார்களின் தன்மானம்! சுதந்திர உணர்ச்சி முடிந்த வரையில் எதிர்த்துப் போராடினார்கள். வீடுகள் கொளுத்தப்பட்டு இருக்க இடம் இல்லமல் தவித்தபோதிலும் கூடாரம் அடித்துக் கொண்டு யாசிதார்கள். கருகிச் சாம்பலாகிவிட்ட இல்லங்களில் என்ன மிஞ்சியிருக்குமோ அதைப் பொறுக்கி எடுத்து வந்து உயிர் வாழ்ந்தார்கள். ராத்திரியில் மழை கொட்டும். தலைமீது ஒரு கித்தானை மாட்டிக் கொள்வார்கள். அப்படித்தான் என் தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தாவும் பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டியும் துன்பப்பட்டார்கள். இதெல்லாம் சரித்திரமாகிவிட்ட சங்கதிகள். இருந்தாலும் ஒவ்வொரு ஸ்காட்லாந்துக்காரனின் உள்ளத்திலும் ஆழமான வடு ஏற்பட்டிருக்கிறது."

தங்களுடைய எல்லாமும் கொள்ளையடிக்கப்பட்டு, அகதிகளாய், அனாதைகளாய், அதிர்ச்சியடைந்து, என்ன செய்வதென்று தெரியாமல் இங்கு மங்கும் திரிந்த அந்தத் தீனமான மக்களை லாராவினால் கற்பனையில் கானா முடிந்தது. உறவினரைச் சாகக் கொடுத்த மக்களின் ஒலங்களையும், அச்சத்தில் நடுநடுங்கிப் போன குழந்தைகளின் அலறல்களையும் அவளால் கேட்க முடிந்தது.

"கடைசியில் என்னதான் ஆயிற்று?" என்று மங்கோவிடம் கேட்டாள்.

"ஆயிரம் ஆயிரமாய்க் கப்பல் ஏறி வெளிநாடுகளுக்கு ஓடினார்கள். கப்பலா அதெல்லாம்? எமனின் கருவிகள், முண்டியடித்துப் பிரயாணம் செய்தார்கள். காய்ச்சலிலும் சீதபேதியிலும் பலர் இறந்து போனார்கள். சில சமயம் கடலிலே புயல் வீசும், கப்பல் தன் பாதையை விட்டு எங்கெங்கோ போய்ப் பிறகு சரியான பாதைக்குத் திரும்பும், அதனால் கால தாமதம் மட்டுமல்ல. கையிருப்பில் வைத்திருந்த உணவும் காலியாகிவிடும். கப்பல்கள் இங்கே கனடாவை அடைந்தபோது உடலில் வலுவுள்ளவர்கள் மட்டுமே உயிருடன் இருந்தார்கள். ஆனால் இந்த நாட்டில் இறங்கியதுமே, அதுவரை அவர்கள் ஆயுளில் கண்டிராத ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது."

"சொந்தமாக நிலம். அப்படித்தானே?" என்றாள் லாரா.

"ஆமாம்மா"

மங்கோ சொன்னதைக் கேட்டுக் கேட்டு.

"என்றாவது ஒரு நாள் எனக்கென்று சொந்தமாக ஒரு நலம் பெறுவேன்." என்று மூர்க்கமாகத் தீர்மானித்துக் கொண்டாள் லாரா. அந்த நிலத்தை எவரும் - எவருமே - என்னிடமிருந்து பறிக்க முடியாது...’

ஒரு நாள் இரவு, ஒரு வேசியின் வீட்டில் படுத்துக் கடந்தபோது. லாராவின் தகப்பன் ஜேம்ஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நன்றாய்க் குடித்திருந்ததால் படுக்கையிலிருந்து உருண்டு விழுந்தான்.

அவன் குடிபோதையில் தூங்க ஆரம்பித்து விட்டானென்று எண்ணினாள் அவனுடன் இருந்த பெண். "இந்தாய்யா, சீக்கிரம் எழுந்து போ! வேறு வாடிக்கைக் காரர்கள் காத்திருக்கிறார்கள்." என்று கத்தினாள்.

ஜேம்ஸுக்கு மூச்சுத் திணறியது. மார்பைப் பிடித்துக் கொண்டு "டாக்டர்... டாக்டரை அழைத்து வா." என்று திணறினான்.

ஆம்புலன்ஸ் வந்து அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்த டாக்டர் டன்கன் லாராவுக்குச் சொல்லி அனுப்பினார். இருதயம் பதைக்க லாரா ஓடி வந்தாள். டாக்டர் அவளுக்காகக் காத்திருந்தார்.

"என்ன ஆச்சு?" என்று பதறினாள். "என் அப்பா உயிருக்கு ஒன்றும்..."

"அவருக்கு ஹார்ட் அட்டாக், லாரா."

உறைந்து போனவளாக நின்றாள் அவள்.

"வந்து பிழைந்துவிடுவார் இல்லையா?"

"சொல்வதற்கில்லை... எங்களால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறோம்."

"போய்ப் பார்க்கலாமா?"

"இப்ப வேண்டாம்மா. நாளைக் காலையில் வாயேன்."

லாரா லாட்ஜுக்குத் திரும்பிச் சென்றாள். அவளுடைய கையும் காலும் மரத்துப் போயிருந்தன.

‘தெய்வமே, என் தந்னதனயக் காப்பாற்று. அவருக்கு ஒன்றும் நேரக் கூடாது. எனக்கு இருப்பவர் அவர் ஒருவர்தான்..." என்று அவள் நெஞ்சு புலம்பியது.

சேதியைக் கேட்டதும் பெர்த்தா, "ஐயோ கடவுளே! இன்றைக்கு வெள்ளிக்கிழமையாயிற்றே" என்றாள்.

"ஏன்? அதனாலென்ன?"

"வெள்ளிக்கிழமை என்றால் புரியவில்லையா உனக்கு? இன்றைக்கு எல்லா லாட்ஜ்காரர்களிடமும் வாடகை வசூல் பண்ணிக்கொண்டு போய் மெக்காவிஸ்டரிடம் சேர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தான் சாக்கு என்று உன்னையும் என்னையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவார்." என்றாள் பெர்த்தா.

லாரா ஒரு வினாடி மெளனமாக நின்றாள்.

பிறகு, "கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றாள்.

அன்று இரவு அவளுடைய லாட்ஜில் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, லாரா அங்கே சென்று, "ஜென்ட்டில்மேன், ஒரு நிமிடம், ப்ளீஸ்," என்றாள்.

பேச்சுச் சத்தம் நின்றது. எல்லாரும் அவளையே பார்த்தார்கள்.

"என் அப்பாவுக்கு... கொஞ்சம் மயக்கம் மாதிரி வந்தது. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். கொஞ்ச நாள் அங்கேயே வைத்திருந்து கவனிக்க வேண்டுமென்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அவர் வரும்வரையில் நான் தான் வாடகைகளை வசூலிக்க வேண்டியிருக்கும். நான் வெளியே காத்திருக்கிறேன். சாப்பிட்டு விட்டு வாருங்கள்." என்றாள்.

சாப்பாட்டு முடிந்ததும் ஒவ்வொருவராய் வந்து லாராவிடம் வாடகைப் பணத்தைக் கொடுத்தார்கள்.

"சீக்கிரமே உன் அப்பாவுக்குக் குணமாகிவிடும். கவலைப்படாதே, குழந்தை."

"தான் ஏதாவது செய்யணும் என்றால் சொல்லு செய்கிறேன்."

"அப்பாவுக்காக இவ்வளவு செய்கிறாயே? தைரியசாலி யான பெண்தான் நீ.

இப்படி எல்லாரும் லாராவைப் பாராட்டி விட்டுச் சென்றார்கள்.

"இங்கே நல்லபடி முடிந்துவிட்டது. இன்னும் நாலு லாட்ஜ்களில் வாடகை வசூல் பண்ணணுமே?" என்று கவலைப்பட்டாள் பெர்த்தா.

"தெரியும்." என்றாள் லாரா. "நீ சமையலறையில் தட் டெல்லாம் கழுவி வை. நான் போய் வாடகை வாங்கி வருகிறேன்."

"பெர்த்தா சந்தேகத்துடன் பார்த்தாள். "என்னவோம்மா!"

7

லாரா நினைத்திருந்ததைக் காட்டிலும் சுலபமாகவே வேலை முடிந்தது. லாட்ஜ்காரர்களில் பெரும்பாலோர் அவளிடம் அனுதாபம் காட்டினார்கள்.

ஒரு சின்னப் பெண்ணுக்கு உதவி செய்ய முடிகிறதே கொன்று சந்தோஷப்பட்டார்கள்.

மறுநாள் காலை, வசூலித்த வாடகைப் பணத்தை ஒரு கவரில் போட்டு மெக்காலிஸ்டரிடம் எடுத்துச் சென்றாள். அவள் போனபோது அந்தப் பாங்க்கர் தன் அலுவலக அரையில் இருந்தார்.

"என்னைப் பார்க்க வேண்டுமென்று சொன்னாயாமே? என் செக்ரட்டரி சொன்னாள்."

"ஆமாம் சார்."

ஒல்லி ஒடிசலாக, தலை சரியாய் வாரிக் கொள்ளாத லாராவை ஏற இறங்கப் பார்த்தார் அவர். "ஜேம்ஸின் பெண் இல்லை?"

"ஆமாம் சார்."

"ஸாராவோ என்னவோ பெயர்."

"லாரா, சார்."

"உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாமே? பாவம்," என்றார் மெக்காவிஸ்டர். ஆனால் குரலில் எந்த அனுதாபமும் தென்படவில்லை. "உன் அப்பாவால் இனிமேல் வேலை செய்ய முடியாது. நான் வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்."

"வேண்டாம் சார், வேண்டாம்." என்றாள் லாரா அவசரமாக. "என்னைப் பார்த்துக் கொள்ளும்படி அப்பா சொல்லியிருக்கிறார்."

"நீயா?"

"ஆமாம் சார்."

"உன்னால் முடியாது, பெண்ணே"

கையில் வைத்திருந்த கவர்களை அவர் மேஜை மீது வைத்தாள் லாரா. "இந்த வாரத்து வாடகைப் பணாம் சார்."

அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார் மெக்காலிஸ்டர். "மொத்தப் பேரிடமுமா வசூல் பண்ணிவிட்டாய்?"

ஆமாம் என்று தலையை அசைத்தாள்.

"நீயே போய் வசூலித்தாய்?"

"ஆமாம் சார். அப்பாவுக்கு உடம்பு சரியாகிற வரையில் நானே லாரா வாரம் வாடகை வாங்கிக் கொண்டு வந்து தருகிறேன் சார்."

"ஒகே." என்றவர், கவர்களைப் பிரித்துப் பணத்தைக் கவனமாக எண்ணிப் பார்த்தார். ஒரு பெரிய பச்சைப் பையில் அதை வைத்துக் கொண்டார்.

கொஞ்ச நாளாகவே அவருக்கு ஜேம்ஸைப் பிடிக்க வில்லை. ஒழுங்காக வேலை பார்க்காமல் குடித்துவிட்டுத் திரிவதால் அவனுக்குப் பதில் வேறு யாரையாவது நியமிக்கலாம் என்று எண்ணியிருந்தார். அவனையும் அவன் குடும்பத்தையும் தொலைத்துத் தலை முழுக்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது.

லாராவை மறுபடி ஒருமுறை பார்த்தார். அப்பா செய்து வந்த வேலைகளை இந்தப் பெண்ணினால் செய்ய முடியுமென்று அவருக்குத் தோன்றவில்லை. அதே சமயம், ஜேம்ஸையையும் அவன் பெண்ணையும் நடுத் தெருவில் நிற்கும்படி பணணினால் ஊரிலே எல்லாரும் திட்டுவார்கள் என்ற பயமும் ஏற்பட்டது.

"இதோ பாரம்மா. ஒரு மாதம் உன்னை வேலையில் வைத்துக் கொள்கிறேன், அதன் பிறகு பார்க்கலாம்." என்றார்.

"நன்றி, மிஸ்டர் மெக்காலிஸ்டர். ரொம்ப ரொம்ப நன்றி."

"இரு." இருபத்தைந்து டாலரை லாராவிடம் நீட்டினார். "இது உன் சம்பளம்."

பணத்தை வாங்கிக் கொண்டவள் கையில் பிடித்தபடி கொஞ்ச நேரம் நின்றாள். செய்த வேலைக்காகப் பணம் பெறுவது இதுதான் முதல் தடவை. சுதந்திர உணர்வு அவன் உடலெங்கும் வியாபித்தது.

நேரே ஆஸ்பத்திரிக்கு சென்றாள். டாக்டர் டன்கன் அப்போதுதான் ஜேம்ஸ் இருந்த அறையிலிருந்து வந்து கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு கலவரம் அவனைப் பிடித்துக் கொண்டது. "அப்பாவுக்கு..."

"சே, சே... வந்து... அவருக்கு ஒன்றுமில்லை." என்ற டாக்டர் சிறிது தயங்கிவவிட்டு, "அதாவது. அவர் உயிருக்கு ஆபத்தில்லை, அதாவது இப்போதைக்கு. ஆனால் இன்னும் சில வாரம் அவர் படுத்திருக்க வேண்டியிருக்கும். அவரைக் கவனித்துக் கொள்ள."

"நான் இருக்கிறேன், டாக்டர், நான் பார்த்துக் கொள்கிறேன்."

அவளை உற்றுப் பார்த்தார் டாக்டர். குரலில் மென்மை தொனிக்க, "இப்படியொரு நல்ல பெண் கிடைக்க உன் தகப்பனுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவனுக்கு அது தெரியவில்லையே?"

"நான் உள்ளே போய் அப்பாவைப் பார்க்கலாமா?"

"போகலாம்."

தகப்பன் இருந்த அறைக்குள் நுழைந்து, அவனையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள் லாரா. முகம் வாடி, அனாதை போல் படுக்கையில் கிடந்தான். ஜேம்ஸ், திடீரென்று கிழவனாகிவிட்ட மாதிரி இருந்தது அவன் தோற்றம்.

அலை, அலையாக ஒரு பரிவு உணர்ச்சி லாராவின் உள்ளத்தில் எழுந்தது.

இப்போதாவது அப்பாவுக்கு ஏதாவது செய்ய முடியும். செய்து அப்பாவின் பாராட்டையும் அன்பையும் பெற முடியும்.

கட்டிலை நெருங்கினான்.

அவன் கண்ணைத் திறந்து அவளைப் பார்த்தான், "சனியனே, இங்கே எதற்கு வந்து தொலைத்தாய்? லாட்ஜில் வேலையா இல்லை?"

லாரா உறைந்து போனாள் அதிர்ச்சியில், "வேலை இருக்கிறது, அப்பா. மெக்காலிஸ்டரைப் போய்ப் பார்த்தேன். உங்களுக்கு உடம்பு சரியாகிற வரையில் வாடகைகளை நான் வசூலித்துத் தருகிறேன் என்று சொன்னேன். அதை உங்களிடம் சொல்லத்தான் இப்ப வந்தேன்."

"என்னது! நீ போய் வாடகை வசூல் பண்ணப் போகிறாயா? சிரிப்புதான் வருகிறது" வலிப்புக் கண்டாற் போல் அவன் உடம்பு குலுங்கியது. அது அடங்கியதும் மறு படி பேசினான். குரல் மிகவும் பலவீனமாகிவிட்டது. "எல்லாம் என் தலை விதி! மெக்காவிஸ்டர் என்னைக் கழுத்தைப் பிடித்து வாசலில் தள்ளப் போகிறான்."

லாரா அவனையே பார்த்தவாறு நின்றாள்.

என்ன தகப்பன் இவன் தன்னைப் பற்றித்தான் நினைக்கிறானே தவிர, வயதுக்கு வந்த மகள் இருக்கிறாளே, அவள் கதி என்ன ஆவது என்று கடுகத்தனையும் நினைக்கக் காணோமே!

நெடுநேரம் நின்றிருந்தபின் அவன் திரும்பி நடந்தாள்.

மூன்று நாட்களுக்கெல்லாம் ஜேம்ஸைப் வீட்டுக்கு எடுத்து வந்து படுக்கையில் கிடத்தினார்கள்.

"இன்னும் இரண்டு வாரத்துக்கு நீ படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது." என்றார் டாக்டர் டன்கன். "இரண்டு நாள் கழித்து மறுபடி வந்து பார்க்கிறேன்."

"என்னாலே சும்மா படுத்துக் கொண்டிருக்க முடியாது," என்று ஆட்சேபித்தான் ஜேம்ஸ். "நான் பிஸியான ஆள், நிறைய வேலை இருக்கு."

டாக்டர் அமைதியாகச் சொன்னார்: "இதோ பார், படுத்திருந்தால் உயிரோடு இருக்கலாம். எழுந்திருந்தால் சாக வேண்டியதுதான். சொல்வதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உன் பாடு."

கள்ளங்கபடம் தெரியாத ஒரு சின்னப் பெண் வந்து வாடகை வசூல் செய்து கொண்டு போவதைப் பார்த்து முதலில் கொஞ்ச நாளைக்கு லாட்ஜ்காரர்கள் சந்தோஷப் பட்டார்கள். அந்தப் புதுமை தேயத் தொடங்கியது. பலவிதமான சாக்குப்போக்குகள் சொல்ல ஆரம்பித்தார்கள்.

"இந்த வாரம் எனக்கு உடம்பு சரியில்லை. வைத்திருந்த பணம் மருந்துக்கே சரியாகிவிட்டது."

‘ஒவ்வொரு மாசமும் என் பிள்ளை பணம் அனுப்புவான். என்னவோ தெரியவில்லை, இந்த மாசம் மணியார்டர் வர வில்லை.’

‘கொஞ்சம் சாமான்கள் வாங்கும்படி ஆகிவிட்டது...!’

- இப்படி யார் என்ன சொன்னாலும்

லாரா அசைந்து கொடுப்பதில்லை. இது அவளுக்கு வாழ்வா சாவா போராட்டம். லாட்ஜ்காரர்கள் சொல்வதைப் பரிவோடு கேட்டுக் கொள்வாள். பிறகு, "ரொம்ப ஸாரி சார். இன்றைக்கு வாடகையைக் கொண்டு வந்து தர வேண்டும் என்று மெக்காலிஸ்டர் ரொம்பக் கண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார். உங்களால் கொடுக்க முடிய வில்லை என்றால் இடத்தைக் காலி பண்ண வேண்டியிருக்கும்." என்பாள்.

அவர்களும் எப்படியோ சமாளித்து வாடகையைத் தந்து விடுவார்கள்.

"உன் அப்பா எவ்வளவோ தேவலை, பாப்பா ஒன்றிரண்டு நாள் பொறுத்துக் கொள்வார்." என்பார்கள்.

ஆனால் அந்த இளம் பெண்ணின் துணிச்சலைப் பார்த்து எல்லாருமே வியந்து நின்றார்கள்.

தகப்பன் உடம்பு சரியில்லாமல் படுத்திருப்பதால் தனக்கும் அவனுக்கும் நெருக்கம் ஏற்படும் என்று லாரா நினைத்திருந்தாள். அதில் பயங்கர ஏமாற்றம்!

அவனுடைய ஒவ்வொரு தேவையையும் முன்கூட்டியே சாகித்துப் பூர்த்தி செய்து வந்தாள் அவள். ஆனால் அவள் எவ்வளவுக்கெவ்வளவு பரிவுடன் நடந்து கொண்டாளோ அவ்வளவுக்கவ்வளவு மோசமாக அவன் நடந்து கொண்டான்.

தினம் அவனுக்காகப் புத்தம் புதிய பூங்கொத்து கொண்டு வந்து தந்தாள். தின்னத் தின்பண்டங்கள் வாங்கி வந்தாள்.

"எதற்காக இங்கே வந்து என் பிராணனை எடுக்கிறாய்? வேலை எதுவும் கிடையாது" என்று அவன் கத்தினான்.

"உங்களுக்குப் பிடிக்குமே என்று..."

"சீ! போய்த் தொலை!" என்று சீறிவிட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

‘சே! இவனும் ஒரு மனுஷனா’ என்று மனசுக்குள் வெறுத்துப் போனாள் லாரா.

அந்த மாதக் கடைசியில் லாரா வாடகைப் பணத்தை வசூல் செய்து கவரில் போட்டு மெக்காவிஸ்டரிடம் கொடுத்தாள். அவர் பணத்தை எண்ணிப் பார்த்து விட்டு, "இதோ பாரம்மா, உன்னைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உன் தகப்பனைக் காட்டிலும் நீ நன்றாக வேலை செய்கிறாய்." என்றார்.

லாராவுக்குப் பரவசமாயிருந்தது அவர் சொன்ன வார்த்தைகளினால், "நன்றி ஐயா." என்றாள்.

"இன்னொன்றும் சொல்லதாணும். அத்தனை பேரும் வாடகையை முழுசாய், கரெக்ட்டான டயத்துக்குக் கொடுத்திருப்பது இதுதான் முதல் தடவை."

"அப்ப நானும் என் அப்பாவும் லாட்ஜில் தங்கலாயில்லையா?"

மெக்காலிஸ்டர் அவளைக் கூர்ந்து பார்த்தார். "தங்கிக் கொள். நீ உன் அப்பா மீது ரொம்பத்தான் பிரியம் வைத்து திருக்கிறாய்."

"அடுத்த வாரம் வருகிறேன், சார்."

லாராவுக்குப் பதினேழு வயதாயிற்று. சோனியாய், நோஞ்சானாய் இருந்த சிறுமி முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாக ஆனாள். ஸ்காட்லந்து முன்னோர்களின் முத்திரை அவள் முகத்தில் தெரிந்தது.

மினுமினுவென்ற சருமம்; வளைந்த நேர்த்தியான புருவங்கள்; சூலுண்ட மேகம் போல் சாம்பல் நிறத்து விழிகள்; அலையோடு கரும் கூந்தல். இவை தவிர, சதா அவள் மீது கவிந்திருக்கும் ஒரு சோகம்- குருதி சிந்திய ஸ்காட்லந்து மக்களின் வரலாறு கொடுத்த சோகம்.

பார்த்தவர்களுக்குப் பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றியது. பார்வையை அகற்ற முடியவில்லை.

லாட்ஜ்காரர்களில் பெரும்பாலோர் பெண் இல்லாமல் வாழ்ந்தவர்கள். சிலபேர் மட்டும் விபசார விடுதிகளில் சென்று தாபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

அழகிய இனம் மங்கையான லாராமீது அவர்கள் பார்வை விழுந்ததில் என்ன ஆச்சரியம்?

லாரா சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது படுக்கையைச் சுருட்டிக் கொண்டிருக்கும் போதோ, "லாரா, என்னிடம் நல்லபடி நடந்து கொள். உனக்கு வேண்டியதெல்லாம் தருவேன்," என்பான் ஒருவன்.

இன்னொருவன், "லாரா, உனக்கு ஆண் சினேகிதர்கள் யாரும் கிடையாது இல்லையா? என்னுடன் வா. ஆண் எப்படி இருப்பான் என்று காட்டுகிறேன்." என்பான்.

மற்றொருவன், "கான்ஸாஸ் ஸிடி நீ பார்த்ததில்லையே? அடுத்த வாரம் நான் போகிறேன். நீயும் வருகிறாயா?" என்பான்.

இப்படி அவர்கள் பேசும் போதெல்லாம் லாரா தன் தகப்பனின் அறைக்குச் செல்வாள். கைகால் சுவாதீனமில்லாமல் படுத்துக் கிடக்கும் அவனிடம், "என் மூஞ்சிக்கு எவனும் வர மாட்டான் என்று சொன்னீர்களே? தப்பு அப்பா. இங்கே இருக்கிற அத்தனை ஆண்களும் என்னைக் கூப்பிடுகிறார்கள்." என்று சொல்வாள். ஜேம்ஸ் அவளை வெறிச்சோடிய பார்வையுடன் பார்த்துக் கொண்டிருப்பான். வேறொன்றும் பேசாமல் லாரா வெளியேறி விடுவாள்.

வசந்த காலத்தில் ஒருநாள் காலை ஜேம்ஸ் இறந்து போனான். நகரத்தின் மறு கோடியில் இருந்த இடுகாட்டில் அவனை அடக்கம் செய்தாள் லாரா. இறுதிச் சடங்கின் போது அவளுடன் இருந்த ஒரே ஒரு நபர் பெர்த்தாதான்.

யாரும் கண்ணீர் சிந்தவில்லை.

8

லாட்ஜுக்கு ஒரு புதிய நபர் வந்து சேர்ந்தார். அமெரிக்கர். பில் ரோஜர்ஸ் என்று பெயர். வயது எழுபது இருக்கும். குண்டாக, வழுக்கைத் தலையுடன் இருந்தார். ஜாலியான மனிதர். அரட்டை அடிப்பதில் பிரியம் உள்ளவர்.

சாப்பாடு முடிந்ததும் சிறிது நேரம் உட்கார்ந்து லாராவுடன் பேசிக் கொண்டிருப்பது அவர் வழக்கம்.

"ஏம்மா, கண்ணுக்கு லட்சண மாய், அழகாய் இருக்கிறாய். எதற்காக இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் உட்கார்ந்திருக்கிறாய்?" என்றார் ஒருநாள். "சிகாகோவுக்கோ, நியூயார்க்கிற்கோ போ. பிரமாதமாய் முன்னுக்கு வரலாம்."

"ஒரு நாள் போகத்தான் போகிறேன்." என்றாள் லாரா.

"இன்னும் எவ்வளவோ காலம் வாழ போகிறவள் நீ. என்னதான் செய்வதாக உத்தேசம் உனக்கு?"

"எனக்கென்று சொந்தமாகச் சிலது வேண்டும். அதற்கு முயற்சி செய்வேன்."

"ஓகோ... அழகான துணிமணி, நகை நட்டு, இப்படி."

"இல்லை, நிலம், எனக்கு நிலம் வேண்டும். என் அப்பாவுக்குச் சொந்தமாக எதுவுமே இருந்தது கிடையாது. வாழ்நாள் பூரா இன்னொருத்தர் கையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்."

ஆர்வத்தினால் பில் ரோஜர்ஸின் முகத்தில் ஒரு பளபளப்பு ஏற்பட்டது. "நான் ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்கிறேன்." என்றார்.

"நிஜமாகவா?"

"நாட்டிலே எங்கு பார்த்தாலும் எனக்குச் சொந்தமான கட்டிடங்கள் இருந்தன. சங்கிலித் தொடராக ஓட்டல்கள் கூட இருந்தன."

"என்ன ஆயிற்று எல்லாம்?"

அவர் தோள்களைக் குலுக்கிக் கொண்டார். "பேராசை ஏற்பட்டது. அவ்வளவையும் இழந்தேன். ஆனால் ரொம்ப ஜோரான தொழில் அது." என்றார் பில்.

அதன் பிறகு தினம் தினம் அவர்கள் ரியல் எஸ்டேட் பிஸினஸ் பற்றியே பேசிக் கொண்டார்கள்.

"ரியல் எஸ்டேட்டில் முதல் தத்துவம் என்ன தெரியுமா? ஓபிஎம்." என்றார் பில். "அதை மட்டும் மறக்காதே."

"ஓபிஎம் என்றால் என்ன?"

"அதர் பீப்பிள்ஸ் மணி. அதாவது இன்னொருத்தனின் பணம்" என்று விளக்கினார் பில். "அரசாங்கம் நமக்குப் பலவிதமான சலுகைகள் கொடுத்துக் கொண்டேயிருக்கும். அதை வைத்து நம் சொத்தைப் பெருக்கிக் கொண்டே போகலாம். ரியல் எஸ்டேட் பிஸினெஸில் முக்கியமான மூன்று - லொகேஷன், லொகேஷன், வொகேஷன், அதாவது இடம், இடம், இடம். ஒரு குன்றின் மேலே போய் அழகான வீடு கட்டினாய் என்று வைத்துக் கொள். அதனால் நேரம்தான் வீண். அழகில்லாத வீடாக இருந்தாலும் ஜனங்கள் வசிக்கிற இடமாகப் பார்த்துக் கட்டினால் நீ பணக்காரியாகி விடுவாய்."

அடைமானங்களைப் பற்றியும், பணம் புரட்டுவதைப் பற்றியும், பாங்க்கில் கடன் வாங்குவதைப் பற்றியும் லாராவுக்கு அவர் சொல்லிக் கொடுத்தார். லாரா கவனமாகக் கேட்டுக் கொண்டாள். கற்றுக் கொண்டாள், ஞாபகம் வைத்துக் கொண்டாள். ஒவ்வொரு சொட்டுத் தகவலும் ஸ்பாஞ்சில் பதிகிற மாதிரி அவள் உள்ளத்தில் பதிந்தது.

"இந்த ஊர் இருக்கிறதே, கிளேஸ் பே. இங்கே வீடுகளுக்கு ரொம்பப் பஞ்சம். ரியல் எஸ்டேட் பிஸினஸ் காரர்களுக்குப் பிரமாதமான வாய்ப்பு இருக்கிறது. நான் மட்டும் இருபது வருஷம் சின்னவனாக இருந்தால்..." என்று அவர் பெருமூச்சு விட்டார்.

அந்த நிமிடத்திலிருந்து லாராவின் பார்வையால் கிளேஸ் பே வித்தியாசமாகத் தெரியத் தொடங்கியது. எங்கெல்லாம் காலி மனைகள் தென்படுகிறதோ அங்கெல்காம் ஆபீஸ் கட்டிடங்களும் வீடுகளும் இருப்பதாகக் கற்பனையில் காண ஆரம்பித்தாள். அந்தக் கற்பனை ஒரு வீதத்தில் உற்சாகமாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் சோர்வு ஏற்பட்டது. கனவுகள் சரி - அவற்றை நிறை போற்றுவதற்கான பணம்? அதற்கு எங்கே போவது?

பில் ரோஜர்ஸ் புறப்பட்ட தினத்தன்று, "ஞாபகம் வைத்து கொள். இன்னொருத்தனின் பணம்! தைரியமாயிரு. உனக்கு நல்ல காலம் சீக்கிரம் வரும்." என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

இதற்கு ஒரு வாரத்துக்கெல்லாம் சார்லஸ் என்பவர் லாட்ஜில் குடியேறினார். சின்ன உருவம், அறுபது வயது. அழகாக உடுத்து கச்சிதமாக ஜம்மென்று இருக்கிறவர். மற்ற லாட்ஜ்காரர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து உணவருந்துவார். ஆனால் யாருடனும் ஒரு வார்த்தை பேச மாட்டார். தனக்குள் தானே சிந்தனை வலை பின்னி கொள்கிறவர் மாதிரி எப்போதும் காணப்பட்டார்.

லாரா சிறிதுகூட முணுமுணுக்காமல் முகத்தில் புன்சிரிப்புடன் லாட்ஜ் வேலைகளைச் செய்வதைக் கவனித்த அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

லாரா அவரிடம், "இன்னும் எவ்வளவு நாள் இங்கே தங்கியிருக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டாள்.

"நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. ஒரு வாரம் தங்கலாம். அல்லது ஒரு மாசம் இரண்டு மாசம்கூட ஆகலாம்." என்றார் சார்லஸ்.

லாராவுக்கு அவர் ஒரு புதிராக இருந்தார். மற்ற லாட்ஜ்காரர்களுக்கும் அவருக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. மனுஷனுக்கு என்ன தான் வேலை இருக்கும் என்று ஊகித்துப் பார்த்தாள். ஒருநாள் பார்த்தால் சுரங்கத்தில் வேலை செய்கிறவர் மாதிரி இருந்தார். வியாபாரியோ என்று பார்த்தால் அப்படியும் தோன்றவில்லை. மற்ற லாட்ஜ்காரர்களைக் காட்டிலும் தரத்தில் உயர்ந்தவராகவும் படிப்பாளியாகவும் காணப்பட்டார். டவுனில் உள்ள ஓர் ஓட்டலில் தங்க நினைத்ததாகவும் அங்கே இடம் கிடைக்க வில்லை என்றும் லாராவிடம் ஒருநாள் சொன்னார்.

அவர் சாப்பிடும் அளவு ரொம்பவும் கொஞ்சம்தான்.

"பழம் ஏதாவது இருக்கிறதா? அல்லது கறிகாய் ஏதாவது இருந்தாலும் போதும்." என்று பணிவாகக் கேட்பார்.

"உடம்புக்காக ஏதாவது பத்தியம் இருக்கிறீர்களா?" என்று லாரா கேட்டாள்.

"ஒரு விதத்தில் அப்படித்தான். நான் வழக்கமாகச் சாப்பிடும் உணவு வகை இந்த நகரில் எங்கும் கிடைக்க வில்லை." என்றார் சார்லஸ்.

அவருடைய ஸ்பெஷல் உணவு என்ன என்பதைத் தெரிந்து கொண்டு மறுநாள் அதைச் சமைத்து அவர்முன் வைத்தாள் லாரா.

"இது எப்படி...?" சார்லஸ் ஆச்சரியப்பட்டார்.

"மார்க்கெட்டுக்குப் போனேன். விசாரித்தேன், கிடைத்தது. வாங்கி வந்து சமைத்தேன். நன்றாய்ச் சாப்பிடுங்கள். இரண்டு வேளை முழுச் சாப்பாட்டுக்கும் சேர்த்துத்தான் நீங்கள் வாடகை கொடுத்திருக்கிறீர்கள். நாளைக்கும் இதே மாதிரி பண்ணிப் போடுகிறேன்."

அது முதல், லாரா சும்மா இருக்கும்போதெல்லாம் அவராக வந்து பேச்சுக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது. அவளுடைய அறிவும் சுதந்திர உணர்வும் அவருக்குப் பிடித்து விட்டான.

தன் வேலை என்ன என்பதை ஒரு நாள் அவர் தானாகவே போராவிடம் சொன்னார். "நான் கான்ட்டி னென்ட்டல் சப்ளைஸ் என்ற டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரின் நிர்வாகி." என்றார். நாடெங்கும் சங்கிலித்தொடராக டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நடத்தும் பிரபலமான நிறுவனம் அது. "இங்கே ஒரு புதுக் சிலை நிறுவப் போகிறோம். அதற்கு ஏற்ற இடம் தேடுவதற்காக நான் வந்திருக்கிறேன்." என்றார்.

"பெரிய விஷயமாக இருக்கிறதே." என்றாள் லாரா.

ஏதோ முக்கியமான காரணமாகத்தான் இவர் இங்கே வந்திருக்கிறார் என்று நாம் நினைத்தது சரியாகிவிட்டது என்று எண்ணிக் கொண்டு, "அதாவது ஒரு கட்டிடம் கட்டப் போகிறீர்கள்?" என்று கேட்டாள்.

"இல்லை, கட்டிடம் கட்டும் வேலையை வேறு யாரிடமாவது ஒப்படைத்து விடுவோம். பிறகு அதைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்வோம்." என்றார் சார்லஸ்.

விடிகாலை மூன்று மணிக்குத் திரென விழிப்புக் கண்டது லாராவுக்கு. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவள் சரேலென்று எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டாள். அவள் இருதயம் தடதடவென்று அடித்துக் கொண்டது.

‘நாம் கண்டது கனவா என்ன?’

இல்லை, இல்லை. அவள் மனம் புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதன் பிறகு அவளால் தாங்க முடியவில்லை.

காலைச் சிற்றுண்டிக்காகச் சார்லஸ் தன் அறையிலிருந்து வெளிவந்த போது அவர் எதிரே போய் நின்றாள்.

"மிஸ்டர் சார்லஸ், எனக்கு ஒரு பிரமாதமான இடம் தெரியும்." என்று படபடத்தாள்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை, "என்னது?" என்றார்.

"ஒரு நல்ல இடம் தேவை என்றீர்களே, அதைச் சொல்கிறேன்."

"ஓ... அதுவா? எங்கே இருக்கிறது?"

லாரா அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. "உங்களை ஒன்று கேட்கிறேன். சொல்லுங்கள். உங்களுக்குப் பிடித்தமான இடம் ஒன்று எனக்குச் சொந்தமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அங்கே நான் ஒரு கட்டிடம் கட்டித் தந்தால், அதை என்னிடம் ஐந்து வருடக் குத்தகைக்கு எடுத்துக் கொள்வீர்களா?"

அவர் தலையை அசைத்தார். "கற்பனையான கேள்வி நான் எப்படியம்மா பதில் சொல்ல முடியும்?"

"எடுத்துக் கொள்வீர்களா? மாட்டீர்களா?"

"லாரா, கட்டிடம் கட்டுவது பற்றி உனக்கு என்னம்மா தெரியும்?"

"நானே ஏன் கட்டுகிறேன்? பிளான் போட்டுத் தருகிற பில்டிங் காண்ட்ராக்டரையும் நான் அமர்த்திக் கொள்வேன்."

சார்லஸ் அவளைக் கூர்ந்து பார்த்தார். "சரி... நீ சொல்கிற இடம் எங்கே இருக்கிறது?"

"உங்களுக்குக் காட்டுகிறேன். பார்த்த மாத்திரத்தில் மயங்கிப் போய் விடுவீர்கள். அருமையான இடம்."

சிற்றுண்டிக்குப் பிறகு, நகரத்தின் முக்கியமான பகுதியில் இருந்த ஓர் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றாள் லாரா. மெயின் ரோடும் கமர்ஷியல் ரோடும் சந்திக்கும் இடத்தில் அந்தக் காலிமனை இருந்தது. இரண்டு நாள் முன்பு அவரே அந்த இடத்தை வந்து பார்த்திருந்தார்.

"இதுதான் நான் சொன்ன இடம்." என்றாள் லாரா.

இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிற மாதிரி அந்த இடத்தை ஏற இறங்க ஆராய்ந்தார் சார்லஸ், "லாரா, உனக்கு நல்ல மோப்ப சக்தி. ரொம்ப நல்ல மனை இது."

இந்த மனையைப் பற்றி ஏற்கெனவே அவர் நைஸாய் விசாரித்து வைத்திருந்தார். மெக்காலிஸ்டர் என்ற பாங்க் கருக்கு அது சொந்தம் என்று அவருக்குத் தெரியும்.

மீண்டும் லாராவின் முகத்தை ஆராய்ந்தார். ‘ரொம்பச் சின்னப் பெண்... இவ்வளவு பெரிய வேலையை இவள் ஏற்று நடத்துவதாவது! மடத்தனம்...’ என்று முதலில் எண்ணினார். மார்க்கெட்டுக்குப் போனேன், உங்களுக்குப் பிடித்த மான உணவு எங்கே கிடைக்கிறதென்று விசாரித்தேன், நாளைக்கும் இதேபோல் பண்ணிப் போடுகிறேன்." என்று அவள் சொன்னது ஞாபகம் வந்தது. இவளிடம் இரக்கமும் ஆர்வமும் இருக்கின்றன...

லாரா பரபரப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தாள், "இந்த மனையை வாங்கி, உங்களுடைய தேவைக்குத் தக்க படி கட்டிடம் கட்டித் தர ஏற்பாடு செய்கிறேனென்று வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து வருடக் குத்தகைக்கு எடுத்துக் கொள்வீர்களா?"

அவர் சிறிது மௌனமாக இருந்த பிறகு மெதுவே சொன்னார்: "இல்லை லாரா. பத்து வருடக் குத்தகைக்குத் தான் எடுத்துக் கொள்வேன்."

அன்று பிற்பகல் மெக்காலிஸ்டரைப் பார்க்கச் சென்றாள் லாரா.

அலுவலக அறைக்குள் நுழைந்ததும் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தார் மெக்காலிஸ்டர்.

"இரண்டு நாள் முன்னதாகவே வந்து விட்டாயே லாரா? இன்றைக்குப் புதன்கிழமைதானே?"

"தெரியும் சார். உங்களிடம் ஒரு உதவி கேட்பதற்காக வந்தேன்."

அவளை உற்றுப் பார்த்தார் மெக்காலிஸ்டர். அழகான பெண்ணாக வளர்ந்து வருகிறாள் இவள். முன்னைப் போலச் சிறுமி அல்ல. வளர்ந்த பெண். உடையின் இறுக்கத்தைப் பார்த்தாலே இவளுடைய வளர்ச்சி தெரிகிறது.

"சார், எனக்குக் கொஞ்சம் கடன் தர முடியுமா?"

அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"என்னது?"

"ஆமாம், சார். கடனாகப் பணம் வேண்டும்."

பரிவோடு புன்னகை செய்தார் மெக்காலிஸ்டர். "ஓ, தருகிறேனே. புதிதாய் டிரெஸ் ஏதாவது வாங்கணுமா? முன் பணம் தருகிறேன்..."

"எனக்கு இரண்டு லட்சம் டாலர் கடன் கொடுங்கள்."

அவருடைய புன்சிரிப்பு மறைந்தது. "என்ன, விளையாடுகிறாயா?"

"இல்லை, சார், சீரியஸாகத்தான் சொல்கிறேன்." அவர் முன்னே குனிந்து ஆர்வத்துடன் பேசினாள் லாரா.

"ஒரு காலி மனை பார்த்து வைத்திருக்கிறேன். அங்கே ஒரு கட்டிடம் கட்டப் போகிறேன். அதை ஒரு முக்கியமான மனிதர் பத்து வருடக் குத்தகைக்கு எடுத்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். மனைக்கும் கட்டிடத்துக்கும் உத்தர வாதம் போதுமா?"

சற்று எரிச்சலுடன் அவள் முகத்தைப் பார்த்தார் மெக்காலிஸ்டர். "சரி, மனையின் சொந்தக்காரர்களுடன் பேசிவிட்டாயா? மனையை உனக்கு விற்கச் சம்மதித்திருக்கிறார்களா?"

"மனையின் சொந்தக்காருடன்தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறேன்." என்றாள் லாரா.

அதைப் புரிந்து கொள்ள ஒரு நிமிடம் பிடித்தது மெக்காலிஸ்டருக்கு. "என்ன, என்ன? என்ன சொல்கிறாய் நீ நீ சொல்கிற மனை எனக்குச் சொந்தமானதா?"

"ஆமாம் சார். மெயின் ரோடும் கமர்ஷியல் ரோடும் சந்திக்கும் முனையில் இருக்கிறது."

மெக்காலிஸ்டருக்குக் கோபம் வந்தது.

"என்னுடைய மனையை வாங்குவதற்கு என்னிடமே கடன் கேட்கிறாயா? நடக்காது."

9

மெக்காலிஸ்டர் யோசனையுடன் லாராவையே சிறிது நேரம் பார்த்தார். "என்ன சொல்கிறாய் நீ? என் மனையை வாங்குவதற்கு என்னையே பணம் கடன் தரச் சொல்கிறாயா?"

"ஆமாம் சார். அந்த இடத்தைப் பற்றிய விலை நிலவரமெல்லாம் நான் விசாரித்துவிட்டேன். இரண்டு லட்சம் டாலருக்கு மேல் அது போகாது. நான் மூன்று லட்சம் தருகிறேன் என்கிறேன். அதிலேயே லாபம் கிடைக்கிறது. அதைத் தவிர, நீங்கள் எனக்குக் கடன் கொடுக்கப் போகிற இரண்டு லட்சம் டாலருக்கு வட்டி வேறே கொடுக்கப் போகிறேன்."

மெக்காலிஸ்டர் ஊகூம் என்று தலையை அசைத்தார், "எந்த உத்தரவாதமும் இல்லாமல் இரண்டு லட்சம் டாலர் கடன் கேட்கிறாய். எப்படித் தர முடியும்? நடவாத காரியம்."

அவர் முன்னே மேலும் குனிந்து கொண்டு பேசினாள் லாரா. "ஏன் உத்தரவாதம் இல்லை? இருக்கிறது சார். மனையையும் கட்டிடத்தையும் நீங்கள் செக்யூரிட்டியாக வைத்துக் கொள்ளப் போகிறீர்கள். அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள நான் ஆள் தயார் பண்ணி வைத்திருக்கிறேன். நம் இரண்டு பேருக்குமே நஷ்டம் ஏற்படாது."

அவளுடைய திட்டத்தை மனசுக்குள் புரட்டிப் புரட்டி யோசனை செய்தார் மெக்காலிஸ்டர்.

லாரா இன்னும் முன்னே குனிந்தாள். அவளுடைய மேனியின் வனப்பு அவரை மயக்கியது.

"சரி, உன் யோசனையை நான் ஒப்புக் கொள்வதாகவே வைத்துக் கொள். கட்டிடத்தை யாரோ குத்தகைக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்று சொன்னாயே, யார் அவர்?"

"சார்லஸ் என்று பெயர் சார். கான்ட்டினென்ட்டல் சப்ளைஸ் என்ற நிறுவனத்தின் அதிகாரி."

"சங்கிலித் தொடராக ஸ்டோர்கள் நடத்துகிறார்களே, அவர்களா?"

மெக்காலிஸ்டருக்குத் திடீரென்று ஓர் ஆர்வம் வந்தது.

லாரா சொன்னாள்: "இங்கேயுள்ள சுரங்கத் தொழிலாளர்களுக்கும் மரம் அறுக்கும் தொழிலாளர்களுக்கும் தேவையான பண்டங்களை விற்பதற்காக நம் ஊரில் அவர்கள் ஒரு பெரிய ஸ்டோர் கட்ட விரும்புகிறார்கள்."

லாராவின் திட்டம் சர்வ நிச்சயமான வெற்றி என்று உடனேயே தோன்றிவிட்டது மெக்காலிஸ்டருக்கு.

"அந்த ஆளை எங்கே பிடித்தாய்?" என்று சாதாரணமாகக் கேட்பது போல் கேட்டார்.

"நம் லாட்ஜில்தான் தங்கியிருக்கிறார்."

"நல்லது. நான் யோசனை பண்ணிச் சொல்கிறேன். நாளைக்கு வா. நாம் இதைப் பற்றி விவரமாகப் பேசலாம்."

பரபரப்பில் லாராவுக்கு உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. "ரொம்பத் தாங்க்ஸ் மிஸ்டர் மெக்காலிஸ்டர், ரொம்பத் தாங்க்ஸ்."

அன்று மாலை சார்லஸ் தங்கியுள்ள லாட்ஜுக்குச் சென்றார் மெக்கானலிஸ்டர். சார்லஸைப் பார்த்தார்.

"என் பெயர் மெக்காலிஸ்டர்." என்று தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டார். "கிளேஸ் பேக்கு நீங்கள் வந்திருப்பதைப் பற்றி ரொம்ப சந்தோஷம். உங்களைப் பார்த்து விசாரித்து விட்டுப் போகத்தான் வந்தேன். நான் ஒரு பாங்க்கர், எனக்குச் சொந்தமான பெரிய ஒட்டல் இருக்கிறது. அங்கே நீங்கள் வசதியாகத் தங்கியிருக்கலாமே?"

"அந்த ஓட்டலில் இடமில்லையென்று சொல்லி விட்டார்கள்." என்றார் சார்லஸ்.

"நீங்கள் யாரென்று தெரியாததால் அப்படிச் சொல்லியிருப்பார்கள்."

"இப்போது மட்டும் தெரியுமா?" என்றார் சார்லஸ்

மெக்காவிஸ்டர் புன்சிரிப்புடன், "நமக்குள் எதற்குக் கண்ணாமூச்சி விளையாட்டு மிஸ்டர் சார்லஸ்: இது சின்ன ஊர், செய்திகள் சீக்கிரம் பரவிவிடும். எனக்குச் சொந்தமான மனையில் ஒருத்தர் கட்டிடம் கட்டி அதை உங்களுக்குக் குத்தகைக்கு விடப் போகிறார் என்று கேள்விப்பட்டேன்." என்றார்.

"எந்த மனையைச் சொல்கிறீர்கள்?"

"மெயின் ரோடும் கமர்ஷியல் ரோடும் சந்திக்கிற முனையில் இருக்கிறதே. அந்த மனைதான். பிரமாதமான இடம் அது, இல்லை? தாராளமாய் நாம் அந்த இடத்தைப் பேசி முடித்துக் கொள்ளலாம். எந்தப் பிரசினையுமில்லை."

"நான் ஏற்கெனவே வேறொருவருடன் அதைப் பற்றிப் பேசி முடித்துவிட்டேனே?"

மெக்காலிஸ்டர் சிரித்தார். "லாராவைத்தானே சொல்கிறீர்கள்? அவள் கிடக்கிறாள். நீங்கள் என்னோடு பாங்க்குக்கு வாருங்களேன், ஒப்பந்தம் எழுதிவிடலாம். என்ன?"

"நான் சொன்னதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. மிஸ்டர் மெக்காலிஸ்டர். நான் வேறொருவருடன் முன்பே பேசியாயிற்று என்றேன்."

"நீங்கள் தான் புரிந்துகொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன் மிஸ்டர் சார்லஸ்." என்றார் மெக்காலிஸ்டர். "அந்த மனன லாராவுக்குச் சொந்தமில்லை. எனக்குச் சொந்தமானது."

"அதை உங்களிடம் வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள், இல்லையா?"

"ஆமாம். ஆனால் நானொன்றும் அவளுக்கு விற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது."

"நானும் இடங்கள் மனையைத்தான் வாங்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. வேறு மூன்று இடங்கள் பார்த்து வைத்திருக்கிறேன். மூன்றும் இதேபோல் அருமையானவை, நல்லது. நீங்கள் வந்தது பற்றிச் சந்தோஷம்." என்று விடை கொடுத்தார் சார்லஸ்.

மெக்காலிஸ்டர் ஒரு நீண்ட நிமிடத்துக்கு அவரையே பார்த்தார். "நீங்கள்... சீரியஸாய்த்தான் பேசுகிறீர்களா?"

"சீரியஸாய்த்தான் சொல்கிறேன். நான் ஒருத்தருக்கு வாக்குக் கொடுத்தால் கொடுத்ததுதான். மீற மாட்டேன்."

"ஆனால் லாராவுக்குக் கட்டிடம் கட்டுவது பற்றி ஒன்றுமே தெரியாதே? அவள்."

"அதனாலென்ன? தெரிந்தவர்களைக் கேட்டுக் கொள்வாள். நாங்கள் எங்கள் தேவைகளைச் சொல்வோம். அதன் படி அவள் போட்டுக் கொடுக்கிற பிளானை நாங்கள் அங்கீகாரம் செய்வோம்."

மெக்காலிஸ்டர் தலையைச் சொறிந்து கொண்டார், "அதாவது, கான்ட்டினென்ட்டல் சப்ளைஸ் நிறுவனம், பத்து வருடத்துக்கு அந்தக் கட்டிடத்தைக் குத்தகை எடுத்துக் கொள்ளப் போகிறது என்கிறீர்கள்?"

"கரெக்ட்"

"சரி... அப்படியானால்... யோசனை பண்ணுகிறேன்." என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் மெக்காலிஸ்டர்.

அன்று லாரா லாட்ஜுக்குச் சென்றபோது, மெக்காலிஸ்டர் வந்து போனதைப் பற்றி சார்லஸ் சொன்னார்.

மனம் நொந்து போனாள் லாரா. "அப்ப மெக்காலிஸ்டர் என்னை முதுகில் குத்த..."

"கவலைப்படாதே. அவன் உனக்குத்தான் மனையைக் கொடுப்பான்."

"அப்படியா நினைக்கிறீர்கள்?"

"அவன் ஒரு பாங்க்கர். பிரிஸினஸ்காரன். லாபம்தான் முக்கியம் பிஸினஸ்காரர்சுளுக்கு. உன் மூலம்தான் மனை வாங்குவேன் என்று நான் சொல்லிவிட்டதால் உனக்குத் தான் விற்பான்."

"நீங்கள்... எனக்காக இவ்வளவு செய்கிறீர்களே, எதனால்?" என்று குரல் தழுதழுக்கக் கேட்டாள் லாரா.

"இதே கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்" என்று எண்ணிக் கொண்டார் சார்லஸ்.

‘எதனால் செய்கிறேன்?’

"இவள் பயங்கரச் சின்னப் பெண்ணாக இருக்கிறாள். அதனால்.

‘இவள் இந்தச் சின்ன ஊரில் இருக்கப் பிறந்தவளல்ல. அதனால்.

‘இவளைப் போல் எனக்கு ஒரு மகள் இருந்திருக்கக் கூடாதா என்று என் உள்ளம் ஏங்குகிறது. அதனால்.’

- இப்படி யெல்லாம் நினைத்துக் கொண்டாரே தவிர, வாய்விட்டுச் சொல்லவில்லை.

"இதிலே எனக்கொன்றும் நஷ்டம் ஏற்படப் போவதில்லை, லாரா. அதனால்தான் செய்கிறேன்." என்றார், "இதேபோல் நல்ல இடமாக வேறு சிலதும் பார்த்து வைத்திருக்கிறேன். இந்த இடத்தை நீ வாங்கினாயானால் உன்னிடம் குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்வேன். இல்லாவிட்டால் வேறு யாரிடம் சௌகரியமோ அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்வேன். அவ்வளவுதான்." என்றார்.

உணர்ச்சிவசப்பட்டதால் லாராவுக்குக் குரல் கம்மியது. "உங்களுக்கு... உங்களுக்கு... எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை சார். நான் போய் மெக்காலிஸ்டரைப் பார்க்கிறேன்..."

"என்னைக் கேட்டால் போகாதே என்பேன்." என்று அறிவுரை கூறினார் அவர். "நீ பாட்டுக்குச் சும்மா இரு. அவனே உன்னைத் தேடி வரட்டும்."

அவள் முகத்தில் கவலை படர்ந்தது. "வராமல் போய் விட்டால்..."

சார்லஸ் புன்னகைத்தார். "கட்டாயம் வருவான்."

சொல்லிவிட்டு, அவள் கையில் அச்சிட்ட ஃபாரம் ஒன்றைக் கொடுத்தார். குத்தகை ஒப்பந்த ஃபாரம். ப்ளூ ப்ரிண்ட்டுகள் ஒரு செட் தந்து, "இதில் எங்கள் தேவைகளைக் குறித்திருக்கிறது." என்றார்.

அன்றிரவு பூரா லாரா கண்விழித்து, அந்தப் படங்களையும் சார்லஸ் கொடுத்துள்ள ப்ளூப்ரிண்ட் குறிப்புக் களையும் படித்தாள்.

அடுத்த நாள் காலை மெக்காலிஸ்டர் அவளை போனில் கூப்பிட்டார்.

"என்னை வந்து பார்க்க முடியுமா?" என்றார்.

அவள் இதயம் தடதடவென்று அடித்துக் கொண்டது. "பதினைந்து நிமிடத்தில் வருகிறேன்."

அவள் போனபோது மெக்காலிஸ்டர் அவளுக்காகச் காத்துக் கொண்டிருந்தார்.

"நீ சொன்ன விஷயத்தை யோசனை பண்ணினேன். பத்து வருடக் குத்தகை எடுத்துக் கொள்வதாக மிஸ்டர் சார்லஸிடமிருந்து எழுத்து மூலமான ஒப்பந்தம் நீ வாங்கி வர வேண்டும்." என்றார்.

"தயராய் வாங்கி வைத்திருக்கிறேன்." என்றவள், சார்லஸ் கொடுத்திருந்த ஃபாரத்தைப் பையிலிருந்து எடுத்து அவர் முன் வைத்தாள்.

மெக்காலிஸ்டர் அதை ஆழ்ந்து ஆராய்ந்தார், "சரியாய்த்தான் இருக்கிறது."

"அப்படியானால் நம் பிஸினஸ் முடிந்தது. இல்லையா?" என்றாள் லாரா, மூச்சைப் பிடித்துக் கொண்டு.

மெக்காலிஸ்டர் தலையை அசைத்தார். "இல்லை."

"ஏன்?"

அவர் விரல்கள் மேஜையில் தாள மிட்டன. "உண்மையைச் சொல்வதென்றால் அந்த மனையை விற்க எனக்கு எந்த அவசரமும் இல்லை. அதிகநாள் வைத்திருக்க வைத்திருக்க அதன் விலை ஏறத்தான் போகிறது. இல்லையா லாரா?"

அவள் அவரை வெறித்துப் பார்த்தாள். "நீங்கள்."

"இந்தக் கடனை உனக்கு வழங்க வேண்டுமென்றால் அதற்குப் பர்த்தியாக நீ ஏதாவது தர வேண்டாமா லாரா?"

"பர்த்தியா... எனக்குப் புரியவில்லையே?"

"பர்த்தி என்றால்... ஒர் இனாம் என்று வைத்துக் கொள்ளேன் லாரா, உனக்குக் காதலன் யாராவது இருந்திருக்கிறானா?"

தடாலென்று அவளை வீழ்த்தித் தள்ளியது அந்தக் கேள்வி.

"வந்து... இல்லை..." மொத்தத் திட்டமும் கைநழுவிப் போவது போல் உணர்ந்தாள்.

மெக்காவிஸ்டர் அவளை நோக்கிக் குனிந்தார். "பச்சையாகச் சொல்கிறேனே! உன் அழகு என்னை மயக்கிவிட்டது. ஒரு நாள் உன்னோடு... என்ன? நான் ஒன்று தருகிறேன். நீ ஒன்று தருகிறாய். சரிக்குச் சரி, நான் சொல்வது..."

"புரிகிறது," என்றாள் லாரா. அவள் முகம் கருங்கல் மாதிரி இறுகிவிட்டது.

‘யோசித்துப் பார். நீ வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டாம்? உனக்கென்று சொந்தமாக ஒன்று இருக்க வேண்டாமா? நீயும் ஒரு மனுஷி என்று தலை நிமிர்ந்து நிற்க வேண்டாமா? நீ உன் அப்பா மாதிரி அல்ல என்று உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? அதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.’

லாராவின் தலை சுழன்றது.

"இந்த மாதிரி இன்னொரு சந்தர்ப்பம் உனக்கு ஒரு நாளும் கிடைக்காது லாரா! ஒன்றும் அவசரமில்லை. மெதுவாய் யோசனை பண்ணிச் சொல்லு..."

உடம்பு ஆடிக் கொண்டிருந்தது. அதை நிறுத்துவதற்காக இரு கைகளாலும் இடுப்பைக் கெட்டி யாய்ப் பிடித்துக் கொண்டாள். தன் எதிர்காலம் மொத்தமும், தன் உயிரே கூட, தான் சொல்லப் போகும் வார்த்தையில்தான் இருக்கிறது என்று தெரிந்தது அவளுக்கு.

"சரி", என்றாள்.

விகாரமாக இளித்தபடி, இரு கைகளையும் நீட்டிக் கொண்டு அவளை நெருங்கினார் மெக்கானிஸ்டர்.

"இப்போது இல்லை. காண்டிராக்ட் கையெழுத்தானதும்," என்றாள் லாரா.

10

டுத்த நாள், பாங்க் கடனுக்கான காண்டிராக்ட் பாரத்தை லாராவிடம் கொடுத்தார் மெக்காலிஸ்டர்.

"ரொம்ப ஸிம்பிளான காண்டிராக்ட், லாரா," என்றார். "இரண்டு லட்சம் டாலர் கடன். பத்து வருஷத்தில் திருப்பிச் செலுத்தலாம். எட்டு பர்ஸென்ட் வட்டி." ஒரு பேனாவை அவளிடம் நீட்டினார். "இந்தக் கடைசிப் பக்கத்தில் மட்டும் நீ கையெழுத்துப் போட்டால் போதும்."

"எதற்கும், முதலில் படித்துப் பார்த்து விடுகிறேனே?" என்றாள் லாரா. கைக் கடியாரத்தைப் பார்த்துக் கொண்டாள், "ஆனால் இப்போது டயம் இல்லை. என்னுடன் எடுத்துப் போகிறேனே? நாளைக்குக் கொண்டு வந்து தருகிறேன்."

மெக்காலிஸ்டர் தோள்களைக் குலுக்கிக் கொண்டார், "சரி." என்று சொல்லிவிட்டுக் குரலைத் தாழ்த்திக் கொண்டு, "அப்புறம் நான் சொன்னேனே, நமக்குள்ளே ஒரு சின்ன ஒப்பந்தம்... ஞாபகம் இருக்கிறதா? அடுத்த சனிக்கிழமை ஹாலிபாக்ஸ் ஸிடிக்குப் போகிறேன். நீயும் என்னுடன் வரலாம், இல்லையா?" என்றார்.

அவருடைய விகாரமான இளிப்பைப் பார்த்தாள் லாரா. குமட்டிக் கொண்டு வந்தது. "சரி," என்றாள். குரலே எழும்பவில்லை.

"நல்லது. காண்டிராக்டில் கையெழுத்துப் போட்டு நாளைக்கு எடுத்துக் கொண்டு வா." ஒரு நிமிடம் ஏதோ யோசனை செய்தவர், "நோவா ஸ்கோஷியா கட்டிடக் கம்பெனியை உனக்குத் தெரியுமில்லையா?" என்று கேட்டார்.

லாராவின் முகத்தில் பிரகாசம் வந்தது. "ஓ, ஸ்டீவ் என்று அவர்களுடைய ஃபோர்மன் இருக்கிறானே அவனைத் தெரியும்." என்றாள். ஊரில் சில மிகப் பெரிய கட்டிடங்களை அவர்கள் கட்டியிருந்தார்கள்.

"அது ரொம்ப நல்ல கம்பெனி. நீ அவர்களை அமர்த்திக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது."

"சரி, நாளைக்கு ஸ்டீலைப் பார்த்துப் பேசுகிறேன்." என்றாள் அவள்.

அன்று மாலை.

ஒப்பந்தத்தைச் சார்லஸிடம் கொண்டு போய்க் காட்டினாள் லாரா. ஆனால் மெக்காலிஸ்டருடன் தான் செய்து கொண்டுள்ள அசிங்கமான ஒப்பந்தம்’ பற்றி எதுவும் சொல்லவில்லை. சொல்ல அவமானமாக இருந்தது.

காண்டிராக்ட் ஒப்பந்தத்தைக் கவனமாகப் படித்தார் சார்லஸ், படித்து முடித்தார். "இதில் கையெழுத்துப் போடாதே," என்றார்.

அவளுக்குக் கலவரம் ஏற்பட்டது. "ஏன்?"

"அதிலே ஒரு ஷரத்து இருக்கிறது. அதன்படி டிசம்பர் 31 ம் தேதிக்குள் நீ கட்டிடத்தைக் கட்டி முடித்தாக வேண்டும். முடிக்கா விட்டால் சொத்து பாங்க்கிற்கே திரும்பச் சேர்ந்து விடும். அதாவது, முடிந்து கொண்டிருக்கும் கட்டிடம் மெக்சகாலிஸ்டருக்குச் சொந்தமாகி விடும். பிறகு பத்து வருடக் குத்தகையை எங்கள் கம்பெனி மெக்காலிஸ்டரிடம்தான் எடுத்துக் கொள்ள நேரும். அது மட்டுமல்ல, வாங்கின கடனையும் வட்டி போடு நீ திருப்பிச் செலுத்தியாக வேண்டும். ஆகையால், இந்த ஷரத்தை மாற்றும்படி மெக்காலிஸ்டரிடம் கேள்."

அன்றொரு நாள் மெக்காவிஸ்டர் சொன்ன வார்த்தை லாராவின் காதில் ஒலித்தது. இந்த மனையை விற்க வேண்டுமென்று எனக்கு அவசரம் எதுவுமில்லை. அதிக நாள் வைத்திருக்க வைத்திருக்க அதன் மதிப்பு ஏறும்.

லாரா தலையை அசைத்தாள், "இல்லை. அவன் மாற்ற மாட்டான்."

"அப்படியானால், இது வேண்டவே வேண்டாம். இது ஒரு பெரிய சூதாட்டம். உன் கைக்கு ஒரு பைசா கூட வராமல் போகக் கூடும். அத்தோடு இரண்டு இலட்சம் டாலர் கடனும் அதற்கான வட்டியும் உன் தலையில் விழும்."

"ஆனால் குறிப்பிட்ட கெடுவுக்குள் நான் கட்டிடத்தைக் கட்டி முடித்து விட்டால்?"

"அது ஒரு பெரிய கேள்விக் குறி, லாரா! ஒரு கட்டிடம் கட்டுவதென்றால் அதற்கு எத்தனையோ பேர் உன்னுடன் ஒத்துழைக்க வேண்டும். எவ்வளவோ விஷயங்கள் நீ நினைக்கிற மாதிரி இல்லாமல் தப்பாகப் போகக் கூடும்."

"எபிடியில் ஒரு பெரிய கட்டிடக் கம்பெனி இருக்கிறது. இந்த ஊரில் நிறையக் கட்டிடங்கள் அவர்கள் கட்டியிருக்கிறார்கள். அந்தக் கம்பெனியின் ஃபோர்மனை எனக்குத் தெரியும். அவரிடம் பேசிப் பார்க்கிறேன். கெடு டயத்துக்குள் கட்டிடத்தைக் கட்டி விடலாமென்று சொன்னால் இந்தக் காண்டிராக்டில் கையெழுத்திட்டுத் தருகிறேன்." என்றாள் லாரா...

அவள் குரலில் தென்பட்ட பதைப்பும் ஆர்வமும் சார்லஸின் தயக்கத்தை ஒரளவுக்கு விரட்டின. இறுதியில், "சரி, அந்த ஆளுடன் பேசிப்பார்." என்றார்.

ஸ்டீவ் என்ற அந்த ஃபோர்மனை லாரா போய்ப் பார்த்தபோது-

பக்கத்து நகரத்தில் கட்டிக் கொண்டிருந்த ஓர் ஐந்து மாடிக் கட்டிடத்தில் கர்டர்களின் மீது நடந்தவாறிருந்தான். நாற்பது வயதிருக்கும். மழையிலும் வெயிலிலும் அடி பட்டுக் கரடுமுரடான உடம்பு.

லாராவை உற்சாகமாக வரவேற்று, "இவ்வளவு அழகான பெண்ணை எப்படி வெளியே விட்டார்கள்?" என்றான்.

"திருட்டுத்தனமாக வந்தேன்." என்று லாரா சிரித்தாள். "மிஸ்டர் ஸ்டீவ், உங்களுக்கு ஒரு வேலை வைத்திருக்கிறேன்."

அவன் புன்னகை செய்தான், "அப்படியா? என்ன வேலை? பொம்மை வீடு ஏதாவது கட்டித் தர வேண்டுமா?"

"இல்லை". சார்லஸ் கொடுத்திருந்த ப்ளூ ப்ரிண்டுகளை அவனிடம் காட்டினாள். "இதுதான் கட்டிடம்."

ஒரு நிமிடம் அதைக் கூர்ந்து கவனித்தான் ஸ்டீவ், பிறகு நிமிர்ந்து லாராவை ஆச்சரியத்துடன் நோக்கினான். "பெரிய வேலையாக இருக்கிறதே? உனக்கு இதிலே என்ன சம்பந்தம்?"

"இதற்கான ஒப்பந்தங்களை முடித்து வைத்திருக்கிறேன். இந்தக் கட்டிடம் எனக்குச் சொந்தமாகப் போகிறது."

ஸ்டீவ் மெல்ல விசில் அடித்தான் "ஒ! அப்படியா?"

"ஆனால் அதில் இரண்டு விஷயம் இருக்கிறது."

"என்ன?"

"முதல் விஷயம், இந்தக் கட்டிடத்தை டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும். முடிக்காவிட்டால் அது பாங்குக்குச் சொந்தமாகி விடும். இரண்டாவது விஷயம், செலவு 1,70,000 டாலருக்கு மேல் போகக் கூடாது."

"டிசம்பர் முப்பத்தொன்றா? இன்னும் பத்தே மாதம் நானே இருக்கிறது."

"தெரியும், முடியுமா என்று சொல்லுங்கள்."

ப்ளூப்ரின்ட்டுகளை மீண்டுமொருமுறை பார்த்தான் ஸ்டீவ். மனதுக்குள் அவன் ஏதேதோ கணக்குப் போடுவது லாராவுக்குத் தெரிந்தது.

இறுதியில் அவன் சொன்னான்: "இப்போதே ஆரம்பிக்கிறதானால் முடியும்."

"ஆரம்பியுங்கள்," என்றாள் லாரா. உற்சாகம் அவளுள் கொப்புளித்தது. ‘வெற்றி வெற்றி வெற்றி பெற்று விட்டேன்’ என்று உரக்கக் கூவ வேண்டும் போலிருந்தது.

இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். "நான் வேலை செய்த பாஸ்களுக்குள் மிக அழகான பாஸ் நீதான்." என்றான் ஸ்டீவ்.

"தாங்க் யூ. சீக்கிரமாக வேலை ஆரம்பிப்பீர்களா?"

"நாளைக்கு உன் ஊருக்கு வந்து மனையைப் பார்க்றேன். பிறகு கட்ட ஆரம்பிக்கிறேன். நீ ஊரெல்லாம் பெருமை அடித்துக் கொள்கிற மாதிரி கட்டித் தருகிறேன், பார்."

லாரா கிளேஸ் பேக்குத் திரும்பி வந்து சார்லஸிடம் விஷயத்தைச் சொன்னான்.

"அந்தக் கம்பெனி நம்பகமானதுதானா லாரா? உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?" என்று கேட்டார் சார்லஸ்.

"நன்றாகத் தெரியும். இந்த ஊரிலேயும் பக்கத்து ஊரிலேயும் பிரமாதமான பல கட்டிடங்கள் கட்டியிருக்கிறார்கள்." என்று அவள் பட்டியல் கொடுத்தாள். அவளுடைய உற்சாகம் அவரையும் தொற்றிக் கொண்டது. புன்னகையுடன், "அப்படியானால் இன்று முதல் நம் பிஸினஸ் ஆரம்பமாகி விட்டது" என்றார்.

"நிச்சயமாய் நிச்சயமாய்!" என்றாள் லாரா. அவள் முகத்தில் பிரகாசம் ஒளி வீசியது. ஆனால் திடீரென்று மெக்காவிஸ்டருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் நினைவு வர, அவள் புன்னகை தேய்ந்தது.

‘அடுத்த சனிக்கிழமை நான் ஹாலிஃபாக்ஸுக்குப் போகிறேன். நீயும் என்னுடன் வரலாம், இல்லையா?’ என்று அவர் சொன்ன வார்த்தைகள்...

மறுநாள் காலை மெக்காலிஸ்டரின் பாங்க்குக்குச் சென்று பத்திரங்களில் கையெழுத்திட்டாள் லாரா.

அவள் புறப்பட்டுச் சென்றபோது மெக்காலிஸ்டருக்குத் தன் முதுகில் தானே தட்டிக் கொள்ள வேண்டும் போல் மகா ஆனந்தமாக இருந்தது. புதிய கட்டிடமாவது, இவளுக்காவது, கிடைக்கப் போகிறதாவது ஒரு நாளும் இல்லை!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். எத்தனை அட்டகாசமாக இருக்கிறாள் இவள் அவளுக்குக் கடன் கொடுக்கப் போகிறேன். உண்மைதான். ஆனால் அது எனக்கு நானே கடன் கொடுத்துக் கொள்கிற மாதிரி...’

ஹாலிஃபாக்ஸ் நகர் ஓட்டலில் லாராவுடன் தான் அனுபவிக்கப் போகும் சுகத்தை எண்ணிப் பார்த்தார், உடம்பெல்லாம் இனித்தது.

ஹாலிஃபாக்ஸ் நகருக்கு இதற்கு முன்பு இரண்டு முறைதான் போயிருக்கிறாள் லாரா. கிளேஸ் பேயுடன் ஒப்பிட்டால் இது மிகப் பெரிய நகரம். கார்களும் மனிதர்களுமாய் எப்போதும் ஜேஜே என்றிருக்கும். கடைகளில் பண்டங்கள் கொட்டிக் குவிந்திருக்கும்.

நகருக்கு வெளியேயுள்ள ஓர் ஒட்டலின் முன்னே காரை நிறுத்தினார் மெக்காலிஸ்டர். பதைக்கும் உள்ளத்தோடு உட்கார்ந்திருந்தாள் லாரா.

வெளியே இறங்கியவர் லாராவின் முழங்காலில் தட்டிக் கொடுத்தார். "கொஞ்சம் இரு. கண்ணு நான் போய் ரூம் புக் பண்ணிவிட்டு வருகிறேன்."

இதயத்தைத் திகில் பிடித்து ஆட்ட காருக்குள் உட்கார்ந்திருந்தாள் லாரா.

‘சீ சீ! என்னை நானே விற்றுக் கொள்கிறேன். இது வேசிப் பிழைப்பு... ஆனால் விற்பதற்கு என்னிடம் வேறென்ன இருக்கிறது? தான் இரண்டு லட்சம் டாலர் மதிப்புள்ளவள் என்று அவன் நினைக்கிறானே? இரண்டு லட்சம் டாலரை என் அப்பா கண்ணால் கூடப் பார்த்து தில்லை. எப்போதும்.’

காரின் கதவு திறந்தது. மெக்காலிஸ்டர் வெளியே நின்றிருந்தார் விகாரமான இளிப்புடன், "எல்லாம் ரெடி. வா கண்ணு, போகலாம்."

திடீரென மூச்சு விடுவதே கஷ்டமாகிவிட்டமாதிரி இருந்தது லாராவுக்கு. இருதயம் படபடவென்று அடித்துக் கொள்வதைப் பார்த்தால் மார்புக் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறி விடும் போல் தோன்றியது. எனக்கு மாரடைப்பு நேரப்போகிறது. ஹார்ட் அட்டாக்...

"லாரா..." அவளை விசித்திரமாகப் பார்த்தார் அவர். "உடம்பு கிடம்பு சரியில்லையா, என்ன?"

‘ஆமாம், நான் சாகப் போகிறேன்.’ என்று சொல்லத் தோன்றியது. ‘என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போ. அங்கே கன்னியாகச் சாகிறேன்.’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

ஆனால் அப்படி எதுவும் சொல்லவில்லை. "ஒன்று மில்லையே. நன்றாகத்தான் இருக்கிறேன்." என்றாள்.

மெல்லக் காரைவிட்டு இறங்கி மெக்காலிஸ்டரின் பின்னே நடந்தாள்.

ஒர் அழுக்கான அறை, அழுக்கான படுக்கை இரண்டு நாற்காலி. ஓர் உடைசல் மேஜை. தம்மாத் தூண்டு சைஸில் ஒரு பாத்ரூம்.

பயங்கரமான சொப்பனம் கண்டு கொண்டிருக்கிற மாதிரி அவளுக்கு உடம்பு நடுங்கியது.

"இது தான் உனக்கு முதல் தடவையா?" என்று மெக்காலிஸ்டர் கேட்டார்.

பள்ளிக்கூடத்தில் படித்தபோது தன்னிடம் பையன்கள் செய்த சேட்டைகள் அவளுக்கு ஞாபகம் வந்தன. அவை வெறும் குறும்புகள்தான், இந்த அளவு விபரீதத்துக்குப் போனதில்லை.

"ஏன் என்னவோ போல் இருக்கிறே? ஸெக்ஸ் என்பது ரொம்ப இயற்கையான, சகஜமான விஷயம் கண்ணு." என்றார் அவர்.

சொல்லிவிட்டு, தன் உடைகளைக் கழற்ற ஆரம்பித்தார். தொந்தியும் தொப்பையுமாக அவருடைய உருவத்தைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது அவளுக்கு.

லாராவையும் உடைகளைக் கழற்றும்படி கட்டாயப் படுத்தினார். ‘ஆ! நீ பிரமாதமான அழகிதான்!’ என்றார்.

அவளுடைய அருவருப்பு இன்னும் அதிகரித்தது. கட்டிலில் நுனியில் உட்கார்ந்தாள். அவர் அவளை மல்லாக்கத் தள்ளினார்.

11

திடீரென அவளுக்குள் கலவரம் மூண்டது. இது விளையாட்டுக்கல்ல. கர்ப்பமாகிவிட்டால்... திமிறி எழ முயன்றவளை அவர் அடக்கினார்.

அவள் தன்னை இழந்தாள்.

அவளுடைய உடம்பின் ஒவ்வோர் அணுவும் வலி தாங்காமல் நரக வேதனைப்பட்டது.

அவர் விகாரமாக இளித்தபடி எழுந்து உட்கார்ந்தார். "கவலைப்படாதே லாரா. அப்படியே நீ கர்ப்பமாகி விட்டாலும் எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் அழைத்துப் போய்ச் சரி பண்ணிவிடுகிறேன்."

தன் முகத்தில் பரவியிருந்த வெறுப்புத் தெரியாமல் லாரா மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். நொண்டி நொண்டிக் குளியலறையை அடைந்தபோது தேகத்தில் எரிச்சல் மிகுந்திருந்தது. ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஷவரைத் திருப்பிக் குளித்தாள்.

முடிந்து விட்டது. இனி எனக்கு வெற்றிதான். எனக்குச் சொந்தமாக ஒரு கட்டிடம் இருக்கப் போகிறது. பிறகு இன்னொரு கட்டிடம்... அதன் பிறகு மேலும் ஒரு கட்டிடம்.

நோவா ஸ்கோவுரியா கட்டிடக் கம்பெனி எழுப்பியிருந்த கட்டிடங்களைப் போய்ப் பார்த்து வந்தார் சார்லஸ். மெக்காலிஸ்டர் சிபாரிசு செய்திருந்த கம்பெனி அது.

"எல்லாம் முதல் தரமாக இருக்கிறது." என்று லாராவிடம் தெரிவித்தார். "உனக்கு எந்தப் பிரசினையும் இருக்காது."

நோவா ஸ்கோவரியா கம்பெனியின் ஃபோர்மனான ஸ்டீவ் மனையைப் பார்வையிட்டான். "அளந்து பார்த்தேன், 43,560 சதுர அடி இருக்கிறது. உங்கள் தேவைப்படி இருபதாயிரம் சதுர அடி கட்டுவதற்குத் தாராளமாகப் போதும்." என்றான்.

இருந்தாலும் மெக்காலிஸ்டர் விதித்திருந்த கெடுவைப் பற்றிச் சார்லஸ்க்குச் சந்தேகமாக இருந்தது. அந்த விஷயத்தில் லாராவைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தார். ஸ்டீவிடம் "டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதிக்குள் கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும். முடியுமா?" என்றார்.

"இன்னும் முன்னதாகவே முடித்து விடுவேன். கிறிஸ்துமசுக்குள் கட்டிடம் ரெடியாகிவிடும், நிச்சயம்," என்றான் ஸ்டீவ்.

லாராவின் முகம் மகிழ்ச்சியால் பளபளத்தது. "எப்போது ஆரம்பிப்பீர்கள்?"

"என் ஆட்கள் அடுத்த வாரம் வேலைக்கு வந்துவிடுவார்கள். ஓகே என்று நீங்கள் சொல்ல வேண்டியது தான் பாக்கி."

சார்லஸ் லாராவைப் பார்த்துத் தலையை அசைத்தார். "ஓகே" என்றாள் லாரா, மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்.

கட்டிடம் சிறிது சிறிதாக எழும்புவதைப் பார்ப்பது மிகப் பரவசமான அனுபவமாக இருந்தது லாராவுக்கு. ஒவ்வொரு நாளும் அந்த இடத்துக்குப் போனாள். "இந்தத் துறை பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் என் அசை," என்றான் சார்லஸிடம், ‘நூறு கட்டிடமாவது கட்டப் போகிறேன்."

"இந்தத் துறையில் உள்ள கஷ்டங்களையும் பிரசினை களையும் அறியாமல் பேசுகிறாளே!’ என்று எண்ணிக் கொண்டார் சார்லஸ்.

ஸ்டீவ் அனுப்பிய முதல் கோஷ்டி இடத்தைச் சர்வே செய்து அங்கங்கே கல் நாட்டினார்கள். அந்தக் கற்களுக்கு ஃப்ளாரஸென்ட் பெயிண்ட் அடித்தார்கள். எட்டத்திலிருந்து பார்க்கும்போதே பளிச்சென்று அந்தக் கற்கள் தெரிந்தன. அந்த வேலை முடிந்ததும், மண்ணை வெட்டி அள்ளிப் போடும் ராட்சச கேட்டர்பில்லர் லாரிகள் வந்தன.

அப்போது லாரா அங்கே இருந்தாள். "எதற்கு இது?" என்று ஸ்டீவிடம் கேட்டாள்.

"கல்லு கட்டிகள், மரங்களின் அடிப் பகுதிகள் இதையெல்லாம் தோண்டி எடுத்து அப்புறப்படுத்தி பூமியைச் சீராக்கும்." என்றான் ஸ்டீவ்.

அடுத்ததாக, அஸ்திவாரம் தோண்டும் வேலையும், சாக்கடை, தண்ணீர்க் குழாய்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன.

லாரா கட்டிடம் கட்டும் பொறுப்பை ஏற்றிருக்கும் செய்தி எல்லா லாட்ஜ்காரர்களுக்கும் பரவிவிட்டது. காலையும் இரவும் சாப்பாட்டுக் கூடத்தில் எல்லாரும் அதைப் பற்றியே பேசினார்கள்.

"லாரா, அடுத்தாற்போல் என்ன?" என்று கேட்பார்கள்.

லாரா எக்ஸ்பர்ட் ஆகிவிட்டாள். "இன்று அண்டர் கிரவுண்ட் குழாய்களை அதனதன் இடத்தில் பொருத்தப் போகிறார்கள். நாளைக்கு கான்கிரீட் மர வேலைகளை ஆரம்பிப்பார்கள்." என்று விவரமாகச் சொல்லிக் கொண்டே போனாள். சொல்லி முடித்த பின் புன்னகையுடன், "நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?" என்று கேட்டாள்.

கான்கிரீட்டைக் கொட்டும் வேலை நடந்தது. அஸ்திவாரங்கள் முடிந்ததும் லாரி லாரியாக மரத்துண்டுகள் வந்து இறங்கின. அவற்றை அறுத்து சட்டங்கள் இணைக்கும் பணியில் ஏராளமான தச்சுத் தொழிலாளர்கள் ஈடுபட்டார்கள். கர்ண கெடூரமான அந்தச் சத்தம் லாராவுக்கு இனிய சங்கீதமாக இருந்தது.

சம்மட்டிகளும் ரம்பங்களும் ஒரு தாள லயத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தன.

இரண்டு வாரத்துக்கெல்லாம் ஜன்னல்களும் கதவுகளும் முளைத்தன. திடுதிடுப்பென்று கட்டிடத்தை ஆதிப் பெருக்க வைத்துவிட்ட மாதிரி இருந்தது.

போவோர் வருவோரின் கண்களுக்கு, ஒரே இரும்பும் மரமும் கண்டபடி கிடக்கும் இடமாக அது தோன்றியது. ஆனால் லாராவுக்கு அப்படித் தோன்றவில்லை. அது அவள் கனவு. உயிர் பெற்றுக் கொண்டிருக்கும் கனவு.

ஒவ்வொரு காலையும், ஒவ்வொரு மாலையும் அவள் அங்கே சென்றாள். வைத்த கண்ணை எடுக்காமல் கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

‘இது எனக்குச் சொந்தம்... எனக்கே சொந்தம்...’

மெக்காலிஸ்டருடன் கழித்த அந்த இரவுக்குப் பிறகு அவளுக்கு ஒரு கவலை இருந்தது. கர்ப்பமாகி விடுவோமா என்று. ஆனால் அடுத்த மாதம் வீட்டு விலக்கு நேர்ந்த போது அந்தக் கவலை மறைந்து விட்டது.

‘இனிமேல் எனக்கு ஒரே ஒரு கவலைதான். கட்டிடக் கவலை’ என்று நினைத்துக் கொண்டாள்.

லாட்ஜ்காரர்களிடம் வாடகை வசூலித்து மெக்காலிஸ்டரிடம் சேர்ப்பதை அவள் நிறுத்தவில்லை. தான் வசிப்பதற்கு ஓர் இடம் வேண்டும் என்பதை அவள் உணர்ந்திருந்ததே காரணம். ஆனால் அவருடைய அலுவலகத்துக்குள் சென்று அவரைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பல்லைக் கடித்துக் கொண்டாள்.

"லாரா, அன்றைக்கு ஹாலிஃபாக்ஸில் ரொம்ப ஜோராகப் பொழுது கழிந்தது இல்லையா? இன்னொரு தடவை எப்போது போகலாம்?" என்றார் அவர்.

"கட்டிட வேலையில் பிஸியாக இருக்கிறேன்." என்று கண்டிப்புடன் பதிலளித்தாள் அவள்.

இரும்புத் தகடு அடிப்பவர்களும், விட்டங்கள் போடுவோரும் தச்சுத் தொழிலாளர்களும் ஒரே சமயத்தில இணைந்து வேலை செய்தார்கள். ஆட்களின் எண்ணிக்கை சாமான்களின் எண்ணிக்கை, லாரிகளின் எண்ணிக்கை எல்லாமே மும்மடங்கு பெருகின.

சார்லஸ் தன் ஊருக்குத் திரும்பி விட்டார். ஆனால் வாரம் ஒரு முறை லாராவுக்கு போன் செய்யத் தவறவில்லை.

கடைசியாகப் போன் பண்ணியபோது, "கட்டிட வேலை எப்படி நடக்கிறது?" என்று விசாரித்தார்.

"பிரமாதம்!" என்றாள் அவள்.

"குறித்த நேரத்தில் நடக்கிறதா?"

"அதற்கு முன்பாகவே."

"பலே பலே! இப்போது உன்கிட்டே உண்மையைச் சொல்கிறேன். ஆரம்பத்தில் எனக்குச் சந்தேகம், உன்னால் இந்த வேலையைச் செய்ய முடியாதென்று"

"நீங்கள் எனக்குச் சந்தர்ப்பம் கொடுத்ததால்தான் சார் முடித்தது. ரொம்ப நன்றி."

நடு நடுவே - மெக்காவிஸ்டரும் வந்து கட்டிட வேலையைப் பார்வையிட்டார்.

"அருமையாக வந்து கொண்டிருக்கிறது, இல்லையா லாரா?"

"ஆமாம்," என்றாள் லாரா.

மெக்காலிஸ்டரின் முகத்தில் திருப்தி நிரம்பியிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. ‘டிசம்பருக்குள் முடிக்க வேண்டுமென்று கெடு போட்டு என்னை ஏமாற்றப் போகிறான் என்று சார்லஸ் சொன்னாரே! அப்படி யொன்றும் மோசடிக்காரனாகத் தோன்றவில்லை’ என்று நினைத்துக் கொண்டாள்.

நவம்பர் மாதம் வந்தது.

கட்டிடம் கிடு கிடுவென்று வளர்ந்தது. ஜன்னல்களும் கதவுகளும் பொருத்தப்பட்டன. சுவர்களுக்கு வெள்ளைப் பூச்சு முடிந்தது. குழாய்களையும் மின்சார ஒயர்களையும் அங்கங்கே இணைக்க வேண்டியதுதான் பாக்கி.

டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு திங்களன்று, வேளையில் திடீரென்று மந்தம் ஏற்படத் தொடங்கியது.

அன்று காலை லாரா சென்றபோது இரண்டே ஆட்கள்தான் இருந்தார்கள். அவர்களும், வேலை செய்வதாகத் தெரிவில்லை.

"மற்ற ஆட்களெல்லாம் எங்கே?" என்று லாரா கேட்டாள்.

"வேறொரு வேலைக்குப் போயிருக்கிறார்கள், நாளைக்கு வந்து விடுவார்கள்," என்றான் இருவரில் ஒருவன்.

மறுநாள் காலை அவள் போய்ப் பார்த்த போது அங்கே யாரும் இல்லை.

பஸ் பிடித்து ஹாலிஃபாக்ஸுக்குச் சென்று ஃபோர்மன் ஸ்டீவைப் பார்த்தாள். "என்ன ஆயிற்று? வேலை நின்றிருக்கிறதே" என்று கேட்டாள்.

"கவலையே படாதே," என்று ஸ்டீவ் உறுதி கூறினான்.

"வேறொரு கட்டிட வேலையில் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டது. அதைக் கவனிப்பதற்காக உன் கட்டிடத்தில் வேலை பார்த்த ஆட்களை அங்கே அனுப்பி வைத்தேன். தற்காலிகமாகத் தான்."

"எப்போது அவர்கள் திரும்பி வருவார்கள்?"

"அடுத்த வாரம் வந்துவிடுவார்கள். எல்லா வேலையும் டாண்டாணென்று குறித்த நேரத்தில் முடிந்துவிடும்."

"ஸ்டீல், இந்தக் கட்டிட வேலை எனக்கு எவ்வளவு முக்கியமென்று உங்களுக்குத் தெரியும்..."

"நல்லாத் தெரியும், லாரா."

"குறிப்பிட்ட டயத்துக்குள் கட்டிடம் முடியவில்லை என்றால் அத்தனையும் எனக்கு நஷ்டம். அவ்வளவையும் நான் இழந்து நிற்பேன்."

"கவலையே வேண்டாம், அப்படி எதுவும் நேராது."

திரும்பியபோது லாரானின் மனத்தில் ஏதோ ஓர் அச்சம் ஏற்பட்டிருந்தது.

அவள் பயந்தது போலவே அடுத்த வாரமும் ஆட்கள் வரவில்லை.

12

டுத்த வாரமும் ஆட்கள் யாரும் வேலைக்கு வரக் காணோம். ஃபோர்மென் ஸ்டீலைப் பார்ப்பதற்காக லாரா மறுபடியும் ஹொலிஃபாக்ஸுக்குச் சென்றாள்.

"ஸாரி. மிஸ்டர் ஸ்டீல் ஊரில் இல்லை." என்றான் அவனுடைய செக்ரட்டரி.

"நான் அவரிடம், பேசியாக வேண்டும், எப்போது திரும்பி வருவார்?"

"வெளியூருக்கு ஒரு வேலையாகப் போயிருக்கிறார். எப்ப வருவாரோ எனக்குத் தெரியாது."

முதல் முறையாக லாராவின் மனத்தைக் கலவரம் பிடித்துக் கொண்டது. "இதோ பாரம்மா, இது ரொம்ப முக்கியமான விஷயம்," என்றாள். "அவர் எனக்காக ஒரு கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார். அது இன்னும் மூன்று வாரத்துக்குள் முடிந்தாக வேண்டும்."

"கவலையே வேண்டாம், மிஸ் லாரா. மிஸ்டர் ஸ்டீவ் ஒரு வேலையை இன்ன நேரத்துக்குள் முடித்துத் தருகிறேன் என்று சொன்னால் அந்த நேரத்துக்குள் முடித்து விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்."

"அது சரி, ஆனால் எந்த வேலையும் நடக்கவில்லையே?" என்றாள் லாரா. கிட்டத்தட்ட அழுகையே வந்துவிட்டது அவளுக்கு. "ஆட்கள் யாரும் வந்து வேலை செய்ய வில்லையே?"

"அவருடைய அஸிஸ்டெண்ட் மிஸ்டர் எரிக்ஸன் இருக்கிறார். அவரை வேண்டுமானால் பார்க்கிறீர்களா?"

"ப்ளீஸ், அதற்காவது ஏற்பாடு செய்யுங்கள்."

எரிக்ஸனைப் போய்ப் பார்த்தாள். வாட்டசாட்டமான தோற்றத்துடன், அகன்ற தோள்களுடன், உற்சாகமே உருவெடுத்த மாதிரி இருந்தார்.

"நீங்கள் எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்," என்றார். "எதற்கும் கவலைப்பட வேண்டா மென்று உங்களிடம் சொல்லும்படி ஸ்டீல் என்னிடம் சொல்லியிருக்கிறார். வேறு இரண்டு மூன்று பெரிய கட்டிடங்களில் தற்சமயம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அதிலே கொஞ்சம் பிரசினைகள் ஏற்பட்டிருக்கிறது. அதனால் உங்கள் வேலை தாமதப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். அதனால் என்ன? இன்னும் மூன்று வார வேலைதானே பாக்கி?"

"ஆனால் நிறைய வேலை பாக்கி இருக்கிறதே?"

"கவலையே வேண்டாம். திங்கள் கிழமை காலையில் எங்கள் ஆட்கள் டாணென்று அங்கே வந்து நிற்பார்கள், பாருங்கள்."

"ரொம்ப நன்றி," என்றாள்.

லாராவுக்கு சிறிது மூச்சு வந்த மாதிரி இருந்தது. "உங்களைத் தொந்தரவு பண்ணியதற்கு மன்னிக்கணும். நான் கொஞ்சம் பயந்துவிட்டேன். இது எனக்கு ரொம்ப முக்கியமான விஷயம்."

"பயமே வேண்டாம். வீட்டுக்குப் போய் அக்கடா ஈன்றிருங்கள். நம்பகமான ஆட்களிடம்தான் வேலையைக் கொடுத்திருக்கிறீர்கள்." என்றார் எரிக்ஸன்.

திங்கள் காலையும் வந்தது. ஈ காக்கையைக் காணோம்.

லாராவுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் ஆகிவிட்டது. சார்லஸுக்குப் போன் செய்தாள்.

"ஆட்கள் வராமல் வேலை நின்றிருக்கிறது. ஏனென்று எனக்குப் புரியவில்லை. இதோ வருகிறோம், அதோ வருகிறோம் என்று வாக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில்லை." என்று சார்லஸிடம் கூறினாள்.

"அந்தக் கம்பெனியின் பெயர் என்ன? நோவா ஸ்கோஷியா கம்பெனி என்றுதானே சொன்னாய்?"

"ஆமாம் சார்."

"சரி, நீ போனை வை, நான் மறுபடி கூப்பிடுகிறேன்." என்றார் சார்லஸ்.

இரண்டு மணி நேரம் கழித்துக் கூப்பிட்டார். "இந்த நோவா ஸ்கோஷியா கம்பெனியை! உனக்குச் சிபாரிசு செய்தது யார்?"

லாரா சிறிது யோசனை செய்துவிட்டு, "மெக்காலிஸ்டர்." என்றாள்.

"அதுதான் விஷயம். அது அவனோட கம்பெனி, லாரா."

அவளுக்குத் தலை சுற்றியது. "அதாவது... குறித்த காலத்தில் கட்டிடம் முடியாதபடி அவனே ஆட்களை நிறுத்தி வைத்திருக்கிறான் என்றா சொல்கிறீர்கள்?"

"அப்படித்தான் தோன்றுகிறது."

"ஐயோ கடவுளே!"

"அவன் ஒரு பாம்பு, லாரா, நச்சுப் பாம்பு."

‘அப்போதே நான் உன்னை எச்சரித்தேன்," என்று சார்லஸ் சொல்லியிருக்கலாம். லாராவின் மனத்தை வருத்தக் கூடாதென்று சொல்லவில்லை. "பார்க்கலாம்... எல்லாம் நல்ல படி முடியும்." என்று மட்டுமே சொன்னார்.

அந்தச் சின்னப் பெண்ணின் உற்சாகத்தையும் ஆசைகளையும் பார்த்து அவர் வியந்தார். பாராட்டினார். மெக்காலிஸ்டரைக் கட்டோடு வெறுத்தார். ஆனால் அவரால் என்ன செய்ய முடியும்? எதுவுமில்லை.

அன்று இரவு லாரா தூக்கமின்றி விழித்தபடியே படுத்திருந்தாள். தன் மடத்தனத்தை எண்ணி மனம் நொந்தாள். அவள் கட்டி முடித்திருக்கும் கட்டிடம் இனி மெக்காலிஸ்டருக்குச் சொந்தமாகிவிடும், அது மட்டுமல்ல. பிரம்மாண்டமான கடன் சுமை வேறே அவள் தலையில் ஏறி விடும். ஆயுள் பூரா உழைத்து அந்தக் கடனை அடைக்க வேண்டும்.

மெக்காலிஸ்டர் விடமாட்டார். கிட்டி போட்டுக் கடனை வசூலித்து விடுவார்.

அழுது அழுது களைத்தவளாக விடிகாலையில் அவள் தூங்கிப் போனாள்.

காலையில் எழுந்ததுமே மெக்காலிஸ்டரைப் போய்ப் பார்த்தாள்.

"வா கண்ணு. இன்றைக்கு நீ அமர்க்கள அழகாக இருக்கிறாய்," என்றார் அவர்.

லாரா நேரே விஷயத்துக்கு வந்தாள். "எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வேண்டும். முப்பத் தொன்றாம் தேதி கட்டிடம் முடியாது."

"அடாடா!" என்றபடி, நாற்காலியில் சாய்ந்து கொண்டார் அவர். "கேட்கவே கஷ்டமாயிருக்கிறதே?"

"எனக்கு இன்னும் ஒரு மாதம் டயம் தேவை."

மெக்காலிஸ்டர் பெருமூச்சு விட்டார். "அது எப்படிக் கண்ணு சாத்தியம்? முடியாதே. காண்டிராக்டில் நீ கையெழுத்துப் போட்டிருக்கிறாய். வியாபாரம் என்றால் வியாபாரம்."

"ஆனால்"

"ஸாரி லாரா. முப்பத்தொன்றாம் தேதி முடியவில்லை என்றால் கட்டிடம் என் பாங்க்கிற்குச் சொந்தமாகிவிடும்." என்று சொல்லிவிட்டார் அவர்.

செய்தி லாட்ஜ்காரர்களுக்கு எட்டியபோது எல்லாரும் கொதித்துப் போனார்கள்.

"தேவடியாப் பயல் உன்னைப் போய் ஏமாற்றப் பார்க்கிறானே" என்று கூச்சலிட்டார் ஒருவர்.

"ஏமாற்றி விட்டான்," என்று லாரா கையைப் பிசைந்தாள்.

"போச்சு! எல்லாம் போய்விட்டது."

"சும்மா இரு! ஒன்றும் போகவில்லை. இன்னும் எவ்வளவு நாள் இருக்கிறது? மூன்று வாரமா?"

லாரா தலை அசைத்தாள் "இல்லை, அதற்கும் கம்மி. இரண்டரை வாரம் இருக்கும்."

அந்த ஆள் மற்றவர்களை நோக்கித் திரும்பினார். "நாம் எல்லாரும் போய் அந்தக் கட்டிடத்தைப் பார்ப்போம்."

"அதிலே என்ன லாபம்?" என்றாள் லாரா.

"பார்க்கலாமே?" என்றார் அந்த லாட்ஜ்காரர், ---

சிறிது நேரத்தில் ஆறேழு லாட்ஜ்காரர்கள் கட்டிடத்தைச் சென்று பார்த்தார்கள். கவனமாக ஆராய்ந்தார்கள்.

"இன்னும் குழாய் வேலைகள் முடியவில்லை." என்றார் ஒருவர்.

*’எலெக்ட்ரிக் வேலைகள் கூடத்தான்." என்றார் இன்னொருவர்.

உடம்பை உறையச் செய்யும் டிசம்பர் காற்று வீசிக் கொண்டிருந்தது. இருந்தாலும் அவர்கள் அங்கேயே நின்று என்னென்ன வேலைகள் பாக்கி இருக்கின்றன என்று விவாதித்தார்கள்.

லாட்ஜ்காரர்களில் ஒருவர் லாராவிடம். "அந்த மெக்காலிஸ்டர் சரியான எமகாதகாரன். கட்டிடத்தை முக்காலே மூன்று வீசம் முடிக்கும்படி செய்திருக்கிறான். கான்டிராக்டின்படி கட்டிடத்தை அவன் எடுத்துக் கொள்ளும்போது அற்ப சொற்ப வேலைகள்தான் பாக்கி இருக்கும்." என்று சொன்னார். பிறகு மற்ற லாட்ஜ்காரர்களிடம் திரும்பி, "பாக்கி வேலையை இரண்டரை வாரத்தில் முடித்து விடலாம். என்ன சொல்கிறீர்கள்?" என்றார்.

"நிச்சயமாய்." என்று ஒரே குரலில் சொன்னார்கள் அவர்கள்.

லாரா திகைத்தாள். "புரியாமல் பேசுகிறீர்கள். ஆட்கள் வேலைக்கு வந்தால்தானே?"

"இதோ பார் பெண்ணே, இந்த லாட்ஜ்காரர்களில் குழாய் வேலை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். எலெக்ட்ரீஷீயன்கள் இருக்கிறார்கள். டவுனில் எங்களுக்கு நிறையச் சினேகிதர்கள் இருப்பதால் மற்ற வேலைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்."

"ஆனால் உங்களுக்கெல்லாம் கொடுக்க என்னிடம் பணம் ஏது? மெக்காலிஸ்டர் கடன் தர மாட்டான்."

"தேவையில்லை. நீ எதுவும் கொடுக்க வேண்டாம் எங்களுக்கு. இது நாங்கள் உனக்குத் தரும் கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கட்டும்."

இதற்குப் பிறகு நடந்ததையெல்லாம் லாராவினால் துளியும் நம்ப முடியவில்லை.

கிளேஸ் பே பூராவும் செய்தி பரவியது. வேறு வேறு கட்டிடங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வந்து லாராவின் கட்டிடத்தில் வேலை செய்தார்கள். ஆளுக்கு ஆள் பொறுப்பு மேற்கொண்டார்கள்.

அவர்களில் பாதிப் பேருக்கு லாராவிடம் பிரியம் உண்டு. அதனால் செய்தார்கள். மறு பாதிப் பேர் மெக்காலிஸ்டரிடம் கடன் வாங்கிவிட்டு விழி பிதுங்கியதால் அவனை வெறுத்தார்கள். "அந்த ஆளுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்." என்று கறுவிக் கொண்டு வேலையில் இரங்கினார்கள்.

எல்லாரும் தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலை முடிந்ததும் லாராவின் கட்டிடத்துக்கு வந்து வேலை செய்தார்கள். நள்ளிரவு வரை வேலை நடந்தது. சனிக்கிழமையைப் பார்க்கவில்லை. ஞாயிற்றுக் கிழமையைப் பார்க்கவில்லை. எப்போதும் அங்கே சந்தோஷமான ஆரவாரமே ஒலித்தது. குறிப்பிட்ட நாளுக்குள் வேலை முடிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் சவாலாக இருந்தது. தச்சுத் தொழிலாளர்களும் எலெக்ட்ரீஷியன்களும் குழாய்த் தொழிலாளர்களும் அந்த இடத்தை எப்போதும் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தன் பங்குக்கு ஒரு சின்ன உபகாரமாவது செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள்.’

செய்தி கேட்டதும் மெக்கலிஸ்டர் ஓடி வந்தார், அதிர்ச்சியில் சிலையாகி நின்றார்.

"என்ன இதெல்லாம்? இவர்களெல்லாம் என் ஆட்கள் இல்லையே?" என்று கத்தினார்.

"இவர்கள் என்னுடைய ஆட்கள்." என்று உறுதியுடன் பதிலளித்தாள் லாரா. "நான் என் ஆட்களை நியமிக்கக் கூடாது என்று காண்டிராக்டில் எதுவும் இல்லை."

"வந்து... நான்..." என்று மெக்காலிஸ்டர் தடுமாறினார், டிசம்பர் முப்பதாம் தேதி கட்டிடம் முடிந்துவிட்டது.

வலுவாகவும் அழுத்தமாகவும் வானை நோக்கிக் கம்பீரமாக, ஒங்கி நின்றது. அது போன்ற வெகு அழகான கட்டிடத்தை லாரா பார்த்ததே கிடையாது. பார்வையை நகர்த்தாமல், பிரமித்துப் போய்ப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

"என்னம்மா, சந்தோஷம் தானே?" என்றார்கள் வேலை செய்தவர்கள். "ஒரு பார்ட்டி வைக்கலாம். இல்லையா?"

லாரா தன் முதல் கட்டிடத்தைக் கட்டி முடித்த நிகழ்ச்சியை அன்றிரவு கிளேஸ் பே மொத்தமும் கொண்டாடியது.

அதுதான் ஆரம்பம்.

அதன் பிறகு எதுவும் லாராவைத் தடுத்து நிறுத்தவில்லை. அவள் மனத்தில் ஐடியாக்கள் பீரிட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் சார்லஸிடம், "உங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் இங்கே இந்த ஊருக்கு வரும்போது எங்கே தங்குவார்கள்?" என்றாள். "அவர்களுக்கு வீடுகள் கட்டித் தரலாமென்று பார்க்கிறேன். நீங்கள் என்ன நினைக்கின்றிகள்."

"பிரமாதமான ஐடியா என்று நினைக்கிறேன்." என்றார் சார்லஸ்.

பக்கத்து நகரத்தில் இருந்த ஒரு பாங்க்கரைப் போய்ப் பார்த்தாள் லாரா. தன் திட்டத்தைச் சொல்லி வீடுகள் கட்டக் கடனுதவி பெற்றாள்.

வீடுகள் கட்டி முடிந்தன.

"இந்த ஊருக்கு வேறு என்ன தேவை என்று தெரியுமா சார்" என்று ஒரு நாள் சார்லஸைக் கேட்டாள்.

"என்ன லாரா?"

"கோடை விடுமுறையின் போது ஏராளமாய் டூரிஸ்ட்டுகள் இங்கே வருகிறார்கள். கடலில் மீன் பிடிக்கப் போகிறார்கள். அவர்களுக்குக் கடற்கரை ஒரமாகச் சிறிய காட்டேஜ்கள் கட்டித் தந்தால் வசதியாக இருக்கும். நான் நல்ல இடம் பார்த்து வைத்திருக்கிறேன்..."

லாராவின் கெளரவப் பொருளாதார ஆலோசகராக ஆவிட்டார் சார்லஸ்.

அடுத்த மூன்று வருடங்களில் ஓர் அலுவலகக் கட்டிடம், ஒரு டஜன் கடற்கரைக் காட்டேஜ்கள், ஒரு சிறிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆகியவற்றைக் கட்டி முடித்தாள்.

இரண்டு வருடம் ஆயிற்று...

தனக்குச் சொந்தமாக இருந்த கட்டிடங்களை விற்றாள். முப்பது லட்சம் டாலர் கைக்கு வந்தது.

அவளுக்கு வயது இருபத்தொன்று.

கிளேஸ் பேக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு, சிகாகோவுக்குப் புறப்பட்டாள்.

அங்கே அவளுக்குப் பிரசினைகள் காத்திருந்தன.

13

சிகாகோ லாராவைப் பிரமிக்கப் பண்ணியது. அவள் இதுவரை பார்த்திருந்த ஊர்களில் மிகப் பெரியது ஹாலி ஃபாக்ஸ்தான், சிகாகோவுடன் ஒப்பிடும்போது அது வெறும் குக்கிராமமாகத் தோன்றியது. எப்போதும் சத்தமும் சந்தடியும் உள்ளதாக, சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் மிகுந்ததாக விளங்கியது சிகாகோ. ஒவ்வொருவரும் ஏதோ தலை போகிற காரியம் இருப்பது போலப் பறந்து கொண்டிருந்தார்கள்.

ஸ்டீவன்ஸ் என்ற ஹோட்டலில் லாரா அறை எடுத்துக் கொண்டாள். வரவேற்பு ஹாலில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருக்கும் பெண்களின் அழகழகான நடைகளைக் கவனித்து மறு நிமிடமே தான் உடுத்தியிருக்கும் உடைகள் ரொம்ப மோசம் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. கிளேஸ் பேக்கு இந்த உடை சரி. சிகாகோவுக்கு? ஊகூம்.

மறுநாள் காலையே அவள் செயலில் இறங்கினாள். பெரிய பெரிய துணிக் கடைகளுக்கும் காலணிக் கடைகளுக்கும் நகைக் கடைகளுக்கும் சென்று தேவையான தெல்லாம் வாங்கிக் கொண்டாள்.

ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் -

‘பணம் காய்த்துத் தொங்குகிறது என்று நினைத்தாயா? சால்வேவுன் ஆர்மிக்குப் போ. அனாதைகளுக்கு அங்கே துணி தருவார்கள்’ என்று கூறிய அப்பாவின் குரல் காதிலே ஒலிக்கும்.

தன் அறையில் இருந்த அலமாரிகள் நிறைய புத்தகம் புதிய உடைகளை வாங்கி அடைத்த பிறகே அவள் ஒய்ந்தாள்.

அடுத்து அவள் செய்தது.

டெலிபோன் டைரக்டரியின் மஞ்சள் காகிதங்களைப் புரட்டி, ரியல் எஸ்டேட் தரகர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்ததுதான்.

பார்க்கர் அண்ட் அசோசியேட்ஸ் என்ற கம்பெனி தான் மிகவும் பெரிய விளம்பரம் கொடுத்திருந்தது. அவர்களுக்குப் போன் செய்து மிஸ்டர் பார்க்கருடன் பேச வேண்டும் என்றாள்.

"உங்கள் பெயர்?"

"லாரா என்று சொல்லுங்கள்."

ஒரு நிமிடத்துக்கெல்லாம் ஒரு குரல் கேட்டது. "நான் ப்ரூஸ் பார்க்கர் பேசுகிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்?"

"அழகான புதிய ஓட்டல் ஒன்று கட்ட நினைத்திருக்கிறேன். அதற்கு ஒரு நல்ல மனை தேவை..."

மறுமுனையில் குரலில் உற்சாகம் தெரிந்தது. "நீங்கள் சரியான இடத்துக்குத்தான் போன் செய்திருக்கிறீர்கள், மிஸஸ் லாரா."

"மிஸ் லாரா."

"நல்லது, ஏதாவது குறிப்பாக இடம் மனதில் வைத்திருக்கிறீர்களா?"

"இல்லை. உண்மையைச் சொல்கிறேனே, சிகாகோ எனக்குப் பழக்கம் கிடையாது." என்றாள் லாரா.

"அதொன்றும் பிரசினையில்லை. உங்களுக்குப் பல நல்ல இடங்களை எங்களால் காட்ட முடியும். வந்து... ஒரு ஐடியா தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன். உங்கள் பங்குக்குப் பணம் எவ்வளவு பணம் போடுவார்கள்?"

"முப்பது லட்சம் டாலர்." என்றாள் லாரா, குரலில் பெருமை தொனிக்க.

நீண்ட நேரத்துக்கு மெளனம் நிலவியது. "முப்பது லட்சம் டாலர் என்றா சொன்னீர்கள்?"

"ஆமாம்"

"அதைக் கொண்டு ஒரு புதிய அழகான ஓட்டல் கட்ட விரும்புகிறீர்கள்?"

"ஆமாம்."

மறுபடியும் மௌனம்.

"மிஸ் லாரா, சுற்றுப்புற ஊர்களில் ஏதாவது கட்டவோ, வாங்கவோ உங்களுக்கு விருப்பமுண்டா?"

"கிடையாது. கிடையாது." என்றாள் லாரா. "மாறாக, இங்கே சிகாகோவிலேயே அழகான, உயர்தரமான ஓட்டல் கட்டத்தான் உத்தேசித்திருக்கிறேன்."

"முப்பது லட்சம் டாலரை வைத்துக் கொண்டா?" பார்க்கர் சூள் கொட்டினார். "மன்னிக்க வேண்டும். உங்களுக்கு உதவ முடியுமென்று தோன்றவில்லை."

"தாங்க் யூ." என்று சொல்லிவிட்டு டெலிபோனை வைத்தாள் லாரா. மஞ்சள் பக்கங்களை மீண்டும் புரட்டி, மேலும் அரை டஜன் கம்பெனிகளைக் கூப்பிட்டுப் பேசினாள்.

யதார்த்த நிலைமை என்னவென்று அன்று பகலுக்குள் லாராவுக்குப் புரிந்துவிட்டது. அவளுடைய முப்பது லட்சம் டாலரைப் பங்காக வைத்துக் கொண்டு, அவள் விரும்புகிற மாதிரி முதல் தரமான இடத்தை வாங்கித் தர யாருமே தயாராயில்லை. எல்லாரும் ஒரு விஷயத்தையே மாற்றி மாற்றிச் சொன்னார்கள் - சுற்றுப்புற வட்டாரத்தில், ஒரு மலிவான ஓட்டலைக் கட்டலாமே என்று.

‘ஒரு நாளும் இல்லை!’ என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள் லாரா. அதற்குப் பதில் கிளேஸ்பேக்குத் திரும்பிச் சென்று விடலாமா என்று கூடத் தோன்றியது அவளுக்கு.

எப்படிப்பட்ட ஹோட்டலைக் கட்ட வேண்டுமென்று பல மாதங்களாக அவள் கனவு கண்டு வந்தாள் மனத்துக்குள் அந்தக் கட்டிடம் அசலாகவே உருவாகி இருந்தது. நேர்த்தியான, விஸ்தாரமான, முப்பரிமாணமுள்ள ஒட்டல் கட்டிடத்தை அவன் கற்பனை செய்து வைத்திருந்தாள். அங்கே வருகிற ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டில் இருப்பது போல உணர வேண்டும். அதுதான் அவள் திட்டம். பெரிய பெரிய ஸ்யூட்கள் கொண்டதாக அந்த ஓட்டல் இருக்கும். ஒவ்வொரு ஸ்யூட்டிலும் ஒரு பிரம்மாண்டமான வரவேற் பறை: ஒவ்வோர் அறையிலும் கணப்பு வசதி கொண்ட நூலகம்; வசதியான சோபாக்கள், சாய்வு நாற்காலிகள், ஒரு பெரிய பியானோ, இரண்டு பெரிய படுக்கையறைகன்; நீளமான வெராந்தா; சிறிய சிற்றுண்டி. அறை; மதுபான அலமாரி...

இவ்வளவும் அவள் மனத்தில் திட்டவட்டமாய் உருப் பெற்று விட்டன. ஆனால் --ஆனால் அந்த ஓட்டலை எப்படிக் கட்டப் போகிறோம் என்பதுதான் அவளுக்குத் தெரியவில்லை.

அன்று அவள் ஒரு சிறிய அச்சகத்துக்குச் சென்றாள். "எனக்கு நூறு விசிட்டிங் கார்டு அச்சடித்துத் தர முடியுமா?" என்று கேட்டாள்.

"நிச்சயமாய். என்ன அச்சிட வேண்டும்?"

"மிஸ் லாரா என்று போட்டு, கீழே வீடு மனை பிஸினஸ்." என்று போடுங்கள்."

"சரி. மிஸ் லாரா. இரண்டு நாளில் அச்சிட்டுத் தருகிறேன்."

"ஊகூம். இன்று மாலையே கொடுங்கள், ப்ளீஸ்," என்று கேட்டுக் கொண்டாள் லாரா.

அடுத்த வேலையாக, சிகாகோ நகரம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள முனைந்தாள்.

அவென்யூக்களிலும், வீதிகளிலும் நடந்தாள். ஏரிக் கரையோரங்களிலும், பூங்காக்களிலும் மிருகக் காட்சி சாலைகளிலும், கால்ஃப் மைதானத்திலும் உப்பங்கழிப் பிரதேசத்திலும் திரிந்தாள். மார்க்கெட்டுகளுக்குச் சென்றாள். சிகாகோ பற்றிய புத்தகங்களை வாங்கிக் கரைத்துக் குடித்தாள். சிகாகோ நகருக்குப் புகழ் தேடித் தந்த கலைஞர்களைப் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும் ராஜதந்திரிகளைப் பற்றியும் படித்தறிந்தான். பழம் பெருமை படைத்த குடும்பங்கள் சிகாகோவில் என்னென்ன உள்ளன என்பதைத் தெரிந்து கொண்டாள். ஏரிக்கரையில் இருந்த அவர்களுடைய பங்களாக்களையும் சுற்று வட்டாரத்தில் உள்ள அவர்களுடைய பெரும் எஸ்டேட்டுகளையும் பார்வையிட்டாள்.

நகரத்தின் தென்பகுதியைப் பார்த்தபோது அவளுக்குத் தன் சொந்த ஊரில் இருப்பது போல் மனசுக்கு ஒரு தெம்பு ஏற்பட்டது. ஏனெனில் அங்கே ஸ்வீடனிலிருந்தும், போலந்திலிருந்தும், அயர்லாந்திலிருந்தும், லிதுவேனியாவிலிருந்தும் மக்கள் வந்து குடியேறியிருந்தார்கள். கிளேஸ் பேயில் இருப்பது போல் உற்சாகமாக இருந்தது அவளுக்கு.

மீண்டும் தெருக்களில் நடந்து சென்றாள். ‘விற்பனைக்கு’ என்று அறிவிப்பு மாட்டியுள்ள கட்டிடங்களை ஆராய்ந்தாள். சம்பந்தப்பட்ட தரகர்களை அணுகி, அந்தக் கட்டிடங்களின் விலை என்ன என்று விசாரித்தபோது -

அறுநூறு லட்சம் டாலர்...

எண்ணூறு லட்சம் டாலர்.

ஆயிரம் லட்சம் டாலர்...

- என்றே பதில் கிடைத்தது.

விசாரிக்க, விசாரிக்க, அவன் கையிலிருந்த முப்பது லட்சம் டாலர் அற்பமாகப்பட்டது.

இனி என்ன செய்யலாம் என்று ஒட்டல் அறையில் உட்கார்ந்து சிந்தனை செய்தாள்.

ஒன்று, நகரத்தின் ஏழ்மையான பகுதியில் ஒரு சின்ன ஓட்டல் கட்டலாம்; அல்லது ஊருக்குத் திரும்பலாம். இரண்டும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

‘ரொம்ப தூரம் சென்றுவிட்டேன். முன் வைத்த காலைப் பின் வைப்பது என்பது இனிமேல் கிடையாது’ என்று உறுதி பூண்டாள்.

அடுத்த நாள் காலை ஒரு பாங்க்கிற்குள் நுழைந்தாள். கவுண்ட்டரில் இருந்த கிளார்க்கிடம் நேரே சென்று, "உங்கள் வைஸ் பிரஸிடெண்டுடன் பேச வேண்டும்." என்று கூறி, தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்தாள்.

ஐந்து நிமிடத்தில் அனுமதி கிடைத்தது. பீட்டர்பன் என்ற வைஸ்பிரஸிடெண்ட், அவள் கார்டைக் கையில் உருட்டியவாறு, "என்ன உதவி வேண்டும், மிஸ் லாரா?" என்று கேட்டார். நடுத்தர வயதுக்காரர். பேச்சில் லேசான திக்கல் தெரிந்தது.

"நான் சிகாகோவில் ஓர் ஒட்டல் கட்ட விரும்புகிறேன். அதற்குப் பணம் கடன் வேண்டும்." என்றான் லாரா.

அவர் நட்புறவுடன் புன்னகை செய்தார். "உதவி செய் அதற்காகத்தானே நாங்கள் இருக்கிறோம்? என்ன மாதிரியான ஓட்டல் கட்டப் போகிறீர்கள்?"

"பிஸியான பகுதியில், நட்சத்திர ஓட்டல்."

"நல்ல யோசனைதான்."

"உங்களிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டும். நான் பங்குக்கு என்னிடம் முப்பது லட்சம் டாலர்தான் இருக்கிறது."

அவர் மறுபடியும் புன்னகை செய்தார். "பரவாயில்லை."

அவள் உள்ளத்துக்குள் கும்மென்று ஒரு பரவசம் பரவியது. "உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?"

"ஆமாம். முப்பது லட்சம் டாலரைக் கொண்டு எவ்வளவோ செய்யலாமே!" அவர் கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டார். "எனக்கு இன்னோர் அப்பாயின்ட்மெண்ட் இருக்கிறது. ராத்திரி என்னுடன் சேர்ந்து உணவு உண்ண வாருங்களேன். அப்போது இதைப் பற்றிப் பேசலாம்."

"நிச்சயமாய் வருகிறேன்." என்றாள் லாரா.

"நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?" லாரா தன் ஓட்டலின் பெயரைச் சொன்னாள்.

"சரி, எட்டு மணிக்கு அங்கே வந்து அழைத்துப் போகட்டுமா?"

"ரொம்ப நன்றி சார்." என்று சொல்லிவிட்டு லாரா எழுந்து கொண்டாள். "உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, தெரியுமா? உண்மையில் நான் மனம் இடிந்து போயிருந்தேன்."

"அதற்கு அவசியமேயில்லை," என்றார் பீட்டர்ஸன், இனிமேல் நீங்கள் என் பொறுப்பு.

சரியாய் எட்டு மணிக்கெல்லாம் பீட்டர்ஸன் வந்தார். லாராவை ஒரு பெரிய ஒட்டலுக்கு அழைத்துப் போனார்.

விருந்துண்ண அமர்ந்ததும் அவர் சொன்னார்: "நீங்கள் என்னைப் பார்க்க வந்ததைப் பற்றி எனக்கு ரொம்பவும் சந்தோஷம். நாம் இருவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முடியும்."

அவளுக்குப் புரியவில்லை, "இருவரும் சேர்ந்தா?"

"ஆமாம். இந்த ஊரில் அழகான பெண்கள் ரொம்பப் பேர் இருக்கிறார்கள். ஆனால் உன்னைப் போல் அழகி யாருமே இல்லை, காணோம். நீ ஒரு உல்லாச விடுதி நிறுவலாம். பெரிய பெரிய பணக்காரர்கள் மட்டுமே வரும்படி யாக..."

லாராவுக்கு ரத்தம் உறைந்து போயிற்று. "என்ன சொல்கிறீர்கள்?"

"புரியவில்லையா? இன்னும் ஆறேழு அழகான பெண்களை நீ பிடித்தால் போதும். நாம்..."

லாரா எழுந்து போய்விட்டாள்.

மறுநாள் மேலும் மூன்று பாங்க்குகளுக்குச் சென்றாள்.

முதல் பாங்க்கின் மானேஜர் அவள் திட்டத்தைக் கேட்டதும், "நான் சொல்வதைக் கேள். இந்தத் திட்டத்தை உடனடி பயமாய் மறந்து விடு. ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்பது ஆண்களின் துறை. பெண்களுக்கு அதில் இடம் கிடையாது." என்றார்.

"ஏன் அப்படி?" என்று தீனமான குரலில் லாரா கேட்டாள்.

"ஏனென்றால், கொலைக்கு அஞ்சாத முரடர்களும் அயோக்கியர்களும் நிறைந்த துறை இது. உன்னை உயிரோடு சாப்பிட்டு விடுவார்கள்."

"கிளேஸ் பேயில் என்னை யாரும் உயிரோடு சாப்பிட வில்லை," என்றாள் லாரா.

அவர் அவளை நோக்கி முன்புறம் குனிந்தார். "நான் ஒரு சின்ன ரகசியம் சொல்லட்டுமா? சிகாகோ என்பது கீளேஸ் பே அல்ல."

அடுத்த பாங்க்கில் மானேஜர் சொன்னார்: "சந்தோஷமாய் உங்களுக்கு உதவி செய்கிறோம், மிஸ் லாரா. ஆனால் நீங்கள் வைத்திருக்கிற திட்டம் கொஞ்சம் கூட நடவாது. நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் பணத்தைக் கொடுங்கள், அதை வேறொரு துறையில் மூலதனமாகப் போட்டு..."

அவர் பேச்சை முடிக்குமுன்பு லாரா வெளியேறி விட்டாள்.

மூன்றாவது பாங்க்கின் பிரசிடெண்டைப் பார்த்தாள். வான்ஸ் என்ற பெயர். இனிமையான தோற்றத்துடன் ஒரு பாங்க்கின் பிரசிடெண்ட் என்ன லட்சணத்துடன் இருக்க வேண்டுமோ அப்படி இருந்தார். அவருடன் கூட இன்னொரு இளைஞன் இருந்தான். முப்பது வயது இருக்கும். ஒல்லியாக, தலை சரியாக வாரப்படாமல், நோஞ்சான் போல் காட்சியளித்தான். அந்த இடத்துக்கு கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாதவனாகத் தோன்றினான்.

"இவர் பெயர் ஹோவார்டு. மிஸ் லாரா. எங்கள் பாங்க்கின் வைஸ் பிரசிடெண்ட்டுகளில் ஒருவர்," என்று அவனை அறிமுகப்படுத்தினார் வான்ஸ்.

லாரா வணக்கம் தெரிவித்தாள்.

"உங்களுக்கு என்ன உதவி தேவை?" என்று வான்ஸ் கேட்டார்.

"நான் சிகாகோவில் ஒர் ஓட்டல் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குப் பண உதவி தேவைப் படுகிறது."

அவர் முகத்தை ஆவலுடன் பார்த்தாள் லாரா.

14

பாங்க் பிரசிடெண்ட் வான்ஸிடம், "மிசிகன் அவென்யூவுக்குப் பக்கமாக ஒட்டல் கட்ட விரும்புகிறேன்," என்றாள் லாரா.

"ரொம்ப நல்ல ஐடியா. உங்கள் பங்குக்கு எவ்வளவு போடுவீர்கள்?"

"முப்பது லட்சம் டாலர், மீதியை நீங்கள் கடனாகக் கொடுங்கள்," என்றாள் லாரா.

அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். "உங்களுக்கு உதவி செய்ய இயலாது என்று தோன்றுகிறது. காரணம், உங்களிடம் மாபெரும் திட்டம் இருக்கிறது. மிகச் சிறிய பர்ஸ் இருக்கிறது. வேறு ஏதாவது..."

"எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு ரொம்ப நன்றி ஜென்டில்மென்," என்று சொல்லிவிட்டு லாரா புறப்பட்டாள்.

வெளியே நடந்தபோது அவள் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. முப்பது லட்சம் டாலர் என்பது கிளேஸ் பேயில் பிரம்மாண்டமான தொகை. இங்கே சிகாகோவில் அதைத் தூசுபோல் நினைக்கிறார்கள். சே!

தெருமுனையை அவள் அடையும் சமயம், "மிஸ் லாரா," என்று ஒரு குரல் அழைத்தது.

திரும்பிப் பார்த்தாள்.

பாங்க் பிரஸிடெண்ட் வான்ஸ் தனது வைஸ் பிரஸிடெண்ட் என்று அறிமுகப்படுத்திய இளைஞன் ஹோவார்டு தான் வந்து கொண்டிருந்தான்.

"என்ன?" என்றாள்.

"உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும்." என்றான் அவன்.

"ஒரு கப் காப்பி சாப்பிடலாம், வாருங்களேன்."

லாரா முறைத்தாள். ‘ச்சீ! இந்தச் சிகாகோவில் மொத்தப் பேரும் காமப் பிசாசுகள்தானா’

"அடுத்த தெருவில் ஒரு நல்ல காப்பி ஓட்டல் இருக்கிறது." என்றான் அவன் மீண்டும்.

"சரி," என்றாள் லாரா சலிப்புடன்.

காப்பி சாப்பிடுகையில் ஹாவார்டு சொன்னான்: "உங்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறேன் என்று நீங்கள் நினைக்காமலிருந்தால் ஒன்று சொல்லட்டுமா?"

லாரா அவனை அலுப்புடன் பார்த்தபடியே இருந்தாள், "சொல்லுங்கள்."

"முதலாவது, உங்கள் திட்டமே தப்பானது."

"என் திட்டம் நடக்காது என்கிறீர்களா?" என்றாள் லாரா சிறிது கோபத்துடன்.

"இல்லை. மாறாக, நட்சத்திர ஓட்டல் கட்டுவது பிரமாதமான ஐடியா என்கிறேன்."

அவளுக்கு வியப்பு ஏற்பட்டது. "பின்னே ஏன்..."

"சிகாகோவுக்கு ஒரு பெரிய நட்சத்திர ஓட்டல் தேவைதான், ஆனால் அதை நீங்கள் கட்டக் கூடாது."

"புரியவில்லையே?"

"நான் என்ன சொல்கிறேனென்றால், நல்ல இடத்தில் பழைய ஓட்டல் ஏதேனும் இருக்கிறதா என்று பாருங்கள். அதை வாங்கி ரீமாடர்ன் செய்யுங்கள். குறைந்த விலையில் வாங்கக் கூடியா பழைய ஓட்டல்கள் எவ்வளவோ இருக்கிறது. உங்களிடமிருக்கும் முப்பது லட்சம் டாலர் போதும். பிறகு அதைப் புதுப்பிக்கவும், நட்சத்திர ஓட்டலாக மாற்றவும் பாங்க்கில் கடன் கேளுங்கள். கொடுப்பார்கள்."

லாரா யோசனையில் ஆழ்ந்தாள். இவன் சொல்வது சரிதான். நல்ல யோசனையாகத்தான் தோன்றுகிறது.

"இன்னொரு விஷயம்," என்றான் ஹோவார்டு. "நீங்கள் ஒரு கட்டிடக் கலைஞரையும், மேஸ்திரியையும் பிடிக்க வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து ஒரு மொத்தமான திட்டமாக நீங்கள் சமர்ப்பித்தால்தான் பார்க்கில் உங்களுக்குக் கடன் கொடுக்க முன்வருவார்கள்."

கிளேஸ் பேயில் ஃபோர்மன் ஸ்மாவிடம் மாட்டிக் கொண்டது லாராவுக்கு நினைவு வந்தது. "நீங்கள் சொல்வது புரிகிறது. உங்களுக்குத் தெரிந்த நல்ல கட்டிடக் கலைஞரும், மேஸ்திரியும் யாராவது இருக்கிறார்களா?"

ஹோவார்டு புன்னகையுடன், "பலரைத் தெரியும்." என்றான்.

"உங்கள் யோசனைக்கு ரொம்ப நன்றி." என்றாள் லாரா.

"சரியான இடம் கண்களில் பட்டவுடன் உங்களிடம் வந்து அதைப் பற்றிப் பேசட்டுமா?"

"எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். மகிழ்ச்சி."

‘என் அபார்ட்மெண்ட்டுக்கு வாருங்களேன், பேசலாம், என்பது போல் அவன் ஏதாவது சொல்லக் கூடும் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால், "இன்னும் கொஞ்சம் காப்பி சாப்பிடுகிறீர்களா, மிஸ் லாரா?" என்று மட்டுமே அவன் சொன்னான்.

லாரா மறுபடியும் சிகாகோ நகரத்தின் தெருக்களில் அலைய ஆரம்பித்தாள். ஆனால் முன்பு பார்த்தது போல் அல்லாமல் இப்போது வேறு கண்ணோட்டத்துடன் பார்த்துக் கொண்டு சென்றாள்.

ஓர் அவென்யூ வழியே போய்க் கொண்டிருந்து போது, உலக யுத்தத்துக்கு முன் கட்டப்பட்ட பழைய ஒட்டவொன்று கண்ணில் பட்டது. வெளியே போர்டில் இருந்த பெயரில் சில எழுத்துக்கள் அழிந்து போயிருந்தன.

லாரா முதலில் அதைக் கடந்து சென்றுவிட்டாள். பிறகு சட்டென நின்றாள். அதை இன்னும் கூர்ந்து கவனித்தாள்.

முன்புறம் அழுக்கும் தூசியுமாக இருந்ததால் ஒரிஜினலாக என்ன வர்ணம் அடித்திருந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எட்டு மாடிகள் இருந்தன.

லாரா திரும்பி வந்து ஒட்டலுக்குள் நுழைத்தாள். வெளிப்புறமே தேவலை என்னும்படி உள்புறம் மோசமாக இருந்தது. கிழிந்து போன ஷர்ட்டும், ஜீன்ஸும் அணிந்த ஒரு குமாஸ்தா, குடித்துக் கலாட்டா பண்ணிக் கொண்டிருந்த ஓர் ஆளை வெளியேற்றிக் கொண்டிருந்தான். வரவேற்பு அறை மேஜை ஏதோ டிக்கெட் கொடுக்கும் கவுண்ட்டர் மாதிரி இருந்தது. முன் ஹாலின் கோடியில் மாடிப்படி சென்றது. முன்னொரு காலத்தில் மேலே பெரிய பெரிய அறைகள் இருந்திருக்கும். இப்போது அலுவலகங்களுக்கு வாடகை விட்டிருந்தார்கள். ஒரு டிராவல் ஏஜென்ஸி, ஒரு தியேட்டர் டிக்கெட் விற்பனை நிலையம், ஒரு வேலை தேடித்தரும் ஸ்தாபனம் ஆகியன இருப்பதைக் கவனித்தாள் லாரா.

அந்தக் குமாஸ்தா தன் மேஜைக்குத் திரும்பினான். "உங்களுக்கு ரூம் வேண்டுமா?" என்றான்.

"இல்லை. நான் வந்தது."

அவள் பேச்சை முடிக்கு முன், இறுக்கிப் பிடித்த கவர்ச்சி உடையில் ஒரு பெண் வந்து, "மைக், சாவி கொடு," என்றாள். அவள் பக்கத்தில் வயதான நபரொருவர் இருந்தார்.

குமாஸ்தா அவனிடம் ஒரு சாவி எடுத்துத் தந்தான். அந்த இருவரும் லிஃப்டை நோக்கிச் செல்வது தெரிந்தது.

"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று குமாஸ்தா மறுபடி கேட்டான்.

"இந்த ஓட்டல் விஷயமாக வந்திருக்கிறேன், இதை விற்பதாக இருக்கிறீர்களா?"

"இங்கே எல்லாமே விற்க வேண்டியதுதான். உங்கள் அப்பா ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்கிறாரா?"

"இல்லை. நான்தான்," என்றாள் லாரா.

அவன் அவளை வியப்புடன் பார்த்து, "ஓ, அப்படியா? டயமண்ட் பிரதர்ஸ் என்று அண்ணன் தம்பி இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் பாருங்கள். இந்த மாதிரிப் பல அரதப் பழசான ஒட்டல்களை அவர்கள் நடத்துகிறார்கள்."

"எங்கே அவர்களைப் பார்க்கலாம்?"

அவன் ஒரு முகவரியைக் கொடுத்தான். "இந்த ஒட்டலை உள்ளே போய்ப் பார்க்கலாமா?"

"தாராளமாய்," என்றவன் சிரித்தான், "யார் கண்டதும் நீங்களே ஒருநாள் என் முதலாளியாய் வந்தாலும் வருவீர்கள்!"

‘நான் முதலாளியாய் வந்தால் கூட உன்னை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டேன்!’ என்று லாரா எண்ணிக் கொண்டாள்.

கூர்மையாய்ப் பரிசீலித்தவாறே அவள் அந்த ஹாலை வட்டமிட்டாள். நுழைவாயிலில் பழைய பாணியில் படிகள் இருந்தன. ஏதோ தோன்றவே, கிழிந்து போய்த் தூசி படிந்திருந்த விரிப்பின் நுனியை மெல்லத் தூக்கிப் பார்த்தாள். அது தன் அடியில் மங்கலான பளிங்குத் தரை தெரிந்தது. மாடிப் படிக்கு ஏறும் இடத்தை அடைந்தாள். சுவர்களில் சிவப்புக் கலர் வால்பேப்பர்கள் அங்கங்கே பிய்ந்து கொண்டிருந்தன. ஒரத்தில் கொஞ்சம் கிழித்துப் பார்த்தாள், அங்கும் அதே பளிங்கு.

சிறிது சிறிதாக லாராவுக்குப் பரபரப்பு ஏற்பட்டது. மாடிபடியின் கைப்பிடிக்குக் கறுப்புப் பெயிண்ட் படித்திருந்தது. ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டாள் குமஸ்தா கவனிக்கிறானா என்று. கவனிக்கவில்லை. தன் ஒட்டல் ரூம் சாவியைப் னபயிலிருந்து வெளியெடுத்து, மெதுவே கொஞ்சம் பெயிண்ட்டைச் சுரண்டினாள். அவள் வேண்டுதல் பலித்த மாதிரி, கத்தமான கெட்டிப் பித்தளையில் கைப்பிடி செய்யப்பட்டிருந்தது.

லிஃப்டை நெருங்கினாள். அங்கும் கறுப்புப் பெயிண்ட், சுரண்டினாள். அவையும் நல்ல பித்தளை.

தன் படபடப்பை மறைத்துக் கொண்டு குமாஸ்தாவிடம் வந்தாள், "ஏதாவது ஒரு ரூமைப் போய்ப் பார்க்கலாமா?"

அவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு, "ஒரு கஷ்டமும் இல்லை," என்று கூறி ஒரு சாவியை எடுத்துத் தந்தான், "எண் 410."

லாரா லிஃப்டில் ஏறிக் கொண்டாள். அது பழசாயிருந்தது. மெதுவாகத்தான் நகர்ந்தது. இதைப் புதுப்பித்தாக வேண்டும்,’ என்று எண்ணிக் கொண்டாள். ‘உட்புறம் படங்கள் மாட்ட வேண்டும்.’

ஒட்டலை எப்படியெல்லாம் அழகுபடுத்த வேண்டும் என்று அவள் மனத்துக்குள் கற்பனைகள் ஓடத் தொடங்கி விட்டன.

410’ ம் எண் அறை மகா கண்ணராவியாக இருந்தது. ஆனால் அதைப் பிரமாதமாக மாற்றியமைக்க முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிந்தன. அந்த அறை அவ்வளவு பெரிதாக இருந்தது ஓர் ஆச்சரியம். உள்ளே செய்யப்பட்டிருந்த வசதிகள் கர்நாடகமாக இருந்தன. மேஜை, நாற்காலி, சோபா முதலியவற்றில் எந்தக் கவர்ச்சியும் தென்படக் காணோம்.

குமாஸ்தாவிடம் வந்து சாவியைத் திரும்பக் கொடுத்தாள்.

அதே சமயம் லிஃப்டு கதவு திறந்தது. அந்தக் கவர்ச்சிப் பெண்ணும், அந்த நடுத்தர வயது ஆளும் வெளியே வந்தார்கள். குமாஸ்தாவிடம் அந்தப் பெண் சாவியையும் கொடுத்துக் கொஞ்சம் பணமும் தந்தாள். "தாங்க்ஸ் மைக்" என்றாள்.

கைவீசி அவளுக்கு விடை கொடுத்துவிட்டு லாராவின் பக்கம் திரும்பினான் குமாஸ்தா மைக். "அப்ப நீங்கள் மறுபடி வருவீர்களா?"

"ஆமாம், மறுபடி, வருவேன்," என்று லாரா உறுதியாகச் சொன்னாள்.

அடுத்தபடியாக லாரா சென்றது நகர ஆவணங்கள் காப்பகத்துக்கு.

தான் பார்த்து வைத்துள்ள ஓட்டல் பற்றிய தஸ்தாவேஜுகளைக் காட்டும்படி கேட்டாள்.

பத்து டாலர் கட்டணம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட தஸ்தாவேஜுகள் பற்றிய ஃபைலைத் தந்தார்கள்.

டயமண்ட் சகோதரர்கள் அதை ஐந்து வருடத்துக்கு முன்பு அறுபது வட்சம் டாலருக்கு வாங்கியிருந்தார்கள் என்று தெரிந்தது.

டயமண்ட் பிரதர்ஸின் அலுவலகம் ஸ்டேட் ஸ்ட்ரீட் என்ற பகுதியின் ஒரு மூலையில், ஒரு பழைய கட்டிடத்தில் இருந்தது. ஆசிய நாட்டுப் பெண்ணொருத்தி - இறுக்கமான சிவப்பு ஸ்கர்ட் அணிந்திருந்தாள் - ரிஸப்ஷனிஸ்டாக இருந்தாள்.

"என்ன மிஸ் வேணும்?"

"மிஸ்டர் டயமண்டை நான் பார்க்கணும்." என்றாள் லாரா.

"எந்த டயமண்டை?"

"யாராவது ஒருவரை"

"ஜான் டயமண்டைப் பார்க்க ஏற்பாடு செய்கிறேன்." என்றவள் டெலிபோனை எடுத்து, "ஜான், உங்களைப் பார்க்க ஒரு பெண்மணி வந்திருக்கிறாள்." என்றாள். மறுமுனையில் தான் கூறுவதை ஒரு நிமிடம் கேட்டபின், "என்ன விஷயம் என்று கேட்கிறார்..." என்றாள்.

"அவருடைய ஓட்டல்களில் ஒன்றை நான் வாங்க விரும்புகிறேன்."

"உங்களுடைய ஒட்டலில் ஒன்றை அவன் வாங்க வந்திருக்கிறாளாம். சரி," என்று டெலிபோனில் மறுபடி கூறியவள். "உள்ளே போங்கள்," என்றாள் லாராவிடம்.

ஜான் டயமண்ட் நல்ல குண்டு மனிதராக இருந்தார். நடுத்தர வயது, உடம்பெல்லாம் புசுபுசுவென்று ரோமம். ஒரு காலத்தில் ஏராளமாய்க் கால்பந்து விளையாடியவர் போல அவர் தோற்றமும் முகமும் இருந்தன. அரைக் கைது சட்டை அணிந்து ஒரு பெரிய சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார்.

லாரா உள்ளே நுழைந்ததும், நிமிர்ந்து பார்த்தார். "என் ஓட்டல்களில் ஒன்றை வாங்க வேண்டுமென்று நீங்கள் சொன்னதாக என் செக்ரட்டரி சொன்னாள். உங்களைப் பார்த்தால் ஓட்டுப் போடுகிற வயது கூட வந்த மாதிரி தெரியவில்லையே?"

"ஓட்டுப் போடக் கூடிய வயது வந்தாகிவிட்டது எனக்கு. உங்கள் ஒட்டலை வாங்கக் கூடிய வயதும் வந்தாக விட்டது." என்றாள் லாரா...

"ஓ, அப்படியா? எந்த ஓட்டல்?"

"காரஸ்லில் ஓட்டல்," என்றாள் லாரா.

"என்னது!"

"அந்த ஒட்டலின் பெயர்ப் பலகையில் இரண்டு மூன்று எழுத்து உதிர்ந்து விட்டதால் அப்படித் தோன்றியது. ‘காங்கிரஸல்’ ஒட்டல் என்பது முழுப் பெயர் என்று நினைக்கிறேன்," என்றான் லாரா சிரித்தபடி...

15

ட்டல் சொந்தக்காரரான ஜான் டயமண்ட் லாராவைக் கூர்ந்து பார்த்தபடி. "ஓ. அந்த ஓட்டலைச் சொல்கிறீர்களா?" என்றார்.

"அதை விற்கப் போகிறீர்களா?" என்று லாரா கேட்டாள்.

அவர் தலையை அசைத்தார். "அப்படியொன்றும் உத்தேசம் இல்லை. எங்களுக்கு நல்ல வருமானம் கொடுக்கிர ஓட்டல் அது. அதை இழக்கத் தயாராயில்லை."

"நீங்கள் ஏற்கெனவே அதை இழந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்," என்றாள் லாரா.

"என்னது?"

"ஆமாம். அது ரொம்பக் கண்ணராவியான நிலைமையில் இருக்கிறது. இடிந்து தரைமட்டமாவதற்கு அதிக நாளாகாது."

"அப்படியா? அப்புறம் என்னத்துக்காக அதை வாங்க வேண்டும் என்கிறீர்கள்?"

"அதை வாங்கிச் சரிபண்ணலாமென்று பார்க்கிறேன். அதுனால் இப்போது அங்கே இருக்கிறவர்களை வெளியேற்றி விட்டு, எனக்குக் காலிக் கட்டிடமாகத் தர வேண்டும்".

"அது ஒன்றும் பிரசினை இல்லை. எல்லாரும் லாராந்தர வாடகைக்குத்தான் இருக்கிறார்கள். சுலபமாகக் காலி பண்ண வைத்து விடுவேன்."

"ஒட்டலில் எவ்வளவு ரூம்கள் இருக்கிறது?"

"நூற்றிருபத்தைந்து ரூம்கள் இருக்கிறது. கட்டிடத்தின் மொத்தப் பரப்பு ஒரு லட்சம் சதுர அடி."

"ரும்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகம்," என்று எண்ணிக் கொண்டாள் லாரா. பரவாயில்லை. பல ரூம்களை இணைத்து, பெரிய ஸ்யூட்களாக மாற்றி விடலாம். அறுபது எழுபது ஸ்யூட்கள் தேறும். கஷ்டமில்லை."

விலையை முடிவு செய்ய வேண்டிய கட்டம் வந்தது.

"நான் அதை வாங்குவதாக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவுக்குக் கொடுப்பீர்கள்?"

ஜான் டயமண்ட் சொன்னான், "நான் அதை விற்பதாக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அறுபது லட்சம் டாலர் ரொக்கமாகத் தரவேண்டும்."

ஊகூம் என்கிற மாதிரி லாரா தலையை அசைத்தாள். "நான் என்ன கொடுப்பேன் என்றால்..."

"மன்னிக்கணும். பேரம் பேசுவதிற்கில்லை."

கட்டிடத்தைப் புதுப்பிப்பதென்றால் எவ்வளவு செலவாகும் என்று மனசுக்குள் கணக்குப் போட்டான் லாரா. குத்துமதிப்பாக, ஒரு சதுர அடிக்கு எண்பது லட்சம் டாலர், அதைத் தவிர ஃபர்னிச்சர், ஃபிட்டிங்குகள், சாதனங்கள்…

அவள் மனம் கிறுகிறுவென்று கணக்கிட்டது. அதெற்கெல்லாம் பாங்க்கில் கடன் கிடைப்பது நிச்சயம். ஆனால் ஆள் அறுபது லட்சம் கேட்கிறானே... இவன் கேட்கும் தொகை அதிகம்தான். ஆனால் இந்த ஓட்டலை விடக் கூடாது.

தான் இந்த அளவுக்கு எதையுமே வாழ்க்கையில் விரும்பியதில்லை என்பது போல் தோன்றியது அவளுக்கு. "நான் ஒர் ஏற்பாடு சொல்கிறேன், கேட்கிறீர்களா?" என்றாள்.

டயமண்ட் அக்கறையுடன், "சொல்லுங்கள்," என்றார்.

"நீங்கள் கேட்கிற விலையை நான் கொடுக்கத் தயார்."

அவர் முகம் மலர்ந்தது. "ஆ! அதுதான் புத்திசாலித்தனம்.

"முதல் தவணையாக உங்களுக்கு முப்பது லட்சம் தருகிறேன்."

அவர் உதட்டைப் பிதுக்கினார். "சரிப்படாது. அறுபது லட்சம் ரொக்கமாய் என் மேஜை மீது வந்தாக வேண்டும்."

"அப்படியே கிடைக்கும் என்கிறேன்."

"எப்படி? இன்னொரு முப்பது லட்சம் எங்கே வாங்குவீர்கள்?"

"உங்களிடம்தான்."

"என்னது."

"ஒட்டலின் மீது இரண்டாவது அடைமானமாக நீங்கள் முப்பது லட்சம் கொடுங்கள்."

"அதாவது, என் கட்டிடத்தை வாங்குவதற்கு என்னிடமே கடன் கேட்கிறீர்கள்?"

கிளேஸ் பேயில் மெக்காலிஸ்டர் கேட்ட அதே கேள்வி!

"யோசனை பண்ணிப் பாருங்கள்," என்றாள் லாரா.

"உங்களுக்கு நீங்களே கடன் கொடுத்துக் கொள்கிற மாதிரிதான் இது. நான் கடனை அடைக்கிறவரையில் கட்டிடம் உங்களுடையதாகத்தான் இருக்கப்போகிறது. எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு நஷ்டமில்லை."

ஜான் டயமண்ட் சிறிது யோசித்தார். பிறகு சிரித்தார். "ஒகே நீங்கள் பலே பெண்பிள்ளை தான்!"

ஹோவார்டின் பாங்க்குக்குச் சென்றாள் லாரா. கதவின் மீது அவன் பெயர் பொறித்திருந்தது. அவள் உள்ளே போனாள். முதலில் பார்த்தபோது இருந்ததைவிட இப்போது இன்னும் கசங்கியவனாகக் காட்சி தந்தான் ஹோவார்டு.

"அட! அதற்குள் வந்துவிட்டீர்களே!" என்றான்.

"ஒட்டலைப் பார்த்து வைத்ததும் உங்களிடம் வந்து சொல்லும்படி சொன்னீர்களே! பார்த்து வைத்திருக்கிறேன்."

அவன் நாற்காலியில் சாய்ந்து கொண்டான். "எந்த இடம் விவரமாகச் சொல்லுங்கள்."

"காங்கிரஸல் ஒட்டல் என்று பெயர்," என்று கூறி, அது இருக்கும் இடத்தை விவரித்தாள் லாரா. "ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கிறது, அதை வாங்கி, சிகாகோவிலேயே சிறந்த ஒட்டலாக மாற்றியமைக்க விரும்புகிறேன்."

"அதை வாங்குவதற்கு எப்படி, ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?"

லாரா சென்னாள்.

ஹோவார்டு சிறிது யோசனை செய்தபின், "சரி, பிரஸிடேண்டைப் பார்க்கலாம், வாருங்கள்." என்றான்.

பிரஸிடெண்ட் வான்ஸ் அவள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டு, குறிப்பு எடுத்துக் கொண்டார். பிறகு, "நீங்கள் கேட்பது முடியும் என்றுதான் தோன்றுகிறது." என்றார். "ஆனால்... இதற்கு முன்பு உங்களுக்கு ஓட்டல் நடத்திய அனுபவம் உண்டா மிஸ் லாரா?"

கிளேஸ் பேயில் எத்தனை வருடங்கள் வாட்ஜ்கள் நடத்தி வந்திருக்கிறாள்! லாட்ஜ்க்காரர்களின் படுக்கைகளைச் சரிசெய்வதும்... தரைகளைப் பெருக்கி மெழுகுவதும்... துணிமணிகனைச் சரி பண்ணிப் போடுவதும்... சாப்பிட்ட தட்டுக்களைச் சுத்தம் செய்வதும்... பல்வேறு வகையான மனிதர்களை முணுமுணுக்காதபடி பார்த்துக் கொள்வதும்... சண்டை சச்சரவு ஏற்படாமல் அமைதி காத்தும்த

அடுக்கடுக்காய் நினைவு வந்தன லாராவுக்கு.

"கிளேஸ் பேயில் சுரங்கத் தொழிலாளிகளும் மரம் அறுக்கும் தொழிலாளர்களும் நிறைந்த லாட்ஜ்களை நடத்தி யிருக்கிறேன், சார், ஓட்டல் நடத்துவதில் கஷ்டம் இருக்காது."

"எதற்கும் இடத்தைப் போய் ஒரு முறை பார்த்து விட்டு வரலாமென்று நினைக்கிறேன்." என்றான் ஹோவார்டு.

லாராவின் உற்சாகம் அணைபோட முடியாததாக இருந்தது.

அவள் வாங்கவிருக்கும் ஒட்டலின் அழுக்கான அறைகளைப் பார்வையிடும்போது, லாராவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் ஹோவார்டு. எல்லாவற்றையும் அவள் கண்களின் வழியாகத்தான் அவன் கண்டான்.

"இந்த இடம் பார்த்தீர்களா?" என்றாள் லாரா. "பிரமாதமான ஸ்யூட்டாக இதை மாற்ற முடியும். இங்கே கணப்பு வைக்கலாம். அதோ அந்த மூலையில் பியானோவை வைக்கலாம்..." பேசிய படியே குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். "பெரிய பெரிய பணக்காரர்கள் சிகாகோவுக்கு வருகிறார்கள். பெரிய பெரிய ஓட்டல்களில் தங்குகிறார்கள். ஆனால் ஓட்டலுக்கு ஓட்டல் வித்தியாசம் இருக்கிறதா? கிடையாது. ஒன்றைப் போலவே ஒன்றும் தனித் தன்மை இல்லாமல் இருக்கிறது. உயிரே கிடையாது.

"அந்த ரூம்களில், பணம் கொஞ்சம் அதிகமாகச் செலவழித்தாலும் பரவாயில்லை - நாம் கட்டும் ஓட்டல் வித்தியாசமாக இருக்க வேண்டும். கொஞ்ச நாள் போனால், சிகாகோவுக்கு வருகிறவர்கள் இந்த ஒட்டலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள், ‘வீட்டுக்கு வெளியே ஒரு வீடு’ என்று விளம்பரப்படுத்துவார்களே, அது போல நிஜமாகவே இந்து ஓட்டல் அமையும்..."

"பிரமாதம்," என்றான் ஹோவார்டு.

அவன் முகத்தை ஆவலுடன் பார்த்தாள் லாரா. "பாங்க்கில் எனக்குக் கடன் கொடுப்பார்களா?"

"பார்க்கலாம்," என்றான் அவன்.

அரை மணி நேரம் கழித்து

பாங்க் பிரசிடெண்ட்டின் அறையில் இருந்தான் ஹோவார்டு.

"என்ன நினைக்கிறீர்கள்?" என்று வான்ஸ் விசாரித்தார்.

"அந்தப் பெண்ணின் ஐடியாக்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது. அவள் சொல்லுகிற மாதிரி ஹொட்டல் அமைந்தால் அருமையாக இருக்கும்," என்றான் ஹோவார்டு.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒரே ஒரு பிரசினை - அந்தப் பெண் சின்ன வயசாக இருக்கிறாள், அனுபவம் கிடையாது. இது ஒரு சூதாட்டம் போலத்தான். பரவாயில்லை," என்றார் வான்ஸ்.

அடுத்த அரை மணி நேரத்துக்கு அவர்கள் ஓட்டலின்

செலவுகள் என்னென்ன ஆகும், வருமானங்கள் எப்படி எப்படிக் கிடைக்கும் என்றெல்லாம் ஆலோசனை செய்தார்கள்.

ஹோவார்டு இறுதியில், "திட்டத்தை ஒ.கே செய்து அடுத்த நடவடிக்கைகளைக் கவனிப்போம்." என்றான், "நஷ்டம் எதுவும் வராது. அப்படி ஒரு வேலை நிலைமை ரொம்ப மோசமானால் நாமே அந்த ஓட்டலில் குடியேறி விடலாம்," என்றான் சிரித்தபடி.

லாரா தங்கியிருந்த ஓட்டலுக்குப் போன் செய்தி வந்தது.

"உங்கள் திட்டத்தை பாங்க் ஏற்றுக் கொண்டு விட்டது, மிஸ் லாரா," என்றான் ஹோவார்டு.

சந்தோஷம் தாங்காமல் கிறீச் சென்று கூவிவிட்டாள் லாரா. "நிஜமாகவா சொல்கிறீர்கள்? பிரமாதம்! தாங்க் யூ! தாங்க் யூ" என்றாள்.

"உங்களுடன் சில விஷயங்கள் பேசி முடிவு செய்ய வேண்டும். இன்று இரவு என்னுடன் விருந்துண்ண வர முடியுமா?"

"ஓ," என்றாள் லாரா.

"நல்லது. நான் ஏழரை மணிக்கு வந்து உங்களை அழைத்துப் போகிறேன்."

இம்பீரியல் ஹவுஸ் என்ற ஓட்டலில் அவர்கள் சாப்பிடச் சென்றார்கள். ஆனால் லாராவுக்கு இருந்த பட படப்பில் ஒரு வாய்கூட உண்ணவில்லை.

"எனக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது, தெரியுமா? வார்த்தையில் வர்ணிக்க முடியவில்லை," என்றாள். "இது தான் சிகாகோவிலேயே மிக அழகான ஒட்டலாக இருக்கப் போகிறது, பாருங்கள்."

"இருங்கள், இருங்கள்," என்று கையமர்த்தினான் ஹோவார்டு, "இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கிறது. உங்களிடம் ஒன்று வெளிப்படையாகச் சொல்லட்டுமா, மிஸ் லாரா கேமரான்?"

"வெறும் லாரா என்றே நீங்கள் என்னைக் கூப்பிடலாம்."

"லாரா, நீ ஒரு புதுக் குதிரை. முன்னே பின்னே எந்தப் பந்தயத்திலும் ஜெயித்தது கிடையாது."

"கினேஸ் பேயில்..."

"இது கிளேஸ் பே அல்ல, லாரா."

லாரா திகைத்தாள். "பின்னே பாங்க் என்னை எப்படி நம்பி…"

"சொல்கிறேன். எங்கள் பாங்க் ஒன்றும் தர்ம ஸ்தாபனம் அல்ல. அதிகம் போனால், பாங்க்குக்கு ஒரளவு நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்துதான் கடன் தருகிறோம். எதனாலோ என் உள்மனசில் உன்னைப் பற்றி ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. உன்னால் இதைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. உன் வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்று தோன்றுகிறது. நீ இந்த ஒரு ஒட்டலோடு நிற்க போவதில்லை, இல்லையா?"

"நிச்சயமாய் நிற்கப் போவதில்லை."

"அப்படித்தான் நானும் நினைத்தேன். பொதுவாக நாங்கள் பாங்க் ஒருவருக்குக் கடன் கொடுத்தால் அத்துடன் நிறுத்திக் கொண்டு விடுவோம். அவர்களுடன் தனிப்பட்ட முறையில் அக்கறையோ சம்பந்தமோ வைத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் உன் விஷயத்தில் அப்படியல்ல. உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் நான் செய்கிறேன்."

சொன்னது போலவே லாராவின் விஷயத்தில் ஹோவார்டுக்குத் தனியான ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. அவளைப் பார்த்த முதல் தினத்திலிருந்தே, அவள் அவனைக் கவர்ந்து விட்டாள். அவளுடைய உற்சாகமும் உறுதியும் அவனைச் சிறைப்படுத்தி விட்டன. அவள் ஓர் அழகிய பெண். அவள் மனசில் இடம் பிடிக்க வேண்டும் என்று வெகு தீவிரமாக அவன் ஆசைப்பட்டான்.

‘பெரிய ஆளாக, புகழ் பெற்றவனாக வர வேண்டுமென்று நான் ஒரு காலத்தில் எவ்வளவோ ஆசைப்பட்டேன். அதையெல்லாம் லாராவிடம் ஒருநாள் சொல்ல வேண்டும்.’

அவன் கண்ட கனவுகள்...

16

லாராவுக்கு உதவி செய்ய முன்வந்த ஹோவார்டுக்கு இளமைக் கனவுகளே வேறே.

பேஸ் பால் வீரனாக வர வேண்டுமென்பதுதான் அவன் சின்ன வயது ஆசையாக இருந்தது. எப்போது பார்த்தாலும் டி.வி.யின் முன்னால் உட்கார்ந்து இருப்பான். எந்தப் பேஸ் பால் விளையாட்டு வீரனாவது விளையாடினால், தான் தன் அந்த வீரன் என்று கற்பனை செய்து மகிழ்வான். கைதட்டல்கள் அவ்வளவும் தனக்குத்தான் என்று எண்ணிக் கொள்வான். தோழர்களெல்லாம் தன்னைத் தூக்கி வைத்துக் கொண்டு பாராட்டுவது போல நினைப்பான்.

அப்போது அவனுக்கு வயது பதினைந்து, பேஸ் பால் தான் தன் வாழ்க்கையின் லட்சியமென்று அவன் தீவிரமாக நம்பினான். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் பெரிய பெரிய டீம்களில் சேர்ந்து விளையாடப் போகிறோமென்று நம்பினான். ஆறு வயது முதலே பேஸ் பால் விளையாடத் தொடங்கி, பதினைந்தாவது வயதில் நல்ல ஆட்டக்காரனென்று - பெயரைச் சம்பாதித்துக் கொண்டான். அவனுக்குப் பயிற்சி கொடுத்தவர், "இந்தமாதிரி ஒரு பையனைப் பார்த்ததே இல்லை. ரொம்பப் பிரமாதமாக வரப் போகிறான்" என்றார்.

அவனுடைய அப்பாவும் அம்மாவும் மதப் பற்று மிக்க கத்தோலிக்கர்கள், மகனிடம் அம்மாவுக்கு மிகுந்த பிரியாம்.

ஹோவார்டு விளையாடும் பேஸ்பால் ஆட்டங்களுக்குத் தவறாமல் சென்று கைதட்டிப் பாராட்டுவாள்.

அவனுடைய புகழ் சுற்று வட்டாரம் எங்கும் பரவியது. அவன் விளையாடுவதைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தார்கள்.

ஹோவார்டின் அப்பாவுக்கு மிகவும் பெருமை, ‘நான் சின்ன வயதில் பேஸ்பால் விளையாடுவது உண்டு, என் பிள்ளை என்னைக் கொண்டிருக்கிறான்’ என்று எல்லோரிடமும் சொல்லுவார்.

அவனுடைய விளையாட்டுத் திறமைக்காகவே ஒரு பாங்க்கில் கிளார்க் வேனலை கிடைத்தது. ஹோவார்டுக்கு ஓர் அழகான காதலி இருந்தாள். பெட்டி என்று பெயர். இன்னும் கொஞ்ச நாள் கழித்துத் திருமணம் செய்து கொள்ளலாமென்று அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பெட்டியைக் காண ஓடுவான் ஹோவார்டு. பேஸ்பால் ஆட்டங்களில் யார் யார் எப்படி எப்படி ஆடினார்கள், யார் யார் என்ன என்ன சொன்னார்கள் என்பதைப் பெட்டியிடம் வாய் ஓயாமல் சொல்லுவான்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அவனுக்கு இடம் கிடைத்தது. அதுவும் அவனுடைய பேஸ்பால் விளையாட்டுத் திறமைக்காகத்தான். மேற்படிப்புக்குச் செல்ல மகிழ்ச்சியுடன் காத்திருந்த நேரம்

திடீரென்று அப்பா ஓர் இளம் பெண்ணுடன் குடும்பத்தை விட்டு, ஊரை விட்டு ஓடிவிட்டார். ஹோவார்டு அதிர்ச்சியில் சிலையானான். "எப்படி. எப்படி அவரால் இந்த மாதிரி செய்ய முடிந்தது?"

அவன் அம்மாவினால் பேசவே முடியவில்லை, "என்னிடம் அவருக்குக் கொள்ளைப் பிரியாம், பார்த்துக் கொண்டே இரு. அவர், அவர் திரும்பி வந்து விடுவார்..." என்று திக்கித் திக்கிச் சொன்னாள்.

மறு நாள் ஹோவார்டின் அம்மாவுக்கு அவள் கணவரின் சார்பாக ஒரு வக்கீலிடமிருந்து கடிதம் வந்தது. தன்னுடைய கட்சிக்காரர் விவாகரத்துப் பெற விரும்புவதாயும் மனைவிக்கு ஜீவனாம்சம் தர அவரிடம் பணம் ஏதுமில்லையென்றும். ஆகவே அவருக்குச் சொந்தமாக உள்ள சிறிய வீட்டை அவள் எடுத்துக் கொள்ளலாமென்றும் வக்கீல் எழுதி இருந்தார்.

ஹோவார்டு அம்மாவை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னான். "கவலைப்படாதே அம்மா, நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கேயே இருந்து உன்னை கவனித்துக் கொள்ளப் போகிறேன்."

"வேண்டாம், வேண்டாம். எனக்காக நீ பெரிய படிப்பை விடக் கூடாது. நீ பிறந்த தினத்தன்றே நீ பிரமாதமான படிப்புப் படிக்க வேண்டுமென்று நானும் உன் அப்பாவும் தீர்மானம் செய்து கொண்டோம்." என்றாள் அவன் அம்மா, பிறகு ஒரு நிமிடம் மெளனமாக இருந்த பின், அமைதியாக, "சரி, காலையில் பேசிக் கொள்ளலாம். எனக்கு ரொம்பக் களைப்பாக இருக்கிறது." என்று சொல்லிப் படுக்கப் போய்விட்டாள்.

ஹோவார்டு ராத்திரி பூரா கண்ணீர் வடித்தான். மேற்படிப்புக்குச் செல்லாமல் எப்போதும் போல் பேஸ் பால் டீம்களில் சேரலாமா என்று குழம்பினான். படிப்பானாலும் சரி, விளையாட்டானாலும் சரி, அம்மாவைத் தனியாகத்தான் விட்டுச் செல்ல வேண்டும். அது அவன் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.

மறுநாள் பொழுது விடிந்தது. காலை சிற்றுண்டி, சாப்பிட அம்மா வரக் காணோம். அவளுடைய படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தான்.

அவள் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தாள். நகர முடியவில்லை. அவள் வாய் ஒரு பக்கமாகக் கோணி இருந்தது. பக்கவாத நோய் அவளைத் தாக்கி இருந்தது.

மருத்துவமனையில் சேர்ப்பதற்கோ, டாக்டர்களை வரவழைப்பதற்கோ அவனிடம் பணமில்லை. பாங்க் வேலையை விட்டுவிட இருந்தவன் மறுபடியும் அதில் போய்ச் சேர்ந்து கொண்டான். நாள் பூரா உழைத்தான். சாயந்தரம் நாலு மணிக்கு வேலை முடியும். உடனே அம்மாவைக் கவனித்துக் கொள்வதற்காக ஓடோடி வீடு திரும்புவான்.

நோய் அப்படி ஒன்றும் தீவிரமாக இல்லையென்றும் கொஞ்ச நாளில் குணமாகிவிடும் என்றும் டாக்டர் சொன்னார்.

பெரிய பெரிய பேஸ்பால் டீம்களிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அம்மாவை விட்டு விட்டு அவனால் போக முடியவில்லை. குடும்பச் செலவு கூடிக் கொண்டே வந்தது. காதலி பெட்டி அவனை டெலிபோனில் கூப்பிடுவது குறைந்து கொண்டே போயிற்று.

அம்மாவின் உடம்பு தேறுவதாகத் தோன்றவில்லை.

அவளுக்கு எப்போது சரியாகும் என்று டாக்டரைக் கேட்டான், "இந்த மாதிரி கேஸ்களில் நிச்சயமாக எதுவும் சொல்ல முடியாது தம்பி. இப்படியே மாதக் கணக்கில் இருக்கலாம். வருடக்கணக்காகக் கூடக் கிடக்கலாம். என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது, ஸாரி." என்றார் டாக்டர்.

அந்த வருடம் முடிந்து அடுத்த வருடம் ஆரம்பமாயிற்று. ஹோவார்டு அம்மாவைக் கவனித்தபடி பாங்கிலும் வேலை செய்து கொண்டிருந்தான். ஒருநாள் பெட்டியிடமிருந்து கடிதம் வந்தது. வேறு யாரிடமோ காதல் கொண்டு விட்டதாக.

பேஸ் பால் டீம்கள் அவனைக் கூப்பிடுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கடைசியில் நின்றுவிட்டது. அம்மாவைக் கவனிப்பது ஒன்றே அவனுடைய வாழ்க்கை என்று ஆகிவிட்டது. கடை கண்ணிகளுக்குச் சென்றான். சமையல் செய்தான். பாங்க் வேலைகளைப் பார்த்துக் கொண்டான். பேஸ் பால் பற்றி அவன் நினைப்பதே இல்லை. அன்றாட வாழ்க்கையை ஒட்டுவதே பெரும் கஷ்டமாக இருந்தது.

நான்கு வருடங்கள் உயிருக்காகப் போராடியபின் அவனுடைய அம்மா இறந்து போனாள்.

ஹோவார்டுக்கு பேஸ்பால் பற்றிய நினைப்பு துளியும் இல்லை. புகழ் பெற்ற விளையாட்டு வீரனாகத் திகழக் கூடிய சந்தர்ப்பம் போயே போய்விட்டது. இப்போது அவன் ஒரு பாங்க் அதிகாரி. பாங்க்கின் வைஸ் பிரசிடெண்ட்.

ஹோவார்டும் லாராவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இரவு நேரம்.

"வேலைகளை ஆரம்பிக்கலாம், இல்லையா?" என்று லாரா கோட்டாள்.

"ஆமாம். முதல் முதலில் கட்டிடம் கட்டுவதற்கு ஒரு சிறந்த குழுவை அமர்த்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, ரியல் எஸ்டேட் விஷயங்களில் தேர்ச்சி பெற்று ஒரு வழக்கறிஞரை முதலில் பிடிப்போம். அவர் டைமண்டு சகோதரர்களுடன் எப்படிக் காண்டிராக்ட் எழுதிக் கொள்வது என்பதைக் கவனிக்கட்டும். அடுத்து ஒரு தலைசிறந்த ஆர்க்கிடெக்னடப் பிடிப்போம். எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அதன் பிறகு ஒரு தலை சிறந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை அமர்த்திக் கொள்வோம். நானே இதைப் பற்றிச் சின்னதாக ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறேன். முதலில் ஒரு ரூமுக்கு மூன்று இலட்சம் டாலர் செலவு ஆகும். ஹோட்டல் மொத்தத்துக்குமாக 70 லட்சம் டாலர் பிடிக்கலாம். கரெக்டாசுத் திட்டமிட்டால் கச்சிதமாக வேலை நடக்கும்."

ஆர்க்கிடெக்டின் பெயர் டெட்டில்.

5லாரா தன் திட்டங்களைச் சொன்னதும், அவர் முகம் மலர்ந்தது.

"அப்பாடா! உங்களைப்போல் புதுமையான திட்டத்துடன் யாராவது வரமாட்டார்களா என்று நான் எத்தனை காலமாக ஏங்கிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?" என்றார்.

"ஒரிஜினலாக இந்த ஹோட்டலில் 135 அறைகள் இருந்தன. அவைகளை நீங்கள் சொன்னதுபோல் 75 ஆகக் குறைத்து விட்டேன்."

வரைபடத்தைப் பார்த்தாள் லாரா. 50 ஸ்யூட்டும் 25 டீலக்ஸ் அறைகளும் இருந்தன.

"அருமை! அருமை!" என்றாள்.

ஹோவார்டிடம் பிளானைக் காட்டியதும் அவனுக்கும் அவளைப் போலவே உற்சாகம் ஏற்பட்டது.

"இனி வேலையில் இறங்க வேண்டியதுதான். ஒரு கான்ட்ராக்ட்காரரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். அவர் பெயர் ஸ்டீவ்," என்றான்.

சிகாகோவில் மிகப் பெரிய கான்ட்ராக்டர் அந்த ஸ்டீவ். அவரைப் பார்த்த உடனே லாராவுக்குப் பிடித்து விட்டது. வழவழா கொழகொழா என்று இல்லாமல் வெட்டொன்று துண்டிரண்டு என்று பேசுகிறவராக இருந்தார்.

"நீங்கள் மிகவும் சிறந்த கான்ட்ராக்டர் என்று ஹோவார்டு சொன்னார்." என்றாள் லாரா.

"அவர் சொன்னது சரிதான், ‘எதிர்காலத்துக்காகக் கட்டிடம் சமைப்போம்’ என்பதுதான் எங்கள் கோஷம்," என்றார்.

"ரொம்ப நல்ல கோஷமாக இருக்கிறதே?"

ஸ்டீவ் சிரித்தார். "இதுவரை அப்படியொரு கோஷம் இல்லை. உங்களைப் பார்த்ததும்தான் அந்தக் கோஷத்தைச் கண்டு பிடித்தேன்."

எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின் அதைக் கொண்டாடுவதற்காக லாராவை ஹோவார்டு அன்று வெளியே அழைத்துச் சென்றான்.

"வேலை நேரத்தில் இப்படி என்னுடன் வந்து விட்டீர்களே, பாங்கில் ஒன்றும் சொல்ல மாட்டார்களா?" என்றான் லாரா...

"சொல்ல மாட்டார்கள். இதுவும் என் வேலையில் சேர்ந்ததுதான்," என்றான் ஹோவார்டு.

அவன் சொன்னது பொய்.

கடந்த பல வருஷங்களில் அவன் அனுபவித்தறியாத மகிழ்ச்சியைத் தற்சமயம் அனுபவித்தான் என்பதே உண்மை.

லாராவுடன் பேசுவதும், அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதும், அவளுடன் கூட இருப்பதும் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

கல்யாணத்தைப் பற்றிப் பேச்சு எடுத்தால் அவள் என்ன சொல்வாள் என்று அவன் தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தபோது லாரா சொன்னாள், "இன்று காலை பேப்பரில் படித்தேன், ஸியர்ஸ் டவர் பெரும்பாலும் முடிந்து விட்டதாமே? 110 மாடிகளுடன் உலகத்திலேயே உயரமான கட்டிடம் என்று சொல்கிறார்கள்."

"ஆமாம்," என்றான் ஹோவார்டு.

"என்றாவது ஒருநாள் அதைக் காட்டிலும் உயரமான கட்டிடத்தை நான் கட்டுவேன்." என்றாள் லாரா அழுத்தமாக.

அவள் சிந்தனை கட்டிடங்கள் கட்டுவதில் இருக்கிறதே தவிர, கல்யாணத்தைப் பற்றித் துளியும் இல்லை என்று ஹோவார்டுக்குப் புரிந்தது.

காண்டிராக்டர் ஸ்டீவுடன் ஒருநாள் அவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள்.

"அடுத்தபடி என்னென்ன வேலைகள் நடக்கப் போகிறது? சொல்லுங்கள்," என்று ஸ்டீவ்வைக் கேட்டாள் லாரா.

"நல்லது. முதலில் அந்த ஓட்டலின் உட்புறத்தைத் துப்புரவு செய்ய வேண்டும்," என்றார் ஸ்டீவ். "பளிங்குக் கல் போட்ட பகுதிகள் அப்படியே இருக்கட்டும். மற்றபடி எல்லா ஜன்னல்களையும் எல்லா பாத்ரூம்களையும் அகற்றி விடுவோம். மின்சார சப்ளை தரும் மெயினை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு மற்ற இடங்களில் புது ஒயரிங் செய்வோம்.

"குழாய்களையும் நவீனமாக மாற்ற வேண்டும். முதலில் கட்டிடத்தை இடிக்கிற வேலை முடியட்டும். பிறகு உங்கள் ஒட்டலைக் கட்ட ஆரம்பித்து விடுவோம்."

"எத்தனை பேர் வேலை செய்வார்கள்?"

ஸ்டீவ் சிரித்தார். "பெரிய கூட்டம் லாரா! ஜன்னல்களுக்கு ஒரு டீம், பாத்ரூம்களுக்கு ஒரு டீம், காரிடார்களுக்கு ஒரு டீம். இவர்கள் ஒவ்வொரு மாடியாக வேலைனயக் கவனிப்பார்கள். முதலில் மேல்மாடியைக் கவனித்து விட்டுப் பிறகு ஒவ்வொன்றாய்க் கீழே வருவார்கள். ஓட்டலில் இரண்டு ரெஸ்டாரெண்ட்டுகள் இருக்கும். ரூம் சர்வீசும் இருக்கும்."

"இதெல்லாம் முடிவதற்கு எத்தனை நாளாகும்?"

"வந்து... விரிப்பு. சோபா நாற்காலி எல்லாம் போட்டு முடிக்க- ஒன்றரை வருடம் பிடிக்கும்."

"ஒரே வருடத்தில் முடியுங்கள். உங்களுக்கு எக்ஸ்டரா யானம் தருகிறேன்," என்றாள் லாரா.

"ரொம்ப நன்றி. காங்கிரஸல் ஒட்டல்..."

"இனி அதன் பெயர் காங்கிரஸில் ஓட்டல் அல்ல. கேமரான் பாலஸ் என்று மாற்றப் போகிறேன். அந்த வார்த்தையைச் சொல்வதே அவள் உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. உடம்பாலே ஏதோ இன்பம் துய்த்தமாதிரி ஒரு பரவசம் உண்டாயிற்று."

கேமரான் - லாரா கேமரான்.

அவள் பெயர் கட்டிடத்தின் உச்சியில் ஜொலிக்கும். உலகம் மொத்தமும் அதைப் பார்க்கும்.

17

ழை பெய்து கொண்டிருந்த ஒரு செப்டம்பர் மாலையில் ஓட்டலைப் புதுப்பிக்கும் வேலை ஆரம்பமாயிற்று.

வரிசை வரிசையான வேலையாட்கள் ஓட்டலுக்குள் நுழைவதையும், இடித்துத் தள்ளத் தொடங்குவதையும் பார்த்தவாறு லாரா நின்றிருந்தாள்.

அந்தக் காலை வேளையிலேயே ஹோவார்டும் வந்து விட்டான். அவனைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. "என்ன இவ்வளவு காலையில் வந்து விட்டீர்கள்?" என்றாள்.

"ராத்திரி பூரா எனக்குத் தூக்கம் வரவில்லை." என்று சொல்லிச் சிரித்தான் அவன். "ஏதோ ஒரு பிரம்மாண்டமான விஷயத்துக்கு இது ஆரம்பம் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது, லாரா."

பன்னிரண்டு மாதங்களில் கேமரான் பாலஸ் திறக்கப்பட்டு விட்டது. பத்திரிகைகள் ஆகா ஓகோ என்று அதைப் பற்றி எழுதின.

‘சிகாகோ ட்ரிப்யூன்’ பத்திரிகையரின் கட்டிடக் கலை விமரிசகர், "வீட்டுக்கு வெளியே வீடு என்று ஒட்டல்களைச் சும்மாவானும் வர்ணிப்பார்கள். ஆனால் நிஜமாகவே அப்படிப்பட்ட ஓட்டலாக இது இருக்கிறது. லாரா கேமரான் மீது உலகம் ஒரு கண் வைத்திருக்கப் போகிறது," என்று எழுதினார்.

முதல் மாதத்திலேயே ஒட்டல் நிறைந்துவிட்டது. வெயிட்டிங் லிஸ்ட் வேறு நீளமாக இருந்தது.

ஹோவார்டுக்கு ஒரே உற்சாகம். "இந்த வேகத்தில் போனால் பன்னிரண்டு வருடங்களில் கடன்கள் அடைந்து விடும். அதன்பின்..."

"அது போதாது. நான் ஒட்டல் கட்டணங்கனை உயர்த்தப் போகிறேன்." என்றாள் லாரா.

ஹோவார்டின் முகத்தில் கவலைக் குறிகள் எழுந்தன.

"கவலைப்படாதீர்கள். எத்தனை கட்டணமானாலும் ஜனங்கள் கொடுப்பார்கள். இப்படி யொரு வசதியான ஒட்டல் அவர்களுக்கு வேறு எங்கே கிடைக்கும்?" என்றாள்.

இரண்டு வாரம் சென்றது.

பாங்க் பிரசிடெண்ட் வான்ஸையும் வைஸ் பிரஸிடெண்ட் ஹோவார்டையும் அவர்களுடைய அலுவலகத்தில் சந்தித்தாள் லாரா.

"இன்னொரு ஒட்டல் கட்டுவதற்கு ஒரு பிரமாதமான இடம் பார்த்து வைத்திருக்கிறேன். கேமரான் பால்ஸைப் போலவே இதுவும் இருக்கும், ஆனால் இன்னும் பெரிதாக, இன்னும் சிறப்பாக," என்றாள்.

ஹோவார்டு புன்னகை செய்து "இடத்தை வந்து பார்க்கிறேன்," என்றான்.

லாரா சொன்னபடி பிரமாதமாய்த்தான் இருந்தது, ஆனால் அதில் ஒரு சிக்கல்.

அதை விற்க நியமிக்கப்பட்டருந்த புரோக்கர், "நீங்கள் ரொம்ப லேட். மர்ச்சிஸன் என்ற ரியல் எஸ்டேட்காரர் இடத்தை வந்து பார்த்துவிட்டு, வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்." என்றார்.

"எவ்வளவு தருவதாகச் சொன்னார்"

"முப்பது லட்சம்."

"நான் நாற்பது லட்சம் தருகிறேன். நீங்கள் டாகுமெண்ட்களை ரெடி பண்ணுங்கள்."

புரோக்கர் ஒரு வினாடி அதிர்ச்சியுடன் முழித்துவிட்டு, பிறகு "சரி," என்றார்.

அடுத்த நாள் மாலை லாராவுக்கு ஒரு போன் வந்தது.

"லாராவா?"

"ஆமாம்," என்றாள்.

"நான் மர்ச்சிஸன் பேசுகிறேன். இந்தத் தடவை போனால் போகட்டும் என்று விட்டுவிடுகிறேன். இதோ பாரடி, நாயே! யாரோடு மோதுகிறோம் என்று உனக்குத் தெரியவில்லை. இன்னொரு தடவை என் வழிக்குக் குறுக்கே வராதே. வந்தால் காயம் படும். உஷார்!"

டெலிபோனை வைத்துவிட்டான்.

அது 1974ம் வருடம்.

உலகமெங்கும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அமெரிக்காவில் ஜனாதிபதி நிக்ஸன் மீது பயங்கரமான குற்றச்சாட்டுகள் எழுந்து, அவர் ராஜினாமா செய்து, ஜெரால்டு ஃபோர்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

எதைப் பற்றியும் கவலைப் படாமல் லாரா, சிகாகோவில் தனது இரண்டாவது ஒட்டலைக் கட்ட ஆரம்பித்தாள். பதினெட்டு மாதங்களில் அது முடிந்தது. முந்திய ஓட்டலைக் காட்டிலும் மாபெரும் வெற்றியாக அது விளங்கியது.

புகழ்பெற்ற பத்திரிகையான ‘ஃபோர்ப்ஸ்’ எழுதியது: "லாரா ஒரு மனிதப் பிறவியல்ல. தத்துவம். அவள் கொண்டுள்ள புதுமையான எண்ணங்கள் ஓட்டல்களைப் பற்றிய தன்மைகளை அடியோடு மாற்றுகின்றன. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ரியல் எஸ்டேட் துறையை லாரா படையெடுத்து வென்று விட்டாள்.

"அத்தனை பேரையும் ஒரு பெண்ணினால் முறியடிக்க முடியும் என்று நிருபித்து விட்டாள்."

சார்லஸ் போன் செய்து லாராவைப் பாராட்டினார். "கங்கிராஜுலேஷன்ஸ். உன்னைப் பற்றி எனக்குப் பெருமையாய் இருக்கு லாரா. எனக்கு உன்னைப் போல் ஒரு சிஷ்யை இருந்ததே கிடையாது."

"எனக்கும் உங்களைப் போல ஒரு குரு இருந்தது கிடையாது. நீங்கள் இல்லையென்றால் எனக்கு எந்த வழியும் தெரிந்திருக்காது." என்றாள் லாரா.

"அப்படியில்லை, நீயே ஒரு வழி கண்டுபிடித்திருப்பாய்" என்றார் சார்லஸ்.

1975’ ல் ஜாஸ் திரைப்படம் நாட்டைக் கலக்கி யெடுத்தது. ஜனங்கள் கடலில் செல்லவே அஞ்சி நடுங்கினார்கள்.

உலக ஜனத்தொகை நானூறு கோடியைத் தாண்டியது.

"நானூறு கோடி! அம்மாடி! அவ்வளவு இனங்களுக்கு எவ்வளவு வீடுகள் தேவைப்படும்" என்று வியந்தாள் லாரா.

அவள் சீரியஸாகப் பேசுகிறாளா, ஜோக் அடிக்கிறாளா என்று ஹோவார்டுக்குப் புரியவில்லை.

அடுத்த மூன்று வருடங்களில் லாரா மூன்று பெரிய கட்டிடங்கள் கட்டி முடித்து விட்டாள். அவற்றில் இரண்டு, மக்கள் குடியிருக்கக் கூடிய அபார்ட்மெண்ட் கட்டிடங்கள்.

"அடுத்தபடியாக, கடற்கரை ஓரமாக ஓர் அலுவலகக் கட்டிடம் கட்டப் போகிறேன்." என்றாள் ஹோவார்டிடம்.

"ஓர் அருமையான மனை விலைக்கு வந்திருக்கிறது," என்றான் ஹோவார்டு. "உனக்குப் பிடித்திருந்தால் சொல்லு, நாங்கள் நிதியுதவி செய்கிறோம்."

அன்று மாலை அவர்கள் இடத்தைப் போய்ப் பார்த் தார்கள். அது கடற்கரையின் அருகே இருந்தது. அருமையான பகுதி.

"செலவு எவ்வளவு ஆகும்?" என்று லாரா கேட்டாள்.

"ஓரளவு கணக்குப் போட்டு வைத்திருக்கிறேன். நூற்றிருபது கோடி டாலர் வரும்."

லாரா மிடறு விழுங்கினாள். "கேட்கவே பயமாயிருக்கிறது."

"லாரா, ரியல் எஸ்டேட் என்பது ஒரு விளையாட்டு அதன் முதல் கட்டமே கடன் வாங்குவதுதான்."

அன்றொரு நாள் பில் சொன்னாரே, OPM என்று, அது ஞாபகம் வந்தது லாராவுக்கு, ‘அதர் பீப்பிள்ஸ் மணி,’ பிறத்தியார் பணம் என்றார் பில்.

அதெல்லாம் என்றைக்கோ நடந்த மாதிரி நினைவில் மங்கிவிட்டன. அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்துவிட்டது.

"ஆனால் இதுதான் ஆரம்பம், இப்போது தான் ஆரம்பம்.’ என்று எண்ணிக் கொண்டாள் லாரா...

"கையிலே ஒரு பைசா கூட இல்லாமல் சில ரியல் எஸ்டேட்காரர்கள் கட்டிடங்கள் கட்டுகிறார்கள், தெரியுமா?" என்றான் வேறாவார்டு...

"சொல்லுங்கள்." என்று ஆவலுடன் கேட்டாள் அவள்.

"கடன் வாங்கிக் கட்ட வேண்டியாது. பிறகு வாடகைக்கு விட்டோ அல்லது கட்டியதை விற்றோ அந்தக் கடனை அடைப்பார்கள். அப்படியும் கையில் கொஞ்சம் பணம் மீதமானதைக் கொண்டு மனை வாங்குவார்கள். பிறகு இன்னும் கொஞ்சம் கடன் பெற்று மறுபடியும் மனை வாங்குவார்கள். பிரமிட் கோபுரம் பார்த்திருக்கிறாயல்லவா? அதைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்ட மாதிரிதான் ரியல் எஸ்டேட் பிஸினஸும், ஊசி முனை அஸ்திவாரத்தில் மேலே விரிந்து கொண்டே போகும். என்ன?"

"புரிகிறது."

"ஆனால் இதில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு முதலீடு தப்பாய்ப் போயிற்றோ, மற்றக் கடன்களை அடைக்க முடியாமல் போய், மொத்தப் பிரமிடும் உன் தலை மீது விழுந்து உன்னைப் புதைத்துவிடும்."

"நல்லது. அந்தக் கடற்கரை இடத்தை எப்படி வாங்குவது?"

"இதை ஒரு கூட்டு முயற்சியாகச் செய்வோம். வான்ஸிடம் இதைப் பற்றிப் பேசுகிறேன். அவ்வளவு பெரிய தொகை எங்கள் பாங்க்கினால் உதவ முடியவில்லை என்றால், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி, சேமிப்பு நிறுவனம் போன்ற இடங்களில் விசாரிப்போம்."

ஹோவார்டு கொடுத்த புள்ளி விவரங்களையும் கணக்குகளையும் அப்படியே விழுங்குகிற மாதிரி கேட்டுக் கொண்டிருந்தான் லாரா.

ஐந்தாறு வருடங்களில் என்னென்ன செலவுகள், என்னென்ன வரிகள் கொடுத்தால் பிறகு அவள் கையில் எத்தனை கோடி மிச்சமாக இருக்கும் என்பதுவரை ஹோவார்டு விவரித்து முடித்தான்.

"அற்புதம்" என்று லாரா பிரமித்தாள்.

ஹோவார்டு சிரித்தான். "நீ பணம் சம்பாதிப்பதற்கு அரசாங்கம் அந்த அளவு உதவி செய்கிறது."

"வேஹாவார்டு, நீங்களும் ஏன் பணம் பண்ணக் கூடாது?"

"என்ன சொல்கிறாய் புரியவில்லையே?"

"என்னோடு வேலை செய்யலாம், வாருங்களேன்."

ஹோவார்டு திடீரென்று மெளனமானான்.

வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது என்பதை அவன் உணர்ந்திருந்தான். பணம் சம்பந்தப்பட்ட முடிவு அல்ல. லாரா சம்பந்தப்பட்ட முடிவு.

அவனுக்கு அவள் மீது கொள்ளைக் காதல் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்தச் சந்தர்ப்பமே வரவில்லை. ஒரே ஒரு முறை-

‘என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று அவளைக் கேட்டுவிடத் தீர்மானித்தான். அதற்காக ஒரு ராத்திரி பூரா மனசுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

அடுத்த நாள் காலை அவளிடம் போனான், "லாரா. ஐ லவ் யூ," என்று சொல்லிவிட்டான். அதற்கு அடுத்த வார்த்தையைச் சொல்வதற்குள் அவள் அவன் கன்னத்தில் பளிச்சென்று முத்தமிட்டுவிட்டு, "ஹோவார்டு, எனக்கும் உங்களிடம் பிரியம்தான். இதோ, இந்தப் பிளான்களைப் பாருங்கள். அடுத்து என்னென்ன வேலைகள் பாக்கி இருக்கிறது என்று குறித்து வைத்திருக்கிறேன்." என்று கூறி ஒரு காகிதத்தைப் பிரித்துக் காட்டினாள்.

பயங்கரமான வேதனை ஏற்பட்டது ஹோவார்டுக்கு. அந்த அனுபவத்துக்கு பிறகு, அவளிடம் திருமணப் பேச்சை எடுக்கத் தைரியமே வராமல் போய்விட்டது.

இப்போது தன் தொழிலில் கூட்டாளியாக இருக்கும்படி கேட்கிறாள்! இனி நாள் மொத்தமும் அவள் அருகிலேயே வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அவளைத் தொட முடியாது... அந்தரங்கமாகப் பேச முடியாது.

"என்னிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா, ஹோவார்டு?"

"இல்லையென்று சொன்னால் சுத்தப் பைத்தியக் காரத்தனம்"

"இப்போது உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ, அதைப் போல் இரண்டு மடங்கு தருகிறேன். அத்துடன் லாபத்தில் ஐந்து சதவிகிதம்..."

"நான்... யோசித்துச் சொல்கிறேனே..."

"இதிலே யோசிப்பதற்கு என்ன இருக்கிறது, ஹோவார்டு?"

அப்போதே முடிவுக்கு வந்து விட்டான் அவன். "சரி, பார்ட்னர்!"

அவனை - ஒருமுறை கட்டிக்கொண்டாள் லாரா. "பிரமாதம், பிரமாதம்! நீங்களும், நானும் சேர்ந்து ரொம்ப அழகான கட்டிடங்கள் கட்டப் போகிறோம் பாருங்கள். இந்த நகரில் கோரம் கோரமான கட்டிடங்கன் ஏகப்பட்டது இருக்கிறது. ஊரின் அழகையே கெடுக்கிறது. நாம் கட்டப் போகிற ஒவ்வொரு கட்டிடமும் இந்த ஊருக்கு அழகு சேர்ப்பதாக இருக்கும்."

அவன் அவள் கைகளை மெல்லப் பற்றி, "மாறு மாட்டாயே, லாரா"? என்றான்.

அவள் அவனை கடுமையாகப் பார்த்து, "ஒருநாளும் மாறமாட்டேன்." என்றாள்.

18

1970- ஐத் தொடர்ந்து வந்த வருடங்களில் அமெரிக்காவிலும் உலகத்திலும் பல வகையான மாறுதல்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன.

அலுவலகக் கட்டிடங்களும் ஓட்டல்களும் கடற்கரை விடுதிகளும் வானளாவும் குடியிருப்புக்களும் ஏராளமாய்க் கட்டினாள் லாரா.

அவள் வெளியே அதிகம் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் ஜாஸ் இசை நிகழ்ச்சிகள் நடக்கும் கிளப்புகளுக்குத்தான் சென்றாள். ஜாஸ் இசை அவளைக் கவர்ந்திருந்தது

தனிமை உணர்வு அவளுக்கு ஒருபோதும் ஏற்பட்டது கிடையாது. தினம் தினம் தன் குடும்பத்துடன் இருக்கவே நேரம் சரியாக இருந்தது அவளுக்கு. ஆர்க்கிடெக்டுகள், தச்சுத் தொழிலாளர்கள், எலெக்ட்ரீஷியன்கள், ஸர்வேயர்கள், குழாய் வேலை செய்யும் தொழிலாளர்கள் - இவர்கள் தான் அவளுடைய குடும்பம். கட்டிடங்கள், கட்டிடங்கள் இவற்றிலேயே அவள் மூழ்கியிருந்தாள். சிகாகோ அவளுடைய அரங்கமாகத் திகழ்ந்தது. அதிலே அவள்தான் நட்சத்திரம்.

அவள் கொஞ்சம் கூடக் கனவு கண்டிராத அளவுக்கு அவளுடைய தொழில் வாழ்க்கை வளர்ந்துவிட்டது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் இருக்கவில்லை. மெக்காலிஸ்டரிடம் அடைந்த கோர அனுபவத்துக்குப் பிறகு ஸெக்ஸ் என்றாலே அவள் வெறுத்திருந்தாள். ஒரு நாள், இரண்டு நாள் சந்திப்பாள், பேசுவாள் - அதற்கு மேலே தொடர்பு நீடிக்காது.

அவளுடைய உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ ஓர் உருவம் நிழலாடிக் கொண்டிருந்தது... என்றைக்கோ எப்போதோ சந்தித்த உருவம். அந்த உருவத்தை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று அவள் விரும்பியதுண்டு. ஆனால் அந்த உருவம் அவள் மனத்தில் முழுதாக உருப்பெறவேயில்லை. மின்னல் மாதிரி ஒரொரு சமயம் அந்த உருவம் பளீரிடும். உடனே மறைந்து விடும்.

அவளுடைய காதலைப் பெற விரும்பியவர்களின் எண்ணிக்கைக்குப் பஞ்சமில்லை. தொழிலதிபர்கள், பெட்ரோல் கிணற்றுக்குச் சொந்தக்காரர்கள், கவிஞர்கள் இப்படிப் பலர் இருந்தார்கள். அவள் கீழே வேலை பார்க்கும் சிப்பந்திகள் கூட அவளைப் பார்த்து இளித்ததுண்டு. எல்லாரிடமும் லாரா இனிமையாகப் பழகினாள். ஆனால் எந்த நட்பும் எல்லை மீறிப் போய்விடாதபடி. எச்சரிக்கையாக இருந்தாள். அவர்களுடன் வெளியே போய்த் திரும்பினால், வீட்டு வாசலில் கைகுலுக்கி, குட் நைட் சொல்லி விடை கொடுத்து விடுவாள்.

ஆனால் ஒருவனை மட்டும் அவளையுமறியாமல் அவள் மனம் நாடியது. அவன் பெயர் ரயான். லாராவின் கட்டிட வேலை ஒன்றில் தலைமை ஃபோர்மேனாக இருந்தான். அவன் இளைஞன், அழகானவன். பளிச்சென்று புன்னகை செய்தான்.

அவன் வேலை செய்யும் இடத்துக்குத் தேவை யில்லாமல் அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள் லாரா. சந்திக்கும் போது இருவரும் கட்டிட வேலைகளைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால் அவர்கள் மனத்துக்குள் வேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். அதை இருவருமே உணர்ந்திருந்தார்கள்.

"இன்று என்னுடன் டின்னர் சாப்பிட வருகிறீர்களா?" என்று ஒரு நாள் அழைத்தான் ரயான்.

லாராவின் இதயம் கும்மென்று ஒரு துள்ளல் துள்ளியது, "ஓ," என்றாள்.

ஆனால் அவன் அவளை எங்கேயும் அழைத்துச் செல்லவில்லை. இரவு அங்கேயே தங்கிவிட்டான்.

"எவ்வளவு அழகான பெண் நீ" என்று சொல்லி அவள் இடையை அணைத்தான்.

லாரா தன்னை மறந்தாள். தன் வாழ்க்கையில் ரயானைப் போன்ற ஒருவனைச் சந்தித்ததேயில்லை என்று எண்ணிக் கொண்டாள். தனக்குச் சமமான புத்தி கூர்மை

அவனுக்கு இருப்பதாக நினைத்து மகிழ்ந்தாள்.

அடுத்த நாள் காலை.

ரயான் வேலை செய்து கொண்டிருந்த இடத்துக்கு அவள் சென்ற போது, உயரத்தில் ஸ்டீல் கர்டர்களின் மீது அவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள்.

வேலையாட்களுக்கு அவன் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிப்பது தெரிந்தது.

லிஃப்ட்டை நோக்கி அவள் நடக்கையில் ஓர் ஆள், அவனளப் பார்த்து இளித்து, "குட் மார்னிங் மிஸ் லாரா," என்றான்.

அவன் குரலில் ஏதோ ஒரு வகை கேலி இருப்பது போல் லாராவுக்குப் பட்டது.

இன்னோர் ஆள் எதிர்ப்பட்டான், "குட் மார்னிங் மிஸ் லாரா," என்றான் அவனும், விகாரமாக இளித்தபடி...

மேலும் இரண்டு ஆட்கள் வந்தார்கள். "குட் மார்னிங் மிஸ் லாரா," என்றார்கள் இளிப்புடன்.

லாரா தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள். அத்தனன ஆட்களும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது சிரிப்பை அடக்கிக் கொள்வது - தெரிந்தது.

கோபத்தால் லாராவின் முகம் சிவந்து விட்டது. தன் அந்தரங்கத்தை அத்தனை பேருக்கும் ரயான் பரப்பியிருக்கிறான் என்று புரிந்தது.

நேரே ரயானை நோக்கி நடந்தாள்.

அவனைப் பார்த்ததுமே ரயான் பெரிதாகப் புன் சிரிப்பு காட்டி, "வா டார்லிங், இன்று ராத்திரி டின்னருக்குப் போகலாமா?" என்றான்.

"டின்னரா? பட்டினிதான் உனக்கு! இன்று முதல் உனக்கு இங்கே வேலை கிடையாது. டிஸ்மிஸ்" என்று கடும் சினத்துடன் கூறிவிட்டுத் திரும்பி நடந்தாள் அவள்.

லாரா கட்டிய ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு வகையில் பழமைக்குச் சவாலாக விளங்கியது. பில் அன்றொரு நாள் சொன்னது போல, இடம் இடம் எந்த இடத்தில் கட்டிடம் கட்டுகிறோம் என்பதுதான் முக்கியம்!’ என்பது உண்மையாயிற்று.

அவளுடைய சாம்ராஜ்யம் விரிந்து கொண்டே போயிற்று. நகர சபைக்கும் பத்திரிகைகளுக்கும் பொது மக்களுக்கும் அவளிடம் அபார மோகம் ஏற்பட்டது.

கவர்ச்சி நட்சத்திரமாக அவள் ஜொலித்தாள். நிதி உதவி நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் சரி, இசை அரங்குகளுக்குச் சென்றாலும் சரி, அவளைப் படம் எடுக்கப் புகைப்படக்காரர்கள் நான், நீ என்று முண்டினார்கள். பத்திரிகைகளிலும் டெலிவிஷன்களிலும் நாளுக்கு நாள் அதிகமாக அவள் காட்சியளித்தாள்.

அவள் கட்டிய அத்தனை கட்டிடங்களும் வெற்றிச் சிகரங்களாக விளங்கின. ஆனால் அவள் திருப்தி அடைய வில்லை.

வேறு ஏதோ ஓர் அற்புதம் நிகழ்வதற்காகக்காத்திருப்பது போலிருந்தது அவளுக்கு. ஒரு கதவு திறக்கப் போகிறது... ஒரு மாயாஜாலம் நிகழப் போகிறது.

ஹோவார்டினால் அவளை புரிந்து கொள்ள முடிய வில்லை, "உனக்கு என்னதான் வேண்டும் லாரா?"

"இன்னும், இன்னும்." என்றாள் அவள்.

அதற்கு மேல் எந்தப் பதிலையும் பெற அவனால் முடியவில்லை.

ஒரு நாள் ஹோவார்டிடம் கேட்டாள்: "கூட்டுகிறவர்களுக்கும் துடைப்பவர்களுக்கும் மெழுகுபவர்களுக்கும் நாம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு கொடுத்துக் கொண்டு வருகிறோம், தெரியுமா?"

"நிறையத்தான். ஆனால் அவர்கள் ஒரு தனியான பிரிவு," என்றான் ஹோவார்டு.

"அந்தப் பிரிவை நாமே நடத்தினால்?"

"என்ன சொல்கிறாய்?"

"அவர்களை நாமே அமர்த்தி ஓர் அமைப்பை உருவாக்குவோம். அவர்கள் நமக்கும் வேலை செய்யட்டும். மற்றவர்களுக்கும் நாம் சப்ளை செய்வோம்," என்றாள் லாரா.

அந்தத் திட்டமும் வெற்றிகரமாக நிறைவேறி, லாபம் குவியத் தொடங்கியது.

லாரா தன் சொந்த உணர்வுகளை வெளியே காட்டாமல் வேலி கட்டி வைத்திருக்கிறாள் என்று ஹோவார்டுக்குத் தோன்றியது. வேறு எவரைக் காட்டிலும் அவன்தான் அவனிடம் மிக நெருக்கமாகப் பழகி வந்தான். ஆனால் அவள் தப்பித் தவறிக் கூடத் தன் குடும்பத்தைப் பற்றியோ பின்னணியைப் பற்றியோ அவனிடம் பேசியது கிடையாது. ஏதோ ஒரு மூடு பனிக்குப் பின்னேயிருந்து திடுமென்று ஒரு பெரிய உருவம் வெளிப்பட்டது போல் விளங்கினாள் லாரா.

ஆரம்ப காலத்தில் ஹோவார்டு அவளுக்குக் குருவாக விளங்கினான். வழி காட்டினான், யோசனைகள் கூறினான். ஆனால் இப்போதெல்லாம் எந்த விஷயத்தையும் லாரா தானே தனியாக முடிவு செய்தாள். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யையாக ஆகிவிட்டாள்...

தன் வழியில் எது குறுக்கிடவும் அவள் அனுமதிப்பதில்லை. எதிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தாள். அவளைத் தடுத்து நிறுத்த எதனாலும், யாராலும் முடிய வில்லை. செய்கிற காரியம் பூரணமாக, முழுமையாக அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறவள் அவள். தான் நினைப்பது என்ன என்று அவளுக்குத் தெரியும். அது நடக்கிற வரையில் விட மாட்டாள்.

முதலில் சில தொழிலாளிகள் அவளை ஏமாற்றப் பார்த்ததுண்டு. ரியல் எஸ்டேட் பிஸினஸில் ஒரு பெண் ஈடுபட்டு அவர்கள் அதுவரை கண்டதில்லை. அதுவே அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

ஆனால் விரைவிலேயே உண்மையை உணர்ந்து கொண்டார்கள்.

ஒரு முறை நடக்காத ஒரு வேலையை நடந்ததாக ஒரு ஃபோர்மேன் கணக்குக் காட்டுவதைக் கண்டுவிட்டாள். அவனை மற்றத் தொழிலாளர்கள் எதிரில் நிறுத்தி வைத்து அவன் செய்த குற்றத்தைச் சொல்லி வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்தாள். கட்டிட வேலை நடக்கும் இடத்துக்குத் தினம் தினம் காலையில் வந்தாள். ஆறு மணிக்குத் தொழிலாளர்கள் வருவார்கள். தங்களுக்கு முன்பே லாரா வந்திருந்து காத்திருப்பதைக் கண்டு திகைப்பார்கள்.

அவளுடைய காது கேட்கச் சிலர் ஆபாச ஜோக்குகள் சொல்வதுண்டு. ஆபாசச் சைகைகள் செய்வதுண்டு, எப்போதாவது ஒருவன் அவள் மீது கை பட்டு விட்ட மாதிரி நடித்து. "ஸாரி,"என்பான்.

"பரவாயில்லை," என்பாள் லாரா. "உனக்குச் சேர வேண்டிய கூலியை வாங்கிக் கொண்டு நடையைக் கட்டு!"

அவளிடம் வம்பு செய்ய எண்ணியிருந்தவர்கள் நாளடைவில் மாறி, அவனிடம் மதிப்புக் காட்டத் தொடங்கினார்கள்.

ஒரு நாள் வேராவார்டுடன் காரில் கெட்ஸி அவென்யூ என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தாள் லாரா. ஒரிடத்தில் சின்னச் சின்னக் கடைகளாக அடைந்து கிடந்தன.

லாரா காரை நிறுத்தினாள்.

"எவ்வளவு வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது இந்த இடம் பெரிசாய் ஒரு கட்டிடம் கட்டலாமே?" என்றாள் ஹோவார்டிடம்.

"ஓ, செய்யலாம். ஆனால் இதிலே ஒரு பிரச்னை உண்டு. ஒவ்வொரு கடைக்காரனையும் தனித்தனியே சரிக்கட்டி அவனுடைய இடத்தை விலைக்கு வாங்க வேண்டும், சிலர் விற்க இஷ்டப்படாதிருக்கலாம்."

"அதிக விலை கொடுப்போமே?"

"லாரா, விளக்கமாய் சொல்கிறேன், கேள். பல பேரிடம் கடைகளை வாங்கிய பிறகு ஒரே ஒருவன் விற்க மறுத்தாலும் போச்சு! தேவையில்லாமல் பல கடைகள் நம் கையிலே இருக்கும் அது தான் மிச்சம். அதுவும், நாம் இங்கே ஒரு பெரிய கட்டிடம் கட்டுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிந்ததோ, அவ்வளவுதான். ஒவ்வொருவனும் உச்சாணிக் கிளைக்கு ஏறிக் கொள்வான்." என்றான் ஹோவார்டு.

"விஷயம் வெளியே தெரியாமல் வைத்துக் கொள்வோம்," என்றான் லாரா பிடிவாதமாக. சிறிது சிறிதாக அவளுக்குள் ஒரு துறுதுறுப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. "வெவ்வேறு நபர்களை அனுப்பி இந்தக் கடைகளை வாங்கப் போவது போல ஏற்பாடு செய்யலாமே?"

"இந்த மாதிரி விவகாரத்தில் நான் மாட்டிக் கொண்டது உண்டு, லாரா. விஷயம் வெளியே தெரிந்து விட்டால் உன்னை அப்படியே விழுங்கி ஏப்பம் விடப் பார்ப்பார்கள்." என்றான் ஹோவார்டு.

"அதற்குத் தக்கபடி நாம் ஜாக்கிரதையாக இருந்து விட்டால் போயிற்று. இந்த இடத்தின் விலை மதிப்பு என்ன, சொந்தக்காரர்கள் யார் யார் என்ற விவரங்களைச் சேகரியுங்கள்." என்றாள் லாரா, அவன் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல்.

19

ட்டிடம் கட்டுவதற்காக லாரா பார்த்திருந்த கெட்ஸி அவென்யூ என்ற இடத்தில் மூன்று டஜன்களுக்கு மேற்பட்ட ஸ்டோர்களும் ஷாப்களும் இருந்தன. ஒரு ரொட்டிக் கடை ஒரு இரும்புச் சாமான்கள் கடை, ஒரு முடி திருத்தும் சலூன். ஒரு துணிக் கடை, ஒரு கசாப்புக் கடை, ஒரு தையல்காரர் கடை, ஒரு மருந்துக் கடை, ஒரு ஸ்டேஷனரி கடை, ஒரு காப்பி கிளப் - இன்னும் பல வகையான பிஸினஸ் கடைகள்.

ஹோவார்டு மறுபடியும் எச்சரிக்கை செய்தான், "இதிலே ரொம்ப ரிஸ்க் இருக்கிறது. லாரா. மறக்காதே. இவர்களிலே ஒருத்தன் முரண்டு பண்ணினாலும் போச்சு. மற்ற அத்தனை பேரிடம் கொடுத்த பணமும் அவ்வளவுதான்."

"கவலைப்படாதீர்கள். அப்படி ஏதேனும் நேர்ந்தால் நான் சமாளித்துக் கொள்கிறேன்." என்றாள் லாரா.

ஒரு வாரம் சென்றது.

இரண்டே நாற்காலியுடன் இருந்த முடிதிருத்தும் சலூனுக்குள் ஒரு நபர் நுழைந்தார். அப்போது பார்பர் ஷாப்காரர் ஒரு பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்து, "வாருங்கள் சார், என்ன வேணும்? ஹேர் கட்டா?" என்றார்.

வந்தவர் புன்னகை செய்தார், "இல்லை. இந்த ஊருக்கு நான் இப்போது தான் வந்தேன். நியூஜெர்ஸியில் எனக்கு ஒரு பார்பர் ஷாப் இருக்கிறது. ஆனால் என் மனைவி இந்த ஊருக்கு வரவேண்டும் என்கிறாள். ஏனென்றால் அவள் அம்மா இங்கே இருக்கிறாள். அம்மாவின் பக்கத்திலே இருக்க வேண்டுமென்பது அவள் எண்ணம். அதனால் இங்கே ஏதாவது பார்பர் ஷாப் விற்பனைக்கு இருந்தால் வாங்கலாமென்று பார்க்கிறேன்." என்றார்.

"இந்த வட்டாரத்தில் இது ஒன்றுதான் பார்பர் ஷாப்." என்றார் அந்த முடி திருத்தகர். "இதை விற்பதற்கில்லை."

வந்தவர் மறுபடி புன்னகை செய்தார். "அது சரிதான்.. ஆனால் விற்பதற்கில்லை என்று உலகத்தில் எதுவும் கிடையாது இல்லையா? கொடுக்க வேண்டிய விலை கொடுத்தால் எதுவும் கிடைக்கும். இந்த பார்பர் ஷாப்பையே எடுத்துக் கொள்ளுங்களேன். இது எவ்வளவு இருக்கும் - என்ன, ஐம்பது, அறுபதாயிரம் டாலர் இருக்குமா?"

"கிட்டத்தட்ட," என்று ஒப்புக் கொண்டார் பார்பர் ஷாப்காரர்.

"எப்படியாவது இங்கே ஒரு பார்பர் ஷாப் வாங்க வேண்டுமென்று பார்க்கிறேன். இந்த இடத்துக்கு எழுபத்தையாயிரம் டாலர் தந்தால்?"

"இல்லை. இதை விற்கிற எண்ணம் இல்லை எனக்கு."

"ஒரு லட்சம் டாலர்,"

"வந்து. மிஸ்டர் தான் நிஜமாகவே."

"இங்கே இருக்கிற உங்கள் பொருள்கள் எல்லா வற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளலாம்."

பார்பர் ஷாப்காரர் அவரை நம்ப முடியாமல் பார்த்தார். "அதாவது நீங்கள் ஒரு லட்சம் டாலர் பணம் தருகிறீர்கள். இந்த நாற்காலிகள், கண்ணாடிகள் மற்றுமுள்ள பொருள்களையெல்லாம் தானே எடுத்துக்கொண்டு போய் விடலாம். அப்படியா சொல்கிறீர்கள்?"

"அப்படியேதான். பார்பர் ஷாப்புக்குத் தேவையான பொருளெல்லாம் என்னிடம் ஏற்கெனவே இருக்கிறது."

"நான் யோசனை பண்ணிச் சொல்கிறேனே? இதைப் பற்றி என் மனைவியிடம் பேச வேண்டும்."

"தாராளமாய்ப் பேசிவிட்டுச் சொல்லுங்கள். நாளைக்கு வருகிறேன்."

இரண்டு நாட்களுக்கெல்லாம் அந்தப் பார்பர் ஷாப் கிரயமாகி விட்டது.

"ஒன்று முடிந்தது," என்றாள் லாரா.

அடுத்தது ரொட்டிக் கடை கணவனும் மனைவியும் அடங்கிய ஒரு சிறிய குடும்பத்துக்கு அது சொந்தம். சுடையின் பின்பக்கத்தில் ரொட்டி சுடும் அடுப்பு இருந்தது. புத்தம் புதிதாய் ரொட்டி சுடப்படும் மணம் அங்கிருந்து புறப்பட்டுக் கடை பூரா பரவிக் கொண்டிருந்தது.

ஒரு பெண்மணி அந்தக் கடைக்குள் நுழைந்தாள்.

"என் கணவர் சமீபத்தில்தான் இறந்தார். அவருடைய இன்ஷ்யூரன்ஸ் பணம் எனக்குக் கிடைத்திருக்கிறது. ஃப்ளாரிடாவில் எங்களுக்கு ஒரு பேக்கரி இருக்கிறது. ஆனால் இங்கே இதேபோல் ஒரு கடை இருந்தால் தேவலை என்று பார்க்கிறேன். இதை விற்பதாக இருக்கிறீர்களா?"

"இது எங்களுக்குச் சௌகரியமான தொழிலாக இருக்கிறது." என்றார் ரொட்டிக் கடைக்காரர். "எனக்கும் சரி, என் மனைவிக்கும் சரி, இதை விற்பதாக எண்ணம் இல்லை."

"ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். இதை விற்பதாக இருந்தால் என்ன விலைக்கு விற்பீர்கள்?"

ரொட்டிக் கடைக்காரர் தோள்களைக் குலுக்கிக் கொண்டு "எனக்குத் தெரியவில்லை." என்றார்.

"அறுபதாயிரம் டாலர் இருக்குமா?"

"வந்து... குறைந்தது எண்பத்தையாயிரம் டாலர் இருக்கலாம்."

"நான் சொல்வதைக் கேளுங்கள்." என்றாள் வந்தவள். "நான் இதற்கு ஒரு லட்சம் டாலர் தருகிறேன்."

ரொட்டிக் கடைக்காரர் அவளை வெறித்துப் பார்த்தார். "சீரியஸாகத்தான் சொல்கிறீர்களா?

"என் வாழ்க்கையில் நான் இதைக் காட்டிலும் சீரியஸாக இருந்தது கிடையாது."

அடுத்த நாள் லாரா சொன்னாள்: "இரண்டு முடிந்தது."

மற்றக் கடைகளை வாங்கும் விஷயங்களும் இதே போல் சிக்கல் இல்லாமல் முடிந்தன. ஆண்களும் பெண்களுமாக ஒரு டஜன் பேர்களை அமர்த்தி, தையல்காரர், மருந்துக் கடைக்காரர், கசாப்புக் கடைக்காரர் என்ற பெயரில் அனுப்பி வியாபாரத்தை முடித்துக் கொண்டாள் லாரா. அடுத்த ஆறு மாதங்களுக்குள் மிச்சமுள்ள ஸ்டோர்களையும் வாங்கினாள். கட்டிட வேலைகளைச் செய்வதற்கான ஆட்களைத் தருவித்துக் காரியங்களைக் கவனிக்கச் சொன்னாள். ஆர்க்கிடெக்டுகள் பிளான்களைத் தயாரித்துத் தயாராக வைத்துக் கொண்டிருந்தார்கள்.

லேட்டஸ்டாகக் கிடைத்த அறிக்கைகளைப் படித்துப் பார்த்தாள் லாரா. "விஷயத்தை வெற்றிகரமாக முடித்து விட்டோமென்று தோன்றுகிறது." என்றாள் ஹோவார்டிடம்.

"ஒரு சிக்கல் இருக்கிறது என்று நினைக்கிறேன்." என்றான் ஹோவார்டு.

"என்ன சிக்கல்? அந்தக் காப்பிக் கிளப் ஒன்றுதானே பாக்கியிருக்கிறது?"

"அதுதான் சிக்கல். அவன் அந்தக் காப்பிக் கிளப்பை ஐந்து வருஷத்துக்குக் குத்தகை எடுத்திருக்கிறானாம். குத்தகையை விட்டுக் கொடுக்க முடியாது என்கிறான்.

"இன்னும் அதிகப் பணம் தருவதாகச் சொல்லுங்கள்."

"என்ன பணம் தந்தாலும் விடமாட்டேன் என்கிறான்."

லாரா அவனை யோசனையுடன் பார்த்தாள். "ஒரு வேளை நாம் அங்கே பெரிய கட்டிடம் கட்டப் போவது அவனுக்குத் தெரிந்திருக்குமோ?"

"இல்லை. அவருக்குத் தெரியாது."

"நல்லது. நான் போய் அவனிடம் பேசுகிறேன். இடத்தைக் காலி செய்து விடுவான், கவலைப்படாதீர்கள். அந்த இடத்துக்குச் சொந்தக்காரன். அவனுக்குக் காப்பிக் கிளப்பைக் குத்தகை விட்டிருப்பவன். யாரென்று கண்டுபிடியுங்கள்."

அடுத்த நாள் காலை லாரா அந்த இடத்துக்குப் போனாள்.

அந்தப் பிளாக்கின் கோடியில், தென்மேற்கு மூலையில் அந்த ‘ஹாலி’ ஸ் காப்பிக் கிளப்’ இருந்தது. சின்னக் கடை. ஐந்தாறு நாற்காலிகளும் மேஜைகளும் இருந்தன. கவுன்ட்டரின் பின்னே உட்கார்ந்திருப்பவர்தான் கடையின் சொந்தக்காரரான ஹொலி என்று லாரா ஊகித்தாள். அவருக்கு வயது எழுபது இருக்கும்.

லாரா ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். ஹாலி வந்து இனிமையாக, ‘குட்மார்னிங். என்ன கொண்டு வரட்டும்?’ என்றார்.

"ஆரஞ்சு ஜூஸும் காப்பியும் ப்ளீஸ்."

"இதோ", என்றவர், புத்தம் புது ஆரஞ்சுகளைப் பிழியத் தொடங்கினார். "வெயிட்ரஸ் பெண் இன்று வரவில்லை. வேலைக்காரர்கள் கிடைப்பது ரொம்பக் கஷ்டமாயிருக்கிறது இந்தக் காலத்தில்," என்றார்.

ஜூஸும் காப்பியும் எடுத்துக் கொண்டு, கவுன்ட்டரின் பின்னாலிருந்து அவர் வெளிப்பட்ட போதுதான் லாரா கவனித்தாள்.

அவர் வந்தது சக்கர நாற்காலியில் அவருக்குக் காலே இல்லை.

அவர் காப்பியும் ஆரஞ்சு ஜூசும் கொண்டு வந்து வைப்பதை லாரா மெளனமாகப் பார்த்தபடி இருந்தாள்.

"தாங்க் யூ." என்று கூறிவிட்டு, சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்தபடி, "ரொம்ப நல்ல இடம்தான் இது." என்றாள்.

"ஆமாம். எனக்குப் பிடித்த இடம்."

"எத்தனை காலமாக நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்?"

"பத்து வருஷமாக,"

"ரிடையராகும் உத்தேசம் இல்லையா?"

ஹாலி பலமாகத் தலையை அசைத்தார். "இந்தக் கேள்வியை இந்த வாரத்தில் கேட்கும் இரண்டாவது நபர் நீங்கள். இல்லை. ரிடையராகும் எண்ணம் கிடையாது."

"அவர்கன் கொடுப்பதாகச் சொன்ன பணம் ஒருவேளை போதவில்லையா?" என்றாள் லாரா.

"இது பணம் சம்பந்தப்பட்டது இல்லை, மிஸ். இங்கே வருவதற்கு முன்பு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஆஸ்பத்திரியில் இரண்டு வருட காலம் இருந்தேன். அங்கே சினேகிதர் யாரும் கிடையாது. உயிர் வாழ் அதற்கே வெறுப்பாக இருந்தது. அப்போதுதான் இந்த இடம் குத்தகைக்கு வந்திருப்பதைப் பற்றி யாரோ சொன்னார்கள்." அவர் புன்னகை செய்தார். இங்கே வந்தபிறகு என் வாழ்க்கையே மாறி விட்டது. அக்கம் பக்கத்தில் இருக்கிற எல்லாரும் இங்கே காப்பி சாப்பிட வருகிறார்கள். அத்தனை பேரும் என் சினேகிதர்களாகி விட்டார்கள். கிட்டத்தட்ட என் குடும்பம் மாதிரி... உயிர் வாழ்வதற்கு ஓர் அர்த்தம் ஏற்பட்டிருக்கிறது இப்போது." அவர் மறுபடியும் தலையை அசைத்தார். "ஊகூம். இது பணம் சம்பந்தப்பட்ட விஷயமே அல்ல! இன்னும் கொஞ்சம் காப்பி கொண்டு வரட்டுமா மிஸ்?"

ஹோவார்டுடனும் ஆர்க்கிடெக்டுடனும் கலந்து ஆலோசித்தாள் லாரா.

"அந்த காப்பிக் கிளப் விஷயம் ரொம்பச் சுலபமாய் முடிந்து விட்டது லாரா." என்றான் ஹோவார்டு, "அந்தக் கிளப்பின் சொந்தக்காரனுடன் பேசி விட்டேன். ஒரு விஷயம் தெரிந்தது. குத்தகை ஒப்பந்தத்தில் ஒரு இரத்து இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் அந்த ஹாலி காட்டியாக வேண்டும். கடந்த சில மாதங்களாக அந்த அளவு வருமானம் வர வில்லையாம். ஆகவே அவனை விரட்ட முடியும்."

லாரா ஆர்க்கிடெக்டை நோக்கித் திரும்பினாள். "உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்." என்று சொன்னவள், மேஜைமீது பரப்பி வைத்துள்ள பிளானை ஒருமுறை பார்த்து விட்டு, காப்பிக் கிளப் இருக்கும் முலையைக் சுட்டிக் காட்டினாள். "இந்த சின்ன இடத்தை விட்டு விடுவோம். சாப்பிடக் கிளப் அப்படியே இருப்பதாக வைத்துக் கொள்வோம். மற்றப்படி நம் பிளான் பிரகாரம் கட்டிடத்தைக் கட்டி முடிக்க முடியுமா?"

ஆர்க்கிடெக்ட் பிளானைக் கூர்ந்து பார்த்தார். "முடியுமென்றுதான் தோன்றுகிறது. இந்தப் பக்கத்தில் கொஞ்சம் சாய்த்துவிட்டு, இன்னொரு பக்கத்தில் அதற்கு ஈடு பண்ணி விடலாம். ஆனால் அந்த காப்பிக் கிளப்பை அகற்றி விட்டால் இன்னும் நன்றாக இருக்கும்."

"அகற்றாமலே கட்ட முடியுமா முடியாதா?"

"முடியும்."

ஹோவார்டு குறுக்கிட்டு "லாரா, நான்தான் சொல்கிறேனே அந்த ஆளை வெளியேற்றி விட முடியும் என்று?"

லாரா தலையை அசைத்தாள். "வேண்டாம். அதைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் வாங்கிவிட்டோமா இல்லையா?"

"ஒ..." என்ற ஹோவார்டு, எந்தெந்தக் கடைகளை வாங்கியாகிவிட்டது என்று பட்டியல் தந்தான்.

"நல்லது. புதிய கட்டிடம் கட்டியானதும் அங்கே வருகிறவர்களுக்கு ஒரு காப்பிக் கிளப் வேண்டுமில்லையா? அதனால் இது இருக்கட்டும். மிஸ்டர் ஹாலி போக வேண்டாம். இருக்கட்டும்." என்றாள் லாரா உறுதியாக.

20

லாராவின் அப்பா பிறந்த நாள் வந்தது. அன்று ஹோவார்டிடம் அவள் சொன்னாள்: "எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்."

"கட்டாயம்."

"எனக்காக நீங்கள் ஸ்காட்லாந்துக்குப் போய் வர வேண்டும். அங்கே ஒரு கோட்டையை விலைக்கு வாங்க வேண்டும்."

அவள் பேசுவதைக் கேட்டபடி நின்றான் ஹோவார்டு.

லாரா சென்னாள்: "அங்கே மலைப் பகுதியில் லாக் மார்லிக் என்று ஓர் இடம் இருக்கிறது. அலிமூர் என்ற ஊருக்குப் பக்கத்தில், கிரெளன்மோர் என்ற ஊருக்குப் போகும் சாலையில் எந்தப் பக்கம் பார்த்தாலும் கோட்டைகளாக இருக்கும். அதிலே ஒன்றை வாங்குங்கள்."

"கோடை வாசஸ்தலமாக இருக்கட்டும் என்று பார்க்கிறீர்களா?" என்றான் ஹோவார்டு.

"இல்லை. நான் அங்கே வசிப்பதாக இல்லை. என் அப்பாவின் உடலை அங்கே கொண்டு போய்ப் புதைக்க வேண்டும்."

ஹோவார்டு மெதுவாகக் கேட்டான்: "அதாவது, நான் ஸ்காட்லாந்துக்குப் போய், உங்கள் அப்பாவைப் புதைப்பதற்காக ஒரு கோட்டை வாங்க வேண்டும் என்கிறீர்கள்."

"கரெக்ட். தானே போகலாமென்றால் எனக்கு நேரம் இல்லை. இந்தக் காரியத்தை உங்கள் ஒருவரிடம்தான் நான் நம்பி ஒப்படைக்க முடியும். இப்போது அவர் சடலம் கிளேஸ் பேயில் கிரீன்வுட் கல்லறையில் இருக்கிறது."

லாரா தன் குடும்பத்தைப் பற்றிய உணர்ச்சிகளை வெளியிடுவது இதுதான் முதல் தடவை என்று ஹோவார்டு எண்ணிக் கொண்டான்.

மூன்று வாரங்களில் ஹோவார்டு திரும்பி வந்தான். "சொன்னபடி எல்லா வேலையும் முடித்துவிட்டேன். உங்களுக்கு ஸ்காட்லாந்தில் ஒரு கோட்டை வாங்கி விட்டேன். கல்லறையில் உங்கள் அப்பா அமைதியாக உறங்குகிறார். குன்றுப் பக்கத்திலேயே ஓர் ஏரியும் இருக்கிறது. பார்த்தால் மயங்கி விடுவீர்கள். எப்போது போகப் போகிறீர்கள்?"

லாரா ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். "நானா? ஒருநாளும் போகப் போவதில்லை." என்றாள்.

1984ம் ஆண்டு...

நியூயார்க் நகரத்தை வெல்ல வேண்டிய சமயம் வந்து விட்டது என்று லாரா தீர்மானித்தாள்.

ஹோவார்டிடம் தன் திட்டத்தைச் சொன்னபோது அவன் முகம் வெளிறியது.

"எனக்கு இந்த ஐடியாவே பிடிக்கவில்லை." என்றான் பிடிவாதமாக. "உங்களுக்கு நியூயார்க்கைத் தெரியாது. எனக்கும் தெரியாது. அது ரொம்ப வித்தியாசமான நகரம் லாரா, நாம்."

"நான் கிளேஸ் பேயிலிருந்து சிகாகோவுக்கு வந்த போதும் இதையே தான் சொன்னார்கள்." என்றாள் லாரா. "கிளேஸ் போனால் என்ன, சிகாகோவானால் என்ன, நியூ யார்க்கானால் என்ன, டோக்யோவானால் என்ன, கட்டிடங்கள் கட்டிடங்கள் தான். நம் திறமையைக் காட்ட வேண்டும். அவ்வளவுதான்."

"இங்கேயே நீங்கள் பிரமாதமாய்த் தொழில் செய்து கொண்டிருக்கிறீர்களே?" என்று ஹோவார்டு மறுபடியும் ஆட்சேபித்தான். "என்னதான் உங்களுக்கு வேண்டும்?"

"முன்பே ஒருமுறை நீங்கள் கேட்டீர்கள். மேலும் மேலும் என்று நான் பதில் சொன்னேன். நியூயார்க் வானத்தை என் பெயர் எட்ட வேண்டும். அங்கே ஒரு கேமரான் பிளாஸா கட்டப் போகிறேன். பிறகு ஒரு கேமரான் ஸென்ட்டர். உலகத்திலேயே உயரமான கட்டிடத்தை ஒரு நாள் கட்டப் போகிறேன் ஹோவார்டு. அதுதான் எனக்கு வேண்டும். நம் ஸ்தாபனம் நியூயார்க்கில் கிளை விரிக்கப் போகிறது." என்று உறுதியாகச் சொன்னாள் லாரா.

அந்தச் சமயம் நியூயார்க்கில் எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் எழும்பிக் கொண்டிருந்தன. அவற்றைப் பெரும் பெரும் ரியல் எஸ்டேட் ராட்சதர்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

"அந்த ராட்சதர்களில் நானும் ஒருத்தியாக ஆகப் போகிறேன்." என்றாள் லாரா.

ரீஜன்ஸ் ஓட்டலில் அவர்கள் தங்கினார்கள். நகரத்தை ஆராய்ந்தார்கள்.

நியூயார்க்கின் அளவையும் ஆழத்தையும் லாராவினால் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. விண்ணை இடிக்கும் கட்டிடங்கள் குன்றுகளாக உயர்ந்து அதிகம். அவற்றின் நடுநடுவே ஒடும் ஆறுகளைப் போலக் கார்கள்

"இதோடு ஒப்பிட்டால் சிகாகோவே கிளேஸ் பே போலிருக்கிறது," என்றாள் லாரா. எப்போது வேலை தொடங்குவோம் என்று ஒரே பரபரப்பாக இருந்தது அவர்களுக்கு. "முதலில் ஒரு டீம் அமைத்துக் கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட் துறையில் சிறந்த வழக்கறிஞர் ஒருவரைப் பிடிப்போம். பிறகு நிர்வாக வேலைகளைக் கவனிக்கச் சிலர் தேவை. இங்கே ரியல் எஸ்டேட் முதலைகளில் யாரிடம் அதிகத் திறமையுள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்று விசாரியுங்கள். அவர்களை நம் பக்கம் இழுக்க முடியுமா பாருங்கள்."

"எனக்குப் பிடித்தமான சில கட்டிடங்களின் பட்டியல் இதோ இருக்கிறது இவற்றின் ஆர்க்கிடெக்டுகள் யார் என்று கண்டு பிடியுங்கள், அவர்களை நான் சந்திக்க விரும்புகிறேன்."

லாராவின் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஹோவார்டுக்குப் புரியலாயிற்று. "இங்கே நமக்குக் கடன் கொடுக்கக் கூடிய பாங்க்குகளுடன் தொடர்பு கொள்கிறேன். சிகாகோவில் நமக்குச் சொத்து பத்து இருப்பதால் இது ஒன்றும் பிரசினையாக இருக்காது. அத்துடன் சேமிப்பு நிறுவனங்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தரகர்கள் - இந்த விஷயங்களிலும் விசாரித்து வைக்கிறேன்."

"பிரமாதம்!"

"லாரா. இதிலெல்லாம் போய் மாட்டிக் கொள்வதற்கு முன்னால், நாம் செய்யப் போகிற உடனடி வேலை என்ன என்று தீர்மானித்துக் கொள்வது நல்லதில்லையா?"

லாரா அவரை ஏறிட்டு நோக்கி, சர்வசாதாரணமாக, "உங்களிடம் சொல்லவில்லையா? சென்ட்ரல் - ஹாஸ் பிடலை வாங்கப் போகிறோம்." என்றாள்.

சில நாட்களுக்கு முன் அவள் முடி வெட்டிக் கொள்வதற்காக ஒரு சலூனுக்குச் சென்றிருந்தாள். முடி வெட்டிக் கொண்டிருந்த சமயம், அடுத்த தடுப்பில் இரண்டு பேர் பேசிக் கொள்வது காதில் விழுந்தது.

"நீங்கள் வெளியூர் போய் விட்டால் எங்களுக்கு என்னவோ போலிருக்கும் மிஸஸ் வாக்கர்."

"எனக்கும் அப்படித்தான் டார்வின். நான் இங்கே வர ஆரம்பித்து உத்தேசமாய் எத்தனை நாள் இருக்கும்?"

"ஏறத்தாழப் பதினைந்து வருடம்."

"அப்பப்பா! காலம் என்னமாய்ப் பறக்கிறது! நியூயார்க்கை விட்டுப் போகவே எனக்கு மனமில்லை. என்ன செய்ய?"

"எப்போது புறப்படப் போகிறீர்கள்?"

"உடனே கிளம்ப வேண்டியது தான். மூடப் போகிறோம் என்று இன்று காலை நோட்டீஸ் கொடுத்து விட்டார்கள். என்ன வேடிக்கை பார்! ஸென்ட்ரல் ஆஸ்பத்திரி எவ்வளவு பெரிய நிறுவனம் அதை நடத்தப் பணம் இல்லையாம்! நானும் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷமாய் அங்கே சூபர்வைசராய் இருந்து வருகிறேன். இன்று நீ வீட்டுக்குப் போகலாம் என்று கால் கடுதாசி எழுதி அனுப்புகிறார்கள் என்ன சொல்ல? நேரில் கூப்பிட்டுச் சொன்னால் இவர்களுடைய அந்தஸ்து குறைந்து விடுமா என்ன? உலகம் குட்டிச் சுவராகிக் கொண்டிருக்கிறது!"

லாரா இப்போது கூர்ந்து கேட்கத் தொடங்கினாள்.

"ஆஸ்பத்திரியை மூடப் போவதாய்ப் பத்திரிகைகளில் நியூஸ் எதுவும் நான் பார்க்கவில்லையே?"

"பார்க்க முடியாது. விஷயத்தை ரகசியமாய் வைத்திருக்கிறார்கள். முதலில் ஊழியர்களுக்கு மட்டும் தெரிவிக்கலாம் என்பது அவர்கள் எண்ணம்."

லாராவுக்கு முடிதிருத்தும் பெண் பாதிதான் வேலையை முடித்திருந்தாள். ஆனால் லாரா எழுந்து கொண்டு விட்டாள்.

"இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது மிஸ்."

"பரவாயில்லை. எனக்குக் கொஞ்சம் அவசரமான வேலை இருக்கிறது." என்றாள் லாரா.

சென்ட்ரல் ஹாஸ்பிடல் என்பது இடிந்து விழுந்து கொண்டிருந்த கோரமான கட்டிடம். ஒரு தெரு பூராவையும் அடைத்துக் கொண்டிருந்தது.

லாரா அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டு வெகு நேரம் நின்றிருந்தாள். அவள் மனக் கண் முன்னே பிரம்மாண்டமான கட்டிடம் எழும்பிக் கொண்டிருந்தது. கீழ்த் தளங்களில் சில்லறைக் கடைகள். மேலே போகப் போக சொகுசான ஆடம்பர அங்காடிகள்.

ஆஸ்பத்திரியின் உள்ளே நுழைந்து, அந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரர் யார் என்று விசாரித்தாள். வால் ஸ்ட்ரீட்டில் ரோஜர் என்பவரின் பெயரைக் கொடுத்தார்கள்.

"மிஸ் லாரா, என்ன விஷயமாய் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார் ரோஜர்.

"சென்ட்ரல் ஹாஸ்பிடலை விற்கப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்."

அவர் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தார்.

"யார் சொன்னார்கள்?"

"உண்மையா இல்லையா?" அவர் நெளிந்தார். "விற்றாலும் விற்கலாம்."

"அதை நான் வாங்கலாமென்று பார்க்கிறேன்," என்றாள் லாரா. "விலை என்ன?"

"இதோ பாரம்மா... நீங்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. நீங்கள் பாட்டுக்குத் திடுதிப்பென்று உள்ளே வந்தீர்கள். ஒன்பது கோடி டாலர் வியாபாரத்தைப் பற்றி நான் விவாதிக்க வேண்டுமென்று எதிர் பார்க்கிறீர்கள்! நான்."

"ஒன்பது கோடி டாலரா!" கொஞ்சம் அதிகம் என்று லாராவுக்குத் தோன்றியது. ஆனால் எப்படியும் அந்த இடத்தை வாங்கிவிட வேண்டும்... பிரமாதமான திட்டம்... விடக் கூடாது...

ஒரு நூறு டாலர் நோட்டை ரோஜரிடம் நீட்டினாள்.

"எதற்கு இது?"

"நாற்பத்து நாலு மணி நேரத்தில் எனக்கு முடிவு சொல்லுங்கள். அதற்கான அச்சாரம் இது. நான் கேட்ப தெல்லாம் நாற்பத்து நாலே மணி நேர அவகாசம்தான். கட்டிடத்தை விற்கப் போவதாக இன்னும் நீங்கள் அறிவிக்க வில்லை. ஆகவே உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. நீங்கள் ஒரு விலை சொல்லப் போகிறீர்கள். எனக்குச் சரிப்பட்டால் நான் வாங்கிப் போகிறேன். அவ்வளவு தான்." என்றாள் லாரா.

21

சென்ட்ரல் ஹாஸ்பிடல் கட்டிடத்தின் சொந்தக்காரரான ரோஜர், லாராவை அவநம்பிக்கையுடன் பார்த்தார். "உங்களை எனக்கு முன்னே பின்னே தெரியாதே?" என்றார்.

"சிகாகோவிலுள்ள மெர்க்கண்ட்டைல் பாங்க்கிற்குப் போன் போட்டு, வான்ஸ் என்பவரைக் கூப்பிட்டுக் கேளுங்கள். அவர்தான் பாங்க் பிரசிடெண்ட்."

ஒரு நீண்ட நிமிடத்துக்கு ரோஜர் அவளையே வெறித்துப் பார்த்தார், பிறகு தனக்குத் தானே தலையை அசைத்துக் கொண்டு ஏதோ முணுமுணுத்தார். ‘சுத்தப் பைத்தியம் போலிருக்கு.’ என்று லாராவுக்குத் காதில் விழுந்தது.

தானே டெலிபோன் நம்பரைப் பார்த்துச் செக்ரட்டரியிடம் சொல்ல, அவள் போன் போட்டுக் கொடுத்தாள். லாரா அவரையே பார்த்தவண்ணம் மௌனமாக இருந்தாள்.

"மிஸ்டர் வான்ஸா? நியூயார்க்கிலிருந்து ரோஜர் பேசுகிறேன். இங்கே மிஸ்..." அவளை நிமிர்ந்து பார்த்தார்.

"லாரா... லாரா கேமரான்."

"லாரா கேமரான் என்பவர் வந்திருக்கிறார். எங்களுக்குச் சொந்தமான ஒரு சொத்தை வாங்க வேண்டுமாம். உங்களுக்கு அவரைத் தெரியும் என்கிறார்."

பிறகு மறுமுனையில் பேசுவதைக் கேட்கத் தொடங்கினார். "ஓகோ.. அவர். அப்படியா.. அட! எனக்கு அது தெரியாது. ரைட்.. ரைட்.." வெகு நேரம் கேட்ட பின்னர், "ரொம்பத் தாங்க்ஸ்," என்று கூறி டெலிபோனை வைத்தார். லாராவைக் கூர்ந்து பார்த்தார். "சிகாகோவில் நீங்கள் பிரமாதமான பெயர் வாங்கியிருக்கிறீர்கள் என்று தெரியகிறது, என்றார்.

"இங்கே நியூயார்க்கிலும் அப்படிப் பெயர் எடுக்க வேண்டுமென்று பார்க்கிறேன்."

சற்று முன் அவள் கொடுத்த நூறு டாலர் நோட்டை நோக்கினார் ரோஜர். "இதை என்ன பண்ண வேண்டும் என்கிறீர்கள்?"

"உசத்தியான க்யூபா சுருட்டு வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்கிற விலையை என்னால் கொடுக்க முடிந்தால் உங்களுக்கு விற்கச் சம்மதம்தானே?"

மீண்டும் அவளைக் கூர்ந்து பார்த்தார் ரோஜர். "அப்படி யாருக்கும் உத்தரவாதம் கொடுப்பது கிடையாது. இருந்தாலும் உங்களுக்காக... நாற்பத்தெட்டு மணி நேரம் வேறு யாருக்கும் தெரிவிக்காமல் வைத்திருக்கிறேன். அதற்குள் உங்கள் முடிவைச் சொல்லலாம்."

இந்த விஷயங்களை ஹாவார்டிடம் விவரித்தாள் லாரா, "ரொம்ப வேகமாக நாம் வேலை செய்ய வேண்டும். நாற்பத்தெட்டு மணி நேரம்தான் அவகாசம் இருக்கிறது. அதற்குள் நம் நிதி நிலைமையைச் சரி செய்து கொள்ள வேண்டும்."

"எவ்வளவு தேவைப்படும் என்று ஏதாவது ஐடியா வைத்திருக்கிறீர்களா?"

"கட்டிடத்துக்கு விலை ஒன்பது கோடி டாலர். அதை இடித்துத் தள்ளிவிட்டுப் புதிய கட்டிடம் எழுப்ப இருபது கோடி..."

ஹோவார்டு அவளை வெறித்து நோக்கினான். "அதாவது இருபத்தொன்பது கோடி டாலர்"

"எப்பவுமே நீங்கள் கூட்டலில் புலிதான்" என்றாள் லாரா புன்னகையுடன்.

அவன் அதில் மசியவில்லை. "லாரா, அவ்வளவு பணம் நமக்கு எங்கிருந்து வரப் போகிறது?"

"கடன் வாங்குவோம்." என்றாள் அவள். "சிகாகோவில் உள்ள சொத்துப் பத்துக்களோடு ஒப்பிட்டால் இதை காங்வது அப்படியொன்றும் பிரசினையாக இருக்காது."

"ஆனால் அது பெரிய ரிஸ்க், லாரா. நூறு விஷயங்கள் நாம் கணக்குப் போட்ட மாதிரி அமையாமல் தப்பாகிவிடலாம். உன் கையில் இருக்கும் கடைசி டாலர் வரை வைத்துச் சூதாட வேண்டியிருக்கும்."

"அதிலுள்ள ஜோரே அது தான்," என்றாள் லாரா. "சூதாட்டம் ஜோர். சூதாடி ஜெயிப்பது ஜோர்."

கட்டிடம் கட்டுவதற்காக நிதியுதவி பெறுவது சிகாகோவைக் காட்டிலும் நியூயார்க்கில் சுலபமாக இருந்தது. அதற்கு வசதியாக மாநகர மேயர் சில சலுகைகளை அளித்திருந்தார். வரிகள் சிலவற்றை ரத்து செய்துமிருந்தார்.

லாராவின் சாதனைகளையும் ஆஸ்திகளையும் பார்த்த பாங்க்குகளும் கடன் கொடுக்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு அவளுக்கு உதவி செய்ய முன்வந்தன.

நாற்பத்தெட்டு மணி நேரக் கெடு முடியுமுன்பே லாரா ரோஜரின் அலுவலகத்துக்குச் சென்றாள். முப்பது லட்சம் டாலருக்கு ஒரு செக் தந்தாள்.

"இது அச்சாரம். நீங்கள் சொன்ன விலைக்கே வாங்கிக் கொள்கிறேன்." என்றவள், "அப்புறம் அந்த நூறு டாலர் நோட்டு, அதை நீங்களே வைத்துக் கொள்ளலாம்." என்றாள்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு ஹோவார்டு பாங்குகளுடனும் கடன் தரும் நிறுவனங்களுடனும் வேலைகளைக் கவனித்தான். லாரா ஆர்க்கிடெக்டுகளுடன் பிளான் வரையும் வேலைகளில் ஈடுபட்டாள்.

எல்லாம் சுமுகமாக நடந்தேறிக் கொண்டிருந்தன. ஆர்க்கிடெக்டுகளும் மற்றப் பிரிவினரும் குறித்த நேரப்படி வேலைகளை முடித்து வந்தார்கள். ஆஸ்பத்திரிக் கட்டிடத்தை இடித்து விட்டுப் புதிய கட்டிடத்தை எழுப்பும் வேலை ஏப்ரல் மாதம் தொடங்குவதாக இருந்தது.

லாராவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தினம் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கட்டிட இடத்துக்குப் போனாள். புதிய கட்டிடம் எழுவதைப் பார்வையிட்டாள். இந்தக் கட்டிடத்தில் வேலை நடப்பது பூரா தொழிலாளிகளின் கையில் இருந்தது. அவள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. எனவே எப்போதும் கையைப் பிசைந்து கொண்டு தவித்தாள். எப்போதும் வேலை செய்தே அவளுக்குப் பழக்கமாகியிருந்தது. ஒரே சமயத்தில் ஆறு இடங்களில் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தால் அவளுக்குத் திருப்தியாக இருந்திருக்கும்.

"இன்னொரு இடமும் ஏதாவது கிடைக்கிறதா பார்க்கலாமே?" என்றாள் ஹோவார்டிடம்.

"சரியாப் போச்சு! இந்த வேலையே கழுத்து முட்ட இருக்கிறது. இதற்கு மேலே கொஞ்சம் பயமாய் மூச்சு விட்டால் கூட மொத்தத் திட்டமும் விழுந்து விடும். இந்தக் கட்டிடத்துக்காக உன் கையிலிருந்த ஒவ்வொரு பைசாவையும் அடைமானம் வைத்தாகிவிட்டது. தெரியுமில்லையா? ஏதாவது இசகு பிசகாக ஆச்சோ."

"எதுவும் இசகுபிசகாக ஆகாது." என்றவள். அவன் முகத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலைக் கண்டாள். "ஏன் என்னவோ போலிருக்கிறீர்கள்? என்ன கவலை?"

"ஒன்றுமில்லை. கடன் கொடுக்கும் நிறுவனங்களிடம் நீ செய்து கொண்டுள்ள ஒப்பந்தம்..."

"ஏன்? அதற்கென்ன? நமக்கு நிதியுதவிதான் கிடைத்ததே?"

"கடன் அடைக்க வேண்டிய கெடுவைப் பற்றிக் கவலையாக இருக்கிறது. மார்ச் 15 - ஆம் தேதிக்குள் நாம் கட்டிடத்தைக் கட்டி முடிக்காவிட்டால் இதுவரை செலவழித்த அத்தனை பணமும் போய்விடும்."

கிளேஸ் பேயில் தான் கட்டிய கட்டிடமும், அதை முடிப்பதற்கு நண்பர்கள் வந்து செய்த உதவியும் லாராவுக்கு ஞாபகம் வந்தன. ஆனால் அன்றைய நிலைமை வேறு, இன்றைய நிலைமை வேறு.

"கவலைப்படாதீர்கள். குறித்த தேதியில் கட்டிடம் முடிந்து விடும்." என்றாள். "எதற்கும் இன்னொரு கட்டிடமும் கட்ட ஏதாவது இடம் கிடைக்கிறதா, பாருங்கள்."

இடங்களை வாடகைக்கு விடும் பிரிவு நிர்வாகியுடன் பேசினாள் லாரா. "கீழ்த்தளத்தில் உள்ள சில்லறைக் கடைகளுக்கு ஆள் வந்தாயிற்று. பெரிய கடைகளிலும் பாதிக்கு மேல் ஒப்பந்துமாகி விட்டது. கட்டிடம் முடிவடைவதற்கு முன்பே முக்கால் பகுதிக்கு ஆள் வந்து விடுவார்கள். கட்டிடம் முடிந்த கொஞ்ச நாளைக்கெல்லாம் மீதி இடமும் நிரம்பிவிடும்." என்றார் அந்த மானேஜர்.

"கட்டிடம் முடிவதற்கு முன்பே எல்லா இடங்களையும் வாடகைக்கு விட்டுவிட வேண்டும்." என்றாள் லாரா, "விளம்பரத்தை அதிகப்படுத்துங்கள்."

"சரி மேடம்."

ஹோவார்டு உள்ளே வந்தான். "லாரா, உன்னைப் பாராட்ட வேண்டும், நீ சொன்னபடியே எல்லாம் குறித்த நேரப்படி நடக்கிறது."

"ஆமாம். இது பணம் காய்ச்சி மரமாக விளங்கப் போகிறது, பாருங்களேன்." என்றாள் லாரா.

ஜனவரி 15-ஆம் தேதி.

கட்டிடத்தை முடிக்க வேண்டிய கெடுவிற்கு இன்னும் அறுபதே நாள் இருந்தது. பிரம்மாண்டமான சுவர்களும் கர்டர்களும் வைத்துக் கட்டி முடிக்கப்பட்டிருந்தான. மின்சாரச் சாதனங்களையும் தண்ணீர்க் குழாய்களையும் பொருத்திக் கொண்டிருந்தார்கள் தொழிலாளிகள்.

வெகு உயரத்தில் கர்டர்களில் வேலை நடப்பதைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் லாரா.

தொழிலாளிகளில் ஒருவன் சிகரெட் பிடிப்பதற்காகத் தன் சிகரெட் பாக்கெட்டை வெளியே எடுத்தான். அதை எடுக்கையில் அவன் கையிலிருந்த பெரிய ‘வெஞ்ச்’ நழுவித் தரையை நோக்கிக் கீழே விழுந்தது.

தன் கண்களையே நம்ப முடியாமல், அதிர்ச்சியுடன் லாரா கவனித்தாள் - அந்த வெஞ்ச் நேரே தன் தலைக்கு மேலே சுற்றிச் சுழன்று விழுந்து கொண்டிருப்பதை!

ஒரே தாவலில் சடேரென்று நகர்ந்து கொண்டாள். அவள் இருதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

அந்தத் தொழிலாளி உயரத்தில் இருந்தபடி அதைப் பார்த்தான். ‘ஸாரி’ என்று சொல்வது போலக் கையை அசைத்தான்.

வேலை செய்வோருக்காக அமைக்கப்பட்டிருந்த லிஃப்டில் ஏறினாள் லாரா. அவள் முகத்தில் கடுமை நிறைந்திருந்தது. அந்தத் தொழிலாளி வேலை செய்து கொண்டிருந்த தளத்தை அடைந்தாள்.

தலையைச் சுற்ற வைக்கும் தரை நடுநடுவே பயங்கரமாய்க் காட்சியளிப்பதைப் பொருட்படுத்தாமல், சாரங்களின் மீது நடந்து சென்று அந்தத் தொழிலாளியை நெருங்கினாள்.

"அந்த வெஞ்சைக் கீழே போட்டவன் நீ தானே?"

"ஆமாம், ஸாரி."

அவன் முகத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள் லாரா. "இந்த நிமிஷமே உன்னை டிஸ்மிஸ் செய்து விட்டேன். போ வெளியே."

"என்னம்மா... அது ஏதோ தற்செயலாய் நடந்த விபத்து... தான்..." என்றான் அவன்.

"வெளியே போ என்றால் வெளியே போ!"

ஒரு நிமிடம் அவன் அவளை முறைத்துப் பார்த்தான். பிறகு வெளியேறி லிஃப்டில் கீழே இறங்கினான்.

லாரா தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சீராக மூச்சு விட்டாள். எல்லாத் தொழிலாளர்களும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நியூயார்க் வழக்கறிஞரான காஸ்டன் லாராவைப் பார்க்க வந்தார். அவர்தான் அவளுடைய காண்டிராக்டுகளைக் கவனித்துக் கொள்பவர்...

லாரா புன்னகை செய்தாள், "பிரமாதமாக நடக்கிறது. முடிப்பதற்கு இன்னும் சில வாரங்கள்தான் இருக்கிறது."

"நான் உங்களிடம் ஒன்று ஒப்புக் கொள்ளட்டுமா?"

"தாராளமாய், ஆனால் சொல்லிவிட்டு ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள்! ஜாக்கிரதை"

"நிஜமாகவா! ஏன்?"

"நீங்கள் செய்கிற மாதிரியான ரியல் எஸ்டேட் சமாசாரம் ஆண்களின் சாம்ராஜ்யம். சின்ன கூட்டுறவுத் துறை கட்டிடங்கள் வேண்டுமானால் சில பெண்கள் கவனிப்பு துண்டு. இவ்வளவு மாபெரும் அளவில் எந்தப் பெண்ணும் ஈடுபட்டது கிடையாது. ஆகவே நான் வெற்றி பெற மாட்டேனென்று பந்தயம் கட்டியிருந்தீர்கள்?"

காஸ்டன் சிரித்தார். "ஆமாம்."

லாரா அவரை நோக்கிக் குனிந்தாள். "காஸ்டன்..."

"சொல்லுங்கள்."

"என் குழுவைச் சேர்ந்த யாருமே நான் வெற்றியடைய மாட்டேனென்று பந்தயம் கட்டியது கிடையாது. நீங்கள் கட்டியிருக்கிறீர்கள். உங்களை இந்த நிமிடமே டிஸ்மிஸ் செய்கிறேன்."

அவர் அதிர்ச்சியில் வாயைப் பிளந்து உட்கார்ந்திருக்க, லாரா வேகமாய் வெளியேறினாள்.

22

து ஒரு திங்கட்கிழமை. வழக்கம் போல, வேலை நடக்கும் இடத்துக்குச் சென்றாள் லாரா. செல்லும்போதே ஏதோ கோளாறு என்று அவள் உள்ளுணர்வு சொல்லியது. என்ன கோளாறு என்று உடனேயே புரிந்துவிட்டது. நிசப்தம்.

துளை போடும் கருவிகளோ சம்மட்டினோ வேலை செய்யும் சத்தம் எதுவும் கேட்கவில்லை.

கட்டிட இடத்தை அடைந்தாள். தன் கண்களையே நம்ப முடியவில்லை.

தொழிலாளிகள் தங்கள் தங்கள் கருவிகளை எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள், ஃபோர் மேனும் தன் பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

லாரா அவனிடம் விரைந்தாள். "என்ன ஆயிற்று? மணி! ஏழு தானே ஆகிறது?"

"என் ஆட்கள் வேலை செய்ய மாட்டார்கள்." என்றான் அவன்.

"என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?"

"ஒரு புகார் வந்திருக்கிறது, மிஸ்"

"என்ன புகார்?"

"வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவனை நீங்கள் கன்னத்தில் அறைந்தீர்களா?"

"எது?"

உடனே ஞாபகம் வரவில்லை. பிறகு வந்தது, "ஆமாம். அவனுக்கு அது வேண்டியது தான். அவனை வேலையிலிருந்து நிறுத்திவிட்டேன்."

"உங்கள் கீழே வேலை செய்யும் தொழிலாளர்களை நீங்கள் பாட்டுக்குக் கன்னத்திலே அடித்துக் கொண்டு போகலாமென்று சர்க்காரில் உங்களுக்கு லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்களா?"

"இருங்கன், இருங்கள்," என்றாள் லாரா, "என்ன நடந்ததென்று சொல்கிறேன். அவன் ஒரு வெஞ்சைக் கீழே தவறவிட்டான். நான் கொஞ்சம் அசந்திருந்தால் என் உயிரே போயிருக்கும். அதனால் என்னை மீறிக் கோபம் வந்துவிட்டது. ஸாரி, ஆனால் அந்த ஆளைத் திரும்ப வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டேன்."

"அவனும் திரும்பி வரமாட்டான்." என்றான் ஃபோர்மன். "நாங்கள் யாருமே வேலைக்கு வரமாட்டோம்."

லாரா அவனை வெறித்து நோக்கினாள். "என்ன தமாஷ் இதெல்லாம்?"

"எங்கள் யூனியனில் இதைத் தமாஷாக எடுத்துக் கொள்ளவில்லை." என்றான் ஃபோர்மன். "வேலை செய்யக் கூடாதென்று எங்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள். நாங்களும் செய்யமாட்டோம்."

"நாம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறோம்."

"அதை நீங்கள் உடைத்து வீட்டீர்கள்." என்றான் ஃபோர்மன். "நீங்கள் ஏதேனும் சொல்வதாக இருந்தால் யூனியன் ஆபீசுக்குப் போய்ச் சொல்லுங்கள்." அவன் போகத் தொடங்கினான்.

"இருங்கள். நான்தான் ஸாரி என்றேனே? நான் - அந்த ஆளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவன் திரும்ப வேலைக்கு வரட்டும். சரிதானே?"

"மிஸ் லாரா, நீங்கள் நிலைமையைச் சரியாய்ப் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. அந்த ஆளுக்குத் திரும்பவும் இந்த வேலை தேவையில்லை. எங்கள் எல்லாருக்குமே வேறு வேலை தயாராய்க் காத்துக் கொண்டிருக்கிறது. இது ரொம்ப பிஸியான நகரம். முதலாளிகள் கொடுக்கிற அறைகளை வாங்கிக் கொண்டாவது வேலை பார்க்க வேண்டுமென்று எங்களுக்குத் தலையெழுத்து ஒன்றுமில்லை. அவ்வளவு பிஸி நாங்கள்."

அவன் போவதைப் பார்த்தவாறு லாரா அதிர்ச்சியுடன் நின்றாள். இப்படி ஒரு பயங்கரத்தை அவள் எதிர்பார்க்கவே யில்லை.

வேகவேகமாகத் தன் ஆபீசுக்குச் சென்றாள் - ஹோவார்டிடம் விவரத்தைச் சொல்வதற்காக...

அவள் பேச ஆரம்பிக்கும் முன்பே அவன், "தெரியும். இப்போதுதான் யூனியன் ஆபீசுடன் டெலிபோனில் பேசினேன்." என்றான்.

"என்ன சொன்னார்கள்?" என்றாள் லாரா கவலையுடன்.

"அடுத்த மாதம் இதைப் பற்றி விசாரணை செய்யப் போகிறார்களாம்."

லாராவின் முகத்தில் கலவரம் பரவியது. "அடுத்த மாதமா? இரண்டு மாதத்துக்குள் கட்டிடத்தை நாம் முடித்தாக வேண்டுமே?"

"அதையும் அவர்களிடம் சொன்னேன்."

"அதற்கு என்ன சொல்கிறார்கள்?"

"அது எங்கள் பிரசினையல்ல என்கிறார்கள்."

பொத்தென்று சோபாவில் விழுந்தாள் லாரா. "ஐயோ கடவுளே! இப்போது என்ன செய்வது?"

"எனக்கும் புரியவில்லை."

"பாங்க்காரர்களை வேண்டுமானால் அணுகி..." என்றவள் ஹோவார்டின் முகத்தைப் பார்த்ததும், "அது சரிப்படாதுதான்." என்றாள். சட்டென்று அவள் முகம் பிரகாசம் அடைந்தது. "ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது. வேறொரு கட்டிடத் தொழிலாளர் குழுவை அமர்த்தி..."

"லாரா, யூனியனில் மெம்பராக உள்ள எந்தத் தொழிலாளியும் நம் கட்டிடத்தைத் தொடக்கூட மாட்டான்."

"அந்த ராஸ்கலை அன்றைக்கே நான் கொன்றிருக்க வேண்டும்!"

"ஆமாம், ஆமாம். அப்படிச் செய்திருந்தால் எல்லாப் பிரசினையும் தீர்ந்திருக்கும்." என்றான் ஹோவார்டு கசப்புடன்.

லாரா எழுந்து கொண்டு அறையின் குறுக்கும் தெடுக்கும் நடக்கலானாள். "நம் வக்கீல் காஸ்டனைக் கேட்டால் யோசனை சொல்வார்." என்றவளுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. "அதுவும் சாத்தியமில்லை. அவரைத்தான் நான் டிஸ்மிஸ் பண்ணி விட்டேனே?"

"அதைப்பற்றி இப்போது என்ன?"

ஹோவார்டு - தன் எண்ணத்தை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான். "இந்தத் தொழிலாளர் சங்க சமாசாரங்களுக்கென்றே சில வக்கீல்கள் இருக்கிறார்கள். எங்கே என்ன சொன்னால் எதைச் சரி செய்யலாம் என்ற சூட்சுமம் தெரிந்தவர்கள். அவர்களில் யாரேனும்..."

"அருமையான ஐடியா! அதுவும் கிடுகிடுவென்று வேலை செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும்... உங்களுக்கு அந்த மாதிரி யாரையாவது தெரியுமா?"

"தெரியாது. ஆனால் நான் காஸ்டனுடன் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபோது அந்த மாதிரி ஒரு நபரைப் பற்றிச் சொன்னார். பெயர் கூட... மார்ட்டின். பால் மார்ட்டின்..."

"யார் அந்த ஆள்?"

"நிச்சயமாய்த் தெரியாது. ஆனால் ஏதோ யூனியன் பிரசினைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அந்த நபரின் பெயர் அடிபட்டது."

"எந்த நிறுவனத்தில் அவர் வேலை செய்கிறாரென்று தெரியுமா?"

"தெரியாது."

பஸ்ஸரை அழுத்தித் தன் செக்ரட்டரியைக் கூப்பிட்டாள் லாரா. "கேத்தி, பால் மார்ட்டின் என்று ஒரு வக்கீல்... அவருடைய விலாசத்தைக் கண்டுபிடி."

ஹோவார்டு குறுக்கிட்டு, "முதலில் அவர் டெலிபோன் நம்பரைத் தெரிந்துகொண்டு, எப்போது வரலாம் என்று கேட்டுக் கொள்ளேன்."

"அதற்கெல்லாம் அவகாசம் இல்லை, எப்போது நான் வரட்டும் என்று கேட்டுக் கொண்டு கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க - என்னால் முடியாது. இன்றைக்கே அவரைப் போய்ப் பார்க்கப் போகிறேன். அவரால் நமக்கு உதவி செய்ய முடித்தால் ரொம்ப நல்லது. இல்லையென்றால் வேறென்ன வழி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்." என்றாள் லாரா.

வெளியே அப்படிச் சொன்னாளே தவிர, உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்: "வேறு வழியா? எதுவுமே கிடைப்பாது!"

வால் ஸ்ட்ரீட் கட்டிடமொன்றின் இருபத்தைந்தாவது மாடியில் இருந்தது பால் மார்ட்டினின் அலுவலகம். கதவின் மீது, ‘பால் மார்ட்டின், வழக்கறிஞர்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

லாரா நின்று நிதானித்து ஒரு மூச்சு விட்டுக் கொண்டாள். பிறகு உள்ளே நுழைந்தாள். வரவேற்பு அறை அவள் எதிர்பார்த்திருந்ததைவிடச் சின்னதாக இருந்தது. ஒரு பழைய மேஜையின் பின்னே பெண்ணொருத்தி உட்கார்ந்திருந்தாள்.

"குட் மார்னிங். உங்களுக்கு என்ன வேண்டும்?"

"மிஸ்டர் மார்ட்டினைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்." என்றாள் லாரா.

"பார்க்க வருவதாக அவரிடம் சொல்லியிருக்கிறீர்களா?"

"ஆமாம்," என்றாள் லாரா. விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருக்க இதுவல்ல நேரம்.

"உங்கள் பெயர்?"

"கேமரான் - லாரா கேமரான்."

செக்ரட்டரி அவளைப் புதிராகப் பார்த்துவிட்டு, "ஒரு நிமிஷம் இருங்கள். மிஸ்டர் மார்ட்டினைக் கேட்டு வந்து சொல்கிறேன்." என்று கூறிவிட்டு, எழுந்து போய் உள்ளே மறைந்தாள்.

எப்படி யாவது அவரை நான் பார்த்தாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் லாரா.

ஒரு நிமிடத்துக்கெல்லாம் செக்ரட்டரி திரும்பி வந்து, "மிஸ்டர் மார்ட்டின் உங்களை வரச் சொன்னார்." என்றாள்.

லாரா தன் நிம்மதிப் பெருமூச்சை மறைத்துக் கொண்டாள். "தாங்க் யூ."

அலுவலகத்தின் உள்ளே சென்றாள்.

மார்ட்டி னின் அறை சிறியதாகவும் எளிமையாகவும் இருந்தது. ஒரு மேஜை, இரண்டு சோபா, ஒரு டீப்பாய், ஒன்றிரண்டு நாற்காலிகள் - அவ்வளவுதான், ‘சக்தி வாய்ந்த நபரின் கோட்டை மாதிரி தெரியவில்லையே.’ லாரா நினைத்து கொண்டாள்.

மேஜையின் பின்னே உட்கார்ந்திருந்த நபருக்கு அறுபது வயதிருக்கும். செதுக்கினாற் போன்ற முகம், கழுகு மூக்கு. நரைத்த தலை, விலங்குகளிடம் இருப்பது போன்ற ஒரு பலம் அவரிடம் பரவியிருப்பதைப் போல் தோன்றியது. கர்நாடகமான பழுப்பு நிறக் கோட்டும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தார். தாழ்ந்த குரலில் பேசினார். ஆனால் எதிராளியைக் கேட்க வைக்கும்படியான குரல்.

"பார்க்க வருவதாக என்னிடம் சொல்லியிருப்பதாக என் செக்ரட்டரியிடம் சொன்னீர்களாமே?"

"ஸாரி," என்றாள் லாரா. "உங்களைப் பார்த்தாக வேண்டியிருந்தது. ரொம்ப அவசரமான விஷயம். அதனால் அப்படிச் சொன்னேன்."

"உட்காருங்கள் மிஸ்"

"கேமரான். லாரா கேமரான்." என்று தெரிவித்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்தாள்.

"என்ன வேண்டும் உங்களுக்கு?"

லாரா மீண்டும் ஒருமுறை மூச்சை நிதானப்படுத்திக் கொண்டாள். "ஒரு சின்னப் பிரச்னை எனக்கு," என்றாள். இருபத்து நாலு மாடிகள் கொண்ட ஒரு கட்டிடம் எலும்புக் ஈடாகப் பாதியில் நிற்பது சின்னப் பிரச்சினையா என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள். "ஒரு கட்டிடம் சம்பந்தமான பிரச்சினை."

"என்ன அதற்கு?"

"நான் ரியல் எஸ்டேட் பிளஸினஸ் செய்கிறேன், மிஸ்டர் மார்ட்டின். நகரத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு கட்டிடம் கட்டிவருகிறேன். அது பாதி முடிந்திருக்கிறது, இப்போது பார்த்து யூனியனுடன் ஒரு பிரசினை..."

எதுவும் சொல்லாமல் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அவள் சொல்வதை.

லாரா படபடப்பாகச் சொன்னான்: "ஏதோ கோபத்தில் என்னை மறந்து ஒரு தொழிலாளியை அறைந்து விட்டேன். அதற்காக யூனியனில் ஸ்டிரைக் அறிவித்திருக்கிறார்கள்."

அவளைத் திகைப்புடன் கூர்ந்து நோக்கினார் மார்ட்டின், "மிஸ் லாரா, இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? புரியவில்லையே?"

"இந்த விஷயத்தில் உங்களால் உதவி செய்ய முடியும் என்று சொன்னார்கள்."

"யாரோ தப்பாய்ச் சொல்லியிருக்கிறார்கள். நான் ஒரு சாதாரன வக்கீல், கட்டிடங்களுடனும் தொழிற்சங்கங்களுடனும் எனக்கு எந்தச் சம்பந்தமும் கிடையாது."

லாரா இடிந்து போனாள். "வந்து... நீங்கள். உங்களால் எதுவும் செய்ய முடியாதா?"

உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து மேஜை மீது வைத்தார் அவர் - எழுந்து கொள்ளப் போகிறவர் போல. "உங்களுக்கு இரண்டு யோசனை வேண்டுமானால் சொல்கிறேன். தொழிற்சங்க விஷயங்களில் அனுபவ முள்ள ஒரு லாயரைப் பிடியுங்கள். அவர் மூலம் யூனியன் மீது கோர்ட்டில் வழக்குப் போடுங்கள்."

"அதற்கு நேரமில்லை. குறிப்பிட்ட கெடுவுக்குள் கட்டிடத்தை நான் முடித்தாக வேண்டும். சரி, இரண்டாவது யோசனை என்ன?"

"இந்தக் கட்டிட பிஸினஸை விட்டுப் போய்விடுங்கள்." அவருடைய கண்கள் அவள் மார்பின் மீது குத்திட்டு நின்றன. "அதற்கான தகுதி உங்களிடம் கிடையாது."

"என்ன?"

"ரியல் எஸ்டேட் பிஸினஸில் பெண்களுக்கு இடமில்லை."

"அப்படி யானால் பெண்களின் இடம்தான் என்ன?" என்றாள் லாரா கோபமாக. "கர்ப்பமாவதும் சமையலறையும் தானா?"

"ஏறத்தாழ அப்படித்தான்," என்று கூறிப் புன்னகை செய்தார் அவர்.

லாரா சட்டென்று எழுந்து கொண்டாள். அதற்கு மேல் தன் கோபத்தை அடக்க அவளால் முடியவில்லை. "நீங்கள் காட்டு மிராண்டிகளின் வம்சத்தில் வந்தவர் போலிருக்கிறது. உங்களுக்கு ஒரு செய்தி தெரியாது. இப்போது பெண்கள் முன்னைவிடச் சுதந்திரமானவர்கள்."

மார்ட்டின் தலையை அசைத்தார். "தப்பு. முன்னைவிட அதிகமாகச் சத்தம் போடுகிறார்கள். அவ்வளவுதான்."

"குட் பை மிஸ்டர் மார்ட்டின், உங்களுடைய பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக ரொம்ப ஸாரி," என்று சொல்லிவிட்டு கதவை மடேலென்று சாத்திக் கொண்டு வெளியேறினாள் லாரா. வெளியே வந்து சிறிது நின்றாள். ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது, இங்கே வந்தது தப்பு என்று எண்ணிக் கொண்டாள்.

இறுதியாக ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கிறோம். இத்தனை வருடங்களாகப் பாடுபட்டுத் திரட்டிய அத்தனையையும் இப்போது பணயம் வைத்து இழந்தாகி விட்டது. அதுவும் மின்னல் போல ஒரே விநாடியில்.

இனி யாரிடமும் போக முடியாது. எந்த இடத்துக்கும் செல்ல முடியாது.

எல்லாம் முடிந்துவிட்டது.

23

ழை பெய்து தெருக்கள் குளிரெடுத்திருந்தன. லாரா மெளனமாக நடந்தாள்.

சில்லென்று ஐஸ் கட்டி போல உடலைக் குத்தும் குளிரோ சூழ்நிலைகளோ அவளுக்குத் துளியும் உறைக்க வில்லை. தலை மீது விழுந்து விட்ட பயங்கரமான ஆபத்தொன்றே அவள் மனத்தை நிறைத்திருந்தது. ஹோவார்டு கொடுத்த எச்சரிக்கைகள் அவள் காதில் ஒலித்தவாறிருந்தன, ‘நீ ஒருபுறம் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறாய். மறுபுறம் அவற்றின் மீது கடன் வாங்கிக் கொண்டே போகிறாய். இது பிரமிட் கோபுரம் போல. ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பிரமிட் சரிந்து விழுந்துவிடும்.

விழுந்துவிட்டது.

சிகாகோவில் உள்ள பாங்க்குகள் அங்குள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யும், இங்கே புதிய கட்டிடத்தில் முதலீடு செய்துள்ள பணம் மொத்தத்தையும் அவள் இழப்பாள்.

அடியைப் பிடிடா என்று மறுபடியும் முதலிலேயிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

"பாவம் ஹோவார்டு" என்று எண்ணிக் கொண்டாள். ‘அவர் என் கனவுகளில் நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையை நாசம் செய்துவிட்டேன்...’

மழை நின்றுவிட்டது. வானம் தெளிவடையத் தொடங்கியது. சூரியனின் மஞ்சள் கிரணமொன்று மேகங்களுக் கிடையேயிருந்து எட்டிப் பார்க்கப் போராடிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் லாராவுக்கு உணர்வு வந்தது. இது விடியற்காலை!

அப்படியானால்... ராத்திரி பூரா அவள் நடந்த வண்ணமே இருந்திருக்கிறாள்!

சுற்றுமுற்றும் பார்த்தாள். தான் எங்கே வந்திருக்கிறோம் என்பதை முதல் தடவையாக ஆராய்ந்தாள்.

அந்தப் பாழாய்ப் போன கட்டிடம் இருக்கும் தெருவுக்குப் பக்கமாக வந்திருக்கிறோம் என்று தெரிந்தது...

"கடைசி முறையாக அதை ஒரு தரம் பார்ப்போம்" என்று விரக்தியுடன் எண்ணிக் கொண்டாள்.

ஒரு தெருதான் கடந்திருப்பாள். அந்த ஓசை காதில் விழுந்தது: துளை போடும் யந்திரங்களும் சம்மட்டிகளும் சிமெட்டிக் கலவை தயாரிக்கும் உருளைகளும் போடும் ஒசை!

காதைத் துளைத்தது சத்தம்.

அதைச் செவிமடுத்தபடி ஒரு வினாடி லாரா நின்றாள். மறுவினாடி கட்டிடத்தை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

கட்டிடத்தை அடைந்தவள், நின்றாள். தான் காண்பதை நம்ப முடியாமல் நின்றாள்.

தொழிலாளர்கள் அவ்வளவு பேரும் வந்திருந்தார்கள். பரபரவென்று வேலை நடந்து கொண்டிருந்தது.

ஃபோர்மன் அவளை நோக்கிப் புன்னகையுடன் உந்தான். "குட் மார்னிங் மிஸ் லாரா," என்றான்.

லாராவுக்குக் குரலே எழும்பவில்லை. பிறகு திக்கித் திணறி. "என்ன... என்ன நேர்ந்தது? உங்கள் ஆட்கள் வேலை செய்யக் கூடாதென்று யூனியனில்..."

அவன் அசடு வழியச் சிரித்தான், "ஏதோ ஒரு சின்னத் தப்பெண்ணம், மிஸ், லாரா. அவன் வெஞ்சைக் கீழே தவற விட்டது தப்புதானே? உங்கள் மீது விழுந்திருந்தால் உயிர் போயிருக்குமே."

லாரா மிடறு விழுங்கினாள். "அவன். அந்த ஆள்..."

"அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவன் போய் விட்டான். இனிமேல் அந்த மாதிரி எதுவும் நேராது. நேரம் தவறாமல் ஒழுங்காக வேலைக்கு வந்துவிடுவோம்."

எல்லாம் கனவில் நடக்கிற மாதிரி இருந்தது லாராவுக்கு. கட்டிடத்தை மொய்த்துக் கொண்டு வேலை பார்க்கும் தொழிலாளிகளை நோக்கியபடி நின்றாள்.

எல்லாம் திரும்பிக் கிடைத்து விட்டன. அத்தனையும். காரணம்-

பால் மார்ட்டின்...

அலுவலகத்துக்குத் திரும்பியவுடனே மார்ட்டினுக்குப் போன் செய்தாள் லாரா.

மார்ட்டினின் செக்ரட்டரி, "ஸாரி, மிஸ்டர் மார்ட்டின் இல்லை." என்றாள்.

"வந்ததும் கொஞ்சம் பேசச் சொல்கிறீர்களா, ப்ளீஸ்." என்று கூறித் தன் டெலிபோன் எண்ணைச் சொன்னாள்.

பிற்பகல் மூன்று மணி ஆயிற்று. மார்ட்டினிடமிருந்து போன் எதுவும் வரவில்லை, மறுபடியும் கூப்பிட்டாள்.

"ஸாரி, மிஸ்டர் மார்ட்டின் இல்லை," என்றே இப்போதும் பதில் வந்தது.

அதன் பிறகும் மார்ட்டினிடமிருந்து போன் வரவில்லை.

ஐந்து மணிக்கு நேரே மார்ட்டினின் அலுவலகத்துக்கே சென்றாள்.

செக்ரட்டரியிடம், "மிஸ் லாரா கேமரான் அவரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்" என்றாள்.

செக்ரட்டரியின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. "வந்து. இருங்கள், பார்க்கிறேன்" என்றாள்.

அவன் பின்னாலேயே லாராவும் உள்ளே நுழைந்தான். மார்ட்டின் நிமிர்ந்து பார்த்தார். "என்ன மிஸ் லாரா, என்ன வேண்டும் உங்களுக்கு?" என்றார். அவர் குரலில் நட்பும் தெரியவில்லை. நட்பின்மையும் தெரியவில்லை.

"உங்களுக்கு நன்றி சொல்வதற்காக வந்தேன்."

"நன்றியா? எதற்கு?"

"வந்து... யூனியனில் சொல்லிச் சரிபண்ணி விட்டீர்களே, அதற்கு."

அவர் சிடுசிடுத்தார். "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை."

"எல்லாத் தொழிலாளிகளும் இன்று வேலைக்குத் திரும்பிவிட்டார்கள். வேலை அற்புதமாய் நடக்கிறது. குறித்த நேரப்படி கட்டிடம் முடிந்து விடும்."

"நல்லது. கங்கிராஜுலேஷன்ஸ்."

"ஃபீஸ் என்ன தரவேண்டும் என்று பில் அனுப்பினால்..."

"மிஸ். லாரா, நீங்கள் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்னை தீர்ந்தது பற்றி எனக்குச் சந்தோஷம்தான். ஆனால் அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை."

"அதனால் என்ன? பரவாயில்லை,"

லாரா வெளியேறிய ஒரு நிமிடம் கழித்து மார்ட்டினின் செக்ரட்டரி உள்ளே வந்தாள். "தங்களிடம் தரச் சொல்லி மிஸ் லாரா இதைக் கொடுத்தார்." என்று கூறி ஒரு சின்னப் பாக்கெட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

பளிச்சென்ற ஒரு ரிப்பன் சுற்றியிருந்தது அந்தப் பாக்கெட்டை.

ஒருவிதக் குறுகுறுப்புடன் அதைப் பிரித்துப் பார்த்தார்.

உள்ளே, கவசமணிந்த ஒரு போர்வீரனின் பதுமை இருந்தது. வெள்ளியில் செய்தது. உருவிய வாளுடன் போர் புரியாத் தயாராக இருக்கும் உருவம்.

அன்று என்ன சொன்னான்? ‘காட்டு மிராண்டி’ என்று, அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறாள். இதன் மூலம்.

இத்தாலியில், சிஸிலி என்ற இடத்தில், மாஃபியா என்று பயங்கரப் புரட்சிக்காரர்களின் இயக்கம் பற்றியும், தன் பாட்டனாரும் தந்தையும் அதில் ஈடுபட்டிருந்த காலமும் மார்ட்டினுக்கு நினைவுக்கு வந்தன.

கதை கதையாகப் பல விஷயங்களைச் சொல்லியிருந்தார்கள் அவர்கள். சென்ற நூற்றாண்டு -

1879-ஆம் ஆண்டு, சிஸிலியில் கிடேலினா என்ற இடம்...

மார்ட்டினின் பாட்டனார். கிஸ்ஸெப் என்பவர் தன் மனைவி குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கொஞ்சம் நிலத்தை வைத்து விவசாயம் செய்து வந்தார் அவர். கொடுமையான, வறண்ட பூமி அது.

சுற்றுவட்டாரத்தில் பெரும் பெரும் பண்ணையார்கள் அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொழுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் டான்விடா என்ற பண்ணைக்காரரும் ஒருவர்.

ஒருநாள் அவருடைய ஆள் ஒருவன் கிஸ்ஸெப்பிடம் வந்தான். "உபயோகமில்லாத இந்த நிலத்தில் எதற்காக உயிரை விடுகிறாய்? இதனால் உனக்கு ஒரு லாபமும் வரப் போவதில்லை." என்று பேச்சை ஆரம்பித்தான்.

"என்னைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். என் வாழ்நாள் பூரா இங்கேதான் விவசாயம் செய்து வருகிறேன்." என்றார் கிஸ்ஸெப்.

"எங்கள் எல்லோருக்கும் உன்னைப் பற்றிக் கவலையாக இருக்கிறது," என்றான் அவன். "டான் விட்டோவிடம் கொஞ்சம் நல்ல நிலம் இருக்கிறது. அதை உனக்குக் குத்தகைக்கு விடுகிறேன் என்கிறார்."

"டான் விட்டோவைப் பற்றியும் அவருடைய குத்தகை சமாசாரத்தைப் பற்றியும் எனக்கு நன்றாய்த் தெரியும்!" என்று கிஸ்ஸெப் சீறினார். "குத்தகை எடுத்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்தால், விளைச்சலில் முக்கால் பகுதியை அவரே எடுத்துக் கொள்வார். விதை தான்யம் கொடுத்தற்காக நூற்றுக்கு நூறு வட்டி வாங்குவார். கடைசியில் எனக்குக் கால் காசு மிஞ்சாது. சில முட்டாள்கள் அவரிடம் போய் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பண்ணையாரிடம் ‘உங்கள் உதவி தேவையில்லை, ரொம்பத் தாங்க்ஸ்’ என்று தான் சொன்னதாகச் சொல்லுங்கள்"

"இது தான் உன் முடிவா? பண்ணையாருக்கு இது பிடிக்கப் போவதில்லை."

"என்ன, பயமுறுத்துகிறாயா?"

"சே, சே அப்படி யெல்லாம் இல்லை. நான் என்ன சொல்கிறேன் என்றால்..."

"ஒன்றும் சொல்ல வேண்டாம். வெளியே போ." என்றார் கிஸ்ஸெப்.

அந்த ஆள் அவரை நீண்ட நேரம் நோக்கியபின், "நீ ரொம்பப் பிடிவாதக்காரன்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

கிஸ்ஸெப்பின் மகன் - சிறுவன் ஐவோ - "யாரப்பா அந்த ஆள்?" என்று கேட்டான்.

"ஒரு பெரிய பண்ணைக்காரரின் ஆள்."

"அவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை." என்றான் ஐவோ.

"எனக்கும்தான்," என்றார் கிஸ்ஸெப்

அடுத்த நாள் இரவு. கிஸ்ஸெப்பின் பயிர்கள் கொளுத்தப் பட்டன. ஆடு மாடுகள் கொஞ்சம் வைத்திருந்தார். அவை காணாமற் போயின.

அப்போதுதான் கிஸ்ஸெப் இரண்டாவது தவறு செய்தார். போலீசில் போய்ப் புகார் செய்தார்.

"எனக்குப் பாதுகாப்பு வேண்டும்." என்றார். போலீஸ் அதிகாரி அவரை விசித்திரமாகப் பார்த்து, இதற்குத் தானே நாங்கள் இருக்கிறோம்! உங்கள் பிரச்னை என்ன?" என்றார்.

"நேற்றிரவு டான் விட்டோவின் ஆட்கள் வந்து என் பயிர்களைக் கொளுத்தி, என் ஆடு மாடுகளைத் திருடிக் கொண்டு போய்விட்டார்கள்."

"ரொம்ப சீரியஸ் குற்றச்சாட்டாக இருக்கிறதே? ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா?"

"அவருடைய ஆள் வந்து என்னைப் பயமுறுத்தினான்."

"உங்கள் பயிரைக் கொளுத்தப் போகிறோம், ஆடு மாடுகளைத் திருடப் போகிறோம் என்று சொன்னானா?"

"இல்லை"

"பின்னே என்ன சொன்னான்?"

"நான் எனக்குச் சொந்தமான நிலத்தை விட்டு விட்டு, டான் விட்டோவிடம் நிலம் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னான்."

"நீங்கள் மாட்டேன் என்றீர்களாக்கும்?"

"பின்னே?"

"இதோ பாரய்யா, டான் விட்டோ ரொம்பப் பெரிய மனிதர். அவரிடம் இருக்கும் அருமையான நிலத்தில் உங்களுக்கு ஒரு பங்கு தருகிறேன் என்று சொன்னதற்காக அவரைக் கைது செய்யச் சொல்கிறீர்களா?"

"எனக்குப் பாதுகாப்புக் கொடுங்கள் என்று கேட்கிறேன்." என்றார் கிஸ்ஸெப்.

"என்னை என்னுடைய நிலத்திலிருந்து யாராலும் விரட்ட முடியாது."

"உங்கள் விவசாயத்தில் எங்களுக்கு நிறைய அனுதாபம் இருக்கிறது. எங்களால் முடிந்ததைக் கட்டாயம் செய்கிறோம்." என்றார் போலீஸ் அதிகாரி.

"ரொம்ப நன்றி."

"கவலைப்படாமல் போங்கள்."

அடுத்த நாள் - சிறுவன் ஐவோ - டவுனுக்குப் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவன். ஆறு பேர் குதிரை மீது வருவதைக் கண்டான். அவர்கள் பண்ணைக்குச் சென்று, பண்ணை வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

சில நிமிடங்களுக்கெல்லாம் அவர்கள் தன் தந்தையை வெளியே இழுத்து வருவதைப் பார்த்தான் ஐவோ...

குதிரைக்காரன் ஒருவன் துப்பாக்கியை வெளியிலெடுத்தான், கிஸ்ஸெப்பின் முன் நீட்டினான். "உயிர் மேல் ஆசை இருந்தால் இப்பவே ஒட்டம் பிடி! போனால் போகிறதென்று ஒரு சந்தர்ப்பம் தருகிறேன்."

"மாட்டேன்! இது என் நிலம்" என்றார் அவர்.

கிஸ்ஸெப்பின் காலின் நேர் கீழே தரையைப் பார்த்துச் சுட்டான் அவன். பார்த்துக் கொண்டிருந்த ஐவோவுக்கு உடம்பு நடுங்கியது. "ஓடு"

கிஸ்ஸெப் ஓடத் தொடங்கினார்.

அவர்கள் குதிரை மீது ஏறிக் கொண்டு அவரைச் சூழ்ந்துகொண்டு கூச்சலிட்டார்கள்.

கண்முன்னே நடக்கும் அந்த அக்கிரம அட்டூழியத்தைப் பதைக்கப் பதைக்கப் பார்த்தபடி ஒளிந்து கொண்டிருந்தான் ஐவோ.

24

சிறுவன் ஐவோ ஒளிந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்த அக்கிரமங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருந்தன.

பண்ணையார் டான் விட்டொவின் ஆட்கள் அவன் அப்பாவை ஒடும்படி சொல்வார்கள். கிஸ்ஸெப் வயலின் குறுக்காக ஒடுவார். உயிர் தப்பி விடலாமென்ற எண்ணத்துடன், ஆனால் அந்தக் குறுகிய மண்பாதையின் மறு கோடியை அடையும் சமயம் ஒருவன் குதிரைமீது வேகமாகச் சென்று அவரைக் கீழே தள்ளி விடுவான். மறுபடியும் ஓடச் சொல்லி, மறுபடியும் கீழே தள்ளி.

கிஸ்ஸெப்பின் உடம்பெல்லாம் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவரது வேகம் குறைந்து தள்ளாடித் தள்ளாடி ஒடலானார்.

போதும் வேடிக்கை என்று அந்த ஆட்களுக்குத் தோன்றியது போலும். ஒருவன் கிஸ்ஸெப்பின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி, கிணற்றை நோக்கி இழுத்து வந்தான்.

"ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" மூச்சுத் திணற அவர் கேட்டார். "நான் என்ன செய்தேன்?"

"போலீசில் போய்ச் சொன்னாயே? சொல்லலாமா?"

ஒருவன் அவருடைய பாண்ட்டை உருவி எறிந்தான். கையில் கத்தியை எடுத்தான். மற்றவர்கள் அவரைத் திமிறாமல் பிடித்துக் கொண்டார்கள்.

"இது உனக்கு ஒரு பாடம்!"

கிஸ்ஸெப் அலறினார். "என்னை விட்டு விடுங்கள்! நான் செய்தது தப்பு! ஸாரி"

"ஸாரியா? உன் பெண்டாட்டியிடம் அதைச் சொல்லு."

ஒருவன் கிஸ்ஸெப்பின் தொடையிடுக்கில் கத்தியால் கீறி அறுத்தான்.

வீறிட்ட அவருடைய அலறல்கள் வானைக் கிழித்தது.

"இனிமேல் இது உனக்குத் தேவைப்படாது" என்றான் ஒருவன். அறுத்த சதையை அவருடைய வாயில் அடைத்தான். அவருக்கு மூச்சுத் திணறியது. துப்பினார்.

அந்த அடியாட்களுக்குக் கேப்டன் போல் இருந்தவன் சிரித்தான், "பாவம், அந்த ஆளுக்கு அது ருசியாரில்லை." பிறகு அவர்களுடைய மொழியில் ஏதோ கட்டளையிட்டான்.

ஆட்களில் ஒருவன் குதிரையிலிருந்து இறங்கினான். வயலிலிருந்து சில பெரிய கற்களைப் பொறுக்கி எடுத்து வந்தான். உருவியெறிந்த பாண்ட்டை மறுபடி கிஸ்ஸெப்புக்கு மாட்டினான். ரத்தத்தில் சொத சொத்த்திருந்தது அது. பாண்ட்டின் பாக்கெட்டுகளுக்குள் அந்தக் கற்களை நிரப்பினான்.

"போ" என்றான் கேப்டன்.

கிஸ்ஸெப்பினால் நடக்க முடியவில்லை. ஆகவே அவரைத் தூக்கிக் கொண்டு கிணற்றின் விளிம்புக்குச் சென்றார்கள்.

"ஜோராய் நீச்சல் அடி" அவரைத் தூக்கிக் கிணற்றுக்குள் போட்டார்கள்.

"அந்தக் கிணற்றுத் தண்ணீர் மூத்திர நாற்றம் அடிக்கும்." என்று சிரித்தான் ஒருவன்.

இன்னொருவனும் சிரித்து, "பரவாயில்லை. இந்த ஊர் ஜனங்களுக்கு வித்தியாசம் தெரியாது"

சிறிது நேரம் அவர்கள் நின்றிருந்தார்கள். கள பள வென்று சில நிமிடம் சத்தம் கேட்டது. பிறகு ஒசை நின்றுவிட்டது.

அவர்கள் குதிரை மீது ஏறிக் கொண்டார்கள். கிஸ்ஸெப்பின் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.

ஐவோ ஒரு புதரின் பின்னே மறைந்து கொண்டு தூரத்திலேயே இருந்தான். அந்தப் பத்து வயதுச் சிறுவனின் கண்ணெதிரே எவ்வளவு பயங்கரம்! அவர்கள் போனதும்.

கிணற்றை நோக்கி ஓடினான். எட்டிப் பார்த்தான். கிசுகிசுத்த குரலில் "அப்பா... அப்பா..." என்று கூப்பிட்டான்.

கிணறு ரொம்ப ஆழமானது. எந்தச் சத்தமும் அவனுக்குக் கேட்கவில்லை.

அடியாட்களும் அவர்களுடைய கேப்டனும் கிஸ்ஸெப்பின் கதையை முடித்துவிட்டு, அவருடைய வீட்டுக்குப் போனார்கள்.

கிஸ்ஸெப்பின் மனைவி சமையலறையில் வேலையாக இருந்தாள். அவர்களைப் பார்த்ததும், "என் புருஷன் எங்கே?" என்றாள்.

இளித்தபடி ஒருவன், "தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார்." என்றான்.

இரண்டு பேர் அவளை நெருங்கினார்கள். "நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். அந்த அசிங்கம் பிடித்த ஆளுக்கா பெண்டாட்டியாய் இருக்கணும்?"

"போங்கடா வெளியே" என்று சத்தம் போட்டாள் மரியா - கிஸ்ஸெப்பின் மனைவி.

"என்னம்மா நீ உன் வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளிகளை இப்படியா நடத்துவது?" என்று கூறியபடி ஒருவன் அவளுடைய உடையைக் கிழித்தெறிந்தான். "நீ விதவையாகி விட்டாய். அதற்குத் தகுந்த உடைதான் இனிமேல் நீ உடுத்த வேண்டும். இந்த டிரெஸ் தேவைப்படாது."

"நாயே"

ஸ்டவ்வின் மீது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. சட்டென்று அதை எடுத்து அந்த ஆளின் முகத்தில் வீசினாள் மரியா.

சூடு தாங்க முடியாமல் அவன் "ஐயோ!" என்று அலறினான், துப்பாக்கியை எடுத்து அவளைச் சுட்டுத் தள்ளினான்.

தரையில் விழு முன்பே அவள் உயிர் போய்விட்டது.

கேப்டன் கத்தினான்: "முட்டாள்! இப்படியா செய்வது? முதலில் அவளைக் கற்பழித்துவிட்டு, பிறகல்லவா சுட்டிருக்க வேண்டும்? சரி. சரி. கிளம்புங்கள், டான் விட்டோவிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்."

அரை மணிக்கெல்லாம் அவர்கள் டான் வீட்டோவின் மாளிகையை அடைந்தார்கள்.

"புருஷன் பெண்சாதி இருவரையும் தீர்த்து விட்டோம்." என்று கேப்டன் தெரிவித்தான்.

"பையனை என்ன பண்ணினீர்கள்?"

கேப்டன் ஆச்சரியத்துடன் டான் விட்டோவைப் பார்த்தான், "பையனா? பையனைக் கொல்லும்படி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே?"

"முட்டாள்! அவன் குடும்பத்தைத் தீர்த்துக் கட்டு என்று சொன்னேனே?"

"அவன் சின்னப் பையன்தானே, எஜமான்?"

"பையன்கள் வளர்வார்கள். இளைஞனாசு ஆவார்கள். இளைஞர்கள் பழிக்குப் பழி வாங்க விரும்புவார்கள். பையனையும் கொன்று விடு."

"அப்படியே எஜமான்."

கிஸ்ஸெப்பின் பண்ணையை நோக்கி இரண்டு ஆட்கள் பறந்தார்கள்.

ஐவோவுக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

அப்பா அம்மா இருவரும் கொலை செய்யப்படும் வதைக் கண்ணெதிரே பார்த்து விட்டான்.

உலகத்தில் இனிமேல் எங்கே போக முடியும்... யார் இருக்கிறார்கள்? இல்லை, இருக்கிறார்கள்.

அவனுக்கு உறவினர் ஒருவர் இருக்கிறார். அவனைக் காப்பாற்றக் கூடியவர்.

அவனுடைய சித்தப்பா. நான்ஷியோ என்று பெயர். பாலெர்மோ என்ற ஊரில் இருக்கிறார். ரொம்பத் தூரம்.

உடனே இந்த இடத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்று ஐவோ ஓடிவிடத் தீர்மானித்தான். இல்லாவிட்டால் டான் விட்டோவின் ஆட்கள் வந்து நம்மையும் கொன்று விடுவார்கள். இத்தனை நேரம் நம்மை வந்து பிடிக்காததே ஆச்சரியம்...

ஒரு பையில் அவசர அவசரமாய்க் கொஞ்சம் உணவுப் பண்டங்களை அடைத்துக் கொண்டான். தோளில் மாட்டிக் கொண்டு பண்ணையை விட்டு வெகு துரிதமாய் வெளியேறினான்.

கிராமத்தை விட்டு வெளியூருக்குச் செல்லும் மண் பாதையில் நடக்கலானான். வண்டியோ குதிரையோ வரும் சத்தம் கேட்டால் சட்டென்று மரங்களின் பின்னே ஒளிந்து கொண்டான்.

ஒரு மணி நேரம் நடந்த பின்னர், குதிரையில் சில பேர் வருவது தெரிந்தது. டான் விட்டோவின் ஆட்கள் தன்னைத் தேடி வருகிறார்கள் என்பது புரிந்தது.

ஒளிந்து கொண்டான். மூச்சுக் கூட விடாமல் அடக்கிக் கொண்டான். அவர்கள் போய் வெகு நேரம் கழித்தே வெளியே வந்தான். மறுபடியும் நடக்கத் தொடங்கினான்.

இரவு வந்தது. ஏதோவொரு தோட்டத்தில் படுத்துத் தூங்கினான். காலையில் நடந்தான். வழியில் உள்ள பண்ணைகளில் பழங்களும் பச்சைக் காய்கறிகளும் தின்று பசியாற்றிக் கொண்டு நடந்தான்.

மூன்று நாட்கள் அப்படி நடந்த பிறகு ஒரு சிறிய கிராமம் தென்பட்டது. ஒரு சந்தை நடந்து கொண்டிருந்தது.

ஒரு வண்டிக்காரனிடம் கெஞ்சி, வண்டி பசில் ஏறிக் கொண்டான். பாலெர்மோவுக்குப் பயணமானான்.

சிற்றப்பாவின் வீட்டை ஐவோ அடைந்தபோது நட்ட நடு ராத்திரி.

நகருக்கு வெளியே மிக வசதியான ஒரு பெரிய வீட்டில் நான்ஷியோ வசித்து வந்தார். விஸ்தாரமான பால்கனியும் மொட்டை மாடிகளும் பரந்த தோட்டமும் இருந்தன.

ஐவோ கதவைத் தட்டினான். நீண்ட நேரத்துக்குப் பதில் இல்லை. பிறகு ஒரு கனத்த குரல் கேட்டது: "யாரடா அது இந்த வேளையில்?"

"நான்தான் ஐவோ, சித்தப்பா."

சில நிமிடங்களில் நான்ஷியோ கதவைத் திறந்தார். உயரமும் பருமனுமான மனிதர். நடுத்தர வயது இருக்கும், கூரிய மூக்கு. அடர்த்தியான நரை முடி, நைட் ஷர்ட் அணிந்திருந்தார்.

சிறுவனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார். "ஐவோ! நட்டநடு நிசியில் இங்கே என்ன செய்கிறாய்? உன் அம்மாவும் அப்பாவும் எங்கே?"

"செத்து விட்டார்கள்," ஐவோ விம்மி விம்மி அழுதான்.

"என்னது! செத்து விட்டார்களா? வா, வா, உள்ளே வா முதலில்."

தள்ளாடியபடி உள்ளே போனான் ஐவோ.

"நீ சொல்வது பயங்கரமாக இருக்கிறதே! ஏதாவது விபத்து நேர்ந்ததா?" என்றார் நான்ஷியோ.

அவன் தலையை அசைத்தான். "டான் விட்டோ ஆன் அனுப்பி அவர்களைக் கொலை செய்துவிட்டார்."

"கொலையா? ஏன்?"

"அவன் நிலத்தை அப்பா குத்தகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அப்பா முடியாது என்றார்."

"எதற்காக அப்பாவையும் அம்மாவையும் அவர் கொலை செய்தார்? அவர்கள் அவருக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லையே?"

"தனிப்பட்ட முறையில் அவருக்கு உன் அப்பா அம்மா மீது கோபமில்லை." என்றார் நான்ஷியோ.

ஐவோ அவரை வெறித்து நோக்கினான், "தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லையா? புரியவில்லையே, சித்தப்பா?"

"டான் விட்டோவை எல்லோருக்கும் தெரியும். ஊரில் அவருக்குச் செல்வாக்கு இருக்கிறது. பணமும் அதிகாரமும் இருக்கிறது. உன் அப்பா எதிர்த்து நிற்கிறபோது அவரைச் சும்மா விட்டுவிட்டால், ஊரில் மற்றவர்களும் அவரை எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். அவருடைய மதிப்பு, செல்வாக்கு எல்லாம் போய்விடும். அவரை ஒன்றும் செய்ய முடியாது."

அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஐவோ. "ஒன்றும் செய்ய முடியாதா?"

"இப்போதைக்கு, ஐவோ. இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது சரி. படுத்து நன்றாய்த் தூங்கு ரொம்பக் களைத்திருக்கிறாய்."

பொழுது விடிந்தது.

காலைச் சிற்றுண்டியின் போது, "இது செளகரியமான வீடு. இங்கேயே இருந்துகொண்டு என்னிடம் வேலை பார்க்கிறாயா?" என்று கேட்டார் நான்ஷியோ. மனைவி இறந்து போன பின், தனியாக இருந்து வந்தார் அவர்.

"இருக்கிறேன் சித்தப்பா," என்றான் ஐவோ.

"உன்னைப் போலத் புத்திசாலியான பிள்ளை எனக்குத் தேவையாயிருக்கிறது. பார்க்கிறதுக்கும் ஸ்டிராங் காய் இருக்கிறாய்."

"நான் ஸ்டிராங்தான், சித்தப்பா."

"நல்லது." என்றார் அவர்.

"நீங்கள் என்ன பிஸினஸ் பண்ணுகிறீர்கள், சித்தப்பா?"

நான்ஷியோ புன்னகை செய்தார். "ஏழை எளியவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறேன்."

ஸிஸிலி எங்கிலும் - வறுமை தாண்டவமாடிய இத்தாலியின் மற்றப் பாகங்களிலும் - கறப்புக்காரங்கள் என்று பெயர் பெற்றிருந்த மாஃபியா என்ற இயக்கம் முளைத்துப் பரவியிருந்த காலம் அது. கொடுரமான, யதேச்சாதிகாரமான அரசாங்கத்திடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஏற்பட்ட இயக்கம் அது.

அநீதிகளை அது திருத்தியது. தவறு செய்வோரைத் தானோடித்தது. கொஞ்சம் கொஞ்சமாக வெகு சக்தி வாய்ந்ததாய் வளர்ந்தது. அரசாங்கமே அதைக் கண்டு பயப் படலாயிற்று. வியாபாரிகளும் விவசாயிகளும் அந்த இயக்கத்துக்குக் ‘கப்பம்’ செலுத்தினார்கள்.

‘மாஃபியா’ என்ற பெயர் வந்ததற்கே ஒரு கதை உண்டு. ஓர் இளம் பெண் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப் பாட்டபோது அவள் அன்னை இரவு பூராவும் கதறிக் கொண்டு தெருக்களில் ஒடினாளாம்! ‘மாஃபியா! ‘மாஃபியா’ ‘என் மகளே’ ‘என் மகளே!’

பாலெர்மோ நகரில் நான்ஷியோ ஒரு மாஃபியா தலைவராக இருந்தார். இயக்கத்துக்கு. ஒழுங்காகக் ‘கப்பம்’ வசூலித்தார். கொடுக்காதவர்களைத் தண்டித்தார். தண்டனை பலவகை: கையையோ காலையோ வெட்டி உடுவது உண்டு. அல்லது சித்திரவதை செய்து மெதுவாகச் சாகடிப்பதும் உண்டு.

நான்ஷியோவிடம் வேலை பார்க்கத் தொடங்கினான் ஐவோ.

25

டுத்த பதினைந்து வருடகாலம், ஐவோவுக்குப் பாலெர்மோ ஊர்தான் பள்ளிக்கூடமாக விளங்கியது. சிற்றப்பா நான்ஷியோதான் ஆசிரியராக இருந்தார்.

முதலில் சிற்றப்பாவுக்கு எடு பிடிப்பையனாக வேலை பார்த்தான். பிறகு பணம் வசூல் செய்யும் குமாஸ்தாவாக உயர்ந்தான். இறுதியில் நான்ஷியோவின் நம்பகமான வலது கரமாக ஆனான்.

ஐவோவுக்கு இருபத்தைந்து வயதாயிற்று. உள்ளுரைச் சேர்ந்த ஒரு கொழுக்கு மொழுக்கான பெண்ணை மணந்தான். அவள் பெயர் கார்மெலா, ஒரு வருஷத்துக்கெல்லாம் ஒரு மகன் பிறந்தான். கியான் என்பது அவன் பெயர். சொந்தமாக வீடு கட்டிக் கொண்டு குடும்பத்தோடு குடி புகுந்தான். அவன் சிற்றப்பா இறந்தபோது அவருடைய ‘பதவி’ யை முற்று முழுக்க மேற்கொண்டான். அவரை விடச் சக்தி வாய்ந்தவனாயும் செல்வந்தனாயும் திகழ்த்தான்.

ஆனால் சில வேலைகள் இன்னும் பாக்கி இருக்கிறது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் மனைவியிடம், "மூட்டை முடிச்சுகளைச் கட்டிக் கொண்டு தயாராக இரு. நாம் அமெரிக்காவுக்குப் போகிறோம்." என்றான்.

கார்மெலா ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான். "எதற்காக அமெரிக்காவுக்குப் போகிறோம்?"

கேள்விகள் கேட்பது ஐவோவுக்குப் பிடிக்காது. "நான் சொன்னதைச் செய். இப்போது தான் வெளியே போகிறேன். இரண்டு மூன்று நாளில் திரும்பி வருவேன்."

"ஐவோ... வந்து..."

"மூட்டை கட்டு என்றால் கட்டு."

இரண்டு கறுப்புக் கார்கள் டான் விட்டோவின் ஊரை அடைந்தன. போலீஸ் நிலையத்தின் வாசல் முன் நின்றன.

டான் விட்டோவின் கையாளாக, கிஸ்ஸெப்பைச் சித்திரவதை செய்து கொலை பண்ணிய கேப்டன் மேஜை யடியில் உட்கார்ந்திருந்தான். கதவு திறந்தது. அரை டஜன் ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள். நாகரிகமாக உடை அணிந்து, பணக்காரர்களாகக் காட்சியளித்தார்கள்.

"குட்மார்னிங் ஜென்டில்மென் என்ன வேண்டும் உங்களுக்கு?" என்றார் கேப்டன்.

"உங்களுக்கு உதவி செய்வதற்காக வந்திருக்கிறோம்." என்றான் வந்தவர்களின் தலைவனான ஐவோ, "என்னை உனக்கு நினைவில்லை? கிஸ்ஸெப்பன் மகன் நான்."

கேப்டனின் கண்கள் விரிந்தன. "நீயா... இங்கே என்ன செய்கிறாய்? உனக்கு அபாயம்..."

"உன் பல்லுக்காக நான் வந்திருக்கிறேன்."

"என் பல்லா? என்ன அதற்கு?"

"ஆமாம்," என்று ஐவோ சொல்லிக் கொண்டிருந்தபோதே அவனுடைய ஆட்கள் கேப்டனின் இரண்டு கையையும் முறுக்கிப் பின்னே வளைத்துக் கொண்டார்கள்.

"உன் பல் சரியாகவே இல்லை. ரிப்பேர் பார்க்கத் தான் நான் வந்திருக்கிறேன்." என்றான் ஐவோ. பிறகு துப்பாக்கியை அவன் வாய்க்குள் நுழைத்து, விசையைத் தட்டினான். அவன் இறந்து விழுந்தான். தன் தோழர்களிடம், "போகலாம்," என்றான்.

பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் மூன்று கார்களும் டான் விட்டோவின் வாசலில் போய் நின்றன.

வீட்டுக்கு வெளியே இரண்டு காவல்காரர்கள் நின்றிருந்தனர். ஊர்வலம் போலக் கார்கள் வந்து நிற்பதைக் கண்டு திகைத்தார்கள். கார்கள் நின்றதும் ஐவோ வெளியே வந்தான்.

"குட்மார்னிங். டான் விட்டோ எங்களை வரச் சொல்லியிருக்கிறார்." என்றான்.

ஒரு காவலன் சிடு சிடுத்தான். "எங்களிடம் அவர் ஒன்றும் சொல்லவில்லையே."

அடுத்த வினாடி இரண்டு காவலர்களும் சுட்டு வீழ்த்தப் பட்டார்கள். ஏகப்பட்ட தோட்டாக்கள் நிரப்பப்பட்ட விசித்திரமான துப்பாக்கிகள் அவை. சுட்டதும் காவலர்கள் சின்னாபின்னமாகச் சிதறித் துண்டு துண்டாக விழுந்தார்கள்.

வீட்டுக்குள்ளிருந்த டான் விட்டோவுக்குத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். என்ன நடந்ததென்று புரிந்தது. வேகமாக அறையின் மறு கோடிக்குச் சென்று மேஜை டிராயரைத் திறந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டார்.

"ஃபிராங்க்கோட் அண்ட்டோனியோ! சீக்கிரம் வாருங்கள்"

வெளியே துப்பாக்கி சுடும் சத்தங்கள் மேலும் கேட்டன.

"டான் விட்டோ!" ஒரு குரல் கூப்பிட்டது.

சரேலெனத் திரும்பினார்.

ஐவோ கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தான். "உன் துப்பாக்கியைக் கீழே போடு" என்றான்.

"போடு"

டான் விட்டோ தன் துப்பாக்கியைக் கீழே போட்டார்.

"இதோ பார், உனக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொண்டு போய்ச் சேர்" என்றார்.

"எனக்கு எதுவும் தேவையில்லை." என்றான் ஐவோ. இன்னும் சொல்லப் போனால், உனக்கு நான் ஒன்று நீ திருப்பித் தர வேண்டும். அதைக் கொடுக்கத்தான் வந்தேன்."

"அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நான் மறந்துவிட்டேன்."

"நான் மறக்கத் தயாராயில்லை. நான் யாரென்று உனக்குத் தெரிகிறதா?"

"இல்லை"

"ஐவோ - கிஸ்ஸெப்பின் மகன்."

டான் விட்டோ புருவங்களை நெறித்துக் கொண்டு யோசனை செய்தார். தோளைக் குலுக்கிக் கொண்டு.

எனக்கு எதுவும் நினைவு இல்லை, என்றார்.

"பதினைந்து வருடத்துக்கு முன்னால் நடந்தது. உன் ஆட்கள் என் அப்பாவையும் அம்மாவையும் கொலை செய்தார்கள்."

"அடடா! அப்படியா" என்று டான் விட்டோ ஆச்சரியப்பட்டான்.

"அவர்களைச் சரியானபடி தண்டிக்கிறேன். அவர்களை."

ஐவோ அவரை நெருங்கித் துப்பாக்கிக் கட்டையால் ஒங்கி அடித்தான். ரத்தம் பீரிட்டு அடித்தது.

"வேண்டாம், வேண்டாம். இதற்கெல்லாம் தேவையில்லை. நான்..."

ஐவோ ஒரு கத்தியை எடுத்தான். "டிரௌசரை அவிழ்!"

"வேண்டாம்... என்று டான் விட்டோ அலறினார். "என்ன செய்கிறோம் என்பதை யோசனை பண்ணிச் செய். எனக்குச் சகோதரர்களும், பிள்ளைகளும் இருக்கிறார்கள். எனக்கு ஏதாவது கெடுதல் செய்தால் நீர் எங்கிருந்தாலும் உன்னைக் கண்டுபிடித்து நாயை அடிக்கிற மாதிரி அடித்துப் போடுவார்கள்."

"என்னைக் கண்டுபிடித்தால் தானே! ஊம்! டிரௌசர்!"

ஐவோ அவர் காலடியில் ஒருமுறை சுட்டான். டான் விட்டோ அலறினார்.

"கொஞ்சம் இரு. நான் உதவி செய்கிறேன்." என்று சொல்லிவிட்டு ஐவோ அவருடைய டிரௌசரை உருவ எறிந்தான். பிறகு அண்டர் வேரையும் கழற்றி வீசினான்.

"அப்படியொன்றும் பெரிய விஷயமாக இல்லை: பரவாயில்லை. இருக்கிறவரையில் போதும்."

டான் விட்டோவின் தொடைப் பகுதியைப் பிடித்துச் கத்தியால் ஒரே அறுப்பு அறுத்தான்.

டான் விட்டோ மூர்ச்சையானார்.

அறுத்ததை எடுத்து அவர் வாயில் திணித்தான் ஐவோ. "ஸாரி, உன்னைத் தூக்கிப் போடுவதற்குக் கிணறு எதுவும் அருகில் இல்லை." என்றான். விடைபெறுகிற மாதிரி டான் விட்டோவின் தலையில் ஒரு முறை சுட்டான். வீட்டை விட்டு வெளியேறிக் காரை அடைந்தான். அவனுடைய நண்பர்கள் காந்திருந்தார்கள்.

"போகலாம்," என்றான்.

"அவனுக்குப் பெரிய குடும்பம், ஐவோ. உன்னைத் தேடிக் கொண்டு வருவார்கள்."

"வரட்டும்."

இரண்டு நாள் கழித்து ஐவோ. நியூயார்க்கிற்குக் கப்பலில் பயணமானான். மனைவியுடனும், - மகன் கியானுடனும்.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் வேலை வாய்ப்புக்கள் - பிழைப்பதற்கான சாத்தியங்கள் – கொட்டிக்கிடந்தன. நியூயார்க்கின் ஜனத்தொகையில் ஏராளமான இத்தாலியர்கள் இருந்தார்கள்.

ஐவோவின் சினேகிதர்கள் பலர் ஏற்கெனவே அங்கு குழுமியிருந்தார்கள். எல்லோருமாகத் தங்களுக்குத் தெரிந்த ஒரே தொழிலை நடத்தினார்கள். ‘பாதுகாப்புத்’ தரும் தொழில்.

மாஃபியாவின் நீண்ட கரங்கள் எல்லா எல்லைகளையும் வளைத்தன. ஐவோ தன் குடும்பப் பெயரான மார்ட்டினியை மார்ட்டின் என்று சுருக்கி வைத்துக் கொண்டான். தங்கு தடையின்றிப் பணம் சேர்ந்தது.

ஆனால் மகன் கியானோவை நினைக்கும்போது ஐவோவிற்கு ஏமாற்றம்தான். அவனுக்கு வேலை செய்வதில் விருப்பம் இருக்கவில்லை. அவனுக்கு இருபத்தேழு வயதான போது ஒர் இத்தாலியப் பெண்ணுடன் நட்பு வைத்துக் கொண்டான். அவள் கர்ப்பமானதும் அவசர அவசரமாகக் காதும் காதும் வைத்தமாதிரி கல்யாணம் செய்து கொண்டான். மூன்று மாதங்களில் மகன் பிறந்தான்.

அவன்தான் பால் மார்ட்டின். லாராவுக்கு உதவி செய்த வக்கீல்.

தன் பேரனைப் பிரமாதமாய் வளர்க்கத் தீர்மானித் தான் ஐவோ. அமெரிக்காவில் வழக்கறிஞர்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்ததால் பேரனை லாயராக்குவதென முடிவு செய்தான்.

பால் மார்ட்டினுக்குப் புத்தி கூர்மை அதிகம். முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருந்தது. இருபத்திரண்டாவது வயதில் ஹார்வர்டு சட்டக் கல்லூரியில் படித்துத் தேறினான். ஒரு கெளரவமான வழக்கறிஞர் நிறுவனத்தில் சேர்த்தான். விரைவில் அங்கே ஒரு பார்ட்னராக அவன் ஆனான்.

ஐந்து ஆண்டுகள் சென்றன. பால் மார்ட்டின் சொந்தமாக ஒரு சட்ட நிறுவனம் தொடங்கினார். அந்தச் சமயம் பாட்டனார் ஐவோ சட்டத்துக்குட்பட்ட பல பிஸினஸ்களில் முதலீடு செய்திருந்தார். ஆயினும் பழைய மாஃபியா தொடர்புகள் இருந்தன. பேரன் மார்ட்டின் அவருடைய பிஸினஸ் விவகாரங்களைக் கவனித்து வந்தார்.

1967-ம் ஆண்டு ஐவோ காலமானார். நீனா என்று பெயருள்ள ஓர் இத்தாலியப் பெண்ணை மணந்து கொண்டார் பால். ஒரு வருடம் கழித்து அவளுக்கு இரட்டைச். குழந்தைகள் பிறந்தன.

எழுபதுகளின்போது பால் மார்ட்டின் ரொம்ப பிஸி.

தொழிற்சங்க யூனியன்கள்தான் அவருடைய பிரதான கட்சிக்காரர்களாக இருந்தார்கள். ஆகவே அவருடைய அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது.

தொழிலதிபர்களும், ஆலை அதிபர்களும் அவரிடம் கைகட்டி நின்றார்கள்.

ஒருநாள் ரோஹன் என்ற ஒரு கண்ணியமான பாங்க்கர் - மார்ட்டினின் கட்சிக்காரர் - அவருடன் பகலுணவு அருந்திய கொண்டிருந்தார். மார்ட்டினின் குடும்பப் பின்னணியைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.

"ஸன்னிவேல் என்ற இடத்தில் உள்ள எங்கள் கால்ஃப் கிளப்பில் நீங்கள் சேர வேண்டும். உங்களுக்குக் கால்ஃப் ஆடத் தெரியுமில்லையா?" என்றார் ரோஹன்.

"எப்போதாவது ஆடுவேன் - நேரம் கிடைக்கும்போது."

"நல்லது. எங்கள் கிளப்பில் உங்கனை மெம்பராகச் சேர்க்க நான் சிபாரிசு செய்கிறேன். அந்தக் கிளப்பின் நிர்வாகக் குழுவில் நான் இருக்கிறேன்."

"ரொம்ப சந்தோஷம்."

அடுத்த வாரம் புதிய மெம்பர்கள் சேர்ப்பது பற்றி நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தியது. பால் மார்ட்டினின் பெயரை முன்மொழிந்தார் ரோஹன். "அவர் நல்ல மனிதர். ஆகவே சிபாரிசு செய்கிறேன்." என்றார்.

ஜான் என்று இன்னொரு நிர்வாகக் குழு உறுப்பினர். "அந்த ஆள் ஓர் இத்தாலியராச்சே? நம் கிளப்பில் வெளி நாட்டுப் பிசாசுகளைச் சேர்க்கக் கூடாது."

"அப்படியானால் அவர் பெயரை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்களா?"

"நிச்சயமாய்."

"சரி வேண்டாம்," என்று ரோஹன் விட்டு விட்டார்.

இரண்டு வாரம் கழித்து, ரோஹனுடன் மறுபடி உணவு அருந்திக் கொண்டிருந்தார் மார்ட்டின்.

"கால்ஃப் பிரமாதமாக ஆடிக் கொண்டிருக்கிறேன்." என்று வேண்டுமென்றே கிண்டல் செய்தார்.

ரோஹனுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. "உங்கனை எங்கள் கால்ஃப் கிளப்பில் சேர்ப்பதில் ஒரு சின்னப் பிரசினை ஏற்பட்டுவிட்டது..."

"என்ன பிரசினை?"

"நான் உங்கள் பெயரை முன்மொழிந்தேன். நிர்வாகக் குழுவில் ஒருவர் ஆட்சேபித்ததால் விட்டு விட்டோம்."

"அப்படியா? என்ன ஆட்சேபம்?"

"இதையெல்லாம் மனசில் வைத்துக் கொள்ளாதீர்கள். அவன் ஒரு திமிர் பிடித்த ஆள்... இத்தாலியர்கள் என்றால் வெறுப்பு"

மார்ட்டின் புன்னகை செய்தார், "அதை நான் பொருட்படுத்துவது கிடையாது. ரொம்பப் பேருக்கு இத்தாலியர்களைப் பிடிப்பதில்லை. அந்த ஆள் பெயர் என்ன சொன்னீர்கள்?"

"இறைச்சிப் பாக்கெட்டுகள் தயாரிக்கிறாரே."

"அவர்தான். மனுஷன் மனசை மாற்றிக் கொள்வார். நான் மறுபடி அவரிடம் பேசுகிறேன்."

மார்ட்டின் தலையசைத்தார். "வேண்டாம், விட்டு விடுங்கள். உண்மையில் எனக்குக் கால்ஃபில் அப்படி யொன்றும் ஆர்வம் கிடையாது."

ஆறு மாதங்கள் கழித்து.

ஜானினுடைய இறைச்சி பாக்கிங் கம்பெனியின் நான் பெரிய லாரிகள் தொலைதூர நகர்களுக்கு புறப்பட்டவை -- நட்ட நடுவழியில் நின்றன.

அவற்றின் டிரைவர்கன் ரெஃப்ரிஜிரேட்டர் கதவுகளைத் திறந்து போட்டுவிட்டு நடையைக் கட்டிவிட்டார்கள்.

ஜானுக்குச் செய்தி எட்டியபோது குதிகுதியென்று குதித்தார். மானேஜரைக் கூப்பிட்டு, "என்னய்யா அக்கிரமம் இது! பதினைந்து லட்சம் டாலர் பெறுமான முள்ள இறைச்சியை வெயிலில் போட்டுவிட்டுப் போய் விட்டார்களோ அத்தனையும் கெட்டுவிட்டதே! எதனால் இப்படி?" என்று கத்தினார்.

"யூனியனில் ஸ்டிரைக் செய்கிறார்கள்." என்றார் மானேஜர்.

26

லாரிக்காரர்கள் திடீரென்று வேலை நிறுத்தம் செய்திருப்பதை அறிந்ததும், இறைச்சிப் பாக்கெட் நிறுவனத்தின் அதிபரான ஜானுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது.

"என்னிடம் எதுவும் சொல்லவில்லையே? எதற்காக ஸ்டிரைக் செய்கிறார்களாம்? கூலி அதிகம் வேண்டும் என்கிறார்களா?"

சூப்பர்வைசர் தோள்களைக் குலுக்கிக் கொண்டார். "எனக்குத் தெரியாது. என்னிடம் எதுவும் சொல்லவில்லை. லாரிகளைத் திறந்து போட்டுவிட்டு அவர்கள் பாட்டுக்குப் போய்விட்டார்கள்."

"அவர்களுடைய யூனியன் பிரதிநிதியை நான் வரச் சொன்னேன் என்று சொல்லு. நான் பேசி ஸெட்டில் பண்ணுகிறேன்." என்றார் ஜான்,

அன்று பிற்பகல் யூனியன் பிரதிநிதி ஜானின் அறைக்குள் வந்தார்.

"நீங்கள் ஸ்டிரைக் பண்ணப் போவதாக ஏன் என்னிடம் சொல்லவேயில்லை?" என்று அதட்டினார் ஜான்.

அந்தப் பிரதிநிதி, மன்னிப்பு கேட்கும் தொனியில், "எனக்கே அதைப் பற்றித் தெரியாது, மிஸ்டர் ஜான். சுத்தக்கிறுக்குத்தனம்! திடீரென்று இப்படிப் பண்ணியிருக்கிறார்கள்."

"நான் எப்பவும் நேர்மையாய், நியாயமாய் நடந்து கொன்கிறவன். உங்களுக்கே தெரியும், என்ன வேண்டும் மாம் அவர்களுக்கு? கூலி உயர்வா?"

"இல்லை சார். சோப்பு."

ஜான் அவரை வெறித்து நோக்கினார். "சோப்பா? சோப்பு என்றா சொன்னீர்கள்?"

"ஆமாம் சார். அவர்களுடைய பாத்ரூம்களுக்கு உங்கள் கம்பெனி சப்ளை பண்ணும் சோப்புகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லையாம். நுரையே வராமல் கல் மாதிரி இருக்கிறதாம்."

அவர் காது கேட்பதை அவராலேயே நம்ப முடியவில்லை, "சோப்பில் நுரை வரவில்லை! அதற்காக எனக்குப் பதினைந்து லட்சம் டாலர் நஷ்டம்" என்று கத்தினார்.

"என்னிடம் கோபிக்காதீர்கள், சார். ஆட்கள் அப்படி." என்றார் யூனியன் பிரதிநிதி.

"கடவுளே!" என்று நெற்றியில் அடித்துக் கொண்டார் ஜான், "என்னால் நம்பவே முடியவில்லை. இவர்களுக்காக ஆகாயத்திலிருந்தா சோப்பு வரவழைக்க முடியும்" என்று மேஜையை முஷ்டியால் குத்தினார். "சரி, அடுத்த முறை உங்கள் ஆட்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் நேரே என்னிடம் வந்து சொல்லுங்கள். என்ன?"

"சரி, மிஸ்டர் ஜான்."

"அவர்களை வேலைக்குத் திரும்புபடி சொல்லுங்கள். மிகச் சிறந்த சோப்பு அவர்களுடைய பாத்ரூம்களில் இன்று சாயந்தரம் ஆறுமணிக்குள் இருக்கும். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, சரிதானே?"

"அவர்களிடம் சொல்கிறேன் சார்."

வெகு நேரம்வரை தனக்குள் குமுறிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ஜான். ‘சே! நாடு குட்டிச் சுவராகத்தான் போய்க் கொண்டிருக்கிறது! சோப்பாமே சோப்பு’ என்று எண்ணிக் கொண்டார்.

இரண்டு வாரம் சென்றது.

ஆகஸ்டு மாதத்தில், நல்ல வெயில் அடிக்கும் பகல் வேளை.

ஜான் கம்பெனியின் இறைச்சிப் பாக்கெட்டுகளை நீண்ட தூர ஊர்களுக்குச் சுமந்து சென்று கொண்டிருந்த ஐந்து லாரிகள் மீண்டும் நடு வழியில் நின்றன. அவற்றின் ரெஃப்ரிஜிரேட்டர் கதவுகளைத் திறந்து போட்டுவிட்டு தன்போலவே டிரைவர்கள் போய்விட்டார்கள்.

அன்று மாலை ஐந்து மணிக்கு ஜானுக்குத் தகவல் கிடைத்தது.

செய்தி சொன்ன மானேஜரிடம் கூச்சல் போட்டார். "என்னய்யா சொல்கிறீர் நீர்? புது சோப்பு வாங்கிப் போட்டீரா, இல்லையா?"

"போட்டேன். நீங்கள் என்னிடம் சொன்ன அன்றைக்கே வாங்கிப் போட்டுவிட்டேன்." என்றார் மானேஜர்.

"பின்னே இந்தத் தடவை என்ன வந்தது அவர்களுக்கு?"

மானேஜர் கையைப் பிசைந்தார். "தெரியவில்லையே. எந்த விஷயத்தைப் பற்றியும் புகரும் வரவில்லை. என்னிடம் யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை."

"அந்த இழவெடுத்த யூனியன்காரனை வரச் சொல்லித் தொலை."

இரவு ஏழு மணிக்கு யூனியன் பிரதிநிதி வந்தார்.

"உங்கள் ஆட்கள் பண்ணிய காரியத்தால் இருபது லட்சம் டாலர் பெறுமானமுள்ள இறைச்சி பாழாகிவிட்டது. அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன?" என்று ஜான் கூச்சல் போட்டார்.

"யூனியன் தலைவரிடம் நீங்கள் இப்படிச் சொன்னீர்கள் என்று சொல்லட்டுமா, மிஸ்டர் ஜான்?"

"வேண்டாம், வேண்டாம்." என்றார் ஜான் அவசரமாக "இதோ பாருங்கள், உங்கள் ஆட்களுடன் இதுவரை எனக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. அவர்களுக்கு சம்பளம் அதிகம் வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள். அமைதியாக அதைப் பற்றி விவாதித்து முடிவு செய்வோம். எவ்வளவு கேட்கிறார்கள் அவர்கள்?"

"அவர்கள் பணம் எதுவும் கேட்கவில்லை."

"என்ன சொல்கிறீர்கள்?"

"இது பண விஷயம் இல்லை, மிஸ்டர் ஜான்."

"பின்னே? வேறே என்ன?"

"விளக்கு."

"விளக்கா?" அவர் சொன்னதைத் தான்தான் சரியாகச் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்று நினைத்தார் ஜான்.

"ஆமாம், அவர்களுடைய குளியலறைகளில் இருக்கிற விளக்கு ரொம்ப மங்கலாக இருக்கிறதாம்."

ஜான் திடீரென்று அமைதியானார். நாற்காலியில் சாய்ந்து கொண்டார். மெதுவான குரலில், "இதில் என்னவோ விஷயம் இருக்கிறது. என்ன, சொல்லுங்கள்."

"அதுதான் சொன்னேனே, குளியறையில்..."

"அந்தக் கதையெல்லாம் வேண்டாம், என்ன விஷயம், சொல்லுங்கள்."

"தெரிந்தால் சொல்ல மாட்டேனா?" என்றார் யூனியன் பிரதிநிதி.

"யாரோ என்னை இந்த பிஸினஸிலிருந்து ஒழித்துக் கட்டப் பார்க்கிறார்கள். அப்படித்தானே?"

யூனியன் பிரதிநிதி பேசாமல் இருந்தார்.

"சரி, பெயரை மட்டும் சொல்லுங்கள். யாரிடம் நான் பேச வேண்டும்?"

"ஒரு வக்கீல் இருக்கிறார். அவர் உங்களுக்கு உதவி செய்யக் கூடும். பல பிரசினைகளில் யூனியன் அவர் யோசனையைக் கேட்பதுண்டு. அவர் பெயர் பால் மார்ட்டின்."

"பால்...?" சட்டென்று ஜானுக்கு நினைவு வந்தது, "ஓ! அந்த அயோக்கியத் திருட்டு ராஸ்கல் என்னைப் பிளாக் மெயில் பண்ணப் பார்க்கிறானா? போய்யா வெளியே என்று தொண்டை கிழியக் சுத்தினார். "போய்யா"

யூனியன் பிரதிநிதி போய்விட்டார். பல்லை நறநறத்துக் கொண்டு ஜான் உட்கார்ந்திருந்தார். "யாரும் என்னை பளாக்மெயில் பண்ண முடியாது. எவரானாலும் சரி..."

ஒரு வாரம் சென்றது.

மறுபடியும் ஆறு லாரிகள் சாலையில் நின்றன. மறுபடியும் கதவுகள் திறந்து...

ரோஹனை விருந்துக்கு அழைத்தார் ஜான். சாப்பாட்டின் போது, "உங்கள் நண்பர் பால் மார்ட்டினைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். நமது கால்ஃப் கிளப்பில் அவரைச் சேர்க்கக் கூடாதென்று சொன்னேன் இல்லையா? கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ என்று தோன்றுகிறது." என்றார்.

"இப்படி ஒப்புக் கொண்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது, மிஸ்டர் ஜான்."

"இப்ப என்ன செய்யலாம் என்றால், அடுத்த வாரம் நீங்கள் அவர் பெயரை முன்மொழியுங்கள். நான் ஒட்டுப் போடுகிறேன்."

அடுத்த வாரம் பால் மார்ட்டினின் பெயர் மொழியப் பட்டது. தேர்வுக் குழு ஒருமனதாக அதை ஏற்றுக் கொண்டது.

பால் மார்ட்டினுக்குத் தானே போன் போட்டுச் சொன்னார் ஜான். "கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் மார்ட்டின். எங்கள் கால்ஃப் கிளப்பில் உங்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வதென்று சற்று முன் தீர்மானம் நிறைவேறியது. நீங்கள் மெம்பராக ஆவதில் எங்களுக்கு மகிழ்ச்சி."

"தாங்க் யூ.," என்றார் பால் மார்ட்டின், "நீங்கள் கூப்பிட்டுச் சொன்னதில் ரொம்ப சந்தோஷம்."

அடுத்து அரசாங்க வக்கீலுக்குப் போன் போட்டார் ஜான். மறு வாரத்தில் ஒரு நாள் அவரைச் சந்திப்பதற்கு நேரம் குறித்துக் கொண்டார். ஞாயிறன்று கால்ஃப் மைதானத்தில் ரோஹனும் ஜானும் சந்தித்தபோது -

"நீங்கள் இன்னும் பால் மார்ட்டினைச் சந்திக்கவில்லை போலிருக்கிறதே?" என்று ரோஹன் கேட்டார்.

ஜான் தலையை அசைத்தார். "ஊஹும். அவர் இனிமேல் கால்ஃப் விளையாட வரமாட்டார் என்று நினைக்கிறேன். கோர்ட்டுக்குப் போவதற்கும் வருவதற்குமே அவருக்கு நேரம் சரியாயிருக்கும்." என்றார் ஜான்.

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"அவரைப் பற்றி அரசாங்க வக்கீலிடம் தகவல் தரப்போகிறேன். அதன் பிறகு கோர்ட்டில், குற்றவாளிக் கூண்டில் நிற்கப் போகிறார் அவர்."

ரோஹனுக்கு ஒரே அதிர்ச்சி. "நீங்கள் சொல்கிற காரியத்தின் விளைவு எப்படி இருக்கும் தெரியுமா?"

"தெரிந்துதான் சொல்கிறேன். அந்த ஆள் ஒரு கரப்பான் பூச்சி. அவனை என் காலால் நசுக்கப் போகிறேன்." என்றார் ஜான்.

மறுநாள், திங்கள்கிழமை காலை, அரசாங்க வக்கீலைப் பார்க்கப் புறப்பட்டார் ஜான். ஏதோ ஒரு கார் அவர் காரின் மீது மோதிவிட்டு மறைந்துவிட்டது. அந்த விபத்தில் ஜான் அங்கேயே இறந்து போனார்.

விபத்துக்கு எந்தச் சாட்சியும் இல்லை. மோதிய காரின் டிரைவரைப் போலீஸார் கண்டு பிடிக்கவேயில்லை.

இதன் பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பால் மார்ட்டின் தன் மனைவியையும் இரட்டைக் குழந்தைகளையும் கால்ஃப் கிளப்புக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த சிற்றுண்டிச் சாலையில் உணவு அருந்தினார்கள். ஐட்டங்கள் அருமையாக இருந்தன.

தன் குடும்ப வாழ்க்கையை ரொம்பக் கச்சிதமாக அமைத்துக் கொண்டவர் மார்ட்டின். அவருக்கு மனைவியும் உண்டு. ஆசைநாயகியும் உண்டு. ஆனால் ஆசைநாயகியை அழைத்துச் செல்லும் ரெஸ்ட்டாரண்ட்டுக்கு மனைவியை அழைத்துச் செல்ல மாட்டார். அது தன் மனைவியை அவமதிப்பதாகும் என்பது அவர் கருத்து. குடும்பம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி. ஆசை நாயகி விவகாரங்கள் என்பது வேறொரு பகுதி. பால் மார்ட்டினின் நண்பர்கள் உண்டு. அது ஓர் அந்தஸ்து, மார்ட்டினுக்கு உறுத்தலான விஷயம், கிழவர்கள் இளம் பெண்களை வெளியே அழைத்துப் போவது கௌரவக் குறைவானது என்று அவர் எண்ணினார். கௌரவத்தைப் பெரிதாக மதிப்பவர் அவர். எனக்கு அறுபது வயதாகும்போது இந்த ஆசை நாயகிகள் விஷயத்துக்கு முழுக்குப் போட வேண்டும் என்று நினைத்திருந்தார். மனைவி ரீனா அவருக்கு நல்ல தோழனாக விளங்கினாள். அதுவே போதும். கெளரவம்தான் முக்கியம்.

இப்படிப்பட்டவரிடம் தான் லாரா உதவி கேட்டு வந்தாள்.

லாராவின் பெயரை அவர் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் நேரில் பார்த்தபோது, ‘என்ன இளமை! என்ன அழகு’ என்று பிரமித்துப் போனார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும், சுதந்திர உணர்வினால் ஏற்படும் கோபமும் லாராவிடம் இருந்த போதிலும், பெண்மை நிறைந்தவளாகவே அவள் இருப்பது புரிந்தது.

அவளிடம் தனக்குக் கவர்ச்சி ஏற்படுவது தெரிந்தது. ‘சேரி அவள் இளம் பெண். நான் கிழவன். ரொம்பச் கிழவன்,’ என்று எண்ணிக் கொண்டார்.

முதல் தடவை லாரா வந்தபோது, தனக்கும் யூனியன்களுக்கும் சம்பந்தமில்லை என்று அவர் சொன்னார். லாரா மிகப் கோபமாக வெளியேறினாள். ரொம்ப நேரம் வரை அவளைப் பற்றியே சிந்தித்தபடி இருந்தார் மார்ட்டின். பிறகுதான் போனைச் சுழற்றினார். லாராவின் யூனியன் பிரசினையை முடித்து வைத்தார்.

குறித்த நேரப்படி லாராவின் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு காலையிலும் ஒவ்வொரு மாலையிலும் லாரா வேலை நடக்குமிடத்துக்கு வந்தாள். அவனிடம் பால் தொழிலாளர்களிடையே ஒரு புதிய மரியாதை ஏற்பட்டிருந்தது. அவர்கள் அவளைப் பார்க்கும் விதத்திலிருந்தும், அவளிடம் பேசும் விதத்திலிருந்தும், அவளுக்காக வேலை செய்யும் விதத்திலிருந்தும் லாரா அந்த மரியாதையை உணர முடிந்தது. இதற்கெல்லாம் காரணம் பால் மார்ட்டின் தான் என்று அவளுக்குத் தெரியும்.

அந்த விகாரமான, ஆனால் கவர்ச்சியான, விசித்திரமான குரல் படைத்த மனிதரைப் பற்றி லாரா அதிகமாக நினைக்கலானாள்.

27

பால் மார்ட்டினைப் பற்றியே சிந்தனை சென்று கொண்டிருந்ததால் ஒரு நாள் அவருக்குப் போன் செய்தாள்.

"இன்று நாம் இருவரும் சேர்ந்து - பகலுணவு அருந்தலாமா மிஸ்டர் மார்ட்டின்?"

"ஏன், மறுபடியும் ஏதாவது பிரச்சினை முளைத்திருக்கிறதா?"

"இல்லை... ஆனால் நாம் இருவரும் ஒருவரையொருவர் இன்னும் நன்றாகப் புரிந்து கொண்டால் தேவலை என்று தோன்றுகிறது."

"ஸாரி, மிஸ் லாரா. நான் பகலுணவு சாப்பிடுவது கிடையாது.

"அப்படியானால் ராத்திரி சாப்பிடலாமே?"

"நான் கல்யாணமானவன் மிஸ் லாரா, ராத்திரி என் மனைவி குழந்தைகளுடன்தான் சேர்ந்து சாப்பிடுவேன்."

"ஒ கோ... வந்து..."

லாரா பேச்சை முடிக்குமுன் மறுமுனையில் போன் வைக்கப்பட்டுவிட்டது.

‘என்ன வந்தது இந்த ஆளுக்கு?’ என்று லாரா ஆச்சரியப்பட்டாள். "படுக்க வா என்றா கூப்பிட்டேன்? ஏதாவதொரு வகையில் நன்றி சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். அவ்வளவுதானே?"

சரி!, போகட்டும் என்று மார்ட்டினைப் பற்றிய எண்ணத்தைத் தன் மனத்திலிருந்து விரட்டியடிக்க முயன்றாள்.

பால் மார்ட்டினுக்கு லாராவின் குரலைக் கேட்டதில் சந்தோஷமாயிருந்தது. அதே சமயம் இப்படிச் சந்தோஷப் படுகிறோமே என்று தன் மீதே எரிச்சலும் வந்தது. சேக்ரட்டரியைக் கூப்பிட்டு, "மிஸ் லாரா இன்னொரு முறை போன் செய்தால் நான் இல்லையென்று சொல்லிவிடு," என்றார்.

எவரிடமும் மயங்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். லாரா மயக்குவதற்காகவே பிறந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது.

வேலைகள் முன்னேறிக் கொண்டிருக்கும் வேகத்தைக் கண்டு ஹோவார்டுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

"உண்மையை ஒப்புக் கொள்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு உன் திட்டங்களைப் பார்த்துக் கவலையாகத்தான் இருந்தது. சரி, பாதாளத்தில் விழுந்தாயிற்று என்று நினைத்தேன், ஆனால், பெரிய அதிசயத்தைச் சாதித்து விட்டாய்." என்றான் லாராவிடம்...

‘அது நான் செய்த அதிசயமல்ல. பால் மார்ட்டின் செய்த அதிசயம்’ என்று அவள் எண்ணிக் கொண்டாள். அந்த மனிதருக்கு இது வரையில் ஃபீஸ் எதுவுமே கொடுக்க வில்லை. அதனால்தான் கோபமாக இருக்கிறாரோ ஒரு வேளை?

ஏதோ ஓர் உத்வேகத்தில், ஐம்பதாயிரம் டாலருக்கு ஒரு செக் எழுதி அவருக்கு அனுப்பி வைத்தாள்.

மறு நாள் செக் திரும்பி வந்து விட்டது. அதனுடன் கூடக் கடிதம் எதுவும் இருக்கவில்லை.

மறுபடியும் டெலிபோன் செய்தாள். மார்ட்டினின் செக்ரட்டரி, "ஸாரி, மிஸ்டர் மார்ட்டின் இல்லை." என்றாள்.

மறுபடி ஒரு மூக்குடைப்பு

ஒரு வேளை நம்மை ஒரு தொல்லை என்று நினைக்கிறாரோ என்னவோ? அப்படி நினைக்கிறவர் ஏன் வேலை மெனக்கெட்டு நமக்கு உதவி செய்தார்?

ராத்திரி பால் மார்ட்டினைப் பற்றி சொப்பனம் கூட வந்தது.

அன்று ஹோவார்டு அவள் அலுவலக அறைக்கு வந்தன்.

"ஆண்ட்ரூ வெப்பரின் இசை நாடகத்துக்கு இரண்டு டிக்கெட் இருக்கிறது என்னிடம், வெள்ளிக் கிழமையன்று நிகழ்ச்சி. நான் சிகாகோவுக்குப் போக வேண்டியிருக்கறது. உனக்கு வேண்டுமானால் தருகிறேன்." என்றான்.

"ஊகூம், வேண்டாம்," என்றவள், "இருங்கள்," என்றாள். ஒரு நிமிடம் யோசனை செய்தபின், "சரி, கொடுங்கள்," என்று வாங்கிக் கொண்டாள்.

அன்று பிற்பகல், இரண்டு டிக்கெட்டுகளில் ஒன்றை ஒரு கவருக்குள் வைத்து, பால் மார்ட்டினுக்கு. அவருடைய அலுவலக முகவரிக்கு அனுப்பினாள்.

மறுநாள் பால் மார்ட்டின் கையில் டிக்கெட் கிடைத்தது.

அதைப் பார்த்தவாறு அவர் குழம்பி நின்றார். இசை மரங்குக்கு ஒற்றை டிக்கெட்டை யார் அனுப்பியிருப்பார் என்று யோசித்தார்.

அந்தப் பெண் லாராவாகத்தான் இருக்கும். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டியாதுதான்.

செக்ரட்டரியிடம் "வெள்ளிக்கிழமை மாலை எனக்கு ஏதாவது எங்கேஜ்மெண்ட் இருக்கிறதா பார்." என்றார்.

"உங்கள் மனைவியின் சகோதரருடன் டின்னர் இருக்கிறது சார்."

"அதை ரத்து செய்துவிடு."

தியேட்டரில் லாரா திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இசை நாடகத்தின் முதல் அங்கம் முடிந்து கொண்டிருந்தது.

அவளுடைய பக்கத்து ஸீட் காலியாகவே இருந்தது. வரவில்லை போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள். இனி மேல் அந்த ஆள் எக்கேடோ கெடட்டும் என்னால் முடிந்ததையெல்லாம் செய்து பார்த்தாயிற்று.

முதல் அங்கம் முடிந்து திரை கீழே இறங்கியது. அடுத்த அங்கத்துக்கும் இருக்கலாமா அல்லது எழுந்து போய் விடலாமா என்று லாரா தனக்குள் சிந்தித்துக் கொண்டிருந்த சமயம் -

பக்கத்து சீட்டில் ஓர் உருவம் தெரிந்தது.

பால் மார்ட்டின்தான்.

"வா, வெளியே போய்ப் பேசலாம்." என்று அதட்டலாகச் சொன்னார்.

அருகிலிருந்த ஓட்டலுக்குச் சென்றார்கள். மார்ட்டின் மேஜையில் அவளுக்கு எதிரே அமர்ந்து, அமைதியாகவும் எச்சரிக்கையாகவும் அவளை ஆராய்கிற மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்.

வெயிட்டர் வந்தார்.

"எனக்கு ஸ்காட்சும் சோடாவும் கொண்டு வாருங்கள்." என்றாள் லாரா.

"எனக்கு எதுவும் வேண்டாம்." என்றார் மார்ட்டின் லாரா ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள்.

"நான் குடிப்பதில்லை."

பிறகு டின்னருக்கு ஆர்டர் செய்தாள்.

பால் மார்ட்டின் கேட்டார்: "மிஸ் லாரா, உனக்கு என்ன வேண்டும் என்னிடமிருந்து?"

"யாருக்கும் கடன்பட்டிருப்பது எனக்குப் பிடிக்காத உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன். அதைத் திருப்பி செலுத்தப் பார்க்கிறேன். நீங்கள் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள். அதுதான் எனக்குக் சங்கடமாக இருக்கிறது." என்றாள் லாரா.

"முன்னேயே நான் சொன்னேன். நீ எனக்கு எந்த விதத்திலும் கடன் படவில்லை."

"ஓஹோ."

"உன் கட்டிடம் நன்றாய் முடிந்து கொண்டிருக்கிறது சான்று கேள்விப்பட்டேன்."

"ஆமாம்," என்றாள் அவள். ‘உங்களால்தான்’ என்று சொல்ல நினைத்தவள், சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள்.

"எதைச் செய்தாலும் நன்றாகச் செய்கிறாய் என்று தெரிகிறது."

"எதையும் நன்றாகச் செய்ய வேண்டுமென்பதுதான் எனக்கு ஆசை." என்றாள் அவள். "மனசிலே ஓர் ஐடியா உதித்து. அது உருக்காகவும் கான்கிரீட்டாகவும் வளர்ந்து, கட்டிடமாக உருவாகி, அங்கே ஜனங்கள் வசிப்பதும், அலுவலகங்கள் இயங்குவதும் அது ஒரு பரவசமான விஷயம்... ஒரு வகையில் அது நமக்கு நினைவுச் சின்னம் போல் ஆகிவிடுகிறது... இல்லையா?" சொல்லுகையில் அவள் முகம் ஜீவனுடன் பிரகாசித்தது.

"உண்மைதான். ஒரு நினைவுச் சின்னம் முடிந்ததும் இன்னொரு நினைவுச் சின்னம் ஆரம்பிக்கத் தோன்றும். அப்படித்தானே!"

"அப்படியேதான்," என்றாள் லாரா உற்சாகம் ததும்ப, "இந்த நகரத்திலேயே மிக முக்கியமான ரியல் எஸ்டேட் நபராக நான் வர வேண்டும். அதுதான் என் எண்ணம்."

ஆளை மயக்கும் ஒரு வசீகரம் அவள் பேச்சில் தொனித்தது. பால் மார்ட்டின் புன்னகை செய்து, "நிச்சயமாய் வருவாய்." என்றார்.

"இன்றைக்குத் தியேட்டருக்கு வருவதென்று ஏன் தீர்மானித்தீர்கள்?"

"என்னை நச்சரிக்காதே, விட்டுத் தொலை" என்று சொல்லும் எண்ணத்தோடுதான் அவர் வந்திருந்தார். ஆனால் அவளுடன் இருக்கும்போது, அதுவும் இத்தனை நெருக்கமாக இருக்கும்போது, அப்படிச் சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. "இந்த இசை நாடகம் நன்றாயிருக்கிறதென்று சொன்னார்கள்." என்றார்.

லாரா புன்னகை செய்தாள், "நாம் திரும்பிப் போய், மீதி நாடகத்தைச் சேர்ந்து பார்ப்போமே?"

அவர் தலையை அசைத்தார். "நான் கல்யானம் ஆனவன் மட்டுமில்லை. என் குடும்பத்தைப் பெரிதாக நினைக்கிறவனும் கூட. மனைவியை நேசிக்கிறவன் நான்."

"மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம்," என்றாள் லாரா. "மார்ச் பதினைந்தாம் தேதியன்று கட்டிடம் பூர்த்தியாகிவிடும். அதைக் கொண்டாடுவதற்காக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் வருகிறீர்களா?"

முடியாது என்பதை மென்மையாகச் சொல்வது எப்படி என்று யோசித்து. வெகு நேரம் சரியான வார்த்தைக்காகத் தயங்கினார் அவர். கடைசியில், "சரி, வருகிறேன்." என்றார்.

புதிய கட்டிடத்தின் திறப்பு விழா ஓரளவு சிறப்பாகவே நடந்தது.

லாராவின் பெயர் இன்னும் பிரபலமடையவில்லையாததால் பத்திரிகையாளர்கள் பலர் வரவில்லை. நகரத்தின் பெரும் புள்ளிகளையும் காணோம். ஆனால் துணை மேயரும், ‘போஸ்ட்’ பத்திரிகையின் நிருபரும் வந்திருந்தார்கள்.

"கிட்டத்தட்ட மொத்தக் கட்டிடமுமே வாடகைக்கு விட்டாயிற்று." என்றான் ஹொவார்டு, "எக்கச்சக்கமான பேர் இடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்."

"நல்லது." என்றாள் லாரா, அவள் மனத்தில் வேறு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

பால் மார்ட்டின். அவர் வருவாரா மாட்டாரா... ஏனோ தெரியவில்லை, அவர் வருகை முக்கியமானதாகத் தோன்றியது அவளுக்கு.

வயசில் தந்தைக்குச் சமானமான ஒருவரை இப்படி விடாமல் துரத்துகிறோமே என்று எண்ணிக் கொண்டாள்.

அந்த எண்ணத்தை விரட்டியடித்து விட்டு மற்ற விருந்தினர்களை உபசரித்தாள். சிற்றுண்டிகளும் மது வகைகளும் வழங்கப்பட்டன. எல்லாருமே உல்லாசமாக இருந்தார்கள்.

விழா பாதி நடந்து கொண்டிருந்போது பால் மார்ட்டின் வந்து சேர்ந்தார்.

கூடியிருந்தோரிடையே மறு வினாடியே ஒரு மாறுதல் ஏற்பட்டது. யாரோ ராஜா வந்துவிட்ட மாதிரி தொழிலாளர்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். அவரிடம் அவர்களுக்குள்ள பயபக்தி அப்பட்டமாகத் தெரிந்தது.

"நான் ஒரு சாதாரண வக்கீல்... யூனியன்களுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது" என்று அன்றொரு நாள் அவர் சொன்னது லாராவுக்கு நினைவு வந்தது.

துணை மேயருடனும் தொழிற் சங்கத் தலைவர்களுடனும் கைகுலுக்கிவிட்டு லாராவிடம் வந்தார் பால் மார்ட்டின்.

"நீங்கள் வந்ததில் எனக்கு ரொம்பச் சந்தோஷம்." என்றாள் லாரா.

அந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தை ஏற இறங்கப் பார்த்தார் பால் மார்ட்டின். "கங்கிராஜுலேஷன்ஸ். அருமையாகப் பண்ணியிருக்கிறாய்."

"தாங்க் யூ." என்றாள் லாரா. பிறகு குரலைத் தாழ்த்திக் கொண்டு, "நிஜமாகவே உங்களுக்கு நன்றி." என்றாள்.

அவர் அவளை வெறித்து நோக்கினார். அவள் வன தேவதை போல் ஜொலிப்பதாகத் தோன்றுவதைப் பற்றி எண்ணுகையில் அவருக்கே வேடிக்கையாக இருந்தது.

"பார்ட்டி முடியப் போகிறது." என்றாள் லாரா. "என்னை டின்னர் சாப்பிட அழைத்துப் போவார்கள் என்று நம்புகிறேன்."

"முன்பே உனக்குச் சொன்னேன். நான் என் மனைவி குழந்தைகளுடன்தான் இரவு டின்னர் சாப்பிடுவது வழக்கம்." அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தார். "வேண்டு மானால் ட்ரிங்ஸ் சாப்பிடலாம். வா."

"ஓ அதுவே போதும்." என்று லாரா புன்னகை செய்தாள்.

அருகிலிருந்த ஒரு சிறிய பாருக்கு அவர்கள் சென்றார்கள். ஏதேதோ பேசினார்கள். பிற்பாடு யோசித்துப் பார்த்தபோது என்ன பேசினோம் என்பது அவர்களுக்கே நினைவு வர வில்லை. காரணம், இருவருக்குமிடையே ஏதோ ஒரு வகையான வேட்கை நிலவியிருந்தது.

"உன்னைப் பற்றிச் சொல்லு," என்றார் பால் மார்ட்டின். "நீ யார்? எந்த ஊர்? இந்தப் பிஸினஸுக்கு எப்படி வந்தாய்?’

அன்றொரு நாள் மெக்காலிஸ்டரின் உடம்பு தன் உடம்பை அழுத்திக் கொண்டிருந்தது ஏனோ ஞாபகம் வந்தது அவளுக்கு. இன்னொரு வாட்டி வருவாய் இல்லே, கண்ணு! ரொம்ப ஜோராய் இருந்தது இல்லே?’ என்ற அவனது அசிங்கப் பேச்சு...

"நோவா ஸ்கோஷியாவில் கிளேஸ் பே என்ற ஒரு சின்ன காரில் நான் பிறந்தேன். அங்கே போர்டிங்குகளில் வாடகை வசூலிக்கும் வேலையில் இருந்தார் என் அப்பா. அவர் இறந்ததும் அந்த வேலையை நான் பார்க்கத் தொடங்கினேன். லாட்ஜ்காரர்களில் ஒருவர் நான் மனை வாங்சு உதவி செய்தார். அதில் கட்டிடம் கட்டவும் உதவி பண்ணினார். அதுதான் ஆரம்பம்."

அவர் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

"பிறகு சிகாகோவுக்குப் போனேன். அங்கே சில கட்டிடங்கள் கட்டினேன். பிஸினஸ் நன்றாய் நடந்தது. நியூயார்க்குக்கு வந்தேன்." என்று கூறிப் புன்னகை செய்தாள். "மொத்தக் கதையும் அவ்வளவுதான்."

‘அவ்வளவுதானா?’ என்று அவள் மனம் நினைத்தது, என்னை அடியோடு வெறுத்த அப்பாவுடன் நடத்திய வேதனையான வாழ்க்கை, வறுமை காரணமாக அடைந்த அவமானங்கள், எனக்கென்று சொந்தமாகப் பைசா கூட இல்லாதிருந்தது, மெக்காலிஸ்டருக்கு உடம்பை விற்றது.

அதையெல்லாம் சொல்ல முடியவில்லையே!

28

லாராவின் மனத்தில் ஒடும் எண்ணங்களைப் புரிந்து கொண்டாற் போல, "ரொம்பச் சுலபமாய் முன்னுக்கு வந்துவிட்ட மாதிரி சொல்கிறாயே தவிர, உண்மையில் அப்படியில்லை என்று நினைக்கிறேன். இல்லையா?" என்றார் பால் மார்ட்டின்.

"இருக்கலாம். ஆனால் நான் அந்தக் கஷ்டங்களைப் பெரிதாக நினைப்பதில்லை."

"உன் அடுத்த திட்டம் என்ன?"

"இன்னும் ஒன்றும் நிச்சயம் செய்யவில்லை. பல மனைகளைப் பார்த்து விட்டேன். என் மனதைக் கவருகிற மாதிரி எதுவும் அமையவில்லை."

அவரால் அவளை விட்டுக் கண்களை அகற்ற முடியவில்லை.

"என்ன யோசிக்கிறீர்கள்?"

அவர் ஆழமாகப் பெருமூச்சு விட்டார், "உண்மையைச் சொல்லட்டுமா? நான் மட்டும் கல்யாணம் ஆகாதவனாக இருந்திருந்தால், நான் பார்த்த பெண்களிலேயே நீதான் மிகவும் கிறுகிறுப்பு ஏற்படுத்துகிறவள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் தான் கல்யாணமானவன். ஆகவே நீயும் நானும் வெறும் சினேகிதர்களாக மட்டும்தான் இருக்க முடியும். நான் சொல்வது புரிகிறதா?"

"ரொம்ப நன்றாய்."

அவர் கைக் கடியாரத்தைப் பார்த்துக் கொண்டார். "நேரமாகிறது." என்று கூறி, சர்வரிடம் பில் கொண்டு வரச் சொன்னார். எழுந்து கொண்டார்.

"அடுத்த வாரம் நாம் சேர்ந்து சாப்பிடலாமா?" என்றாள் லாரா.

"இல்லை, நீ உன் அடுத்த கட்டிடத்தை முடிக்கும்போது கூப்பிடு, முடிந்தால் வருகிறேன்."

புறப்பட்டு விட்டார்.

அன்று இரவு பால் மார்ட்டினைப் பற்றியே கனவு கண்டாள் லாரா. அவருடைய அணைப்பில் கட்டுண்டு தான் படுத்திருப்பது போலவும் அவர் தன் காதோடு என்னென்னமோ கொஞ்சிக் கிசுகிசுப்பது போலவும் சொப்பனங்கள் வந்தன. ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

பரவசம் தாங்காமல் அவள் முனகினாள். அந்த முனகலே அவளை எழுப்பிவிட்டது. படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். அவள் உடம்பு நடுங்கியது.

இரண்டு நாள் கழித்துப் பால் மார்ட்டின் போன் செய்தார். "ஒரு மனையைப் பற்றிக் காதில் விழுந்தது. ஒருவேளை உனக்குப் பிடிக்கும்." என்று சுருக்கமாகச் சொன்னார். "மேற்குப் புறத்தில் 59-வது தெருவைத் தாண்டி இருக்கிறது. இன்னும் அது பகிரங்கமாக விற்பனைக்கு வரவில்லை. என் கட்சிக்காரர் ஒருவருக்குச் சொந்தம். அவர் அதை விற்க நினைத்திருக்கிறார்."

அடுத்த நாள் காலை ஹோவார்டும் லாராவும் அந்த இடத்தைப் போய்ப் பார்த்தார்கள். அருமையான மனையாக இருந்தது.

"இதைப் பற்றி உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று ஹோவார்டு கேட்டான்.

"பால் மார்ட்டின் சொன்னார்."

"அப்படியா..." என்று இழுத்தான் வேறாவார்டு. அவனுக்கு அது பிடிக்கவில்லை என்பது குரலில் தெரிந்தது.

"ஏன் என்னவோ போல் இருக்கிறீர்கள்?"

"லாரா... மார்ட்டினைப் பற்றி நான் விசாரித்தேன். அந்த ஆள் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவன். நீ அவனிடம் எதுவும் வைத்துக் கொள்ளாதே"

லாரா ரோஷமாகப் பதிலளித்தாள். "மாஃபியாவுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் ஒரு நல்ல நண்பர். அது எப்படியோ போகட்டும். அதற்கும் இந்த மனைக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா?"

"பிரமாதமான இடம் என்று நினைக்கிறேன்."

"அப்படியானால் வாங்கிவிடுவோம்."

பத்து நாளைக்கெல்லாம் அந்த மனையை வாங்கி விட்டார்கள்.

பால் மார்ட்டினுக்கு ஒரு பெரிய பூங்கொத்து அனுப்பினாள் லாரா. கூடவே, "பால், இதைத் திருப்பி அனுப்பாதீர்கள். இதன் மனசு புண்படும்." என்று ஒரு குறிப்பும் எழுதி அனுப்பினாள்.

அன்று மாலை அவளை மார்ட்டின் டெலிபோனில் கூப்பிட்டார்.

"பூங்கொத்துக்குத் தாங்க்ஸ். அழகான பெண்களிடமிருந்து பூங்கொத்துப் பெற்று எனக்குப் பழக்கமில்லை." என்றார். வழக்கத்தைக் காட்டிலும் கரகரப்பாய் இருந்தது குரல்.

"இதுவரையில் எந்தப் பெண்ணும் உங்களை மயக்கிய தில்லை, அதுதான் உங்களிடம் ஒரு சங்கடம்." என்றாள்.

"நீ மயக்கப் போகிறேன் என்கிறாயா?"

"சே, சே"

பால் மார்ட்டின் சிரித்தார்.

"நான் நிஜமாகத்தான் சொன்னேன்."

"நீ நிஜமாகத்தான் சொல்வாய் என்று எனக்குத் தெரியும்."

"அப்படியானால் இன்று பகலுணவு சாப்பிட்டுக் கொண்டே இதைப் பற்றிப் பேசலாமே?" என்றாள் லாரா.

என்ன முயன்றும் பால் மார்ட்டினால் லாராவைப் பற்றிய எண்ணத்தைத் தன் மனத்தினின்று விரட்டியடிக்க முடியவில்லை. அவள் மீது ரொம்ப சுலபமாகத் தனக்குக் காதல் ஏற்பட்டு விடும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஏனெனில் அவனிடம் ஒரு பலவீனமான மென்மை இருந்தது. சூதுவாது தெரியாத குழந்தைத்தனம் இருந்தது. அதே சமயம் காட்டுத்தனமான கவர்ச்சியும் இருந்தது. அவளைப் பார்க்காமலிருப்பதுதான் புத்திசாலித்தனம் என்று தோன்றியது. ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவரால் முடிய வில்லை. அவருடைய மன உறுதியைத் தகர்க்கும் அளவுக்கு லாராவிடம் ஏதோ ஒரு சக்தி இருந்தது. அது அவரை அவள் பால் இழுத்தது.

அன்று அவர்கள் சேர்ந்து பகலுணவு அருந்தினார்கள்.

"நீ எந்தக் காரியத்தையாவது மறைக்க நினைத்தால், அந்தக் காரியத்தைப் பகிரங்கமாகவே செய்." என்று பால் மார்ட்டின் அவளுக்கு அறிவுரை கூறினார். அப்போது தான் நீ தப்பாக எதுவும் செய்வதாக யாரும் எண்ண மாட்டார்கள்."

"நாம் எதையோ மறைக்கப் பார்க்கிறோம் என்கிறீர்களா?" லாரா மிருதுவாகக் கேட்டாள்.

அவர் அவளை ஏறிட்டு நோக்கினார். தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தார்.

இவள் அழகாயும் புத்திசாலியாயும் இருக்கிறாள். ஆனால் இவளைப் போன்ற பெண்களைச் சுலபமாகக் கைகழுவி விட முடியும். ஒரே ஒருமுறை இவளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம். அத்துடன் சரி என்று தீர்மானித்தார்.

ஆனால் அவர் கணக்குத் தப்பாக இருந்தது.

லாராவின் அபார்ட்மெண்ட்டை அவர்கள் அடைந்த போது, பால் கூச்சத்தால் நெளிந்து கொண்டிருந்தார்.

"பள்ளிக்கூடப் பிள்ளை போல் உணர்கிறேன். பழக்கமே விட்டுப் போய்விட்டது." என்றார்.

"சைக்கிள் விடுவது போல்தான் இது. திரும்பத் திரும்ப ஆசை ஏற்படும். இருங்கள், நானே உடைகளைக் கழற்றி விடுகிறேன்."

அவருடைய கோட்டையும் டையையும் எடுத்துவிட்டு, சட்டையின் பொத்தான்களைக் கழற்றினாள்.

"இந்த உறவு ஒருநாளும் சீரிஸாக வளராது, லாரா. அதை மறந்து விடாதே!"

"மறக்கவில்லை."

"எனக்கு அறுபத்திரண்டு வயது ஆகிறது. உன் அப்பாவின் வயது.

ஒருகணம் அவள் உறைந்து போனாள். மறுகணம் சுதாரித்துக் கொண்டு, "ரொம்ப அழகான உடம்பு உங்களுக்கு."என்றாள்.

"தாங்க்ஸ்." அவர் மனைவி ஒருநாள் கூட அப்படிச் சொன்னது கிடையாது.

லாரா அவர் கையைப் பற்றினாள். "ரொம்ப பலசாலி நீங்கள்."

அவர் மார்பை நிமிர்த்திக் கொண்டு நின்றார். "நான் சின்ன வயதில் கூடைப்பந்து வீரனாக இருந்தவன்."

அவளுடைய உதடுகள் அவர் உதடுகளை அழுத்தின. அவர் வாழ்க்கையில் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டாதே கிடையாது. தேகம் மொத்தமும் தீப்பற்றி எரிவது போலிருந்தது.

ஆரம்பமும் முடிவும் இல்லாத பரவசமாகத் தோன்றியது. காட்டாரொன்று தன்னை வேகமாக, மேலும் மேலும் வேகமாக இழுத்துக் கொண்டு போவது போல... ஆழத்தில் அமிழ்த்துவதும் வெளிக்கொணர்வதுமாக. பட்டுப் போன்ற ஓர் இருட்டு திடீரென்று விலகி ஆயிரம் நட்சத்திரங்கள் வெடிப்பதுபோல.

"என்னால் நம்ப முடியவில்லை..." என்றார்.

மனைவியுடன் அவர் கண்டிருந்த உறவு வெறும் சம்பிரதாயமானது: வாடிக்கையான விவகாரம். ஆனால் லாராவிடம் ஏற்பட்டதோ உணர்ச்சிபூர்வமான அனுபவம். வேறு எத்தனையோ பெண்களுடன் அவர் தொடர்பு கொண்டது உண்டு. ஆனால் இவளைப் போல ஒருத்தியைப் பார்த்ததில்லை என்று எண்ணினார். எந்தப் பெண்ணும் இதுவரை தந்திராத பரிசொன்றை லாரா தந்திருந்தாள்: இளமை உணர்வை.

அவர் உடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டபோது, "மறுபடியும் உங்களைப் பார்க்கலாமில்லையா?" என்று லாரா கேட்டாள்.

பார்க்கக் கூடாது என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்ட போதிலும் "பார்க்கலாமே." என்றார் அவர்.

எண்பதுகளில் உலகம் பூரா பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அமெரிக்காவிலும்தான்.

ரியல் எஸ்டேட் என்பது சரியான பிஸினஸ். அதில் சரியான சமயத்தில் புகுந்திருந்தாள் லாரா. பணம் எக்கச் சக்கமாய்ப் புழங்கியது. ஸ்திரமான தொழில்களுக்கும் சரி, ஊகமான வியாபாரங்களுக்கும் சரி, பாங்க்குகள் தாராளமாய்க் கடன்கள் வழங்கின.

கடன் தரும் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் நிறைய முளைத்து, ரியல் எஸ்டேட் பிஸினஸில் உள்ளவர்களுக்கு அள்ளி அள்ளி நிதியுதவி அளித்தன. கேட்டால் போதும், உடனே கடன் வழங்கினார்கள்.

"69-வது தெருவில் உள்ள மனையில் இந்த முறை நான் அலுவலகக் கட்டிடம் கட்டப் போவதில்லை. ஓட்டல் கட்டப் போகிறேன்." என்று ஒருநாள் ஹோவார்டிடம் சொன்னாள் லாரா.

"ஏன்? அது ஆபீஸ் கட்டிடம் கட்ட அருமையான இடமாயிற்றே?" என்றான் ஹோவார்டு. "ஒட்டல் என்றால் இருபத்து நாலு மணி நேரமும் கவனித்தபடி இருக்க வேண்டும். ஜனங்கள் ஈசல் மாதிரி வருவார்கள், போவார்கள். ஆபீஸ் கட்டிடம் கட்டினால் அப்படி இல்லை. ஐந்து வருஷத்துக்கோ பத்து வருஷத்துக்கோ குத்தகைக்கு விட்டு விட்டு அக்கடா என்றிருக்கலாமே?"

"உண்மைதான் ஹோவார்டு. ஆனால் ஓர் ஓட்டல் கையரிருப்பில் இருந்தால் அதன் சக்தியே அலாதி. முக்கியமான புள்ளிகள் வரும்போது அவர்களுக்கு நாம் வசதியான ஸ்யூட் தரலாம். நமது ரெஸ்டாரண்டிலேயே அவர்களுக்கு விருந்து கொடுக்கலாம். எனக்கு அந்த ஐடியா பிடித்து விட்டது. ஒட்டல்தான் கட்டப் போகிறேன். முதல் தரமான ஆர்க்கிடெக்டுகளைப் பார்த்துப் பேசுவோம். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்."

அடுத்த பத்து நாளும் ஆர்க்கிடெக்டுகளுடன் சந்திப்புகள் நிகழ்ந்தன. அவர்கள் இதற்கு முன்னால் பெண்களின் கீழ் வேலை செய்தது கிடையாது. ஆகவே இவளுக்கு என்ன தெரியப் போகிறது என்ற அலட்சியத்தில் இருந்தார்கள்.

"நீங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தைப் பார்த்து அது போலச் செய்ய வேண்டுமென்று நினைத்திருக்கிறீர்களா?" என்று ஒருவர் கேட்டார்.

"இல்லை. மற்றவர்களை நாம் காப்பியடிக்க வேண்டாம். மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் காப்பியடிக்கும்படியான கட்டிடம் நாம் கட்ட வேண்டும்." என்றவள், எப்படி யெப்படி அமைய வேண்டும் என்பதை விவரித்தாள்.

அவர்கள் அசந்து போய்விட்டார்கள்.

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மேலாளரை நியமித்து, அவர்கள் இணைந்து செயல்பட ஒரு குழுவை அமைத்தாள் லாரா.

"வாரத்துக்கு ஒருமுறை நாம் சேர்ந்து உட்கார்ந்து பேசுவோம்." என்று அவர்களிடம் கூறினாள். ஆனால் வேலை எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எனக்கு அன்றாடம் ரிப்போர்ட் வர வேண்டும். குறித்த காலத்துக்குள், குறித்த செலவுக்குள் இந்த ஒட்டலை நாம் கட்டி முடிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் துறையில் மிகத் திறமையானவர்கள். அதனால்தான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். என்னைக் காலை வாரி விட்டு விடாதீர்கள். இனி உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்."

அடுத்த இரண்டு மணி நேரம் அவர்கள் கேள்வி கேட்க, அவள் பதில் தந்தாள்.

பிற்பாடு ஹோவார்டிடம். "மீட்டிங் எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்ட போது.

"பிரமாதம் பாஸ்." என்றான் ஹோவார்டு.

பாஸ் என்று அவளை அவன் அழைத்தது அதுதான் முதல் தடவை.

29

கிளேஸ் பேயில் இருந்தபோது லாராவுக்குப் பல உதவிகள் செய்த சார்லஸ் ஒரு நாள் போன் செய்தார்.

"லாரா, நான் நியூயார்க் வந்திருக்கிறேன். நாம் இன்று பகல் உணவைச் சேர்ந்து சாப்பிடுவோமா?" என்றார்.

"நிச்சயமாய்! நிச்சயமாய்!" என்றாள் லாரா.

சார்டிஸ் என்ற ஓட்டலில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது -

"பிரமாதமாய் இருக்கிறாயே!" என்று அவள் தோற்றத்தை வியந்து பாராட்டினார் சார்லஸ். "வெற்றி உனக்குத் தனி அழகு தந்திருக்கிறது"

"இப்போதுதான் வெற்றி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது." என்றாள் அவள். "சார்லஸ், நீங்கள் ஏன் என்னுடைய கேமரான் என்ட்டர்ப்ரைஸஸ் நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளக்கூடாது? உங்களுக்கு ஒரு நல்ல பங்கு தருகிறேன்."

அவர் தலையை அசைத்தார். "தாங்க்ஸ், ஆனால் வேண்டாம். இப்போதுதான் பிரயாணத்தைத் தொடங்கியிருப்பவள் நீ. பிரயாணத்தின் முடிவுக்கு வந்து கொண்டிருப்பவன் நான்."

"நம் தொடர்பு விட்டுப் போகக்கூடாது. போனிலாவது அடிக்கடி பேசுவோம். உங்களை இழக்க நான் விரும்பவில்லை."

அன்று பால் - மார்ட்டின் லாராவின் அபார்ட்மெண்ட்டுக்கு வந்தபோது

"உங்களுக்கு ஒரு ஸர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்." என்று கூறி அரை டஜன் அட்டைப் பெட்டிகளைக் கொடுத்தாள் அவள்.

"ஏய்! என்ன இது! இன்று எனக்கொன்றும் பிறந்த நாள் இல்லையே?"

"பிரித்துப் பாருங்களேன்."

அவர் பிரித்தார். உள்ளே அழகான ஷர்ட்டுகளும் டைகளும் இருந்தன.

"என்னிடம் ஷர்ட், டையெல்லாம் நிறைய இருக்கிறது." என்று சிரித்தார் அவர்.

"ஆனால் இது மாதிரி இருக்காதே! இதைப் போட்டுக் கொண்டால் இளமையாக இருக்கும். ஒரு நல்ல டெய்லர் கூட உங்களுக்காகப் பார்த்து வைத்திருக்கிறேன்." என்றாள் லாரா.

அதற்கு அடுத்த வாரம் ஒரு பிரபலமான பார்பர் ஷாப்பில் அவருக்கு முடி வெட்ட ஏற்பாடு செய்தாள்.

பால் மார்ட்டின் கண்ணாடியில் பார்த்துக் கொண்டார் "எனக்கு வயது குறைந்துவிட்ட மாதிரிதான் இருக்கிறது." என்று எண்ணி கொண்டார். வாழ்க்கையே கிளுகிளுப்பாகத் தோன்றியது. ‘எல்லாம் லாராவினால்தான்’ என்று நினைத்துக் கொண்டார்.

கணவனிடம் ஏற்பட்டு வரும் மாறுதல் மார்ட்டினின் மனைவிக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் தெரியாது மாதிரி காட்டிக் கொண்டாள்.

கட்டிட சம்பந்தப்பட்ட குழுவினர் அன்று கூடியிருந்தார்கள்.

"கட்டிட வேலைகள் மொத்தமும் ஒரே சமயத்தில் ஒன்றாக நடத்துகிற மாதிரி ஏற்பாடு பண்ண வேண்டும்" என்றாள் லாரா.

குழுவினர் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டார்கள்.

"அது ஆபத்தான நடவடிக்கை." என்றான் ஹோவார்டு.

"சரியானபடி செய்தால் ஒரு ஆபத்தும் இல்லை." என்றாள் அவள்.

குழுவைச் சேர்ந்த ஒருவர் அழுத்தமாகச் சொன்னார்: "மிஸ் லாரா, பாதுகாப்பான முறை என்னவென்று உங்களுக்கே தெரியும். முதலில் தரையைச் சமனப்படுத்தி, அஸ்திவாரங்களுக்குப் பள்ளம் தோண்டி, தண்ணீருக்கும், சாக்கடைக்கும் வழி அமைத்து..."

லாரா குறுக்கிட்டாள். "இதெல்லாம் நீங்கள் படிப்படியாகச் செய்வீர்கள். எனக்குத் தெரியும்."

"பின்னே ஏன்...?"

"அந்த முறைப்படி செய்தால் கட்டிடம் முடிய இரண்டு வருடம் ஆகும். இரண்டு வருடம் காத்திருக்க நான் விரும்பவில்லை."

இன்னொருவர் சொன்னார்; "நீங்கள் சொல்கிற மாதிரி செய்வதென்றால் பல வகையான வேலைகள் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். ஏதாவது ஒன்று தப்பாகப் போனால், ஒன்றுடன் ஒன்று சேராமல் போனால் மொத்தமுமே கெட்டுவிடும்."

"அப்படி யானால் எதுவும் தப்பாகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்" என்றாள் லாரா, "படிப்படியாகச் செய்யாமல் ஒட்டு மொத்தமாக வேலை நடந்தால். இரண்டு வருடத்தில் முடிய வேண்டிய கட்டிடம் ஒரே வருடத்தில் முடியும். கிட்டத்தட்ட இரண்டு கோடி டாலர் மிச்சமாகும்."

"உண்மைதான். ஆனால் சரியாயும் முடியலாம். கோளாறாயும் முடியலாம். ஆபத்து."

"ஆபத்து எனக்குப் பிடிக்கும்." என்றாள் லாரா.

தன் புதிய திட்டத்தைப் பற்றியும் அது குறித்து நடந்த விவாதங்களைப் பற்றியும் பால் மார்ட்டினிடம் சொன்னாள் ஒருநாள்.

"அவர்கள் சொன்னது சரிதான். உன் யோசனை ஆபத்தானது." என்றார் அவர்.

"பலர் இந்த முறையைப் பின்பற்றி வெற்றி அடைந்திருக்கிறார்கள்." என்று கூறிய லாரா," உதாரணமாக, ட்ரம்ப் செய்திருக்கிறார். பரிஸ் செய்திருக்கிறார்." என்றாள்.

"நீ ட்ரம்ப் அல்ல. யூரிஸ் அல்ல," என்று மென்மையாகச் சொன்னார் அவர்.

"அவர்களையெல்லாம் காட்டிலும் பெரிய ஆளாக நான் வரப் போகிறேன். இதற்கு முன் நியூயார்க்கில் யாரும் கட்டியிராத அளவுக்கு நான் கட்டிடங்கள் கட்டப்போகிறேன், இந்த நகரம் என்னுடைய நகரமாக இருக்கப்போகிறது."

ஒரு நீண்ட நிமிடம் அவளை மெளனமாகப் பார்த்தார் பால் மார்ட்டின், "எனக்கு உன்னிடம் நம்பிக்கை இருக்கிறது." என்றார்.

லாரா அவருடன் பேசுவதற்கென்றே ஒரு தனி டெலிபோனைத் தன் அலுவலகத்தில் வைத்துக் கொண்டாள். அதேபோல் அவரும் லாராவுடன் பேசுவதற்காகவே ஒரு பிரத்தியேக போன் வைத்துக் கொண்டார். ஒரு நாளில் பலமுறை அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

பிற்பகல்களில் வேலை ஒழிவாயிருந்தால் இருவரும் லாராவின் அபார்ட்மெண்ட்டில் சந்திப்பது வழக்கமாயிற்று. அந்தச் சந்திப்புகளுக்காகப் பால் மார்ட்டின் ஆவலுடன் காத்திருக்கலானார். தான் இப்படி மாறுவோம் என்று அவர் ஒரு போதும் நினைத்தது கிடையாது. லாரா அவரைச் சுற்றி ஒரு மோக வலை பின்னிவிட்டாள்.

இப்படி யெல்லாம் நடக்கிறதென்று தெரிந்தபோது ஹோவார்டு கவலைக்குள்ளானான்.

"லாரா நீ செய்வது சரியில்லை என்ற நினைக்கிறேன். அந்த ஆள் ரொம்ப அபாயகரமானவன்." என்றான்.

"உங்களுக்கு அவரைத் தெரியாது. அற்புதமான மனிதர்."

"நீ அவரைக் காதலிக்கிறாயா?"

லாரா யோசனை பண்ணிப் பார்த்தாள். அவள் வாழ்க்கையில் ஒரு தேவையை அவர் பூர்த்தி செய்கிறார். உண்மை. ஆனால் அதைக் காதல் என்று சொல்ல முடியுமா?

"இல்லை." என்றாள்...

"அவருக்கு உன்மீது காதலா?"

"அப்படித்தான் தோன்றுகிறது."

"ஜாக்கிரதையாக இரு. ரொம்ப ஜாக்கிரதையாக இரு."

லாரச புன்னகை செய்தாள். ஏதோ தோன்றவே சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். "என் ஜாக்கிரதை பற்றி நீங்கள் இவ்வளவு கவலைப்படுகிறீர்களே, அதுவே எனக்குப் போதும் ஹோவார்டு."

அன்று கட்டிட வேலை நடக்குமிடத்தில் ஒரு ரிப்போர்ட்டைப் படித்துக் கொண்டிருந்தாள் லாரா.

"இதென்ன... மரம் எக்கச்சக்கமாக்க வாங்கிக் கொண்டிருக்கிறோம்?" என்று ரீஸ் என்பவரிடம் கேட்டாள் பிராஜக்ட் மானேஜராக அவர் புதிதாக வேலையில் சேர்ந்திருந்தார்.

"நானே சொல்ல நினைத்திருந்தேன், மிஸ் லாரா. ஆனால் நிச்சயமாய்த் தெரியாமல் சொல்லக் கூடாது, என்றிருந்தேன். நீங்கள் சொல்லுவது சரிதான், நாம் வாங்கும் மரம் நிறையக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஆகவே வாங்கியதையே திரும்ப வாங்க வேண்டியிருக்கிறது, என்றார் ரீஸ்."

அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள். "யாரோ திருடுகிறார்கள் என்றா சொல்கிறீர்கள்?"

"அப்படித்தான் தோன்றுகிறது."

"யார் மீதாவது உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?"

"இங்கே ராத்திரியில் வாட்ச்மேன் இருக்கிறான் இல்லையா?"

"ஒருத்தன் இருக்கிறான்."

"அவனுக்கு எதுவும் தெரியாதாமா?"

"தெரியாதாம். ஆனால் இங்கே இவ்வளவு வேலைகள் நடப்பதால் திருட்டு பகலிலே கூட நடக்கலாம். யார் வேண்டுமானாலும் திருடலாம்." என்றார் ரீஸ்.

லாரா சிறிது யோசனை செய்து விட்டு, "சரி தகவல் கொடுத்ததற்கு நன்றி. இனி நான் கவனித்துக் கொள்கிறேன்." என்றாள் லாரா.

அன்று பிற்பகல் ஸ்டீவ் என்ற துப்பறியும் நிபுணரை அமர்த்தினாள்.

"பட்டப் பகலில் மரம் லோடு ஏற்றிக் கொண்டு எப்படிப் போக முடியும்?" என்று ஸ்டீவ் கேட்டார்.

"அதைத்தான் நீங்கள் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டும்."

"ராத்திரி வேளையில் வாட்ச்மேன் இருக்கிறான் என்றா சொல்கிறீர்கள்?"

"இருக்கிறான்."

"ஒருவேளை அவன்தான் திருடுகிறானோ என்னவோ?"

"இந்த ஒரு வேளை கிருவேளை சமாசாரமெல்லாம் வேண்டாம். யார் திருடுகிறார்கள் என்பதைக் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்."

"கட்டிட ஊழியர்களில் ஒருவனாக என்னை வேலைக்கு அமர்த்த முடியுமா?"

"செய்கிறேன்."

இந்த விஷயத்தை ஹோவார்டிடம் லாரா சொன்ன போது, "உனக்கேன் லாரா இந்தத் தலைவலியெல்லாம்? என்னிடம் சொன்னால் கவனித்துக் கொள்ள மாட்டேனா?" என்றான்.

"தலைவலிகள் எனக்குப் பிடிக்கும்." என்றாள் லாரா.

அத்துடன் அந்தப் பேச்சு நின்றுவிட்டது. ஐந்து நாட்கள் சென்றன. லாராவின் அலுவலகத்துக்கு ஸ்டீவ் வந்தார்.

லாரா கேட்டாள். "ஏதாவது கண்டு பிடித்தீர்களா?"

"எல்லாவற்றையுமே கண்டுபிடித்தாயிற்று."

"வாட்ச்மேன்தான் திருடினானா?"

"இல்லை. கட்டிடம் கட்டும் இடத்திலிருந்து மரம் திருட்டுப் போகவேயில்லை."

"என்ன சொல்கிறீர்கள்?"

"கட்டிட வேலை நடக்கும் இடத்துக்கு மரம் வந்து சேரவேயில்லை என்கிறேன். ஜெர்ஸியில் வேலை செய்யும் வேறொரு கம்பெனிக்கு மரத்தை அனுப்பிவிட்டு பில்லை மட்டும் நமக்கு அனுப்பிப் பணம் வாங்கியிருக்கிறார்கள். இங்கே உள்ள ஒருவரே செய்திருக்கும் மோசடி அது."

"யார்? யார் செய்தது அப்படி?"

ஸ்டீன் சொன்னார்.

அடுத்த நாள் சாயந்திரம் கட்டிடக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.

வக்கீல் டெர்ரி, ஹோவார்டு, பிராஜக்ட் மானேஜர் ரீஸ் மற்றும் சிலர் கூடியிருந்தார்கள். மீட்டிங்கிற்கு ஒரு புது நபரும் வந்திருந்தார். அவர் பெயர் கான்ராய் என்று அவரை எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் லாரா.

"‘ரிப்போர்ட்டைப் படிப்போம்." என்று அவள் சொன்னதும் பிராஜக்ட் மானேஜர் ரீஸ் படிக்கலானார்.

"வேலைகள் குறித்த நேரத்தில் நடைபெற்று வருகின்றன. இன்னும் நாலு மாதத்தில் எல்லாமே முடிந்துவிடும். ஒட்டு மொத்தமாக எல்லா வேலைகளும் ஒரே சமயத்தில் நடை பெற வேண்டுமென்று நீங்கள் சொன்னது மிகவும் சரி. பட்டுப் போல் வழு வழுவென்று வேலை நடக்கிறது. மின்சார வேலையும் குழாய் வேலையும் ஆரம்பித்து விட்டோம்..."

"நல்லது." என்றாள் லாரா.

"திருட்டுப் போன மரம் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே?" என்று கேட்டான் ஹோவார்டு.

"ஒரு தகவலும் தெரியவில்லை. விழிப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறோம்."

"அந்த விஷயத்தைப் பற்றி இனிமேல் கவலைப்படத் தேவையிருக்காது என்று நினைக்கிறேன். யார் திருடுகிறார்கள் என்பதைக் கண்டு பிடித்தாகி விட்டது," என்ற லாரா, புதிதாக வந்திருப்பவரைச் சுட்டிக் காட்டினாள். "மிஸ்டர் கான்ராய் மோசடிக் குற்றங்களைப் புலனாய்வு செய்கிறார். போலீஸ் அதிகாரி."

"இங்கே அவருக்கு என்ன வேலை?" என்றார் ரீஸ். "உங்களை அழைத்துப் போகத்தான் வந்திருக்கிறார்."

ரீஸ் திடுக்கிட்டார். "என்ன?"

லாரா மற்றவர்களை நோக்கி, "நமக்கு வரவேண்டிய மரத்தை வேறொரு கட்டிடக் கம்பெனிக்கு விற்று வந்திருக்கிறார் இவர். நான் கணக்கு வழக்குகளைப் பார்ப்பது தெரிந்ததும், திருட்டு அது இது என்று பிரச்னையைத் திசை திருப்பத் தீர்மானித்தார்." என்றாள்.

"இருங்கள், இருங்கள்... நான்... நான். நீங்கள் சொல்வது தப்பு..." என்று ஆரம்பித்தார் ரீஸ்.

கான்ராயிடம் லாரா, "தயவு பண்ணி இந்த ஆளை இழுத்துக் கொண்டு போகிறீர்களா?" என்றாள்.

அவர்கள் போனதும், "இப்போது நாம் ஒட்டல் திறப்பு விழாவைப் பற்றி பேசுவோம்." என்றாள் அமைதியாக.

30

ட்டல் கட்டிட வேலை முடியும் சமயம் நெருங்க நெருங்க லாராவின் பதற்றம் அதிகரிக்கலாயிற்று. லாராவின் கட்டளைகள் எல்லாருக்குமே எரிச்சல் ஏற்படுத்தியது. எப்போது பார்த்தாலும் நச்சரித்துக் கொண்டிருந்தாள். வேலை செய்கிறவர்களை...

நட்ட நடுராத்திரியில் கூடப் போனில் கூப்பிடுவது சகஜமாயிற்று.

"ஹோவார்டு, வால்பேப்பர் இன்னேரம் கப்பலில் வந்து சேர்ந்திருக்க வேண்டும். இன்னும் வரவில்லையே?"

"லாரா, உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும், இப்போது விடிகாலை நாலு மணி."

"அது சரி, ஒட்டலைத் திறக்க இன்னும் தொண்ணூறே நாள்தான் இருக்கிறது. வால்பேப்பர்களை ஒட்டாமல் எப்படி ஒட்டலைத் திறக்க முடியும்?"

"பொழுது விடிந்ததும் அதைப் பற்றி விசாரிக்கிறேன்."

"பொழுது விடிந்தாயிற்று. இப்போதே விசாரியுங்கள்."

கெடு தேதி கிட்டே வரவர, லாராவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

விளம்பரப் பிரிவின் தலைவரான டாம் ஸ்காட்டைச் சந்தித்தாள்.

"உங்கள் வீட்டில் சின்ன குழந்தைகள் இருக்கிறதா, மிஸ்டர் ஸ்காட்?"

அவர் அவளை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தார்: "இல்லையே, ஏன்?"

"ஏனென்றால், நீங்கள் தயாரித்துள்ள விளம்பரங்களைப் பார்த்தேன். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை செய்த மாதிரி இருக்கிறது அவ்வளவும். அறிவு முதிர்ச்சியுள்ள பெரியவர்களா இந்தக் குப்பையைத் தயாரித்தார்கள்?"

ஸ்காட்டின் முகம் கறுத்தது. "உங்களுக்குத் திருப்தி இல்லாதது ஏதாவது இருந்தால்..."

"அத்தனையும் எனக்குத் திருப்தியாக இல்லை." என்றாள் லாரா. "விளம்பரங்களில் ஜீவன் இல்லை. உப்புச் சப்பில்லாமல் இருக்கிறது. எல்லா இடத்திலும் இருக்கிற எல்லா ஓட்டல்களையும் பற்றிச் சொன்ன மாதிரி இருக்கிறது. எல்லா ஓட்டலையும் போன்றதல்ல என் ஓட்டல். நியூயார்க்கிலேயே மிக அழகான, மிக மாடர்னான ஓட்டல் இது. உருவம் இல்லாத ஊசிப்போன கட்டிடத்துக்குச் செய்கிற மாதிரி விளம்பரங்களைத் தயாரித்திருக்கிறீர்கள். அப்படியல்ல என் ஒட்டல், அது குடும்பம் போன்ற வீடு. கதகதப்பான, உயிர்த் துடிப்புள்ள வீடு. அந்த எண்ணம் பரவும்படி விளம்பரங்களை அமைக்க வேண்டும். உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?"

"நிச்சயமாய்ச் செய்கிறேன். இன்னும் இரண்டு வாரத்தில் விளம்பரங்களை மாற்றி அமைக்கிறேன்."

"இரண்டு வாரமெல்லாம் கிடையாது. திங்கள் கிழமை" என்றாள் லாரா கண்டிப்புடன். "புதிய விளம்பரங்களைத் திங்கள் கிழமை நான் பார்த்தாக வேண்டும்."

நாடெங்குமுள்ள தினசரிகளிலும், வார, மாத இதழ்களிலும் புதிய விளம்பரங்கள் வெளிவந்தன. தெரு முனைகளில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன.

"விளம்பரங்கள் அருமையாய் வந்திருக்கிறது." என்றார் டாம் ஸ்காட், "நீங்கள் நினைத்தது சரிதான்."

லாரா அவரை ஏறிட்டுப் பார்த்து அமைதியாகச் சொன்னாள்: "நான் சரியாக நினைத்தால் என்ன, நினைக்காவிட்டால் என்ன? சரியாக நினைக்க வேண்டியவர் நீங்கள். அதற்குத்தானே உங்களுக்குச் சம்பளம் தருகிறேன்."

மக்கள் - தொடர்பு அதிகாரியான ஜெர்ரியைக் கூப்பிட்டாள் லாரா, "எல்லாருக்கும் அழைப்புப் போய் விட்டதா?"

"அனுப்பி, பெரும்பாலான அழைப்பிதழ்களுக்குப் பதிலும் வந்துவிட்டது. திறப்பு விழாவுக்கு எல்லாருமே வருகிறார்கள், பெரிய பார்ட்டியாக இருக்கும்."

"இருக்கத்தான் போகிறது." என்று முணுமுணுத்தான் ஹோவார்டு, "எக்கச்சக்கமான செலவு."

லாரா சிரித்தாள். "தயவு செய்து வட்டிக் கடைக்காரர் மாதிரிப் பேசுவதை நிறுத்துங்கள். பத்து லட்சம் டாலர் செலவழித்தாலும் இந்த மாதிரி பப்ளிஸிடி கிடைக்காது. பெரிய பெரிய புள்ளிகள் வரப்போகிறார்கள். அத்துடன்..."

"சரி, சரி, சரி." என்று கையெடுத்துக் கும்பிட்டான் ஹோவார்டு.

திறப்பு விழாவுக்கு இரண்டு வாரம் இருந்தது. திடீரென்று ஏகப்பட்ட வேலைகள் ஒரே சமயத்தில் முளைத்துவிட்ட மாதிரி தோன்றியது. வால்பேப்பர்கள் வந்து சேர்ந்தன. தரை விரிப்புக்களைப் பொருத்தினார்கள். ஹால்கள் பெயின்ட் அடிக்கப்பட்டு... படங்கள் மாட்டப் பட்டன. ஐந்து பேர் கொண்ட குழுவுடன் லாரா ஒவ்வொரு ஸ்யூட்டையும் மேற்பார்வை செய்தாள்.

ஒன்றில், "இந்த ஸ்யூட்டுக்கு, இந்தக் கர்ட்டன்கள் பொருத்தமாக இல்லை. அடுத்த ஸ்யூட்டின் கர்ட்டன்களை இங்கே மாட்டி, இதை அங்கே மாற்றுங்கள்." என்றாள்.

இன்னொரு ஸ்யூட்டில் ஒரு பியானோ இருந்தது. அதை வாசித்துப் பார்த்து, "இது சுருதி சுத்தமாக இல்லை. சரி பண்ணுங்கள்." என்றாள்.

மூன்றாவது ஸ்யூட்டில் மின்சாரக் கணப்பு வேலை செய்யாமலிருந்தது. அதை ரிப்பேர் பண்ணுங்கள்." என்றாள்.

ஊழியர்களுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. ஒவ்வொன்றையும் தானே செய்யப் போகிற மாதிரி கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தாள் லாரா. இன்ன இடம்தான் என்றில்லை. ஒரு சமயம் சமையலறையில் இருப்பாள். இன்னொரு சமயம் லாண்டரி அறையில் இருப்பாள். இன்னொரு சமயம் ஸ்டோர் அறையில் இருப்பாள். ஒவ்வோர் இடத்திலும் கேள்வி கேட்பாள். குடைத்தெடுப்பாள், குறை கூறுவாள். இன்னின்ன பொருத்த வேண்டும் என்று சொல்வாள்.

ஓட்டலை நிர்வாகம் செய்வதற்காக அமர்த்தப் பட்டிருந்த மனிதர், "பதட்டப்படாதீர்கள் மிஸ் லாரா. எந்த ஒட்டலிலும் திறப்பு விழா தினத்தன்று சின்னச் சின்னதாய் ஏதாவது கோளாறு ஏற்படத்தான் ஏற்படும்." என்றார்.

"என் ஓட்டல்களில் ஏற்படக் கூடாது. ஏற்படவே கூடாது." என்றாள் அவள்.

திறப்பு விழா தினமும் வந்தது. ராத்திரி பூரா தூக்கம் பிடிக்காமல் காலை நாலு மணிக்கே எழுந்து விட்டாள் லாரா. பால் மார்ட்டினுடன் உடனே பேச வேண்டுமென்று ஒரே துடிப்பாக இருந்தது. ஆனால் இந்த நேரத்தில் அவரைக் கூப்பிட வழியே இல்லை, உடை அணிந்து கொண்டு வெளியே உலாவப் புறப்பட்டாள்.

‘எல்லாம் பிரமாதமாக அமையப் போகிறது’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். ரிசர்வேசன் கம்ப்யூட்டரை இன்று வைத்து விடுவார்கள். மூன்றாவது அடுப்பு இன்று வேலை செய்ய ஆரம்பித்து விடும். ஏழாம் நம்பர் ஸ்யூட்டில் பூட்டு சரியாக இல்லை. இன்று சரிப்படுத்தி விடுவார்கள். நேற்று சில வெயிட்ரஸ் பெண்கள் வேலையிலிருந்து நின்றுவிட்டார்கள். புதிய பெண்கள் அமர்த்த வேண்டும். ஒரிடத்தில் ஏர்கண்டிஷன் சரியாய் வேலை செய்யவில்லை. அதைச் சரி செய்ய வேண்டும்...

மாலை ஆறு மணிக்கு, அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் வரத் தொடங்கினார்கள். சீருடை அணிந்து காவலர்கள் ஒவ்வொரு வாயிலிலும் நின்று, அழைப்பிதழ் இருக்கிறதா என்று பார்த்து உள்ளே அனுமதித்தார்கள். பெரிய பிஸினஸ் புள்ளிகளும், புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களும், நகரசபை அதிகாரிகளும் வந்திருந்தார்கள். அழைப்பிதழ் பட்டியலை லாரா முன்கூட்டியே எச்சரிக்கையுடன் பார்த்து, கூஜாக்கள், ஜால்ராக்களின் பெயர்களை நீக்கியிருந்தாள்.

விஸ்தாரமான முன் வராந்தாவில் நின்றுகொண்டு, விருந்தாளிகள் வர வர வரவேற்றுக் கொண்டிருந்தாள் லாரா. "நான் லாரா... நீங்கள் வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்... உள்ளே போய் எல்லா இடங்களையும் பாருங்கள் ப்ளீஸ்." என்றாள்.

ஹோவார்டைத் தனியே அழைத்து, "ஏன் மேயர் வரவில்லை?" என்று கேட்டாள்.

"அவர் ரொம்ப பிஸியாம்...’

"அதாவது, நான் முக்கியமில்லை என்று நினைக்கிறார். அப்படித்தானே?"

"அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் காலம் வரும்." என்றான் ஹோவார்டு.

துணை மேயர்களில் ஒருவர் வந்தார். "நீங்கள் வந்தது எங்கள் ஒட்டலுக்கே பெருமை." என்று வரவேற்றாள்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் கட்டிட விமரிசகரான கிரேபன் என்பவரின் வரவை ஆவலுடன் எதிர் பார்த்தாள் லாரா.

அவருக்கு மட்டும் இந்தக் கட்டிடம் பிடித்துவிட்டதானால், ஜெயித்தாயிற்று என்று நம்பலாம்.

பால் மார்ட்டின் தன் மனைவி நீனாவுடன் வந்தார். அவளை லாரா பார்ப்பது இதுவே முதல் தடவை, கவர்ச்சியாகவும் ஒயிலாகவும் இருந்தாள் நீனா. தான் ஏதோ குற்றம் புரிந்துவிட்டது போன்ற உணர்ச்சி திடீரென ஏற்பட்டது லாராவுக்கு.

அவளிடம் நேரே வந்தார் பால் மார்ட்டின், "மிஸ் லாரா, நான் பால் மார்ட்டின். இது மனைவி நீனா. எங்களை அழைத்ததற்கு ரொம்ப நன்றி." என்றார்.

லாரா அவர் கையைக் குலுக்கினாள். தேவைக்கு மேலேயே ஒரு வினாடி அதிகமாக, "நீங்கள் வந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தயவு செய்து உள்ளே போய் இருங்கள்." என்றாள்.

ஒட்டலை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார் பால் மார்ட்டின். ஏற்கெனவே ஐந்தாறு தடவை அவர் இதைப் பார்த்தாயிற்று. இருந்தாலும் முதல் முறையாகப் பார்க்கிற மாதிரி, "வெகு அழகாக இருக்கிறது. நீங்கள் ரொம்ப வெற்றிகரமாக வரப் போகிறீர்கள்." என்று பாராட்டினார்.

லாராவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நீனா, "ஆமாம், நிச்சயமாக வெற்றிகரமாக வருவார்." என்றாள்.

அவளுக்கு ஒருவேளை நம் ரகசியம் தெரியுமோ என்று லாரா நினைத்துக் கொண்டாள்.

கூட்டம் கூட்டமாக விருந்தாளிகள் வரத் தொடங்கினார்கள்.

ஒரு மணி நேரம் சென்றது. முன் வராந்தாவிலேயே லாரா நின்றிருந்தாள்.

ஹோவார்டு அவளை நோக்கி வேகமாக வந்தான். "என்ன லாரா. இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? அங்கே எல்லாரும் உன்னைத் தேடுகிறார்கள். விருந்து மண்டபத்தில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீ அங்கே வருவதற்கென்ன?" என்றான்.

"கிரேஸன் இன்னும் வரவில்லையே? அவருக்காகச் காத்துக் கொண்டி ருக்கிறேன்."

"யார்? நியூயார்க் டைம்ஸ் விமரிசகரா? ஒரு மணி நேரம் முன்பே அவரைப் பார்த்தேனே?"

"என்னது?"

"ஆமாம். எல்லோருடனும் சேர்ந்து அவரும் ஒட்டலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்."

"எனக்கு ஏன் சொல்லவில்லை?"

"நான் உள்ளே அல்லவா இருந்தேன்."

"என்ன சொன்னார் அவர்?" என்று ஆவலுடன் விசாரித்தான் லாரா. "அவர் முகத்தைக் கவனித்தீர்களா? என்ன தோன்றியது? ஒட்டல் அவருக்குப் பிடித்திருந்ததா?"

"அவர் எதுவும் சொல்லவில்லை, முகத்தைப் பார்த்தேன், அவருக்குப் பிடித்திருந்ததா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை."

"எதுவுமே சொல்லவில்லையா அவர்?"

லாராவின் உள்ளத்தில் சுமை ஏறிற்று. "கட்டிடம் பிடித்திருந்தால் ஏதாவது சொல்லியிருப்பார். சொல்ல வில்லையென்றால் கெட்ட அறிகுறி."

பார்ட்டி பிரம்மாண்டமான வெற்றியாக இருந்தது. விருந்தினர்கள் பலர் சாப்பிட்டார்கள், குடித்தார்கள்: ஓட்டலுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள், அன்று இரவு முடியும் முன் பாராட்டு மழையில் நனைந்து போனாள் லாரா.

"அருமையான ஓட்டல், மிஸ் லாரா."

"நான் நியூயார்க் வரும்போதெல்லாம் இங்கேதான் தங்குவேன்."

"ஒவ்வொரு அறையிலும் பியானோ வைத்திருக்கிறீர்களே, அருமையான ஐடியா."

"கணப்புக்களைப் பார்த்து மோகித்துப் போய்விட்டேன்."

"என் சினேகிதர்களுக்கெல்லாம் இந்த ஒட்டலைத் தான் சிபாரிசு செய்வேன்."

இப்படிப் பலர் சொன்னார்கள்.

"நல்லது. நியூயார்க் டைம்ஸ் விமரிசகருக்குப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஓட்டல் வெற்றிகரமாக அமைந்துவிட்டது" என்று எண்ணிக் கொண்டாள் லாரா.

பால் மார்ட்டினும் நீனாவும் புறப்பட்டார்கள், லாரா அவர்களை வழியனுப்பினாள்.

"இது நிச்சயமாய் உங்களுக்கு ஒரு வெற்றி மிஸ் லாரா, நியூயார்க் மொத்தமும் இதுவே பேச்சாக இருக்கப் போகிறது," என்றார் பால் மார்ட்டின்.

"ரொம்ப நன்றி மிஸ்டர் மார்ட்டின். நீங்கள் வந்ததில் சந்தோஷம்."

நீனா அமைதியாக, "குட் நைட் மிஸ் லாரா." என்றாள்.

"குட்நைட்."

வாசல் கதவைத் தாண்டும் போது நீனா. "ரொம்ப அழகாயிருக்கிறாள் அவள். இல்லையா பால்?" என்று கணவரிடம் கேட்பது லாராவுக்குக் கேட்டது.

அடுத்த வியாழக்கிழமை. நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளிவருகிற தினம்.

காலை நான்கு மணிக்கே பத்திரிகைக் கடையில் போய் நின்றாள் லாரா. முதல் பிரதியை வாங்கி அவசர அவசரமாகப் புரட்டினாள், கட்டிடங்கள் என்று பகுதியில்...

31

லாராவின் புதிய ஒட்டலைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் கீழ்க் கண்டவாறு எழுதியிருந்தது.

‘பிரயாணிகளுக்கு, தாங்கள் ஒட்டலில் தங்கியிருக்கிறோம் என்ற நினைப்பை ஏற்படுத்தாத ஒட்டல் இது. இதுபோன்ற ஒன்று நியூயார்க்குக்கு ரொம்ப நாளாகத் தேவைப்பட்டு வந்தது. காமேரான் பிளாஸாவில் உள்ள ஸ்யூட்கள் விஸ்தாரமாகவும், மென்மையான வனப்புடனும் திகழ்கின்றன. அழகு ரசனையுடன் அமைக்கப்பட்டுள்ளன. லாரா நியூயார்க் நகருக்குக் கொடுத்திருப்பதும்...’

ஆனந்தம் தாங்காமல் கூவி விட்டாள் லாரா, தூங்கிக் கொண்டிருந்த ஹோவார்டுக்கு டெலிபோன் செய்து எழுப்பினான்.

"நாம் வெற்றி பெற்றுவிட்டோம்! டைம்ஸுக்கு நம் ஓட்டல் மீது ஒரே மோகம்!"

தூக்கக் கலக்கத்துடன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான் ஹோவார்டு. "அப்படியா? பிரமாதம், என்ன எழுதியிருக்கிறார்கள்?"

கட்டுரை மொத்தத்தையும் படித்துக் காட்டினாள் லாரா.

"ரொம்ப நல்லது. இனிமேலாவது கொஞ்சம் தூங்கு." என்றான் ஹோவார்டு.

"தூங்குவதா விளையாடுகிறீர்களா? புதிதாய் ஒரு மனை பார்த்து வைத்திருக்கிறேன். காலையில் பாங்க்குகள் திறந்ததும் நீங்கள் போய்க் கடன் வசதி பற்றிப் பேச வேண்டும்." என்றாள் லாரா.

லாரா கட்டிய நியூயார்க் கேமரான் பிளாஸா பெரும் வெற்றியாக அமைந்தது. அத்தனை இடங்களும் நிறைந்து விட்டன. காத்திருப்போரின் பட்டியலும் மிக நீளமாக இருந்தது.

"இது ஆரம்பம்தான்." என்றாள் லாரா, ஹோவார்டிடம். "இங்கே பத்தாயிரம் ரியல் எஸ்டேட்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரும் புள்ளிகளாக இருப்பவர்கள் சில பேர்தான்." என்றாள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு, "அவர்கள் என்ன நினைத்தாலும் சரி, அவர்களுடைய கோட்டையைத் தகர்க்கப் போகிறேன். இந்த நகரத்தின் வானவெளியையே மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் இந்த நகரம் இன்ன மாதிரி இருக்கும் என்று இப்போதே காட்டப் போகிறோம் நாம்." என்றாள்.

பாங்குகள் அவளுக்குக் கடன் தருவதாகத் தாங்களாகவே முன் வந்து சொன்னார்கள். ரியல் எஸ்டேட் துறையில் முக்கியமான தரகர்களாக இருப்பவர்களை டின்னருக்கு அழைப்பதும் தியேட்டர்களுக்கு அழைத்துப் போவதுமாக அவர்களின் நட்பை வளர்த்துக் கொண்டாள் லாரா. காலை உணவைப் பெரிய ஓட்டல்களில் வைத்துக் கொள்வது என்று வழக்கப்படுத்திக் கொண்டாள். எந்தெந்த மனைகள் விற்பனைக்கு வருகின்றன என்ற தகவல்கள் அங்கு கிடைத்தன. மேலும் இரண்டு மனைகள் வாங்கிக் கட்டிடங்கள் கட்டத் தொடங்கினாள்.

பால் மார்ட்டின் அவளை டெலிபோனில் கூப்பிட்டு, "பிஸினஸ் வீக் பத்திரிகை பார்த்தாயா? உன்னைப் பற்றிப் பிரமாதமாக எழுதியிருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் துறையைக் கிடு கிடுக்கப் பண்ணுகிறாயாம்!" என்று பாராட்டினார்.

அன்று லாரா ஒரு பெரிய ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தின் பங்குதாரருடன் பேசிக் கொண்டிருந்தாள். அவள் கட்ட விருக்கும் ஒரு கட்டிடத்துக்கான வரைபடங்களை அவர் காட்டினார்.

"நீங்கள் கேட்டிருந்தபடியே அழகும் அறிவும் இருக்கிறது மாதிரி தயாரித்திருக்கிறோம். உங்களுக்கு இது பிடிக்கும். விளக்கிச் சொல்கிறேன்." என்றார் அந்த ஆர்க்கிடெக்ட்.

"அதற்கு அவசியமில்லை. பார்த்தாலே புரிகிறது எனக்கு." என்றாள் லாரா. "இந்தப் பிளான்களை நீங்கள் ஒரு நல்ல ஒவியரிடம் காட்ட வேண்டும்."

"எதற்கு?"

"இந்தக் கட்டிடம் பற்றிய பெரிய பெரிய வண்ணப் படங்கள் எனக்கு வேண்டும். வெராந்தாக்கன், தாழ்வாரங்கள், அலுவலக அறைகள் - இவைகளையெல்லாம் வண்ண ஓவியங்களாக வரைந்து தரச் சொல்லுங்கள். பாங்குக் காரர்களுக்குக் கற்பனையே கிடையாது. நம் கட்டிடம் எப்படி இருக்கப் போகிறது என்பதை அவர்களுக்கு நான் படமாகக் காட்டப் போகிறேன்."

"நல்ல ஐடியா." என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போது லாராவின் செக்ரெட்டரி கேத்தி உள்ளே வந்தாள், "ஸாரி, லேட்டாகிவிட்டது," என்றாள்.

"இந்த மீட்டிங் ஒன்பது மணிக்கு ஏற்பாடாகியிருந்தது, கேத்தி. இப்போது மணி ஒன்பதே கால்."

"ஸாரி மேடம். அலாரம் அடிக்காமல் இருந்து விட்டது."

"அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்." என்ற லாரா, "இதில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும்." என்றாள் ஆர்க்கிடெக்டிடம்.

இரண்டு மணி நேரம் சென்றது. தான் விரும்பும் மாற்றங்களைப் பற்றி விவாதித்து முடித்ததும் வந்தவர் எழுந்து சென்றார். கேத்தியும் எழுந்து கொண்டாள்.

"நீ போகாதே. இரு" என்றாள் லாரா.

கேத்தி உட்கார்ந்தாள்.

"உனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறதா கேத்தி?"

"நிச்சயமாய், மேடம்."

"நீ லேட்டாக வருவது இந்த வாரத்தில் இது மூன்றாவது தடவை. இன்னொரு தரம் இப்படி நேர்ந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்."

"ரொம்ப ஸாரி, மேடம். நான்... எனக்கு உடம்பு சரியாயில்லை."

"உடம்புக்கு என்ன?"

"பெரிசாய் ஒன்றுமில்லை."

"வேலைக்கு லேட்டாய் வரும் அளவுக்குப் பெரிசுதான். என்ன உடம்பு, சொல்லு."

"கொஞ்ச நாளாய் ராத்திரி சரியான தூக்கம் இல்லை. எனக்குப் பயமாயிருக்கிறது."

"எதைப் பற்றிப் பயம்?"

"ஏதோ... கட்டி மாதிரி இருக்கிறது."

"ஒ." லாரா ஒரு நிமிடம் மெளனமாக இருந்தாள். "சரி, டாக்டர் என்ன சொன்னார்?"

கேத்தி மிடறு விழுங்கினாள். "நான் டாக்டரிடம் போகவில்லை."

"டாக்டரிடம் போகவில்லையா?" வெடித்தாள் லாரா. "என்ன உளறுகிறாய்? டாக்டரிடம் போகாமலிருந்து விட்டால் சரியாய்ப் போய்விடுமா? டாக்டரிடம் உடனே காட்டு." என்று கூறிவிட்டு போனை எடுத்து ஆபரேட்டரைச் கூப்பிட்டாள். "டாக்டர் பீட்டருக்குப் போட்டுக் கொடு." என்று சொல்லிவிட்டு, கேத்தியிடம், அதற்காக அப்படியே விட்டு விடலாமா?" என்றாள்.

"என் அம்மாவும் அண்ணனும் கேன்ஸரில்தான் இறந்து போனார்கள்." என்றாள் கேத்தி பரிதாபமாக "எனக்கும் அதுதான், டாக்டர் பார்த்துச் சொல்ல வேண்டுமா அதை"

டெலிபோன் மணியடித்தது. லாரா எடுத்தாள். "ஹலோ... என்ன. அங்கே இல்லையா? எங்கே இருந்தாலும் கூப்பிடு. உடனே நான் பேசியாக வேண்டும் என்று சொல்லு." என்று கூறிப் போனை வைத்தாள்.

சில நிமிடங்களுக்கெல்லாம் மணியடித்தது. "ஹலோ டாக்டர்... செளக்யமா? நான் நன்றாய்த் தான் இருக்கிறேன். என் செக்ரட்டரியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் பெயர் கேத்தி. அரை மணியில் அங்கே வருவாள். இன்று காலையிலேயே அவளை எக்ஸாமின் செய்யுங்கள்... நீங்களே கவனிக்க வேண்டும். தெரியும், தெரியும்... ரொம்ப நன்றி."

ரிசீவரை வைத்தாள். "ஆஸ்பத்திரிக்குப் போ. டாக்டர் பீட்டர்ஸ் உனக்காகக் காத்திருப்பார்."

"மேடம்... என்ன சொல்வதென்றே எனக்குத் தெரிய வில்லை."

"ஒன்றும் சொல்ல வேண்டாம். நாளைக்கு லேட் பண்ணாமல் கரெக்டாய் டயத்துக்கு வா."

ஹோவார்டு உள்ளே வந்தான்.

"பாஸ், ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது."

"சொல்லுங்கள்."

"பதினாலாவது தெருவில் நாம் வாங்கியிருக்கிரோமே ஒரு மனை, அந்தத் தெருவில் எல்லா வீட்டுக்காரர்களும் காலி பண்ணிவிட்டார்கள். ஒரே ஓர் அபார்ட்மெண்ட் வீடு இருக்கிறது. டார்செஸ்டர் அபார்ட்மெண்ட்ஸ், என்று பெயர். அங்கே ஆறு குடித்தனக்காரர்கள் காலி செய்ய முடியாது என்கிறார்கள், நகர சபைக்காரர்களும் அவர்களைப் பலவந்தமாய் வெளியேற்றக் கூடாது என்கிறார்கள்."

"ஏற்கெனவே தருவதாகச் சொல்லியிருக்கிற பணத்தை விட இன்னும் அதிகமாகவே தருகிறோம் என்று சொல்லுங்கள்."

"அவர்கள் தகராறு செய்வது பணத்துக்காக அல்ல. ரொம்பக் காலமாக அவர்கள் அங்கே குடியிருந்து வருகிறார்களாம். இங்கே நாங்கள் சௌகரியமாக இருக்கிறோம். இந்த இடத்தை விட்டுப் போக மாட்டோம் என்கிறார்கள்."

"அப்படியானால் அவர்கள் சௌகரியமாக இல்லாத படி பண்ணுங்கள்."

"என்ன சொல்கிறாய்?"

லாரா எழுந்து கொண்டாள்.

"அந்தக் கட்டிடத்தைப் போய்ப் பார்ப்போம்."

இருவரும் புறப்பட்டார்கள். போகிற வழியில், வீடில்லாத பல ஏழைகள் நடைபாதைகளில் உட்கார்ந்திருப்பதையும் கை நீட்டிப் பிச்சை கேட்பதையும் கண்டார்கள்.

"வரம்! நம் அமெரிக்க நாட்டைச் செல்வம் கொழிக்கும் நாடு என்கிறோம். ஆனால் இப்படியும் மக்கள் இருக்கிறார்கள், வெட்கக் கேடு" என்றாள் லாரா.

டார்செஸ்டர் அபார்ட்மெண்ட்ஸ் என்ற கட்டிடம் ஆறு மாடிகள் கொண்டதாக இருந்தது. அதன் இருபுறமும் பழைய காலிக் கட்டிடங்கள்... இடித்துத் தள்ளப்படுவதற்காகக் காத்திருந்தன.

அந்தக் கட்டிடத்தின் எதிரே நின்றபடி ஆராய்ந்தாள் லாரா. "இதில் எவ்வளவு பேர் குடித்தனம் இருக்கிறார்கள்?"

"பதினாறு குடித்தனங்களை வெளியேற்றி விட்டோம், ஆறு பேர் இருக்கிறார்கள்." என்றான் ஹோவார்டு.

"அதாவது பதினாறு அபார்ட்மெண்ட்டுகள் காலியாக இருக்கிறது. இல்லையா?"

ஹோவார்டு அவளைப் புதிராகப் பார்த்தான்.

"ஆமாம். எதற்குக் கேட்கிறாய்?"

"அந்தப் பதினாறு காலி அபார்ட்மெண்ட்டிலும் குடி, வைப்போம்."

"என்னது... வாடகைக்கு விடலாமென்றா சொல்கிறாய்? அதிலே."

"வாடகைக்கு வேண்டாம். இனாமாகக் கொடுப்போம். வீடில்லாதவர்களுக்கு இலவசமாகத் தருவோம். நியூயார்க்கில் ஆயிரக் கணக்கான பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள். அவர்களில் சில பேருக்கு நாம் உதவி செய்வோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரைக் கொண்டு வந்து அந்தக் காலி அபார்ட்மெண்ட்களில் அடையுங்கள். அவர்களுக்குக் கொஞ்சம் உணவு கொடுக்கவும் ஏற்பாடு பண்ணுங்கள்." என்றாள் லாரா.

ஹோவார்டு முகம் சுளித்தான், "இது என்னவோ புத்திசாலித்தனமான ஐடியாவாகத் தோன்றவில்லை."

"ஹோவார்டு, நாம் சமூக சேவையும் செய்வோம். நகரசபை செய்யாத ஒன்றை நாம் செய்வோம். வீடில்லாத ஏழைகளுக்குக் குடியிருப்புக் கொடுப்போம்."

கட்டிடத்தை இன்னும் கூர்ந்து ஆராய்ந்தாள் அவள்.

"அந்த ஜன்னல்களை அடைத்து விடுங்கள்." என்றாள்.

"இடிபாடான பழைய கட்டிடம் என்பது நன்றாகத் தெரிய வேண்டும். மேல் மாடியில் ருஃப் கார்டனுடன் யாரோ குடியிருக்கிறார்கள் இல்லையா?"

"ஏதேனும் ஒரு பெரிய விளம்பரப் பலகையை அங்கே வையுங்கள். ரூஃப் கார்டனிலிருந்து பார்த்தால் தெரு தெரியாதபடி மறைக்க வேண்டும்."

"ஆனால்..."

"நான் சொன்னபடி செய்யுங்கள்."

அலுவலகத்துக்குத் திரும்பிய போது "டாக்டர் பீட்டர்ஸ் உங்களைக் கூப்பிட்டார்." என்று ஆப்ரேட்டர் சொன்னார்.

"போட்டுக் கொடு."

சற்றைக்கெல்லாம் டாக்டர் பேசினார். "உங்கள் செக்ரட்டரியைப் பரிசோதனை செய்தேன்."

"ஒரு கட்டி இருக்கிறது. அபாயமானது என்றே தோன்றுகிறது. உடனே ஆபரேஷன் செய்தால் நல்லது."

"இன்னொரு டாக்டரையும் கேட்போமே?" என்றாள் லாரா.

"கேட்கலாம். ஆனால் இங்கே நான் இந்தப் பிரிவின் தலைவராக இருப்பதால்..."

"அதனாலென்ன? - இன்னொரு டாக்டரிடமும் அபிப்பிராயம் கேட்பதில் தப்பில்லை. இப்போது கேத்தி எங்கே?"

"உங்கள் ஆபீசுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறாள்."

"தாங்க்ஸ் டாக்டர்." என்று கூறிப் போனை வைத்தவள், ஆபரேட்டரிடம், "கேத்தி வந்ததும் என்னிடம் அனுப்பு." என்றாள்.

கேலண்டரைப் பார்த்தாள் லாரா. கட்டிட வேலை தொடங்குவதற்கு இன்னும் முப்பது நாள்தான் இருந்தது. அதற்குள் டார்செஸ்டர் அபார்ட்மெண்ட் உள்பட எல்லாப் பழைய கட்டிடங்களையும் இடித்தாக வேண்டும்.

‘ஆறு குடித்தனக்காரர்கள்... பிடிவாதக்காரர்கள். நல்லது. எத்தனை நாள்தான் தாக்குப் பிடிக்கிறார்கள் பார்க்கலாம்,’ என்று எண்ணிக் கொண்டாள்.

கேத்தி உள்ளே வந்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கி, கண்கள் சிவந்திருந்தன.

"டாக்டர் சொன்னார். கேத்தி, வருத்தப்படாதே." என்றாள் லாரா.

"நான் செத்துவிடப் போகிறேன்." என்றாள் கேத்தி.

லாரா எழுந்து சென்று அவள் இடுப்பை நெருக்கமாக அணைத்துக் கொண்டாள். "அப்படி எதுவும் நேராது, கேன்ஸருக்கு எவ்வளவோ பிரமாதமான சிகிச்சைகள் வந்து விட்டன. உனக்கு, ஆபரேஷன் நடக்கப் போகிறது. நீ ஜம்மென்று இருக்கப் போகிறாய்."

"மேடம், அதற்கெல்லாம் என்னால் செலவு செய்ய..."

"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். டாக்டர் பீட்டர்ஸ் உனக்கு இன்னும் ஒரு டெஸ்ட் ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த டெஸ்டிலும் உனக்குக் கேன்ஸர் தான் என்று தெரிந்தால் உடனே உனக்கு ஆபரேஷன் நடக்கும். இப்போது வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக் கொள்."

32

டுத்த வாரத்தில் ஒருநாள் லாராவைப் பார்க்க ஒருவர் வந்தார்.

"நகர சபை வீட்டு வசதித் துறை கமிஷனரின் ஆபீசிலிருந்து வந்திருக்கிறார். ஓப்ரையான் என்று பெயராம்." என்றாள் ஆபரேட்டர்.

"என்ன விஷயமாம்?"

"அதைச் சொல்லவில்லை."

இன்ட்டர்காம் டெலிபோனில் ஹோவார்டைக் கூப்பிட்டாள் லாரா, "கொஞ்சம் இங்கே வாருங்கள்." என்று சொல்லிவிட்டு,"ஒப்ரையானை உள்ளே அனுப்பு." என்றாள் செக்ரட்டரியரிடம்.

வந்தவர் குண்டு மனிதர். சிவந்த முகம், ஐரிஷ்காரர் என்று தெரிந்தது. "நீங்கள்தான் மிஸ் லாராவா?" என்றார்.

லாரா நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை. "ஆமாம். என்ன காரியமாய் வந்திருக்கிறீர்கள் மிஸ்டர் ஓப்ரையான்?"

"நீங்கள் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு காரியம் செய்திருக்கிறார்கள் மிஸ் லாரா."

"அப்படியா? என்ன விஷயம்?"

"பதினாலாவது தெருவில் இருக்கிற டார்செஸ்டர் உங்களுக்குச் சொந்தமானது இல்லையா?"

"அமாம்."

"வீடில்லாதவர்கள் சுமார் நூறு பேர் அங்கே குடி புகுந்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது."

"ஓ, அதுவா?" லாரா புன்னகை செய்தாள். "வீடில்லாதவர்களுக்காக நகரசபை எதுவும் செய்யாமலிருப்பதால் நாமாவது உதவி செய்யலாமே என்று நினைத்தேன். அவர்களுக்குப் புகலிடம் கொடுத்திருக்கிறேன்."

ஹோவார்டு உள்ளே வந்தான்.

அவனுக்கு ஒப்ரையானை அறிமுகம் செய்து வைத்தாள். இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.

லாரா ஹோவார்டை நோக்கி, "வீடில்லாதவர்களுக்கு வீடு கொடுத்து நகரசபைக்கு நாம் உதவி செய்திருக்கிறோம் இல்லையா? அதைத்தான் மிஸ்டர் ஒப்ரையானிடம் விளக்கிக் கொண்டிருக்கிறேன்." என்றாள்.

"அவர்களை நீங்கள் தான் அழைத்து வந்து குடியேற்றினீர்களா, மிஸ் லாரா?" என்றார் ஒப்னரயான்.

"ஆமாம்."

"அதற்கு நகரசபையின் அனுமதி வாங்கியிருக்கிறீர்களா?"

"அனுமதியா? எதற்கு?"

"வீடில்லாதவர்களுக்குப் புகலிடம் கொடுப்பதென்றால் அதற்கு நகரசபையின் அனுமதியைப் பெற வேண்டும். அந்த விஷயத்தில் சில கண்டிப்பான நிபந்தனைகள் இருக்கின்றன."

"அட்டா, அது தெரியாதே எனக்கு, ஸாரி. அனுமதி வாங்குவதற்கு உடனே ஏற்பாடு செய்கிறேன்."

"அது நடக்காது என்று தோன்றுகிறது."

"என்ன சொல்கிறீர்கள்?"

"அந்தக் கட்டிடத்தில் உள்ள குடித்தனக்காரர்களிடமிருந்து எங்களுக்குப் புகார் வந்திருக்கிறது. தங்களைப் பலவந்தமாய் வெளியேற்ற நீங்கள் முயற்சி பண்ணுகிறீர்கள் என்று சொல்கிறார்கள்."

"நான்சென்ஸ்!" என்றாள் லாரா.

"மிஸ் லாரா, நகரசபை உங்களுக்கு நாற்பத்தெட்டு மணி நேரம் அவகாசம் தருகிறது. அதற்குள் நீங்கள் குடி வைத்துள்ள நபர்களை வெளியேற்றிவிட வேண்டும், அது மட்டுமல்ல. அவர்கள் போனபின் அந்த இடங்களில் ஜன்னல்களை அடைத்திருக்கிறீர்களே. அந்தப் பலகைகளையும் எடுத்துவிட வேண்டும்."

லாராவுக்குக் கோபம் வந்தது. "அவ்வளவுதானா? இன்னும் பாக்கி இருக்கிறதா?"

"இருக்கிறது, மேடம். ரூஃப் கார்டனில் தெருவை மறைக்கிற மாதிரி நீங்கள் விளம்பரப் பலகை வைத்திருக்கிறீர்கள் என்று மேல் மாடி குடித்தனக்காரர் புகார் செய்திருக்கிறார். அதையும் நீங்கள் அகற்றி விட வேண்டும்."

"செய்யாவிட்டால்?"

"செய்துவிட்டால் நல்லது. ஏனென்றால், இதெல்லாம் குடித்தனக்காரர்களுக்குத் தொல்லை தரும் காரியங்கள், சட்டப்படி தப்பு. ஆகவே உங்களைக் கோர்ட்டுக்கு இழுக்கும்படி பண்ணாதீர்கள். உங்களுக்கு வீண் கஷ்டமும் கெட்ட பெயரும் ஏற்படும்." தலையை அசைத்து விட்டு அவர் எழுந்தார். "நான் வருகிறேன்."

அவர் வெளியேறுவதைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள் ஹோவார்டும் லாராவும்.

"அந்த ஜனங்களை நாம் வெளியேற்ற வேண்டியது தான்." என்றான் ஹோவார்டு.

"இல்லை," என்றாள் லாரா, ஏதோ யோசனை செய்த படி

"இல்லை என்றால் என்ன அர்த்தம்? வந்தவர் என்ன சொன்னார், கேட்டாய் இல்லையா?"

"கேட்டேன். நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? மேலும் மேலும் வீடில்லாத ஜனங்களை அழைத்து வந்து குடியேற்றுங்கள். எவ்வளவு பேரை அடைக்க முடியுமோ அவ்வளவு பேரை அடையுங்கள். நகரசபையை எதிர்த்து நாம் வழக்காட வேண்டும். வக்கீல் டெர்ரியைக் கூப்பிட்டு, விஷயத்தைச் சொல்லுங்கள். கோர்ட்டில் ஸ்டே ஆர்டரோ அல்லது அது மாதிரி ஏதாவதோ வாங்கச் சொல்லுங்கள். காலி செய்ய மறுக்கும் அந்த ஆறு குட்டித்தனக்காரர்களை இந்த மாத முடிவுக்குள் வெளியேற்றியாக வேண்டும். இல்லாவிட்டால் முப்பது லட்சம் டாலர் நஷ்டம் ஏற்படும் நமக்கு." என்றாள் லாரா.

இன்ட்டர்காம் அழைத்தது. "டாக்டர் பீட்டர்ஸ் உங்களைக் கூப்பிடுகிறார்." என்றாள் ஆபரேட்டர்.

டெலிபோனை எடுத்தாள் லாரா. "ஹைலோ டாக்டர்."

*உங்கள் செக்ரட்டரி கேத்தியின் ஆபரேஷன் இப்போதுதான் முடிந்தது. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். நல்லபடி நடந்து விட்டது. கேத்தி இனி ஜம்மென்று இருப்பாள்."

"பிரமாதமான செய்தி, டாக்டர். நான் எப்போது வந்து அவளைப் பார்க்கலாம்."

"இன்று சாயந்தரம் வரலாம்."

"வருகிறேன். ரொம்பத் தாங்க்ஸ் டாக்டர். செலவுகளுக்கான பில் மொத்தத்தையும் எனக்கு அனுப்பி விடுங்கள். என்ன?"

"அப்படியே செய்கிறேன்."

"உங்கள் ஆஸ்பத்திரிக்கு நான் நன்கொடை தரப் போகிறேன் என்பதை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் தெரியுங்கள். ஐம்பதாயிரம் டாலர் தருகிறேன்."

ட்ரீஷியா என்ற தன் உதவியாளரைக் கூப்பிட்டு, "கேத்தியின் அறையில் நிறையப் பூங்கொத்து கொண்டு போய் வையுங்கள்." என்றவள், தனது அன்றைய அலுவல்களைப் பற்றிய குறிப்பைக் கவனித்தாள். "சாயந்தரம் நாலு மணிக்கு அவளைப் பார்க்கப் போகிறேன்."

வழக்கறிஞர் டெர்ரி வந்தார்.

"மிஸ் லாரா, உங்களைக் கைது செய்வதற்கு வாரண்ட் வந்து கொண்டிருக்கிறது." என்றார்.

"என்னது?"

"வீடில்லாதவர்களைக் குடியேற்றியிருக்கிறீர்களே, அவர்களை வெளியேற்றும்படி எச்சரிக்கை செய்தார்கள் இல்லையா?"

"ஆமாம். ஆனால்..."

"இதெல்லாம் விளையாடுகிற விஷயமில்லை, மிஸ் லாரா. ஒரு பழைய பழமொழி தெரியுமா? நகரசபையை எதிர்த்துப் போராடாதீர்கள். ஒருபோதும் ஜெயிக்க முடியாது’ என்பார்கள்."

"உண்மையாகவே என்னைக் கைது செய்வார்களா?"

"நிச்சயமாய். அந்த ஜனங்களை வெளியேற்றும்படி உங்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்களே?"

"சரி," என்றாள் லாரா. "அவர்களை வெளியேற்றி விடுவோம்." ஹோவார்டை நோக்கித் திரும்பினாள். "அவர்களை அனுப்பிவிடுங்கள். ஆனால் அவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்காதீர்கள். அது நியாயமல்ல. வெஸ்ட் 26 பகுதியில் சில வீடுகளை மாற்ற வேண்டும் என்று வைத்திருக்கிறோம் இல்லையா? அவை காலியாகத்தானே இருக்கின்றன? அவர்களை அங்கே இருக்கச் சொல்வோம். அந்த விஷயத்தில் என்னென்ன உதவி தேவைப் பட்டாலும் செய்யுங்கள். ஒரு மணி நேரத்தில் அவர்கள் போய்விட வேண்டும்."

பிறகு வழக்கறிஞரிடம், "கைது வாரண்ட்டுடன் போலீசார் வரும் போது நான் இங்கே இருக்க வேண்டாம், வெளியே போய்விடுகிறேன். அவர்கள் வருவதற்குள் பிரச்னை முடிந்திருக்கும்." என்றாள்.

இன்டர்காம். கூப்பிட்டது. "போலீஸ் அலுவலகத்திலிருந்து இரண்டு பேர் கைது வாரண்ட்டுடன் வந்திருக்கிறார்கள்."

ஹோவார்டுக்கு ஜாடை காட்டினான் லாரா. அவன் இன்ட்டர்காமிடம் சென்று, "மிஸ் லாரா இங்கே இல்லை." என்றான்.

சிறிது மெளனம். "எப்போது வருவார் என்று கேட்கிறார்கள்." என்றது இன்டர்காம்.

ஹோவார்டு லாராவைப் பார்த்தான். தெரியாது என்று சொல்லும்படி ஜாடை காட்டினாள் லாரா. "தெரியவில்லை", என்று சொல்லிவிட்டு இன்டர்காமை மூடினான் ஹோவார்டு.

"நான் பின் வழியாகப் போய் விடுகிறேன்." என்று லாரா எழுந்து கொண்டாள்.

லாராவுக்கு ஆஸ்பத்திரி என்றாலே வெறுப்பு. உடம்பு சரியில்லாமல் அவள் அப்பா படுத்திருந்த காட்சி நினைவு வரும். ‘என்ன இழவுக்கு இங்கு வந்தாய்? போர்டிங் ஹவுசில் வேலை இருக்கிறது. அதை விட்டு விட்டு இங்கே யார் உன்னை வரச் சொன்னார்கள்?’ என்று அவர் கத்தியது

ஞாபகம் வரும்.

கேத்தி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். ஏகப்பட்ட பூங்கொத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன. படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தாள் கேத்தி.

"எப்படி இருக்கிறாய்?" என்று லாரா கேட்டாள்.

கேத்தி புன்னகை செய்தாள். "இனி மேல் ரொம்ப நன்றாக இருப்பேன் என்று டாக்டர் சொன்னார்."

"சீக்கிரம் குணமானால் நல்லது. வேலைகள் குவிந்திருக்கின்றன. நீ வந்தால்தான் எனக்குத் தேவலை."

"நான்... உங்களுக்கு எப்படி... இதற்கெல்லாம் நன்றி சொல்வதென்றே தெரியவில்லை."

"சொல்ல வேண்டாம்." என்றாள் லாரா. பிறகு படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த போனை எடுத்துத் தன் ஆபீசுக்குப் போட்டாள். "அந்தப் போலீஸ் ஆட்கள் இன்னும் இருக்கிறார்களா அங்கே?"

"இருக்கிறார்கள். நீங்கள் வரும்வரை இங்கேதான் இருக்கப் போகிறார்களாம்."

"ஹோவார்டிடம் சொல்லு. அந்தப் பிளாட்பாரம் வாசிகளை அவர் அனுப்பி வைத்தவுடன் நான் வருகிறேன்." டெலிபோனைத் திரும்ப வைத்தாள். "உனக்கு ஏதாவது தேவையானால் உடனே சொல்லு." என்றாள் கேத்தியரிடம். "நாளைக்கு மறுபடி வந்து பார்க்கிறேன்."

அடுத்து ஆர்க்கிடெக்ட் மிஸ்டர் கிளார்க்சின் அலுவலகத்துக்குச் சென்றாள். கிளார்க்கின் அறைக்குள் சென்றதும் அவர் எழுந்து கொண்டார்.

"என்ன ஒரு சந்தோஷமான ஆச்சரியம், மிஸ் லாரா! ஏதாவது வேலையா..."

"ஆமாம், பதினாலாம் தெரு பிராஜெக்டுக்கான பிளான்கள் இங்கே இருக்கிறதா?"

"ஓ இதோ." என்றவர், படம் மாட்டியுள்ள இடத்தைக் காட்டினார்.

அடுக்கு மாடிக் கட்டிடமும் அதைச் சுற்றிக் கடைகளும் குடியிருப்பு அபார்ட்மெண்ட்களும் மிக அழகாக வரையப்பட்டிருந்தன.

"இதை மாற்றி வரைய வேண்டும்." என்றாள் லாரா.

"என்னது?"

அந்தப் படத்தின் நடுவே இருந்து ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினாள் லாரா. "இங்சே. ஒரு பழைய கட்டிடம் இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டு, மற்றபடி இதே போல் எல்லாப் பகுதிகளையும் வரைபடங்கள்."

"ஒரு பழைய கட்டிடத்தை விட்டுவிட்டு மற்றதெல்லாம் கட்டும்படியாகவா சொல்கிறீர்கள்? முடியாதே! முதலாவதாக, அந்தப் பழைய கட்டிடம் பார்வைக்கு மகா கோராம்."

"ப்ளீஸ், நான் சொன்னபடி செய்து, இன்று பிற்பகல் என் ஆபீசுக்கு அனுப்புங்கள்." என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள்.

காரில் சென்று கொண்டிருந்தபோது வழக்கறிஞர் டெர்ரிக்குப் போன் செய்தாள். "ஹொவார்டிடமிருந்து தகவல் வந்ததா?"

"ஆமாம், அந்த நடைபாதைவாசிகளை வெளியேற்றி விட்டோம்."

"நல்லது. நகரசபை அதிகாரியைப் போனில் கூப்பிட்டு, அவர்களை வெளியேறும்படி நான் ரெண்டு நாள் முன்பே சொல்லிவிட்டதாயும், ஆனால் என் ஆபீஸில் உள்ளவர்கள் அதை அவர்களுக்குச் சரியானபடி சொல்லவில்லை என்றும் சொல்லுங்கள். அவர்கள் காலி செய்யவில்லை என்றும் இன்று எனக்குத் தெரிந்ததும் மறு நிமிடமே அவர்களை வெளியேற்றி விட்டேன் என்றும் சொல்லுங்கள். இனிமேலும் என்னைக் கைது செய்ய வேண்டியாதுதானா என்று கேளுங்கள். நான் ஆபீசுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்."

பிறகு கார் டிரைவரிடம், "பார்க்கைச் சுற்றிக் கொண்டு மெதுவாகவே ஆபீசுக்குப் போ, நேரமாகட்டும்." என்றாள்.

அவன் தன் அலுவலகத்தை அடைந்த போது போலீஸ் ஆட்கள் போய்விட்டிருந்தார்கள்.

அடுத்த வாரம் ஹோவார்டுடனும் வழக்கறிஞர் டெர்ரியுடனும் பேசிக் கொண்டிருந்தபோது.

"ஆர்க்கிடெக்ட் மிஸ்டர் கிளார்க்கைப் பார்த்து, புதிய வரை படம் போட்டுத் தரச் சொன்னேன்." என்றாள் லாரா.

"நான் அதைப் பார்த்தேன்." என்றான் ஹோவார்டு. "ரொம்ப அபத்தமாய் இருக்கிறது. பிரம்மாண்டமான புதிய அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு மத்தியில் அந்த அரதப் பழசு கட்டிடத்தை விட்டு வைப்பதாவது! பாங்க்குக்குப் போய், நாம் வேலை ஆரம்பிக்கும் தேதியை இன்னும் கொஞ்சம் ஒத்திப் போடலாமா என்று கேட்போம்."

"வேண்டாம்." என்றான் லாரா. "தேதியை இன்னும் கொஞ்சம் முன்னே வைத்துக் கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன்."

"ஆ! என்னது!"

"காண்டிராக்டரிடம் போங்கள். புல்டோஸர் மூலம் இடித்துத் தள்ளும் வேலையை நாளைக்கே ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்." என்றாள் லாரா.

33

டுத்த நாள் பொழுது விடிந்தது. காலி செய்ய மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்த ஆறு டார்செஸ்டர் குடித்தனக்காரர்களும் திடுக்கிட்டுக் கண் விழித்தார்கள்.

டொம் டொம்மென்று சத்தம் புல்டோபர் யந்திரங்களின் கர்ஜனை!

ஜன்னல்களை திறந்து எட்டிப் பார்த்தார்கள். பெரும் அதிர்ச்சி

அவர்களுக்கு இரண்டு பக்கமும் இருந்த கட்டிடங்கள் இடிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. ஒரு ராட்சத ரோடு இஞ்சின் இடிபாடுகளின் மீது ஒடித் தரையைச் சமனப் படுத்திக் கொண்டிருந்தது.

மேல் மாடியில் வசிக்கும் ஹெர்சி என்பவர் வெளியே விரைந்து ஃபோர்மனிடம் சென்றார். "என்ன இதெல்லாம்? யாரைக் கேட்டுக் கொண்டு இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கத்தினார்.

"யாரைக் கேட்க வேண்டும்?"

"நகரசபை." என்றார் ஹெர்ஷி. தாங்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட்டைச் சுட்டிக் காட்டி, "அந்தக் கட்டிடத்தை நீங்கள் தொடக் கூடாது." என்றார்.

ஃபோர்மேன் தன் முன்னேயிருந்த வரைபடத்தைப் பார்த்தார். "நீங்கள் சொல்வது ரொம்பச் சரி. அந்தக் கட்டிடத்தை அப்படியே விட்டு வைக்கும்படிதான் எங்களுக்கும் உத்தரவு."

ஹெர்சி குழம்பினார். "அப்படியா? எங்கே நான் பார்க்கிறேன்." என்றவர் வரைபடத்தைப் பார்த்தார். அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார். "இங்கே பெரிய அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டப் போகிறார்கள். ஆனால் எங்களை விட்டுவிடப் போகிறார்கள்? அப்படியா?"

"அப்படியேதான் மிஸ்டர்."

"அதெப்படி.? இந்தச் சத்தம்? இந்தப் புழுதி?"

"அது என் பிரசினையல்ல. தயவு செய்து விலகுகிறீர்களா? நான் என் வேலையைக் கவனிக்க வேண்டும்."

அரை மணி சென்றது.

லாராவை அவள் செக்ரட்டரி கூப்பிட்டு, "ஹெர்ஷி என்று நேருவர் உங்களுடன் பேச வேண்டுமாம். போனில் இருக்கிறார்." என்றாள்.

"நான் இல்லையென்று சொல்லிவிடு."

அன்று மாலை மூன்றாவது முறையாக ஹெர்ஷி போன் செய்த பிறகு, லாரா போனை எடுத்தாள், "வணக்கம் மிஸ்டர் ஹெர்ஷி. என்ன வேண்டும்?"

"உங்களை வந்து பார்க்க வேண்டும், மிஸ் லாரா."

"நான் கொஞ்சம் பிஸியாயிருக்கிறேன். என்ன விஷயமானாலும் போனிலேயே சொல்லுங்கள்."

"நல்லது. உங்களுக்கு ஒரு சந்தோஷ சமாசாரம். நானும் மற்றக் குடித்தனக்காரர்களும் கலந்து பேசினோம். நீங்கள் கொடுப்பதாகச் சொன்ன தொகையை வாங்கிக் கொண்டு இடத்தைக் காலி செய்து விடுவதென்று முடிவு செய்திருக்கிறோம்."

"இல்லை மிஸ்டர் ஹெர்ஷி, அப்போது சொன்னது அப்போதோடு போய்விட்டது. நீங்கள் உங்கள் விருப்பப்படி உங்கள் கட்டிடத்திலேயே இருந்து கொள்ளலாம்." என்றாள் லாரா.

"எங்கள் அபார்ட்மெண்ட்டைச் சுற்றி நீங்கள் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்தால் எங்களுக்குத் தூக்கமே போய்விடுமே?"

"உங்களைச் சுற்றி அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டப் போகிறோம் என்று யார் சொன்னது?" என்றாள் லாரா அதட்டலான குரலில், "அந்தத் தகவல் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?"

"அங்கே வேலை பார்க்கிற ஃபோர்மன்தான் ப்ளூ ப்ரின்ட்டைக் காட்டினார்."

"ஓ! இன்றே அவரை வேலையிலிருந்து நீக்கி விடுகிறேன்." என்றாள் லாரா. "ரொம்ப ரகசியமாக வைத்திருந்தோம் அந்த விஷயத்தை."

"பதட்டப்படாதீர்கள். இரண்டு பேரும் அமைதியாகப் பேசுவோமே, என்ன? நாங்கள் காலி செய்துவிட்டால் நீங்கள் இடத்தை இன்னும் அழகாகக் கட்ட முடியும். எங்களுக்கும் அது நல்லது. பிரம்மாண்டமான அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு நடுவே வசிப்பது எங்களுக்கும் அசிங்கம்."

"நீங்கள் அப்படியே இருந்தாலும் சரி. காலி செய்தாலும் சரி, எனக்கு ஒன்றுதான்." என்றாள் லாரா. பிறகு அவள் குரலில் மென்மை தொனித்தது. "வேண்டுமானால் ஒன்று செய்கிறேன். அடுத்த மாதத்துக்குள் நீங்கள் காலி செய்துவிட்டால் நான் அதற்குண்டான தொகை தருகிறேன். ஆனால் முதலில் சொன்ன தொகைதான், இரண்டாவதாகச் சொன்னது அல்ல."

ஹெர்ஷி சிறிது மெளனமாக இருந்தார். யோசிக்கிறார் என்று லாரா ஊகித்தாள்.

இறுதியாய் வேறு வழியில்லாதவராக ஹெர்ஷி சொன்னார்: "நல்லது. இதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுகிறேன். ஆனால் எல்லாரும் ஒப்புக் கொள்வார்கள் என்று தான் நினைக்கிறேன். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, மிஸ் லாரா."

"எனக்கும் ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் ஹெர்ஷி." என்றாள் லாரா.

அடுத்த மாதம் தங்கு தடையில்லாமல் கட்டிட வேலைகள் ஆரம்பமாயின.

நாளுக்கு நாள் லாராவின் புகழ் பெருகிக் கொண்டிருந்தது.

வாஷிங்டனிலும், டல்லாஸியிலும், லாஸ் ஏஞ்சல்சிலும், அமெரிக்காவின் எல்லாப் பகுதிகளிலும் அவள் கட்டிய கட்டிடங்கள் வானை முட்ட எழுந்து நின்றன. பாங்க்குகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் தனியார் ஸ்தாபனங்களும் அவளுக்கு நிதியுதவி அளிக்கப் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தன. லாரா என்பது அசைக்க முடியாத பெயராக நிலைத்தது.

அன்று ஆபரேஷனுக்குப் பின் குணமடைந்து கேத்தி வேலைக்குத் திரும்பினாள்.

"நான் வந்துவிட்டேன், மேடம்."

லாரா அவளை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தாள். "எப்படி இருக்கிறாய்?"

கேத்தி புன்னகை செய்தாள். "நன்றாக இருக்கிறேன். எல்லாம் உங்கள்..."

"உடம்பில் நல்ல தெம்பு இருக்கிறதா?"

அந்தக் கேள்வி கேத்திக்குத் திகைப்பு ஏற்படுத்தியது. "ஏன்... நான்..."

"நல்லது. நிறையத் தெம்பு உனக்குத் தேவைப்படும். என்னுடைய எக்ஸிக்யூடிவ் அஸிஸ்டென்ட்டாக உனக்குப் பதவி உயர்வு தரப் போகிறேன், சம்பளத்திலும் நல்ல உயர்வு இருக்கும்."

"மேடம், நான்... எப்படி... உங்களுக்கு நன்றி..."

"உனக்குத் தகுதி இருப்பதால்தான் பதவி உயர்வு கிடைக்கிறது. கேத்தி."

கேத்தியரின் கையில் ஒரு காகிதம் இருப்பதைக் கவனித்தாள் லாரா. "என்ன அது. கேத்தி?"

"கோமெட் பத்திரிகையிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கான சமையல் குறிப்பும் தேவையாம், சொல்கிறீர்களா?"

"ஊகூம். நான் ரொம்ப பிஸி..." என்று ஆரம்பித்தவள், "இரு," என்றாள். ஒரு நிமிஷம் யோசனையில் ஆழ்ந்தவளாக உட்கார்ந்திருந்தான். பிறகு, "சொல்கிறேன், எழுதிக் கொள்." என்றாள்.

மூன்று மாதம் கழித்து அந்தச் சமையல் குறிப்பு ‘கோமெட்’ பத்திரிகையில் வெளிவந்தது.

"கறுப்பு பன் - இது ஒரு பிரபலமான ஸ்காட்லாந்து சிற்றுண்டி. அரைப் பவுண்டு மாவில் கால் பவுண்டு வெண்ணெய் வைத்து, சிறிது குளிர்ந்த நீர் தெளித்து, அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் போட்டு."

வெகு நேரம் அந்தக் கட்டுரையைப் பார்த்தபடியே இருந்தாள் லாரா. கிளேஸ் பே லாட்ஜின் சமையலறையும் அங்கே இந்த உணவைச் செய்ததும் அதன் மணமும் அவள் நினைவில் மோதின. கூடவே கைகால் அசைவில்லாமல் கிடந்த அப்பா.

பத்திரிகையை மூடி வைத்தாள் லாரா.

லாரா தெருவில் செல்லும்போது மக்கள் அவளை அடையாளம் கண்டு கொண்டனர். ரெஸ்டாரெண்டுக்குள் அவள் நுழைந்தால் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் பரபரப்புடன் சிசுகிசுப்பாகப் பேசினார்கள் அவள் எங்கே சென்றாலும் ஐந்தாறு பிரம்மசாரிகள் அவள் பின்னாலேயே சென்றார்கள். பல பெரிய இடத்துப் புள்ளிகள் அவளை மணக்க முன்வந்தார்கள். ஆனால் அதிலெல்லாம் லாராவுக்கு அக்கறை இருக்கவில்லை. ஏதோ ஒரு முகத்தை அவன் மனம் தேடிக் கொண்டிருந்தது. பழக்கமான முகம்... ஆனால் இதுவரை பார்த்திராத முகம்...

தினந்தோறும் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொள்வாள். மேக்ஸ் என்ற அவளுடைய டிரைவர் காரை எடுத்து வருவான். கட்டிட வேலை நடக்கும் இடத்துக்கு அவளை அழைத்துப் போவான்.

கட்டிடத்தை வெறித்துப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றிருப்பாள் லாரா. ‘நீங்கள் என்னைப் பற்றி நினைத்தது தப்பு, அப்பா,’ என்று சொல்லிக் கொள்வாள்.

சுத்தியல்களின் டணால் டணால்களும், புல்டோஸர்களின் ரீங்காரங்களும், உலோகங்கனின் கிறீச்சிடல்களும் தான் காலை வேளைகளில் லாராவை எழுப்பலாயின. கசாமுசாவென்று ஆடுகின்ற லிஃப்டில் ஏறி உச்சத்தை அடைவாள். உருக்கு கர்டர்களின் மேல் ஏறி நின்று பார்ப்பாள். காற்று முகத்தில் வீசும். இந்த நகரம் எனக்குச் சொந்தம் என்று எண்ணிக் கொள்வாள்.

லாராவின் படுக்கை அறை.

"இன்றைக்கு நீ இரண்டு ஆட்களை வேலையிலிருந்து நிறுத்தி விட்டாயாமே?" என்று கேட்டார் பால் மார்ட்டின்.

"வேறு வழியில்லை. வேலையில் ரொம்ப மோசம்." என்றாள் லாரா.

பால் மார்ட்டின் கேலியாகச் சிரித்தார். "நல்ல காலம், கன்னத்தில் அறையாமல் இருந்தாயே? அந்த மட்டில் தேறிவிட்டாய்!"

"ஆனால் ஓர் ஆளைக் கன்னத்தில் அறைந்தபோது என்ன நேர்ந்தது என்று நினைத்துப் பாருங்கள்." என்றாள் லாரா. "அதனால்தான் உங்களை நான் சந்தித்தேன்."

"உண்மைதான்." என்றார் பால் மார்ட்டின். "அதிருக்கட்டும், நான் ஒரு வேலையாக லாஸ் ஏஞ்செலீஸுக்குப் போகிறேன். நீயும் வந்தால் எனக்குச் சந்தோஷமாக இருக்கும். இங்குள்ள வேலைகனளக் கொஞ்ச நாளைக்கு நிறுத்திக் கொண்டு என்னுடன் வர முடியுமா?"

"எனக்கு வர இஷ்டம்தான். பால். ஆனால் முடியாது. ஒரு நிமிடம்கூட ஒழிவில்லை. அவ்வளவு நெருக்கடி."

பால் மார்ட்டின் எழுந்து உட்கார்ந்து அவளை உற்று நோக்கினார். "வர வர நீ ரொம்ப பிஸியாகிக் கொண்டிருக்கிறாய். இப்படியே போனால் என்னைக் கூடப் பார்க்க நேரமில்லையென்று சொல்லி விடுவாய் போலிருக்கிறது."

லாரா புன்னகை செய்தாள். "கவலைப்படாதீர்கள். அது மட்டும் ஒரு நாளும் நேராது."

தினம் தினம் அந்தக் காலி மனையைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் லாரா. ஆனால் அங்கே கட்டிடம் ஒன்று கட்டலாம் என்ற எண்ணம் இப்போதுதான் திடீரென்று தோன்றியது.

வால் ஸ்ட்ரீட் பகுதியில், உலக வர்த்தக மையத்துக்கு அருகே அந்த இடம் இருந்தது. உலகத்திலேயே உயரமான கட்டிடம் ஒன்று கட்டவேண்டுமென்று அவள் வெகு நாளாக எண்ணியிருந்தாள். அது இந்த இடத்தில்தான் என்று தோன்றியது.

ஹோவார்டு என்ன சொல்வானென்று அவளுக்குத் தெரியும், ‘அதெல்லாம் உன் கற்பனைதான். இதுவே உன்னால் இறங்க முடியாது.’ என்று சொல்லுவான். ஆனால் எதுவும் தன்னை நிறுத்த முடியாது என்று அவள் உறுதியாக நம்பினாள்.

அலுவலகத்தை அடைந்ததும் ஊழியர்களைக் கூட்டி, தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.

"வால்ஸ்ட்ரீட் ஏரியாவில் உள்ள மனையை நாம் வாங்கப் போகிறோம். உலகத்திலேயே மிக உயரமான கட்டிடத்தை அங்கே கட்டப் போகிறோம்."

"லாரா..."

"பொறுங்கள், ஹோவார்டு. நான் சொல்லி முடிக்கிறேன். அந்த இடம் பல வகையிலும் அருமையானது. பிஸினஸ் பகுதியின் நடு மத்தியில் இருக்கிறது அது. அலுவலகத்துக்கு இடம் கிடைக்கிறதென்றால் எல்லாரும் போட்டி போடுவார்கள். இன்னொன்றும் ஞாபகம் இருக்கட்டும். உலகத்திலேயே உயரமான கட்டிடமாக இது இருக்கப் போகிறது. அது பெரிய சமாசாரம். அதன் உச்சியில் நமது கொடி பறக்கப் போகிறது. லாரா டவர்ஸ் என்று அதற்குப் பெயர் சூட்டப் போகிறோம்."

"இதற்கெல்லாம் பணம்?" என்று கேட்டான் ஹோவார்டு.

34

லகத்திலேயே உயரமான கட்டிடம் கட்டுவதற்கு பணத்துக்கு எங்கே போவது என்று ஹோவார்டு கேட்டதும்,

- ஒரு சில காகிதத்தை ஹோவார்டிடம் நீட்டினாள் லாரா.

அதில் அவள் விவரங்களைக் குறித்து வைத்திருந்தாள்.

ஹோவார்டு அதை ஆராய்ந்தான். "உனக்குத் தன்னம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி, லாரா."

"நான் யதார்த்தமாகக் கணக்கிட்டிருக்கிறேன். அவ்வளவு தான், நாம் திட்டமிடுவது ஏதோவொரு சாதாரணக் கட்டிடத்துக்காக அல்ல, ஒரு விலையுயர்ந்த ஆபரணத்தைப் பற்றிப் பேசுகிறோம்." என்றாள் லாரா.

ஹோவார்டு வெகு தீவிரமாக யோசனை செய்தான். "கடைசிப் பைசா வரையில் காலியாகும் போலிருக்கிறதே?"

"பரவாயில்லை. இதற்கு முன்பும் இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டு நாம் வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறோம்." என்று புன்சிரிப்புடன் சொன்னாள் லாரா.

பிறகும்கூட ஹோவார்டு யோசனையுடன். "உலகத்திலேயே உயரமான கட்டிடம்..." என்று இழுத்தான்.

"ஆமாம். சாதாரணமாகவே பாங்க்குகளில் தினம் தினம் தமக்குப் பணம் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இந்தத் திட்டத்தைக் கேட்டால் குதிப்பார்கள்!"

"குதிப்பார்கள், குதிப்பார்கள். அவர்களுக்கு என்ன?" என்றான் ஹோவார்டு, பிறகு லாராவை நோக்கி, "நிஜமாகவே இந்தத் திட்டத்தை நீ விரும்புகிறாயா?" என்றான்.

ஹோவார்டு ஒரு பெருமூச்சை வெளியிட்டு, எல்லாரையும் ஒரு முறை பார்த்தான், "சரி, அந்த இடம் விலைக்கு வருகிறதா என்று விசாரிப்போம்." என்றான்.

"ஏற்கனவே நான் விசாரித்து விட்டேன். உங்களுக்கு இன்னொன்று சொல்கிறேன். ஸ்ருவ் மர்ச்சிஸன் அந்த இடத்தை வாங்கப் பேரம் செய்து கொண்டிருக்கிறான்."

"ஓ, அவரா" சிகாகோவில் அவர் வாங்குவதாக இருந்த இடத்தை நாம் பறித்து ஓட்டல் கட்டினோமே? நினைவிருக்கிறது."

‘இந்த முறை உன்னை விட்டு விட்டேன், பெண்ணே, ஆனால் இன்னொரு தடவை என் வழியில் குறுக்கிடாதே. உஷார் காயம் பட்டுக்கொள்வாய்’ என்று அன்று அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

நியூயார்க்கில் ரியல் எஸ்டேட் துறையில் மிகப் பெரிய ஆனாக, தயவு தாட்சண்யம் பார்க்காத முரடனாக வளர்ந்து வந்தார் மர்ச்சிஸன்.

"லாரா, அவன் ரொம்ப மோசமான பேர்வழி. ஆள் அகப்பட்டால் ஒழித்து விடுவான்." என்றான் ஹோவார்டு.

"நீங்கள் ரொம்ப ஜாஸ்தியாகக் கவலைப்படுகிறீர்கள்." என்றாள் லாரா.

‘லாரா டவர்ஸ்’ கட்டுவதற்கான நிதியுதவிகள் தடையில்லாமல் கிடைத்தன. உலகத்திலேயே உயரமான கட்டிடம் என்றதும் அதிலே பங்கு பெறுவதற்குப் பாங்குக்காரர்களிடையே ஒரு பரபரப்பு ஏற்பட்டது. லாரா என்ற பெயரில் ஒரு மோகன சக்தி இருந்தது. அவளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள எல்லாரும் ஆவலாக இருந்தார்கள்.

லாரா வெறும் கவர்ச்சிக் கன்னியாக மட்டும் இருக்கவில்லை. அதற்கு ஒருபடி மேலாகவே விளங்கினாள். உலகத்துப் பெண்களுக்கெல்லாம் அவள் முன்மாதிரியாக, கிட்டத்தட்ட ஒரு தெய்வம் போலத் திகழ்ந்தாள். ஒரு பெண்ணினால் இவ்வளவு சாதிக்க முடிந்திருக்கிறது. நம்மால் மட்டும் முடியாதா?’ என்று ஒவ்வொரு பெண்ணும் நினைத்தாள். ஒரு வாசனை சென்ட்டுக்கு அவள் பெயர் சூட்டப்பட்டது. எல்லா முக்கியமான பொது நிகழ்ச்சிகளுக்கும் அவளை அழைத்தார்கள். டின்னர் பார்ட்டிகள் நடத்துகிறவர்கள் அவள் கலந்து கொள்ள வேண்டுமென்று ஆர்வமாக இருந்தார்கள். எங்கேயாவது அவள் பெயரில் ஒரு கட்டிடம் எழும்புகிறதென்றால் நிச்சயம் அது வெற்றி தான் என்பது உறுதியாயிற்று.

"கட்டிட தொழிலாளர்களை நாம் சொந்தமாகவே அமர்த்திக் கொண்டாலென்ன?" என்று ஒரு நாள் ஹோவார்டிடம் சொன்னான் லாரா. "எல்லாரும் ரெடியாகக் கைவசம் இருக்கிறார்கள். நமக்கு வேலையில்லாதபோது மற்றவர்களுக்கும் விடலாம்."

"நல்ல யோசனைதான்," என்றான் ஹோவார்டு.

"அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பியுங்கள்." என்றாள் அவள். "லாரா டவர்ரைக்கான அஸ்திவாரம் எப்போது தோண்டப் போகிறோம்?"

"கிரயம் பண்ணுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று மாதத்தில் அஸ்திவார வேலை ஆரம்பித்துவிடலாம் என்று நினைக்கிறேன்."

லாரா நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். "கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஹோவார்டு. உலகத்திலேயே உயரமான கட்டிடம் எப்படி?"

ஃபிராய்டு போன்ற மனத்தத்துவ நிபுணர்தான் இவளுடைய உள்ளத்தின் ஆழத்தை அறிய முடியும் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

அஸ்திவாரம் தோண்டும் நிகழ்ச்சி ஒரு பெரிய விழா போல ஆரம்பித்தது.

அமெரிக்காவின் இளவரசியாக லாரா வரப் போகிறாள்! எல்லாரும் மூச்சுப் பிடித்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

பத்திரிகைகளிலும் டெலிவிஷன்களிலும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிரமாதமான செய்திகள் வெளி வந்திருந்தன. முக்கியமான புள்ளிகள் இருநூறு பேர் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்தார்கள். அத்தனை பேரும் அவள் வருகைக்காக வழிமேல் விழி வைத்து நின்றார்கள்.

லாராவின் வெள்ளை லிமொஸின் கார் வந்ததும் கூட்டத்தில் பரபரப்பு!

"அதோ வந்துவிட்டாள்."

லாரா காரிலிருந்து இறங்கி, கட்டிட மனையை நோக்கி நடந்தாள். மேயருக்கு வணக்கம் சொல்வதற்காக. கூட்டத் தினரைப் பின்னே தள்ளப் போலீசாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் அரும்பாடுபட்டனர். ஜனங்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டுக் கொண்டு, அவன் பெயரைக் கூவிக் கொண்டு முன்னே வருவதற்கு முண்டினார்கள். காமெரா ஃப்ளாஷ் பல்புகள் பனீர் பளீரென மின்னித் தெறித்தன.

பெரிய புள்ளிகள் நிற்பதற்கான இடம் தனியே போலீஸ் பந்தோபஸ்துடன் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே பாங்க்கர்களும் விளம்பர நிறுவனங்களின் தலைவர்களும் கம்பெனி டைரக்டர்களும் காண்ட்ராக்டர்களும் பிராஜக்ட் நிர்வாகிகளும் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்க்கிடெக்டுகளும் குழுமியிருந்தார்கள். நூறு அடி தள்ளி புல்டோபர் இயந்திரங்களும் மண் தோண்டும் இயந்திரங்களும் நின்றிருந்தன.

வேலையை ஆரம்பிப்பதற்குத் தயாராக, வெட்டிய மண்ணை எடுத்துச் செல்வதற்கு ஐம்பது லாரிகள் சித்தமாக நின்றன.

மேயருக்கும் நகரசபைத் தலைவருக்கும் அருகே லாரா நின்றிருந்தாள். லேசாகத் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. லாரா நிறுவனங்களின் விளம்பரப் பிரிவின் தலைவரான ஜெர்ரி ஒரு குடையுடன் ஓடி வந்தான். லாரா ஒரு புன்னகையுடன் கையை வீசி அவனைத் திருப்பி அனுப்பினாள்.

டி. வி, காமெராக்களை நோக்கியவாறு மேயர் பேசினார்: "நமது நகருக்கு இன்று ஒரு மகத்தான தினம். லாரா டவர்ஸாக்கான அஸ்திவாரம் போடும் இந்த நிகழ்ச்சி, இந்த நகரின் ரியல் எஸ்டேட் சரித்திரத்தில் ஒரு பிரமாதமான ஆரம்பமாகும். உலகத்திலேயே உயரமாக எழும்பப் போகும் இந்தக் காம்ப்ளெக்ஸில் மக்கள் வசிப்பதற்கான அபார்ட் மெண்ட்டுகளும் ஷாப்பிங் ஸென்ட்டர்களும் மீட்டிங்குகள் நடத்துவதற்கான அரங்கங்களும் இருக்கப் போகின்றன."

கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரித்தார்கள்.

அடுத்து லாரா இதுவரை என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறாள் என்பதை விவரித்தார். பிறகு, லாராவை நோக்கிப் புன்னகை செய்து, "மிஸ் லாரா கெட்டிக்காரி மட்டு மல்ல, சிறந்த அழகியும் கூட" என்றார்.

கூட்டத்தினர் மகிழ்ந்து சிரித்து, மறுபடி கைதட்டினார்கள், "இப்போது மிஸ் லாராவைப் பேச வருமாறு அழைக்கிறேன்."

லாரா டெலிவிஷன் காமெராக்களை நோக்கி நின்று கொண்டாள்.

அவள் முகத்தில் மகிழ்ச்சி பரவியிருந்தது. "மிக்க நன்றி, மேயரவர்களே. நமது அதியற்புதமான இந்த நகரத்துக்கு என்னாலும் சிறிய அளவில் ஏதோ செய்ய முடிந்தது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் தந்தை அடிக்கடி சொல்வார்..." என்று சொல்லிக் கொண்டிருந்தபோது அவள் பேச்சில் ஒரு வினாடி தயக்கம் ஏற்பட்டது. காரணம், கூட்டத்தினரிடையே ஒரு குறிப்பிட்ட முகத்தை ஒரக் கண்ணால் அவள் கவனித்து விட்டாள்.

ஸ்டீவ் மர்ச்சிஸன்.

பத்திரிகைகளில் அவருடைய புகைப்படத்தைப் பார்த்திருக்கிறாள். இங்கே என்ன செய்கிறார் அந்த ஆள்?

அரை வினாடிக்கெல்லாம் சுதாரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள். "என் தந்தை அடிக்கடி என்ன சொல்வாரென்றால், இந்த உலகம் நாம் வந்தபோது இருந்ததைக் காட்டிலும் நாம் போகும்போது சற்றே முன்னேறியிருக்க வேண்டும். அந்த மாதிரி நாம் ஏதாவது சாதனை செய்திருக்க வேண்டும் என்று சொல்வார். அந்த வகையில் என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்திருப்பதாக நம்புகிறேன்."

மேலும் கரகோஷம் எழுந்தது.

லாராவுக்குத் தொழிலாளர் தொப்பியும் குரோமியம் பூசிய கரணையும் கொடுத்தார்கள்.

"ஆரம்பிக்கலாம். மிஸ் லாரா."

காமெராக்கள் மீண்டும் பளிச்சிட்டன. லாரா பூமியில் கரணையால் வெட்டிக் கொஞ்சம் மண்ணை அள்ளி வெளியே போட்டாள்.

நிகழ்ச்சி முடிந்ததும் எல்லாருக்கும் பானங்கள் வழங்கப்பட்டன. டெலிவிஷன் காமெராக்கள் ஒவ்வொன்றையும் படம் பிடித்துக் கொண்டிருந்தது...

லாரா மீண்டும் நோக்கியபோது மர்ச்சிஸனை எங்கேயும் காணோம்.

முப்பது நிமிடம் கழித்து லாரா லிமொஸினில் ஏறி அலுவலகத்துக்குப் புறப்பட்டாள். விளம்பர நிர்வாகியான ஜெர்ரி அருகில் உட்கார்ந்திருந்தான்.

"எல்லாம் பிரமாதமாய் நடந்துவிட்டது. இல்லை? மகா பிரமாதம்!" என்றான் ஜெர்ரி.

"பரவாயில்லை," என்று லாரா சிரித்தாள்.

"தாங்க்ஸ் ஜெர்ரி."

லாரா ஸென்ட்டரின் ஐம்பதாவது மாடி மொத்தமும் லாராவின் அலுவலகம் ஆக்கிரமித்திருந்தது.

லிஃப்டிலிருந்து லாரா வெளிபட்டதும் அலுவலகம் சுறுசுறுப்படைந்தது. அவள் வந்து கொண்டிருப்பதை அறிந்ததும் செக்ரட்டரிகளும் ஊழியர்களும் பரபரவென்று வேலையைப் பார்த்தார்கள்.

ஜெர்ரியைப் பார்த்தவள், "என் அறைக்கு வாருங்கள்." என்று அழைத்து விட்டுச் சென்றாள்.

அவள் அறை விஸ்தாரமானது. ஜன்னல் வழியே பார்த்தால் நகரத்தின் அழகான பகுதி கண்ணைக் கவரும்.

மேஜை மீதிருந்த சில ஃபைல்களைப் பார்த்தபின் நிமிர்ந்து ஜெர்ரியை நோக்கினாள் லாரா.

"உங்கள் அப்பா எப்படி இருக்கிறார்? ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா?"

ஜெர்ரி திகைத்துப் போனான். ‘என் அப்பாவைப் பற்றி இவளுக்கு எப்படித் தெரியும்?’

"அவர். அவருக்கு உடம்பு சரியில்லை..."

"தெரியும். அவருக்கு ஹன்ட்டிங்டன் கோரியா என்கிற நோய் இருக்கிறது. இல்லையா ஜெர்ரி?"

"அது ஒரு பயங்கரமான வியாதி. நாளுக்கு நாள் அதிகமாகுமே தவிர, குறையாது. முகமும் உடம்பும் திடீர் திடீரென்று குலுங்கும். கூடவே புத்தி சுவாதீனமும் குறைந்து கொண்டே போகும்."

"என் அப்பாவைப் பற்றி உங்களுக்கு எப்படி மேடம் தெரியும்?"

"அவர் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரியில் நான் ஒரு நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்." என்றாள் லாரா. "சில டாக்டர்கள் அந்தக் கேஸைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதைக் கேட்டேன்."

ஜெர்ரி மனச்சுமையுடன், "அந்த வியாதியைக் குணப்படுத்த முடியாது." என்றான்.

"எந்த வியாதியுமே குணப்படுத்த முடியாததுதான் அதற்குச் சரியான சிகிச்சை கண்டு பிடிக்கிற வரையில்." என்றாள் லாரா, "நான் அதைப் பற்றி விசாரித்தேன், இந்து நோயைக் குணமாக்குவது பற்றி ஸ்விட்ஜர்லந்தில் ஒரு டாக்டர் ஆராய்ச்சி செய்து வருகிறாராம். உன் அப்பாவின் கேஸைக் கவனிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்."

ஜெர்ரி அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.

"என்ன, சரிதானே?"

அவனுக்குப் பேசவே வரவில்லை. "ச...சரி," என்றான். ‘இவளை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று நினைத்துக் கொண்டான். என்னால் என்ன, யாராலுமே புரிந்து கொள்ளவே முடியவில்லை.’

உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அரசியல் உலகத்திலும் பொருளாதார உலகத்திலும் பல தலைகள் உருண்டன. புதிய தலைகள் முன்னணிக்கு வந்தன.

லாரா எதையும் பொருட்படுத்தவில்லை. தன் தொழிலிலேயே கண்ணாக இருந்தாள்.

1986-ஆம் ஆண்டு.

குவின்ஸ் பகுதியில் புதிய கட்டிடங்கன் கட்ட ஆரம்பித்திருந்தாள் லாரா. அதற்கு நிதியுதவி செய்வதற்காக ஜெர்மனியிலிருந்து சிலர் வந்திருந்தார்கள்.

அவர்கள் விமானத்திலிருந்து இறங்கியதுமே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தாள் லாரா. அதைப்பற்றி அவர்கள் முணுமுணுத்தபோது, "ரொம்ப ஸாரி, ஜென்டில் மென், எனக்கு நேரமேயில்லை. இதோ ஹாங்காங்கிற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்." என்றாள்.

அவர்களுக்குக் காப்பி வழங்கப்பட்டது. லாரா அருந்தினாள்.

வந்திருந்த ஜெர்மனியர்களில் ஒருவர், "காப்பி என்னவோ போலிருக்கிறதே?" என்று முகம் சுளித்தார்.

"எனக்காகவே ஸ்பெஷலாகத் தயாரித்திருக்கிற பிராண்ட் அது." என்றாள் லாரா. "அதன் மணம் உங்களை மயக்கிவிடும், பாருங்கள். இன்னொரு கப் சாப்பிடுங்கள்."

அன்றைய ஒப்பந்தம், அவள் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று விரும்பினாளோ அப்படியே முடிந்தது.

வெற்றி மேல் வெற்றியாகக் குவிந்து கொண்டிருந்தது லாராவுக்கு.

ஒரே ஓர் உறுத்தல்.

35

ரியல் எஸ்டேட் விஷயமாக ஸ்டீவ் மர்ச்சிஸனுடன் மோதும் சந்தர்ப்பங்கள் பல நேர்ந்தன லாராவுக்கு. ஆனால் ஒவ்வொன்றிலும் அவளே ஜெயித்து வந்தாள். "இனி மேல் நாம் அவருக்கு விட்டுக் கொடுத்து ஒதுங்கி விடலாமே?" என்றான் ஹோவார்டு ஒரு நாள்.

"ஏன், அவர்தான் நமக்கு விட்டுக் கொடுத்து ஒதுங்கட்டுமே?" என்றாள்.

அதே மாதிரி கொஞ்ச நாளைக்கெல்லாம் லாராவின் வாழ்க்கையிலிருந்தே ஒதுங்கி விட்டார் ஸ்டீவ் மர்ச்சிஸன்.

அவளுடைய கட்டிடத் திட்டங்கள் யாவும் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருந்தன.

நகருக்குள் ஒரு விளையாட்டு மைதானம் கட்ட ஆரம்பித்திருந்தார்கள் நகர சபையினர். சிவப்பு நாடா ஊழல்களில் சிக்கி வேலை தொடங்காமலே நிற்கிறதென்று லாரா பேப்பரில் படித்தாள். உடனே அதைத்தானே மேற் கொண்டு விளையாட்டு மைதானத்தைக் கட்டி முடித்து நகரசபைக்குத் தனது நன்கொடையாகக் கொடுத்தாள். இந்தச் செயல் அவளுக்கு மகத்தான பப்ளிஸிடி தேடிக் கொடுத்தது. என்னால் முடியும் என்ற கோஷத்துக்கு லாரா உதாரணமாய்த் திகழ்கிறாள் என்று ஒரு பத்திரிகை எழுதியது.

வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை அவள் பால் மார்ட்டினைச் சந்தித்துக் கொண்டிருந்தாள். டெலி போனில் தினம் பேசிக் கொண்டிருந்தாள்.

நகரத்தின் மிக நாகரிகமான இடத்தில் தனக்கென வீடு வாங்கிக் கொண்டாள். விலையுயர்ந்த ஆபரணங்களும், ஃபர் ஆடைகளும், லிமொஸின் கார்களுமாக அவள் வாழ்க்கை ஒரு மாயா லோகத்தில் மிதந்தது. நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்ட உடைகள் அவளுடைய அலமாரிகளை அடைத்திருந்தன.

அவளுக்கு ஞாபகம் வந்தது.

"அப்பா, நான் பள்ளிக்கூடம் போகக் கொஞ்சம் டிரஸ் வேண்டும்."

"இங்கே பணம் காய்த்துத் தொங்குகிறது என்று நினைத்தாயா? ஏதாவது அனாதை ஆசிரமத்தில் போய்க் கேள், டிரெஸ் கொடுப்பார்கள்."

- இது ஞாபகம் வந்ததும் மேலும் ஒரு புது உடைக்கு ஆர்டர் கொடுப்பாள் லாரா.

ஊழியர்களின் குடும்பமே தன்னுடைய குடும்பம் என்றாகி விட்டது லாராவுக்கு. சதா அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டாள். அவர்களுக்குத் தாராளமாக உதவிகள் செய்தாள். ‘எனக்கு இருப்பதெல்லாம் இவர்கள்தானே’ என்பது அவள் எண்ணம். அவர்களுடைய பிறந்த நாட்களையும் திருமண தினங்களையும் மறக்காமல் நினைவில் வைத்திருந்தாள். அவர்களுடைய குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களில் இடம் வாங்கித் தந்தாள். அவர்களுடைய படிப்புக்காக ஸ்காலர்ஷிப்புகள் ஏற்படுத்தினாள்.

அவர்கள் நன்றி தெரிவிக்க முற்பட்டால் லாராவுக்குக் கூச்சமாக இருக்கும். அவளால் தன் பாசத்தைக் காட்டிக் கொள்ள முடியவில்லை. ஒரு முறை தன் அப்பாவிடம் காட்டிக் கொள்ள முயன்றாள். அவர் அவனை ஏளனம் செய்து விரட்டிவிட்டார். ஆகவே அவள் தன்னைச் சுற்றிப் பாதுகாப்புச் சுவர் எழுப்பிக் கொண்டாள்.

‘இனி யாரும் என் மனத்தைக் காயப்படுத்த இடம் தர மாட்டேன்...’ என்று தன்னுள் அவள் சபதம் செய்து கொண்டாள். யாராயிருந்தாலும் சரி, யாராயிருந்தாலும் சரி...

"ஹோவார்டு, நான் நாளைக் காலை லண்டனுக்குப் புறப்படுகிறேன்." என்றாள் லாரா.

"என்ன விஷயம்?" என்று அவன் கேட்டான்.

"லார்டு மக்கின்ட்டாஷ் ஏதோ ஒரு புது மனை வாங்கப் போகிறாராம். அதை நான் வந்து பார்க்க வேண்டும் என்கிறார். என்னை ஒரு பார்ட்னராகச் சேர்த்துக் கொள்ள விரும்புகிறார்."

லார்டு மக்கின்ட்டாஷ் இங்கிலாந்தின் ரியல் எஸ்டேட் துறையில் மிகப் பெரிய புள்ளியாக விளங்குபவர்.

"எத்தனை மணிக்கு நாம் கிளம்புகிறோம்?" என்று ஹோவார்டு கேட்டான்.

"நான் தனியாகப் போகத் தீர்மானித்திருக்கிறேன்."

"ஆமாம். இங்கே நீங்கள் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும்."

ஹோவார்டு தலையசைத்தான்.

"அதற்கென்ன? பார்த்துக் கொள்கிறேன்."

"நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கை என்றைக்கும் எனக்கு உண்டு." என்றாள் லாரா.

லண்டன் பயணம் சுமுகமாக இருந்தது. அவளுடைய சொந்த விமானம் நியூயார்க்கை விட்டுப் புறப்பட்டு லண்டனுக்கு வெளியே மேகி டெர்மினல் விமான நிலையத்தில் இறங்கியது.

தன் வாழ்க்கை அடியோடு மாறப் போகிறது என்று அப்போது அவளுக்குத் தெரியாது.

கிளாரிட்ஜ் ஒட்டலை அவள் அடைந்ததுமே மானேஜர் ஜோன்ஸ் அவளை நேரில் வந்து வரவேற்றார். "நீங்கள் வந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. மிஸ் லாரா. உங்கள் ஸ்யூட்டைக் காட்டுகிறேன், வாருங்கள். நீங்கள் வந்து விட்டீர்களா என்று பல பேர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்." என்றார்.

இரண்டு டஜனுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து கால்கள் வந்திருந்தன.

ஸ்யூட் மிக அருமையாக இருந்தது. மக்கின்ட்டாஷூம் பால் மார்ட்டினும் எனும் பூங்கொத்துக்கள் அனுப்பியிருந்தார்கள். ஒட்டல் நிர்வாகத்தினர் ஷாம்பேய்னும் மற்றும் உயர் மது வகைகளும் அனுப்பியிருந்தார்கள்.

லாரா அறைக்குள் நுழைந்த நிமிடமே போன் மணியடிக்கத் தொடங்கி விட்டது. அமெரிக்காவின் எல்லாப் பாகங்களிலிருந்தும் பேசினார்கள்.

‘ஆர்க்கிடெக்ட் நம் பிளானில் சில மாறுதல்கள் செய்ய வேண்டுமென்கிறார். அப்படிச் செய்வதானால் எக்கச்சக்கமாகச் செலவாகும்."

‘சிமெண்ட் வரத்தில் ஏதோ திடீர் தடங்கல் ஏற்பட்டிருக்கிறது."

‘நம்முடைய அடுத்த திட்டத்துக்குத் தாங்கள் கடன் கொடுக்க வேண்டுமென்று நேஷனல் ஸெவிங்ஸ் அண்ட் லோன் நிறுவனம் கேட்டிருக்கிறது...’

‘டாய்லெட் சாமான்கள் இன்னும் வந்து சேரவில்லை...’

‘மழை பெய்கிறது. கெடு பிரகாரம் வேலை நடக்காமல் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.’

- இப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் அவளுடைய யோசனையைக் கேட்டார்கள். அத்தனைக்கும் ஒருவாறு பதிலளித்து முடித்தபோது லாராவைக் களைப்பு அசத்தியது. டின்னரைத் தன் அறைக்கு அனுப்பச் சொல்லித் தனியாகவே சாப்பிட்டாள். பிறகு ஜன்னல் வழியே தெருவைப் பார்த்தவாறிருந்தாள்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் பென்ட்லி கார்களும் வாசலில் வந்து நிற்பதைப் பார்க்க, அவன் உள்ளத்தில் ஒரு பூரிப்புப் பிறந்து பரவியது.

‘கிளேஸ் பேயில் ஊர் பேர் தெரியாமல் இருந்த இந்தச் சின்னப் பெண் இன்று எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டாள் பார்த்தீர்களா, அப்பா...’ அடுத்த நாள் காலை மக்கின்ட்டாஷூடன் அந்த மனையைப் போய்ப் பார்த்தாள். ஆற்றங்கரையில் இரண்டு மைல் நீளத்துக்குப் பிரம்மாண்டமான இடம். இடிந்த கட்டிடங்களும் பழைய கிடங்குகளும் இருந்தன.

"பிரிட்டிஷ் அரசாங்கம் நமக்கு நிறைய வரிச் சலுகை கொடுக்கும்." என்றார் மக்கின்ட்டாஷ். "நகரத்தின் இந்தப் பகுதி மொத்தத்தையும் நாம் புதுப்பிக்கப் போகிறோம் என்பதால்."

"யோசித்துச் சொல்கிறேன்." என்றாள் லாரா. ஆனால் ஏற்கெனவே அவள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.

மக்கின்ட்டாஷ் கூறினார். "இன்று இரவு ஒரு சங்கீதக் கச்சேரிக்கு இரண்டு டிக்கெட் இருக்கிறது. என் மனைவிக்கு அவள் கிளப்பில் ஒரு மீட்டிங் இருப்பதால் வர முடிய வில்லை. உங்களுக்குச் சாஸ்திரிய சங்கீதம் பிடிக்குமா?"

லாராவுக்குப் பிடிக்காது. இருந்தாலும் "பிடிக்கும்" என்றாள்.

"பிலிப் ஆட்லர் பியானோ வாசிக்கிறார்." என்று சொல்லிவிட்டு, அவள் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தார் மக்கின்ட்டாஷ். அவள் மகிழ்ச்சியுடன் ஏதோ சொல்வாள் என்று எதிர்பார்த்தார். ஆனால் பிலிப் ஆட்லர் என்று எவரையும் அவள் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. இருந்தாலும், "அப்படியா? பிரமாதம்!" என்றாள்.

"நல்லது. நான் ஏழு மணிக்கு வந்து உங்களை அழைத்துப் போகிறேன். கச்சேரிக்குப் பிறகு நாம் சேர்ந்து சாப்பிடலாம்." என்றார் அவர்.

‘சாஸ்திரிய சங்கீதம் பிடிக்கும் என்று ஏன்தான் என் வாயில் வந்ததோ!’ என்று லாரா எண்ணிக் கொண்டாள். இன்றைய மாலை நேரம் சரியான போராகத்தான் இருக்கப் போகிறது... சுடு தண்ணீரில் ஜம்மென்று குளித்துவிட்டு அக்கடா என்ற படுத்துத் தூங்குவதை விட்டு விட்டு... தொலையட்டும். ஒரே ஒரு நாள் சாயந்தரம் தானே ஒன்றும் குடி முழுகிவிடாது. நாளைக் காலை நியூயார்க்குக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்...

சங்கீத நிகழ்ச்சி நடைபெறும் ஹால் விழாக் கோலம் பூண்டிருந்தது. சீமான்களும் சீமாட்டிகளும் ஆடம்பர உடைகளில் ஜொலித்தார்கள். கோலாகலமான மாலை வேளை. அரியதோர் நிகழ்ச்சியை எதிர் பார்க்கும் பரபரப்பு ஒவ்வொருவர் முகத்திலும் பளபளத்தது.

மக்கின்ட்டாஷ் உள்ளே நுழையும்போது நிகழ்ச்சி நிரல் கொண்ட இரண்டு காகிதங்களை வாங்கி வந்தார். இருவரும் அமர்ந்ததும் லாராவின் கையில் ஒன்றைத் தந்தார். சும்மா மேலோட்டமாகப் பார்த்து வைத்தான் அவள். லண்டன் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்டிராவில் பிலிப் ஆட்லர் என்பவர் பியானோ வாசிக்கப் போவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது.

அவள் மனம் வேறெங்கோ இருந்தது.

ஹோவார்டுக்குப் போன் போட்டுப் பேசவேண்டும். ஐந்தாவது அவென்யூ மனையில் புதிய எஸ்டிமேட் போடுவது பற்றி ஞாபகப் படுத்த வேண்டும்...

நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மேடையில் தோன்றினார். கூட்டத்தினர் கரகோஷம் செய்தார்கள். லாரா அதைத் துளியும் கவனிக்கவில்லை.

பாஸ்டன் கான்ட்ராக்டர் ரொம்ப மந்தமாய் வேளை செய்கிறார். அந்த ஆளுக்கு ஏதாவது ஆசை காட்ட வேண்டும். ஹோவார்டிடம் சொல்லி, போனஸ் ஏதாவது தருவோம் என்று சொல்ல வேண்டும்...

மறுபடி ஒரு பெரிய கைதட்டல் எழுந்தது ஆடியன்ஸ் மத்தியிலிருந்து. ஒரு கலைஞர் வந்து அரங்கத்தின் மத்தியில் இருந்த பியானோவை இசைக்க உட்கார்ந்தார். கண்டக்டர் கையை அசைத்ததும் மியூசிக் ஆரம்பித்தது.

பிலிப் ஆட்லரின் விரல்கள் பியானோவின் மீது நர்த்தனமிடத் தொடங்கின.

பின் ஸீட்டில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணி தனக்கருகில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம், "நான் என்ன சொன்னேன்? ஆரம்பமே பிரமாதமாக இருக்கிறது பார்!" என்று இரைந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

லாரா தன் சிந்தனையை ஒழுங்குபடுத்திக் கொள்ள முயன்றாள்.

--இந்த லண்டன் மனை சமாசாரம் சரிப்பட்டு வராது... இந்த இடத்தில் வசிப்பதற்கு ஜனங்களுக்கு விருப்பம் ஏற்படாது... இடம்... இடம்... இடம்... அதுதான் முக்கியம்...

கொலம்பஸ் சர்க்கிள் என்ற வேறோர் இடத்தில் ஒரு மனை இருப்பதாக யாரோ சொன்னார்கள். அது வேண்டுமானால் நடக்கக் கூடிய காரியம்...

லாராவின் பின்னே இருந்த பெண் முன் போலவே இரைந்து பேசினாள். "இசையில் உள்ள பாவத்தைப் பார்த்தாயா? சே அட்டகாசம்! இவர் உலகத்திலேயே."

லாரா தன் எண்ணத்தை ஒழுங்கு கூட்டிக் கொண்டாள்.

அங்கே ஆபீஸ் கட்டிடங்கள் கட்டுவதென்றால், சதுர அடிக்கு ஏறத்தாழ நானூறு டாலர் பிடிக்கும்... கட்டிடம் செலவுகளை நூற்றைம்பது கோடி டாலருக்குள் அடக்கி விட்டால் நல்லது. மனை விலையை நூற்றிருபத்தைந்து கோடிக்குள் முடிக்க வேண்டும், பிறகு மற்றச் செலவுகள்...

"ஆகாகா!" என்று பின்னாலிருந்த பெண்மணி பரவசப்பட்டாள்.

லாரா தன் கனவிலிருந்து சிறிது விடுபட்டாள். "அற்புதம் இல்லை?"

டிரம் தாளங்கள் வேகமாக எழ, அதற்குத் தகுந்தாற் போல் பியானோவின் இசையிலும் வேகம் அதிகரித்தது.

பின்னாலிருந்த பெண்ணினால் அடக்கவே முடிய வில்லை, "கேள் கேள்’ என்னமாய் இருக்கிறது! இந்த மாதிரி பியானோ நிகழ்ச்சி நீ என்றைக்காவது கேட்டிருக்கிறாயா?"

லாரா பல்லைக் கடித்து கொண்டாள்.

குறைந்தபட்சச் செலவை ஒருவாறு கவனித்து விடலாம். வாடகைக்கு விடக் கூடிய இடத்தைக் கட்டுவதற்கு மட்டும் முன்னூற்றைம்பது கோடி டாலர்... பத்து பர்சென்ட் இன்ட்டரஸ்டு என்று வைத்துக் கொண்டால் முன்னூற்றைம்பது மில்லியன் டாலர். அதைத் தவிர கட்டுமானச் செலவு பத்து லட்சம்...

இசையின் வேகம் வர வர அதிகரித்து, அரங்கம் முழுதையும் வியாபித்தது. உச்ச கட்டத்தை அடைந்து திடீரென்று நின்றது. அவை யினர் எழுந்து நின்று கைதட்டினார்கள். "பிரமாதம்! பலே! பேஷ்!" என்ற ஆரவாரங்கள் எழுந்தன.

பியானோ கலைஞர் தன் இருக்கையிலிருந்து எழுந்து அரங்கத்தின் மத்தியில் நின்று குனிந்து வணக்கம் தெரிவித்தார்.

லாரா நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை...

வரிகள் இரண்டு பர்ஸென்ட்... இலவச வாடகைச் சலுகைகளில் இரண்டு பர்ஸென்ட் போய் விடும். ஐந்நூற்றெண்பது லட்சம் என்றால்...

"ஆச்சரியமான மனிதர்! இல்லை?" என்றார் மக்கின்ட்டாஷ்.

"ஆமாம்," என்றாள் லாரா, தன் எண்ணங்கள் மறுபடி குறுக்கிடப்படுவது அவளுக்கு எரிச்சலாயிருந்தது.

"நாம் பின் புறமுள்ள அறைக்குப் போய்ப் பிலிப்பைப் பார்க்கலாம். பிலிப் என் சினேகிதர்."

லாராவின் கையைப் பற்றி அழைத்துச் செல்லத் தொடங்கினார் மக்கின்ட்டாஷ். "உங்களை அவருக்கு அறிமுகப்படுத்த இப்படி யொரு சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்..."

லாராவின் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. இப்போது நியூயார்க்கில் ஆறு மணியாக இருக்கும். ஹோவார்டைக் கூப்பிட்டு, பேரங்களை ஆரம்பித்து விடும்படி சொல்ல வேண்டும்.

36

க்கின்ட்டாஷ் விடாமல் தொணதொணத்துக் கொண்டிருந்தார். பிலிப்பின் இசை நிகழ்ச்சி எவ்வளவு பிரமாதம் என்பதைப் பற்றி.

"ஆயுள் பூரா மறுக்க முடியாத அனுபவம் இல்லே?" என்றார்.

இசைக் கலைஞர்களின் அறைக்கு வெளியே அவர்கள் நின்றிருந்தனர். பெரும் கூட்டம் அங்கே காத்திருந்தது. மக்கின்ட்டாஷ் கதவை மெல்லத் தட்டினார். ஒரு வேலையாள் கதவைத் திறந்தான்.

"மக்கின்ட்டாஷ் பிரபு பிலிப் ஆட்லரைப் பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்லு."

"உள்ளே வாருங்கள், பிரபு, ப்ளீஸ்." என்று கூறி அவன் மக்கின்ட்டாஷம் லாராவும் உள்ளே வருவதற்கு வசதியாகக் கதவை அகலமாகத் திறந்தான். அவர்கள் வந்ததும் மற்றவர்கள் வந்துனரிடாதபடி கதவைச் சாத்தினான்.

"அவர்களெல்லாம் எதற்காக நின்று கொண்டிருக்கிறார்கள்?" என்று லாரா கேட்டாள்.

அவர் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தார். "பிலிப்பைப் பார்ப்பதற்காக நிற்கிறார்கள்!"

எதற்காகப் பிலிப்பை பார்க்க வேண்டும் என்று லாரா திகைத்தாள்.

வேலையாள் உள்ளே போய் விட்டு வந்து, "நேரே மேக்கப் ரூமுக்குப் போங்கள் பிரபு." என்றான்.

"நன்றி"

"ஐந்து நிமிஷம்," என்று லாரா எண்ணிக் கொண்டாள். ஐந்தே நிமிஷம்தான். வேலை இருக்கு என்று சொல்லிக் கிளம்பி விடுவேன்.

மேக்கப் அறை ஒரே சந்தடியாக இருந்தது. ஏகப்பட்ட பேர் இருந்தார்கள். யாரோ ஒருவரை எல்லாரும் சூழ்ந்து கொண்டிருப்பது லாராவுக்குத் தெரிந்தது. ஆனால் யாரென்று தெரியவில்லை.

கூட்டம் சற்று விலகியது.

அவன் ஒரு வினாடி மிக நன்றாக அவள் கண்ணுக்குத் தெரிந்தான்.

லாரா உறைந்து போனான். ஒரு நிமிடத்துக்குத் தன் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்ட மாதிரி தோன்றியது.

இத்தனை வருடங்களாகத் தன் மனத்தின் ஆழத்தில் தெளிவில்லாமல், மசமசவென்று உலவிக்கொண்டிருந்த உருவம் திடீரென்று தெளிவான வடிவம் பெற்று எங்கிருந்தோ வந்து குதித்த மாதிரி இருந்தது அவளுக்கு. அவளுடைய கற்பனையிலே உலவி வந்த கதாநாயகன் இன்று உயிர் பெற்றுவிட்டான்.

கூட்டத்தின் நடுவே இருந்த அவன் உயரமாக, சிற்பம் செதுக்கிய மாதிரி சுருட்டை முடியுடன் இருந்தான். வெள்ளை டை அணிந்திருந்தான்.

மயக்கமான பழைய நினைவு அவளைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

கிளேஸ் பேயில், பழைய ஓட்டல் அறையில், சமையல் கட்டில் அவள் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறாள்... வெள்ளை டை அணிந்த அந்த ஆணழகன்

அவள் பின்னால் வந்து நின்று கிசுகிசுப்பான குரலில் கேட்கிறான்: நான் உதவி செய்யட்டுமா கண்ணே?

மக்கின்ட்டாஷக்குக் கவலை ஏற்பட்டு விட்டது அவள் முகத்தைப் பார்த்து, "என்ன மிஸ் லாரா, உடம்புக்கு ஒன்றுமில்லையே?"

"இ... இல்லையே? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்." என்றாள். ஆனால் சீராக மூச்சு விடுவதே சிரமமாயிருந்தது அவளுக்கு.

பிலிப் அவர்களை நோக்கி வந்தான், புன்னகையுடன்.

அதே புன்னகை! லாரா கற்பனை செய்து வைத்திருந்த புன்னகை.

மக்கின்ட்டாஷரிடம் அவன் கை குலுக்கினான், "இவ்வளவு தூரம் வந்தீர்களே, ரொம்ப சந்தோஷம்." என்றான்.

"வராமலிருப்பேனா?" என்றார் மக்கின்ட்டாஷ், "உங்கள் நிகழ்ச்சி பிரமாதமாயிருந்தது."

"தாங்க் யூ."

"பிலிப், இவள் லாரா கேமரான்."

லாரா அவன் கண்களையே நோக்கியவாறு இருந்தாள். அந்தப் பழைய சமையலறைக் கற்பனை ஞாபகத்தில் வர, தன்னை மறந்து "அந்தப் பாத்திரங்களைத் துடைத்து." என்று சொல்லிவிட்டாள்.

"என்ன சொன்னீர்கள்?" என்று அவன் கேட்டான்.

லாராவுக்கு முகம் சிவந்து விட்டது. "வந்து... ஒன்று மில்லை..." என்று சுதாரித்தாள். திடீரென்று நாக்கைக் கட்டிப் போட்டுவிட்ட மாதிரி இருந்தது.

எல்லாரும் பிலிப்பைச் சூழ்ந்து நின்றுகொண்டு பாராட்டுக்கு மேல் பாராட்டாகத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

"இந்த அளவு பிரமாதமாக இதற்கு முன்னே நீங்க வாசித்ததே கிடையாது."

"அந்த இசைத் தேவதையே இன்றிரவு பிரத்தியட்சமாகிவிட்ட மாதிரி இருந்தது."

பாராட்டு இடைவிடாமல் தொடர்ந்தது. அங்கிருந்த பெண்கள் அவனைத் தொடுவதும் அவன் கையை மெல்ல இழுப்பதுமாக இருந்தார்கள். மந்திரம் போட்ட மாதிரி லாரா அதையெல்லாம் பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தாள். சின்ன வயதில் கண்ட கனவு நனவாகிவிட்டது. அவளுடைய கற்பனை மன்மதன் ரத்தமும் சதையுமாக இதோ எதிரில் நிற்கிறான்.

"போகலாமா?" என்றார் மக்கின்ட்டாஷ்.

"வேண்டாம். இங்கேயே இருப்பதைத் தவிர வேறெதுவுமே வேண்டாம்." என்று எண்ணிக் கொண்டான் அவள். அவளைத் தொட்டுப் பார்த்து, பேசிப் பார்த்து, இவன் உண்மையாகவே மனிதன்தான் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

"போகலாம்." என்றாள் அரைமனத்துடன்.

அடுத்த நாள் காலை அவன் நியூயார்க்குக்குப் புறப்பட்டு விட்டாள்.

‘பிலிப்பை இன்னொரு முறை எப்போதேனும் பார்ப்போமா?’ அவள் மனம் ஏங்கியது.

அவனைத் தன் மனத்திலிருந்து வெளியேற்ற அவளால் முடியவில்லை. இதெல்லாம் பைத்தியக்காரத்தனம். சின்ன வயதில் கண்ட கனவை உண்மையென நம்புகிறோம் என்று எல்லாம் தனக்குள் சொல்லிக் கொண்டாள். பயனில்லை. அவன் முகம் கண்ணில் தெரிந்துகொண்டேயிருந்தது. அவன் குரல் அவன் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

அவனை மறுபடி பார்க்க வேண்டும் என்று ஏங்கினாள்.

மறுநாள் காலை பால் மார்ட்டின் போன் செய்தார்.

"நீ இல்லாமல் வெறிச்சென்று ஆகிவிட்டது. லண்டன் எப்படி இருந்தது?" என்றார்.

"நன்றாயிருந்தது," என்றாள் லாரா எச்சரிக்கையாக, "ரொம்ப நன்றாயிருந்தது."

அவருடன் பேசி முடித்த பிறகு மீண்டும் பிலிப்பைப் பற்றியே எண்ணியவாறு மேஜையடியில் உட்கார்ந்திருந்தான்.

"அவர்கள் மீட்டிங் அறையில் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் மேடம்," என்றாள் செக்ரட்டரி.

"இதோ வருகிறேன்."

மீட்டிங் அறையில் அவளுடைய ஊழியர்கள் எல்லாரும் கூடியிருந்தார்கள்.

"க்வீன்ஸ் ஏரியா திட்டம் நடக்காது, லாரா." என்றான் ஹோவார்டு.

"ஏன்? எல்லா ஏற்பாடும் முடிந்துவிட்டது என்று நினைத்தேனே?"

"முடிந்ததாகத்தான் தோன்றியது. ஆனால் அங்குள்ள குடியிருப்போர் சங்கம் தங்கள் வீடுகளை மாற்றக் கூடாதென்று சொல்கிறது."

சுற்றிலும் ஆர்க்கிடெக்டுகளும் வழக்கறிஞர்களும் விளம்பரத்துறை நிர்வாகிகளும் கட்டிட இஞ்சினியர்களும் உட்கார்ந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு முறை பார்த்தாள் லாரா.

"இது எனக்குப் புரியவில்லை, அங்கே குடியிருப்பவர்கள் சராசரியாக வருடத்துக்குப் பத்தாயிரம் டாலர்தான் சம்பாதிக்கிறார்கள். வாடகையே மாதம் இருநூறு டாலர் கொடுக்கிறார்கள். அவர்களுக்குப் புத்தம் புதிதாக அபார்ட்மெண்ட் கட்டித் தருவதாக நாம் சொல்கிறோம். வாடகையைக் கொஞ்சம்கூட உயர்த்தப் போவதில்லை. அக்கம்பக்கத்தில் இருக்கும் சிலருக்கும் அங்கே புது அபார்ட்மெண்ட் கட்டித் தரப் போகிறோம். சுருக்கமாய்ச் சொன்னால் கிறிஸ்துமஸ் பரிசு அவர்களுக்கு ஜூலையிலேயே கொடுக்கப் போகிறோம். அதை ஏன் அவர்கள் வேண்டாமென்று சொல்கிறார்கள்? என்ன பிரசினை அவர்களுக்கு?"

ஹோவார்டு சொன்னான்: "குடியிருப்போர் சங்கத்தின் மொத்தப் பேரும் இதை எதிர்க்கவில்லை. அதன் தலைவர்தான் எதிர்க்கிறார். எடித் மென்சன் என்று ஒரு பெண்பிள்ளை."

"அவளுடன் நான் பேசுகிறேன், ஏற்பாடு பண்ணுங்கள்." என்றாள் லாரா.

தன்னுடன் பிரதம கட்டிட சூபர்வைசர் பில் விட்மன் என்பவரையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

"எங்கள் திட்டத்தை உங்கள் சங்கம் நிராகரித்துவிட்டதைக் கேட்டு உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்தப் பகுதியை முன்னேற்றுவதற்காகப் பத்துக் கோடி டாலருக்கு மேல் செலவழிக்கவிருக்கிறோம். இருந்தும் நீங்கள்..."

எடித் பென்சன் லாராவின் பேச்சை வெட்டினாள், "நாம் நேர்மையாகப் பேசுவோம், மிஸ் லாரா. நீங்கள் பணம் செலவழிப்பது இந்தப் பகுதியை முன்னேற்றுவதற்காக அல்ல. லாரா என்ட்டர்ப்ரைஸஸ் மேலும் பணம் சம்பாதிப்பதற்காக."

"உண்மை, பணம் சம்பாதிக்கிறோம். இல்லையென்று சொல்லவில்லை." என்றாள் லாரா. ஆனால் பணம் சம்பாதிக்க எங்களுக்குத் தெரிந்த ஒரே வழி உங்களைப் போன்ற மக்களுக்கு உதவி செய்வதுதான். உங்கள் பகுதியில் வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கப் போகிறோம். அத்துடன்..."

"ஸாரி. அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நாங்கள் எளிய முறையில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களை இங்கே அனுமதித்தால் இந்த இடத்தைப் படாடோபமாகப் பண்ணிவிடுவீர்கள். போக்குவரத்துச் சத்தம் அதிகமாகும். கார்களும் லாரிகளும் அதிகமாக வரும். சுற்றுப்புறச் சூழ்நிலை மேலும் கெடும். அதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது..."

"விகாரமான படாடோபமான கட்டிடமாகக் கட்டப் போவதில்லை. சந்தடி அதிகமாகாதபடி காற்றும் வெளிச்சமும் அமைதியும் குறையாதபடி கட்டத் திட்டமிட்டிருக்கிறோம். நாட்டிலேயே தலை சிறந்த ஆர்க்கிடெக்டான லான்ட்டன் ஃபீல்டிங்கை அமர்த்தியிருக்கிறேன். அவர் வந்து பிளான் வரைந்து தருவார். வாஷிங்டனிலிருந்து ஆண்ட்ரூ பர்ட்டன் வந்து..."

எடித் பென்சன் தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். "ஸாரி. இது பற்றிப் பேசிப் பயனில்லை, மேற்கொண்டு நாம் விவாதிக்க இடமில்லையென்று நினைக்கிறேன்." அவள் எழுந்துகொள்ள முயன்றாள்.

லாராவின் உள்ளம் பதைத்தது. ‘இந்தத் திட்டத்தை எப்படியும் கைவிடக் கூடாது... இந்த வட்டாரத்தின் நன்மைக் காகத்தான் கட்டுகிறோம் என்று ஏன் இவர்களுக்குப் புரிய வில்லை? இவர்களுக்கு உதவியாக ஒன்று செய்ய லாமென்று பார்க்கிறோம். இடம் தர மாட்டேன் என்கிறார்களே?’

திடீரென்று ஓர் ஐடியா அவள் மூளையில் பளிச்சிட்டது.

"ஒரு நிமிடம் இருங்கள்." என்றாள். "உங்கள் சங்கத்தில் மற்ற எல்லாரும் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொள்கிறார்கள் என்றும் நீங்கள் ஒருவர்தான் தடுக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?"

"உண்மை."

ஆழமாக ஒருமுறை மூச்சுவிட்டாள் லாரா, "உங்களிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும்." சிறிது தயங்கினாள். "இது என் சொந்த விஷயம்." சற்று நெளிந்தாள். "இங்கே எங்களுக்கு அனுமதி அளித்தால் இந்த இடத்தின் அமைதியும் சூழ்நிலைகளும் கெட்டுவிடும் என்றும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் சொல்கிறீர்கள்? அப்படித் தானே? உங்களுக்கு இப்போது ஒரு விஷயம் சொல்கிறேன். ஆனால் நீங்கள் அதை மனசுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். எனக்குப் பத்து வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் எனக்கு உயிர். அவள் இங்கே புது அபார்ட்மெண்ட்டில் தன் அப்பாவுடன் குடி வரப் போகிறாள். அவள் அப்பாதான் அவளைப் பார்த்துக் கொள்கிறார்."

எடித் பென்ஸன் அவளை வியப்புடன் பார்த்தாள். "நான்... வந்து... உங்களுக்கு ஒரு பெண் இருக்கிறானா? எனக்குத் தெரியாதே..."

"யாருக்குமே தெரியாது." என்றாள் லாரா அமைதியாக. "எனக்கும் என் காதலருக்கும் கல்யாணமே ஆகவில்லை. அதனால்தான் இதை ரொம்ப ரகசியமாக வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். விஷயம் வெளிவந்தால் என் கெளரவமே பாழ். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்."

37

குடியிருப்போர் சங்கத்தின் தலைவியான எடித் பென்ஸன் லாராவைக் கனிவுடன் நோக்கி, "எனக்குப் புரிகிறது மேடம்." என்றாள்.

"என் பெண்ணின் மீது எனக்கு அளவு கடந்த பிரியம். அவள் மீது துரும்பு பட்டால்கூட எனக்கு மனம் பொறுக்காது. இந்தப் பகுதியில் வசிக்கிற மக்களுக்கு எவ்வளவு அற்புதமான வசதிகள் செய்து தர முடியுமோ அவ்வளவும் செய்ய நினைத்திருக்கிறேன். ஏனென்றால் என் பெண்ணும் இங்கே வசிக்கப் போகிறாள்." என்றாள் லாரா.

மனம் உருகியவளாக எடித் பென்ஸன் சிறிது நேரம் மெளனமாக இருந்தாள். பிறகு அனுதாபம் நிறைந்த குரலில், "நீங்கள் சொன்னதைக் கேட்ட பிறகு என் மனம் மாறி விட்டது மிஸ் லாரா. நாங்கள் எங்கள் முடிவை மறு பரிசீலனை செய்கிறோம்." என்றாள்.

"ரொம்ப நன்றி. இப்போதுதான் எனக்கு மனசுக்குச் சந்தோஷமாக இருக்கிறது." என்றாள் லாரா.

நிஜமாகவே எனக்கு ஒரு பெண் இருந்தால் இங்கே குடி வைக்கலாம், பத்திரமாக இருப்பாள். ஆனால் இல்லையே என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

மூன்று வாரங்களுக்கெல்லாம் குடியிருப்போர் சங்கத்திடமிருந்து லாராவின் திட்டத்தை அங்கீகரித்தாகக் கடிதம் வந்தது. கட்டிட வேலையைத் தொடங்கலாம் என்று சொல்லி விட்டார்கள்.

"பிரமாதம்." என்றாள் லாரா. "இனிமேல் ஸ்டான்ட்ட டையும் ஆண்ட்ரூ பர்ட்டனையும் விட்டுத் திட்ட வேலைகளை மேற்கொள்ளுகிறீர்களா என்று கேட்கலாம்."

குடியிருப்போர் சங்கத்தின் முடிவை ஹோவார்டினால் நம்பவே முடியவில்லை. லாராவின் உதவியாளர் பில் விட்மன் அன்று லாராவுடன் கூடப் போயிருந்ததால் என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. "நன்றாய் மடக்கினாய் அவர்களை. உனக்கு ஒரு மகள் இருப்பதாக எப்படித்தான் சொல்ல மனம் வந்ததோ" என்றான்.

"இந்தத் திட்டம் அவர்களுக்குத் தேவையான ஒன்று." என்றாள் லாரா. "அவர்களுடைய மனத்தை மாற்ற எனக்கு இந்த ஒரு வழிதான் தெரிந்திருந்தது."

அருகில் நின்றிருந்த பில் விட்மன், "அவர்களுக்கு உண்மை தெரியும்போது பெரிய கலாட்டா ஏற்படப் போகிறது!" என்றான்.

ஜனவரி மாதம், கிழக்கு 68வது தெருவில் இன்னொரு புதுச் கட்டிடம் கட்டப்பட்டது. நாற்பத்தைந்து மாடிகள் கொண்ட அபார்ட்மெண்ட் கட்டிடம். மேல் மாடி பென்ட் ஹவுஸைத் தனக்கென வைத்துக் கொண்டாள் லாரா. அங்கே அறைகள் விஸ்தாரமாக இருந்தன. ஒரு விசேஷமான டெகரேட்டரை அமர்த்தி அந்த அபார்ட்மெண்ட்டைச் சிறப்பாக அழகுபடுத்தினாள். புதுமனை புகுவிழாவையொட்டி ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து நூறு பேரை அழைத்திருந்தாள்.

"இங்கே ஓர் ஆண்மகனும் துணை இருந்தால் நன்றா உயிருக்கும்." என்று ஒரு பெண்மணி வேடிக்கையாகக் குறிப்பிட்டாள்.

இசைக் கலைஞன் பிலிப்பை நினைத்துக் கொண்டாள் லாரா. அவன் இப்போது எங்கே இருக்கிறானோ? என்ன செய்கிறானோ?

அன்று அவள் ஹோவார்டுடன் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த சமயம், பில் விட்மன் உள்ளே வந்தான்.

"பாஸ், ஒரு நிமிஷம் பேச முடியுமா?" என்றான்.

லாரா நிமிர்ந்து பார்த்தாள், "நான் வேலையாக இருக்கிறேனே என்ன பிரசினை, பில்?"

"என் மனைவி..."

"இதோ பார், உன் குடும்ப விஷயங்களைப் பேச இதுவா சமயம்?"

"குடும்ப விஷயம் இல்லை. லீவு எடுத்துக் கொண்டு வெளியூர் எங்காவது போகலாம் என்கிறாள். பாரிஸுக்குப் போய்ச் சில வாரம் தங்கிவிட்டு வரலாம் என்கிறான்."

லாரா அவனை முறைத்துப் பார்த்து, "பாரிஸுக்கா? அரை டஜன் கட்டிடங்கள் பாதி நடந்து கொண்டிருக்கிறது."

"தெரியும். ஆனால் கொஞ்சம் நாளாய் எனக்கு வேலைச் சுமை ஜாஸ்தியாகிவிட்டது. என் மனைவியைப் பார்க்கக் கூட முடிவதில்லை. இன்று காலை அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா? இப்படி வேலையில் உயிரை விடுகிறீர்களே? அதற்குத் தகுந்தாற்போல் சம்பளமும் நிறையக் கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றாள்," என்று சொல்லி பில் புன்னகை செய்தான்.

லாரா நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவன் முகத்தை ஆராய்ந்தான். "முறைப்படி உனக்குச் சம்பள உயர்வு கொடுக்க வேண்டியது அடுத்த வருஷம்தானே?"

பில் விட்மன் தோளை குலுக்கிக் கொண்டான். "அடுத்த வருஷம் என்ன நேருமென்று யாருக்குத் தெரியும்? உதாரணமாய், அந்த க்வீன்ஸ் குடியிருப்புத் திட்டம் - அதிலே இடைஞ்சல்கள் ஏற்படலாம். அதன் தலைவி தன் முடிவை மாற்றிக் கொண்டாலும் கொள்ளலாம். இல்லையா?"

லாரா அசையாமல் உட்கார்ந்திருந்தாள். "ஓகோ, அப்படியா?"

பில் விட்மன் எழுந்து கொண்டான், "நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்."

லாரா வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வர வழைத்துக் கொண்டாள், "சரி."

அவன் வெளியேறுவதைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் லாரா. அவள் முகத்தில் கடுமை பரவியிருந்தது.

"கடவுளே!" என்றான் வேறாவார்டு. "என்ன சொல்லிவிட்டுப் போகிறான் இவன்?"

"புரியவில்லை? பிளாக் மெயில்." என்றாள் லாரா.

அடுத்த நாள் பால் மார்ட்டினுடன் உணவருந்திக் கொண்டிருந்தாள் லாரா.

"பால், எனக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை." என்றாள். பில் விட்மனின் மிரட்டலைப் பற்றிச் சொன்னாள்.

"நிஜமாகவே அவன் அந்தம்மாளிடம் போவானென்றா நினைக்கிறாய்?" என்றார் பால்.

"தெரியவில்லை. ஆனால் அவன் போனால் குடியிருப்புச் சங்கத்துடன் பலவகைப் பிரசினைகள் ஏற்படும்."

பால் புன்னகை செய்தார். "கவலைப்படாதே. அவன் போகமாட்டான். சும்மா மிரட்டிப் பார்க்கிறான்."

லாரா பெருமூச்சு விட்டாள். "அப்படி இருந்தால் நல்லதுதான்."

"அதிருக்கட்டும் லாரா. ரெனோவுக்குப் போக உனக்குப் பிடிக்குமா? என்றார் பால் மார்ட்டின். நெவாடா மாகாணத்தில் இருந்தது அந்த நகரம்.

"போகலாம்தான். நேரமே இல்லையே?"

"சும்மா உல்லாசப் பிரயாணம் போவதற்குச் சொல்லவில்லை. ஒரு ஒட்டலும், காஸினோவும் வாங்குகிறாயா என்று கேட்கிறேன்."

லாரா அவரையே பார்த்தவாறு இருந்தாள். "சீரியஸாகச் சொல்கிறீர்களா?"

"அங்கேயுள்ள ஓர் ஒட்டலின் லைசன்ஸ் காலாவதியாகப் போகிறதாம். எனக்குத் தகவல் கிடைத்தது. அது ஒரு தங்கச் சுரங்கம். செய்தி வெளி வந்தால் எனக்கு உனக்கு என்று அத்தனை பேரும் போட்டி போடுவார்கள். அந்த ஒட்டலின் லைசன்ஸ் பறிமுதலாகிவிட்டது. ஏலம் விடப் போகிறார்கள். ஆனால் உனக்காக நான் அதை ஏற்பாடு செய்து தருகிறேன்."

லாராவின் குரலில் தயக்கம் தென்பட்டது, "யோசிக்க வேண்டும். இப்போது ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே வாங்கியிருக்கிற கடன்களைக் கொஞ்சமாவது அடைத்தால்தான் இனிமேல் பாங்க்கில் கடன் தருவார்களாம், ஹோவார்டு சொல்கிறார்."

"நீ பாங்க்கில் கடன் வாங்க வேண்டாம்."

"பின்னே?"

"ஜங்க் பத்திரங்கள் என்று ஒன்று இருக்கிறது. பல வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் அதைக் கொடுகின்றன, சேவிங்ஸ், கடன் கம்பெனிகள் அவை. அதில் நீ ஐந்து பர்ஸென்ட் ஈக்விடி கொடுத்தால் அதன் மீது வெளி நாட்டுப் பாங்க்குகள் கடன் தரும்..."

எப்படிப் பணம் புரட்டுவது என்பதைப் பால் மார்ட்டின் விளக்கினார்.

லாராவுக்கு உற்சாகம் பிறக்கத் தொடங்கியது. "அருமையாய்த் தான் தோன்றுகிறது. அந்த ஒட்டலை நான் வாங்குவதற்கு நீங்கள் உதவி செய்வீர்களா?"

பால் மார்ட்டின் சிரித்தார். "அது தானே உனக்கு என்னுடைய கிறிஸ்துமஸ் பரிசு!"

"பால்... நீங்கள் ஒரு பிரமாதமான மனிதர்... எனக்கு இப்படியெல்லாம் நல்லது செய்ய வேண்டுமென்று ஏன் உங்களுக்குத் தோன்றுகிறது?"

"எனக்கும்தான் அது புரியவில்லை." என்று அவளைச் சீண்டுகிறாற்போல் சொன்னார் பால் மார்ட்டின். ஆனால் அவர் மனத்துக்குள் அதன் காரணம் தெரியும். அவளிடம் பித்துக் கொண்டிருந்தார் அவர். அவருக்கு இளமை முடியுணர்ச்சி ஏற்படுத்திக் கொடுத்தாள் லாரா. அவருக்குப் பரவச முட்டுகிறவள் லாரா. உன்னை நான் இழக்க மாட்டேன், லாரா, இழக்கவே மாட்டேன்.’ என்று எண்ணிக் கொண்டார் அவர்.

லாரா அலுவலகத்துக்குத் திரும்பியபோது ஹோவார்டு அவளுக்காகக் காத்திருந்தான். "எங்கே போயிருந்தாய்? இரண்டு மணிக்கு ஒரு மீட்டிங் இருப்பது..."

"அதிருக்கட்டும்... ஐங்க் பத்திரங்கள் என்கிறார்களே, அது என்ன ஹோவார்டு? சொல்லுங்கள். நாம் அதில் கடன் வாங்கியதேயில்லையே இதுவரை?" என்றாள்.

ஹோவார்டு விளக்கிவிட்டு, "சாதாரணப் பத்திரம் என்றால் ஒன்பது பர்ஸென்ட். ஜங்க் பத்திரம் என்றால் பதினாலு பர்ஸென்ட். எதற்கு இதெல்லாம் கேட்கிறாய்?" என்றான்.

லாரா கூறினாள்.

"காஸினோ... அதாவது சூதாட்டக் கிளப்? ஐயோ லாரா. பார் ஏற்பாடு இதெல்லாம்? பால் மார்ட்டின் தானே?"

"இல்லை ஹோவார்டு, நான் ஒரு திட்டத்தில் இறங்குகிறேன் என்றால் அது முழுக்க என்னுடையது தான். அது போகட்டும். பேட்டரி பார்க்கான்கிற மனையை வாங்குவதற்கு விசாரித்தோமே, தகவல் ஏதாவது கிடைத்ததா?"

"விசாரித்தோம். அந்த அம்மாள் நமக்கு விற்க மாட்டாளாம்."

"ஏன்? அது விற்பனைக்கு வந்திருக்கிறதா இல்லையா?"

"ஒரு வகையில்."

"சுற்றி வளைக்காமல் பேசுங்கள்."

"அதாவது, அந்த மனை டாக்டர் ராய்ஸ் என்பவருக்கு சொந்தமானது. அவர் இறந்து போய்விட்டார். இப்போது அந்த மனைக்கு எலினார் ராய்ஸ் என்பவள் சொந்தக்காரி. அந்த மனையை வாங்க எல்லா ரியல் எஸ்டேட்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்."

"நாமும் போட்டியிட வேண்டியதுதானே? நாம் தருவதாகச் சொன்னதைவிட அதிகமாகத் தருகிறதாக வேறு யாராவது சொல்லியிருக்கிறார்களா?"

"அதல்ல, அந்தம்மாளுக்குப் பணம் முக்கியமில்லை. மூட்டை மூட்டையாக வைத்திருக்கிறாள்."

"பின்னே எதுதான் முக்கியம் அவளுக்கு?"

"கணவரின் நினைவாக ஏதோ ஏற்படுத்த வேண்டுமாம். தன் கணவர் பெரிய்ய ஆல்பர்ட் ஷவைட்பர் என்று அவளுக்கு நினைப்பு. அவருடைய நினைவு சுடர்விட்டு ஜொலிக்க வேண்டுமாம். ஆகவே அந்த மனையில் மட்டமான கட்டிடங்கள், கடை அது இது என்று கட்டுவதற்கு இடம் தர மாட்டாளாம். ஸ்டீவ் மர்ச்சிஸன் அவனைச் சரிக் கட்ட முயன்று கொண்டிருக்கிறார் என்று கூடக் கேள்வி."

"ஒ..."

ஒரு முழு நிமிடம் லாரா எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். பிறகு, "ஹோவார்டு, உங்களுடைய டாக்டர் யார்?" என்று கேட்டாள்.

"என்னது?"

"உங்கள் டாக்டர் யார் என்று கேட்டேன்."

"ஸைமூர் பென்னெட் என்று பெயர். மிட்டவுன் ஆஸ் பத்திரியில் பிரதம டாக்டர்."

மறுநாள் காலை.

லாராவின் வழக்கறிஞர் டெர்ரிஹில் டாக்டர் ஸைமூர் பென்னெட்டின் அலுவலக அறையில் இருந்தார்.

"என்னை நீங்கள் ரொம்ப அர்ஜென்ட்டாகப் பார்க்க விரும்பினீர்களாமே? என் செக்ரட்டரி சொன்னாள்... ஆனால் வைத்திய விஷயமாக இல்லையென்றும் சொன்னாள்." என்றார் ஸைமூர்.

"ஒரளவு சரிதான்." என்றார் டெர்ரியில், "ஆனால் நான் சொல்லப் போவது ஒரு மருத்துவ சமாசாரம்தான், டாக்டர். நான் ஒரு முதலீட்டாளர்கள் குழுவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். அவர்கள் ஒரு கிளினிக் கட்ட விரும்புகிறார்கள். லாபத்துக்காக அல்லாமல் பொது நலப் பணியாக அது நடைபெற வேண்டும், வைத்தியச் செலவு செய்ய வசதியற்ற ஏழை மக்களுக்கு இலவச உதவி தருவது எங்கள் நோக்கம்..."

"ரொம்ப அருமையான திட்டம்." என்றார் டாக்டர் பென்னெட் "அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?"

டெர்ரி ஹில் விவரித்தார்.

மறுநாள் காலை அந்த விதவைப் பெண்மணி எலினார் ராய்ஸின் வீட்டில் டீ அருந்திக் கொண்டிருந்தார் டாக்டர் பென்னெட்.

"ஒரு முதலீட்டாளர்கள் குழுவின் சார்பாக நான் வந்திருக்கிறேன், மிஸஸ் ராய்ஸ். அவர்கள் ஓர் அழகான கிளினிக் கட்ட விரும்புகிறார்கள். உங்களுடைய கணவரின் பெயரை அதற்குச் சூட்டப் போகிறார்கள். அது உங்கள் கணவருக்கு ஒரு நினைவாலயம் மாதிரி இருக்கும் என்று நினைக்கிறார்கள்."

"நிஜமாகவா?"

38

வள் கணவனின் பெயரால் ஒரு மருத்துவமனை நிறுவப் போவதாகச் சொன்னதும் எலினாரின் முகத்தில் ஆர்வம் மின்னியது.

அந்தத் திட்டம் பற்றி டாக்டர் ஸைமூருடன் விவாதித்து மனையை விற்பதற்கு ஒப்புக் கொண்டான். "என் கணவரின் ஆன்மா எவ்வளவு ஆனந்தப்படும் தெரியுமா? உங்கள் குழுவிடம் சொல்லி கிரயப் பத்திரங்களைத் தயாரிக்கச் சொல்லுங்கள்." என்றாள்.

ஆறு மாதங்களில் அந்த மனையில் கட்டிட வேலைகள் ஆரம்பமாகின. பிரம்மாண்டமான கட்டிடங்கள். பெரிய பெரிய குடியிருப்பு அபார்ட்மெண்ட்டுகளும் விஸ்தீரமான கடை வீதியும் பல தியேட்டர்கள் கொண்ட காம்பளெக்ஸும் அங்கே எழுந்தது. அந்தக் கட்டிடங்களுக்கு வெகு கோடியில், ஒரு மூலையில், ஒரு சின்னஞ்சிறு செங்கல் வீடு கட்டப்பட்டிருந்தது. அதன் வாசலில் ஒரு சாதாரணமான பலகை மாட்டப்பட்டிருந்தது. அதில்-

‘ராய்ஸ் மெடிக்கல் கிளினிக்’ என்று இருந்தது. அவ்வளவே!

கிறிஸ்துமஸ் தினம் வந்தது. ஒரு டஜன் பார்ட்டிகளுக்கு அழைப்பு வந்த போதிலும் லாரா வீட்டிலேயே தங்கியிருந்தாள், பால் மார்ட்டின் வருவதாகச் சொல்லியிருந்தார்.

"என் மனைவி நீனாவுடனும் குழந்தைகளுடனும் இருக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் உன்னை வந்து பார்க்கிறேன்." என்று சொல்லியிருந்தார்.

இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்தப் பியானோ கலைஞன் பிலிப் எங்கே இருப்பானோ என்று அவன் சிந்தனை ஒடிக் கொண்டிருந்தது.

வெள்ளை வெளேரென்ற அழகிய பனி விழுந்து நியூயார்க் நகரைப் போர்த்தியிருந்தது. பால் மார்ட்டின் வந்தார் கையில் - ஏகப்பட்ட பரிசுப் பொருள்கள் கொண்ட பையுடன்.

"என் ஆபீசுக்கு வருகிற மாதிரி வந்து இதெல்லாம் வாங்கினேன்." என்றார். மனைவிக்குத் தெரியாமல் வாங்கினேன் என்று அவர் சொல்வது புரிந்தது.

"நீங்கள் எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறீர்கள், பால், இதெல்லாம் வேறே வாங்கி வரவேண்டுமா?" என்றாள் லாரா.

"பிரித்துப் பார்," என்றார் பால். அவர் குரலில் இருந்த குழந்தைத்தனம் அவள் உள்ளத்தை நெகிழச் செய்தது.

ஒவ்வொரு பரிசுப் பொருளையும் புத்திசாலித்தனமாயும் நிறையச் செலவு செய்தும் வாங்கியிருந்தார்.

வைர நெக்லஸ், விலையுயர்ந்த சால்வை, புத்தகங்கள், ஒரு வேலைப்பாடமைந்த கடியாரம்.

கடைசியில் ஒரு சிறிய கவர் இருந்தது. பிரித்துப் பார்த்தாள். அதனுள், பெரிய எழுத்தில் -

‘லாரா கேமரான், ரெனோ ஓட்டல் அண்ட் காஸினோ’ என்றிருந்தது!

அவள் ஆச்சரியத்தில் அவரை நிமிர்ந்து நோக்கினாள். "ஓட்டலும் காஸினோவும் எனக்குச் சொந்தமாகி விட்டதா என்ன?"

"ஆகிவிடும்." என்றார் அவர் உறுதியான குரலில். "அடுத்த வாரம் ஏலம் ஆரம்பமாகிறது. அப்புறம் உனக்கு ஜோர்தான்."

"சூதாட்டக் கிளப் நடத்துவது பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே?"

"கவபைப்படாதே. அந்தத் துறையில் கைதேர்ந்த சில பேரை அதற்கு ஏற்பாடு செய்கிறேன். ஓட்டலை நிர்வாகம் செய்யத்தான் உனக்கே தெரியுமோ?"

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. எனக்காக இவ்வளவு செய்கிறீர்களே?"

அவர் அவள் கைகளைப் பற்றிக் கொண்டார். "லாரா, உனக்காக நான் இந்த உலகத்தில் எதுவும் செய்வேன். ஞாபகம் வைத்துக்கொள்." என்றார்.

"வைத்துக் கொள்கிறேன்." என்றாள் அவள் மனப்பூர்வமாக.

அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார். "தான் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். இங்கேயே இருக்கத்தான்..."

"சொல்லுங்கள்."

"பரவாயில்லை. மெர்ரி கிறிஸ்துமஸ், லாரா."

"மெர்ரி கிறிஸ்துமஸ், பால்."

அவர் சென்றதும் லாரா எழுந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.

பனித் துகள்கள் நர்த்தனமாடும் மெல்லிய திரைச் சீலை போல வானம் உருமாறியபிருந்தது.

இருக்கை கொள்ளாமல், ரேடியோவிடம் சென்று திருகினான். அறிவிப்பாளரின் குரல் கேட்டது. ‘கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டுப் பாஸ்டன் எபிம்பணி ஆர்க்கெஸ்டிரா இசை நிகழ்ச்சி... பிரபல கலைஞர் பிலிப் ஆட்லரின் பியானோ..."

லாரா அந்த இசையைக் கேட்டாள். காதால் மட்டுமல்ல, கண்ணாலும், அழகான, கம்பீரமான பிலிப் பியானே! இசைத்துக் கொண்டிருப்பதை அவனால் கற்பனை செய்ய முடிந்தது.

இசை நிகழ்ச்சி முடிந்தது.

‘அவரை இன்னொரு முறை பார்க்க வேண்டும். பார்த்தே ஆக வேண்டும்.’ என்று அவள் தன்னுள் சொல்லிக் கொண்டாள்.

தனக்கு ஒரு பெண் இருப்பதாக லாரா சொன்னதை வைத்து அவனைப் பிளாக்மெயில் செய்ய முயன்று பில் விட்மன்.

கட்டிடத் துறையில் சிறந்த சூபர்வைசர்களில் ஒருவன். கீழேயிருந்து முன்னுக்கு வந்தவன். எங்கு பார்த்தாலும் அவனை வேலைக்குக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சீராக உழைத்து நிறையச் சம்பாதித்துக் கொண்டிருந்தான், இருந்தாலும் திருப்தி இல்லாதவன். தன்னை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் எக்கச்சக்கமாகச் சம்பாதிப்பதைக் கண்முன்னே பார்த்துக் கொண்டிருந்ததால் நாம் மட்டும் வெறும் சம்பளத்துடன் திருப்தியடைய வேண்டியிருக்கிறதே என்று எண்ணிக் கொள்வான். என்னை வைத்துத்தான் இவர்களுக்குப் பணம். நன்றாகத் தின்று கொழுத்துவிட்டு வெறும் எலும்புதுண்டுகளை எனக்கு வீசி எறிகிறார்கள் என்பது அவன் எண்ணம்.

அந்த எடித் பென்ஸன் அம்மையாரிடம் லாரா பேசியதைக் கேட்ட தினத்தன்று -

தன் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிறந்துவிட்டது என்று தோன்றியது அவனுக்கு. குடியிருப்புச் சங்கத்திடம் லாரா பொய் சொல்லி அனுமதி வாங்கியிருக்கிறாள். அந்தப் பொய் அவள் வாழ்க்கையை நாசம் பண்ணக் கூடும். அந்தச் சங்கத்திடம், அதன் தலைவி எடித் பென்ஸனிடம் போய் உண்மையைச் சொன்னால் லாரா தொழிலை விட்டு விட்டு ஓட வேண்டியதுதான்.

ஆனால் அப்படிச் செய்யும் எண்ணம் அவனுக்கு இல்ளை. வேறொன்று செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று தோன்றியது அவனுக்கு. அந்த விஷயத்தை ஒரு நெம்புகோலாக வைக்கத் தீர்மானித்தான். அதன்படி தான் லாராவைப் பிளாக்மெயில் செய்தான்.

அவன் என்ன கேட்டாலும் லாரா கொடுக்கத் தயாராயிருப்பாள். அன்று அவளைச் சந்தித்தபோதே அது தெரிந்து விட்டது. அவன் கேட்ட சம்பள உயர்வு கிடைப்பது நிச்சயம். லாராவுக்கு வேறே வழியில்லை. இப்போது கொஞ்சமாய்க் கேட்போம்’ என்று சந்தோஷமாய் நினைத்துக் கொண்டான்.

கிறிஸ்துமஸ்க்கு இரண்டு நாள் கழித்து வேலை ஆரம்பமாயிற்று. அந்தப் பிரம்மாண்டமான காலி மனையைப் பார்த்தான். இதில் கொள்ளையாகச் சம்பாதிக்கப் போகிறாள் லாரா. ஆனால் இந்தத் தடவை நானும் பணம் பண்ணுவேன்.

மனையில் பெரும் பெரும் யந்திரங்கள் வந்து இறங்கி யிருந்தன. கீரேன்கள் பூமியைத் தோண்டி, டன் கணக்கான மண்ணைத் தோண்டி அருகில் நின்ற லாரிகளில் கொட்டிக் கொண்டிருந்தன.

ஒரு கிரேனில் அதன் ராட்சத வாளி ஏதோ சிக்கிக் கொண்டது போலும் இயங்காதது மாதிரி நின்றிருந்தது. கிரேனின் கொக்கி, வாளியுடன் அந்தரத்தில் நின்றிருந்தது.

விட்மன் அந்த ராட்சத வாளிக்குக் கீழே போய் நின்றான். அண்ணாந்து பார்த்து, "என்னப்பா, என்ன ஆச்சு?" என்று குரல் கொடுத்தான்.

மேலே இருந்த ஆள் ஏதோ சொன்னான். விட்மனுக்கு அது காதில் விழவில்லை. ராட்சத வாளிக்கு இன்னும் நேர் கீழே போய் நின்று. "என்ன சொல்கிறாய்?" என்று கேட்டான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்துவிட்டது.

எங்கேயோ ஒரு சங்கிலி அவிழ, அந்த ராட்சத வாளி தடாவென்று விட்மனின் மேல் விழுந்தது. கீழே விழுந்து அவன் மயங்கிப் போனான்.

ஆட்கள் ஓடி வந்தார்கள். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. விட்மனின் உடல்தான் கிடைத்தது.

கிரேனை இயக்கிய ஆள் பிற்பாடு சொன்னான், "சேஃப்டி பிரேக் திடீரென்று நழுவி விட்டது. சே! என்னைப் பற்றி எனக்கே வெறுப்பாக இருக்கிறது. பாவம் விட்மன். எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்."

லாராவுக்குத் தகவல் போயிற்று உடனே அவள் பால் மார்ட்டினுக்குப் போன் செய்தாள். "பில் விட்மனைப் பற்றிச் செய்தி தெரியுமா?"

"ஆமாம், டெலிவிஷனில் காட்டினார்கள். பார்த்தேன்."

"பால், நீங்கள்."

அவர் சிரித்தார். "கிறுக்குத் தனமாகக் கற்பனை செய்யாதே. சினிமா நிறையப் பார்க்கிறாய் போலிருக்கிறது. அதனால்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறது. ஒன்று நினைவில் வைத்துக் கொள். சினிமாவில் நல்லவர்கள் தான் கடைசியில் ஜெயிக்கிறார்கள். இல்லையா?"

‘நான் நல்லவர்களில் சேர்த்தியா?’ என்று லாரா என்ணிக் கொண்டாள்...

ரெனோ ஓட்டலுக்காகவும் சூதாட்டக் காஸினோவுக்காகவும் டெண்டர் கொடுக்க ஒரு டஜனுக்கு மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். பால் மார்ட்டினுடன் லாரா சென்றிருந்தாள்.

"நான் எப்போது டெண்டர் கொடுக்கட்டும்" என்றாள் பால் மார்ட்டினிடம்.

"நான் சொல்கிறவரையில் எதுவும் கொடுக்க வேண்டாம். கம்மென்றிரு. மற்ற எல்லாரும் கொடுத்து முடிக்கட்டும்."

டெண்டர் ரகசிய முறையில் நடைபெற்றது. வந்திருந்தவர்கள் தாங்கள் தரவிருக்கும் தொகையைச் சீட்டில் எழுதிக் கவரில் ஒட்டி முத்திரை போட்டுக் கொடுத்தார்கள். அந்த உறைகளை அடுத்த வெள்ளி கிழமைதான் பிரிக்கப் போகிறார்களாம்.

புதன் கிழமை வரை லாரா தன் டெண்டரைத் தரவேயில்லை. "அலட்டிக்கொள்ளாமல் இரு. எப்போது உன் டெண்டரைத் தரவேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்றார் அவர்.

தினம் பலமுறை அவருக்குப் போன் செய்து கொண்டிருந்தாள்.

டெண்டரைத் தரவேண்டிய கடைசி நாள் வந்தது. ஆறு மணிக்குக் கெடு முடிகிறது. ஐந்து மணிக்குப் பால் மார்ட்டின் போன் செய்தார்.

"இப்போது கொடு. உன் டெண்டரை. இதுவரை மிகப் பெரிய தொகையான 13 கோடி டாலர்தான் கேட்டிருக்கிறார்கள். நீ அதற்கு மேலே ஐம்பது லட்சம் தருவதாக டெண்டர் கொடு." என்றார்.

லாரா விதிர்த்துப் போனாள். "ஐயோ! அவ்வளவு அதிகமாகத் தருவதானால் எனக்கு நஷ்டமல்லவா ஏற்படும்?"

"என்னை நம்பு." என்றார் பால் மார்ட்டின்.

"ஒட்டலை. வாங்கி நீ திருத்திக் கட்டும்போது பல செலவுகளை வெட்டி, விடலாம். சூபர்வைஸ் பண்ணும் இஞ்சினியர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள். இந்த ஐம்பது லட்சத்தையும் அதற்குக் கொஞ்சம் மேலோட்ட நீ மிச்சப்படுத்திவிடலாம்."

அவர் சொன்னபடியே லாரா செய்தாள். அவளுடைய டெண்டர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக மறுநாள் தகவல் கிடைத்தது.

ஹோவார்டுடன் அந்த ஓட்டலைப் பார்வையிட்டாள்.

ரெனோ பாஸ் என்று அந்த ஓட்டலுக்குப் பெயர். 1500 அறைகளுடன் விஸ்தாரமாக இருந்தது. அதை ஒட்டிய காஸினோ பள பளவென்று பெரிதாக இருந்தது. இவர்கள் போன சமயம் அங்கே யாரும் இல்லை. டோனி என்று ஒருவன் அவர்களுக்கு இடத்தைச் சுற்றிக் காட்டினான்.

"இந்தக் காஸினோவின் சொந்தக்காரர்கள் பாவம் ஏமாளிகள்." என்றான் டோனி.

"எந்த விஷயத்தில்?"

"இங்கே வேலை பார்த்த இரண்டு பேர் சூதாடுகிறவர்களுக்குப் பணம் போகாதபடி தில்லு முல்லு பண்ண ஆரம்பித்தார்கள்."

"திருடினார்கள் என்றா சொல்கிறாய்?" என்றான் ஹோவார்டு.

"ஆமாம். காஸினோ முதலாளிக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை."

"ரகசியமாய்ப் பண்ணியிருக்கிறார்கள்?"

"ஆமாம், காஸினோ விதி முறைகளைக் கண் காணிப்பதற்கு ஏற்ற குழு இருக்கிறது. கேம் கமிஷன் என்று பெயர், யாரோ அவர்களுக்குத் துப்புக் கொடுத்துவிட்டார்கள். காஸினோ முதலாளியின் லைசன்ஸ் பறிமுதல் ஆகி விட்டது. மற்றப்படி இது பெரிய லாபகரமான காஸினோ." என்றான் டோனி.

"தெரியும்." என்றான் ஹோவார்டு, ஏற்கெனவே அந்தக் காஸினோவில் வரவு செலவுக் கணக்குகளை அவன் பார்த்திருந்தான்.

எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தபின் ஹோவார்டுடன் பேசிக் கொண்டிருந்தாள் லாரா. "பால் கார்ட்டின் சொன்னது சரி தான். இது ஒரு தங்கச் சுரங்கம்." என்றவள் அவன் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் கவனித்தாள். "ஏன் என்னவோ போலிருக்கிறீர்கள்?" என்று கேட்டான்.

"ஒன்றுமில்லை." என்று ஒரு பெருமூச்சு விட்டான் அவன். "இந்த மாதிரி விவகாரத்தில் மாட்டிக் கொள்வது எனக்குப் பிடிக்கவில்லை."

"இந்த மாதிரி விவகாரம் என்றால்? இது ஒரு பணம் காய்ச்சி மரம், ஹோவார்டு."

"காஸினோவைக் கவனித்துக் கொள்ளப் போகிறவர்கள் யார்?"

"தகுந்த ஆள் பிடிப்போம்." என்று லாரா மழுப்பலாகச் சொன்னாள்.

"எங்கிருந்து பிடிப்பாய்? சாரணர் படையிலிருந்தா? இந்த மாதிரி சூதாட்டக் கிளப்பை நடத்துவது எப்படி என்று சூதாடிகளுக்குத்தான் தெரியும், லாரா. எனக்கு அப்படி யாரையும் தெரியாது. உனக்குத் தெரியுமா?

லாரா மெளனமாக இருந்தாள்.

39

‘சூதாட்டக் காஸினோ நடத்துவது பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா?’ என்று ஹோவார்டு கேட்டதற்கு லாரா மௌனமாக இருந்தாள்.

"பால் மார்ட்டினுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்." என்றான் ஹோவார்டு கேலியாக.

"அவரை இதில் சம்பந்தப்படுத்தாதீர்கள்."

"அவரைச் சம்பந்தப்படுத்த வேண்டாமென்றுதான் நான் பார்க்கிறேன். நீயும்கூடச் சம்பந்தப்படவேண்டாம். சூதாட்டக் கிளப் நடத்துவது அப்படியொன்றும் பெரிய ஐடியா அல்ல."

"க்வீன்ஸ் பிராஜெக்ட் கூடத்தான் பெரிய ஐடியா அல்ல என்றீர்கள். அதற்கு முன்பு ஹூஸ்டன் தெரு ஷாப்பிங் சென்ட்டரும் பெரிய ஐடியா அல்ல என்றுதான் சொன்னீர்கள். ஆனால் அதெல்லாம் கொள்ளையாய்ப் பணம் கொட்டுகிறது. உண்டா இல்லையா?"

"லாரா, அதெல்லாம் நல்ல திட்டமல்ல என்று நான் சொன்னதே கிடையாது. ரொம்ப அகலக் கால் வைக்கிறோம் என்றுதான் சொன்னேன். கண்ணில் படுவதை யெல்லாம் எடுத்து விழுங்குகிறாய். ஆனால் எதையும் இன்னும் ஜீரணிக்கவில்லை."

லாரா அவன் கன்னத்தை மெல்லத் தட்டினாள். "அலட்டிக் கொள்ளாமல் இருங்கள்."

சூதாட்டக் காஸினோக்கள் பற்றிய கண்காணிப்புக் குழுவினர் லாராவை ராஜோபசாரமாக வரவேற்றார்கள்.

"இப்படியொரு அழகான பெண்மணியைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு அடிக்கடி கிடைப்பதில்லை," என்றார் சேர்மன், "ஏகப்பட்ட உற்சாகம் ஏற்பட்டுவிட்டது இன்றைக்கு"

லாரா உண்மையிலேயே அன்று மிக அழகாகத்தான் காட்சியளித்தாள். விலையுயர்ந்த உல்லன் சூட்டும் கிரீம் சலர் மில்க் ப்ளவுசும் அணிந்திருந்தாள். ராசியாக இருக்கும் என்று பால் மார்ட்டின் கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுத்த ஸ்கார்ஃபைக் கழுத்தைச் சுற்றிக் கட்டியிருந்தாள். புன்னகையுடன் "நன்றி." என்றாள்.

"நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று குழுவில் ஒருவர் கேட்டார். அவள் என்ன கேட்டாலும் செய்வதற்கு எல்லாருமே தயாராக இருந்தார்கள்.

"இந்த ரெனோ நகருக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்." என்றாள் லாரா ஆர்வத்துடன், "நெவடா மாகாணத்திலேயே மிகப் பெரிய, மிக அழகிய ஒட்டல் கட்டவேண்டுமென்பது என் ஆசை. ரெனோ பாலஸ் ஓட்டலில் மேலும் ஐந்து மாடிகள் கட்ட உத்தேசித் திருக்கிறேன்."

"சூதாட்டத்துக்காக உல்லாசப் பயணிகள் மேலும் நிறைய வருவதற்கேற்றபடி ஒரு பெரிய கூடம் அமைக்க வேண்டும்..."

குழு உறுப்பினர்கள் ஒருவரையொருவர் ஜாடையாகப் பார்த்துக் கொண்டார்கள். சேர்மன் சொன்னார்: "நீங்கள் சொல்லும் திட்டங்கள் இந்த ஊருக்கு ரொம்பப் பயனுள்ளவைதான். ஆனால் இந்த மாதிரி வி காரங்களில் தில்லுமுல்லு எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் வேலை..."

"என்னை ஜெயிலிலிருந்து தப்பி வந்த கைதி என்று தயவு பண்ணி நினைக்க வேண்டாம்." என்று கூறி லாரா புன்னகை செய்தாள்.

அவளுடைய ஜோக்கை அவர்கள் ரசித்தார்கள். "மிஸ் லாரா, உங்களுடைய சாதனைகள் அனைத்தும் எங்களுக்குத் தெரியும். பிரமாதமான சாதனைகள்தான் அத்தனையும். ஆனால் சூதாட்டக் காஸினோ நடத்துவதில் உங்களுக்கு அனுபவம் கிடையாதே."

"உண்மைதான்." என்று லாரா ஒப்புக் கொண்டாள். "ஆனால், தகுதி பெற்ற அருமையான ஊழியர்களை அமர்த்திக் கொள்வேன். அவர்களையும் இந்தக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பிறகு வேலைக்கு வைத்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் எனக்கு வழி காட்ட வேண்டும்."

குழுவின் உறுப்பினர் ஒருவர், "நிதி விஷயத்தில் நீங்கள் கியாரண்டி..." என்று கேட்கத் தொடங்கினார்.

அதற்குள் சேர்மன் குறுக்கிட்டார். "அதைப் பற்றிக் கவலை வேண்டாம். மிஸ் லாரா எல்லா கியாரண்டி விவரங்களையும் கொடுத்திருக்கிறார். அதை நகலெடுத்து உங்கள் எல்லாருக்கும் தருகிறேன்."

அவர்களுடைய அங்கீகாரத்தை எதிர்நோக்கி லாரா காத்திருந்தாள்...

சேர்மன் கூறினார்: "இப்போதைக்கு நாங்கள் எதுவும் வாக்குக் கொடுக்க முடியாது மிஸ் லாரா. இருந்தாலும், உங்களுக்கு லைசன்ஸ் வழங்குவதில் இடைஞ்சல் எதுவும் இருக்காது என்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்."

லாராவின் முகத்தில் பெருமிதம் ஜொலித்தது. "பிரமாதம் சார். இனி மளமளவென்று காரியங்களில் இறங்குவேன்."

"இல்லையில்லை. இங்கெல்லாம் அவ்வளவு வேகமாகக் காரியங்கள் நடைபெறாது. உங்களுக்குத் திட்ட வட்டமான பதில் கொடுப்பதற்கு ஒரு மாத அவகாசம் தேவைப்படும்."

லாரா சங்கடத்துடன், "ஒரு மாதமா?" என்றாள்.

"ஆமாம். நாங்கள் பல விஷயங்களைச் செக் பண்ண வேண்டும்."

"சரி, செய்யுங்கள்." என்றாள் லாரா.

ரெனோ பாலஸ் ஓட்டலில் ஷாப்பிங் காம்ப்ளெக் எழில் ஒரு மியூசிக் கடை இருந்தது. பியானோ கலைஞன் பிலிப் ஆட்லரின் புதிய இசைத்தட்டு ஒன்று வெளி வந்திருப்பதை முன்னிட்டு, அவனுடைய படத்துடன் பெரிய போஸ்டர் அங்கே ஒட்டியிருந்தார்கள்.

லாராவுக்குச் சங்கீத ரசனை கிடையாது. இருந்தாலும், உறை மீது பிலிப்பின் புகைப்படம் இருந்ததால் ஓர் இசைத்தட்டு வாங்கிக் கொண்டாள்.

நியூயார்க்கிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது லாரா கேட்டாள்: "ஹோவார்டு, பிலிப் ஆட்லரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"

"எல்லாருக்கும் என்ன தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும்." என்றான் ஹோவார்டு. "இன்று உலகத்திலேயே தலை சிறந்த பியானோ கலைஞராக விளங்குகிறார். அருமையான சிம்பனி ஆர்க்கெஸ்டிராவில் பியானோ வாசிக்கிறார். சிரமப்படும் இசைக் கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காகக் கொஞ்ச நாள் முன்பு ஒரு மையம் ஆரம்பித்திருக்கிறாராம். எதிலோ படித்தேன்."

"அதன் பெயர்?"

"பிலிப் ஆட்லர் ஃபவுண்டேஷன் என்று நினைக்கிறேன்."

"அதற்கு ஏதேனும் நன்கொடை அளிக்க வேண்டும்" என்றாள் லாரா. "என் பெயரில் பத்தாயிரம் டாலருக்கு ஒரு செக் அனுப்புங்கள்."

ஹோவார்டு அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். "சாஸ்திரீய சங்கீதமென்றால் உனக்குப் பிடிக்காதே?"

"பிடிக்க ஆரம்பித்திருக்கிறது." என்றாள் லாரா.

பத்திரிகைகளில் கீழ்க்கண்டவாறு கொட்டையாகத் தலைப்பும் போட்டிருந்தார்கள்:

‘மாஃபியா தொடர்பு? பால் மார்ட்டின் மீது சந்தேகம்!’

அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்’ செய்தியைப் படித்ததும் லாராவுக்குக் கலவரம் ஏற்பட்டது. பால் மார்ட்டினுக்கு உடனே போன் செய்தாள்.

"என்ன இதெல்லாம்?" என்று கேட்டாள்.

அவர் சூள் கொட்டினார். "போலீஸ் ஆட்கள் மறுபடியும் வலை வீசிப் பார்க்கிறார்கள். அவ்வளவுதான். மாஃபியா பசங்களுடன் என்னை மாட்ட வைக்கவேண்டுமென்று பல வருஷங்களாய் இவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது வரை அதிர்ஷ்டமில்லை, பாவம், தேர்தல் வரும் ஒவ்வொரு சமயத்திலும் என்னை அடிக்கிற மாதிரி நாடகம் நடத்துவார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாதே. இன்று ராத்திரி நாம் சேர்ந்து சாப்பிடலாமா?"

"ஒ." என்றாள் லாரா.

"மல்பெர்ரி தெருவில் ஒரு சின்ன ரெஸ்டாரென்ட் இருக்கிறது. யார் தொந்தரவும் இல்லாமல் சாப்பிடலாம்." என்றார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கேட்டார். "காஸினோ கண்காணிப்புக் குழுவின் விசாரணை நல்ல படி நடந்தது என்று சொன்னார்களே?"

"ஆமாம். எல்லாரும் சினேகபாவத்துடன் நடந்து கொள்கிறார்கள். இருந்தாலும் அப்படி ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது கிடையாது."

"அதிலொன்றும் பிரசினை இருக்காது. காஸினாவைக் கவனித்துக் கொள்ள நான் சில பேரை ஏற்பாடு செய்து தருகிறேன். முன்பு லைசன்ஸ் வைத்திருந்தவனுக்குப் பேராசை இருந்ததால்தான்..." என்றவர் பேச்சை மாற்றி, "மற்றக் கட்டிட வேலைகளெல்லாம் எப்படி நடக்கிறது?" என்றார்.

"அருமையாய் இருக்கிறது. தற்சமயம் மூன்று இடங்களில் வேலை நடக்கிறது."

"ரொம்ப அகலக் கால் வைத்து விடவில்லையே, லாரா?" என்று பால் மார்ட்டின் கேட்டார். அன்று ஹோவார்டு கேட்ட மாதிரியே இருந்தது.

"இல்லை. எல்லாம் கரெக்டாய்ப் பட்ஜெட் போட்டுச் செய்கிறேன். குறித்த கெடுப்படி வேலை நடக்கிறது." என்றாள்.

"அதுதான் நல்லது, டார்லிங். உன் விஷயம் எதுவும் பிசகாய்ப் போய்விடக்கூடாது என்பதுதான் என் கவலை."

"போகாது." அவர் கைமீது தன் கையை வைத்தபடி சென்னாள் லாரா. "நீங்கள்தான் எனக்குக் கவசமாக இருக்கிறீர்களே?"

"எப்போதும் இருப்பேன்." என்றவர் அவள் கையை அழுத்தினார்.

இரண்டு வாரம் சென்றது.

நன்கொடையைப் பெற்றுக் கொண்டது பற்றிப் பிலிப்பிடமிருந்து தகவல் எதுவும் வரவில்லை. ஹோவார்டைக் கூப்பிட்டுக் கேட்டாள், "அந்தப் பிலிப் ஆட்லர் ஃபவுண்டேஷனுக்குப் பத்தாயிரம் டாலர் அனுப்பச் சொன்னேனே, அனுப்பினீர்களோ?"

"ஓ, நீங்கள் சொன்ன அன்றைக்கே அனுப்பி விட்டேனே."

"வேடிக்கைதான். அவர் எனக்குப் போன் பண்ணுவார் என்று நினைத்திருந்தேன்."

ஹோவார்டு தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

"எங்காவது சுற்றுப் பயணம் போய்க் கொண்டிருக்கிறாரோ என்னவோ?"

"இருக்கலாம்." தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள முயன்றான் லாரா. "சரி. அந்த க்வீன்ஸ் பிராஜெக்டைக் கவனிப்போம். எப்படி நடந்து கொண்டிருக்கிறது?"

"செலவுகள் நம் கையை மீறிப் போகும் போலிருக்கிறது." என்றான் ஹோவார்டு.

"அதை எப்படிச் சரிசெய்வது என்று எனக்குத் தெரியும். ஒரே நபருக்கு மொத்தமாக அதை விட்டு விடலாம்."

"யாரையேனும் மனசில் வைத்திருக்கிறாயா?"

"ஆமாம். மியூச்சுவல் செக்யூரிட்டி இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம். ஹொரேஸ் என்று ஒருவர் அதற்குப் பிரசிடெண்ட்டாக இருக்கிறார். அவர்கள் ஒரு புதுக் கட்டிடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நம்மதை எடுத்துக் கொண்டால் நன்றாயிருக்கும்."

"நான் விசாரிக்கிறேன்" என்றான் ஹோவார்டு.

அப்படிச் சொன்னானே தவிர அவன் எதையும் குறித்துக் கொள்ளவில்லை என்பதை லாரா கவனித்தாள். "உங்களைப் பார்த்தால் எப்போதும் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. எல்லாமே நினைவில் வைத்துக் கொள்வீர்களா?"

ஹோவார்டு சிரித்தான். "எனக்குப் போட்டோ பிடித்த மாதிரி ஞாபகசக்தி உண்டு. பேஸ்பால் விளையாடிக் கொண்டிருந்த காலத்தில் எல்லாப் புள்ளி விவரங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்வேன். அப்போது ஏற்பட்ட பழக்கம்."

‘எல்லாம் பழம் கனவு’ என்று நினைத்துக் கொண்டான் அவன். பள்ளியில் பேஸ்பால் வீரனாக இருந்தது...

பிறகு லீக்கில் பேஸ்பால் நட்சத்திரமாக விளங்கியது... அத்தனையுமே வேறே ஒரு காலம்... வேறே ஒரு மனிதன்...

"இந்த ஞாபகசக்தி சில சமயம் எனக்குச் சாபக் கேடாக இருக்கிறது. என் வாழ்க்கையில் சில விஷயங்களை மறக்க வேண்டுமென்று பார்க்கிறேன். முடிய வில்லை..."

"ஹோவார்டு, அந்த க்வீன்ஸ் பிராஜெக்ட் ஆர்க்கிடெக்டைக் கூப்பிட்டு, ப்ளான்களை வரையச் சொல்லுங்கள். மியூச்சுவல் செக்யூரிட்டி இன்ஷ்யூரன்ஸ்காரர்களுக்கு எவ்வளவு மாடிகள் தேவைப்படும். ஒவ்வொரு மாடியும் எவ்வளவு பரப்பு இருக்க வேண்டும்? விவரங்களை விசாரியுங்கள்."

இரண்டு நாளைக்கெல்லாம் ஹோவார்டு அவளுடைய அறைக்கு வந்தான். "லாரா, ஒரு கெட்ட செய்தி." என்றான்.

40

ஹோவார்டை நிமிர்ந்து நோக்கினாள் லாரா, "என்ன பிரசினை, ஹோவார்டு?"

"மியூசுவல் செக்யூரிட்டி இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் பற்றி விசாரிக்கச், சொன்னாயே? விசாரித்தேன். அவர்கள் தங்கள் ஹெட்குவார்ட்டர்சுக்காகப் புதிய இடம் பார்த்துக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் அதன் சேர்மன் கட்மன், யூனியன் ஸ்கொயரில் உள்ள வேறோர் இடத்தை எடுத்துக் கொள்ள நினைத்திருக்கிறாராம். அந்த இடம் யாருடையது தெரியுமா? உன் பழைய சினேகிதர் ஸ்டீவ் மர்ச்சிஸன்தான். அவருடைய கட்டிடத்தை வாடகைக்கு எடுக்க உத்தேசித்திருக்கிறார்கள்."

ஸ்டீவ் மரச்சிஸன்! நம் வாழ்க்கையிலிருந்து மறைந்து விட்டார் என்று நினைத்திருந்தேனே! இல்லை, இம்முறை அவரை விடக் கூடாது!

"மர்ச்சிஸனின் கட்டிடத்தை எடுத்துக் கொள்வதென்று கட்மன் முடிவு பண்ணிவிட்டரா?" என்று லாரா கேட்டாள்.

"இன்னும் இல்லை."

"நல்லது. நான் பார்த்துக் கொள்கிறேன்."

அன்று பிற்பகல் லாரா ஒரு டஜன் பேருக்குப் போன் செய்தாள். கடைசியில் சரியான நபர் கிடைத்தாள் - பார் பரா என்ற செல்வாக்குள்ள பெண் மணி. லாராவின் சினேகிதி அவள்.

லாரா விஷயத்தைச் சொன்னதும், "யார்? கட்மனா? அவரை எனக்குத் தெரியும். அவரிடம் என்ன ஆக வேண்டும் உனக்கு?" என்றாள்.

"அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைச் சந்திக்க வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. எனக்கு ஓர் உதவி செய்வாயா பார்பரா? அடுத்த சனிக்கிழமை ஒரு டின்னர் ஏற்பாடு பண்ணு. அதற்கு அவரைக் கூப்பிடு. என்ன?"

"நிச்சயமாய்."

பார்பராவின் வீட்டில் டின்னர் பார்ட்டி எளிமையாய், ஆனால் சிறப்பாக நடந்தது. மொத்தம் பதினாலு பேர்தான் விருந்துக்கு அழைக்கப் பட்டிருந்தார்கள். கட்மனின் மனைவிக்கு உடம்பு சரியில்லையாதலால் வரவில்லை. கட்மன் மட்டுமே வந்திருந்தார். அவரும் லாராவும் பக்கத்துப் பக்கத்தில் உட்காரும்படி பார்பரா ஏற்பாடு செய்திருந்தாள். கட்மனுக்கு அறுபது வயதிருக்கும். ஆனால் அதற்கு மேலும் வயதானவர் மாதிரி இருந்தார். கடுமையும் களைப்பும் நிறைந்த முகம். பிடிவாதத்தைக் காட்டும் மோவாய்.

அன்றைக்கு லாரா ரொம்பக் கவர்ச்சிகரமாக இருந்தாள். லோ - கட் கவுன் அணிந்து, அதிர வைக்கும் நகைகள் அணிந்திருந்தாள். பானங்கள் அருந்திய பின்னர் உணவருந்த அமர்ந்தார்கள்.

"உங்களைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன்." என்றாள் லாரா. "உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்."

"உங்களைப் பற்றி நானும் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேனம்மா, இந்த ஊரில் பல பெரிய காரியங்களைச் செய்திருக்கிறீர்கள் நீங்கள்."

"ஏதோ என்னாலானதைச் செய்ய வேண்டுமென்பதுதான் என் ஆசை." என்று அடக்கத்தோடு கூறினாள் லாரா, "அற்புதமான நகரமாயிற்றே இது!"

"உங்கள் சொந்த ஊர் எது?"

"இந்தியானா மாகாணத்தில், கேரி என்கிற ஊர்."

"அப்படியா?" அவளை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

"நானும் அங்கே பிறந்து வளர்ந்தவன்தான். ஆக நாம் ஒரே ஊர்க்காரர்கள்?"

லாரா புன்னகை செய்தாள். "ஆகா! நம்ம ஊரைப் பற்றி நினைத்தாலே ஆனந்தம் எனக்கு. என் அப்பா போஸ்ட் ட்ரிப்யூன் பத்திரிகையில் வேலை பார்த்தார். நான் ரூஸ்வெல்ட் பள்ளிக்கூடத்தில் படித்தேன். ஞாயிறு என்றால் நாங்கள் கிளீசன் பார்க்கிற்குப் பிக்னிக் போவோம், பேஸ்பால் மேட்சுகள் பார்ப்போம். அந்த ஊரை விட்டு வரவே எனக்கு மனசில்லை. என்ன செய்ய?"

"ஆனால் இங்கே வந்து நல்ல நிலைமையில்தானே இருக்கிறீர்கள், மிஸ் லாரா கேமரான்."

"என்னை லாரா என்றே நீங்கள் கூப்பிடலாம்."

"லாரா, இப்போது எங்கே கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?"

"க்வீன்ஸ் ஏரியா கட்டிடம், என்னுடைய ரொம்பப் பிரமாதமான திட்டம் என்று அதைத்தான் நினைத்திருக்கிறேன்." என்றாள் லாரா, "முப்பது மாடி கொண்டது. இரண்டு லட்சம் சதுர அடிப்பரப்பு."

"ஓகோ... அப்படியா?" என்றார் கட்மன், ஏதோ யோசனையுடன்.

லாரா ஒன்றுமறியாதவள் போல, "என்ன யோசிக்கிறீர்கள்?" என்றாள்.

"ஒன்றுமில்லை... எங்கள் அலுவலகத்தின் தலைமைக் காரியாலயத்துக்காக ஒரு பெரிய இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்..."

"அப்படியா? எந்த இடம் என்று முடிவு பண்ணிவிட்டீர்களா?"

"இன்னும் இல்லை. ஆனால்..."

"உங்களுக்குச் சம்மதமென்றால் எங்கள் கட்டிடத்தின் பிளான்களைக் காட்டுகிறேன். எல்லாம் தயாராய் வைத்திருக்கிறோம்."

அவர் அவளை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தார். "சரி, கொண்டு வந்து காட்டுங்கள்."

"திங்கள் கிழமை காலை உங்கள் ஆபீசுக்கு எடுத்து வருகிறேனே?"

"சந்தோஷம்."

அன்றைய விருந்து கோலாகலமாய் நடந்து முடிந்தது.

இரவு கட்மன் வீட்டை அடைந்ததுமே நேரே தன் மனைவியின் படுக்கையறையை அடைந்தார்.

"எப்படி இருக்கிறாய்?" என்று விசாரித்தார்.

"தேவலை. பார்ட்டி எப்படி நடந்தது?"

அவர் படுக்கை முனையில் உட்கார்ந்தார். "நீ வராததைப் பற்றி எல்லாரும் வருத்தப்பட்டார்கள். மற்றப் படி பார்ட்டி நன்றாக நடந்தது. லாரா கேமரான் என்கிற பெண்ணைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?"

"தாராளமாய். அவளைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் யார்?"

"கெட்டிக்காரப் பெண். ஒரு வேடிக்கையான விஷயம். இந்தியானா மாகாணத்தில் நான் பிறந்த அதே கேரி நகரத்தில் தானும் பிறந்ததாகச் சொல்கிறாள். அந்த அளர் பார்க், பள்ளிக்கூடம் பற்றியெல்லாம் சொன்னாள்."

"சரி, அதிலென்ன வேடிக்கை?"

மனைவியைப் பார்த்துச் சிரித்தார் கட்மன். "அந்தப் பெண்ணின் சொந்த ஊர் நோவா ஸ்கோஷியா. எனக்கு அது தெரியாதென்று நினைத்திருக்கிறாள்."

திங்கள் கிழமை காலை கட்மனின் அலுவலகத்தை அடைந்தாள் லாரா. க்வீன்ஸ் ஏரியா கட்டிடத்தின் ப்ளூ ப்ரின்ட்களைக் கையோடு எடுத்துச் சென்றிருந்தாள்.

தான் இன்னாரென்று சொன்னதும் உடனேயே அவளைக் கட்மனின் அறைக்கு அழைத்துச்சென்றார்கள்.

"வா லாரா, உட்கார்." என்றார் கட்மன்.

கையிலிருந்த ப்ளூ ப்ரின்ட்டை அவர் மேஜை மீது வைத்துவிட்டு எதிரே உட்கார்ந்தாள் லாரா.

"இதை நீங்கள் பார்ப்பதற்கு முன்னால் உங்களிடம் ஒன்றை ஒப்புக் கொள்ள வேண்டும், மிஸ்டர் கட்மன்."

கட்மன் நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து கொண்டு, "சொல்லு," என்றார்.

"இந்தியானாவில், கேரியைப் பற்றி நான் சொன்னது..."

"என்ன அதற்கு?"

"நான் கேரிக்குப் போனது கூடக் கிடையாது. உங்கள் மனசைக் கவர வேண்டும் என்பதற்காகச் சும்மா வானும் சொன்னேன்."

கட்மன் சிரித்தார். "நன்றாய் என்னைக் குழப்புகிறாய், பெண்ணே! உன்னளவுக்கு என்னால் வாயாட முடியாது. ப்ளூ ப்ரின்ட்டைப் பார்க்கிறேன், இரு."

அரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் பரிசீலனை செய்து முடித்தார்.

பிறகு யோசனையுடன், "உண்மையைச் சொல்வதென்றால், நான் வேறே ஒர் இடத்தைப் பார்த்து வைத்திருந்தேன். கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டேன் என்று கூடச் சொல்லலாம்." என்றார்.

"உண்மையாகவா?"

"நான் ஏன் அந்த முடிவை மாற்றிக் கொண்டு உன் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்? சொல்லு."

"ஏனென்றால் என் கட்டிடத்துக்கு வந்தால் உங்களுக்கு இன்னும் சந்தோஷம் ஏற்படும். உங்களுக்குத் தேவையானது அத்தனையையும் செய்து தர நான் தயாராயிருக்கிறேன்." என்றாள் லாரா புன்சிரிப்புடன். "அத்துடன் உங்கள் கம்பெனிக்காகப் பத்து பர்சென்ட் குறைவாகவே நான் வாடகை வாங்கிக் கொள்கிறேன்."

"அப்படி யார் நாங்கள் பார்த்து வைத்திருக்கும் கட்டிடத்துக்கு நாங்கள் என்ன கொடுக்கப் போகிறோம் என்பது உனக்குத் தெரியாதே?"

"பரவாயில்லை. நீங்கள் என்ன தொகை சொன்னாலும் நான் நம்பத் தயார்."

"நீ என் ஊரிலிருந்து வந்த பெண் மாதிரிதான் இருக்கிறாய்! வெகு புத்திசாலி" என்றார் கட்மன். "நல்லது. நம் ஒப்பந்தம் முடிந்து விட்டது."

லாரா மகிழ்ச்சியுடன் தன் அலுவலகத்துக்குத் திரும்பினாள். அங்கே இன்னொரு மகிழ்ச்சி காத்திருந்தது அவளுக்கு. பியானோ கலைஞன் பிலிப் ஆட்வர் அவளை டெலிபோனில் கூப்பிட்டதாகச் சொன்னார்கள்.

வால்டார்ஃப் அஸ்டோரியா ஓட்டலின் விருந்து மண்டபம் ஒரே கூட்டமாக இருந்தது. விருந்துக்காக நான் கொடை செலுத்தியவர்கள் நிறைய வந்திருந்தார்கள். பிலிப்பைத் தேடியவாறு கூட்டத்தை விலக்கிக் கொண்டு நடந்தாள் லாரா.

அன்று பிலிப்புடன் டெலிபோனில் பேசியது நினைவு வந்தது அவளுக்கு.

"மிஸ் கேமரான், நான் பிலிப் ஆட்லர் பேசுகிறேன்." என்றான் அவன்.

திடீரென்று தொண்டை உலர்ந்து விட்ட மாதிரி இருந்தது லாராவுக்கு.

அவனே பேசினான். "ஃபவுண்டேஷனுக்கு நீங்கள் அனுப்பிய நன்கொடை கிடைத்தது. உடனே நான் நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஸாரி. அப்போது நான் ஐரோப்பாவுக்குப் போயிருந்தேன். வந்ததும்தான் உங்கள் செக்கைப் பார்த்தேன். ரொம்ப சந்தோஷம்."

"இல்லை. எனக்குத்தான் சந்தோஷம்," என்றாள் லாரா, அவனை மேலும் பேச வைத்துக் கேட்க வேண்டும் போலிருந்தது. "வந்து... சொல்லப் போனால் உங்கள் ஃபவுண்டேஷனைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நாம் நேரில் சந்தித்துப் பேசலாமா?"

சிறிது மௌனத்துக்குப் பின் அவன், "வால்டார்ஃப் அஸ்டோரியா ஓட்டலில் ஒரு நன்கொடை விருந்து சனிக்கிழமை இரவு நடக்கிறது. அங்கே நாம் சந்திக்கலாம். உங்களுக்கு அன்று ஒழிவாக இருக்குமா?"

தன் நிகழ்ச்சி நிரலை வேகமாகப் பார்த்துக் கொண்டாள் லாரா. சனிக்கிழமை இரவு டெக்ஸாஸிலிருந்து வரும் ஒரு பாங்க்கருடன் விருந்துண்ணும் நிகழ்ச்சி இருந்தது.

சட்டென்று முடிவுக்கு வந்தவளாக, "ஓ, தாராளமாய் வருகிறேன்." என்றாள்.

"பிரமாதம்! உங்கள் பெயருக்கு ஒரு டிக்கெட் வாங்கி வைக்கிறேன்." என்றான் பிலிப்.

டெலிபோனைத் திரும்ப வைத்தபோது அவள் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது...

அதன்படிதான் இன்று இங்கே வந்திருந்தாள். பிலிப் எங்கேயும் கண்ணில் படக்காணோம். அந்த விஸ்தாரமான மன்றத்தில், கூட்டத்தினூடே நடந்தாள். எந்தப் பக்கம் சென்றாலும் சங்கீதம் சம்பந்தப்பட்ட சம்பாசணைகள்தான் காதில் விழுந்து கொண்டிருந்தன.

"எல்லாம் சரிதான்... சாரீரத்தில் கமகம் இருக்கிறது. ஆனால் டெம்ப்பி! ஊகூம்."

"நீ சொல்வதை ஒப்புக் கொள்ள மாட்டேன். ஸ்ட்ராவன்ஸ்கி சுத்த மரக்கட்டை, ரோபோ கூட அந்த மாதிரி இசைத்துவிடும்... பாவமே கிடையாது..."

"அவன் வாசிப்பது எனக்குச் சகிக்கவில்லை. சோபினைக் கொலை செய்கிறான்..."

ஆனா ஆவன்னாகூடப் புரியாத சங்கீதப் பேச்சாக இருந்தது லாராவுக்கு.

அதோ! பிலிப் தென்பட்டான்.

அவனைச் சுற்றி ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம். எல்லாரையும் விலக்கிக் கொண்டு முன்னேறினாள்.

ஒரு கவர்ச்சியான இளம் பெண் அவனிடம், "நீங்கள் அந்த பி-ஃப்ளாட்மைனர் சானட்டாளை இசைத்த போது அசல் ரஷ்மானினாவே பிரத்யட்சமான மாதிரி இருந்தது. உங்கள் இனிமையான குரல்... அற்புதம்"

பிலிப் புன்னைகையுடன், "நன்றி," என்றான்.

அதற்குள் ஒரு வயோதிக அம்மையார், "உங்களுடைய ஹேமர் கிளாவியர் இசைத் தட்டை நான் திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். அப்பப்பா! என்ன ஜீவன் உலகத்திலேயே பீத்தோவனைப் புரிந்து கொண்டிருக்கும் இசைக் கலைஞர் நீங்கள் ஒருவர்தான்." என்றாள்.

பிலிப் அப்போதுதான் லாராவைக் கவனித்தான். "மன்னியுங்கள்." என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அவள் நின்றிருந்த இடத்துக்கு வந்து கையைப் பற்றிக் குலுக்கினான். அந்த ஸ்பரிசம் அவளுள் ஏற்படுத்திய பரவசம்!

41

பிலிப் லாராவின் கையைக் குலுக்கி, "ஹலோ, நீங்கள் வந்ததில் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா, மிஸ் கேமரான்," என்றான்.

"நன்றி," என்றவள் சுற்று முற்றும் நோக்கி, "இங்கே நல்ல கூட்டம்," என்றாள்.

"ஆமாம், சாஸ்திரீய சங்கீதத்தில் உங்களுக்கு ஆர்வ முண்டு என்று நினைக்கிறேன்." என்றான் பிலிப்.

தனது சின்ன வயசில் கேட்டிருந்த சங்கீதத்தை நினைவுபடுத்திப் பார்த்தாள் லாரா, எல்லாம் குழந்தைத் தனமான வேடிக்கைப் பாட்டுதான்.

"ஆமாம் ஆமாம். என் அப்பா எனக்கு ஆசிரியர் வைத்துச் சாஸ்திரீய சங்கீதம் கற்றுக் கொடுத்தார்." என்று அளந்தாள்.

"உங்கள் நன்கொடைக்காக மறுபடியும் நன்றி சொல்கிறேன். உண்மையில் ரொம்ப தாராளமான நன்கொடை..."

"உங்கள் ஃபவுண்டேசன் உபயோகமான பணி செய்கிறது. அதைப் பற்றி நான் நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன். முடிந்தால்..."

"பிலிப்! டார்லிங்! உங்கள் நிகழ்ச்சியை வர்ணிக்க வார்த்தையே இல்லை! அவ்வளவு அபாரம்" - மறுபடியும் அவனை ரசிகைகள் சூழ்ந்து கொண்டார்கள்.

அவனுக்குக் கேட்கும்படி லாரா தன் குரலை உயர்த்திப் பேசினாள், "அடுத்த வாரம் உங்களுக்கு அவகாசம் இருந்தால்..."

அவன் தலையை அசைத்தான் "ஸாரி, நான் நாளைக்கு ரோமுக்குப் புறப்படுகிறேன்."

லாராவை ஏமாற்றம் பற்றியது "ஒ..."

"ஆனால் மூன்று வாரத்தில் திரும்பிவிடுவேன். அப்போது நாம்..."

"பிரமாதம். அது போதும்!" என்றாள் அவள்.

"அப்போது நாம் சங்கீதத்தைப் பற்றி நிறையப் பேசுவோம்."

லாரா புன்சிரிப்புடன் சமாளித்தாள், "நான் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டேயிருப்பேன்..."

அந்தச் சமயம் இரண்டு நடுத்தர வயது நபர்கள் அங்கே வந்தார்கள். "பிலிப், எங்களுக்குள் ஒரு விவாதம், நீங்கள் பியானோ வாசிக்கும்போது..." என்று ஒருவர் ஆரம்பித்துப் பேசிக் கொண்டே போனார்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது லாராவுக்குத் துளியும் புரியவில்லை. என்னென்னவோ சங்கித பரிபாஷைகள்!

பிலிப்பின் முகத்தைப் பார்த்தாள். அதில் தென்பட்ட ஆர்வம்... உற்சாகம்.

‘இதுதான் இவருடைய உலகம்... இதற்குள் நுழைவதற்கு ஒரு வழி கண்டு பிடித்தாக வேண்டும்.’ என்று தீர்மனித்தாள்.

மறுநாள் காலை லாரா நியூயார்க் நகரத்தின் இசைப் பள்ளிக்குச் சென்றாள். வரவேற்பில் இருந்த பெண்ணிடம், "நான் ஒரு சங்கீத பேராசிரியரைப் பார்க்க வேண்டும்" என்றாள்.

"குறிப்பாக யாரையேனும் பார்க்க வேண்டுமா?"

"அப்படியொன்றுமில்லை."

"ஒரு நிமிடம் ப்ளீஸ்," என்ற அந்தப் பெண் அடுத்த அறைக்குப் புகுந்து மறைந்தாள்.

சில நிமிடங்களுக்கெல்லாம் ஒரு நரைத்த முடி மனிதர் லாராவிடம் வந்தார்.

"குட் மார்னிங். என் பெயர் மேயர்ஸ். என்ன வேண்டும் உங்களுக்கு?"

"எனக்குச் சாஸ்திரீய சங்கீதத்தில் ஆர்வம்."

"ஓ, நீங்கள் இங்கே மாணவியாகச் சேர விரும்புகிறீர்களா? என்ன வாத்தியம் வாசிக்கிறீர்கள்?"

"எந்த வாத்தியமும் வாசிக்கவில்லை. சாஸ்திரீய சங்கீதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்."

"நீங்கள் தப்பான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பள்ளியில் எதுவும் தெரியாத புதுமுகங்களைச் சேர்த்துக் கொள்வதில்லை."

"இரண்டு வாரம் சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கு ஐயாயிரம் டாலர் தருகிறேன்."

பேராசிரியரின் விழி தெறித்து விழுந்து விடும் போல் ஆகிவிட்டது. "ஸாரி... நீங்கள்... உங்கள் பெயர்..."

"லாரா. லாரா கேமரான்."

"சாஸ்திரீய சங்கீதத்தைப் பற்றி இரண்டு வாரம் உங்களுடன் பேசுவதற்காக ஐந்தாயிரம் டாலர் தருவதாகவா சொல்கிறீர்கள்?" வாக்கியங்களை வெளிக் கொணரவே அவர் திணறிப் போனார்.

"ஆமாம். அந்தத் தொகையை உங்கள் ஸ்காலர்ஷிப் எதற்காவது கொடுப்பதென்றாலும் கொடுக்கலாம்."

பேராசிரியர் மேயர்ஸ் குரலைத் தாழ்த்திக் கொண்டார். "அதெல்லாம் தேவையில்லை. இது உங்களுக்கும் எனக்கும் மட்டுமுள்ள விஷயம்..."

"ரொம்ப சந்தோஷம்."

"எப்ப... வந்து... எப்ப உங்களுக்கு ஆரம்பிக்கணும்?"

"இப்போதே." என்றாள் லாரா.

"எனக்கு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஐந்த நிமிடம் டயம் கொடுங்கள்." என்றார் அவர்.

கொஞ்ச நேரம் கழித்து -

லாராவும் பேராசிரியர் மேயர்ஸும் ஒரு வகுப்பு அறையில் தனித்து உட்கார்ந்திருந்தார்கள்.

"முதலிலிருந்து ஆரம்பிப்போம். உங்களுக்குச் சாஸ்திரீய சங்கீதம் பற்றி ஏதேனும் தெரியுமா?"

"கொஞ்சம்கூடத் தெரியாது."

"ஒ... நல்லது. இசையைப் புரிந்து கொள்ள இரண்டு வழிகள் இருக்கிறது" என்று ஆரம்பித்தார் பேராசிரியர், "ஒன்று அறிவுபூர்வமாக, மற்றது உணர்ச்சிபூர்வமாக, இசையானது ஒரு மனிதனுக்குள்ளே ஒளிந்திருக்கும் ஆன்மாவை வெளிக் கொணருகிறது என்று யாரோ சொன்னார்கள், எல்லா இசை மேதைகளும் அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள்."

லாரா கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"எந்த இசை மேதையைப் பற்றியாவது உங்களுக்குப் பரிச்சயமுண்டா?"

லாரா புன்னகையுடன், "அதிகம் இல்லை." என்றாள்.

பேராசிரியர் முகம் சுளித்தார். "பின்னே ஏன் நீங்கள் இசையில் ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று எனக்கு..."

"எனக்கு ஒரு இசைக் கலைஞரைத் தெரியும். அவருடன் பேசும்போது புத்திசாலித்தனமாகப் பேச வேண்டும். அதற்குச் சங்கீதம் பற்றிய பின்னணி தெரிந்திருக்க வேண்டும். நான்... குறிப்பாகப் பியானோ இசை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்."

"அப்படியா?" பேராசிரியர் ஒரு நிமிடம் யோசனை செய்தார். பிறகு நாம் எப்படி ஆரம்பிக்கலாம் என்றால்... முதலில் உங்களுக்குச் சில காம்பாக்ட் டிஸ்குகள் தருகிறேன்." என்றார்.

சொல்லிவிட்டு ஒரு ஷெல்பைத் திறந்து சில காம்பாக்ட் டிஸ்குகளை எடுத்து வந்தார்.

"இதில் ஆரம்பிப்போம். இந்த டிஸ்குகளை நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டும், என்றவர் படிப்படியாக எதற்கு அடுத்து எதைக் கேட்க வேண்டும் என்று விளக்கினார். "அதிலேயே எல்லா விவரமும் குறித்திருக்கிறார்கள்."

"ரைட்."

"இவற்றின்படி நீங்கள் பியானோ இசைத்துப் பாருங்கள். சில நாள் கழித்து வந்து என்னை சந்தியுங்கள்."

"நாளைக்கே வருகிறேன்" என்றாள் லாரா.

மறுநாள் லாரா வந்தபோது அவள் கையில் அரை டஜன் காம்பாக்ட் டிஸ்குகள் இருந்தன. எல்லாம் பிலிப்பின் இசை நிகழ்ச்சிகளின்போது பதிவு செய்யப் பட்டவை.

"ஆ! பிரமாதம்!" என்றார் மேயர்ஸ், "ரொம்பப் பெரிய கலைஞர் பிலிப். அவருடைய பியானோ வாசிப்பு உங்களுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது!"

"ஆமாம்."

"ரொம்ப அருமையான ஸானட்டாக்கள் இசைத் திருக்கிறார், அந்த இசை மேதை."

"ஸானட்டா?"

அவர் பெருமூச்செறிந்தார் "ஸானட்டா என்றால் உங்களுக்குத் தெரியாதா?"

"வந்து... தெரியாது..."

பேராசிரியர் அதை விளக்கினார். "புரிகிறதா?"

"புரிகிறது." என்றாள் லாரா. பரவாயில்லை. பிலிப்புடன் பேசும் போது இதை வைத்துச் சமாளித்துவிடலாம்...

பியானோ என்கிற பெயர் இத்தாலிய மொழியிலிருந்து எப்படி வந்தது என்பதை விளக்கினார் பேராசிரியர்.

அடுத்த சில நாட்களுக்கு அவர்கள் பிலிப்பின் இசை நாடாக்களை வைத்து விவாதித்தார்கள். பீத்தோவன், வஸ்ட், மொஸார்ட், சோபின்...

லாரா கேட்டுக் கொண்டாள். மனத்தில் பதித்துக் கொண்டாள். ஞாபகத்தில் வைத்துக் கொண்டாள்.

"அவருக்கு இசைமேதை லிஸ்டைப் பிடிக்கும். அவரைப் பற்றிச் சொல்லுங்கள்."

"லிஸ்ட் ஒரு குழந்தை மேதை. அவரைப் போற்றாதவர் கிடையாது. அற்புதமான கலைஞர். மேட்டுக் குடியினர் அவரைச் செல்லப் பிள்ளைபோல் வைத்திருந்தார்கள். கடைசியில் அவர் ‘எல்லாருமாக என்னை ஒரு செப்பிடு வித்தைக்காரன் மாதிரி பண்ணி விட்டார்கள்’ என்று வருத்தப்பட்டார்."

"பீத்தோவனைப் பற்றிச் சொல்லுங்கள்."

"அவரைப் புரிந்து கொள்வது கஷ்டம். துளியும் சந்தோஷமில்லாத மனிதர். மாபெரும் வெற்றி அடைந்திருந்த சமயத்தில், தான் அதுவரை படைத்ததெல்லாம் சரியில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். நீளமான, உணர்ச்சிமயமான இசையை அமைக்கத் தொடங்கினார்..."

"சோபின்?"

"அவர் பியானோவுக்கு ஏற்ற இசையை மட்டும் தான் அமைத்தார் என்று சிலர் குறை கூறுவதுண்டு. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்தான் அவருக்குக் கற்பனை என்பார்கள்."

இந்த விவாதத்துக்குப் பிறகு

எந்தக் கலைஞர் எந்த இசையை நன்றாக வாசிக்கிறார் என்பதைப் பற்றியும் பிரெஞ்ச் பியானோக் கலைஞர்களுக்கும் அமெரிக்கப் பியானோக் கலைஞர்களுக்கு முள்ள வித்தியாசம் பற்றியும் பேசினார்கள். தினம் தினம் பிலிப் இசையைக் கேட்டார்கள்.

இரண்டு வாரம் முடிந்தது...

"நீங்கள் மிகவும் திறமைசாலி மிஸ் லாரா," என்றார் மேயர்ஸ். "இசையை ஈடுபாட்டுடன் கற்கிறீர்கள். ஏதாவது ஒரு வாத்தியம் பயிலுங்களேன்?"

லாரா சிரித்தாள்.

"அதிலெல்லாம் நான் மாட்டிக் கொள்ள மாட்டேன், இந்தாருங்கள்." பேசியிருந்தபடி செக்கைக் கொடுத்தாள்.

பிலிப் எப்போது நியூயார்க்கிற்குத் திரும்புவான் என்று காத்திருக்கத் தொடங்கினாள்.

அன்று பொழுது விடிந்ததுமே அவளுக்கு ஒரு நல்ல செய்தி வந்தது. அவருடைய வழக்கறிஞர் டெர்ரிஹில் போன் செய்தார்.

"லாரா?"

"ஆமாம்."

"காஸினோ கமிஷனிடமிருந்து இப்போதுதான் செய்தி வந்தது. உங்களுக்கு லைசன்ஸ் கிடைத்துவிட்டது."

"அருமை டெர்ரி!"

"நேரில் வந்து விவரங்கள் சொல்கிறேன். பச்சைக் கொடி காட்டி விட்டார்கள் என்பது நிச்சயம். கமிசன் ஆட்கள் அத்தனை பேரையும் ஒரே அமுக்காய்க் கவர்ந்துவிட்டீர்கள் போலிருக்கிறது?"

"நன்றி. இன்றைக்கே எல்லா ஏற்பாடுகளையும் ஆரம்பித்துவிடுகிறேன்..."

ஹோவார்டிடம் விவரத்தை சொன்னாள்.

"பிரமாதம்! அங்கே கிடைக்கிற பணத்தை வைத்து நம்முடைய பல பிரச்சினைகளைச் சமாளிக்கலாம்." என்றான் அவன்.

42

ரெனோ ஒட்டல் பற்றி ஹோவார்டு சொன்னதும் லாரா கேலண்டரைப் பார்த்தாள். "செவ்வாய்க்கிழமை நாம் அங்கே போய் வேலைகளை ஆரம்பித்துவிடலாம்."

டெலிபோன் பஸ்ஸர் ஒலித்தது. செக்ரட்டரி கேத்தி பேசினாள். "ஆட்லர் என்று ஒருவர் கூப்பிடுகிறார். போடட்டு மா, அல்லது..."

திடீரென்று ஒரு பரபரப்பு அவளைப் பீடித்தது. "போடு," என்று சொல்லிப் போனை எடுத்தாள்.

"பிலிப்"

"ஹலோ, நான் ஊர் திரும்பி விட்டேன்."

"மகிழ்ச்சி." என்றாள் அவள்.

‘உங்களைப் பார்க்க முடியாமல் என்ன தவிப்புத் தவித்தேன்’ என்று எண்ணிக்கொண்டாள்.

"இன்றிரவு தாம் சேர்ந்து சாப்பிடலாமா? முன்னறிவிப்பு இல்லாமல் கூப்பிடுகிறேன் என்று நினைக்காதே, உனக்கு ஒழிவாக இருக்குமா?"

"நிச்சயம்."

அன்று இரவு அவள் பால் மார்ட்டினுடன் விருந்து உண்ணுவதாக இருந்தது. ஆனால், "ஒ... ஒழிவுதான்" என்றாள்.

"எந்த இடம் உனக்குப் பிடிக்கும்?"

"எதுவானாலும் சரி."

"லீ கோட்டே என்ற ஓட்டல்?"

"அங்கே நாம் சந்திப்போமே? எட்டு மணிக்கு?"

"ராத்திரி பார்க்கிறேன்."

போனை வைத்தபோது லாராவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

"யார்? பிலிப் ஆட்லரா?" என்றான் ஹோவார்டு.

"ஆமாம். ஆமாம், அவரை நான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன்." என்றாள் அவள்.

ஹோவார்டு உறைந்து போய் அவளைப் பார்த்தான். "லாரா, சீரியஸாகத்தான் சொல்கிறாயா?"

"ஆமாம்."

தடாலென்று தலையில் அடித்த மாதிரி இருந்தது அவனுக்கு. ‘இவளை நான் இழந்துவிடப் போகிறேனா?’ என்று நினைத்துக் கொண்டான். ‘முட்டாளே! யாரை ஏமாற்றுகிறாய்? என்றைக்கு அவள் உனக்குச் சொந்தமாயிருந்தாள், இன்றைக்கு இழப்பதற்கு!..’

தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு, "லாரா, அவனை உனக்குக் கொஞ்சமும் தெரியாதோ?" என்றான்.

‘தெரியாதா? என் ஆயுள் முழுதும் அவரைத் தெரிந்து வைத்திருக்கிறேன்.’ என்று எண்ணிக் கொண்டாள் லாரா.

"லாரா, ஏதாவது தப்புத் தண்டாவில் மாட்டிக் கொள்ளப் போகிறாயோ என்பதுதான் என் கவலை."

"மாட்டிக் கொள்ள மாட்டேன். நான்..." என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தபோது அவளுடைய பிரைவேட் போன் மணியடித்தது. பால் மார்ட்டினுக்காகவே வைத்திருந்த போன்.

லாரா எடுத்து, "ஹலோ பால்?" என்றாள்.

"லாரா, இன்று ராத்திரி நாம் சேர்ந்து உணவருந்துவதாக ஏற்பாடு. மறந்துவிடாதே. எத்தனை மணிக்கு வைத்துக் கொள்ளலாம்? எட்டு மணிக்கு?" என்றார் பால்.

சுரீரென ஒரு குற்ற உணர்வு அவளைக் குத்தியது. "பால், இன்று இரவு முடியாது என்று தோன்றுகிறது. திடீரென்று சில வேலைகள். நானே உங்களைக் கூப்பிட்டுச் சொல்லலாமென்று இருந்தேன்."

"அப்படியா? சரி, மற்றப்படி பிரசினை எதுவும் இல்லையே?"

"இல்லை. ரோமிலிருந்து சில பேர் வந்திருக்கிறார்கள்." என்றாள் லாரா. அந்த அளவுக்கு உண்மை தான். "அவர்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது," என்று பொய் சொன்னாள்.

"ஹும்! எனக்கு அதிர்ஷ்டமில்லை. இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாமா?"

"நிச்சயமாய்."

"ரெனோ ஹோட்டலுக்கு லைசன்ஸ் வந்துவிட்டதென்று கேள்விப்பட்டேன்."

"ஆமாம்."

"அது நமக்கு மகா தமாஷாக இருக்கப் போகிறது பார்."

"நானும் அதைப்பற்றி ஒரே ஆர்வமாக இருக்கிறேன், இன்று ராத்திரி நாம் சந்திக்க முடியாமல் போயிற்று. ஸாரி, நாளை உங்களுடன் பேசுகிறேன்."

மறுமுனையில் டெலிபோன் வைக்கப்பட்டு விட்டது. லாரா மெதுவாகப் போனைத் திரும்ப வைத்தாள்.

ஹோவார்டு அத்தனை நேரமும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இதெல்லாம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது அவனுடைய முகத்தில் தெரிந்தது.

"என்ன, ஏதோ கவலையாக இருக்கிறீர்கள்?" என்றாள் லாரா.

"ஆமாம். இந்த நவீனக் கருவிகளைப் பற்றி நினைத்தேன்."

"என்ன சொல்கிறீர்கள்?"

"உன் அலுவலகத்தில் ரொம்ப அதிகப்படியாய்ப் போன்கள் இருக்கிறது. லாரா, அவன் மோசமான ஆள்."

லாரா முறைப்பாக நிமிர்ந்து பார்த்து, "இந்த மோசமான ஆள் எத்தனை தடவை நம் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார், மறந்துவிடாதீர்கள், சரி, வேறு விசேஷம் இல்லையே?" என்றாள்.

ஹோவார்டு தலையை அசைத்தான்.

"இல்லை."

"சரி, வேலைகளைக் கவனிப்போம்."

பிலிப் அவன் குறிப்பிட்ட லே கோட்டே என்ற ரெஸ்டாரெண்டில் அவளுக்காகக் காத்திருந்தான்.

அவள் உள்ளே நுழைந்தபோது எல்லாரும் அவளைக் கண் கொட்டாமல் பார்த்தார்கள். பிலிப் எழுந்து நின்று அவளை வரவேற்றான். லாராவுக்குத் தன் இதயத்துடிப்பு ஒரு வினாடி நின்றுவிட்ட மாதிரி இருந்தது.

"நான் லேட் இல்லை என்று நினைக்கிறேன்." என்றாள்.

"இல்லவே இல்லை," பிலிப் அவளை விழுங்கி விடுகிற மாதிரி பார்த்தான். அவன் கண்களில் ஒரு கதகதப்பு இருந்தது. "பிரமாதமாக இருக்கிறாய்." என்றான்.

புறப்படுவதற்கு முன், எப்படி உடையணியலாம்? எளிமையாகவா? ஒயிலாகவா? ஸெக்ஸியாகவா?’ என்று ஆறுமுறை மாற்றி மாற்றி உடை அணிந்து பார்த்து, கடைசியில் எளிமையான உடையிலேயே வந்திருந்தாள் அவள்.

"தாங்க் யூ." என்றாள்.

உட்கார்ந்ததும் அவன், "நான் ஒரு முட்டாள்," என்றான்.

"ஐயோ! ஏன்?"

"நீ உன் பெயரைச் சொன்னதும் ‘அந்த’ லாராவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை."

லாரா வாய்விட்டுச் சிரித்தாள்.

அவன் சொன்னான்: "அடேங்கப்பா! நீ சங்கலித் தொடராக ஒட்டல் கட்டுகிறவள். அபார்ட்மெண்ட் கட்டிடங்கள், ஆபீஸ் கட்டிடங்கள், நான் பிரயாணம் போகும்போது எங்கே பார்த்தாலும் உன் பெயரைப் பார்க்கிறேன்."

"அதுவும் நல்லதுதான்." என்று லாரா புன்னகை செய்தாள். "அதெல்லாம் உங்களுக்கு என்னை ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்குமே?"

அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான், "உன்னை ஞாபகப்படுத்த எனக்கு எதுவும் தேவையில்லை, லாரா. நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய்! பல பேர் இப்படிச் சொல்லி உனக்கு அலுத்திருக்கும். இல்லையா?"

‘நான் அழகாய் இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னதைக் கேட்டு எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது, என்று சொல்ல வாயெடுத்தாள் அவள். ஆனால் அவள் வாயிலிருந்து வந்தது: "உங்களுக்குக் கல்யாணமாகி விட்டதா?"

அப்படிக் கேட்டதுமே நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

அவன் புன்னகை செய்தான். "இல்லை, நான் கல்யாணம் செய்து கொள்வது அசாத்தியமான காரியம்."

"ஏன்?" ஒரு கணம் அவளுக்கு இருதயம் நின்றுவிட்ட மாதிரி இருந்தது. ஒருவேளை இவர்...

"ஏனென்றால் வருஷம் பூரா நான் ஊர் ஊராகப் போய்க் கொண்டேயிருக்கிறேன். ஒரு ராத்திரி புடா பெஸ்டில் இருப்பேன். மறுராத்திரி லண்டனிலோ பாரிசிலோ டோக்கியோவிலோ இருப்பேன்."

‘அவ்வளவுதானே?’ என்கிற மாதிரி ஆறுதல் ஏற்பட்டது அவளுக்கு. "பிலிப், உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்."

"உனக்கு என்ன தெரிய வேண்டும்?"

"எல்லாமே."

பிலிப் சிரித்தான். "ஐயோ! அதற்கு முழுசாய் ஐந்து நிமிடம் பிடிக்கும்."

"இல்லை, நான் சீரியஸாகத்தான் கேட்கிறேன். நிஜமாகவே உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்."

அவன் ஆழமாக ஒரு மூச்சு விட்டான். "நல்லது. என் அப்பாவும் அம்மாவும் வியன்னாக்காரர்கள். என் அப்பா மியூசிக் கண்டக்டராக இருந்தார். என் அம்மா பியானோ ஆசிரியையாக இருந்தாள். ஹிட்லரின் பிடியிலிருந்து தப்புவதற்காக வியன்னாவை விட்டு ஓடி, இங்கே பாஸ்டனுக்கு வந்தார்கள். நான் பாஸ்டனில்தான் பிறந்தேன்."

"உங்களுக்குப் பியானோ கலைஞனாகும் ஆசை ஆரம்பத்திலிருந்தே இருந்ததா?" என்று லாரா கேட்டாள்.

"ஆமாம்."

அவன் நினைவு பின்னோக்கிச் சென்றது.

...அப்போது அவனுக்கு ஆறு வயது. பியானோ பயிற்சி செய்து கொண்டிருந்தான். புயலாய் உள்ளே வந்தார் அப்பா. "நிறுத்து! இப்படியா வாசிப்பது? தப்பு! தப்பு: மேஜர் ஸ்வரத்துக்கும் மைனர் ஸ்வரத்துக்கும் வித்தியாசம் தெரியாது உனக்கு" என்று உறுமினார். அவருடைய ரோமம் நிறைந்த கரம் இசைக் குறிப்புக் காகிதத்தை அழுத்திக் காட்டியது. "பார் இங்கே! மைனர் ஸ்வரம் புரிகிறதா? மைனர்!"

"அப்பா, ப்ளீஸ் நான் விளையாடப் போகணும் அப்பா, என் சினேகிதர்கள் வெளியே காத்துக் கொண்டருக்கிறார்கள்."

"முடியாது. இதைச் சரியாக வாசிக்கும்வரை இடத்தை விட்டு எழுந்திருக்கக் கூடாது."

...அவனுக்கு எட்டு வயதாகிறது. அன்று காலை

அவன் நான்கு மணி நேரம் பியானோ பயிற்சி செய்திருந்தான். அப்பா அம்மாவுடன் அவனுக்குப் பெரும் சண்டை "பியானோவை நான் கட்டோடு வெறுக்கிறேன்" என்று அவன் கத்தினான். "பியானோவைத் தொடவே எனக்குப் பிடிக்கவில்லை," என்றான்.

...அவனுக்குப் பத்து வயதாகிறது. அவர்கள் அபார்ட்மெண்ட் நிறைய விருந்தாளிகள் கூட்டம் வழிந்தது. பெரும் பாலும் அவன் பெற்றோரின் பழைய வியன்னா நண்பர்கள். எல்லாருமே இசைக் கலைஞர்கள்.

"பிலிப் நமக்காகப் பியானோவில் கொஞ்சம் வாசித்துக் காட்டுவான்." என்று அவன் அம்மா அறிவித்தாள்.

"‘பிலிப் வாசிப்பதைக் கேட்க வேண்டுமென்று நாங்கள் ரொம்ப ஆவலாக இருக்கிறோம்." என்று அவர்கள் சொன்னார்கள், சின்னப் பையனைத் தட்டிக் கொடுக்க வேண்டும் என்பது போன்ற தொனியில்.

"மொஸார்ட் வாசி, பிலிப்." என்றாள் அம்மா.

வந்திருந்தவர்களின் முகங்கள் போரடித்துப் போயிருப்பதைக் கவனித்தபடி அவன் பியானோவின் முன்னே உட்கார்ந்தான். அவர்கள் பாட்டுக்கு வம்பளந்து கொண்டிருந்தார்கள்.

அவன் இசைக்கத் தொடங்கினான். கீ போர்டின் மீது அவன் விரல்கள் நர்த்தனமாடின.

பேச்சுக்கள் சட்டென்று நின்றன.

மொஸார்ட்டின் ஸானட்டோ ஒன்றை அவன் வாசித்தான். அந்த இசையில் ஜீவன் ததும்பி நின்றது.

அந்த நிமிடம் மொஸார்ட்டின் மாயாஜால இசையில் அறை மொத்தமும் மூழ்க, அவனே மொஸார்ட்டாக மாறி விட்டான்.

அவனுடைய விரல்கள் கடைசி ஸ்வரத்தை எழுப்பிய போது, அந்த அறையில் பயபக்தியான நிசப்தம் குடி கொண்டது. பெற்றோரின் நண்பர்கள் பியானோவை நோக்கி ஓடி வந்தார்கள். பரபரப்புடன் அவனுக்குப் புகழ் மாலை சூட்டிப் பாராட்டினார்கள்.

அவர்களுடைய கரகோஷத்தையும் புகழுரைகளையும் கேட்ட அந்த நிமிடம்தான் -

அவன் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. தான் யார் என்பதையும், தன் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்பதையும் அப்போது தான் அவன் உணர்ந்து கொண்டான்.

"அமாம், லாரா, பியானோ கலைஞனாக வர வேண்டுமென்றுதான் ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஆசை," என்றான்.

"நீங்கள் யாரிடம் பியானோ பயிற்சி பெற்றீர்கள்?" என்று லாரா கேட்டாள்.

"பதினாலு வயது வரையில் என் அம்மா கற்பித்தாள். பிறகு பிலடெல்பியாவில் உள்ள கர்ட்டிஸ் இன்ஸ்டிட்யூட்டில் சேர்த்தார்கள்."

"அங்கே உங்களுக்கு வாழ்க்கை பிடித்திருந்ததா?"

"ரொம்ப," என்றான் பிலிப்.

மீண்டும் பழைய நினைவுகள் அவனைச் சூழ்ந்தன.

43

பிலடெல்பியா கர்ட்டிஸ் இன்ஸ்டிட்யூட்டில் பியானோ கற்றுக் கொண்ட நாட்கள் பிலிப்புக்கு நினைவுக்கு வந்தன.

அப்போது அவனுக்கு வயது பதினாறு. அந்த ஊரில் அவன் தன்னந்தனியாக இருந்தான். சினேகிதன் எவனும் கிடையாது. ஊரின் ஒரு கோடியில் ஒரு பழைய கட்டிடத்தில் அந்தக் கழகம் இருந்தது. மாஸ்கோவில் இருந்த ஒரு சங்கீதக் கழகத்தைப் போல் இதுவும் இயங்கியது. பல பிரபல இசை விற்பன்னர்கள் அங்கே தயாராகியிருந்தார்கள்.

"அங்கே உங்களுக்குத் தனிமையாக இருந்திருக்குமே?" என்று லாரா கேட்டாள்.

"இல்லை", என்று அவன் வாய் சொல்லிற்றே தவிர அந்த நாளில் அவன் பட்ட துன்பங்கள்!

அதுவரை அவன் தன் வீட்டை விட்டு வெளியே வந்து வசித்ததே கிடையாது.

கர்ட்டிஸ் இன்ஸ்டிட்யூட்டில் அவனைப் பியானோ வாசிக்கச் சொல்லிக் கேட்டார்கள். பிறகே அவனைச் சேர்த்துக் கொண்டார்கள். அங்கே புதியதோர் வாழ்க்கை தொடங்கப் போகிறோம் என்பதும் இனி வீட்டுக்குத் திரும்பவே போவதில்லை என்பதும் இடி போல் அவன் உணர்வைத் தாக்கியது.

விரைவிலேயே அவனுடைய இசைத் திறமை எல்லா ஆசிரியர்களுக்கும் தெரிந்தது. இஸபெல் என்பவரும் ருடால்ஃப் என்பவரும் அவனுக்குப் பியானோ கற்றுத் தந்தார்கள். பியானோ வாசிக்க மட்டுமல்லாமல், அதன் சாஸ்திரம், ஹார்மனி, ஆர்க்கெஸ்ட்ரேஷன், ப்ளுட் முதலிய பல துறைகளையும் அவன் பயின்றான். வகுப்பு இல்லாதபோது மற்ற மாணவர்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் செய்தான். எதை மிக வலுக்கட்டாயமாக மூன்று வயது முதல் பயின்று வந்தானோ அந்தப் பியானோ இன்று அவனுடைய வாழ்க்கையின் மையமாயிற்று. பியானோ என்பது அவனுக்கு ஒரு மந்திரக் கருவி போலாயிற்று. அதில் விரல் வைத்து, காதலையும் தாபத்தை அவன் கண்டுகொண்டான். உலக மொத்தமும் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக அது விளங்கிற்று.

"எனக்குப் பதினெட்டு வயதானபோது டெட்ராயிட் சிம்பனியில் சேர்ந்து என் முதல் கச்சேரியை செய்தேன்." என்றான்.

"பயமாயிருந்ததா?"

‘பயமா! காலோடு தலை நடுங்கிப் போனேன்’ என்று பிலிப் நினைத்துக் கொண்டான். நண்பர்களின் குழுவுக்கு முன்னால் வாசிப்பது வேறு: பொதுமக்கள் நிரம்பி வழியும் மன்றத்தில் வாசிப்பது வேறு. அதுவும் இவன் வாசிப்பதைக் கேட்பதற்காகப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியல்லவா அவர்கள் வந்திருக்கிறார்கள்!

இருப்புக் கொள்ளாமல் அரங்கத்தின் பின்புறமுள்ள அறையில் கையைப் பிசைந்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் அவன். அரங்க மேனேஜர் வந்து அவன் கையைப் பிடித்து, "போ! நீ வாசிக்க வேண்டிய நேரம் வந்தாயிற்று." என்றார்.

அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டு அரங்கத்தை அடைந்தபோது அவையினர் அவனை வரவேற்றுக் கரகோஷம் செய்தார்கள். அந்த நிமிடத்தை அவனால் மறக்கவே முடியாது.

பியானோவின் முன்னே உட்கார்ந்தான். அந்தக் கணமே அவனுடைய அச்சமும் கூச்சமும் பறந்தோடின.

அதன் பிறகு அவன் வாழ்க்கை ஒரு நீண்ட இசை நிகழ்ச்சிகளின் தோரணமாக ஆகிவிட்டது. ஐரோப்பா வெங்கும், ஆசியாவெங்கும் அவன் சுற்றுப்பயணம் செய்தான். சுற்றுப் பயணத்துக்குச் சுற்றுப் பயணம் அவனுடைய கீர்த்தி ஒங்கியது. இசைக் கலைஞர்களுக்கு மானேஜராக இருந்து அனுபவம் பெற்றிருந்த வில்லியம் என்பவர் அவனுக்கு மானேஜராக இருக்க இசைந்தார். இரண்டே வருடம்தான். பிலிப்புக்கு அபார கிராக்கி ஏற்பட்டுவிட்டது.

லாராவை நோக்கிப் புன்னகை செய்தான் பிலிப். "ஆம். இப்போது கூட நிகழ்ச்சி ஆரம்பமாகுமுன்னாள் எனக்குப் பயமாகத்தான் இருக்கிறது." என்றான்.

"சுற்றுப்பயணங்கள் போகிறீர்களே, அப்போது எப்படி இருக்கிறது?"

"அது கொஞ்சம்கூட டல்லடிக்காத விஷயம். ஒரு முறை பிலடெல்பியா பிம்பனியுடன் ப்ரஸ்ளெஸுக்குப் போவதாகத் திட்டம். ஆனால் மூடுபனி காரணமாக விமான தளத்தை மூடி விட்டார்கள். டாக்ஸியில் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்துக்குப் போனோம். ஆனால் அங்கே எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விமானம் ரொம்பச் சின்னது.

"எங்கள் லக்கேஜ்கள், வாத்தியக் கருவிகள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றுதான் எடுத்துப்போக முடியும் சான்று சொன்னார்கள். வேறு வழியில்லாமல் லக்கேஜ்களை விட்டு விட்டு லண்டனுக்குப் போனோம். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்துக்குச் சரியாய் லண்டனை அடைந்த கால் அழுக்கு ஜீன்ஸ், அழுக்கு சட்டை, முகஷுவரம் பண்ணிக் கொள்ளாத மூஞ்சி - இத்துடன்தான் இசை நிகழ்ச்சியை நடத்தினோம்."

லாரா சிரித்தாள். "ஆனால் ஆடியன்ஸ் அதையும் ரசித்திருப்பார்கள், இல்லையா?"

"ஆமாம். இன்னொரு சமயம் இண்டியானாவுக்குப் போயிருந்த போது என் பியோனோ ஒர் அறைக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. அதைத் திறப்பதற்கான சாவி யாரிடமும் இல்லை. கடைசியில் கதவை உடைத்தோம்."

லாரா கிளுகிளுவென்று சிரித்தாள்.

பிலிப் தொடர்ந்தான். "போன வருஷம் ரோமில் ஒரு கச்சேரி, ஒரு சங்கீத விமரிசகர் எழுதியிருந்தார். கடைசிப் பகுதியில் பீதோவனைக் குட்டிச் சுவராக்கிவிட்டதாக எழுதினார்."

"ஐயோ! அக்கிரமமாக இருக்கிறதே!" என்றாள் லாரா அனுதாபத்துடன்.

"அதல்ல வேடிக்கை. அன்று நான் விமானத்தைத் தவற விட்டு விட்டதால் ரோமுக்குப் போகவுமில்லை, கச்சேரி செய்யவுமில்லை."

லாரா அவனை நோக்கி ஆவலுடன் குனிந்தாள். "இன்னும் சொல்லுங்கள்."

ஒருமுறை பியானோவின் பாகம் கழன்று போனதையும் இன்னொருமுறை மேடையிலிருந்து பியானோ வழுக்கிக் கொண்டேயிருந்ததையும் பற்றி அவன் விவரித்தான்.

தன் இசை நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசும் போதெல்லாம் அவன் குரலில் உற்சாகம் துள்ளியது.

"நான் ரொம்ப அதிர்ஷ்டம் செய்தவன். இந்த உலகத்தில் உட்கார்ந்திருக்கும் ஜனங்களை அப்படியே அலக்காகத் தூக்கி இசையுலகத்துக்குக் கொண்டு செல்வது என்பது எவ்வளவு அற்புதமான அனுபவம் அவையில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவை ஏற்படுத்தித் தருகிறது சங்கீதம். அறிவில்லாத இந்த உலகத்தில் அறிவுடன் இருக்கும் ஒரே விஷயம் சங்கீதம்தான் என்று சில சமயம் எனக்குத் தோன்றுகிறது." என்று சொல்லித் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் பிலிப். "நான் ரொம்பப் படாடோபமாகப் பேசுகிறேனோ ஒரு வேளை?"

"இல்லையில்லை. லட்சக்கணக்கான மக்களுக்கு நீங்கள் மகிழ்ச்சியை வழங்குகிறீர்கள். நீங்கள் பியானோ இசைப்பதைக் கேட்டு நான் ஆனந்தம் கொள்கிறேன்." என்ற அவள் ஆழமாக நெடுமூச்சு விட்டாள், "நீங்கள் டெடிஸ்ஸியின் இசையை வாசிக்கும்போது கடற்கரையில் தன்னந்தனியாக உலாவுவது போல் நான் உணர்கிறேன். தொலைவில் மிதந்து செல்லும் கப்பல்களின் பாய் மரங்களைப் பார்ப்பதுபோல் தோன்றுகிறது." என்றாள்.

அவன் புன்னகையுடன், "எனக்கும் அப்படித்தான் இருக்கும்." என்றான்.

"நீங்கள் ஸ்கார்லெட்டி இசைக்கும் போது எனக்கு நேப்பிள்ஸ் நகரத்தில் இருப்பது போல் இருக்கும். குதிரைகளும் வண்டிகளும் செல்லும் ஓசைகள் கேட்கும். தெருக்களில் மக்கள் நடமாடுவதைப் பார்ப்பேன்."

தான் பேசும்போது அவன் முகத்தில் மகிழ்ச்சியைக் கவனித்ததும், பேராசிரியர் மேயர்ஸிடம் தான் கேட்டு வைத்திருந்ததையெல்லாம் ஒப்பித்தாள்.

"பார்டோக்கின் இசையை நீங்கள் வாசிக்கும்போது என்னை நேரே மத்திய ஐரோப்பாவுக்கு அழைத்துப் போய்விடுகிறீர்கள். ஹங்கேரி நாட்டு விவசாய மக்களை நான் பார்க்கிறேன். நீங்கள் ஓவியம் தீட்டுகிறீர்கள். அதில் தான் மூழ்கிப் போகிறேன்."

"நீ ரொம்பப் புகழ்கிறாய்" என்றான் அவன்.

"இல்லை. நான் சொல்லும் ஒவ்வொன்றும் என் உள்ளத்திலிருந்து வருகிறது."

டின்னர் வந்தது. பலவகையான உணவுகள், பல விதமான மதுபானங்சுள்...

சாப்பிடும்போது பிலிப் சொன்னான். "லாரா, என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோமே? உன்னைப் பற்றிச் சொல்லு. நாடு பூராவும் பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்புகிறாயே, உனக்கு எப்படி இருக்கிறது?"

ஒரு நிமிடம் லாரா மெளனமாக இருந்தாள். "அதை வார்த்தையில் விவரிப்பது கஷ்டம். நீங்கள் உங்கள் கைகளால் சிருஷ்டி செய்கிறீர்கள். நான் என் மனத்தால் சிருஷ்டி செய்கிறேன். கல்லையும், மண்ணையும் நானே என் கையால் எடுத்துக் கட்டிடம் கட்டுவதில்லையே தவிர, கட்டிடம் கட்டுவதைச் சாத்தியமாக்குகிறேன். செங்கல்லையும், கான்கிரீட்டையும் உருக்கையும் கொண்டு நான் ஒரு கனவு காண்கிறேன். பிறகு அந்தக் கனவை வாஸ்தவமானதாகச் செய்கிறேன். நூற்றுக்கணக்கான பேருக்கு நான் வேலை சிருஷ்டி செய்கிறேன். ஆர்க்கிடெக்டுகளுக்கும் கொல்லத்துக்காரர்களுக்கும் டிசைனர்களுக்கும் தச்சர்களுக்கும் குழாய்த் தொழிலாளிகளுக்கும் வேலை தருகிறேன். என்னால் அவர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடிகிறது. மக்கள் வசிப்பதற்கு அழகான சுற்றுப்புறங்களை ஏற்படுத்தித் தருகிறேன். அவர்கள் வசதியாக வாழும்படி செய்கிறேன், கவர்ச்சி கரமான ஸ்டோர்களைக் கட்டித் தருகிறேன். ஜனங்கள் அந்தக் கடைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்கிறார்கள். எதிர்காலத்துக்கான நினைவுச் சின்னங்களை நான் எழுப்புகிறேன்." வெட்கத்துடன் சிரித்தாள் லாரா. "ஒரு பிரசங்கமே பண்ணி விட்டேன், இல்லையா?"

"நீ பிரமாதமான பெண். அது உனக்குத் தெரியுமா?" என்றான் அவன்.

"நீங்கள் அப்படி நினைக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம்." என்றாள் அவள்.

அந்த மாலைப் பொழுது மனோகரமாகக் கழிந்தது. தன் வாழ்க்கையில் முதல் தடவையாகக் காதலுக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்று அவள் உணர்ந்தாள்.

தான் கற்பனை செய்து வைத்திருந்தபடி எந்த ஆண் மகனும் வரப்போவதில்லை என்று அவள் எண்ணியிருந்தாள். ஏமாற்றம்தான் தனக்கு மிஞ்சப் போகிறது என்று இன்று வரை அஞ்சியிருந்தாள்.

ஆனால் இதோ அவளுடைய கனவு வீரன் வந்து விட்டான். அவள் உள்ளம் பூரித்தது.

வீடு திரும்பியபோது அவள் உள்ளமெல்லாம் பரபரத்துக் கொண்டிருந்தது. அவளால் தூங்க முடியவில்லை.

சாயந்தரம் நடந்ததை எல்லாம் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்துக் கொண்டாள். பேசிய ஒவ்வொரு சொல்லையும் மறுபடி மறுபடி மனதுக்குள் அசை போட்டுக் கொண்டாள்.

நான் சந்தித்த மனிதர்களிலேயே பிலிப் ஈடு இணையற்றவன்.

டெலிபோன் மணி அடித்தது புன்னகையுடன் எடுத்தாள். "பிலிப்" என்று சொல்லத் தொடங்கினாள். ஆனால் கூப்பிட்டது பால் மார்ட்டின்தான்.

"லாரா, பத்திரமாக வீடு திரும்பிவிட்டாயா?" என்று கேட்கத்தான் போன் செய்தேன்." என்றார் அவர்.

"ஒ..." என்றாள் லாரா.

"மீட்டிங் நல்லபடியாக நடந்ததா?"

"அருமையாய்."

"நல்லது. நாளை இரவு நாம் சேர்ந்து சாப்பிடலாம்."

லாரா சிறிது தயங்கிவிட்டு, "ஆல்ரைட்" என்றாள். ஏதாவது பிரச்னை ஏற்படுமோ என்று அவள் மனம் எண்ணியது.

44

டுத்த நாள் காலை ஒரு டஜன் சிவப்பு ரோஜாக்கள் லாராவுக்கு வீடு தேடி வந்து சேர்ந்தன. ‘ஆக, நேற்று இரவு சந்திப்பு பிலிப்புக்குச் சந்தோஷமாக இருந்திருக்கிறது.’ என்று எண்ணி மகிழ்ந்து போனாள் அவள். பூங்கொத்துக்களுடன் வந்திருந்த உறையை அவசர அவசரமாகக் கிழித்துக் கார்டைப் பார்த்தாள். அதில் -

‘கண்ணே, இன்று இரவு நாம் சேர்ந்து உணவு அருந்துவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் - பால்.’

-என்றிருந்தது.

ஏமாற்றம் லாராவின் இதயத்தைச் சுருக்கென்று தைத்தது. அன்று காலை பூரா பிலிப்பிடமிருந்து போன் வரும் என்று ஆவலுடன் காத்திருந்தாள். ஏகப்பட்ட வேலைகள் காத்திருந்தன. ஆனால் அது எதிலும் மனம் செல்லவில்லை.

பத்து மணிக்குக் கேத்தி உள்ளே வந்து, "வேலை கேட்டு விண்ணப்பித்திருந்த செக்ரட்டரிகள் வந்திருக்கிறார்கள். நீங்கள் இன்ட்டர்வியூ செய்ய வேண்டும்." என்றாள்.

"ஒவ்வொருவராக அனுப்பு."

அரை டஜன் பெண்கள் வந்திருந்தார்கள். எல்லாருமே உயர்ந்த தகுதி பெற்றவர்கள். ஜெர்ட்ரூட் என்ற பெண் தான் லாராவைக் கவர்ந்தாள். முப்பது வயதிருக்கும், அறிவுக் கூர்மையுடன் நாகரிகமாக இருந்தாள். லாராவிடம் பயபக்தி கொண்டவள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

அவளைப் பற்றிய தகவல்களைப் படித்துப் பார்த்தாள் லாரா.

சிறப்பாக இருந்தன. "இதற்கு முன்னாலும் நீ ரியல் எஸ்டேட் துறையில் வேலை பார்த்திருக்கிறாய் போலிருக்கிறதே?"

"ஆமாம் மேடம். ஆனால் உங்களைப் போன்ற ஒருவரின் கீழ் வேலை பார்த்தது கிடையாது. உண்மையைச் சொல்வதென்றால், சம்பளமே வாங்கிக் கொள்ளாமல் நான் இங்கே வேலை பார்க்கத் தயார்."

லாரா புன்னகை செய்தாள். "அதற்கு அவசியம் இருக்காது. உன்னைப் பற்றி நல்லபடி சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். அது போதும், வேலை செய், பார்க்கலாம்."

"ரொம்ப நன்றி மேடம்," என்ற போது அவன் கன்னங்கள் கூச்சத்தினால் சிவந்து விட்டன.

லாரா சொன்னாள்: "யாருக்கும் எந்தவித பேட்டியும் நீ கொடுக்கக் கூடாது. இந்த நிறுவனத்தில் நடைபெறும் எந்த விஷயத்தைப் பற்றியும் பேசக்கூடாது. அதற்குச் சம்மதம் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும்."

"நிச்சயமாய்."

"உன் இடத்தையும் வேலையும் கேத்தி காட்டுவாள். போய் வா."

பதினொரு மணிக்கு, விளம்பரத் துறை நிர்வாகியான ஜெர்ரி டவுன்பெண்டுடன் ஒரு மீட்டிங் இருந்தது.

"உங்கள் தகப்பனார் எப்படி இருக்கிறார்?" என்று விசாரித்தாள் லாரா.

"இப்போது ஸ்விட்ஜாலந்தில் இருக்கிறார். பிழைத்து விடுவார் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்." அவர் குரல் தழதழத்தது. "பிழைத்தாரானால் அது உங்களால் தான்."

"நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டியதுதானே?" என்றாள் லாரா. "நல்லபடி குணமாகிவிடுவார். கவலைப் படாதீர்கள்."

"ரொம்ப நன்றி," என்று கூறுகையில் அவருக்குத் தொண்டை அடைத்தது. "உங்களுக்கு நான் எப்படி. என் நன்றியைச் சொல்வது என்று தெரியவில்லை..."

லாரா எழுந்து கொண்டாள். "எனக்கு இன்னொரு மீட்டிங் இருக்கிறது."

அவள் வெளியேறுகிறதைப் பார்த்தபடி வெகு நேரம் அங்கேயே நின்றிருந்தார் ஜெர்ரி.

அடுத்த மீட்டிங், நியூ ஜெர்ஸியில் ஒரு கட்டிடக் காம்ப்பெளஸைக் கவனிக்கும் ஆர்க்கிடெக்டுசுளுடன் இருந்தது.

"நன்றாக வேலை செய்திருக்கிறீர்கள்." என்று பாராட்டி விட்டுச் சில மாறுதல்களைச் சொன்னாள். கட்டிடங்களின் கூரைப் பகுதி பிரமிட் போல் இருக்க வேண்டும். உச்சியில் நெடுத்தாரத்துக்குத் தெரியும்படி ஒரு பிரகாசமான விளக்கு எரிய வேண்டும். இது வெல்லாம் ஒன்றும் சிரமமில்லையே?"

"ஒன்றும் இருக்காது மேடம்." என்றார்கள் அவர்கள்.

மீட்டிங் முடிந்தபோது இன்ட்டர்காம் பஸர் ஒலித்தது. ரேமாண்ட் பேச வேண்டும் என்றார். கட்டிட போர்மன்களில் ஒருவர். "அர்ஜெண்ட் விஷயமாம்." என்றாள் ஆபரேட்டர்.

லாரா டெலிபோனை எடுத்தாள். "என்ன விஷயம், ரேமாண்ட்?"

"ஒரு பிரசினை மிஸ் லாரா."

"சொல்லுங்கள்."

"சிமெண்ட் பிளாக்குகள் ஒரு லோடு வந்திருக்கிறது, ஆனால் தரமாக இல்லை. வெடிப்பு இருக்கிறது. இவைகளைத் திருப்பி அனுப்பிவிடப் போகிறேன். முதலில் உங்களுக்குச் சொல்லிவிட வேண்டுமென்று தான் கூப்பிட்டேன்."

லாரா ஒரு நிமிடம் யோசனை செய்தாள். "ரொம்ப மோசமாக இருக்கிறதா?"

"ஒரளவுக்கு மோசம்தான், ஆனால் என் பாயின்ட் என்னவென்றால் எப்போது அவர்கள் நாம் குறிப்பிட்ட தரத்துக்குச் சப்ளை செய்யவில்லையோ..."

"அவைகளை உபயோகப்படுத்த முடியுமா இல்லையா?"

"முடியும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் செலவாகும்."

"பரவாயில்லை. அதையே வைத்துச் சமாளியுங்கள்."

மறுமுனையில் சிறிது மெளனம் நிலவியது. "சரிம்மா. நீங்கள் முதலாளி."

லாரா ரிசீவரைத் திரும்ப வைத்தாள்.

நகரில் சிமெண்ட் பிளாக் சப்ளை செய்பவர்கள் இரண்டு பேர்தான் இருந்தார்கள். அவர்களை விரோதித்துக் கொள்வது தற்கொலைக்குச் சமானம் என்று லாராவுக்குத் தெரியும்.

மணி ஐந்தாயிற்று. பிலிப் அதுவரை கூப்பிடக் காணோம்.

அவனுடைய அலுவலகத்துக்கு லாரா போன் செய்து, "பிலிப் ஆட்லர், ப்ளீஸ்," என்றாள்.

"மிஸ்டர் பிலிப் வெளியூருக்கு டூர் போயிருக்கிறார். என்ன விஷயம், சொல்லுங்கள்."

வெளியூர் போவதாக நம்மிடம் சொல்லவில்லையே என்று லாரா நினைத்துக் கொண்டாள். "ஒன்றுமில்லை, தாங்க்ஸ்."

‘அவ்வளவுதான்.’ என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்டாள். குறைந்தபட்சம், இப்போதைக்கு அவ்வளவு தான்.

ஸ்டீவ் மர்ச்சிஸன் கோபமாக உள்ளே வந்து சத்தம் போட்டார்.

லாரா அமைதியாக, "என்ன உங்கள் பிரச்சினை?" என்று கேட்டாள்.

"நீதான் பிரசினை! என் பிஸினஸில் யார் மூக்கை நீட்டினாலும் எனக்குப் பிடிக்காது."

"மிஸ்டர் கட்மனனின் மியூசுவல் செக்யூரிட்டி கட்டிட விஷயமாகப் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்."

"அதேதான்!"

"உங்கள் கட்டிடத்தைக் காட்டிலும் என் கட்டிடம் நன்றாயிருக்கிறதென்று அவருக்குத் தோன்றியிருக்கிறது."

"ஏன் தோன்றியிருக்கிறது? அவரை நீ மயக்கியிருக்கிறாய். இதோ பாரம்மா, ரொம்ப நாளாய் நீ என் வழியில் குறுக்கே வந்து கொண்டிருக்கிறாய். ஏற்கெனவே உன்னை ஒருமுறை எச்சரித்துவிட்டேன். இனி எச்சரிக்கப் போவதில்லை. இந்த ஊரில் ஒன்று நீ இருக்க வேண்டும். அல்லது நான் இருக்க வேண்டும். இரண்டு பேரும் இருக்க முடியாது. உன் கவர்ச்சி சமாசாரங்களையெல்லாம் வெளியே காட்டாதே. காட்டினாயோ அறுத்துவிடுவேன் அறுத்து!"

வந்த வேகத்திலேயே வெளியேறினார் மர்ச்சிஸன்.

அன்று இரவு தன் அபார்ட்மெண்டில் பால் மார்ட்டினுடன் உணவருந்திய போது லாராவுக்கு சங்கடமாகவே இருந்தது.

"ஏதோ யோசனையாகவே இருக்கிறாயே? என்ன விஷயம் பேபி!" என்றார் பால் மார்ட்டின்.

லாரா புன்னகையை வருவித்துக்கொண்டு, "ஒன்று மில்லையே? எல்லா வேலைகளும் அருமையாய் நடந்து கொண்டிருக்கிறது." என்றாள். ‘என் பிலிப் தான் வெளியூர் போவதைச் சொல்லவில்லை’ என்று மனம் எண்ணியது.

"ரெனோவில் காஸினோ வேலை எப்போது ஆரம்பமாகிறது?"

"ஹோவார்டும் நானும் அடுத்த வாரம் அங்கே போகிறோம். ஒன்பது மாதங்களில் காஸினோ திறந்து விடலாம்."

"ஒன்பது மாதங்களில் நீ ஒரு குழந்தையே பெற்றுக் கொள்ளலாம்!"

லாரா வியப்புடன் அவரை நிமிர்ந்து நோக்கினாள், "என்னது"

பால் மார்ட்டின் அவள் கையைப் பற்றிக் கொண்டார். "லாரா, உன்னிடம் எனக்கு எத்தனை பைத்தியம் என்று உனக்குத் தெரியும். என் வாழ்க்கையை நீ அடியோடு மாற்றியிருக்கிறாய். நம் வாழ்க்கை எப்படி எப்படியோ அமைந்திருக்க வேண்டும். நமக்குக் குழந்தைகள் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!"

இதற்கு என்ன சொல்வதென்று லாராவுக்குத் தெரியவில்லை. பேசாமல் இருந்தாள்.

"உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்," என்றவர் பையிலிருந்து ஒரு நகைப் பெட்டியை வெளியே எடுத்தார். "திறந்து பார்."

"பால், நீங்கள் ஏற்கெனவே ஏகப்பட்டது கொடுத்து விட்டீர்கள்..."

"திறந்து பாரேன்."

திறந்தாள். உள்ளே ஒரு பிரமாதமான வைர நெக்லஸ் இருந்தது.

"அருமையாயிருக்கிறது." என்றாள்.

அவர் எழுந்து வந்து பின்னால் நின்றார். அவர் கரங்கள் தன் கழுத்தில் நெக்லஸைச் சூட்டுவதை உணர்ந்தாள். கழுத்திலிருந்து கீழிறங்கி அவர் கைகள் வருடின. கரகரத்த குரலில், "வா, லாரா." என்றார்.

படுக்கையறையை நோக்கி அவர் அவள் பின் தொடர்ந்தாள். அவள் எண்ணங்கள் சுழன்றன. என்றைக்குமே அவர் மீது அவளுக்குக் காதல் இருந்ததில்லை. அவர் செய்யும் உதவிகளுக்குப் பிரதியுபகாரமாகவே அவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அதெல்லாம் மாறிவிட்டது. பிலிப்பிடம் அவள் காதல் வசப்பட்டிருக்கிறாள்.

இல்லை, இல்லை, நான் ஒரு முட்டாள், பிலிப்பை இனிமேல் பார்க்கப் போகிறோமோ இல்லையோ?

மெதுவாக, மனமில்லாமல் உடைகளைக் களைந்தாள். அருகில் படுத்த பால் மார்ட்டின், "பேபி’ உன்னிடம் எனக்குப் பைத்தியம், எனக்குப் பைத்தியம்..." என்று முனகியபோது

அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே பால் மார்ட்டினின் முகம் தெரியவில்லை. பிலிப்பின் முகம் தெரிந்தது.

எல்லா வேலைகளும் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ரெனோ ஓட்டல் வேகமாகப் புது வடிவம் பெற்றுக் கொண்டிருந்தது. உலகத்திலேயே மிக உயரமான கட்டிடமாக அவள் கட்டி வந்த ‘லாரா கேம்ரான் டவர்ஸ்’ அட்டவணை பிரகாரம் முடிந்து கொண்டிருந்தது. லாராவின் கீர்த்தி ஓங்கிக் கொண்டிருந்தது.

சென்ற சில மாதங்களில் பலமுறை பிலிப்பைக் கூப்பிட்டுப் பார்த்து விட்டாள். எப்போதும் அவன் சுற்றுப் பயணத்திலேயே இருந்தான்.

"மிஸ்டர் பிலிப் பீஜிங்கில் இருக்கிறார்..."

"மிஸ்டர் பிலிப் பாரிசில் இருக்கிறார்..."

"மிஸ்டர் பிலிப் ஸிட்னியில் இருக்கிறார்."

"எக்கேடோ கெடட்டும்!" என்று எரிச்சல் ஏற்பட்டது லாராவுக்கு.

அடுத்த ஆறு மாதங்களில், ஸ்டீவ் மர்ச்சிஸன் பிடிக்க இருந்த மூன்று மனைகளை லாரா மடக்கி விட்டாள்.

ஹோவார்டு கவலையுடன் சொன்னான். "லாரா, ஊரில் என்ன பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா? உன்னை ஒழித்துக் கட்டி விடுவதாக மர்ச்சிஸன் சொல்கிறார். அந்த ஆளிடம் கொஞ்சம் தழைந்து போவது நல்லது. ரொம்ப அபாயமான எதிரி அவன், லாரா."

"நானும் அப்படிப்பட்டவள் தான்," என்றாள் லாரா. "அவன் வேறு ஏதாவது பிசினசுக்குப் போகட்டும்."

"லாரா, இது ஜோக் அடிக்கிற விஷயமல்ல. அவன்."

"அவரை மறந்துவிட்டு வேலையைப் பாருங்கள் ஹோவார்டு. லாஸ் ஏஞ்செல்ஸில் ஒரு மனையைப் பற்றி எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதை விற்பனை செய்யப் போகும் விஷயம் இன்னும் வெளியே வர வில்லை. நாம் வேகமாக வேலை செய்தால் மடக்கிப் போட்டு விடலாம். நாளைக் காலை நாம் புறப்படுவோம்." என்றாள் லாரா.

45

லாஸ் ஏஞ்செலீஸில் பில்ட்மோர் ஓட்டலுக்கு அருகே இருந்தது அந்த மனை. மொத்தம் ஐந்து ஏக்கர் பரப்பு.

ஒரு ரியல் எஸ்டேட் தரகர் லாராவுக்கும் ஹோவார்டுக்கும் இடத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தார். "அருமையான இடம், சார். நிஜமாகவே சொல்கிறேன். நீங்கள் போடும் திட்டத்தை ஜாம் ஜாமென்று நிறைவேற்றலாம். அபார்ட்மெண்ட் கட்டிடங்கள், ஷாப்பிங் சென்ட்டர்கள், தியேட்டர்கள், அரங்கங்கள், அழகான ஒரு குட்டி நகரமே இங்கே நீங்கள் சிருஷ்டித்து விட முடியும்."

"ஊகூம்." என்றாள் லாரா.

அவன் அவளைத் திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தான். "என்ன... என்ன சொன்னீர்கள்?"

"இந்த மனை பிரயோசனப்படாது என்கிறேன்."

"ஏன்? எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"சுற்று வட்டாரத்தைக் கவனியுங்கள். இந்தப் பகுதியில் ஜனங்கள் குடியேறமாட்டார்கள்." என்றாள் லாரா, "லாஸ் ஏஞ்செலீஸ் நகரம் மேற்குப் பக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஜனங்கள் பழக்கத்துக்கு அடிமையா கிறவர்கள். ஒரு திசையில் போகிறவர்களைத் திருப்பி வேறு திசைக்குக் கொண்டு வர முடியாது."

"வந்து..."

"எனக்கு என்ன தேவை என்பதைச் சொல்கிறேன், கேளுங்கள். வேறொரு பகுதி. அங்கே நல்ல மனைகள் இருந்தால் சொல்லுங்கள்." என்ற லாரா, ஹோவார்டிடம் திரும்பினாள். "நம் நேரம் வீணாயிற்றே என்று வருத்தமாக இருக்கிறது. இன்று சாயந்தரம் ஊருக்குத் திரும்பி விடுவோம்."

ஒட்டலுக்குத் திரும்பினார்கள்.

ஹோவார்டு ஒரு தினசரியை வாங்கினான். "இங்கே மார்க்கெட் நிலவரம் எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்."

இருவரும் பேப்பரைப் பார்த்தார்கள்.

பொழுதுபோக்குப் பகுதியில் ஒரு பெரிய விளம்பரம் வந்திருந்தது.

இன்றிரவு - ஹொலிவுட் பெளல் மன்றத்தில் - பிலிப் ஆட்லரின் பியானோ இசை நிகழ்ச்சி.

லாராவின் இருதயத்தில் ஒரு படபடப்பு.

"ஹோவார்டு. நாம் இன்றைக்குப் புறப்பட வேண்டாம். நாளைக்குப் போகலாம்."

ஹோவார்டு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அவள் முகத்தை ஆராய்ந்தான். "உன் ஈடுபாடு கலையிலா, கலைஞரிடத்திலா?"

"இரண்டு டிக்கெட் வாங்குங்கள்." என்றாள் அவள்.

ஹாலிவுட் பெளல் என்ற இடத்தை அதற்கு முன் லாரா பார்த்தது கிடையாது. ஹாலிவுட் குன்றுகளின் நடுவே இயற்கையாகவே அமைந்த அரங்கம் அது. கீழே ஒரு பூங்கா. வருடம் பூரா உல்லாச யாத்திரிகர்கள் வந்து பார்த்துக் களிக்கலாம்.

இசை மன்றத்தில் பதினெட்டாயிரம் பேருக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அன்று நிரம்பி வழிந்திருந்தது. கூடியிருந்த மக்களின் ஆர்வத்தை லாராவினால் உணர முடிந்தது.

வாத்தியக் கலைஞர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வரத் தொடங்கினார்கள். ஒவ்வொருவருக்கும் கரகோஷத்துடன் வரவேற்பு கிடைத்தது. இசை நிகழ்ச்சியை கண் டக்ட் பண்ணும் ஆண்ட்ரி வந்தபோது இன்னும் உற்சாகமான கைதட்டல்.

திடீரென்று ஒரு கணம் நிசப்தம். மறுகணம் பெரும் கரகோஷம்.

பிலிப் மேடையில் தோன்றினான். வெள்ளைடையும் உடையும் அணிந்து பளீரென இருந்தான்.

லாராவின் கை ஹோவார்டின் கையை இறுக்கியது. "ரொம்ப அழகாயில்லை அவர்?" கிசுகிசுத்தாள்.

ஹோவார்டு பதில் சொல்லவில்லை.

பியானோவின் முன்னே உட்கார்ந்தான் பிலிப், நிகழ்ச்சி தொடங்கியது. அவனுடைய இசையின் மாயா ஜாலம் அவையினரைக் கட்டிப் போட்டது.

அன்றைய இரவுப் பொழுது மோகனாஸ்திரத்தின் வசப்பட்ட மாதிரி இருந்தது. விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் மண்ணைப் பார்த்துக் கண் சிமிட்டி, அந்த அரங்கத்தைச் சுற்றியிருந்த குன்றுகளின் மீது ஒளி வீசின. ராஜ கம்பீரமான அந்தச் சங்கீதத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் நெக்குருகிப் போனார்கள். கடைசி ஸ்வரங்கள் காற்றிலே கலந்து மறைந்து போன போது, மக்கள் குதித்தெழுந்து நிற்க, ஆரவாரமும் கை தட்டலும் வானை முட்டின. பிலிப் குனிந்து குனிந்து வணக்கம் செலுத்தியவாறு இருந்தான்.

"நாம் பின்புறம் போய் அவரைப் பார்க்கலாம்." என்றாள் லாரா.

ஹோவார்டு அவள் முகத்தைப் பார்த்தான். ஆர்வத்தின் மிகுதியில் அவள் குரல் நடுங்குவது தெரிந்தது.

அரங்கத்தின் பின்புறம் பிலிப்பின் அறை இருந்தது. வாசலில் ஒரு காவலாளி நின்று கூட்டத்தைத் தடுத்துக் கொண்டிருந்தான். ஹோவார்டு அவனிடம், "மிஸ்டர் பிலிப்பைப் பார்ப்பதற்காக மிஸ் லாரா கேமரான் வந்திருக்கிறார் என்று சொல்லு." என்றான்.

"நீங்கள் வருவதாக அவரிடம் சொல்லியிருந்தீர்களா?"

"ஆமாம்." என்றாள் லாரா...

"கொஞ்சம் இருங்கள்." என்று சொல்லிவிட்டுச் சென்ற காவலாளி, ஒரு நிமிடத்தில் திரும்பி வந்து, "உள்ளே போகலாம்." என்றான்.

லாராவும் ஹோவார்டும் உள்ளே சென்றார்கள். ஏகப்பட்ட பேர் பிலிப்பைச் சுற்றி நின்று பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

"பீத்தோவனை இவ்வளவு பிரமாதமாய் வாசித்து நான் கேட்டதேயில்லை..." ஆளுக்கு ஆள் பலவிதமாகப் பாராட்டு.

பிலிப் ஒவ்வொருவருக்கும் ‘தாங்க்யூ, தாங்க்யூ’ என்று சொல்லிக் கொண்டிருந்தவன், நிமிர்ந்து பார்த்த போது லாராவைக் கண்டான்.

மீண்டும் அந்த மோகனப் புன்னகை.

"மன்னியுங்கள்," என்று மற்றவர்களிடம் சொல்லி விட்டு நேரே லாராவை நோக்கி வந்தான். "நீ இந்த ஊருக்கு வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது."

"இன்று - காலையில்தான் வந்தோம். இவர் ஹோவார்டு கெல்லர். என் பிசினஸ் அசோசியேட்."

"ஹலோ," என்றான் ஹோவார்டு, சுருக்கமாக.

பிலிப்பின் பின்னால் குண்டான குள்ளமான நபர் ஒருவர் நின்றிருந்தார், "இவர் என் மானேஜர் வில்லியம்," என்று பிலிப் அறிமுகப்படுத்த, அனைவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

பிலிப் லாராவையே பார்த்துக் கொண்டிருந்தான். "இன்று பெவர்லி ஹில்டன் ஓட்டலில் ஒரு பார்ட்டி இருக்கிறது. நீங்கள் வந்தால்..." என்றான் பிலிப்.

"ஓ, சந்தோஷமாய்." என்று லாரா கூறினாள்.

அன்று இரவு பெவர்லி ஹில்டன் ஒட்டலின் சர்வ தேச நடன அரங்கை அவர்கள் அடைந்தபோது, சங்கீதக் கலைஞர்களும் ரசிகர்களும் குழுமியிருந்தார்கள், பேச்செல்லாம் சங்கீதத்தைப் பற்றியேதான்.

லாராவுக்கு எதுவும் புரியவில்லை, ‘சங்கீதக்காரர்கள் சங்கீதம் பற்றித்தான் பேசுவார்கள்’ என்று நினைத்துக் கொண்டாள்.

வழக்கம்போல் பிலிப்பின் ரசிகர் பட்டாளம் அவனை மொய்த்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சி லாராவின் உள்ளத்தில் ஒரு கதகதப்பை உண்டாக்கியது...

அவள் வருவதைக் கண்டதும் முகம் நிறைந்த புன்னகையுடன் அவளை அவன் வரவேற்றான். "நீ வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் லாரா.’

"வராமல் இருப்பேனா என்ன?"

அவர்கள் இருவரும் பேசுவதை எட்ட நின்று கவனித்து கொண்டிருந்தான் ஹோவார்டு.

"நான் பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்... இல்லை, இல்லை, நான் கனவுகள் காண்பதை நிறுத்திக் கொண்டு யதார்த்தத்துக்கு விழித்துக் கொள்ள வேண்டும்..."

லாராவை முதன் முதல் சந்தித்த காட்சி அவன் கண் முன்னே நின்றது. ஆர்வத்துடன், வாழ்க்கையில் உயர வேண்டுமென்ற ஆசைகளுடன் கண்களில் பிரகாசத்துடன் நின்றிருந்த அந்தச் சின்னப் பெண்...

காலம் அவளை எங்கேயோ எட்டாத உயரத்துக்குக் கொண்டு போய்விட்டது. "நான் மட்டும் இருந்த இடத்திலேயே இருக்கிறேன்..."

லாரா சொல்லிக் கொண்டிருந்தாள். "நாளை நான் நியூயார்க்கிற்குத் திரும்ப வேண்டும். காலையில் நாம் சேர்ந்து சிற்றுண்டி அருந்தலாமில்லையா?"

"எனக்குச் சந்தோஷம்தான். ஆனால் காலையிலேயே நான் டோக்கியோவுக்குப் புறப்படுகிறேன்."

சுரீலென்று ஏமாற்றம் அவள் இதயத்தைத் தாக்கியது. "ஏன்?"

அவன் சிரித்தான். "அதுதான் என் வேலை, லாரா. வருடம் நூற்றைம்பது இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறவன் நான். சில சமயம் இருநூறுகூட இருக்கும்."

"இப்போது போனால் எப்போது மறுபடி வருவீர்கள்?"

"எட்டு வாரமாகும்."

"எனக்கு என்னவோ போலிருக்கும்." என்றாள் லாரா. எவ்வளவு தூரம் நான் வருத்தப்படுவேன் என்று உங்களுக்குத் தெரிய நியாயமில்லை." என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்த சில வாரங்களுக்கு லாராவும் ஹோவார்டும் அட்லாண்டா நகருக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்கள். அங்கே இரண்டு மனைகளை வாங்க நினைத்திருந்தார்கள்.

பிறகு அங்கிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்று அங்கேயும் சில மனைகள் பார்த்தார்கள். இரண்டு இடங்கள் லாராவுக்குப் பிடித்திருந்தன.

ஊர் திரும்பிய மறுநாள் ஹோவார்டு அவள் அறைக்கு வந்தான். "கொஞ்சம் ஏமாற்றமான செய்தி லாரா. அட்லாண்டா மனைகள் விஷயத்தில் நமக்கு அதிர்ஷ்டமில்லை." என்றான்.

"என்ன சொல்கிறீர்கள்?"

"வேறு யாரோ தட்டிக் கொண்டு போய் விட்டார்கள்."

லாரா அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள். "எப்படி அது போல் நேர்ந்தது? அது விற்பனைக்கு வரும் விஷயம் யாருக்குமே தெரியாதே?"

"ஆமாம். விஷயம் எப்படியோ வெளியே போயிருக்கிறது."

லாரா தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். "ஹூம்! எப்போதும் நாமே ஜெயித்துக் கொண்டிருக்க முடியாது தான்!"

அன்று பிற்பகல் ஹோவார்டு மேலும் ஒரு கெட்ட செய்தி கொண்டு வந்தான். "நியூ ஆர்லியன்ஸ் மனையும் நம் கையை விட்டுப் போய்விட்டது, லாரா."

அடுத்த வாரம் அவர்கள் சியாட்டல் நகருக்குச் சென்று சில மனைகளைப் பார்வையிட்டனர். கிரிக்வெண்ட் என்ற இடத்தில் ஒரு குறிப்பிட்ட மனை லாராவுக்குப் பிடித்திருந்தது. நியூயார்க்கிற்குத் திரும்பியதும் ஹோவார்டிடம், "அதை நாம் எப்படியாவது வாங்கிவிட வேண்டும். அது பணம் கொட்டும்." என்றாள்.

"உண்மைதான்."

மறுநாள் அலுவலக மீட்டிங்கின் போது "ஹோவார்டு, அந்தக் கிரிக்லண்ட் விஷயம் முடித்து விட்டீர்களா?" என்று கேட்டாள்.

ஹோவார்டு தலையசைத்தான், "இல்லை. அங்கேயும் யாரோ நம்மை முந்தி விட்டார்கள்."

லாரா சிந்தனையில் ஆழ்ந்தாள். "ஹோவார்டு, நம்மை முந்திக்கொள்கிறவன் யார் என்று நீங்கள் கண்டு பிடித்தால் நல்லது."

இருபத்து நாலு மணி நேரத்தில் ஹோவார்டு திரும்பி வந்து தெரிவித்தான், "யாருமில்லை. ஸ்டீவ் மர்ச்சிஸன் தான்."

"எல்லாவற்றையுமே அவர்தான் வாங்கியிருக்கிறாரா?"

"ஆமாம்."

"அப்படியானால் நம்முடைய ஆபீசில்தான் யாரோ உளவாளி இருக்கிறார்கள்."

"அப்படித்தான் தோன்றுகிறது." என்றான் ஹோவார்டு.

லாராவின் முகம் இறுகியது. குற்றவாளியைக் கண்டு பிடிக்கும் வேலையை ஒரு துப்பறியும் நிறுவனத்திடம் ஒப்படைத்தாள்.

46

லாராவின் திட்டங்களை வெளியே தெரிவிக்கும் உளவாளி யார் என்று கண்டு பிடிப்பதில் அந்தத் துப்பறியும் நிறுவனத்துக்குத் தோல்வியே ஏற்பட்டது.

"எங்களைப் பற்றிய வரையில் உங்கள் ஊழியர்கள் மீது சந்தேகம் ஏற்படவில்லை. போன் பேச்சுக்களை யாரேனும் ஒட்டுக் கேட்கிறார்களா என்று ஆராய்ந்தோம். இல்லை. ரகசிய மைக்குகள் வைத்திருக்கிறார்களா என்று பார்த்தோம். அப்படி எதுவும் இல்லை." என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்...

மர்ச்சிசனுக்கு எப்படித்தான் தகவல்கள் கிடைத்தனர் லாரா குழம்பினாள். ஒருவேளை எல்லாம் தற்செயலாக நடந்திருக்குமோ? ஊகூம், அப்படி நேர்ந்திருக்கும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

க்வீன்ஸ் பகுதியில் 68 அடுக்குக் குடியிருப்பு டவர் பாதி முடிந்திருந்தது. அதன் முன்னேற்றத்தை வந்து பார்க்கும்படி பாங்குக்காரர்களை லாரா அழைத்திருந்தாள். அடுக்குகள் அதிகம் இருக்க இருக்க, செலவுகளும் அதிகமாகிக் சொண்டிருந்தன. ஆனால் லாராவின் கட்டிடம் 6 மாடி என்று பெயரே தவிர உண்மையில் 57 ஃப்ளோர்கள்தான் இருந்தன. பால் மார்ட்டின் சொல்லிக் கொடுத்திருந்த ட்ரிக் அது.

"இது எல்லாரும் செய்வது தான்." என்று பால் மார்ட்டின் சிரித்துக் கொண்டே சொன்னார். "நீ செய்ய வேண்டியதெல்லாம் ஃப்ளோர் எண்களை மாற்ற வேண்டியது."

"எப்படிச் செய்வது?"

"ரொம்பச் சுலபம். ஒரு பக்கத்து லிஃப்ட்கள் தரையிலிருந்து 34-வது ஃப்ளோர் வரை போகும். இன்னொரு பக்கம் லிஃப்ட்டுகள் 3-வது எண்ணில் ஆரம்பித்து 68-வது ஃப்ளோர் வரை போகும், எல்லாரும் செய்வதுதான் இது."

இது மட்டுமல்ல, பால் மார்ட்டின் இன்னொன்றும் சொல்லித் தந்திருந்தார். யூனியன்களைச் சமாளிப்பதற்காக அரை டஜன் பினாமிப் பிரிவுகள் இருந்தன. அதற்குத் தலைவர்கள் இருந்தார்கள். பாதுகாப்பு முறைகளுக்கான டைரக்டர், கட்டிட வேலைகளுக்கான இணைப்பு அதிகாரி, தளவாடங்கள் சூப்பர்வைசர்கள் இருந்தன. ஆனால் அப்படி எவரும் கிடையாது.

இது சரிதானா என்று லாரா ஆரம்பத்தில் சந்தேகப்பட்டாள்.

"கவலைப்படாதே." என்று பால் மார்ட்டின் கூறினார். "இதெல்லாம் ஸிடிபியில் ஒரு பகுதி, ஸிடிபி என்றால் காஸ்ட் ஆஃப் டூயிங் பிஸினஸ். தொழில் செய்வதில் ஏற்படும் செலவு."

வாஷிங்டன் ஸ்கொயரில் உள்ள ஒரு சிறு அபார்ட்மெண்ட்டில் ஹோவார்டு வசித்து வந்தான். ஒரு நாள் மாலை லாரா அவனைப் பார்ப்பதற்காக அங்கே வந்தவள், இடத்தைச் சுற்று முற்றும் நோக்கிவிட்டு, "என்ன இது, எலி வளை மாதிரி இருக்கிறது? வேறே நல்ல இடத்துக்குப் போங்கள்." என்றாள்.

அவள் வற்புறுத்தியதன் பேரில், நகரத்தின் இன்னொரு பகுதியில் வசதியான இடத்துக்கு ஜாகை மாறினான் ஹோவார்டு.

ஒரு நாள் ராத்திரி வெகு நேரம் வரையில் ஹோவார்டும் லாராவும் அலுவலகத்தில் தங்கி வேலைகளைக் கவனித்தார்கள். ஒரு வழியாய் வேலை முடிந்தபோது

லாரா அவனை ஏறிட்டு நோக்கினாள். "நீங்கள் ரொம்பக் களைத்துப் போயிருக்கிறீர்கள். வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் நேரம் தூங்குங்கள், என்றாள்.

"அதுவும் நல்லதுதான், காலையில் பார்க்கிறேன்." என்று ஹோவார்டு எழுந்து கொண்டான்.

"அவசரமில்லை. காலையில் மெதுவாகவே வாருங்கள்."

ஹோவார்டு காரில் ஏறி வீட்டை நோக்கி ஒட்டினான். அன்று ஒரு பிஸினஸ் திட்டம் நல்லபடி முடிந்திருந்தது. லாரா அதை எவ்வளவு திறமையாகக் கையாண்டாள்! அவளுடன் வேலை செய்வதே ஒரு தனி உற்சாகம்.

உற்சாகமும் உண்டு. ஏமாற்றமும் உண்டு...

உள்ளத்தின் ஆழத்தில் அவனுக்கு இன்னும் நம்பிக்கை இருந்தது, ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்தாலும் நிகழலாம் என்று.

‘இத்தனை நாளும் இதை நான் உணராமலே இருந்து விட்டேன். ஹோவார்டு டார்லிங்... பால் மார்ட்டினிடமோ பிலிப்பினிடமோ எனக்குத் துளியும் அக்கறை கிடையாது. உங்களைத்தான் நான் எப்போதும் காதலித்து வந்திருக்கிறேன்." என்று லாரா ஒரு நாள் சொல்லப் போகிறாள்.

அப்படியொரு சந்தர்ப்பம் வரத்தான் போகிறது.

அபார்மெண்ட்டை அடைந்தவன், சாவியை எடுத்து, கதவின் சாவித் துவாரத்தில் பொருத்தினான். அது பொருந்தவில்லை. திகைத்தவனாக மறுபடியும் பொருத்திப் பார்த்தான்.

சடேரென்று உள் பக்கமிருந்து கதவு திறந்து கொண்டது. முன்பின் அறியாத அன்னியரொருவர் அங்கே நின்றிருந்தார். "யாரய்யா நீ? என்ன செய்கிறீர்?" என்று கத்தினார்.

ஹோவார்டு திருதிருவென்று விழித்தான். "நான் இங்கே வசிக்கிறவன்..."

"என்ன உளறுகிறாய்?"

"வந்து..." சட்டென்று அவனுக்கு உணர்வு வந்தது. "ஸாரி... வந்து... முன்பு நான் இங்கே வசித்தேன்..."

கதவை மடேவென்று சாத்திக் கொண்டு அந்த ஆள் போய்விட்டார். ஹோவார்டு தலையைச் சொறிந்து கொண்டான். ‘சே! வேறு ஜாகைக்குப் போய்விட்டோம். என்பது எப்படி எனக்கு நினைவு இல்லாமல் போயிற்று... அளவு மீறித்தான் நான் வேலை செய்கிறோம்...’

ஆபீசில் ஒரு மீட்டிங் நடந்து கொண்டிருந்தபோது டெலிபோன் மணி அடித்தது.

பேசியவர் பால் மார்ட்டின்தான்.

"ரொம்ப பிஸியாய் இருக்கிறாய் போலிருக்கிறதே, பேபி? எனக்கு ரொம்ப வெறிச்சென்றிருக்கிறது."

"வெளியூருக்குப் போவதும் வருவதுமாக இருக்கிறேன், பால்." என்றாள் லாரா, உங்களைப் பார்க்காமல் எனக்குத்தான் வெறிச்சென்றிருக்கிறது," என்று ஏனோ சொல்லத் தோன்றவில்லை.

"இன்று பகல் நாம் சேர்ந்து சாப்பிடலாம். என்ன?"

அவர் தனக்காகச் செய்த உதவிகளையெல்லாம் லாரா நினைத்துப் பார்த்தாள்...

"சந்தோஷமாய்." என்றாள். பால் மார்ட்டின் மனசைப் புண்படுத்துவது மட்டும் அவளால் முடியாத காரியமாக இருந்தது.

சௌ என்ற ஓட்டலில் அன்று அவர்கள் உணவு அருந்தினார்கள்.

"பிரமாதமாய் இருக்கிறாயே!" என்றார் பால் மார்ட்டின். "நீ எது செய்தாலும் பிரமாதமாக அமைகிறது. ரெனோ ஒட்டல் விஷயம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?"

"அருமையாக நடந்து கொண்டிருக்கிறது." என்றாள் லாரா உற்சாகத்துடன். தனது வேலைகள் எப்படி முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்பதைக் கால் மணி நேரம் விளக்கினாள். பிறகு, "இன்னும் இரண்டு மாதத்தில் ஒட்டலைத் திறந்து விடலாம்." என்றாள்.

அப்போது -

அறையின் மறு கோடியில் ஒர் ஆணும் பெண்ணும் வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். அந்த ஆளின் முதுகுதான் லாராவுக்குத் தெரிந்தது. இருந்தாலும் அவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று நினைத்தாள். ஒரு வினாடி அவன் திரும்பியபோது முகமும் தெரிந்தது. மர்ச்சிஸன், அவனுடன் இருந்த பெண்ணும் தெரிந்தவளாகத் தோன்றினாள்.

பர்ஸைக் கீழே நழுவ விட்டு விட்டு, அதை எடுக்கிற மாதிரி குனிந்து பார்த்தாள்.

திக்கென்றது.

ஜெர் ட்ரூட் அவளிடம் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த செக்ரட்டரி!

"ஓகோ," மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டாள், "என்ன விஷயம்?" என்று பால் மார்ட்டின் கேட்டார்.

"ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டுத் தன் திட்டங்களைத் தொடர்ந்து விவரித்தாள் லாரா.

உணவு அருந்தி அலுவலகத்துக்குத் திரும்பியதும் ஹோவார்டைக் கூப்பிட்டனுப்பினாள்.

"சில மாதங்களுக்கு முன்பு ஃபீனிக்ஸ் என்ற இடத்தில் ஒரு மனை பார்த்தோமே, நினைவிருக்கிறதா?" என்று கேட்டாள்.

"ஆமாம். அதை வேண்டாமென்று விட்டு விட்டோம். ரொம்ப மோசமான மனை என்று நீ சொன்னாய்."

"என் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்." என்ற லாரா, இன்ட்டர்காம் பொத்தானை அழுத்தினாள்.

"ஜெர் ட்ரூட், கொஞ்சம் இங்கே வர முடியுமா?"

"இதோ, மிஸ்."

சற்றைக்கெல்லாம் ஜெர் ட்ரூட் வந்தாள்.

"ஒரு கடிதம் டிக்டேட் பண்ணுகிறேன்," என்றாள் லாரா. "ஃபீனிக்ஸில் உள்ள பேரன் ப்ரதர்ஸ் நிறுவனத்துக்கு."

ஜெர் ட்ரூட் எழுதிக் கொள்ள ஆரம்பித்தாள்.

"அன்புடையீர், நீங்கள் என்னிடம் காட்டிய ஸ்காட்ஸ்டேல் மனையைப் பற்றி நான் மறுபரிசீலனை செய்தேன். அதை உடனடியாக வாங்க வேண்டுமென்று முடிவு செய்துள்ளேன். கொஞ்ச நாளில் அது மிக விலையுயர்ந்ததாக ஆகும் என்பது என் நம்பிக்கை."

ஹோவார்டு அவளை வெறித்துப் பார்த்தவாறிருந்தான். லாரா தொடர்ந்தாள்.

"விலை சம்பந்தமாக இன்னும் சில தினங்களில் தங்களுடன் பேசுகிறேன். வணக்கத்துடன் – டைப் அடித்து எடுத்து வா. கையெழுத்துப் போடுகிறேன்."

"சரி, மேடம். அவ்வளவுதானா?"

"அவ்வளவுதான்."

ஜெர் ட்ரூட் போனதும் ஹோவார்டு, "லாரா, என்ன இதெல்லாம் அந்த மனையைப் பற்றி நாம் முன்பே நிறையப் பேசிவிட்டோம். அது பைசா பிரயோசன மில்லாத மனை. அதைப் போய்..."

"அமைதி! அமைதி! அதை நாம் வாங்கப் போவதில்லை."

"பின்னே ஏன்...?"

"நாம் வாங்கப் போவதில்லையே தவிர, நிச்சயமாய் ஸ்டீவ் மர்ச்சிபன் வாங்குவார். இன்று அவரும் ஜெர் ட்ரூடும் சேர்ந்து ஓட்டலில் சாப்பிடுவதைப் பார்த்தேன்."

ஹோவார்டு அதிர்ந்து போனான். "பாவி! கெடுத்தாளே"

"இரண்டு நாள் பொறுங்கள், பிறகு பேரன் பிரதர்ஸிடம் அந்த மனையைப் பற்றி விசாரியுங்கள்." என்றாள் லாரா.

அதன்படியே இரண்டு நாள் பொறுத்து லாராவின் அறைக்குள் வந்தான் ஹோவார்டு. அவன் முகத்தில் சிரிப்புத் தவழ்ந்தது. "நீ சொன்னது கரெக்ட், லாரா, மர்ச்சிஸன் நீ போட்ட தூண்டிலை, புழுவோடு கொக்கியோடு, முள்ளோடு விழுங்கிவிட்டான்! வெறும் குப்பையான ஐம்பது ஏக்கர் நிலத்தை ரொம்பப் பெருமையாய் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறான் இப்போது!"

லாரா ஜெர் ட்ரூ டைக் கூப்பிட்டனுப்பினாள். அவள் வந்தாள்.

"என்ன மேடம்?"

"உன்னை டிஸ்மிஸ் செய்து விட்டேன்."

ஜெர் ட்ரூட் வியப்புடன் பார்த்தாள் "டிஸ்மிஸா? ஏன்?"

"நீ வைத்திருக்கும் சகவாசங்கள் எனக்குப் பிடிக்கவில்லை, ஸ்டீவ் மர்ச்சிஸடம் போய்ச் சேர். நான் சொன்னேனென்று சொல்லு."

ஜெர் ட்ரூ டின் முகம் தொங்கிப் போயிற்று. "நான்... நான்...!"

"சரி, சரி. நான் ஆள் வைத்து வெளியேற்றுவதற்கு முன் நீயே போய்விடு."

நள்ளிரவு நேரம்.

தன் கார் டிரைவர் மாக்ஸுக்கு போன் செய்தாள் லாரா, "காரைக் கொண்டு வந்து வாசலில் நிறுத்து."

"இதோ மேடம்..."

அவள் வாசலுக்கு வந்தபோது கார் தயாராக நின்றது.

"எங்கே போகணும் மேடம்?" என்று மாக்ஸ் கேட்டான். "நகரம் பூரா ஒட்டு, நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்க வேண்டும்."

அவன் திகைத்தான் "மேடம்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"நான் கட்டிய கட்டிடங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்கிறேன்."

நகரைச் சுற்றி எல்லா இடங்களுக்கும் கார் ஓடியது. கடைகள்... வீடுகள்... வானை முட்டும் கட்டிடங்சுள். லாரா சதுக்கம், லாரா ப்ளேஸ்ஸா, லாரா சென்ட்டர்... கடைசியில், அரைகுறையாய் எழும்பி நிற்கும் லாரா டவர்ஸ்...

ஒவ்வொரு கட்டிடத்தின் முன்னேயும் காரை நிறுத்தி, காருக்குள் உட்கார்ந்தபடியே பார்த்தாள். அந்தக் கட்டிடங்களுக்குள்ளே எத்தனை பேர் வசிக்கிறார்கள், எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள், இவர்கள் எல்லாருடைய வாழ்வையும் நான் தொட்டு விட்டேன். இந்த நகரத்தை முன்னைக் காட்டிலும் சிறப்பானதாகப் பண்ணியிருக்கிறேன்’ என்று எண்ணிக் கொண்டாள் லாரா.

‘நான் நினைத்தது அனைத்தையும் செய்து முடித்து விட்டேன். பின்னே என் மனம் அமைதியற்றுத் தவிக்கிறது ஏன்? என்ன இல்லை எனக்கு?’

என்ன இல்லை என்பது அவளுக்குத் தெரிந்ததுதான்.

47

ன்று காலை பிலிப்பின் மானேஜர் வில்லியமுக்குப் போன் செய்தாள் லாரா.

"குட் மார்னிங் மிஸ்டர் வில்லியம்."

"குட்மார்னிங் மிஸ் லாரா, என்ன விஷயம் மேடம்?"

"இந்த வாரம் மிஸ்டர் பிலிப்பின் இசை நிகழ்ச்சி எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?"

"எக்கச்சக்கமான நிகழ்ச்சிகள் இருக்கிறது அவருக்கு. நாளை இரவு ஆம்ஸ்டர்டாமில் இருப்பார். அங்கேயிருந்து, மிலானுக்கும் வெனிசுக்கும் போகிறார். அதற்கப்புறம் என்னென்ன நிகழ்ச்சி என்று சொல்லட்டுமா?"

"வேண்டாம், வேண்டாம். தாங்க்ஸ். சும்மா தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்டேன்."

"நல்லது மேடம்."

போனை வைத்துவிட்டு ஹோவார்டின் அறைக்குச் சென்றாள் லாரா, "ஹோவார்டு, நான் ஆம்ஸ்டர்டாம் போக வேண்டும்."

ஆச்சரியத்துடன் அவளை நிமிர்ந்து நோக்கினான் அவன். "அங்கே போய் என்ன செய்யப் போகிறோம்?"

"ஏதோ ஐடியா தோன்றியது..." என்று மழுப்பலாய் பதிலளித்தாள் லாரா. "நிச்சயம் பண்ணின பிறகு உங்களுக்குச் சொல்கிறேன்."

"ஓஹோ."

"எதற்கும் நம்முடைய ஜெட் விமானத்தை ரெடியாக இருக்கச் சொல்லுங்கள். என்ன?"

"அதை லண்டனுக்கு அனுப்பியிருக்கிறீர்களே, நினைவில்லையா? நாளைக்கு இங்கே வந்து விடும்படி அவர்களுக்குச் சொல்கிறேன்."

"இன்றைக்கே புறப்படலாமென்று பார்க்கிறேன்." என்றாள் லாரா, தன் குரலில் தொனிக்கும் அவசரம் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. "சரி, பொதுவான பயணிகள் விமானத்திலேயே போகிறேன்." என்று கூறி விட்டுத் தன் அலுவலகத்துக்குத் திரும்பினாள். கேத்தியைக் கூப்பிட்டாள்.

"ஆம்ஸ்டர்டாமுக்குக் கிளம்பும் முதல் விமானத்தில் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கு."

"இதோ மேடம்." ஹோவார்டு கவலையுடன் கேட்டான். "நீ திரும்பி வர நாளாகுமா? சில மீட்டிங்குகள் இருக்கிறது இங்கே."

"இரண்டொரு நாளில் திரும்பிவிடுவேன்."

"நான் வேண்டுமானால் உன்கூட வரட்டுமா?"

"தாங்க்ஸ் ஹோவார்டு. இந்தத் தடவை வேண்டாம்."

"வாஷிங்டனில் தான் நண்பர் ஒருவர் செனட் உறுப்பினராக இருக்கிறார். அவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்தது. இப்போது கட்டிடங்களுக்குத் தருகிற பல வரிச் சலுகைகளை நீக்கப் போகிறார்களாம். அதற்கு ஒரு மசோதா கொண்டு வரப் போகிறார்களாம்."

"முட்டாள்தனம்." என்றாள் லாரா.

"அப்படி ஒரு சட்டம் வந்தால் ரியல் எஸ்டேட் துறை முடமாகிவிடும்."

"ஆமாம். அந்த மசோதாவை எதிர்க்கப் போவதாக என் நண்பர் சொன்னார்."

"அவர் மட்டு மல்ல. ரொம்பப்பேர் எதிர்ப்பார்கள். ஒருநாளும் அந்தச் சட்டம் நிறைவேறாது," என்று லாரா ஆறுதல் கூறினாள். "முதலாவதாச..." அவள் பேச்சை முடிக்குமுன் அவளுடைய சொந்த டெலிபோன் மணி யடித்தது. அதை வெறித்து நோக்கினாள். மறுபடியும் அது அடித்தது.

"எடுத்துப் பேசவில்லையா?" என்று ஹோவார்டு கேட்டான்.

அவள் நாக்கு உலர்ந்திருந்தது. "இல்லை."

போன் செய்தவர் பால் மார்ட்டின்தான். மணி அடிப்பதைப் பத்துப் பன்னிரண்டு தடவை வரை கேட்டு விட்டு ரிஸீவரை வைத்தார்.

லாராவைப் பற்றியே சிந்தனை செய்தவாறு வெகு நேரம் உட்கார்ந்திருந்தார். ‘கொஞ்ச நாளாகவே அவள் விட்டேற்றியாக இருப்பதாக - ஒட்டுதல் இல்லாமல் விலகி இருப்பதாக - அவருக்குத் தோன்றியது. அவளுடைய வாழ்க்கையில் வேறு எவரேனும் நுழைந்திருப்பார்களோ? இருக்காது. இருக்கக் கூடாது’ என்று எண்ணிக் கொண்டார். அவள் எனக்குச் சொந்தமானவள். என்றென்றைக்கும் எனக்கே சொந்தமானவள்...’

ஆம்ஸ்டர்டாம் விமானப் பயணம் இனிமையாக இருந்தது. முதல் வகுப்பு இருக்கைகள் விஸ்தாரமாக, வசதியாக அமைத்திருந்தன. ஊழியர்கள் மிகவும் பிரியமாக உபசரித்தார்கள்.

ஆனால் லாராவிற்கு இருப்புக் கொள்ளாததால் எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ பிடிக்கவில்லை. ‘என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்’ என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். யாரும் கூப்பிடாமலே நான் பாட்டுக்கு ஆம்ஸ்டர்டாமுக்குப் போகிறேன். அவருக்கு என்னைப் பார்க்கக்கூட நேரம் இருக்குமோ இருக்காதோ? அவரைத் துரத்திக் கொண்டு ஒடுவதால் இருக்கிற வாய்ப்பும் கெட்டுப் போகக்கூடும். ஆனால், இனி அதைப் பற்றி யோசித்துப் பயனில்லை. காலம் கடந்து விட்டது...’

ஆம்ஸ்டர்டாமின் அழகிய ஓட்டல்களில் ஒன்றான சிரானைட் ஹோட்டலுக்குச் சென்றாள்.

"உங்களுக்கு ரொம்ப அருமையான ஸ்யூட் தருகிறோம் மிஸ் லாரா" என்று கூறி அழைத்துச் சென்றார் ஓட்டல் மானேஜர்.

"நன்றி. இன்று மாலை பிலிப் ஆட்லரின் பியானோ நிகழ்ச்சி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். எங்கே நடக்கிறது என்று தெரியுமா? அதற்கு ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்யவேண்டும்."

"மகிழ்ச்சியுடன் செய்கிறேன் மேடம்."

ஸ்பூட்டுக்குள் நுழைந்ததுமே டெலிபோன் மணி அடித்தது. கூப்பிட்டது ஹோவார்டுதான்.

"பயணம் சௌகரியமாக இருந்ததா லாரா?"

"ஓ, தாங்க்ஸ்..."

"உனக்கு ஒரு விஷயம் சொல்வதற்காகத்தான் கூப்பிட்டேன். தமது ஏழாவது அவென்யூ மனை பற்றி இரண்டு பாங்க்குகளில் பேசினேன்."

அவன் குரலில் உற்சாகம் ததும்பியது. "நமக்கு உதவி செய்வதற்குத் துள்ளிக் குதிக்கிறார்கள்!"

லாராவுக்கு மகிழ்ச்சி பிடி படவில்லை. "நான்தான் அப்போதே சொன்னேனே! இது பிரமாதமான திட்டமாக அமையப் போகிறது பாருங்கள். உடனே ஆர்க்கிடெக்டுகள், மேஸ்திரிகள் - நம்முடைய கட்டிட வேலை மேற்பார்வையாளர்கள் எல்லாரையும் கூட்டிப் பேசுங்கள். கிடுகிடுவென்று வேலை ஆரம்பிக்க வேண்டும்."

"நல்லது. நாளை உன்னைக் கூப்பிடுகிறேன்."

ரிஸீவரை வைத்தாள் லாரா. ஹோவார்டைப் பற்றிய எண்ணத்தில் அவள் சிந்தனை மூழ்கியது. ‘எத்தனை அருமையான மனிதர்! நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரி. என்னுடைய காரியம் என்றால் எப்போதும் முன் நிற்கிறார். அவருக்கேற்றவளாக அருமையான பெண்ணொருத்தியைப் பிடிக்க வேண்டும்..."

பியானோ நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் இருக்கை கொள்ளாமல் தவிப்பது பிலிப்புக்கு வழக்கம்.

அன்று காலை ஆர்க்கெஸ்டிரா குழுவுடன் ஒத்திகை பார்த்தான். பிறகு லேசாகப் பகலுணவு சாப்பிட்டான் புத்தியை வேறெதிலாவது செலுத்த வேண்டும் என்பதற்காக ஓர் இங்கிலீஷ் சினிமாவுக்குப் போனான். ஆனால், படம் பார்த்துக் கொண்டிருந்த நேரம் பூரா, அன்று மாலை வழங்குப் போகும் இசைதான் அவன் உள்ளத்தில் நிரம்பி வழங்கப் போகும் இசைதான் அவன் உள்ளத்தில் நிரம்பி காலியின் பிடியில் தாளமிட்டுக் கொண்டிருந்தன.

அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நபர், "என்ன அது, சகிக்க முடியாத சத்தம்? நிறுத்து." என்றார்.

"மன்னியுங்கள்," என்றான் பிலிப் மரியாதையுடன்.

பின்னர் எழுந்து தியேட்டரை விட்டு வெளியே வந்தான். ஆம்ஸ்டர்டாம் வதிகளில் திரிந்தான். மியூசியத்தைப் பார்வையிட்டான். பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொடானிகல் கார்டனில் சுற்றினான். கடை வீதியில் இருந்த அங்காடிகளை வெளியிலிருந்து பார்த்த படியே நடந்தான். மாலை நாலு மணிக்குச் சிறிது தூக்கம் போடலாமென்று தன் ஓட்டலுக்குத் திரும்பினான்.

தன் ஸ்யூட்டுக்கு நேர் மேலேயுள்ள ஸ்யூட்டில் லாரா தங்கியிருப்பது அவனுக்குத் தெரியாது.

ஏழு மணிக்கு ஆம்ஸ்டர்டாமின் புகழ் பெற்ற இசை மண்டபத்தை அடைந்து, கலைஞர்களுக்கான வாயிலில் நுழைந்தான். சட்டம் நிரம்பி வழிந்தது.

மேடைக்குப் பின்புறமிருந்த அறையை அவன் அடைந்ததும், அரங்கத்தின் நிர்வாகி தலைதெறிக்கும் உற்சாகத்துடன் வேகமாக வந்தார், "அவ்வளவு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன மிஸ்டர் பிலிப்! ஏராளமான பேர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிப் போய்விட்டார்கள். நீங்கள் மட்டும் இன்னும் இரண்டொரு நாள் தங்க முடிந்தால்... ஆனால் உங்களுக்கு ஏற்கெனவே பல நிகழ்ச்சிகள் ஒப்பந்தமாயிருக்கிறது. அடுத்த வருஷம் நீங்கள் இங்கே வருவதற்கு உங்கள் மானேஜர் மிஸ்டர் வில்லியமிடம் பேசுகிறேன்..."

அவர் பேசுவது எதுவும் பிலிப்பின் காதில் விழவில்லை. நடக்கவிருக்கும் நிகழ்ச்சியிலேயே அவன் மனம் ஒன்றிப் போயிருந்தது. அரங்க நிர்வாகி கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, அவன் தன் பேச்சைக் கவனிக்க வில்லை என்று புரிந்துகொண்டு தோளைக் குலுக்கியவாறு வெளியே போய்விட்டார். தான் வாசிக்கப் போகும் சங்கீதத்தை மனத்துக்குள் திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டான் பிலிப்.

அரங்கத்தின் ஊழியரொருவர் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்து, "மேடையில் எல்லாரும் தயாராக இருக்கிறார்கள், மிஸ்டர் பிலிப்." என்று தெரிவித்தான்.

"நன்றி."

நேரம் வந்துவிட்டது. பிலிப் எழுந்து கொண்டான். கைகளை நீட்டிப் பார்த்துக் கொண்டான். அவை லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. பியானோ நிகழ்ச்சியைத் தொடங்குமுன் எப்போதும் இப்படித்தான் ஒரு தவிப்பு, அவனுக்கு மட்டுமல்ல. மாபெரும் பியானோ கலைஞர்கள் எல்லாருக்குமே இப்படித்தான். வயிற்றைப் பிசைந்தெடுத்தது. இதயம் தடதட்டென்று அடித்து கொண்டது.

இந்த வேதனையை ஏன் தான் ஒவ்வொரு முறையும் ஏற்கிறேனோ? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். ஏன் என்பது அவனுக்கே தெரியும்.

அறையிலிருந்த நிலைக் கண்ணாடியில் கடைசியாக ஒருதடவை பார்த்துக் கொண்டபிறகு வெளியே வந்தான். நீண்ட தாழ்வாரத்தின் வழியே நடந்து, மேடைக்குச் செல்லும் முப்பத்திரண்டு படிகளில் ஒவ்வொன்றாக இறங்கினான்.

பியானோவை நோக்கி அவன் நடக்கையில் ஒளி விளக்கு அவன் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சிற்று.

கைதட்டல் மெல்ல ஆரம்பித்து இடி போல் வளர்ந்தது, பியானோவின் முன்னே அமர்ந்தான். மந்திரம் போட்ட மாதிரி உடனே தவிப்பு மறைந்தது.

தனக்குள்ளே வேறு யாரோ ஒருவர் - அமைதியும் அமரிக்கையும் கொண்ட ஒரு புதிய நபர் - பிரவேசித்து தன்னை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொள்வது போல் உணர்ந்தான்.

பியானோவை இசைக்கத் தொடங்கினான்.

அவையினரில் ஒருத்தியாக லாரா உட்கார்ந்திருந்தாள்.

மேடைக்கு வந்ததுமே அவளுக்குள் ஒரு பரவசம் உதித்தது.

‘இவரிடம் ஒரு வசிய சக்தி இருக்கிறது. இவரை நான் மணக்கப் போகிறேன்’ என்று எண்ணினாள். ‘ஆம். எனக்கு அது நிச்சயமாகத் தெரிகிறது.’

இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தாள், பிலிப்பின் இசை வெள்ளத்தில் மூழ்கலானாள்.

இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. கிரீன் ரூமைப் பிலிப் திரும்ப அடைந்தபோது அங்கே கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கே வரும் கூட்டத்தை இரண்டு வகையாகப் பிரிக்கக் கற்றிருந்தான் பிலிப். ஒருவகையினர் ரசிகர்கள். இன்னொரு வகையினர் சங்கீதக்காரர்கள். ரசிகர்கள் எப்போதுமே உற்சாகமாகப் பாராட்டுவார்கள். சங்கீதக்காரர்கள், நிகழ்ச்சி வெற்றியாக அமைந்தால் அன்பாகப் பாராட்டுவார்கள். தோல்வியாக அமைந்தால் ரொம்ப ரொம்ப அன்பாகப் பாராட்டுவார்கள்.

ஆம்ஸ்டர்டாமில் பிலிப்புக்கு ஆர்வமுள்ள ரசிகர்கள் நிறைய இருந்தார்கள். அன்றைய தினம் அவர்கள் அறையில் அலைமோதினார்கள். அறையின் மத்தியில் நின்றபடி அவன் புன்னகையுடன் பேசினான். ஆட்டோ கிராப்புகளில் கையெழுத்திட்டான். நூற்றுக்கணக்கான அன்னியர்களிடம் பொறுமையுடன் மரியாதை காட்டிப் பேசினான், ‘என்னை ஞாபகமிருக்கிறதா?’ என்று யாராவது கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். "எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது..." என்று பதிலளித்தான்.

அந்தமாதிரி சமயங்களில் சர்தாமஸ் பீச்சாம் என்ற இசைக் கலைஞரைப் பற்றி அவனுக்கு ஞாபகம் வரும். என்னை நினைவிருக்கிறதா? என்று யாரேனும் கேட்டால், ‘ஒ, தாராளமாய், உங்கள் அப்பா எப்படி இருக்கிறார்?’ என்று திருப்பிக் கேட்பது அவர் வழக்கம். வந்தவர் அதில் மகிழ்ந்து போய்த் தன் தந்தையைப் பற்றிச் சொல்லத் தொடங்குவார். ஒருமுறை ஓர் இளம்பெண் அவரிடம், ‘உங்கள் கச்சேரி பிரமாதம். என்னை ஞாபகமிருக்கிறதா?’ என்று கேட்டாள். ‘தாராளமாய், உங்கள் அப்பா எப்படி இருக்கிறார். இப்போது என்ன பண்ணுகிறார்?’ என்று கேட்டார், ‘ஓ, அப்பா சௌக்கியமாய் இருக்கிறார். இப்போதும் இங்கிலாந்து அரசராகத்தான் இருக்கிறார்.’ என்றாளாம் அந்தப் பெண்!

பிலிப் ஆட்டோகிராப் நோட்டுக்களில் கையெழுத் திட்டபடி வழக்கமான பாராட்டுரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். "சங்கீத தேவதையே வந்த மாதிரி இருந்தது. நான் அப்படியே நெகிழ்ந்துவிட்டேன்..." இந்த நோட்டிலும் ஒர் ஆட்டோகிராப் போடுங்கள், இது என் அம்மாவுக்காக, அவள் உங்களுடைய பயங்கர விசிறி..."

ஏதோ ஒர் உணர்வு ஏற்பட பிலிப் தலை நிமிர்ந்தான். அறை வாசலில் அவனையே பார்த்தபடி லாரா நின்றிருந்தாள்.

48

பிலிப்பின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது லாரா வைக் கண்டதும். சூழ்ந்திருந்த கூட்டத்தினரிடம் ‘மன்னியுங்கள்’ என்று சொல்லி விட்டு நேரே அவளை நோக்கி வந்தான். அவள் கைகளை ஆசையுடன் பற்றிக் கொண்டான். "என்ன சந்தோஷமான ஆச்சரியம்! இங்கே ஆம்ஸ்டர்டாமில் என்ன செய்கிறாய்?"

‘எச்சரிக்கையாகப் பேசு’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் லாரா. "இங்கே ஒரு பிஸினஸ் வேலை இருந்தது. வந்தேன். உங்கள் கச்சேரி இருப்பதாகத் தெரிந்தது. அப்புறம் வராமல் இருக்க முடியுமா?" என்றாள். பரவாயில்லை, சமாளிப்பாகச் சொல்லி விட்டோம் என்று நினைத்துக் கொண்டு இன்று நீங்கள் பிரமாதமாக வாசித்தீர்கள் பிலிப்." என்றாள்.

"தாங்க் யூ." யாரோ ஆட்டோ கிராப் நோட்டை வந்து நீட்டினார்கள். அதில் கையெழுத்திட்டு விட்டு, "இன்று இரவு உனக்கு ஒழிவு இருந்தால்..."

"ஓ, ஒழிவுதான்." என்று சட்டெனக் கூறினாள் லாரா.

லீட்ஸ்ட்ராப் என்னுமிடத்தில் இருந்த பாலி ரெஸ்டாரண்டில் அவர்கள் உணவு அருந்தினார்கள்.

அவர்கள் உள்ளே நுழைந்ததுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றார்கள். இதுவே அமெரிக்காவாக இருந்தால் இந்த வரவேற்பு தனக்காக இருந்திருக்கும் என்று லாராவுக்குத் தோன்றியது. என்றாலும் பிலிப்பின் அண்மையில் இருப்பதொன்றே அவளுக்குள் ஒரு கதகதப்பை ஏற்படுத்தியது.

"தாங்கள் இங்கே வந்தது எங்களுக்குப் பெரும் கெளரவம் மிஸ்டர் பலிப்." என்று கூறிய வண்ணம் ஓட்டல் நிர்வாகி அவர்களை அவர்களுடைய மேஜைக்கு அழைத்துச் சென்றார்.

"தாங்க் யூ..."

உட்கார்ந்த பின்னர் லாரா சுற்றுமுற்றும் நோக்கினாள். அவ்வளவு பேரின் கண்களும் பிலிப்பின் முகத்தையே ஆசையுடன் மொய்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. "இவர்கள் அத்தனை பேருக்கும் உங்களிடம் எவ்வளவு மோகம்!" என்றாள்.

அவன் தலையை அசைத்தான். "அவர்கள் மோகிப்பது என்னையல்ல. இசையை, நான் அதைச் சுமந்து வரும் தபால்காரன். அவ்வளவுதான். பல காலம் முந்தியே இதை தான் தெரிந்துகொண்டு விட்டேன். இளம் பிராயத்தில், கொஞ்சம் அகந்தையுடன் நான் இருந்தபோது ஒரு முறை பியானோ வாசித்து முடித்தேன். பயங்கரமான கைதட்டல் எழுந்தது. நான் அவையினருக்குக் குனிந்து வணக்கம் செலுத்தினேன். பெருமையுடன் புன்னகை செய்தேன்.

அப்போது இசை நிகழ்ச்சியை நடத்திய கண்டக்டர் இசைக் குறிப்பு கொண்ட காகிதத்தைத் தன் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டினார். அவர்கள் கரகோஷம் செய்வது உண்மையில் இசை மேதை மோஸார்ட்டுக்குத்தான் என்பதை அவையரினருக்கு ஞாபகப்படுத்தினார். அந்தப் பாடத்தை நான் என்றைக்குமே மறந்தது கிடையாது."

"ஒரே சங்கீதத்தைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு ராத்திரியும் வாசிப்பது உங்களுக்குச் சலிப்பாக இல்லை"

"இல்லை. ஏனெனில் எந்த இரண்டு நிகழ்ச்சியும் ஒரே மாதிரி இருக்காது. இசை ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதை நடத்தும் கண்டக்டர் வெவ்வேறாக இருப்பார். ஆர்க்கெஸ்டிரா வெவ்வேறாக இருக்கும்."

விரிவான புன்னருக்கு ஆர்டர் கொடுத்த பிறகு பிலிப் சொன்னான், "ஒவ்வொரு நிகழ்ச்சியும் பரி பூரணமாக அமைய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் முழுக்க முழுக்க வெற்றியான நிகழ்ச்சி என்று எதையுமே சொல்ல முடியாது. காரணம், சங்கீதம் என்பது மனிதர்களாகிய எங்களைக் காட்டிலும் உயர்வான விஷயம், இசையமைத்தவர் மனசில் என்ன நினைத்திருந்தாரோ அதே ஒலியைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொரு முறையும் நாங்கள் சிந்தனை செய்ய வேண்டியிருக்கிறது."

"உங்களுக்குத் திருப்தி ஏற்படுவதே இல்லை?"

"இல்லை." என்று அவன் மேலும் விளக்கிக் கொண்டிருந்த சமயம் உணவு வந்தது. இந்தோனேஷியா விருந்து. எக்கச்சக்கமான ஐட்டங்கள்.

"ஐயோ! இவ்வளவையும் யார் சாப்பிடுவது?" என்று லாரா சிரித்தாள்.

"இந்த ஊர்க்காரர்கள் பகாசுரர்கள். நன்றாய்ச் சாப்பிடுவார்கள்."

பேசியபடி அவளைப் பார்த்தான் பிலிப். அவனை விட்டுக் கண்களை அகற்ற முடியவில்லை. அவளுக்கு அருகில் உட்கார்ந்திருப்பது அவனுக்கு ஒரு சிறுபிள்ளைத் தனமான சந்தோஷத்தை ஏற்படுத்தியது. பல அழகிய பெண்களுடன் அவனுக்குத் தொடர்பு இருந்ததுண்டு. ஆனால் லாராவைப் போல ஒருத்தியை அவன் இதுவரை பார்த்தது கிடையாது. இவள் பலசாலியாக இருக்கிறாள். அதே சமயம் பெண்மை நிறைந்தவள். தன் அழகைப் பற்றிக் கொஞ்சமேனும் நினைத்துப் பார்க்கிறாளா? இல்லை. அவளுடைய கரகரப்பான குரலில் இருந்த ஸெக்ஸியான கவர்ச்சி அவனுக்குப் பிடித்திருந்தது. உண்மையில் இவளுடைய ஒவ்வொரு அம்சமும் எனக்குப் பிடித்திருக்கிறது, என்று தன்னுள் ஒப்புக் கொண்டான்.

"அடுத்தாற் போல் எந்த ஊருக்குப் போகப் போகிறீர்கள்?" என்று லாரா கேட்டாள்.

"நாளைய தினம் மிலானில் இருப்பேன். பிறகு வெனிஸ், வியன்னா, பாரிஸ், லண்டன், கடைசியில் நியூயார்க்."

"உல்லாசமான பிரயாணம்தான்."

பிலிப் சிரித்தான். "உல்லாசம் என்று சொல்ல முடியாது. ஐம்பது விமானங்களில் பயணம்: புதிய புதிய ஓட்டல்கள்; ராத்திரிகளில் ரெஸ்டாரண்ட் சாப்பாடு; பியானோ வாசிக்கிறோம் என்கிற சந்தோஷத்தில் இதை யெல்லாம் மறந்து விடுகிறேன். எனக்குப் பிடிக்காத்து இந்த ‘ஸ்மைல் ப்ளீஸ்’ சமாசாரம்தான்."

"அதென்ன?"

"எப்போது பார்த்தாலும் ஏதோ கண்காட்சிப் பொருள் மாதிரி நிற்க வேண்டியிருப்பதைச் சொல்கிறேன். யாரோ சம்பந்தமில்லாதவர்களையெல்லாம் பார்த்துப் புன்னகை செய்து தொலைக்க வேண்டும். நம் வாழ்க்கையை அன்னியர்கள் மத்தியிலே வாழ வேண்டியிருக்கிறது."

"அது எப்படிப்பட்ட வேதனை என்று எனக்குத் தெரியும்," என்றாள் லாரா மெதுவான குரலில்.

சாப்பாடு முடியும் சமயம் பிலிப் சொன்னான். "இதோ பார், ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி முடிந்த பிறகு எனக்கு உடம்பும் மனசும் முடுக்கிவிட்ட மாதிரி விறைப்பாக இருக்கும். அதைத் தளர்த்திக் கொள்ள வேண்டும், கொஞ்ச நேரம் ஏரிப் படகில் போகலாமா?"

"ஓ, தாராளமாய்."

அவர்கள் ஒரு படகில் ஏறிக் கொண்டார்கள். வானத்தில் அன்று நிலவு இல்லை. ஆனால் ஆயிரக் கணக்கான விளக்குகள் நகரெங்கும் கண் சிமிட்டின. ஏரியில் செல்வது ஒரு மாய வலைக்குள் இருப்பது போல் இருந்தது. படகின் ஒலி பெருக்கிகள் நான்கு மொழிகளில் தாங்கள் போகும் இடங்களை வர்ணித்துக் கொண்டிருந்தன. நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட மாளிகையையும், புராதனமான சர்ச்சுகளின் ஸ்தூபிகளையும், ஏரிகளில் மொத்தம் உள்ள 1200 பாலங்களையும் கரையோரங்களில் ஓங்கி உயர்ந்த மரங்களையும் பற்றி அவை விவரித்தன.

"ரொம்ப அழகான நகரம் இது." என்றாள் லாரா.

"இதற்கு முன் இங்கே வந்ததில்லை?"

"இல்லை."

"பின்னே பிஸினஸ் விஷயமாக வந்ததாகச் சொன்னாயே?"

மனதைத் தைரியப்படுத்திக் கொண்டாள் லாரா. "இல்லை, பிஸினஸ் விஷயம் எதுவுமில்லை."

அவளைக் குழப்பத்துடன் பார்த்தான் பிலிப். "ஆனால் நீ..."

"உங்களைப் பார்ப்பதற்காகத்தான் ஆம்ஸ்டர்டாமுக்கு வந்தேன்."

அவன் உள்ளத்தில் ஓர் இன்பச் சிலிர்ப்பு பிறந்தது. "எனக்கு ரொம்பப் பெருமையாயிருக்கிறது."

"உங்களிடம் இன்னொன்றும் நான் ஒப்புக் கொள்ள வேண்டும். எனக்கு சாஸ்திரீய சங்கீதத்தில் அக்கறை உண்டு என்று சொன்னேனல்லவா? அது உண்மை அல்ல."

பிலிப்பின் உதட்டோரத்தில் ஒரு புன்னகை பிறந்தது. "எனக்குத் தெரியும்."

லாரா அவனைத் திகைப்புடன் நோக்கினாள்.

"தெரியுமா?"

"ஆமாம், உனக்குச் சங்கீதப் பாடம் சொல்லித் தந்த புரொபசர் மெயர்ஸ் எனக்கு ரொம்ப நாளைய சினேகிதர். என்னுடைய பியானோ இசை பற்றி உனக்குச் சுருக்கமான பாடம் எடுப்பதாக என்னிடம் சொன்னார். என்னிடம் உனக்கு ஏதோ நோக்கம் இருக்கிறது என்று அவருக்கு ஒரு சந்தேகம்."

லாரா மென்மையாகச் சொன்னாள். "அவர் சொன்னது உண்மை தான். உங்களுக்கு யாரிடமாவது..."

"சீரியஸான உறவு உண்டா என்று கேட்கிறாய்?"

லாராவுக்குத் திடீரென்று ஒரு சங்கடம் உண்டாயிற்று. "இல்லை... நான் ஏதேனும் தப்பாகச் சொல்லியிருந்தால்..."

அவன் அவள் கைகளைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். "அடுத்த ஸ்டாப்பில் நாம் இறங்கிக் கொள்ளலாம் வா."

அவர்கள் ஓட்டலைத் திரும்ப அடைந்தபோது ஹோவார்டிடமிருந்து ஒரு டஜன் செய்திகள் காத்திருந்தன. அவற்றைப் பிரிக்காமலே பர்ஸுக்குள் அடைத்துக் கொண்டாள். இந்தக் கணத்தில் பிலிப்பை தவிர வேறெதுவும் முக்கியமானதாகத் தெரியவில்லை அவளுக்கு.

"உன் அறைக்குப் போகலாமா அல்லது என் அறைக்கா?" என்று பிலிப் கேட்டான்.

"உங்கள் அறைக்கே போகலாம்." என்றாள்.

அவன் குரலில் ஒரு தாபம் அக்கினிபோல் தகித்துக் கொண்டிருந்தது.

இந்த ஒரு கணத்துக்காகவே தான் வாழ்நாள் பூரா காத்துக் கொண்டிருந்ததுபோல் இருந்தது அவளுக்கு. தனக்கு ஏதோ ஒன்று இல்லை, ஏதோ ஒன்று இல்லை என்று நினைத்தோமே அது இதுதான் என்று எண்ணினாள். யாரென்று தெரியாமல் ஓர் அன்னியனை மனசுக்குள் காதலித்து வந்தோமே, அவன் இவன்தான்.

பிலிப்பின் அறையை அடைந்தார்கள். இருவரிடமுமே ஒர் அவசரம் ஏற்பட்டிருந்தது. பலிப் அவளைத் தன்! கைகளுக்குள் அணைத்துக் கொண்டு மிருதுவாக, தாபத்துடன் அவளுடைய ஆன்மாவைத் துழாவுகிறவன் போல் முத்தமிட்டான். கடவுளே... கடவுளே... என்று லாரா முனகினாள். இருவரும் உடைகளைக் களைந்தார்கள்.

அந்த அறையின் நிசப்தத்தைக் குலைக்கிற மாதிரி வெளியே ஒர் இடியின் சப்தம் திடீரென்று கேட்டது. வானத்தில் இருந்த கருத்து மேகங்கள் தங்கள் உள்ளாடைகளைப் பிரித்து மேலும் மேலும் விரித்தன. மெல்லிய மழை விழத் தொடங்கியது. மெதுவாக அமைதியாக ஆரம்பித்து, சுற்றிலும் இருந்த வெப்பமான காற்றை வெறியுடன் வருடிக் கொடுத்தது. பக்கத்துக் கட்டிடங்களை நக்கிக் கொடுத்தது. புல்வெளிகளை உறிஞ்சியது. இரவின் இருண்ட பகுதிகளிலெல்லாம் முத்தமிட்டது.

என்ன உஷ்ணமான மழை! கொஞ்சம் கொஞ்சமாக வழுக்கிக் கொண்டு தணிந்து மீண்டும் வேகம் பிடித்து, தடதடக்கும் புயலாக மாறி ஆக்ரோஷத்துடன் சீறியது. அசுர கதியில் அதன் தாளம் வேகம் கொண்டு இறங்கியது. இறுதியில் படிரென்று ஒர் இடி வெடித்தது. அதன் பிறகு எத்தனை வேகமாக ஆரம்பித்ததோ அத்தனை வேகமாக அவ்வளவும் முடிந்து விட்டது.

லாராவும் பிலிப்பும் ஒருவர் அணைப்பில் மற்றவர் கட்டுண்டு கிடந்தார்கள். அவளைப் பலிப் இறுக்கி அணைத்திருந்ததால் அவளுடைய இருதயத்தின் துடிப்பைக் கேட்க முந்தது. எப்போதோ ஒரு சினிமாவில் கேட்ட ஒரு பாட்டின் வரி அவனுக்கு நினைவு வந்தது; ‘இந்த உலகம் உனக்காகத்தான் நகருகிறதா?’ ஆம், ஆம்!’ என்று அவன் எண்ணினான். தலை சிறந்த சங்கீத மேதைகள் படைத்த இசைக் காவியம் இவள்.

அவளுடைய உடலின் மெல்லிய வளைவுகள் தன்னை நெருக்குவதை அவன் உணர்ந்தான். மீண்டும் தாபம் எழுந்தது அவனுள்.

"பிலிப்..." அவள் குரல் கரகரத்தது.

"என்ன?"

"உங்களுடன் நான் மிலானுக்கு வரட்டுமா?"

அவன் சிரித்தான் "ஓ, தாராளமாய். தாராளமாய்."

‘எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது இப்போது!’ அவன் மீது அவள் சாய்ந்தபோது அவளுடைய முடிக்கற்றைகள் அவன் வெற்று மார்பில் அலை புரண்டன.

மறுபடியும் மழை.

49

றுதியில் ஒரு வழியாய்த் தன் அறைக்குத் திரும்பினாள் லாரா. ஹோவார்டைக் கூப்பிட்டாள், "உங்களைத் தூக்கத்தில் எழுப்பி விட்டேனோ?"

"இல்லை." என்றான் அவன் தூக்கக் கலக்கத்துடன். "எப்போதுமே நான் விடிகாலை நாலு மணிக்கு எழுந்து கொள்கிறவன்தான். அங்கே எப்படி இருக்கிறது?"

பிலிப்புக்கும் தனக்கும் நடந்ததையெல்லாம் அவனிடம் கொட்ட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால் சொல்லவில்லை. "ஒன்றும் விசேஷமில்லை.

"நாளை நான் மிலானுக்குப் போகிறேன்."

"என்ன? மிலானில் நமக்கு என்ன வேலை?"

‘வேலையா இல்லை! நிறைய இருக்கிறது’ என்று மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டாள் லாரா.

"தான் அனுப்பிருந்த செய்திகளையெல்லாம் பார்த்தாயா?"

அவற்றை அவள் மறந்தே போய் விட்டாள். குற்ற உணர்வுடன், "இன்னும் பார்க்கவில்லை." என்றாள்.

"காஸினோ விஷயமாகப் பல வகையான வதந்திகள் கிளம்பியிருக்கின்றன, லாரா."

"என்னவாம்?"

"நாம் ஏலம் எடுத்த முறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் பல புகார்கள்."

"சரி, கவலைப்படாதீர்கள். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பால் மார்ட்டின் பார்த்துக் கொள்வார்."

"நீங்கள் எஜமானி. நான் என்ன சொல்ல முடியும்?"

"நம் விமானத்தை மிலானுக்கு அனுப்பி விடுங்கள். விமான தளத்தில் பைலட்டுகளை இருக்க சொல்லுங்கள். அங்கே பேசிக் கொள்கிறேன்."

"சரி, வந்து..."

"பேசாமல் படுத்துத் தூங்குங்கள்."

அதே விடிகாலை நாலு மணிக்குப் பால் மார்ட்டின் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தார். இதுவரை லாராவின் சொந்த போனுக்குப் பல முறை கூப்பிட்டாகி விட்டது. எதற்கும் பதிலில்லை. முன்னெல்லாம் வெளியூர் போனால் அவருக்குச் சொல்வது வழக்கம்.

இப்போது என்ன நேர்ந்திருக்கிறது?

லாரா என்ன மர்மமான வேலையில் ஈடுபட்டிருக்கிறாள்?

‘லாரா கண்ணே, ஜாக்கிரதையாக இரு. ரொம்ப ஜாக்கிரதையாக இரம்மா’ என்று தன்னுள் உறுமிக் கொண்டார் பால் மார்ட்டின்.

மிலான் நகரை அடைந்ததும் லாராவும் பிலிப்பும் ஆன்டிக்ஸ் எலிகண்டா என்ற வசதியான சிறிய ஒட்டலில் தங்கினார்கள். பன்னிரண்டே அறைகள்தான் அங்கு இருந்தன. காலை நேரம் பூரா அறைக்குள் படுக்கையிலேயே கிடந்தார்கள். பிற்பகல் ஏரிக்கரைக்குக் காரில் சென்று ஏரிக்கரை ஓட்டலில் உணவு அருந்தி அன்று இரவு இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. அபராஜஹவுஸ் தியேட்டரின் பின்னறையில் வழக்கம் போல் ரசிகர்கள் பிலிப்பை மொய்த்துக் கொண்டார்கள்.

அவர்கள் பிலிப்பைச் சூழ்ந்து கொள்வதையும் தொட்டுப் பார்த்து மகிழ்வதையும் ஆட்டோகிராப் வாங்கிக் கொள்வதையும் சிறு பரிசுகள் வழங்குவதையும் பார்த்தவாறு அறையரின் ஓரமாக நின்றிருந்தாள் லாரா...

அவள் உள்ளத்தில் பொறாமை கத்தி போல் குத்தியது. பிலிப்பைச் சூழ்ந்திருந்தவர்களில் சில அழகான, இளமையான பெண்கள் இருந்தார்கள். எல்லோருமே பிலிப்பைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ள முயலுவதாக அவளுக்குத் தோன்றியது.

ஒயிலான உடையணிந்திருந்த ஓர் அமெரிக்கப் பெண் கொஞ்சலாக, "மிஸ்டர் பிலிப், நாளைக்கு நீங்கள் ஒழிவாக இருப்பீர்களா? இருந்தால் என் மாளிகையில் உங்களுக்கு ஒர் அந்தரங்கமான விருந்து தர விரும்புகிறேன். ரொம்ப அந்தரங்கமான விருந்து." என்றாள்.

‘சிறுக்கி! இவள் கழுத்தை முறிக்க வேண்டும்!’ என்று லாராவுக்குத் தோன்றியது.

பிலிப் புன்னகையுடன், "வந்து... ரொம்ப நன்றி. நாளை எனக்கு வேலை இருக்கிறது" என்றான்.

இன்னொரு பெண் தனது ஓட்டல் அறையின் சாவியைப் பிலிப்பின் கையில் திணிக்க முயன்று கொண்டிருந்தாள். அவன் தலையசைத்து மறுத்தான்.

மேலும் மேலும் பெண்கள் அவனைச் சுற்றிக் கொண்டார்கள். லாராவைப் பார்த்து அவன் சிரித்தான்.

இத்தாலிய மொழியில் பல பெண்கள் பலவிதமாக அவனிடம் கொஞ்சினார்கள். அவர்கள் மொழியிலேயே அவனும் மரியாதையுடன் பதிலளித்தான்.

இதற்கு முடிவே இராது போலிருக்கிறது என்று லாரா எண்ணியபோது அவன் அவர்களை விலக்கிக் கொண்டு அவளிடம் வந்து "இங்கிருந்து கிளம்பி விடலாம்." என்றான்.

"சந்தோஷமாய்." என்று இத்தாலிய மொழியில் கூறிச் சிரித்தாள் அவள்.

இசை மண்டபத்தை ஒட்டி இருந்த ரெஸ்டாரண்டுக்கு அவர்கள் சென்றார்கள். இசை நிகழ்ச்சிக்காக வேண்டி, கறுப்பு டைகட்டிக் கொண்டு வந்திருந்த பல ரசிகர்கள் அங்கே கூடியிருந்தனர். அத்தனை பேரும் இவர்கள் நுழைந்து வினாடியே எழுந்து நின்று கரகோஷம் செய்யத் தொடங்கினார்கள். ரெஸ்டாரண்ட் நிர்வாகி அவர்களை அறை மத்தியிலிருந்த மேஜைக்கு அழைத்துச் சென்றார், "இங்கே, தாங்கள் வந்தது எங்களுக்குப் பெரும் கெளரவம், மிஸ்டர் பிலிப்." என்றார்.

ஒட்டல் நிர்வாகத்தினர் தங்களது அன்பளிப்பாக, ஷாம்பேய்ன் ஒரு புட்டி அனுப்பியிருந்தார்கள். பரஸ்பரம் வாழ்த்துக்கள் சொல்லி அவர்கள் அருந்தினார்கள்.

"நம்முடைய நல்வாழ்வுக்காக." என்றான் பிலிப் உணர்ச்சியுடன்.

"நம்முடைய நல்வாழ்வுக்காக," என்று திருப்பிச் சொன்னாள் அவள்.

அந்த ரெஸ்டாரண்ட்டின் சிறப்பு ஐட்டங்களை வரவழைத்தான் பிலிப். சாப்பிடும் நேரம் மொத்தமும் அவர்கள் பேசிக் கொண்டேயிருந்தார்கள். காலம் காலமாக ஒருவரையொருவர் அறிந்திருந்தவர்கள் போலப் பேசிக் கொண்டார்கள்.

நடு நடுவே யாராவது வந்து இடைஞ்சல் கொடுத்த படியே இருந்தார்கள். பிலிப்பைப் பாராட்டுவதும் ஆட்டோகிராப் கேட்பதுமாக.

"எப்பவுமே இப்படித்தான், இல்லை?" என்று லாரா கேட்டாள்.

பிலிப் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். "இந்தத் துறையே இப்படித்தான். மேடையில் இரண்டு மணி நேரம் செலவழிந்ததென்றால், அதைப் போல் பல மடங்கு ஆட்டோகிராப் போடுவதிலும் பேட்டிகள் கொடுப்பதிலும் செலவழியும்." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் ஒருவர் வந்து ஆட்டோகிராப் வாங்கிச் சென்றார்.

"இந்தப் பயணம் எனக்கு அற்புதமாக அமைந்து விட்டது. காரணம் நீதான்." என்று பிலிப் பெருமூச்சு விட்டான். "ஒரு கெட்ட செய்தி: நாளை நான் வெனிசுக்குப் போக வேண்டும். நீ இல்லாமல் வெறிச் சென்றிருக்கும்."

"நானும் வெனிசுக்குப் போனதேயில்லை." என்றாள் லாரா, தானும் வருகிறேன் என்றாள்...

மிலான் நகரத்தின் விமான நிலையத்தில் லாராவின் சொந்த விமானம் காத்திருந்தது.

பிலிப் அந்தப் பிரம்மாண்டமான ஜெட் விமானத்தைப் பார்த்துப் பிரமித்துப் போனான். "இது உன்னுடைய விமானமா?"

"ஆமாம். இதில்தான் நாம் வெனிசுக்குப் போகப் போகிறோம்." என்றாள் லாரா.

"அம்மணி, என்னை ரொம்பச் செல்லம் கொடுத்துக் கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறது."

"அது தான் என் நோக்கம்," என்றாள் லாரா மென்மையாக.

முப்பத்தைந்து நிமிடங்களில் அவர்கள் வெனிஸ் விமான நிலையத்தை அடைந்தார்கள். அங்கே ஒரு சொகுசுக் கார் காத்திருந்தது. அவர்களைப் படகுத் துறைக்கு அழைத்துச் சென்றது அது. அங்கிருந்து ஒரு மோட்டார்ப் படகில் கைடெக்கா தீவை அடைந்தார்கள். அங்கேதான் ஸுப்ரியானி என்ற பெரிய ஓட்டல் இருந்தது.

"நமக்காக இரண்டு தனித்தனிஸ்ட்டுகள் ஏற்பாடு செய்திருக்கிறேன் - யாரும் தப்பாக நினைக்க வேண்டா மென்று." என்றாள் லாரா.

மோட்டார்ப் படகில் செல்லும் போது லாரா கேட்டாள்: "இங்கே எத்தனை நாள் இருக்கப் போகிறோம்?"

"ஒரே ஓர் இரவுதான். இசை நிகழ்ச்சி முடிந்ததும் தாம் வியன்னாவுக்குப் போகிறோம்."

அந்த ‘நாம்’ அவளுள் பரவசம் ஏற்படுத்தியது. "எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் நீ என்னுடன் தங்கியிருக்கலாம்" என்று அவன் சொல்லியிருந்தான். "ஆனால் உனக்கு எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருக்குமே? அதெல்லாம் என்னால் கெட்டு விடாது?"

"இதைக் காட்டிலும் முக்கியமான வேலை எனக்குக் கிடையாது." என்றாள் லாரா.

"பிற்பகல் நீ தனியாக இருப்பாயா? நான் ஒத்திகை பார்க்க வேண்டும். பிஸியாக இருப்பேன்."

"ஒ, அதனாலென்ன?" என்று லாரா உறுதி கூறினாள்.

ஒட்டலில் ஸ்யூட்டை அடைந்ததும் பிலிப் அவளை அணைத்துக் கொண்டான். "நான் தியேட்டருக்குப் போக வேண்டும். நீ ஊர் சுற்றிப் பார். வெனிஸ் ரொம்ப அழகான ஊர். நான் சாயந்தரம் வந்து பார்க்கிறேன்."

அவர்கள் முத்தமிட்டுக் கொண்டார்கள். சுருக்கமான முத்தமாக ஆரம்பித்தது, நீண்ட, ஆழமான முத்தமாக முடிந்தது.

"நான் சீக்கிரம் புறப்பட வேண்டும்." என்று மெதுவே சொன்னான் அவன். "இல்லாவிட்டால் ஒத்திகையைச் சரிவரக் கவனிக்க முடியாமல் போய்விடும்."

"எல்லாம் ஜம்மென்று நடக்கும்." என்று வாழ்த்தினாள் லாரா.

பிலிப் புறப்பட்டுச் சென்றான். ஹோவார்டுக்குப் போன் செய்தாள் லாரா.

"எங்கே இருக்கிறாய் நீ?" என்று இரைந்தான் ஹோவார்டு. "உன்னை எங்கெல்லாமோ தேடிக் கொண்டிருக்கிறேன்."

"வெனிசில் இருக்கிறேன்."

சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு: "வெனிசிலா? கால்வாய் ஏதாவது வாங்கப் போகிறாயா?"

"அதுதான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்." என்று லாரா சிரித்தாள்.

"நீ இங்கே இருந்திருக்க வேண்டியவள்." என்றான் அவன். என்னவெல்லாமோ நடந்து கொண்டிருக்கிறது. ப்ராங்க் ரோஸ் சில புதிய பிளான்கள் கொண்டு வந்து காட்டினான். எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் உன் அங்கீகாரம் இல்லாமல்..."

லாரா குறுக்கிட்டு, "உங்களுக்குப் பிடித்திருந்தால் வேலையை முடிக்க வேண்டியதுதானே?" என்றாள்.

"நீ பார்க்க வேண்டாமா?" ஹோவார்டின் குரலில் வியப்பு தொனித்தது.

"இப்போது வேண்டாம், ஹோவார்டு."

"ஆல்ரைட், அந்த வெஸ்ட்ஸைடு மனை விஷயம் பேரம் நடந்து கொண்டிருக்கிறது. நீ ஓகே சொல்ல வேண்டும்."

"சரி, இதோ ஓகே சொல்லிவிட்டேன். அப்புறம்?"

"லாரா, உனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே?"

"இந்த அளவுக்கு ஜோராய் நான் என்றைக்குமே இருந்ததில்லை."

"எப்போது ஊருக்குத் திரும்பப் போகிறாய்?"

"தெரியாது. அடிக்கடி போன் பண்ணுகிறேன். குட் பை ஹோவார்டு."

தெய்வத் தச்சன் சிருஷ்டித்த மாயாலோகம்போல் இருந்தது வெனிஸ்.

அன்று காலை பூராவும் மாலை மொத்தமும் கரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் லாரா. அரண்மனைகளுக்கும் மணிக் கூண்டுகளுக்கும் சதுக்கங்களுக்கும் விஜயம் செய்தாள். மக்கள் கூட்டம் அலைமோதும் வீதிகளின் வழியே நடந்தாள். வளைந்து செல்லும் சின்னத் தெருக்களில் சென்றாள். அங்கே நகைக் கடைகளும் தோல் பொருள் கடைகளும் ரெஸ்டாரண்டுகளும் மண்டிக் கிடந்தன. தனது அலுவலகத்தில் உள்ளே ஊழியர்களுக்காக விலையுயர்ந்த ஸ்வெட்டர்களும் ஸ்கார்ப்களும் உள்ளாடைகளும் வாங்கினாள். ஹோவார்டுக்கும் வேறு சிலருக்கும் டைகளும் கைப்பைகளும் வாங்கினாள்.

ஒரு நகைக் கடையில் நுழைந்து பிலிப்புக்காக உயர் ரகத் சைக்கடிகாரம் தங்கப் பட்டையுடன் வாங்கினாள்.

"இதிலே பிலிப்புக்குக் காதலுடன் லாரா"‘ என்று பொறித்துக் கொடுங்கள், என்றாள். அதைச் சொல்லும் போது அருகில் அவன் இல்லாதது வேதனை தந்தது.

மாலையில் பிலிப் ஓட்டலுக்குத் திரும்பி வந்ததும் இருவரும் தோட்டத்தில் அமர்ந்து காப்பி அருந்தினார்கள்.

லாரா பிலிப்பின் முகத்தை நோக்கினாள்.

‘இதுவே என் தேனிலவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று அவள் உள்ளம் ஏங்கியது.

50

"உங்களுக்காக ஒரு பரிசு வாங்கி வந்திருக்கிறேன்." என்று சொல்லி, அந்தக் கைக்கடியாரம் அடங்கிய பெட்டியைப் பிலிப்பிடம் தந்தாள் லாரா.

அவன் திறந்து பார்த்தான். வைத்த கண் எடுக்காமல் வெறித்து நோக்கினான். "அம்மாடி! இது எக்கச்சக்கமான விலை இருக்கும் போலிருக்கிறதே? இவ்வளவு நீ செலவழிக்கக் கூடாது, லாரா."

"உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, பிடிக்க வில்லையா?"

"சே, சே, ரொம்பப் பிடித்திருக்கிறது. எவ்வளவு அழகான வாட்ச்! ஆனால்..."

"ச்சூ! கையில் கட்டிக் கொள்ளுங்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் என் ஞாபகம் வரவேண்டும்."

"உன் ஞாபகம் வருவதற்கு இது தேவையில்லை, ரொம்ப தாங்க்ஸ்."

"இசை நிகழ்ச்சிக்கு எத்தனை மணிக்குப் புறப்பட வேண்டும்?"

"ஏழு மணிக்கு."

பிலிப்பின் புதிய கடியாரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். "அப்படியனால் இரண்டு மணி நேரம் கிடைத்திருக்கிறது." என்றாள்.

இசை நிகழ்ச்சி நடைபெறும் தியேட்டர் நிரம்பி வழிந்தது. கூட்டத்தினர் ஒரே ஆரவாரமாக இருந்தார்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் கைதட்டி வாய்விட்டுப் பாராட்டுத் தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் பிலிப் இருந்த பின்னறைக்குச் சென்றாள் லாரா. லண்டனையும் மிலானையும் ஆம்ஸ்டர்டாமையும் போலவே இங்கும் ரசிகர் கூட்டம்.

பெண்கள் இன்னும் ஆர்வமாகப் பிலிப்பின் மேலே விழுந்து மொய்த்தார்கள். அவர்களிலும் ஐந்தாறு பெண்கள் ரொம்ப அழகாக இருப்பதைக் கண்டாள் லாரா. நான் மட்டும் இல்லையென்றால் இன்றிரவை இவர்களில் எந்தப் பெண்ணுடன் கழிப்பாரோ இவர்?" என்று தன்னுள் எண்ணிக் கொண்டாள்...

மறுநாள் ஓட்டலில் சாப்பிட அமர்ந்தபோது, ஒட்டலின் அதிபரான ஸிப்ரியானோவே நேரில் வந்து அவர்களை உபசரித்தார். "நீங்கள் வந்ததில் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா சார்?" என்றவர், லாராவிடமும் ரொம்ப மகிழ்ச்சி மேடம், என்றார். பிறகு அவர்களைப் பிரத்தியேகமான இடத்துக்கு அழைத்துச் சென்று அமர்த்தினார்.

அந்த ஓட்டலின் சிறப்பு ஐட்டங்களை வர வழைத்தான் பிலிப், "உலகத்திலேயே இந்த மாதிரி நீர் சாப்பிட்டிருக்க மாட்டாய்." என்றான்.

ஆனால் பிற்பாடு நினைத்துப் பார்த்தபோது அன்று பகலும் இரவும் என்ன சாப்பிட்டோம் என்பதே அவனுக்கு நினைவு வரவில்லை. லாராதான் நினைவில் நிறைந்திருந்தாள். அவள் மீது தனக்குத் தீவிரமான காதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான். அந்த எண்ணம் அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று நினைத்துக் கொண்டான். இது நடவாது. நான் ஒரு நாடோடி.

எனினும், அவன் நியூயார்க்கிற்குக் கிளம்பப் போகும் நேரத்தை நினைக்கவே வெறுப்பாயிருந்தது. அவனை விட்டுப் பிரிந்து சென்று விடுவாளோ...

அந்த மாலைப் பொழுது எவ்வளவு நீடிக்க முடியுமோ அவ்வளவு நீடிக்கவேண்டும் என்று விரும்பினான்.

சாப்பிட்டு முடிந்தபோது, "லிடோ என்ற இடத்தில் ஒரு காஸினோ இருக்கிறது. உனக்கு சூதாட்டம் பிடிக்குமா?" என்றான்.

லாரா குபீரென்று சிரித்தாள்.

"நான் அப்படி என்ன வேடிக்கையாய்ச் சொல்லி விட்டேன்?"

தன்னுடைய கட்டிடங்களுக்காகக் கோடி கோடியான டாலர்களை வைத்துச் சூதாடிக் கொண்டிருப்பது அவளுக்கு ஞாபகம் வந்தது. "ஒன்றுமில்லை. போகலாம், வாருங்கள்." என்றாள்.

லிடோ தீவுக்கு மோட்டார்ப் படகில் அவர்கள் சென்றார்கள். எக்ஸல்ஸியர் காஸினோ இருந்த பெரிய வெள்ளைக் கட்டிடத்தை அடைந்தார்கள். ஏராளமான பேர் ஆசையுடன் சூதாடிக் கொண்டிருந்தார்கள் அங்கே...

"பாவம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைக் கனவு." என்றான் பிலிப்.

சூதாட்டச் சக்கரத்தில் அவன் விளையாடினான். அரை மணி நேரத்துக்குள் இரண்டாயிரம் டாலர் கிடைத்து விட்டது. லாராவிடம், "இவ்வளவு தொகை நான் ஜெயித்ததே கிடையாது. எல்லாம் உன் ராசி." என்றான்.

விடிகாலை மூன்று மணி வரை அங்கே விளையாடினார்கள். பசி எடுத்தது. மோட்டார்ப் படகில் திரும்பினார்கள்.

"இங்கே ஒரு ரெஸ்ட்டாரண்ட் இருக்கிறது. அங்கே ஒரு விசேஷம்." என்றான் பிலிப்.

"என்ன?"

"ஒயின் சிறப்பாக இருக்கும். அத்துடன் பலவகை தின்பண்டங்கள் வெடுக் வெடுக்கென்று கடிக்கலாம்."

சாப்பிட்டுவிட்டுத் தங்கள் ஓட்டலை அடைந்தபோது பொழுது விடிந்து விட்டது. வெடுக் வெடுக்கென்று கடிக்கலாம், என்று அவன் சொன்னதை நினைத்துச் சிரித்தபடியே படுக்கையில் சாய்ந்தாள் லாரா.

மறுநாள் காலை அவர்கள் வியன்னாவை அடைந்தார்கள்.

"என் அம்மாவும் அப்பாவும் இந்த ஊரில்தான் பிறந்தார்கள். பழங்காலத்தைப் பற்றி அவர்கள் பேசும் போது எனக்குப் பொறாமையாக இருக்கும்." என்றான் பிலிப். சின்னக் குழந்தை தன் பொக்கிஷங்களைக் காட்டுகிற மாதிரி மகிழ்ச்சியில் துள்ளினான் அவன், "நாளை பூரா எனக்கு வேலை கிடையாது. உனக்கு நகரைச் சுற்றிக் காட்டப் போகிறேன்." என்றான்.

"ஆமாம், வெற்று வாக்குறுதிகள்." என்று லாரா சிணுங்கினாள், பொய்க் கோபத்துடன்.

அன்றைய இரவும் பிலிப்பின் இசை நிகழ்ச்சி மிக வெற்றியாக அமைந்தது. வழக்கம்போலப் பெண்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு பாராட்டினார்கள். இம்முறை ஜெர்மனி மொழியில்.

வாக்களித்தபடியே அவளை மறுநாள் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றான் பிலிப். அன்று பகல் பூரா சுற்றித் திரிந்த பின், "டான்யூப் நதியில் உல்லாசப் படகில் செல்லலாமா?" என்றான்.

"ஓ," என்றாள் அவள் ஆனந்தத்துடன்.

அந்த இரவு மிக இனிமையாக இருந்தது. வசந்த காலத்தின் தென்றல் மெல்ல வீசியது. வானில் முழு நிலவு ஜொலித்தது. அவர்களைப் பார்த்துச் சிரித்தன.

"அந்த நட்சத்திரங்கள் எல்லாம் எங்களைப் பார்த்துத் தான் சிரிக்கின்றன. காரணம் நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம்." என்று லாரா நினைத்துக் கொண்டாள்.

உல்லாசப் படகின் ஒலிபெருக்கிகள் ‘ப்ளூ டான்யூப்’ என்ற பாட்டை மெதுவாய் இசைத்துக் கொண்டிருந்தன.

தொலைவில் வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்து விழுவதை இருவரும் கண்டார்கள்.

"சீக்கிரம், சீக்கிரம்! ஏதாவது ஒன்று வேண்டிக் கொள். நட்சத்திரம் விழும்போது வேண்டிக் கொண்டால் அந்த ஆசை நிறைவேறும்." என்றான் பிலிப்.

லாரா கண்களைக் மூடிக் கொண்டாள். ஒரு நிமிடம் மெளனமாக இருந்தாள்.

"என்ன, வேண்டிக் கொண்டாயா?"

"ஆமாம்."

"என்ன வேண்டிக் கொண்டாய்?"

அவனை நிமிர்ந்து பார்த்து, "சொல்ல மாட்டேன்." என்றாள் அவள் தீவிரமான குரலில். "வெளியே சொல்லிவிட்டால் அந்த ஆசை நிறைவேறாது என்பார்கள்."

"என் ஆசை நிறைவேற வேண்டும். நிறை வேறும்படி செய்யப் போகிறேன்..."

பிலிப் நன்றாகச் சாய்ந்து கொண்டு லாராவை நோக்கிப் புன்னகை செய்தான். "எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது இப்போது!"

"எப்போதுமே நாம் இப்படியே இருக்க முடியும், பிலிப்."

"என்ன சொல்கிறாய்?"

"நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்கிறேன்."

திக்கென்றது அவனுக்கு.

சென்ற சில நாட்களாக அவன் மனத்தை அரித்துக் கொண்டிருந்த விஷயம் வந்து விட்டது - வெளிப் படையாகவே வந்துவிட்டது.

அவளிடம் தனக்கு ஆழமான காதல் இருப்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால் அவளை மணப்பதாக வாக்குக் கொடுப்பது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்திருந்தான்.

"லாரா, அது நடவாத காரியம்."

"ஏன்? ஏன்?"

"முன்பே உனக்குச் சொல்லியிருக்கிறேனே, டார்லிங். எப்போதும் ஊர் ஊராய்ச் சுற்றுகிறவன் நான். நீயும் என்கூட எல்லா நேரமும் பிரயாணம் பண்ணிக் கொண்டிருக்க முடியுமா?"

"முடியாதுதான்." என்றாள் லாரா.

"ஆனால்..."

"அதனால்தான் சொல்கிறேன். கல்யாணமெல்லாம் சரிப்பட்டு வராது. நாளைக்குப் பாரிஸ் போகிறோம், இல்லையா? அங்கு உனக்கு விளக்கமாய்ச் சொல்கிறேன்."

"நான் பாரிசுக்கு வரப்போவதில்லை, பிலிப்."

அவள் சொன்னது சரியாகக் காதில் விழவில்லையோ என்று நினைத்தான் அவன். "என்ன... என்ன சொன்னாய்?"

லாரா ஆழ்ந்த பெருமூச்சுடன் சொன்னாள்: "நான் உங்களை இனிமேல் பார்க்கப் போவதில்லை."

அடி வயிற்றில் குத்துப்பட்ட மாதிரி இருந்தது அவனுக்கு. "ஏன் லாரா, நான் உன்னைக் காதலிக்கிறேன். நான்..."

"நானும் உங்களைக் காதலிக்கிறேன். ஆனால் கும்பலில் ஒருத்தியாக இருக்க என்னால் முடியாது. உங்களுடைய விசிறிகளில் ஒருத்தியாக, உங்களைத் துரத்திக் கொண்டு பின்னால் வருகிறவனாக இருக்க என்னால் இயலாது. நீங்கள் வேண்டுமானால் அந்தப் பெண்களுடனேயே இருந்து கொள்ளுங்கள்."

"லாரா, எனக்கு அவர்களெல்லாம் வேண்டாம். நீதான் வேண்டும். நான் சொல்வதைக் கேள், டார்லிங். நமக்குக் கல்யாணம் என்பதெல்லாம் நடைபெறாத விஷயம். நம் இரண்டு பேருக்குமே தனித்தனியான வாழ்க்கை இருக்கிறது. இரண்டு பேருக்குமே முக்கியமான வாழ்க்கை. நாம் எப்போதும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று எனக்கும் ஆசைதான். ஆனால் அது சாத்தியமில்லை..."

"இதுதான் உங்கள் முடிவு, அப்படித்தானே?" என்று இறுக்கமான குரலில் கேட்டாள் லாரா. "இனி உங்களைப் பார்க்க மாட்டேன், பிலிப்."

"இரு, இரு. கொஞ்சம் பொறுமையாக இரு, லாரா, சாவகாசமாகப் பேசலாம். உன் அறைக்குப் போய்..."

"வேண்டாம், பிலிப். நான் உங்களை மிகவும் காதலிக்கிறேன். ஆனால் இந்த மாதிரி நீடிக்கத் தயாராயில்லை. எல்லாம் முடிந்துவிட்டது, பிலிப், முடிந்து விட்டது."

"முடிவதற்கு நான் விடமாட்டேன்." என்றான் அவன் பிடிவாதமாக "உன் மனசை மாற்றிக் கொள்."

"ஸாரி. என்னால் முடியாது. ஒன்று திருமணம், இல்லாவிட்டால் எதுவும் இல்லை."

ஓட்டலுக்குத் திரும்பினார்கள். வழியெங்கும் அவர்கள் பேசிக் கொள்ளவேயில்லை. முன் ஹாலை அடைந்தபோது பிலிப், "நான் உன் அறைக்கு வருகிறேனே, லாரா? அதைப் பற்றிப் பேசுவோம்..." என்றான்.

"வேண்டாம். இனிமேல் பேசுவதற்கு எதுவும் இல்லை."

லிப்டில் அவள் மறைவதைப் பார்த்தவாறு நின்றிருந்தான் பிலிப்.

லாரா தன் ஸ்யூட்டுக்குள் நுழைந்தபோது டெல்போன் மணி அடித்துக் கொண்டிருந்தது. அவசரமாக எடுத்தாள். "பிலிப்?"

"நான் ஹோவார்டு பேசுகிறேன். காலையிலிருந்து உன்னைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்."

லாராவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதை மறைத்துக் கொண்டு "ஏதாவது விசேஷமா?" என்றாள்.

"ஒன்றுமில்லை, சும்மா நீ எப்படி இருக்கிறாய் என்று விசாரிப்பதற்காகக் கூப்பிட்டேன். இங்கே ஏகப்பட்ட வேலை நடந்து கொண்டிருக்கிறது. எப்போது தான் திரும்பி வருவதாக உனக்கு உத்தேசம்?"

"நாளைக்கு," என்றாள் லாரா. "நியூயார்க்கிற்கு நான் திரும்பி விடுவேன்."

சொல்லிவிட்டு மெதுவாக போனைத் திரும்ப வைத்தாள். பிறகு போனையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

‘மணி அடிக்குமா? அடிக்கும். பிலிப் கூப்பிடுவானா?’ அவள் மனம் தவித்தது.

இரண்டு மணி நேரமாகியும் போன் நிசப்தமாகவே இருந்தது.

‘நான் செய்தது தப்பு’ லாரா வேதனையுடன் எண்ணிக் கொண்டாள். இறுதி எச்சரிக்கை மாதிரி பேசியிருக்கக் கூடாது. அவனை இழந்துவிட்டேன். கொஞ்சம் பொறுமையோடு காத்திருந்தால்... அவருடன் பாரிசுக்குப் போயிருந்தால்... பேசியிருந்தால்...

பால் மார்ட்டினின் உள்ளுணர்வு கூறியது, ஏதோ தப்பு நடந்து கொண்டிருக்கிறது. என்னிடம் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லாமல் இத்தனை நாள் லாரா வெளியூர் போனதே கிடையாது... வேண்டும் மென்றே நம்மைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறாளோ? அப்படியென்றால் அதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். வேறொருவன்...

‘இல்லை. அதற்கு இடம் கொடுக்கப் போவதில்லை.’ என்று உறுதியுடன் தீர்மானித்துக் கொண்டார் அவர்.

51

‘இனிமேல் எனக்கும் உங்களுக்கும் உறவில்லை’ என்று பிலிப்பிடம் சொன்னது தவறோ? லாரா நினைத்து நினைத்துப் புழுங்கினாள். புரண்டாள்.

பிலிப் இல்லாத ஒரு வாழ்க்கையை அவளால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. நினைக்கவே வேதனை பொங்கியது. ஆனால் எத்தனை நாளைக்குத்தான் இந்த நிலைமையை நீடிக்கவிடுவது?

‘நான் அவருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அவர் எனக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். திருமணம்தான் அதற்கு வழி’ என்று எண்ணிக் கொண்டாள்.

நாளைக்கு நியூயார்க் திரும்ப வேண்டியதுதான்...

அவள் சோபாவில் படுத்திருந்தாள், உடைகளைக் கூடக் களையவில்லை. அருகிலேயே இருந்தது போன். தேகத்திலிருந்து ரத்தம் மொத்தமும் வடிந்துவிட்ட மாதிரி தோன்றியது. இனி தூங்கவே முடியாது என்று எண்ணினாள்.

இருந்தும் இறுதியில் தூங்கிப்போனாள்.

அங்கே பிலிப் தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் உலவிக் கொண்டிருந்தான், கூண்டில் அடைபட்ட பிராணி போல். அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. லாரா மீதும், தன் மீதும், லாராவை இனி பார்க்கவே முடியாதா? அவளைத் தன் கைகளில் அணைக்கவே முடியாதா? அந்த எண்ணத்தையே அவனால் தாள முடியவில்லை. ‘பெண்ணினமே ஒழியட்டும்!’ என்று நினைத்தான். தனது அம்மாவும் அப்பாவும் செய்திருந்த எச்சரிக்கை ஞாபகம் வந்தது, ‘சங்கீதம்தான் உன் வாழ்க்கை. தலை சிறந்த இசை மேதையாக வர வேண்டுமானால் மனசில் வேறெதற்கும் இடம் கொடுக்காதே."

அந்த எச்சரிக்கையால் அவனுக்குத் தீவிர நம்பிக்கை இருந்தது. லாராவைச் சந்திக்கும் வரையில்.

சே! அவளுடன் எவ்வளவு இன்பமாகப் பொழுது கழிந்தது. ஏன்தான் அதை நாசமாக்க அவள் விரும்பு கிறாளோ?

அவள் மீது அளவற்ற காதல்... ஆனால் அவளை மணப்பது ஊகூம்... ஊகூம்...

லாராவுக்கு விழிப்புக் கண்டது. டெலிபோன் மணி அடித்ததே காரணம். தூக்கக் கலக்கத்துடன் சோபாவில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். சுவரில் இருந்த கடியாரத்தை பார்த்தாள்.

காலை ஐந்து மணி.

நித்திரை தெளியாமல் போனை எடுத்தாள். "ஹோவார்டா?" என்று கேட்டான்.

இல்லை. கூப்பிட்டது பிலிப்.

"லாரா, பாரிஸில் நம் திருமணத்தை வைத்துக் கொள்ளலாமா? என்ன சொல்கிறாய்?" என்றான்.

பிலிப் - லாரா திருமணம் உலகம் பூரா தலைப்புச் செய்தியாகப் பரவியது.

ஹோவார்டு அந்தச் செய்தியைக் கேட்டதும் குடித்தான், குடித்தான், குடித்துக் கொண்டேயிருந்தான். தன்னைத்தானே குடியில் மூழ்கடித்துக் கொண்டான். அவன் அப்படிச் செய்தது வாழ்க்கையில் அதுதான் முதல் முறை.

பிலிப்பிடம் லாராவுக்கு ஏற்பட்டுள்ள மோகம் கொஞ்ச நாளில் மறைந்துவிடும் என்று அவன் நம்பியிருந்தான். "லாராவும் நானும் ஒரே ஜோடி... ஒருவருக்கொருவர் சொந்தம்... யாரும் எங்களுக்குக் குறுக்கே வர முடியாது.’ என்றெல்லாம் நினைத்திருந்தான். அது பொய்யாகி விட்டது.

இரண்டு நாட்களுக்குக் குடித்த வண்ணமே இருந்தான். பிறகு அறிவு தெளிந்ததும் பாரிசில் இருந்த லாராவைப் போனில் கூப்பிட்டான்.

"நான் கேள்விப்பட்டது உண்மையானால், பிலிப்பிடம் உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டக்காரர் அவர் தான் என்று நான் சொன்னதாகச் சொல்லு." என்றான்.

"நீங்கள் கேட்டது உண்மைதான்." என்றாள் லாரா. அவள் குரலில் உற்சாகம் துள்ளியது.

"ரொம்பச் சந்தோஷமாய் இருக்கிறாய் போலிருக்கிறதே?"

"வாழ்க்கையில் இதைவிடச் சந்தோஷமாக நான் இருந்ததேயில்லை."

"நான்... வந்து... நீ சந்தோஷமாக இருப்பதில் எனக்கும் சந்தோஷம், எப்போது ஊர் திரும்புகிறாய்?"

"பிலிப்புக்கு நாளை லண்டனில் நிகழ்ச்சி இருக்கிறது. அது முடிந்ததும் நாங்கள் நியூயார்க் திரும்பி விடுவோம்."

"இந்தக் கல்யாணத்தைப் பற்றிப் பால் மார்ட்டினுக்கு முன்கூட்டியே தெரிவித்தாயா?"

அவள் தயங்கினாற்போல் சொன்னாள்: "இல்லை"

"இப்போதாவது சொல்ல வேண்டாமா?"

"ஆமாம். நிச்சயமாய்." என்றாள் லாரா. ஏற்கெனவே அந்த விஷயம் அவள் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது. அதை எதிர்நோக்க அவளுக்கே தைரியம் ஏற்படவில்லை. தன் திருமணச் செய்தியைப் பால் மார்ட்டின் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று குழப்பமாக இருந்தது அவளுக்கு.

"அங்கே வந்ததும் அவரிடம் பேசிக் கொள்கிறேன்." என்றாள்.

"சீக்கிரம் வந்தால் எனக்கு சந்தோஷம். நீ இல்லாமல் வெறிச் சென்றிருக்கிறது." என்றான் ஹோவார்டு.

"எனக்கும் அப்படித்தான் இருக்கிறது, ஹோவார்டு." என்றாள் அவள். உண்மையும் அதுதான். அருமையான நண்பர் ஹோவார்டு. எப்போதும் அவளிடம் அன்பும் விசுவாசமும் உள்ளவர்... அவர் மட்டும் இல்லயென்றால் நான் என்ன ஆகியிருப்பேனோ!’ என்று எண்ணிக் கொண்டாள்.

நியூயார்க்கின் லாகார்டியா விமான தளத்தில் லாராவின் விமானம் இறங்கியபோது, பத்திரிகைக் காரர்கள் அத்தனை பேரும் கூடியிருந்தார்கள். டெலிவிஷன் காமெராக்கள்... நிருபர்கள்...

விமான தளத்தின் மானேஜர் அவளையும் பிலிப்பையும் வரவேற்று தனி அறைக்கு அழைத்துச் சென்றார். "நீங்கள் விரும்பினால் இப்படியே பின்பக்க வழியாய வெளியேற ஏற்பாடு செய்கிறேன்." என்றார்.

லாரா பிலிப்பை நோக்கிச் சொன்னாள்: "அவர்களைப் பார்த்துப் பேசுவோம். அத்துடன் ஒருவழியாய் முடிந்துவிடும். இல்லாவிட்டால் நம்மை நிம்மதியாக, இருக்க விடமாட்டார்கள்."

"நீ சொன்னால் சரி."

இரண்டு மணி நேரத்துக்கு அவளைக் குடைந்தெடுத்தார்கள் நிருபர்கள்.

"நீங்கள் இருவரும் முதன் முதல் சந்தித்தது எங்கே?"

"எப்போதுமே உங்களுக்குச் சாஸ்திரீய சங்கீதத்தில் ஆசை உண்டா, மிஸஸ் பிலிப்?"

"ஒருவரையொருவர் எத்தனை காலமாகத் தெரியும்?"

"நீங்கள் நியூயார்க்கிலேதான் தங்கியிருக்கப் போகிறீர்களா?"

"மிஸ்டர் பிலிப், இனிமேல் உங்கள் சுற்றுப் பயணங்கள் குறைந்துவிடுமா?"

இப்படியே கேள்விகள். கடைசியில் ஒருவாறு கூட்டம் முடிந்தது.

வெளியே இரண்டு படகுக் கார்கள் காத்திருந்தன. இரண்டாவது கார், அவர்களுடைய லக்கேஜ்களுக்காக.

"இப்படி ஆடம்பரமாகப் பிரயாணம் செய்து எனக்குப் பழக்கமில்லை." என்றான் பிலிப்.

லாரா சிரித்தாள், "சீக்கிரமே பழகிவிடும்."

காரில் போய்க் கொண்டிருந்த போது பிலிப் கேட்டான்; "நாம் எங்கே போகிறோம்? ஐம்பத்தேழாவது தெருவில் எனக்கு ஓர் அபார்ட்மெண்ட் இருக்கிறது."

"என்னுடைய வீடு இன்னும் வசதியாக இருக்கும், டார்லிங். வந்து பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பொருள்களை எடுத்து வந்துவிடலாம்."

காமேரான் பிளாஸாவை அவர்கள் அடைந்தார்கள். அந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தை ஏற இறங்கப் பார்த்தான் பிலிப். பிரமித்தான்.

"உன் சொந்தக் கட்டிடமா இது?"

"எனக்கும் சில பாங்குகளுக்கும்."

"அசந்து போய்விட்டேன்."

அவன் கையை அழுத்தினாள் லாரா. "இந்த இடம் உங்களைக் கவர வேண்டும் என்பது தான் என் ஆசை."

முன்னறை புத்தம் புதிய பூக்களால் ஜோடிக்கப் பட்டிருந்தது. அவர்களை வரவேற்பதற்காக அரை டஜன் சிப்பந்திகள் காத்திருந்தார்கள்.

"நல்வரவு மிஸஸ் பிலிப், மிஸ்டர் பிலிப்."

பிலிப் சுற்றுமுற்றும் பார்த்தான். "அடேங்கம்மா! இந்த இடம் உன்னுடையதா?"

"நம்முடையது என்று சொல்லுங்கள்." என்று கொஞ்சலாகச் சொன்னாள் லாரா.

லிஃப்டில் மேல் மாடியை அடைந்தார்கள். நாற்பத்தைந்தாவது ஃப்ளோர் மொத்தமும் லாராவின் ஜாகைதான். பட்லர் கதவைத் திறந்தான்.

"வணக்கம் மிஸஸ் பிலிப்." என்றான்.

"தாங்க், ஸிம்ஸ்."

சிப்பந்திகள் அனைவரையும் அழைத்துப் பிலிப்பிற்கு அறிமுகப்படுத்தினாள். பிறகு வீட்டைச் சுற்றிக் காட்டினாள். வெள்ளை வெளேரென்று பெரிய வரவேற்பறை: அது நிறையப் புராதனக் கலைப் பொருள்கள்; ஒட்டினாற்போல் பரந்த மொட்டை மாடி; சாப்பாட்டு அறை, பிரம்மாண்டமான மூன்று படுக்கை அறைகள், சிப்பந்திகளுக்கு மூன்று சிறிய படுக்கை அறைகள். ஒரு சமையலறை, நூலகம், அலுவலகம்.

"இந்த இடம் உங்களுக்கு வசதியாக இருக்குமா டார்லிங்?" என்றாள் லாரா.

பிலிப் கிண்டலாகச் சிரித்து, "கொஞ்சம் சின்னது தான், பரவாயில்லை. சமாளித்துக் கொள்கிறேன்." என்றான்.

வரவேற்பறையின் நடுவே அழகிய பியானோ ஒன்று இருந்தது. பிலிப் அதனருகில் சென்று விரல்களை ஒட்டினான்.

"அற்புதமாக இருக்கிறது." என்றான்

லாரா அவன் பக்கத்தில் சென்று, "இது உங்களுக்கு என் கல்யாணப் பரிசு." என்றாள்.

"நிஜமாகவா?" அவன் நெகிழ்ந்து போனான். பியானோ எதிரில் உட்கார்ந்து இசைக்கத் தொடங்கினான்.

"உங்களுக்காகவே சுருதி கூட்டி வைக்கச் சொன்னேன்." பிலிப்பின் பியானோ இசை அறையெங்கும் வெள்ளமாகப் பெருகியது. "உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"

"ரொம்ப லாரா, ரொம்ப தாங்க் யூ."

"எவ்வளவு நேரம் ஆசையோ அவ்வளவு நேரம் வாசிக்கலாம்."

பிலிப் எழுந்து கொண்டான், "என் மானேஜர் வில்லியமுக்குப் போன் செய்ய வேண்டும். என்னைத் தேடிக் கொண்டிருப்பார்."

"லைப்ரரியில் டெலிபோன் இருக்கிறது, டார்லிங்."

அறைக்குள் சென்று, டெலிபோன் ‘கால்’ களைப் பதிவு செய்யும் கருவியைப் பார்த்தாள் - யார் யார் கூப்பிட்டார்கள் என்று. பால் மார்ட்டினிடமிருந்து அரை டஜன் ‘கால்’ கள் பதிவாகியிருந்தன. ‘லாரா நீ எங்கே இருக்கிறாய் டார்லிங்’ லாரா, நீ வெளிநாடு போயிருகிறாயா? இங்கே இருந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்குமே... ‘லாரா உன்னைப் பற்றி எனக்குக் கவலையாக இருக்கிறது. வந்ததும் எனக்கு போன் போடு.

பிறகு தொனி மாறியது. ‘உன் கல்யாணம் பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டேன், அது உண்மையா? நாம் பேச வேண்டும்...’

அந்தப் பேச்சைக் கேட்டபடி, பிலிப் அறைக்குள் வந்திருந்தான்.

"யார் லாரா அந்த மர்ம மனிதன்!" என்றான்.

லாரா திரும்பினாள். "வந்து... என்னோட பழைய சினேகிதர் ஒருத்தர்..."

அவளருகே வந்து இடையை அணைத்துக் கொண்டான் பிலிப். "யாரோ எனக்குப் போட்டி ஆள் மாதிரி தோன்றுகிறதே."

லாரா மென்மையாகச் சொன்னாள். "இந்த உலகத்தில் உங்களுக்குப் போட்டி யாருமே கிடையாது. நான் காதலித்த, காதலிக்கிற ஒரே மனிதர் நீங்கள்தான்." என்றாள்.

"ஆம். அதுதான் உண்மை." என்று மனத்துக்குள் எண்ணிக்கொண்டாள்.

பிலிப் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான், "எனக்கும் அப்படித்தான், லாரா. நான் காதலிக்கும் பெண் உலகத்திலேயே நீ ஒருத்திதான்."

அன்று பிற்பகல் பிலிப் பியானோ இசைத்துக் கொண்டிருந்தான். லாரா தன் அலுவலக அறைக்குச் சென்று பால் மார்ட்டி னுக்குப் போன் செய்தாள்.

பால் மார்ட்டின் உடனே பேசினார். "நீ திரும்பிவிட்டாய் போலிருக்கிறது?" என்றபோது அவர் குரலில் வெப்பம் தெறித்தது.

"ஆமாம்," என்றாள் அவள். அவருடன் என்ன பேசப் போகிறோம் என்று ஏற்கெனவே அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

"உன்னைப் பற்றிய செய்தி... உண்மையில் எனக்குப் பெரிய அதிர்ச்சி."

"ஸாரி, பால்… நான்... அது... திடீரென்று நிகழ்ந்து விட்டது."

"ஆமாம், ஆமாம், அப்படித் தான் இருந்திருக்கும்."

"ஆமாம்..." அவருடைய உணர்ச்சிகள் என்ன என்பதை ஊகிக்க முயன்றாள் அவள்.

"நமக்குள்ளே ரொம்ப நெருக்கமான உறவு இருப்பதாக நினைத்திருந்தேன். ரொம்ப ஸ்பெஷல் உறவு என்று எண்ணினேன்..."

"அப்படித்தான் இருந்தது பால். ஆனால்..."

"சரி, அதைப் பற்றி நாம் சாவகாசமாகப் பேசலாம்."

"நல்லது. நான்..."

"நாளை - பகல் உணவுக்கு விட்டெல்லோ ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வா. சரியாய் ஒரு மணிக்கு." கட்டளையாக ஒலித்தது பாலின் குரல்.

லாரா சிறிது தயங்கினாள். பால் மார்ட்டினை மேலும் மேலும் பகைத்துக் கொள்வது முட்டாள்தனம்.

"சரி, பால். நான் வந்துவிடுகிறேன்." என்றாள்.

போனைப் பட்டென்று வைத்துவிட்டார் பால். கவலை தோய்ந்த மனத்துடன் லாரா உட்கார்ந்திருந்தாள். ‘பால் எத்தனை கோபமாக இருக்கிறார் ஏதாவது செய்துவிடுவாரோ?’

மறுநாள் காலை லாரா ஸென்ட்டர் கட்டிட வேலை நடைபெறும் இடத்தை அடைந்தபோது அங்கே வேலை செய்வோர் மொத்தப் பேரும் அவளைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

"அருமையான விஷயம், மேடம்."

"எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம்."

"நீங்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..."

ஒவ்வொருவரும் வாழ்த்தினார்கள்.

லாரா தன் அறையை அடைந்த போது ஹோவார்டு காத்திருந்தான். அவளைப் பிரியத்துடன் தழுவிக் கொண்டான். "சாஸ்திரீய சங்கீதத்தில் நாட்டமே இல்லாத ஒரு பெண்பிள்ளை அவ்வளவு பெரிய சங்கீதக் காரனை மடக்கியது ஆச்சரியம்தான்." என்றான்.

லாரா புன்னகை செய்து, "ஆமாம்," என்றாள்.

"உன்னை இனி மிஸஸ். பிலிப் என்று கூப்பிட வேண்டும். அது பழகுவதற்குக் கொஞ்ச நாளாகும்."

லாராவின் புன்னகை தேய்ந்தது. ‘பிஸினஸ் காரணங்களை முன்னிட்டு, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் லாரா கேமரான் என்றே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன், இல்லையா?"

"எதுவானாலும் உன் இஷ்டம். நீ திரும்பி வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம், ஏகப்பட்ட வேலைகள் குவிந்து கிடக்கின்றன."

அவன் எதிரில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள் எலாரா. "ஒ.கே., என்னென்ன சமாசாரம், சொல்லுங்கள்."

"நல்லது. அந்த வெஸ்ட்ஸைட் ஒட்டல் விஷயம் நஷ்டத்தில் முடியும் என்று தோன்றுகிறது. டெக்ஸாஸ் காரர் ஒருவருக்கு அதை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தோம். நேற்று அந்த இடத்தைப் போய்ப் பார்க்கிறேன். சகிக்க முடியாமல் இருக்கிறது. வர்ணமெல்லாம் போய்விட்டது. மறுபடி சரி செய்ய வேண்டும். அதற்கு மட்டும் ஐம்பது அறுபது லட்சம் செலவாகும்."

"அந்த டெக்ஸாஸ்காரருக்கு இடத்தைக் காட்டியாகி விட்டதா?"

"இன்னும் இல்லை. நாளைக்குக் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறேன்."

"அடுத்த வாரம் காட்டுவதாகச் சொல்லிவிடுங்கள். பெயிண்ட் அடிக்கும் ஆட்கள் சில பேரை அமர்த்தி, பளபளவென்று கண்ணாடி மாதிரி பண்ணுங்கள். அந்த டெக்ஸாஸ்காரர் வரும் சமயம் பார்த்து முன்பகுதியில் ஒரு கூட்டம் இருக்கிற மாதிரி ஏற்பாடு செய்யுங்கள்."

52

ன்னென்ன வேலைகள் காத்திருக்கின்றன என்று லாராவுக்கு ஹோவார்டு விவரித்தான்.

"ப்ராங்க் ரோஸ் சில புதிய பிளான்களை வரைந்து எடுத்து வந்திருக்கிறார். நீங்கள் பார்க்க வேண்டுமாம். என் அறையில் காத்திருக்கிறார்."

"பார்த்தால் போயிற்று. அப்புறம்...?"

"நம்முடைய புதிய கட்டிடத்தை எடுத்துக் கொள்வதாக மிட்லண்ட் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் சொல்லியிருந்தார்கள். இல்லையா?"

"ஆமாம்."

"அவர்கள் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவில்லை. கொஞ்சம் ஜகா வாங்குகிற மாதிரி தோன்றுகிறது."

லாரா அதைக் குறித்து வைத்துக் கொண்டாள்.

"அவர்களுடன் நான் பேசுகிறேன், நெக்ஸ்ட்?"

"நமது புதிய திட்டத்துக்குக் கோதாம் பாங்க்கில் ஏழரை கோடி டாலர் தருவதாகச் சொல்லியிருந்தார்கள்."

"இப்போது கையை விரிக்கிறார்கள். ஏற்கெனவே நமக்கு நிறையக் கடன் கொடுத்துவிட்டார்களாம்."

"எவ்வளவு வட்டி தருகிறோம் இப்போது?"

"பதினேழு பர்ஸென்ட்."

"அவர்களுடன் நான் பேசுவதற்கு ஏற்பாடு பண்ணுங்கள். இருபது பர்சென்ட் தருகிறோம் என்று அவர்களிடம் சொல்கிறேன்."

"என்னது!" அவளை அதிர்ச்சியுடன் நோக்கினான் ஹோவார்டு, "இருபது பர்பென்ட்டா? ஐயோ, யாருமே இருபது பர்ஸென்ட் வட்டி தருவது கிடையாது."

"பதினேழு பர்பென்ட் கொடுத்து இறந்து போவதைக் காட்டிலும், இருபது பர்பென்ட் கொடுத்து உயிரோடு இருப்பதையே நான் விரும்புகிறேன். நான் சொன்னபடி செய்யுங்கள் ஹோவார்டு."

"ஆல்ரைட்."

இவ்வாறு அன்றைய காலைப் பொழுது விறு விறுப்பாகச் சென்றது. பன்னிரண்டரை மணிக்கு லாரா எழுந்து கொண்டாள். "பால் மார்ட்டினுடன் சாப்பிடப் போகிறேன்."

ஹோவார்டின் முகத்தில் கவலை தென்பட்டது. "ஜாக்கிரதையாக இரு. உன்னையே சாப்பிட்டு விடப் போகிறான்."

"என்ன சொல்கிறீர்கள்?"!

"அவன் ஸிஸிலி நாட்டுக்காரன், அவர்கள் மன்னிப்பதுமில்லை, மறப்பதுமில்லை."

"நீங்கள் ரொம்பக் கற்பனை செய்து கொள்கிறீர்கள். பால் எனக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார்."

"நீ சொல்கிறபடி இருந்தால் சரி." என்றான் ஹோவார்டு.

வாக்களித்திருந்த வண்ணம் லாரா ரெஸ்ட்டாரண்டுக்குச் சென்றபோது அங்கே பால் மார்ட்டின் காத்திருந்தார். சற்றே மெலிந்திருந்தார். களைத்துச் சலித்திருந்த மாதிரி இருந்தது தோற்றம். சரியான தூக்கம் இல்லையோ என்னவோ, கண்களின் கீழே கருவளையம் காணப்பட்டது.

"ஹலோ லாரா," என்றாரே தவிர, எழுந்து கொண்டு வரவேற்கவில்லை.

"பால்..." அவருக்கு எதிர்ப்புறமாக உட்கார்ந்து கொண்டாள் அவள்.

"உனக்குப் போன் பண்ணிய போது முட்டாள் தனமாகக் கொஞ்சம் பேசியிருந்தேன். அதெல்லாம் பதிவாகியிருக்கும். இல்லையா? ஸாரி. நீ... வந்து..." தோள்களைக் குலுக்கிக் கொண்டார்.

"உங்களுக்கு என் திருமணம் பற்றி நான் தெரிவித்திருக்கவேண்டும், பால். என்னவோ எல்லாம் வெகு வேகமாக நடந்துவிட்டது."

"ஆமாம், ஆமாம்," என்றவர் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். "பிரமாதமாக இருக்கிறாய்."

"தாங்க் யூ."

"பிலிப்பை எங்கே சந்தித்தாய்?"

"லண்டனில்."

"உடனே உனக்குக் காதல் ஏற்பட்டு விட்டது! அப்படித்தானே?" பால் மார்ட்டின் குரலில் ஒரு கசப்பு அழுத்தமாகத் தென்பட்டது.

"பால்... உங்களுக்கும் எனக்கும் இருந்த உறவு ரொம்ப அற்புதமானதுதான். ஆனால் எனக்கு அது போதவில்லை. அதற்கு மேலாகவும் ஏதோ ஒன்று எனக்குத் தேவைப் பட்டது. ஒவ்வோர் இரவும் நான் வீடு திரும்பும்போது எனக்காக ஒருவர் காத்திருக்க வேண்டும் என்று தோன்றியது..."

அவளையே பார்த்தபடி மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.

"இந்த உலகத்தில் உங்களுக்கு வருத்தம் ஏற்படும்படி, நான் எதுவுமே செய்ய மாட்டேன். ஆனால் இது... இது எப்படியோ நடந்து விட்டது." என்றாள் லாரா.

அதற்கும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. "தயவு பண்ணி என்னை புரிந்து கொள்ளுங்கள்."

"நிச்சயமாய்." ஒரு சோகமான புன்னகை அவர் முகத்தில் தோன்றி மறைந்தது. "எல்லாம் என் இஷ்டப் படிதான் நடக்க வேண்டுமென்று நினைக்க எனக்கு உரிமை ஏது லாரா? நடந்தது நடந்து விட்டது. பத்திரிகையில் படித்தபோது, டெலிவிஷனில் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நாம் இருவரும் ரொம்ப நெருக்கம் என்று எண்ணியிருந்தேன்."

"உண்மை," என்று மீண்டும் சொன்னாள் லாரா, "உங்களுக்கு நான் முன்பே சொல்லியிருக்க வேண்டும்."

அவர் கையை முன்புறம் நீட்டி அவள் கன்னத்தை வருடினார். "நான் உன்னிடம் பைத்தியமாக இருந்தேன், லாரா. இப்போதும் அப்படித்தான். நீ என் காதல் தேவதை. இந்த உலகத்தில் நீ எது ஆசைப்பட்டாலும் நான் தருவேன் - திருமண மோதிரம் ஒன்றைத் தவிர. எங்கிருந்தாலும் நீ நன்றாக இருக்க வேண்டும், லாரா. எனக்கு உன் மீதுள்ள அன்பு குறையாது."

ஒரு நிம்மதி அலைபோலப் பரவியது அவள் உள்ளத்தில். "தாங்க் யூ, பால்." என்றாள்.

"உன் கணவரை நான் எப்போது பார்க்கலாம்?"

"அடுத்த வாரம் எங்கள் நண்பர்களுக்காக ஒரு பார்ட்டி கொடுக்கப் போகிறோம். நீங்கள் வருவீர்களா?"

"நிச்சயமாய் வருவேன். உன்னைக் கண்ணுக்குக் கண்ணாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உன் கணவரிடம் நான் சொன்னதாகச் சொல்லு. இல்லா விட்டால் அவர் எனக்கு ஜவாப் சொல்ல வேண்டியிருக்கும்."

லாரா புன்னகை செய்தாள். "சொல்கிறேன்."

அலுவலகத்துத் திரும்பி வந்துபோது ஹோவார்டு காத்திருந்தான்.

"எல்லாம் நல்லபடி இருந்ததா?" என்று கேட்டான், கவலையுடன்.

"அருமையாய். நீங்கள் பாலைப் பற்றி சொன்னது தப்பு. அற்புதமாய் நடந்து கொண்டார் என்னிடம்."

"நல்லது. என் நினைப்புத் தப்பாகப் போனது பற்றி எனக்குச் சந்தோஷம்தான். சரி, நீ நாளைய தினம் பிஸினஸ் விஷயமாய்ச் சிலரைச் சந்திக்க வேண்டும்."

"ரத்து செய்து விடுங்கள்," என்றாள் லாரா, "நாளைக்கு நான் என் கணவருடன் வீட்டிலேயே தங்கியிருக்கப் போகிறேன். அடுத்த சில நாட்களுக்கு நாங்கள் தேனிலவு செல்கிறோம்."

"நீ சந்தோஷமாயிருந்தால் எனக்கும் சந்தோஷம்."

"என் சந்தோசத்தைப் பற்றி எனக்கே பயமாபயிருக்கிறது, ஹோவார்டு. திடீரென்று விழித்துக் கொண்டு இவ்வளவும் கனவுதான் என்று ஆகிவிடுமோ எனப் பயப்படுகிறேன். இத்தனை சந்தோஷமாக ஒருவர் இருக்க முடியும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை."

அவன் புன்னகை செய்தான். "நல்லது. நாளைய வேலைகளை நானே பார்த்துக் கொள்கிறேன்."

"தாங்க் யூ." என்று கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். "அடுத்த வாரம் நானும் பிலிப்பும் ஒரு பார்ட்டி கொடுக்கிறோம். அதற்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும்."

அடுத்த சனிக்கிழமை லாராவின் ஜாகையில் பார்ட்டி நடைபெற்றது.

வகை வகையான பஃபே, நூற்றுக்கு மேற்பட்ட விருந்தாளிகள் வந்திருந்தனர். தன் தொழிலுக்குத் தொடர்புள்ள ஆண்கள், பெண்கள் அனைவரையும் லாரா அழைத்திருந்தாள். பாங்குக்காரர்கள், கட்டிட நிபுணர்கள், ஆர்க்கிடெக்டுகள், நகரசபை உறுப்பினர்கள், வட்டார கமிஷனர்கள், தொழிலாளர் யூனியன் தலைவர்கள் - இப்படிப் பலர்.

பிலிப் தனது இசையுலக நண்பர்களைக் கூப்பிட்டிருந்தான். சங்கீதக் கலைஞர்களும், இசைக்கலைப் புரவலர்களும் பலர் வந்திருந்தார்கள்.

இரண்டு பிரிவினரும் ஒருவருக்கொருவர் சம்பந்த மில்லாதவர்கள். எனவே பார்ட்டி கோரமாக அமைந்தது.

இரு பிரிவுகளும் கலந்து உரையாடத்தான் நினைத்தார்கள்.

ஆனால் இருவருக்கும் பொதுவான அம்சம் எதுவுமில்லை. ஆர்க்கிடெக்டுகளும், கட்டிட நிபுணர்களும் தங்கள் துறையில்தான் ஆர்வமாக இருந்தார்கள், சங்கீதக்காரர்களோ இசையைப் பற்றியும் சாகித்திய கர்த்தாக்களைப் பற்றியே பேசினார்கள்.

நகரசபைக் கமிஷனரை ஒரு சங்கீத நிபுணர் குழுவிடம் அறிமுகம் செய்து வைத்தாள். லாரா. எந்த இசை மேதையாரிடம் என்ன விசேடம் இருந்தது என்பதைப் பற்றியே சங்கீதக்காரர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கமிஷனர் கொஞ்சம் நேரம் பார்த்துவிட்டு வேகமாக நகர்ந்து விட்டார்.

பிலிப்பின் இசையுலகச் சினேகிதர்கள் சிலரை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் லாரா.

"குடித்தனம் வரவிருக்கிறவர்களிடம் முதலிலேயே முப்பத்தைந்து பர்சென்ட் வாங்கிவிட வேண்டும்," என்று ஒருவர் சொல்ல, மற்றவர், "என்னைக் கேட்டால் அது முட்டாள்தனமான கொள்கை என்பேன்." என்றார்.

இன்னொருவர், "அதனால்தான் நான் வீடுகள் கட்டுவதை விட்டுவிட்டு ஒட்டல் கட்டுவதில் இறங்கி விட்டேன். ஒரு சேதி தெரியுமோ? இப்போது ஓட்டல்களில் ஒரு அறைக்கு ஒரு நாளைக்கு இருநூறு டாலர் வாங்குகிறார்கள்." என்றார்.

சங்கீதக்காரர்கள் நகர்ந்து விட்டார்கள்.

குழப்பக் கூத்தாக அமைந்தது அந்தப் பார்ட்டி. ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழியில் பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. சுவாரஸ்யமான பல நிகழ்ச்சிகளைப் பற்றி அவர்கள் பேசினார்கள். ஆனால் ஒரு குழுவின் பேச்சு இன்னொரு குழுவுக்கு விளங்கதவை.

பால் மார்ட்டின் தனியாகவே வந்தார், வேகமாக வாசலுக்கே சென்று அவரை வரவேற்றாள் லாரா, "நீங்கள் வந்ததில் ரொம்பச் சந்தோஷம், பால்."

"வராமல் இருப்பேனா" என்றவர் சுற்று முற்றும் பார்த்து "நான் பிலிப்பைப் பார்க்க வேண்டும்." என்றார்.

பிலிப் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். பால் மார்ட்டினை அவனிடம் அழைத்துப் போனாள் லாரா. "பிலிப், இவர் என் பழைய நண்பர் - பால் மார்ட்டின்."

பிலிப் தன் கையை நீட்டி, "மிக்க மகிழ்ச்சி." என்றான்.

இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

"நீங்கள் அதிர்ஷ்டக்காரர் மிஸ்டர் பிலிப். லாரா அபாரமான பெண்." என்றார் பால் மார்ட்டின்.

"எனக்குச் சொல்லவே தேவையில்லை." என்றான் பிலிப், "நான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன் என்பது எனக்கே தெரியும்."

பால் மார்ட்டின் அவனைக் கூர்ந்து நோக்கி, "ஒ, அப்படியா?" என்றார்.

திடீரென அங்கு ஒரு வெப்பம் முளைப்பதை லாரா உணர்ந்தாள். பால் மார்ட்டினிடம், "உங்களுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன்." என்றாள்.

"தாங்க்ஸ். வேண்டாம். நான் குடிப்பதில்லை, உனக்கு மறந்து விட்டதா?"

சில விருந்தினர்களிடம் பால் மார்ட்டினை அறிமுகம் செய்து வைத்தாள். அவர்களில் ஒருவர், "நாளைக்கு லியானின் பியானோ நிகழ்ச்சி இருக்கிறது. கட்டாயம் போக வேண்டும்." என்றார் பால் மார்ட்டினிடம். "நீங்கள் அவர் பியானோ கச்சேரி கேட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார்.

"இல்லை."

"அற்புதமாய் வாசிப்பார் - அதுவும் இடது கையாலேயே."

பால் மார்ட்டினுக்குக் குழப்பம் ஏற்பட்டது. "ஏன் அப்படி வாசிக்க வேண்டும்?"

"பத்து வருடங்களுக்கு முன், பாரிச வாயுவில் அவருடைய வலது கை செயலிழந்து விட்டது."

"ஆனால் ஒற்றைக் கையால் எப்படி பியானோ வாசிக்க முடியும்?"

"இடது கையால் வாசிப்பவர்களுக்காகவே சில. இசை அமைப்பாளர்கள் இசை அமைத்திருக்கிறார்கள், உதாரணமாக..."

சில விருந்தினர்கள் பிலிப்பைப் பியானோ வாசிக்கும்படி கேட்டார்கள்.

"நல்லது. என் புது மனைவிக்காக," என்று கூறிப் பியானோவின் முன்னே அமர்ந்து இசைக்கத் தொடங்கினான் அவன். அறை நிசப்தத்தில் ஆழ்ந்தது. மாடியெங்கும் தவழ்ந்த அந்த மோகன கீதம் அனைவரையும் மாய வலையில் கட்டிப் போட்டது.

அவன் எழுந்து கொண்டபோது பலமான கரகோஷம்.

ஒரு மணி நேரத்தில் பார்ட்டி முடிந்தது. கடைசி விருந்தினரை வழியனுப்பிய பிறகு பிலிப் சொன்னான்: "சட்! என்ன பார்ட்டி!"

"இந்த மாதிரி பார்ட்டியை இனி பத்து வருஷத்துக்கு ஒருமுறை வைத்துக் கொள்வோம்." என்றாள் லாரா.

"பிலிப், வந்திருந்த விருந்தாளிகள் இரண்டு வெவ்வேறு உலகத்தைச் சேர்ந்தவர்கள், அதனால்தான் இப்படி..."

"பரவாயில்லை. நமக்கென்று ஒர் உலகம் இருக்கிறது. அங்கே போகலாம் வா." என்று அவளை முத்தமிட்டான் பிலிப்.

அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குள் உரசல் ஏற்படும் என்று அப்போது அவள் நினைக்க வில்லை.

53

பிலிப்புடன் அதிக நேரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே அலுவலக வேலைகளைக் காலையில் வீட்டிலேயே கவனிக்கலானாள் லாரா.

"முடிந்த வரையில் நாம் சேர்த்தே இருக்க வேண்டும்." என்றாள் பிலிப்பிடம்.

வீட்டில் உதவியாக இருப்பதற்காக ஒரு செக்ரட்டரி வேண்டுமென்று கேத்தியிடம் சொல்லி வைத்திருந்தாள். அரை டஜன் பெண்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் மரியன் என்ற பெண்ணை லாராவுக்குப் பிடித்திருந்தது. இருபத்தைந்து வயது இருக்கும், பட்டுப் போன்ற அழகிய கூந்தல். கலகலப்பான சுபாவம்.

அவளுனடய படிப்புத் தகுதிகளைப் பார்த்து விட்டு, "உனக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்குமே? ஏன் இந்த செக்ரட்டரி வேலைக்கு வருகிறாய்?" என்று கேட்டாள்.

"நீங்கள் என் லட்சியப் பெண், மேடம். நீங்களாகவே முண்டி அடித்து முன்னுக்கு வந்து பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறீர்கள். உங்கள் கீழே வேலை பார்த்தால் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இந்த வேலை எனக்குக் கிடைத்தாலும் சரி. கிடைக்கா விட்டாலும் சரி, நான் உங்கள் விசிறி." என்றாள் மரியன்.

லாரா அவள் முகத்தை ஆராய்ந்தாள். "நீ இங்கே என்னுடன் வீட்டில் தங்கி வேலை பார்க்க வேண்டியிருக்கும். நான் விடிகாலையிலேயே எழுந்திருப்பவன். நீ ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வர வேண்டும்."

"அது ஒன்றும் பிரசினையில்லை. நான் வேலைக்கு அஞ்சாதவள்."

லாரா புன்னகை செய்தாள். அவளை அவளுக்குப் பிடித்துவிட்டது. "எப்படி வேலை செய்கிறாய் என்று ஒரு வாரம் பார்க்கிறேன்." என்றாள்.

அந்த வார முடிவில் லாராவுக்குத் தெரிந்து விட்டது - தானொரு மாணிக்கத்தைக் கண்டெடுத்திருக்கிறோம் என்று. திறமையும், புத்திகூர்மையும், இனிமையும் நிறைந்தவளாக இருந்தாள் மரியன். லாராவுக்கு மிகவும் வசதியாகி விட்டது. காலை வேளைகளில் வீட்டில் வேலைகளைக் கவனித்து விட்டு, பிற்பகல் அலுவலகம் செல்வது என்று வழக்கப் படுத்திக் கொண்டாள்.

ஒவ்வொரு நாளும் காலையில் பிலிப்பும் லாராவும் சேர்ந்து அமர்ந்து சிற்றுண்டி அருந்துவார்கள். பிறகு பிலிப் அத்லடிக் ஷர்ட்டும் ஜின்ஸும் அணிந்தவனாகப் பியானோவின் முன் உட்கார்ந்து இரண்டு மூன்று மணி நேரம் சாதகம் செய்வான். லாரா தன் அலுவலக அறைக்குச் சென்று மரியனிடம் கடிதங்கள் டிக்டேட் செய்வாள்.

சில சமயங்களில் பிலிப் லாராவுக்காக சில பழைய ஸ்காட்லந்து பாட்டுக்களை இசைப்பான். லாரா நெகிழ்ந்து போவாள். பின்னர் இருவரும் சேர்ந்து பகலுணவு அருந்துவார்கள்.

ஒரு நாள் பிலிப் அவளிடம், "கினேஸ் பேரில் உன்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தது சொல்லு." என்றான்.

"ஐயோ! அது பெரிய கதை. சொல்லி முடிக்கக் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் ஆகும்." என்று சிரித்தாள் லாரா.

"விளையாட்டில்லை. நிஜமாகவே தெரிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்." என்றான் அவன்.

போர்டிங் விடுதி பற்றி அவள் சொன்னாள். ஆனால் தன் தந்தையைப் பற்றிப் பேசப் பிடிக்கவில்லை. சார்லஸ் தனக்குச் செய்த உதவிகளைச் சொன்னாள்.

"எவ்வளவு நல்ல மனிதர் ஒரு நாள் நான் அவரைப் பார்க்க வேண்டும்." என்றான் அவன்.

"நிச்சயமாய்." என்றாள் லாரா. பிறகு மக்காலிஸ்ட்டரைப் பற்றிச் சொன்னாள்.

"அயோக்கிய ராஸ்கல் அவனைக் கழுத்தை நெரித்துக் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது எனக்கு." என்று கூறிய பிலிப் அவளை ஆதுரத்துடன் அனைத்துக் கொண்டான். "லாரா, இனிமேல் யாரும் உனக்கு எந்தத் தீங்கும் இழைக்கும்படி நான் விடமாட்டேன்." என்றான். அப்போது அவன் ஒரு குறிப்பிட்ட பாட்டை இசைப்பதற்குச் சாதகம் பண்ணி வந்தான். அதைப் பகுதி பகுதியாகப் பிரித்து, திரும்பத் திரும்ப வாசிப்பான். பிறகு மொத்தமாகச் சேர்த்து இசைப்பான். சிறிது நேரம் அருகில் இருந்து கேட்டு விட்டுச் செல்வாள் லாரா.

ஆரம்பத்தில் சில நாட்கள் வரையில் அவன் பியானோ வாசித்துக் கொண்டிருந்த போது அறைக்கு வந்து அவனை எங்காவது வெளியே செல்லக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

"என்ன, இந்தச் சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமையில் வாஸ் ஐலண்டுக்கு வரும்படி நம்மைக் கூப்பிட்டிருக்கிறார்கள், போகலாமா?" என்பாள். அல்லது, "ஒரு புது நாடகத்துக்கு டிக்கெட் வாங்கியிருக்கிறேன்." என்பாள்.

அல்லது. "சனிக்கிழமை இரவு ஹோவார்டு நமக்கு விருந்து தர ஏற்பாடு செய்திருக்கிறார்." என்பாள்.

முதலில் பிலிப் பொறுமையாக இருந்தான், கடைசியில், "இதோ பார் டார்லிங், நான் சாதகம் செய்து கொண்டிருக்கும்போது தயவு செய்து குறுக்கிடாதே என் கவனம் சிதறிப் போகிறது." என்றான்.

"ஸாரி," என்றாள் லாரா. "இருந்தாலும் நீங்கள் ஏன் தினம் தினம் பிராக்டிஸ் செய்ய வேண்டும் என்றுதான் எனக்குப் புரியவில்லை. இப்போது கச்சேரி ஒன்றும் கொடுக்கப் போவதில்லையே"

"இல்லை. ஆனால் கொடுக்கும்போது நன்றாய்க் கொடுக்க வேண்டும்." என்றான் பிலிப். "நீ ஒரு கட்டிடம் கட்டுகிறாய் என்று வைத்துக்கொள். அதிலே ஒரு தவறு நேர்ந்தால் திருத்திவிட முடியும். பிளான்களை மாற்றலாம். குழாய்களையோ விளக்குகளையோ வேறு விதமாக மாற்றி அமைத்து விடலாம். ஆனால் இசை நிகழ்ச்சியில் இரண்டாவது சான்ஸ் என்பதே கிடையாது. எதிரிலே கொட்டக் கொட்டக் கவனித்துக் கொண்டு ரசிகர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அங்கே ஒவ்வொரு ஸ்வரமும் சுத்தமாக விழ வேண்டும். இல்லாவிட்டால் தொலைந்தேன்."

"இப்போது புரிகிறது. ஸாரி." என்று அவள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

அவளை அணைத்துக் கொண்டான் பிலிப். "உனக்கு ஒரு பழைய ஜோக் தெரியுமா? ஒரு வயலின் வித்வான் வயலின் பெட்டியுடன் நியூயார்க்கில் போய்க் கொண்டிருந்தார். புகழ்பெற்ற இசை மன்றமான கார்னெகி ஹாலில் அவருக்கு ஒரு கச்சேரி இருந்தது. ஆனால் வழி மறந்துவிட்டது. தெருவில் போய் கொண்டிருந்த ஒருவரிடம், ‘கார்னெகி ஹாலுக்கு எப்படிப் போவது? என்று கேட்டார். அதற்கு அந்த ஆள். ‘பிராக்டிஸ் பண்ணு. நிறையப் பிராக்டிஸ் பண்ணு’ என்று சொல்லிவிட்டுப் போனானாம்.

லாரா சிரித்தாள். "சரி, நீங்கள் வாசியுங்கள். நான் தொந்தரவு செய்ய மாட்டேன்."

அலுவலக அறைக்குச் சென்று வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தபோது பிலிப்பின் பியானோ நாதம் காதில் விழும். நான் எத்தனை அதிர்ஷ்டக்காரி பிலிப் பியானோ வாசிப்பதை தான் கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான பெண்கள் என்னைப் பற்றிப் பொறாமைப்படுவார்கள்’ என்று எண்ணிக் கொண்டாள்.

இருந்தாலும் ‘இவ்வளவு அடிக்கடி பிராக்டிஸ் செய்ய வேண்டுமா?’ என்றும் அவளுக்குத் தோன்றாமலில்லை.

தாயம் உருட்டிப் போட்டு பகடையாட்டம் விளையாடுவது இருவருக்குமே பிடித்திருந்தது. இருவரும் சாப்பாடு முடிந்ததும் உட்கார்ந்து விளையாடுவார்கள். அந்தச் சந்தோஷமான கணங்களைப் பொக்கிஷம் போல் போற்றினாள் லாரா.

ரெனோவில் காஸினோவைத் திறக்கக் கொஞ்ச நாள்தான் இருந்தன. அந்த விழாவை எவ்வளவு பிரமாதமாகச் செய்ய முடியுமோ அவ்வளவு பிரமாதமாகச் செய்வதென்று ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே லாரா திட்டமிட்டிருந்தாள். விளம்பர நிர்வாகியான ஜெர்ரியைக் கூப்பிட்டுச் சொல்லியிருந்தாள்.

"உலகத்தில் மறுகோடியில் இருப்பவர்களுக்குக்கூடச் செய்தி தெரிய வேண்டும். சமையலில் டாலன்டட் ஆள் யாரோ அவரை நான் விருந்து தயாரிக்கக் கூடப்பிடப் போகிறேன். அதேபோல் ஒவ்வொரு துறையில் தலைசிறந்தவர்களை நீங்கள் வரவழைக்க வேண்டும். ஹாலிவுட்டி விருந்தும் நியூயார்க்கிலிருந்தும் வாஷிங்டனிலிருந்தும் பெரிய பெரிய புள்ளிகளைக் கூப்பிடுங்கள். திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் வர வேண்டுமென்று எல்லாரும் போட்டி போடவேண்டும்." என்று சொல்லியிருந்தாள்.

வரப் போகிற விருந்தினர்களைப் பற்றிய விவரங்கள் அன்று தயாராகிவிட்டன. அதைப் பார்வையிட்ட லாரா, "நன்றாக வேலை செய்திருக்கிறீர்கள்." என்று ஜெர்ரியைப் பாராட்டினாள். "வருவதற்கு இயலாது என்று எவ்வளவு பேர் தெரிவித்திருக்கிறார்கள்?"

"இரண்டு டஜன் இருக்கும்." என்றார் ஜெர்ரி. "அது பரவாயில்லை. நாம் அழைப்பு அனுப்பியிருந்தது அறுநூறு பேருக்காயிற்றே!"

"அப்படியானால் பரவா இல்லை." என்று எல்லாராவும் ஒப்புக் கொண்டாள்.

அன்று காலை ஹோவார்டு போன் செய்தான். "ஒரு நல்ல நியூஸ் லாரா, ஸ்விட்ஜாலந்து பாங்க்காரர்களிடமிருந்து இப்போதுதான் தகவல் வந்தது. நமது கூட்டு முயற்சியைப் பற்றி விவாதிப்பதற்காக நாளைக்கு வருகிறார்களாம்."

"நல்ல நியூஸ்! நாளைக் காலை ஒன்பது மணிக்கு என் அலுவலகத்தில் பேசலாம்." என்றாள் லாரா.

"ஏற்பாடு செய்கிறேன்."

அன்று இரவு சாப்பிடும்போது பிலிப் சொன்னான்: "லாரா, நாளைக் காலை நான் ஒரு ரெகார்ட் கொடுக்கப் போகிறேன், நீயும் வருகிறாயா?"

லாரா சிறிது தயங்கினாள். ஸ்விட்சர்லாந்திலிருந்து பாங்க்காரர்கள் வருகிறார்களே என்று நினைவுக்கு வந்தது, இருந்தாலும், "ஓ, வருகிறேன்." என்றாள்.

ஹோவார்டுக்குப் போன் செய்து "எனக்காகக் காத்திருக்காமல் நீங்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள். நான் சற்றுப் பொறுத்து வந்து சேர்ந்து கொள்கிறேன்." என்றாள்.

நகரத்தின் மறுகோடியில் ரெகார்டிங் ஸ்டூடியோ அமைந்திருந்தது. திரும்பிய இடமெல்லாம் எலெக்ட்ரானிக் சாதனங்கள் நிறைந்திருந்தன. ஒர் அறையில் நூற்றைம்பது பின்னணி வாத்தியக் கலைஞர்கள் குழுமியிருந்தார்கள். கண்ணாடித் தடுப்புக்குப் பின்னே ஏராளமான ஒலிப்பதிவு இஞ்சினியர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

ரெகார்டிங் வெகு மெதுவாக நடைபெறுகிறதென்று லாராவுக்குத் தோன்றியது. நிறுத்துவதும் மறுபடி ஆரம்பிப்பாதும், நிறுத்துவதும் மறுபடி ஆரம்பிப்பதுமாக இருந்தார்கள்.

சிறிது இடைவேளை கிடைத்தபோது ஹோவார்டுக்குப் போன் செய்தாள்.

"எங்கே இருந்து பேசுகிறாய்?" என்றான் ஷேஹாவார்டு.

"அவர்களுடன் பேச்சுக் கொடுத்துப் பிடித்து வைத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் உன்னோடுதான் பேச வேண்டும் என்கிறார்கள்."

"ஒரு மணி நேரத்தில் வந்து விடுகிறேன். பேசிக் கொண்டிருங்கள்." என்றாள்.

இரண்டு மணி நேரமாகியும் பிலிப்பின் ரெகார்டிங் முடியக் காணோம்.

மறுபடி ஹோவார்டுக்குப் போன் செய்தாள். "ஸாரி ஹோவார்டு. என்னால வரமுடியவில்லை. அவர்களை நாளைக்கு வரும்படி சொல்லுங்கள்." என்றாள்.

"என்ன அப்படித் தலை போகிற காரியம் அங்கே?" என்று ஹோவார்டு கோபித்தான்.

"என் கணவர்," என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்தாள் அவள்...

வீட்டுக்குத் திரும்புகையில் லாரா சொன்னாள்: "நாம் அடுத்த வாரம் ரெனோவுக்குப் போகிறோம்."

"ரெனோவில் என்ன?"

"என்னுடைய ஓட்டலுக்கும் காஸினோவுக்கும் திறப்பு விழா. புதன் கிழமையன்று நாம் விமானத்தில் புறப்படுவோம்."

"சரியாகப் போச்சு!" என்றான் பிலிப். அவன் குரலில் சங்கடம் தொனித்தது.

"ஏன்? என்ன விஷயம்?"

"ஸாரி டார்லிங். என்னால் வரமுடியாது."

அவனை வெறித்து நோக்கினாள் அவள். "என்ன சொல்கிறீர்கள்?"

"முன்பே உன்னிடம் சொன்னதாக ஞாபகம். திங்களன்று நான் டூர் புறப்படுகிறேன்."

"டூரா."

"ஆமாம். என் மானேஜர் ஆறு வார காலத்துக்கு நீர் ஏற்பாடு பண்ணியிருக்கிறார். முதலில் ஆஸ்திரேலியாவுக்குப் போய்."

"ஆஸ்திரேலியாவுக்கா?"

"பிறகு ஜப்பான், ஹாங்காங்."

"பிலிப், இதெல்லாம் சரியில்லை. வந்து... நான் என்ன சொல்கிறேன் என்றால், எதற்கு இந்த நீர் ஏற்பாடெல்லாம் தேவையேயில்லை. நான் உங்களோடு இருக்க வேண்டும்."

"இரேன், லாரா. என்னோடு வா, எனக்கும் சந்தோஷமாயிருக்கும்."

"என்னால் வர முடியாதென்று உங்களுக்குத் தெரியாதா? தற்சமயம் முடியாது. இங்கே ஏகப்பட்ட வேலை இருக்கிறது." என்றாள் லாரா பரிதாபமாக, "நீங்கள் என்னை விட்டுப் போகக் கூடாது."

"எனக்கு மட்டும் உன்னை விட்டுப் போகப் பிடிக்கிறதா என்ன? ஆனால், டார்லிங், கல்யாணத்துக்கு முன்பே நான் எச்சரித்தேனே, என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று."

"தெரியும். அதெல்லாம் அப்போது. இப்போது அப்படியில்லை. எல்லாம் மாறிவிட்டது."

"எதுவும் மாறவில்லை." என்றான் பிலிப் மென்மையாக. "உன்மீது எனக்குள்ள மோகம் அப்படியேதான் இருக்கிறது. உன்னைப் பிரிந்து சென்றால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்."

‘இதற்கு என்ன பதில் சொல்வது?’ லாராவுக்குத் தெரியவில்லை

54

சொன்னபடியே பிலிப் வெளி நாடுகளுக்கு ஓர் புறப்பட்டுவிட்டான். அப்படியொரு தனிமையுணர்வு லாராவுக்கு அதுவரை ஏற்பட்டதே கிடையாது. ஏதாவது ஒரு மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென்று பிலிப்பின் நினைவு வந்துவிடும், உள்ளம் உருகிப் போவாள்.

அவனுடைய இசையுலகில் அவன் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றுதான் அவளும் விரும்பினாள். ஆனால் தன்னுடனேயே அவன் இருக்க வேண்டுமென்றும் ஆசைப்பட்டாள். அவனுடன் சேர்ந்து இருந்த அற்புதமான கணங்களையும், தன் இடுப்பைத் தழுவிய அவன் கரங்களையும், அவனுடைய கதகதப்பையும் மென்மையையும் நினைத்துக் கொண்டேயிருந்தாள். இந்த அளவுக்குக் காதல் எவர் மீதும் என்றைக்குமே அவளுக்கு ஏற்பட்டதில்லை.

தினம் தினம் பிலிப் போன் செய்து பேசினான். அதில் தனிமையின் துன்பம் மேலும் அதிகரித்தது தான் மிச்சம்.

"எங்கேயரிருந்து பேசுகிறீர்கள், டார்லிங்?" என்று அவள் கேட்பாள்.

"இன்னும் டோக்யோவில்தான் இருக்கிறேன்."

"டூர் எப்படி இருக்கிறது?"

"அருமையாக இருக்கிறது. நீ என் பக்கத்தில் இல்லாதது தான் குறை."

"எனக்கும் அப்படித்தான் இருக்கிறது." என்றாள். ஆனால் எப்படி என்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை.

"பிலிப் எப்படி இருக்கிறார்?" என்று ஹோவார்டு ஒருநாள் கேட்டான்.

"நன்றாக இருக்கிறார், ஆனால் ஏன் இப்படிச் செய்கிறார், ஹோவார்டு?"

"எதைச் சொல்கிறாய்?"

"அவருடைய டூரைத்தான் சொல்கிறேன். இந்த இசை நிகழ்ச்சிகளெல்லாம் எதற்கு? அவருக்குப் பணமே தேவையில்லையே?"

"சே, சே பணத்துக்காக அவர் பியானோ வாசிக்கவில்லையே, லாரா. அதிலுள்ள ஆனந்தம்தான் அவருக்கு முக்கியம்."

பிலிப் சொல்லும் அதே வார்தைகள்தான் இவரும் சொல்கிறார். அவள் அறிவு அதைப் புரிந்து கொண்டது. இதயம் புரிந்து கொள்ளவில்லை.

பலிப்பின் மானேஜர் வில்லியம் ஒரு நாள் போனில் கூப்பிட்டாள். அவர் உள்ளூரில்தான் இருந்தார்.

"இன்று உங்களுக்கு ஒழிவாக இருக்குமா? நாம் சேர்ந்து பகலுணவு சாப்பிடலாமா?" என்றாள்.

"வேறு வேலை இருந்தால் கூட ஒத்திப் போட்டுவிட்டு வருகிறேன்." என்றார் அவர். "ஏன். ஏதாவது பிரச்னையா?"

"அதெல்லாம் ஒன்றுமில்லை, உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும்." என்றான்.

இருவரும் ஒட்டலில் சந்தித்தார்கள், சாப்பிடும்போது, வில்லியம் சொன்னார்: "உண்மையைச் சொல்கிறேன், பிலிப் கல்யாணம் செய்து கொள்வார் என்று நான் நினைக்கவே யில்லை. அவர் ஒரு பாதிரியார் மாதிரி. ஈடுபட்டிருக்கிற துறையில் ஏகப்பட்ட ஆர்வம்."

"தெரியும். லாரா தயங்கினாள், "ஆனால் ரொம்ப அதிகமாய்ப் பிரயாணம் செய்கிறார். இல்லையா?"

"என்ன சொல்கிறீர்கள்?"

"பிலிப்புக்கு இப்போது குடும்பம் இருக்கிறது. இன்னும் கூட ஊர் சுற்றிக் கொண்டிருக்க வேண்டுமா?" என்றவள்.

வில்லியமின் முகத்தில் திகைப்பு ஏற்படுவதைக் கவனித்தாள். "அதாவது, அவர் நியூயார்க்கிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. இங்கே அமெரிக்காவிலேயே பாஸ்டன், சிகாகோ, லாஸ்ஏஞ்சலஸ் முதலிய ஊர்களில் அவருக்கு நீங்கள் கச்சேரிகளை ஏற்பாடு செய்யலாமே? என்ன நான் சொல்வது? வீட்டை விட்டு வெகு தூரம் போக வேண்டாம் பாருங்கள்."

வில்லியம் வார்த்தைகனை அளந்து பேசினார்.

"பிலிப் ஒர் இசை நிகழ்ச்சிக்கு முப்பத்தையாயிரம் டாலர் வாங்குகிறார், மேடம். போன வருஷம் அவருக்கு நாற்பது வாரம் நிகழ்ச்சிகள் இருந்தன."

"புரிகிறது. ஆனால்..."

"பியானோக் கலைஞர்கள் உச்சத்துக்கு வருவதென்பது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதற்கு எவ்வளவு போராடியிருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா? உலகமெங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பியானோ வாசித்து வாசித்து விரல் தேய்ந்து எலும்பாகி விட்டது அவர்களுக்கு. ஆனால் சூப்பர் ஸ்டாராக வந்திருப்பவர்கள் நான்கைந்து பேர்தான். அவர்களில் உங்கள் கணவர் ஒருவர். இசையுலகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. போட்டி யென்றால் போட்டி, கொலைப் போட்டி. பியானோ நிகழ்ச்சிகனளப் போய்ப் பாருங்கள். பியானோக்காரர் பள பளவென்று உடை உடுத்திக் கொண்டு ஜம்மென்று இருப்பார். கொள்ளை வசதியாக இருக்கிறார் என்று தோன்றும். மேடையை விட்டு இறங்கினால் பரிதாபம்தான். வீட்டு வாடகையை எப்படிக் கொடுப்பது, அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பார்கள். தலைசிறந்த பியானோக்காரராக வருவதற்குப் பிலிப்புக்கு எவ்வளவு காலம் பிடித்தது தெரியுமா? நீங்கள் என்னடாவென்றால் அதையெல்லாம் பாழடிக்கச் சொல்கிறீர்கள்?"

"இல்லை இல்லை. நான் என்ன சொல்கிறேன் என்றால்..."

"நீங்கள் சொல்வது அவருடைய எதிர்காலத்தையே நாசம் பண்ணிவிடும். பண்ணட்டும் என்றா சொல்கிறீர்கள்?"

"அப்படிச் சொல்லவில்லை." என்றாள் லாரா.

"அவருக்கு கிடைக்கிற வருமானத்தில் பதினைந்து பர்சென்ட் உங்களுக்கு கிடைக்கிறது இல்லையா?"

"ஆமாம்."

"பிலிப்புக்குக் கச்சேரிகள் குறைவதால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வேண்டாம்." என்றாள் லாரா மெதுவாக "அந்த நஷ்டத்தை நான் உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்."

"மிஸஸ் பிலிப், இதெல்லாம் நீங்கள் பிலிப்புடன் பேச வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். நான் புறப்படுகிறேன்." என்று கூறி வில்லியம் எழுந்து விட்டார்.

பிரபல தினசரிப் பத்திரிகையில் லிஸ் ஸ்மித் என்ற நிருபர் கீழ்க் கண்டவாறு எழுதியிருந்தார்:

இரும்புப் பட்டாம்பூச்சியின் சிறகுகள்

வெட்டப்படப் போகின்றன!

ரியல் எஸ்டேட் பிஸினஸில் கொடி கட்டிப் பறக்கும் அழகிய பெண்மணியைப் பற்றி ஒரு வாழ்க்கை வரலாறு வெளிவரவிருக்கிறது. முன்பு அவரிடம் வேலை பார்த்த ஊழியரொருவர் அதை எழுதப் போகிறார். கேண்டில் லைட் பதிப்பகம் அதை வெளியரிடப் போகிறது. அதைப் பார்த்ததும் அம்மையார் என்ன குதி குதிக்க போகிறாரோ! ஏனெனில் அந்தப் புத்தகம் சுடச் சுடப் பல விஷயங்களைச் சொல்லும் என்று தெரிகிறது.

லாரா அந்தப் பத்திரிகையைக் கீழே வீசியடித்தாள்.

புத்தகம் தன்னைப் பற்றியதுதான் என்று புரிந்தது.

தான் கல்தா கொடுத்த செக்ரட்டரி ஜெர்ட் ரூட்தான் அதை எழுதுகிறாள் என்பதும் புரிந்தது.

விளம்பரம் பப்ளிபிடி முதலியவற்றைக் கவனித்துக் கொள்ளும் நிர்வாகியான ஜெர்ரியைக் கூப்பிட்டு அனுப்பினாள். "லிஸ் ஸ்மித் எழுதியிருப்பதைப் படித்தீர்களா?"

"இப்போதுதான் படித்தேன். இந்த விஷயத்தில் நாம் எதுவும் செய்யமுடியாது..."

"நாம் எல்லாம் செய்ய முடியும். என் கீழே வேலை செய்யும் ஊழியர்கள் அத்தனை பேரும், வேலையில் இருக்கும்போதும் சரி, வேலையை விட்டுப் போன பிறகும் சரி, என்னைப் பற்றி எதுவும் எழுத மாட்டோம் என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்திருக்கிறார்கள். ஆகவே, ஜெர்ட் ரூட்டுக்கு என்னைப் பற்றி எழுத எந்த உரிமையும் கிடையாது. அந்தப் பதிப்பகத்தின் மீது வழக்கு தொடர்ந்து உண்டு இல்லையென்று பண்ணிவிடுகிறேன்."

ஜெர்ரி தலை அசைந்தார். "அது நல்லதில்லை."

"ஏன்?"

"ஏனென்றால் அது தேவையில்லாத மோசமான விளம்பரத்தை ஏற்படுத்தும். பேசாமல் இப்படியே விட்டுவிட்டோமானால் சிறு சலசலப்போடு ஒய்ந்துவிடும். தடுக்கப் போனால் சூறாவளியாகிவிடும்."

லாரா அதை ஒப்புக்கொள்ளத் தயாராரில்லை. "அந்தப் பதிப்பகத்தின் சொந்தக்காரர் யார் என்று கண்டு பிடியுங்கள்." எனக் கட்டளையிட்டாள்.

கேண்டில் லைட் பதிப்பகத்தின் சொந்தக்காரர் லாரன்ஸ் என்ற ஒருவர் என்பது ஒரு மணி நேரத்துக்கெல்லாம் தெரிய வந்தது. அவருக்குப் போன் போட்டாள்.

"நான் லாரா காமெரான் பேசுகிறேன். என்னைப் பற்றி ஒரு புத்தகம் நீங்கள் வெளியிடுவதாகக் கேள்விப்பட்டேன்."

"ஓ, லிஸ் ஸ்மித் எழுதியதைப் படித்தீர்களா? ஆமாம், உண்மைதான் மேடம்"

"அதை வெளியிட்டால் என் சொந்த வாழ்க்கையில் தனலயிடுவதற்காக உங்கள் மீது வழக்குப் போடுவேன், ஜாக்கிரதை!"

மறுமுனையில் அவர் பதிலளித்தார். "உங்கள் வக்கீலிடம் இது பற்றி நீங்கள் கேட்டுக் கொள்வது நல்லது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நபர் நீங்கள், சொந்த வாழ்க்கை என்றெல்லாம் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது. ஜெர்ட் ரூட் எழுதித் தந்ததைப் படித்தோம். பல சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கிறது."

"என்னைப் பற்றி எதுவும் எழுதுவதில்லை என்று ஜெர்ட் ரூட் எனக்கு எழுதிக் கொடுத்திருக்கிறாள்."

"அதென்னவோ உங்களுக்கும் ஜெர்ட் ரூட்டுக்கும் உள்ள விவகாரம், நீங்கள் அவள் மீது வேண்டுமானால் வழக்குப் போடுங்கள்."

"ஆனால் அதற்குள் புத்தகம் வந்துவிடும்" என்று லாரா எண்ணிக் கொண்டாள். "அந்தப் புத்தகம் வெளிவரக்கூடாது, அவ்வளவுதான் சொல்வேன். வந்தால் உங்களை இரண்டிலொன்று பார்த்துவிடுவேன்."

"நீங்கள் அத்துமீறிப் பேசுகிறீர்கள். ஆகவே இத்துடன் நம் பேச்சை முடித்துக் கொள்வதுதான் நல்லது. குட் பை." டெலிபோனை வைத்துவிட்டார் லாரன்ஸ்.

என்ன தைரியம் லாரா யோசனையுடன் உட்கார்ந்திருந்தாள். பிறகு ஹோவார்டைக் கூப்பிட்டுப் பேசினாள்.

"கேண்டில் லைட் என்கிற பதிப்பகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?"

அவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். "அது ஒரு சின்ன நிறுவனம், பரபரப்பாக ஏதாவது வெளியிட்டுக்காக சம்பாதிக்கிறார்கள். மடோனாவைப் பற்றிக்கூட ஏதோ வெளியிட்டார்கள்."

"தாங்க்ஸ். நான் பார்த்துக் கொள்கிறேன்."

ஹோவார்டுக்குத் தலைவலி மண்டையைப் பிளந்தது. சமீப காலமாக அடிக்கடி இந்த மாதிரி தலைவலி வருகிறது. தூக்கமும் சரியானபடி இல்லை, வேலையிலும் நிறைய நெருக்கடிகள். வேலைகளின் வேகம் தன்னால் சமாளிக்க முடியாத அளவுக்கு இருப்பது தெரிந்தது. சிறிது நிதானமாக வேலைகள் கொடுத்தால் நன்றாயிருக்கும், அவளிடம் சொல்ல வேண்டும்.

ஒரு வேளை பசியினால் தலையை வலிக்கிறதோ? செக்ரட்டரியிடம் இன்ட்டர்காமில் பேசினான்.

"பெஸ், எனக்குச் சாப்பாடு வரவழைத்து அனுப்புகிறாயா?"

மறுமுனையில் நிசப்தம்.

"என்ன பெஸ்."

"ஜோக் பண்ணுகிறீர்களா மிஸ்டர் ஹோவார்டு?"

"ஜோக்கா? இல்லையே. ஏன்?"

"இப்பத்தானே சாப்பாடு சாப்பிட்டீர்கள்?"

ஹோவார்டுக்குச் சுருக்கென்று தைத்தது.

"உங்களுக்கு மறுபடியும் பசியாயிருந்தால்..."

"இல்லை, இல்லை." என்றான், இப்போது நினைவு வந்தது. சாப்பாட்டில் ஸாலட்டும், ஸாண்ட் விச்சும்கூட இருந்ததே. கடவுளே! தான் ஏன் இப்படி ஆகிக் கொண்டிருக்கிறேன்? என்ன ஆயிற்று எனக்கு?’

"சும்மா தமாஷ் பண்ணினேன், பெஸ்," என்று சொல்லிப் போனை வைத்தான்.

தமாஷா? தமாஷா எனக்கு நேர்ந்திருப்பது...!?

ரெனோவில் காமெரான் பாலஸ் ஓட்டலுக்கும் கேஸினோவுக்கும் திறப்பு விழா அமர்க்களமாக நடைபெற்றது. ஒட்டலில் அத்தனை அறைகளும் புக் ஆகியிருந்தன. காஸினோவில் சூதாட்டம் ஆடுகிறவர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அழைத்திருந்த பிரமுகர்களுக்கு எவ்வளவு சிறப்பாக வசதிகள் செய்து தர முடியுமோ அவ்வளவும் செய்திருந்தாள் லாரா.

எல்லாரும் வந்திருந்தார்கள்.

ஒரே ஒருவர்தான் வரவில்லை என்று வருத்தத்துடன் எண்ணிக் கொண்டாள். பிலிப்.

பிரம்மாண்டமான பூங்கொத்துடன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தான். ‘கண்ணே, நீதான் என் வாழ்க்கையின் சங்கீதம். உன்னை நினைக்காத நேரமில்லை.’ என்று எழுதியிருந்தான்.

பால் மார்ட்டின் வந்திருந்தார். நேரே லாராவிடம் வந்து, "கங்கிராஜுலேஷன்ஸ், லாரா, உனது முந்திய சாதனைகள் அத்தனையும் இதற்கு முன் நிற்காது.’ என்றார்.

"தாங்க்ஸ் பால். நீங்கள்தான் இவ்வளவுக்கும் காரணம். நீங்கள் இல்லையென்றால் என்னால் என்ன செய்திருக்க முடியும்?’

அவர் சுற்று முற்றும் பார்த்தார். "பிலிப் எங்கே?"

"அவரால் வர முடி வரவில்லை. டூரில் இருக்கிறார்."

"எங்கேயோ பியானோவைத் தட்டிக் கொண்டிருக்கிறாராக்கும்? இது எவ்வளவு முக்கியமான விழா உடன் வாழ்க்கையில் உன் பக்கத்தில் இருந்திருக்க வேண்டாமா?"

லாரா புன்னகை செய்தாள், "வர வேண்டுமென்றுதான் விரும்பினார், பாவம்."

ஒட்டல் மானேஜர் லாராவைத் தேடிக்கொண்டு வந்தார், "பிரமாதமான தினம் இன்றைக்கு! இல்லை? ஒட்டலில் எல்லா அறைகளும் அடுத்த மூன்று மாதத்துக்கு புக் ஆகிவிட்டன!" என்றார் உற்சாகமாக.

"தொடர்ந்து அப்படியே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள், டொனால்டு." என்றாள் அவள்.

"இது ஒரு தங்கச் சுரங்கம் மேடம்." என்றார் மானேஜர். நாலு பக்கமும் பார்த்துவிட்டு, "எங்கே உங்கள் கணவர்? அவரைச் சந்திக்க வேண்டுமென்று ஆனலுடன் காத்திருக்கிறேன்." என்றார்.

"அவரால் வர முடியாவில்லை." என்றாள் லாரா.

‘எங்கேயோ பியானோவைத் தட்டிக் கொண்டிருக்கிறாராக்கும்?’ என்று பால் மார்ட்டின் சொன்னது நினைவு வந்தது.

கேளிக்கை நிகழ்ச்சிகள் அருமையாக நடைபெற்றன. லாராதான் நட்சத்திரமாக விளங்கினாள்.

வந்திருந்த அத்தனை பேரும் அவளைச் சந்திக்கவும் தொட்டுப் பேசவும் விரும்பினார்கள், பத்திரிகையாளர்கள் மொத்தப் போகும் வந்திருந்தார்கள்.

டி. வி க்கும் ரேடியோவுக்கும் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்தாள்.

எல்லாமே சிறப்பாக நடந்தன.

‘உங்கள் கணவர் எங்கே?’ என்று அவர்கள் கேட்கும் வரையில்.

அவர்கள் கேட்கக் கேட்க லாராவின் தர்மசங்கடம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ‘அவர் இன்று என் அருகே இருந்திருக்கக் கூடாதா? இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்திருக்க முடியாதா?’ என்று மனத்துக்குள் எண்ணினாலும் இனிமையாகப் புன்னகை செய்தபடி, "இன்று வரமுடியாமல் போனதில் பிலிப்புக்கே ரொம்ப ஏமாற்றம், பாவம்." என்று பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

55

திறப்பு விழாவில் கேளிக்கை நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் நடனங்கள் ஆரம்பித்தன. பால் மார்ட்டின் லாராவிடம் வந்து, "நாம் ஆடுவோமா?" என்றார்.

லாரா எழுந்து அவருடன் கைகோர்த்துக் கொண்டாள்.

"இந்த ஒட்டல், காஸினோ எல்லாம் உனக்குச் சொந்த மென்று நினைக்கும்போது எப்படி இருக்கிறது?" என்று பால் மார்ட்டின் கேட்டார்.

"பிரமாதமாக இருக்கிறது. எல்லாம் நீங்கள் செய்த உதவிதான்."

"அப்புறம் எதற்குச் சினேகிதர்கள் இருக்கிறார்கள்? ளாரா, இங்கே சில சூதாட்டப் புலிகள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஜாக்கிரதையாக இரு. அவர்களில் சில பேர் கோரமாகத் தோற்கப் போகிறார்கள். ஆனால் தாங்கள்தான் ஜெயித்த மாதிரியான எண்ணம் அவர்களுக்கு ஏற்படும்படி நடந்து கொள். பெண்களை சினேகிதம் பண்ணி வை. தாங்கள் முக்கியமான புள்ளிதான் என்று அவர்கள் நினைத்துக் கொள்வதற்கு என்னவெல்லாம் பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணு."

"ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்." என்றாள் லாரா.

"ரொம்ப நாள் கழித்து உன்னை அணைத்தபடி நடனம் ஆடுவது எத்தனை சந்தோஷமாயிருக்கிறது தெரியுமா?"

"பால்..."

"புரிகிறது. உன்னைக் கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்று உன் கணவனிடம் சொன்னேனே, நினைவிருக்கிறதா?"

"அவர் அப்படி இருக்கிற மாதிரி தோன்றவில்லையே?"

"பிலிப் இங்கே வர வேண்டுமென்றுதான் விரும்பினார்." என்று கணவனுக்குப் பரிந்தாற்போலப் பேசினாள்.

அவன். அப்படிச் சொல்லும்போதே ‘உண்மையில் அவர் விரும்பினாரா?’ என்ற நினைப்புத் தோன்றியது அவளுக்குள்.

அன்று நள்ளிரவை நெருங்கும் நேரம் பிலிப் அவளை டெலிபோனில் கூப்பிட்டான். அவன் குரலைக் கேட்டதுமே அவளுடைய தனிமையுணர்வு இரட்டிப்பாகிவிட்டது.

"லாரா, நாள்பூரா உன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன், டார்லிங், திறப்பு விழா நன்றாய் நடந்ததா?"

"அற்புதமாய் நடந்தது, நீங்கள் வராததுதான் எனக்குப் பெரிய குறை."

"எனக்கும்தான், லாரா... உன்னைப் பிரிந்திருப்பது பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது."

‘இவ்வளவு பேசுகிறவர் வருவதற்கென்ன?’ என்று நினைத்துக் கொண்டாள் லாரா.

"நீங்கள் இல்லாமல் வெறிச் சென்றிருக்கிறது. சீக்கிரம் வந்துவிடுங்கள்." என்றாள்.

ஹோவார்டு லாராவின் அறைக்கு வந்தான். அவன் கையில் ஒரு பெரிய மணிலாக் காகித உறை இருந்தது.

"இது உனக்குப் பிடிக்காது." என்றான், "என்ன அது?" உறையை லாராவின் மேஜை மீது வைத்தான்.

ஹோவார்டு, "அந்தப் பெண் ஜெர்ட் ரூடின் கையெழுத்துப் பிரதியின் நகல் இது, எப்படி இது கிடைத்தது என்று மட்டும் கேட்காதே. வெளியில் தெரிந்தால் நாம் இரண்டு பேருமே ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும்."

"படித்துப் பார்த்தீர்களா?" அவன் தலையை அசைத்தான்.

"படித்தேன்."

"எப்படி இருக்கிறது?"

"நீயே படித்துப் பார். பல விஷயங்கள் அவள் சொல்லியிருக்கிறாள். அதில் சிலது நடந்த போது அவள் இங்கே வேலையிலேயே இருக்கவில்லை. நிறையத் துப்பறியும் வேலை செய்திருக்கிறாள்."

"தாங்க்ஸ் ஹோவார்டு."

அவன் வெளியே போனதும் இன்ட்டர்காமை அழுத்தினாள். "கொஞ்ச நேரத்துக்கு என்னைத் தொந்தரவு பண்ணாதே," என்று சொல்லிவிட்டு அந்தக் கையெழுத்துப் பிரதியைப் பிரித்துப் படிக்கலானாள்.

பயங்கரமாயிருந்தது. சதிகள் பல செய்து, சர்வாதிகாரம் பண்ணி எப்படி எப்படியோ முன்னுக்கு வந்த பெண்ணாக அவளைக் காட்டியது அந்தப் புத்தகம். தன் ஊழியர்களை அடாவடியாக நடத்துகிறவள் என்று வர்ணித்திருந்தது. அசிங்கமான சிறு சிறு நிகழ்ச்சிகளை விவரித்திருந்தது. அற்ப புத்தியுடன் ஜெர்ட்ரூட் எழுதியிருந்த அதில், ஒன்று மட்டும் இல்லை.

லாராவின் சுதந்திர உணர்ச்சி, துணிச்சல், திறமை, தீர்க்க தரிசனம், தாராளம் - இவை பற்றி எதுவும் இல்லை.

தொடர்ந்து படித்தாள்.

‘... இந்த இரும்புப் பட்டாம்பூச்சியின் தந்திரங்களில் ஒன்று வெளிநாட்டிலிருந்து பிஸினஸ் சம்பந்தமாகப் பேச வருபவர்களை வந்த அன்றே காலையில் சந்திப்பதாகும். அவர்கள் தூக்கக் கலக்கத்துடன் இருப்பார்கள். இவள் புத்துணர்ச்சியுடன் இருப்பாள்.’

‘... ஒரு முறை ஜப்பானிய தொழிலதிபர்கள் வந்தபோது அவர்களுக்குப் போதை மருந்து கலந்து கொடுத்தாள். தான் மட்டும் மூளைக்குச் சுறுசுறுப்பேற்றும் விட்டமின் மாத்திரைகளைக் காப்பியில் போட்டுக் கொண்டு சாப்பிட்டாள்..."

‘...ஜெர்மனியிலிருந்து வந்திருந்தவர்களுக்கும் இப்படியே தான் செய்தாள்...’

‘...க்வீன்ஸ் பகுதியில் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் எழுப்ப லாரா திட்டமிட்டிருந்தாள். ஆனால் நகர சபை அதிகாரிகள் அனுமதி மறுத்தார்கள். அவர்களிடம் தனக்கு ஒரு பெண் இருப்பதாகவும் அவளை அங்கே குடி வைக்கப் போவதாகவும் கதை விட்டு, அவர்கள் மனம் மாறும்படி செய்தாள்...’

‘... டார்செஸ்டர் அபார்ட்மெண்ட்களில் வசித்தவர்கள் காலி செய்ய மறுத்தபோது, வீடில்லாத பலரை அங்கே கொண்டுபோய் வைத்துப் பழைய குடித்தனக்காரர்கள் வெளியேறும்படி செய்தாள்...’

ஜெர்ட் ரூடின் புத்தகம் பூரா இப்படியே. எதையும் விட்டு வைக்கவில்லை.

படித்து முடித்தபின் வெகு நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தான் லாரா. பிறகு ஹோவார்டைக் கூப்பிட்டனுப்பினாள்.

"கேண்டில் லைட் பதிப்பகத்துக்குச் சொந்தக்காரரான லாரன்ஸ் ஸின்ஃபீல்டின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது. என்று விசாரித்துச் சொல்லுங்கள்." என்றாள்.

பதினைந்து நிமிடத்துக்கெல்லாம் ஹோவார்டு திரும்பி வந்தான். "அந்த ஆள் பாங்க்காரர்கள் மதிப்பில் ரொம்ப இறங்கியிருக்கிறான்." என்று தெரிவித்தான்.

"அதாவது?"

"கழுத்து வர கடன். புத்தகங்கள் ஏதோ விற்பனையாகிக் கொண்டிருப்பதால் சமாளிக்கிறான். ஒரு புத்தகம் விற்பனையாகாமல் பண்ணினால்கூட அவனும் பணால்."

"தாங்க்ஸ் ஹோவார்டு." என்று கூறிவிட்டுத் தன் வழக்கறிஞர் டெர்ரியைக் கூப்பிட்டாள்.

"டெர்ரி, நீங்கள் ஒரு பதிப்பாளராக ஆக வேண்டும். சம்மதமா?"

"என்ன, சொல்லுங்கள்"

"கேண்டில் லைட் பதிப்பகம் என்று ஒன்று இருக்கிறது, அதை உங்கள் பெயரில் வாங்கப் போகிறேன். இப்போது அது லாரன்ஸ் ஸின்ஃபீல்டு என்ற ஒருவருக்குச் சொந்தமாக இருக்கிறது."

"செய்வோம். விலை எவ்வளவு கொடுக்கப் போகிறீர்கள்?"

"ஐந்து லட்சத்துக்கு வாங்கப் பாருங்கள். அவசியம் ஏற்பட்டால் பத்து லட்சம் வரை போகலாம். ஒப்பந்தம் செய்யும்போது, அவரிடம் இருக்கும் புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகளின் உரிமை நமக்குத்தான் என்று கட்டாயமாய் ஒரு ஷரத்து இருக்கட்டும்." என்றாள் லாரா.

நகரத்தின் வர்த்தகப் பகுதியில், ஒரு பழைய கட்டிடத்தில் இருந்தது கேண்டில் லைட் பதிப்பகம், சின்ன அலுவலகம். லாரன்ஸின் அறை மட்டும் கொஞ்சம் பெரிதாக இருந்தது.

"மிஸ்டர் டெர்ரி ஹில் என்று ஒருவர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். என்று செக்ரட்டரி சொன்னதும், "உள்ளே அனுப்பு," என்றார் லாரன்ஸ்.

அவரைப் பார்க்க விரும்புவதாக அன்று காலையிலேயே போன் செய்துவிட்டு வந்திருந்தார் டெர்ரி.

"என்ன காரியம் மிஸ்டர் டெர்ரி?" என்று லாரன்ஸ் விசாரித்தார்.

"நான் ஒரு ஜெர்மன் பதிப்பக நிறுவனத்தின் பிரதிநிதி. அவர்கள் உங்கள் பதிப்பகத்தை வாங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்." என்றார் டெர்ரி.

லாரன்ஸ் சுருட்டைப் பற்ற வைத்தபடி யோசனை செய்தார். பிறகு, "என் பதிப்பகத்தை நான் விற்பதாக இல்லை." என்றார்.

"அடடா!" என்றார் டெர்ரி. "எங்கள் ஜெர்மன் நிறுவனம் அமெரிக்க மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிறது. உங்கள் பதிப்பகத்துக்கு நல்ல பெயர் என்று சொன்னார்கள்..."

"ஆமாம்! ரொம்ப அடி மட்டத்திலிருந்து இந்தப் பதிப்பகத்தை நான் வளர்த்திருக்கிறேன். இது நான் குழந்தை மாதிரி, இதை இன்னொருவரிடம் கொடுக்க எனக்கு மனமில்லை."

டெர்ரி அனுதாபம் நிறைந்த குரலில் பேசினார். "உங்கள் உணர்ச்சிகள் எனக்குப் புரிகிறது, மிஸ்டர் லாரன்ஸ், இந்தப் பதிப்பகத்துக்காக ஐந்து லட்சம் கொடுக்க நாங்கள் தயாராயிருக்கிறோம்."

சுருட்டுப் புகையில் லாரன்ஸுக்கு குபுக்கென்று புரைக்கேறியது. "ஐந்து லட்சமா? சரிதான்! இன்னும் கொஞ்ச நாளில் ஒரு புத்தகம் வெளியிடப் போகிறேன். அது ஒன்றே எனக்குப் பத்து லட்சம் சம்பாதித்துக் கொடுத்துவிடும். நீங்கள் சொல்லும் தொகை என்னை அவமானப்படுத்துகிற மாதிரி."

"இல்லை. நான் சொல்கிற தொகை உங்களுக்கு லாட்டரிப் பரிசு மாதிரி." என்றார் டெர்ரி. "நான் உங்களைப் பற்றி விசாரித்து விட்டேன். உங்களுக்குச் சொத்து எதுவும் கிடையாது. கடன் ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கிறது தெரியும். ஐந்து லட்சம் என்பதை ஆறு லட்சமாக வேண்டுமானால் உயர்த்துகிறேன். அதற்கு மேல் முடியாது."

"எனக்கு மனமே வரவில்லை. இருந்தாலும் ஆறு லட்சம் என்பதை ஏழு லட்சமாகப் பண்ணினால்."

டெர்ரி எழுந்து கொண்டார். "குட்பை மிஸ்டர் லாரன்ஸ். நான் வேறு பதிப்பகம் பார்த்துக் கொள்கிறேன்."

கதவை நோக்கி நடந்தார்.

"ஒரு நிமிஷம்," என்று லாரன்ஸ் கூப்பிட்டார். "என்ன அவசரம்? கொஞ்சம் இருங்கள். நான் ரிடையராகி ஊரோடு போக வேண்டும் என்று என் மனைவி ரொம்ப நானாய்த் தொணப்பிக் கொண்டிருக்கிறாள். அவள் ஆசையை நிறைவேற்ற இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றுகிறது..."

டெர்ரி திரும்பி வந்து உட்கார்ந்தார். பையில் தயாராக வைத்திருந்த உறையை எடுத்து நீட்டினார். "இதில் ஆறு லட்சம் டாலருக்குச் செக் இருக்கிறது. ஒப்பந்தப் பத்திரம் இதோ. குறியிட்டிருக்கிற இடங்களில் நீங்கள் கையெழுத்திட்டால் போதும்...’

அடுத்த நாள்.

ஹோவார்டிடம் வந்தாள் லாரா.

"நாம் கேண்டில் லைட் பதிப்பகத்தை விலைக்கு வாங்கியாகிவிட்டது, ஹோவார்டு."

"பிரமாதம். அதை என்ன செய்யப் போகிறோம்?"

"முதல் வேலையாக ஜெர்ட்ரூடின் புத்தகத்தை ஒரே அமுக்காக அமுக்குங்கள். அது பிரசுரமாகாதபடி செய்யுங்கள். ஒரு வேளை ஜெர்ட்ரூட் தன் புத்தக உரிமையைத் திரும்பப்ன்பெற வழக்குப் போடலாம். போடட்டும். கோர்ட்டில் ஒரு வருடத்துக்கு இழுத்தடித்தால் ஓடிவிடுவாள்."

"பிறகு பதிப்பகத்தை மூடி விடலாம் என்கிறாயா?"

"வேண்டாம், வேண்டாம். அதை யாரிடமாவது ஒப்படைத்து நடத்தச் சொல்லுங்கள். வருமான வரிக்காரர்களிடம் நஷ்டக் கணக்குக் காட்ட உபயோகமாயிருக்கும்." என்றாள் லாரா.

ஹோவார்டு தன் அறைக்குத் திரும்பி வழக்கமான வேலைகளில் ஈடுபட்டான். ஸ்டெனோவைக் கூப்பிட்டு, "ஒரு கடிதம் டிக்டேட் செய்கிறேன். குறித்துக் கொள்," என்றான், "ஜாக் ஹெல்மன், ஹில்மன் ரியல் எஸ்டேட். அன்புள்ள மிஸ்டர் ஜாக், நீங்கள் சொன்ன விஷயம் பற்றி மிஸ் லாராவுடன் பேசினேன். தற்சமயம் அந்தத் திட்டத்தில் இறங்குவது சரியாக இருக்காது என்று எண்ணுகிறோம். ஆனால் எதிர் காலத்தில் வேறு ஏதாவது திட்டம் இருந்தால் நிச்சயமாய்."

ஸ்டெனோ குறிப்பெடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

"என்ன, நான் சொன்னது புரியவில்லையா?" என்றான் அவன்.

"அதில்லை ஸார். நேற்றே இந்த லெட்டரை நீங்கள் டிக்டேட் பண்ணி விட்டீர்களே?"

ஹோவார்டு மிடறு விழுங்கினான். "என்னது"

"ஆமாம் சார், நேற்றே அது தபாலில் போயாயிற்று."

ஹோவார்டு புன்னகை செய்ய முயன்றான். "வேலைக் களைப்பில் ஒரே குழப்பம்..." என்றான்.

‘என்ன ஆயிற்று எனக்கு’ என்ற கலவரம் மீண்டும் அவனைப் பிடித்துக் கொண்டது.

56

"ஹோவார்டைப் பரிசோதித்த டாக்டர் சைமூர், உங்கள் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கிறது, உடம்பைப் பொறுத்த மட்டில் ஒரு கோளாறும் இல்லை." என்றார்.

"இப்படி அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறதே."

"நீங்கள் விடுமுறையில் வெளியூர் போய் எவ்வளவு காலமாகிறது?

ஹோவார்டு யோசித்துப் பார்த்தான்.

"வெகு நாளாகிறது என்று நினைக்கிறேன்... ரொம்ப பிஸியாக இருந்ததால்..."

டாக்டர் சைமூர் புன்னகை செய்தார். "அதுதானே பார்த்தேன். இதை ஒவர்லோடு என்று சொல்வோம். நீங்கள் நினைக்கிற மாதிரி பயப்படும்படியான சமாசாரம் அல்ல. சகஜம். எங்காவது வெளியூர் போய் இரண்டொரு வாரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பிஸினஸ் விஷயங்களை மறந்து இருங்கள். திரும்பி வரும் போது ஒரு புது மனிதர் போல உணர்வீர்கள்."

ஹோவார்டு எழுந்து கொண்டான், மன நிம்மதியுடன்.

அடுத்த நாள் லாராவை அலுவலகத்தில் சந்தித்து, "எனக்கு ஒரு வாரம் லீவு கொடுப்பாயா?" என்று கேட்டான்.

"கொடுக்கிறேனே? என் வலது கைக்கு லீவு கொடுக்கும்போது உங்களுக்கும் கொடுக்கிறேன்! என்ன விஷயம்?"

"நான் கொஞ்ச நாள் விடுமுறையில் போக வேண்டுமென்று டாக்டர் சொல்கிறார். உண்மையைச் சொல்கிறேன். கொஞ்ச நாளாய் எனக்கு மிகவும் மறதி ஏற்பட்டு வருகிறது, லாரா."

அவள் கவலையுடன் அவனைப் பார்த்தாள். "ஏதும் சீரியஸா?"

"அப்படி யொன்றும் இல்லை. இருந்தாலும் சங்கடமாயிருக்கிறது. ஹவாய்க்குப் போய்ச் சில நாள் இருந்து விட்டு வரலாமென்று பார்க்கிறேன்."

"நமது ஜெட் விமானத்தில் போங்கள்."

"வேண்டாம். உனக்கு அது தேவைப்படும். நான் பொது விமானத்திலேயே போய்க் கொள்கிறேன்."

"எல்லாம் கம்பெனி செலவாகவே இருக்கட்டும்." என்றாள் லாரா.

"தாங்க்ஸ். நான் அடிக்கடி உனக்குப் போன் பண்ண..."

"வேண்டாம், போன் பண்ணாதீர்கள், நீங்கள் ஆபீஸ் கவலை இல்லாமல் இருக்க வேண்டியதுதான் முக்கியம். உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் நல்லபடி இருக்க வேண்டும்." என்றாள் லாரா...

மனத்துக்குள்ளும் அதையே நினைத்துக் கொண்டாள். "ஹோவார்டு நல்லபடி இருக்க வேண்டும், நல்லபடி இருக்க வேண்டும்..."

அன்று பிலிப் போன் செய்தான்.

ஆபரேட்டர், "மிஸ்டர் பிலிப் டைபேயிலிருந்து போன் செய்கிறார்." என்று சொன்னதுமே அவசரமாய்ப் போனை எடுத்தாள் லாரா.

"பிலிப்..."

"ஹலோ டார்லிங், இங்கே போன் இலாகாவில் ஒரு வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. எத்தனை மணி நேரமாய் உன்னைக் கூப்பிட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா? எப்படி இருக்கிறாய்?"

‘ரொம்பத் தனிமையாய் இருக்கிறது’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

"எனக்கென்ன. ஜம்மென்று இருக்கிறேன், டூர் எப்படி இருக்கிறது?"

"எப்போதும் போல்தான். நீ இல்லாததுதான் வருத்தமாக இருக்கிறது."

அவனுக்குப் பின்னே சில குரல்களும் மியூசிக்கும் கேட்டன.

"எங்கிருந்து பேசுகிறீர்கள்?" என்றாள்.

"ஓ, அதுவா? எனக்காக ஒரு சின்ன பார்ட்டி கொடுத்திருக்கிறார்கள். உனக்குத்தான் தெரியுமே சுத்த போர்!" என்றான் பிலிப்.

ஒரு பெண் சிரிப்பது லாராவுக்குக் கேட்டது. "ஆமாம், ஆமாம். உங்களுக்கு எப்படி இருக்குமென்று எனக்குத் தெரியும்," என்றாள்.

"புதனன்று ஊருக்கு வந்துவிடுவேன்."

"பிலிப்."

"என்ன?"

"ஒன்றுமில்லை டார்லிங். சீக்கிரம் வந்து விடுங்கள்."

"நிச்சயமாய். குட் பை."

போனை மெதுவே வைத்தாள் லாரா.

பார்ட்டி முடிந்த பிறகு பிலிப் என்ன பண்ணுவார்? யார் அந்தப் பெண்?

பொறாமை காரணமாக அவள் இருதயமே வெடித்து விடுகிற மாதிரி இருந்தது. இப்போது பொறாமைப்பட்ட மாதிரி யார் மீதும் எப்போதும் அவள் பொறாமைப் பட்டது கிடையாது.

‘என் வாழ்க்கை சிறப்பாக அமைந்திருக்கிறது. இதை நான் இழக்க மாட்டேன். இழக்கக் கூடாது...’ என்று எண்ணிக் கொண்டாள்.

அவளால் தூங்க முடியவில்லை. பிலிப்பைப் பற்றியும் இப்போது அவன் என்ன செய்து கொண்டிருப்பான் என்பதைப் பற்றியும் எண்ணியவாறே விழித்துக் கொண்டிருந்தாள்.

ஹவாய்த் தீவு.

ஒரு சிறிய ஓட்டலில் தங்கியிருந்த ஹோவார்டு, கடற்கரையில் காலை நீட்டிப் படுத்திருந்தான்.

பருவ நிலை அருமையாக இருந்தது. அவன் தினம் தினம் நீச்சலுக்குச் சென்று வந்தான். வெயிலில் படுத்துச் சருமம் பளபளப்பாகியிருந்தது. பால்ஃபி விளையாடினான். உடம்பை மஸாஜ் செய்து கொண்டான். மனம், உடல் இரண்டும் முற்ற முழுக்க அமைதி பெற்றிருந்தது. இவ்வளவு உடல் நலத்தோடு என்றுமே இருந்த தில்லை என்று தோன்றியது.

‘ஓவர்லோடு’ என்று டாக்டர் சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டான். அவர் திரும்பியதும் வேலைகளை நிதானமாக, பதட்டமில்லாமல் செய்யத் தொடங்க வேண்டும்... இந்த மறதி நோய் நம்மை ரொம்பத்தான் பயமுறுத்திவிட்டது...

விடுமுறைக் காலம் முடிந்ததும் புறப்பட்டான். நியூயார்க்கை அடைந்தபோது பிற்பகல் நாலு மணி ஆகியிருந்தது. நேரே தன் அலுவலகத்துக்கே சென்றான். அவனுடைய செக்ரட்டரி புன்னகையுடன் "வணக்கம் சார், உடம்பு ஜம்மென்று தேறியிருக்கிறது." என்றாள்.

"தாங்க்யூ..." என்றவன் சட்டென்று நின்றான். அவன் முகத்தில் ரத்தம் மொத்தமும் வடிந்து விட்டது.

செக்ரட்டரியின் பெயர் நினைவு வரவில்லை.

மறதி நோய் அப்படியேதான் இருக்கிறது!

ஒரு புதன்கிழமை சாயந்திரம் பிலிப் ஊர் திரும்பினான். லாரா தன் சொகுசுக் காரை எடுத்துக் கொண்டு விமான நிலையத்துக்குச் சென்றாள், அவனைச் சந்திப்பதற்காக.

பிலிப் விமானத்திலிருந்து இறங்கினான். தன் ஹீரோவைக் கண்டதும் அவள் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கியது.

‘அப்பப்பா எவ்வளவு அழகாக இருக்கிறார்’ என்று எண்ணிய வண்ணம் ஓடிச் சென்று அவன் கைகளுக்குள் சிறைப்பட்டாள்.

"நீங்கள் இல்லாமல் நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன் தெரியுமா?" என்றாள் அவனைத் தழுவியபடி.

"நானும்தான் டார்லிங்."

"எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள்?"

கட்டை விரலிலிருந்து ஆள் காட்டி விரலை அரை அங்குலம் உயர்த்தி, "இவ்வளவு" என்றான் அவன்.

"மூஞ்சியைப் பார்!" என்று சிரித்தாள் லாரா. "உங்கள் லக்கேஜ்கள் எங்கே?"

"வருகிறது."

ஒரு மணி நேரத்தில் அபார்ட்மெண்ட்டை அடைந்தார்கள். லாராவின் செக்ரட்டரி மரியன் கதவைத் திறந்து "வணக்கம் மிஸ்டர் பிலிப்." என்றாள்.

"தாங்க்ஸ் மரியன்." என்றவன், சுற்று முற்றும் பார்த்தான். "அ... ப்... பா ஊருக்குப் போய் ஒரு வருஷம் ஆன மாதிரி இருக்கிறது!"

"இரண்டு வருஷம்." என்றாள் லாரா. இனி என்னைப் பிரித்து எங்கேயுமே போகாதீர்கள்’ என்று சொல்ல எண்ணியவாள் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.

"நான் ஏதாவது செய்ய வேண்டுமா மேடம்?’ என்று மரியன் கேட்டாள்.

"வேண்டாம். ஒரு வேலையுமில்லை. நீ புறப்படும். சில கட தங்கள் டிக்டேட் செய்ய வேண்டும். நாளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம். இன்று நான் ஆபீசுக்குப் போகவில்லை."

"நல்லது. குட் பை." என்று கூறிவிட்டு மரியன் புறப்பட்டுச் சென்றாள்.

"அருமையான பெண்." என்றான் பிலிப்.

"உண்மை." என்றவள், அவனை அணைத்துக் கொண்டாள். "சரி, என்னைப் பிரிந்திருந்ததில் வருத்தம் என்றீர்களே, என்னளவு வருத்தம் என்பதை இப்போது காட்டுங்கள்."

அடுத்த மூன்று நாளுக்கு லாரா அலுவலகத்துக்குப் போகவில்லை. பிலிப்பின் பக்கத்திலேயே இருக்க, அவனுடன் பேசிக் கொண்டே இருக்க, அவனைத் தொட்டு கொண்டே இருக்க... இதெல்லாம் கனவல்ல, உண்மை தான் என்று உறுதி செய்து கொண்டே இருந்தாள். காலைச் சிற்றுண்டி முடிந்ததும் அவள் மாரியனுக்குக் கடிதங்கள் டிக்டேட் செய்வாள். அவன் பியானோ சாதகம் பண்ணுவான்.

மூன்றாம் நாள் பகலுணவின் போது காஸினோ திறப்பு விழாவைப் பற்றி அவனிடம் சொன்னாள் லாரா. "நீங்கள் வராமல் போய் விட்டீர்களே டார்லிங்! பிரமாதமாக இருந்தது விழா." என்றாள்.

"வர முடியாமல் போய்விட்டது. ரொம்ப ஸாரி." என்றான் அவன்.

‘எங்கேயோ பியானோவைத் தட்டிக் கொண்டிருக்கிறானாக்கும்.’ என்று பால் மார்ட்டின் சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது.

"பரவாயில்லை, அடுத்த மாதம் இன்னொரு சான்ஸ் வருகிறது. மேயர் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி கெளரவிக்கப் போகிறார்."

பிலிப்பின் முகத்தில் வருத்தம் படர்ந்தது. "டார்லிங் அந்த விழாவுக்கும் நான் இருக்கிற மாதிரி இருக்காது..."

லாரா உறைந்து போனாள். "என்ன சொல்கிறீர்கள்?"

"மானேஜர் என் அடுத்த டூருக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இன்னும் மூன்று வாரத்தில் நான் ஜெர்மனிக்குப் புறப்படுகிறேன்."

"அதெல்லாம் போகக் கூடாது."

"ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டாயிற்று, லாரா. இனி எதுவும் செய்ய முடியாது."

"இப்போதுதான் டூரிலிருந்து திரும்பி வந்தீர்கள்? அதற்குள் மறுபடி புறப்படுகிறேன் என்றால் என்ன அர்த்தம்?"

"இது ரொம்ப முக்கியமான டூர் டார்லிங்."

"அப்படி யானால் நம் குடும்பம் - நம் திருtioணம் முக்கியமானதில்லை என்று சொல்கிறீர்களா?"

"லாரா..."

"நீங்கள் போகக் கூடாது." என்றாள் லாரா கோபமாக, "எனக்குத் தேவை கணவன். பார்ட் டைம் ஆள் அல்ல."

செக்ரட்டரி மரியன் சில கடிதங்களை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். "ஒ, ஸாரி. இந்தக் கடிதங்களில் கையெழுத்து வாங்குவதற்காக வந்தேன். குறுக்கிட்டதற்கு மன்னிக்கணும்." என்றாள்.

"சரி, சரி. தேவைப்படும்போது உன்னைக் கூப்பிடுகிறேன்." என்றாள் லாரா வெடுக்கென.

"சரி, மேடம்." என்று கூறிவிட்டு மரியன் தன் அறைக்குத் திரும்பிச் சென்றாள்.

"நீங்கள் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டியதுதான். எனக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு அடிக்கடி நடத்தத் தேவையில்லை. நீங்கள் டிராவலிங் சேல்ஸ்மேனா என்ன?" என்றாள் லாரா.

"இல்லை" என்றான் பிலிப். அவன் குரல் சில்லிட்டிருந்தது.

"மேயர் கொடுக்கிற விழாவுக்கு இருந்துவிட்டுப் பிறகு போங்களேன்?"

"லாரா, இந்த விழா உனக்கு முக்கியமானதென்று எனக்குத் தெரியும். அதேபோல் என் டூர்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் நீ புரிந்துகொள்ள வேண்டும். உன்னைப் பற்றியும் நீ செய்கிற தொழிலைப் பற்றியும் எனக்குப் பெருமை உண்டு. அதே மாதிரி நீயும் என்னைப் பற்றிப் பெருமைப்பட வேண்டும்."

"நிச்சயம் பெருமைப்படுகிறேன்." என்றாள் அவள். "என்னை மன்னியுங்கள். நான்... நான்..." அழுகையைத் தடுத்துக் கொள்ளப் பிரயத்தனப்பட்டாள்.

"உன்னைத் தெரியாதா எனக்கு, டார்லிங்?" என்று கூறி அவளை அணைத்துக் கொண்டான் பிலிப். "இதெல்லாம் எப்படியும் சரி செய்து விடலாம். கவலைப் படாதே. நான் டூரிலிருந்து திரும்பியதும் நாம் இருவரும் நீண்ட விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூர் போவோம்."

‘நீண்ட விடுமுறையா! ஒரு நாளும் நடவாது!’ என்று எண்ணிக் கொண்டாள் லாரா, ஏகப்பட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன...

"இந்த முறை எங்கே போகிறீர்கள் பிலிப்?" என்றாள்.

"டென்மார்க், இங்கிலாந்து, பிறகு திரும்பி வர வேண்டியது தான்."

"ஓ" நெடு மூச்சு வெளிப்பட்டது லாராவிடமிருந்து.

"நீயும் என்னுடன் வரக்கூடாதா லாரா. நீ இல்லாமல் எவ்வளவு வெறிச்சென்று இருக்கிறது தெரியுமா?"

அன்று டெலிபோனில் கேட்ட பெண்ணின் சிரிப்பு ஞாபகம் வந்தது அவளுக்கு. "அப்படியா?" என்றவள் தன்னைத் தானே உதறி விட்டுக் கொண்ட மாதிரி நினைப்பை மாற்றிக் கொண்டாள், "நான் ஒன்று சொல்கிறேன், கேளுங்கள். என் ஜெட் விமானத்தை எடுத்துக் கொண்டு போங்கள். உங்களுக்கு இன்னும் செளகரியமாக இருக்கும்."

"உனக்குக் கஷ்டமாயிருக்காதா?"

"ஒரு கஷ்டமும் இல்லை. நீங்கள் திரும்பி வருகிற வரையில் நான் சமாளித்துக் கொள்கிறேன்."

"உன்னைப் போலப் பெண் உலகத்திலேயே கிடையாது, லாரா!" என்றான் பிலிப்.

அவன் கன்னத்தைத் தன் விரலினால் மெல்ல வருடினாள் லாரா. "இந்த வார்த்தையை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்."

பிலிப்பின் டூர் பிரமாத வெற்றியாய் அமைந்தது. பெர்லினில் அவையினர் பரவசத்தில் குதித்தார்கள். விமரிசனங்கள் அவனை வானளாவப் புகழ்ந்தன.

நிகழ்ச்சி முடிந்ததும் பின்னறைகளில் எப்போதும் கூட்டம்தான். விசிறிகள் சூழ்ந்து கொள்வார்கள். அவர்களில் பெண்கள்தான் அதிகம்.

"உங்கள் நிகழ்ச்சிக்காகவே முன்னூறு மைல் பிரயாணம் செய்து வந்திருக்கிறேன்..."

"எனக்கு ஒரு சின்ன மாளிகை இருக்கிறது. பக்கத்தில்தான், நீங்கள்..."

"இன்று இரவு விருந்து ஏற்பாடு பண்ணியிருக்கிறேன். நீங்கள் தான் இரண்டே பேர்தான்..."

இந்தப் பெண்களில் சில பணக்காரிகள். நல்ல அழகிகள், பிலிப் கையைச் சொடுக்கினால் காலடியில் விழத் தயாராயிருந்தார்கள்.

ஆனால் பிலிப்புக்கு எவரிடமும் நாட்டமில்லை. லாராவின் மீது கொண்ட காதல் ஒன்றே அவன் மனத்தை நிறைத்திருந்தது.

57

டென்மார்க்கில் இசை நிகழ்ச்சி முடிந்ததும் லாராவைப் போனில் கூப்பிட்டான் பிலிப். "லாரா, நீ இல்லாமல் ரொம்ப போரடிக்கிறது." என்றான்.

"எனக்கும்தான் பிலிப். நிகழ்ச்சி எப்படி இருந்தது?"

"பரவாயில்லை. நான் பியானோ வாசித்துக் கொண்டிருந்தபோது யாரும் வெளிநடப்புச் செய்யவில்லை."

லாரா சிரித்தாள். "அப்படியானால் பரவாயில்லை என்றுதான் அர்த்தம். சரி. இங்கே ஆபீசில் ஒரு மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. டார்லிங், இன்னும் ஒரு மணி நேரத்தில் நானே உங்கள் ஒட்டலுக்குக் கூப்பிடுகிறேன்."

பிலிப் சொன்னான்: "நான் நேரே ஓட்டலுக்குப் போகவில்லை, லாரா, இசை மன்றத்தின் நிர்வாகி அவர் வீட்டில் எனக்கு ஒரு பார்ட்டி வைத்திருக்கிறார். அங்கே போய்விட்டு..."

"அப்படியா! அவருக்கு அழகான மகள் இருக்கிறாளா?" என்று கேட்டுவிட்டு, கேட்ட கணமே ஏன் அப்படிக் கேட்டோம் என்று வருந்தினாள் அவள்.

நல்லவேளை, அவனுக்கு அது சரியாய்க் காதில் விழவில்லை. "என்னது?" என்றான்.

"ஒன்றுமில்லை. எனக்கு மீட்டிங் இருக்கிறது. அப்புறம் பேசுகிறேன்."

போனை வைத்துவிட்டு, அலுவலக உதவியாளர்களை நோக்கித் திரும்பினாள். ஹோவார்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். "என்ன லாரா, எல்லாம் நல்ல சமாசாரம்தானே?" என்றான்.

"அருமையான சமாசாரம்." என்றாள் அவள், உற்சாகமான குரலில். ஆனால் மீட்டிங்கில் அவளால் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. பார்ட்டியில் பிலிப் இருப்பதையும், அழகிய பெண்கள் அவனைத் தங்களுடன் வரும்படி கையைப் பிடித்து அழைப்பதையும் கற்பனை செய்தவாறே இருந்தாள். அவள் மனத்தில் குரோதம் கொழுந்து விட்டெரிந்தது. ‘சீ! நாம் ஏன் இப்படி ஆகிவிட்டோம்?’ என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.

லாராவைக் கௌரவிப்பதற்காக மேயர் நடத்திய விழாவில் எள் போட்டால் எள் விழாத அளவுக்குக் கூட்டம். உட்கார இடமில்லாமல் பலர் நின்று கொண்டிருந்தார்கள். பத்திரிகை நிருபர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"உங்களையும் உங்கள் கணவரையும் சேர்த்து ஒரு படம் எடுக்கலாமா மேடம்?" என்றார்கள்.

அவள் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டாள். "இன்று இங்கே வர வேண்டுமென்றுதான் அவர் மிகவும் விரும்பினார்..."

பால் மார்ட்டின் வந்திருந்தார். "மறுபடியும் அவன் போய்விட்டான்! அப்படித்தானே?" என்றார்.

"இல்லை, பால். அவர் இங்கே வரத்தான் பார்த்தார்..."

"மண்ணாங்கட்டி! இது உனக்கு எவ்வளவு பெரிய கெளரவமான விழா! இங்கே உன் பக்கத்தில் அவன் இருக்க வேண்டாமா? சே! என்ன கணவன் இவன்! ரொம்ப மட்டம்! யாராவது அவனைச் சுடச் சுட நாலு கேள்வி கேட்டால்தான் புத்தி வரும்." என்றார் பால் மார்ட்டின்.

அன்று இரவு லாரா தூங்கவேயில்லை. படுக்கையில் தனியே படுத்துப் புரண்டு கொண்டிருந்தாள். பத்தாயிரம் மைலுக்கு அப்பால் இருக்கும் பிலிப்பைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள். பால் மார்ட்டின் சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஞாபகம் வந்தன. என்ன கணவன் இவன்... யாராவது சுடச் சுட நாலு கேள்வி கேட்டால்தான் புத்தி வரும்.

ஐரோப்பாவிலிருந்து பிலிப் வந்துவிட்டான். வீட்டுக்குத் திரும்பியதில் அவனுக்கு ஒரே சந்தோஷம். லாராவுக்கும்தான்.

தன் செக்ரட்டரி மரியனிடம், "இன்று பூரா நான் வீட்டில் இருந்தபடி வேலைகளைப் பார்க்கப் போகிறேன்." என்றாள்...

சொன்ன படியே தன் அறையில் இருந்தவாறு மரியனுக்கு டிக்டேஷன்கள் கொடுத்தாள். வரவேற்பறையில் பிலிப் பியானோ வாசிக்கும் ஒலி கேட்ட வண்ணம் இருந்தது.

இப்படி இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! ஏன்தான் பிலிப் இதைக் கெடுக்கிறாரோ?’ என்று எண்ணிக் கொண்டாள்.

பிலிப்பின் மானேஜர் வில்லியம் போனில் அவனைக் கூப்பிட்டு, "கங்கிராஜுலேஷன்ள்ஸ். டூர் பிரமாதமாய் நடந்ததாமே?" என்றார்.

"ஆமாம், ஐரோப்பியர்கள் அருமையான சங்கீத ரசிகர்கள்." என்றான் பிலிப்,

"கார்னெகி ஹால் நிர்வாகிகள் போன் பண்ணினார்கள். இருபத்தேழாம் தேதி வெள்ளிக் கிழமை உங்கள் இசை நிகழ்ச்சி நடந்தால் தேவலை என்று கேட்டுக் கொண்டார்கள், ஒப்புக் கொள்ளலாமா?"

"தாராளமாய்."

"நல்லது. நான் ஏற்பாடு செய்கிறேன். அப்புறம் இன்னொரு விஷயம்." என்றார் வில்லியம். "உங்கள் நிகழ்ச்சிகளைக் குறைத்துக் கொள்ளலாமென்று ஏதாவது எண்ணம் உண்டா?"

பிலிப் திகைத்தான், "குறைத்துக் கொள்வதா? இல்லையே? ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?"

"லாராவுடன் பேசிக் கொண்டிருந்தேன். உங்கள் இசை நிகழ்ச்சிகளை வெளி நாடுகளுக்குப் போகாமல் அமெரிக்காவில் மட்டுமே வைத்துக்கொண்டால் நன்றாயிருக்கும் என்று சொன்னார். நீங்கள் அவரிடம்..."

"கேட்கிறேன். தாங்க் யூ." என்ற பிலிப் போனை வைத்துவிட்டு லாராவின் அறைக்குச் சென்றான். அவள் மரியனுக்கு ஒரு கடிதம் டிக்டேட் செய்து கொண்டிடருந்தாள்.

"இரண்டு நிமிஷம் நாங்கள் பேச வேண்டும்." என்று அவன் சொன்னதும் மரியன் புன்னகை செய்து.

"நிச்சயமாய்." என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.

லாராவை நோக்கித் திரும்பினான் பிலிப். "வில்லியம் சற்று முன் போன் செய்தார். என்னுடைய அயல் நாட்டு டூர்களைக் குறைக்கும்படி அவரிடம் நீ சொன்னாயா?"

"அந்த மாதிரி ஏதோ பேசியதாக ஞாபகம். பிலிப். நம் இருவருக்குமே அது நல்லதென்று..."

"ப்ளீஸ் லாரா, இனிமேல் என் மானேஜரிடம் அப்படியெல்லாம் சொல்லாதே." என்றான் அவன். "எனக்கு உன் மீது எத்தனை அன்பு என்று உனக்குத் தெரியும். நாம் இருவரும் சேர்ந்திருப்பது அவசியம்தான். ஆனால் உனக்கென்று ஒரு தொழில் இருக்கிறது. எனக்கென்று ஒரு தொழில் இருக்கிறது. இனிமேல் நம்முள் ஒரு தீர்மானம் செய்து கொள்வோம். உன் தொழிலில் நான் குறுக்கிட மாட்டேன். நீயும் என் தொழிலில் குறுக்கிடக் கூடாது. சரிதானே நான் சொல்வது?"

"சரிதான்." என்றாள் லாரா. "ஸாரி பிலிப். நீங்கள் வெளிநாடு போனால் எனக்கு என்னவோ போல் ஆகிவிடுகிறது." அவன் கைகளுக்குள் புதைந்து கொண்டாள். "என்னை மன்னிப்பார்களா?"

"மன்னித்தேன், மறந்தேன்." என்றான் பிலிப்.

அன்று சில கான்ட்ராக்டுகளில் கையெழுத்து வாங்குவதற்காக ஹோவார்டு வந்திருந்தான். "வாழ்க்கை எப்படி இருக்கிறது லாரா?" என்றான்.

"அருமையாய்." என்றாள் அவள்.

"உலகம் சுற்றும் வாலிபன் ஊர் திரும்பி விட்டார் போலிருக்கிறது?"

"ஆமாம்."

"ஆக, பாட்டுத்தான் உன் வாழ்க்கை என்றாகி விட்டது? அப்படித்தானே?"

"பாடகர்தான் என் வாழ்க்கை." என்றாள்.

"ஹோவார்டு, அவர் எவ்வளவு அற்புதமான மனிதர் என்று உங்களுக்குத் தெரியாது."

"எப்போது ஆபீசுக்கு வரப்போகிறாய்? நீ இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது."

"கொஞ்ச நாளில் வந்துவிடுகிறேன்."

"ஓகே." என்று தலையாட்டினான் ஹோவார்டு.

அவன் கொண்டு வந்திருந்த பேப்பர்களில் இருவரும் கவனம் செலுத்தலானார்கள்.

அடுத்த நாள் காலை லாராவின் வழக்கறிஞர் டெர்ரி போனில் அவளைக் கூப்பிட்டார்.

"மேடம், ரெனோவில் இருக்கும் சூதாட்டக் காணிப்புக் கமிஷனிடமிருந்து தகவல் கிடைத்திருக்கிறது." என்றார். "உங்களுடைய காஸினோ லைசன்ளைப் பற்றி விசாரணை நடக்கப் போகிறதாம்."

"என்ன விசாரணை?"

"ஏலம் எடுத்ததில் ஏதோ தில்லுமுல்லு நடந்திருப்பதாகப் புகார் வந்திருக்கிறதாம். பதினேழாம் தேதி நீஙகள் அங்கே வந்து சாட்சியம் அளிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள்."

"சீரியஸான விஷயமா?"

வழக்கறிஞர் சிறிது தயங்கினார். "ஏன் மேடம், ஏலம் எடுப்பதில் தில்லுமுல்லு ஏதாவது நடந்ததா? உங்களுக்குத் தெரியுமா?"

"நிச்சயமாய் அப்படி எதுவும் இல்லை."

"அப்படியானால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நானும் உங்களுடன் ரெனோவுக்கு வருகிறேன்."

"நான் போகவில்லை என்றால் என்ன ஆகும்?"

"நீங்கள் கட்டாயம் வந்தாக வேண்டும் என்று சம்மன் அனுப்புவார்கள்."

"ஓகோ." என்று சொல்லி டெலிபோனை வைத்தாள் லாரா. பிறகு பால் மார்ட்டினின் சொந்த நம்பருக்குப் போன் செய்தாள். உடனே அவர் போனை எடுத்து "யார், லாராவா?" என்றார்.

"ஆமாம் பால்."

"இந்த நம்பருக்கு நீ என்னை கூப்பிட்டு ரொம்ப நானாகிறதே?"

"உண்மைதான். ரெனோ விஷயமாக உங்களுடன் பேச வேண்டும். அதற்குத்தான் கூப்பிட்டேன்."

"நானும் கேள்விப்பட்டேன்."

"நிஜமாகவே அதில் ஏதாவது பிரசினை ஏற்பட்டிருக்கிறதா?’"

அவர் சிரித்தார். "இல்லை, நீ ஏலம் எடுத்துவிட்டதால் தோற்றுப் போனவர்களுக்குக் கோபம். அவ்வளவு தான்."

"பிரசினை எதுவும் இல்லை என்று நிச்சயமாகச் சொல்கிறீர்களா?" என்று சிறிது தயங்கினாள், "மற்றவர்கள் என்னென்ன தொகைக்கு ஏலம் கேட்டிருந்தார்கள் என்பதைப் பற்றி நாம் பேசியதாக ஞாபகம்."

"இருக்கட்டுமே! லாரா, இதெல்லாம் எங்கேயும் எப்போதும் நடக்கிறதுதான். எப்படியானாலும் அவர்களால் எதையும் நிரூபிக்க முடியாது. கொஞ்சம்கூடக் கவலைப்படாதே."

"சரி, கவலையை விட்டேன்" என்று கூறிவிட்டுப் போனை வைத்தாள் லாரா, ஆனால் வெகு நேரம் கவலையுடன் லாரா உட்கார்ந்திருந்தாள்.

பகலுணவின்போது பிலிப் சொன்னான்: "ஒரு விஷயம் சொல்லட்டுமா உனக்கு? கார்னெகி ஹாலில் என்னை இசை நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டார்கள். ஒப்புக் கொண்டிருக்கிறேன்."

"பிரமாதம்" என்றாள் லாரா முகத்தில் மலர்ச்சியுடன். "நிகழ்ச்சிக்கு வருவதற்காக நான் புது டிரெஸ் வாங்கிக் கொள்ளப் போகிறேன், என்றைக்கு நிகழ்ச்சி?"

"பதினேழாம் தேதி."

"ஒ" என்றாள் லாரா. அவள் முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்தது.

"ஏன்? என்ன விஷயம்?"

"வந்து... அன்றைக்கு நான் உங்களுடன் இருக்க முடியாது டார்லிங்... ரெனோவில் இருக்க வேண்டும். ரொம்ப ஸாரி."

பிலிப் அவள் கையைத் தட்டிக் கொடுத்தான் "சரி, பரவாயில்லை. உனக்கும் எனக்கும் நேரம் சரிப்பட்டு வர மாட்டேன் என்கிறது. அதனாலென்ன? இன்னும் எவ்வளவோ நிகழ்ச்சிகள் இருக்கும். பார்த்துக் கொள்ளலாம்."

காமெரான் சென்ட்டரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்திருந்தாள் லாரா. அன்று காலை ஹோவார்டு கூப்பிட்டதே காரணம்.

"லாரா, நீ வந்தால் தேவலை இங்கே சில பிரச்னைகள்." என்று அவன் சொன்னதும் "இதோ ஒரு மணி நேரத்தில் வருகிறேன்." என்று கூறி லாரா வந்திருந்தாள்.

அலுவலகத்தை அடைந்தபோது உதவியாளர்களின் மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

"இரண்டு மூன்று ஒப்பந்தங்களுக்குத் தலைவலி." என்றான் ஹோவார்டு. "ஹூஸ்டனில் நமது கட்டிடத்துக்கு வருவதாக இருந்த இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி திடீரென்று திவாலாகி விட்டது. அவர்கள்தான் மொத்தக் கட்டிடத்தையும் வாடகைக்கு எடுத்திருந்தார்கள்."

"வேறே யாரையாவது பிடித்தால் போச்சு."

"அது அவ்வளவு சுலபமில்லை." என்றான் ஹோவார்டு...

"அரசாங்கம் கொண்டு வந்திருக்கிற வரிச் சட்டத்தினால் எல்லாருக்கும் கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. பல வரிச் சலுகைகளை எடுத்து விட்டார்கள். வேலை யில்லாத் திண்டாட்டம் வேறே வரும் போலிருக்கிறது. நமக்குக் கடன்கள் வழங்கும் நிறுவனங்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. சில பேர் கடையையே மூடி விடுவார்கள் என்று தோன்றுகிறது. நாம் கட்டிக் கொண்டிருக்கிற அரை டஜன் கட்டிடங்களிலும் பிரசினை. அதிலே இரண்டு கட்டிடங்கள் பாதியில் நிற்கின்றன. நிதியுதவி கிடைக்கவில்லையென்றால் அவைகளின் செல்வே நம்மைச் சாப்பிட்டுவிடும்..."

லாரா சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். "எப்படியாவது சமாளிப்போம். நமது சொத்துக்களில் எதையெல்லாம் விற்க முடியுமோ அதையெல்லாம் விற்று, கடன் தவணைகளைக் கட்டி விடுங்கள்."

"ஒரே ஒரு சந்தோஷமான விஷயம்." என்றான் ஹோவார்டு. "ரெனோவிலிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது. வருடத்துக்குக் கிட்டதட்ட ஐந்து கோடி டாலர் வருமானம் வருகிறது."

லாரா பதிலொன்றும் சொல்லவில்லை. ரெனோவிலும் பிரச்சினை இருப்பது அவளுக்கு ஞாபகம் வந்தது.

58

தினேழாம் தேதி வெள்ளிக் கிழமையன்று லாரா ரெனோவுக்குப் புறப்பட்டாள். பிலிப் அவளுடன் காரில் விமான நிலையம் வரை வந்தான்.

லாராவின் வழக்கறிஞர் டெர்ரி ஹில் விமானத் தருகே காத்திருந்தார்.

"எப்போது திரும்பி வருவாய்?" என்று பிலிப் கேட்டான்.

"அதிக நாள் பிடிக்காது. அனேகமாய் நாளைக்கே கூட வந்துவிடுவேன்."

"நீ இல்லையென்றால் எனக்குக் கஷ்டம்." என்றான் அவன்.

"எனக்கும்தான் டார்லிங்,"

விமானம் புறப்படுவதைப் பார்த்தபடி நின்றிருந்தான் பிலிப். ‘இவளைப் பிரிந்திருப்பது ரொம்பக் கஷ்டம். உலகத்திலேயே எவ்வளவு அதியற்புதமான பெண் இவள்’ என்று எண்ணிக் கொண்டான்.

சூதாட்டக் கண்காணிப்புக் கமிஷன் லாராவை விசாரித்துக் கொண்டிருந்தது. காஸினோ லைசன்ஸூக்காக, அவள் விண்ணப்பித்த சமயத்தில் யாரெல்லாம் இருந்தார்களோ அதே நபர்கள்தான் இப்போதும் இருந்தார்கள்.

ஆனால் அவர்கள் முகத்தில் பழைய சினேக பாவம் இல்லை.

லாரா சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டாள். அவள் சொல்லும் சாட்சியங்களைக் கோர்ட் ஸ்டேனோ ஒருவர் குறித்துக் கொண்டார்.

விசாரணைக் கமிஷன் சேர்மன் சொன்னார்; "மிஸ் லாரா கேமரான், உங்கள் காஸினோவுக்கு லைசென்ஸ் வழங்கிய விஷயத்தைப் பற்றிச் சில புகார்கள் வந்திருக்கின்றன."

"என்ன புகார்கள்?" என்று லாராவின் வழக்கறிஞர் டெர்ரி ஹில் கேட்டார்.

"அதைப் பிறகு பார்க்கலாம்." என்று சொல்லிவிட்டு லாராவின் பக்கம் திரும்பினார் சேர்மன், "மிஸ் லாரா, சூதாட்டக் காஸினோ நடத்துவதில் இதுதான் உங்கள் முதல் அனுபவம். இல்லையா?"

"ஆமாம். முதல் விசாரணையின்போதே அதைச் சொன்னேனே?"

"இன்ன விலைக்கு ஏலம் கேட்பதென்று எப்படி முடிவு செய்தீர்கள்? அதாவது, அவ்வளவு கணக்காக ஒரு உரிலையைக் குறிப்பிட உங்களால் எப்படி முடிந்தது?

டெர்ரி ஓஹில் குறுக்கிட்டார். "இந்தக் கேள்விக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?"

"ஒரு நிமிஷம் பொறுங்கள் மிஸ்டர் ஹில். நான் கேட்கிற கேள்விக்கு உங்கள் கட்சிக்காரரே பதில் சொல்லட்டுமே?"

டெர்ரி ஹில் லாராவைப் பார்த்து, "சொல்லு!" என்று தலையசைத்தார்.

லாரா சொன்னாள். என்னுடைய நிதி ஆலோசகர்களும் அக்கவுண்டென்ட்களும் மதிப்பீடு செய்து எவ்வளவு ஏலம் கேட்கலாம் என்று எனக்குச் சொன்னார்கள். சிறு லாபம் மாதிரி அதற்கு மேலே கொஞ்சம் சேர்த்தேன். அதுதான் நான் கேட்ட ஏலத்தொகை"

சேர்மன் தன் மேஜையீது இருந்த காகிதங்களைப் புரட்டினார். "உங்களுக்கு அடுத்தபடி ஏலம் கேட்டிருந்தவரின் தொகைக்கு மேலே ஐம்பது இலட்சம் டாலர் அதிகமாக இருக்கிறது நீங்கள் ஏலம் கேட்டுள்ள தொகை."

"அப்படியா?"

"நீங்கள் ஏலம் கேட்டபோது அந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதா?"

"நிச்சயமாகத் தெரியாது."

"மிஸ் லாரா. உங்களுக்குப் பால் மார்ட்டின் அறிமுகமானவரா?"

டெர்ரி ஹில் குறுக்கிட்டார். "இந்தக் கேள்விக்கும் விசாரணைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை."

"இன்னும் ஒரு நிமிஷத்தில் அதற்கு வருவோம்... மிஸ் லாரா என் கேள்விக்குப் பதில் சொல்லட்டும்."

"எனக்கு இந்தக் கேள்வியில் எந்த ஆட்சேபணையும் இல்லை." என்றாள் லாரா.

"ஆம். பால் மார்ட்டினை எனக்குத் தெரியும்."

"அவருடன் உங்களுக்குப் பிஸினஸ் தொடர்பு ஏதேனும் உண்டா?"

லாரா சிறிது தயங்கிவிட்டு, "இல்லை. அவர் வெறும் சினேகிதர்தான்." என்றாள்.

"மிஸ் லாரா, மாஃபியா இயக்கத்துடன் பால் மார்ட்டின் சம்பந்தப்பட்டவர் என்று உங்களுக்குத் தெரியுமா?"

டெர்ரி ஹில் உடனே, "ஆட்சேபிக்கிறேன், இது வெறும் வதந்திதான். இந்த விசாரணையில் அதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை."

"சரி, மிஸ்டர் ஹில். அந்தக் கேள்வியை விட்டுவிடுகிறேன். மிஸ் கேமரான், நீங்கள் பால் மார்ட்டினைக் கடைசியாகப் பார்த்தது அல்லது பேசியது எப்போது?"

லாரா சிறிது தயங்கினாள். "என்னால் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், எனக்குக் கல்யாணம் ஆன பிறகு, நான் பால் மார்ட்டினை அதிகம் பார்க்கவில்லை. எப்போதாவது பார்ட்டிகளில் பார்த்துக் கொள்வோம். அத்துடன் சரி."

"டெலிபோனில் நாள் தவறாமல் பேசுகிற வழக்கம் உண்டா?"

"கல்யாணத்துக்குப் பிறகு கிடையாது."

"இந்தக் காஸினோ விஷயமாகப் பால் மார்ட்டினுடன் நீங்கள் பேசியது உண்டா?"

லாரா தன் வழக்கறிஞரைப் பார்த்தாள், சொல்லலாம் என்று அவர் தலையசைத்தார். "ஆமாம், ஏலத்தில் நான் ஜெயித்ததும் அவர் என்னைக் கங்கிராஜுலேட் பண்ணினார் என்று நினைக்கிறேன். பிறகு காஸினோ நடத்துவதற்கு லைசென்ஸ் வந்ததும் வாழ்த்துக் கூறினார்."

"வேறு எந்தச் சமயத்திலும் பேசியது இல்லை?"

"இல்லை."

"நீங்கள் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு இதைச் சொல்கிறீர்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்."

"ஞாபகம் இருக்கிறது."

"கோர்ட்டில் பொய் சொன்னால் அதற்குத் தண்டனை உண்டு என்று தெரியும் இல்லையா?"

"தெரியும்."

அவர் ஒரு காகிதத்தை உயர்த்திக் காட்டினார். "காஸினோவுக்காக ஏலத் தொகைகள் சீல் வைத்த கவரில் கொடுக்கப்பட்ட சமயம், நீங்களும் பால் மார்ட்டினும் பதினைந்து முறை பேசியிருக்கிறீர்கள். அதற்கான பட்டியல் இதோ இங்கே இருக்கிறது."

"கார்னெகி ஹால் பிரம்மாண்டமானது. இரண்டாயிரத்து எண்ணூறு இருக்கைகள் கொண்டது. ஆர்க் கெஸ்ட்ரா கோஷ்டி இல்லாமல் ஒண்டியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்கள் அந்த மாபெரும் மன்றத்தின் முன்னே மேடையில் கடுகு மாதிரி தெரிவார்கள். மன்றம் முழுவதும் நிரம்பி வழிவதென்பது அபூர்வம்தான்.

ஆனால் அந்த வெள்ளிக் கிழமை எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தன.

பிலிப் மேடைக்கு வந்ததும் இடியோசை போன்ற கரகோஷம் எழுந்தது. பியானோவின் முன்னே உட்கார்ந்தவன் ஒரு நிமிடம் மெளனமாக இருந்துவிட்டுப் பிறகு இசைக்கத் தொடங்கினான். பத்தோவனின் படைப்புகளை முதலில் இசைக்கத் தொடங்கினான்.

பியானோ வாசிக்க உட்கார்ந்து விட்டால் இசையில் ஒன்ற வேண்டுமே தவிர, வேறு எதிலும் புத்தி செலுத்தக்கூடாது என்று சென்ற பல வருடங்களாக அவன் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் இந்த இரவு, லாராவையும் தங்கள் பிரச்சினைகளையும் பற்றியே அவன் எண்ணங்கள் சென்று கொண்டிருந்தன. கண் இமைக்கும் நேரத்துக்கு அவன் விரல்கள் பியானோவின் மீது தடுமாறின. வியர்வை முத்திட்டது முதுகில். ஆனால் எல்லாம் ஒரு வினாடி தான். அவையினர் கவனிப்பதற்குள் மறைந்துவிட்டன.

நிகழ்ச்சியில் முதல் பகுதி முடிந்தபோது கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது. இடைவேளையில் பிலிப் டிரெஸ் ஸிங் ரூமுக்குப் போனான்.

நிகழ்ச்சி நிர்வாகி வந்து, "அற்புதம் பிலிப். மந்திரம் போட்ட மாதிரி அத்தனை பேரையும் கட்டிப் போட்டு விட்டீர்கள், சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்றார்.

"தாங்க்ஸ். எதுவும் வேண்டாம்." என்று சொல்லி விட்டுக் கதவைச் சாத்திக் கொண்டான். இசை நிகழ்ச்சி சீக்கிரமே முடிந்துவிட்டால் தேவலை போலிருந்தது...

லாராவுக்கும் தனக்குமுள்ள உறவைப் பற்றிக் கடுமையான கவலைகள் ஏற்பட்டிருந்தான் அவனுக்கு. லாராவின்பால் அவன் அபாரமான காதல் கொண்டிருந்தான். அவளுக்கும் தன் மீது மட்டற்ற காதல் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் முட்டுக்கட்டை போட்ட மாதிரி அவர்கள் காதலில் ஒரு தேக்கம் ஏற்பட்டிருந்தது. லாரா ரெனோவுக்குப் புறப்பட்டுச் செல்லுமுன் ஏகப்பட்ட டென்ஷன், இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் என்ன செய்வது? எப்படிச் சமரசம் செய்துகொள்வது?...

அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் கதவைத் தட்டி விட்டு நிர்வாகி உள்ளே வந்தார். "இன்னும் ஐந்து நிமிடம்தான் மிஸ்டர் பிலிப்." என்றார்.

"தாங்க் யூ."

நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் உள்ளத்தைக் கிளறி உணர்ச்சி வசப்படுத்தும் பாட்டுக்கள் இடம் பெற்றிருந்தன. கடைசி ஸ்வரங்கள் அந்த மாபெரும் மண்டபத்தில் பரவியபோது அவையினர் மொத்தப் பேரும் எழுந்து நின்று ஆவேச வேகத்துடன் கைதட்டினார்கள்.

பிலிப் அவர்களின் முன்னே நின்று குனிந்து வணக்கம் செலுத்தினான். ஆனால் அவன் மனம் வேறேங்கோ சென்றிருந்தது. வீட்டுக்குப் போய் லாராவுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பிறகுதான் ஞாபகம் வந்தது, லாரா ஊரில் இல்லை என்பது. எப்படியேனும் நிலைமையைச் சரி செய்து கொள்ள வேண்டும். என்று எண்ணினான். இப்படியே விடக் கூடாது.

கைதட்டல் தொடர்ந்து ஒலித்தது. ‘ப்ரேவோ!’ "என்கோர்!’ என்று அவையினர் கூவினார்கள். பொதுவாக, பிலிப் இன்னும் கொஞ்சம் வாசிப்பான். ஆனால் இந்த இரவு அவன் உள்ளம் மிகவும் கலங்கியிருந்தது. டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பி உடை மாற்றிக் கொண்டான்...

தூரத்தில் இடி முழக்கம் கேட்டது. அன்று மழை பெய்யும் என்று செய்தித்தாள்கள் கூறியிருந்தன. அப்படியும் ஜனங்கள் வந்திருந்தார்கள்.

வெளியே ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவனைப் பார்த்துப் பாராட்டுத் தெரிவிக்க, ரசிகர்களைச் சந்திப்பதும் அவர்களுடைய பாராட்டுதல்களைக் கேட்பதும் உற்சாகம் உண்டாக்கும் அனுபவங்கள் எப்போதுமே. ஆனால் இன்றைக்கு அவன் மன நிலை சரியில்லை. அறைக்குள்ளேயே உட்கார்ந்திருந்தான். எல்லாரும் போய்விட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரியும் வரையில். அவன் வெளியே வந்தபோது நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது. காலி வராந்தாக்களின் வழியே நடந்து வெளியே வந்தான்.

அங்கே அவனுடைய சொகுசுக் காரைக் காணவில்லை. டாக்ஸி பிடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தான்.

தெருவில் இறங்கியபோது மழை கொட்டிக் கொண்டிருந்தது. சிலரென்று குளிர்க் காற்று முகத்தில் அடித்தது இருளில் மூழ்கியிருந்தது தெரு. ஆறாவது அவென்யூவை நோக்கி அவன் நடந்த சமயம்.

ரெயின்கோட் அணிந்த ஒரு பெரிய ஆள் இருளுக்குள்ளிலிருந்து வெளிப்பட்டு அவனிடம் வந்தான். "மன்னிக்கணும், கார்னெகி ஹாலுக்கு எப்படிப் போவது?" என்றான்.

முன்னொரு நாள் லாராவிடம் ஜோக் அடித்தது ஞாபகம் வந்தது. "கார்னெகி ஹாலுக்கு எப்படிப் போவது? சாதகம் செய்தால் போகலாம்."

இன்று அந்த ஜோக்கை சொல்லாமல் பின்புறமுள்ள கட்டிடத்தைச் சுட்டிக் காட்டி, "அதோ" என்றான்.

சொல்லிவிட்டுத் திரும்புகையில் ஓர் ஆள் அவனைச் சுவரோடு சுவராக அழுத்தினான். அவன் கையில் பயங்கரமான கத்தி பளபளத்தது.

"பர்ஸை எடு."

பிலிப்பின் இருதயம் தடதடத்தது. யாரேனும் உதவிக்கு வருவார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். மழை கொட்டும் தெருவில் எவரையும் காணோம். "சரி. கலாட்டா பண்ணாதே. தருகிறேன்."

கத்தியின் முனை அவன் தொண்டையைத் தொட்டுக் கொண்டிருந்தது.

"இதோ பார், நான்தான் தருகிறேன் என்று சொன்னேனே..."

"பேசாதே எடுத்துக் கொடு."

பாக்கெட்டுக்குள் கையைவிட்டுப் பர்ஸை எடுத்தான் பிலிப். அந்த ஆள் அதைத் தனது இன்னொரு கையால் வாங்கித் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

அதே சமயம் பிலிப் கட்டியிருந்த வாட்சின் மீது அவன் பார்வை பதிந்தது.

கையை நீட்டி, பிலிப்பின் மணிக்கட்டிலிருந்து ஒரே இழுப்பாக இழுத்தான். இழுக்கும்போது பிலிப்பின் இடது கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, கூரிய கத்தியினால் மணிக்கட்டில் வெட்டினான். எலும்பு வரை கத்தி பாய்ந்தது.

வலி தாங்காமல் பிலிப் வீறிட்டு அலறினான். ரத்தம் பரிட்டுக் கொட்டியது. அந்த ஆள் ஓடிவிட்டான்.

அதிர்ச்சியுடன் ஒரு நிமிடம் நின்றான் பிலிப்.

கையிலிருந்து கொட்டும் ரத்தம் மழை நீருடன் கலந்து தெருவில் ஒடுவதைப் பார்த்தான்.

மறுவினாடி மயக்கம் போட்டு விழுந்தான்.

ரெனோவில் இருந்த லாராவுக்குச் செய்தி பறந்தது.

மரியன்தான் போன் செய்தாள். ஹிஸ்டீரியா பிடித்தவள் போல இருந்தது அவள் பேசியபோது.

"ரொம்பப் பயங்கரமான காயமா?" என்று லாரா கேட்டாள்.

"விவரம் எதுவும் இன்னும் தெரியவில்லை. நியூயார்க் ஹாஸ்பிடல் எமர்ஜென்சி வார்டில் சேர்த்திருக்கிறார்கள்."

"உடனே புறப்பட்டு வருகிறேன்."

59

கையில் வெட்டுக் காயத்துடன் பிலிப் படுத்திருந்த ஆஸ்பத்திரிக்கு ஆறு மணி நேரத்தில் லாரா வந்து சேர்ந்தாள். ஹோவார்டு காத்திருந்தான். ஆடிப் போயிருந்தான் அவன்.

"என்ன நேர்ந்தது?" என்று லாரா பதைத்தாள்.

"கார்னெகி ஹாலை விட்டுப் பிலிப் வெளியே வந்தபோது யாரோ வழிப்பறி செய்து தாக்கியிருக்கிறார்கள். நினைவில்லாமல் தெருவில் கிடந்தாராம்."

"காயம் ரொம்ப மோசமா"

"மணிக்கட்டில் வெட்டியிருக்கிறார்கள். மயக்க மருந்து கொடுத்துச் சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஆனால் நினைவோடு இருக்கிறார்."

பிலிப் படுத்திருந்த அறைக்குச் சென்றார்கள். உடலெங்கும் ட்யூப்கள் செலுத்தப்பட்டிருந்தன, உணவுக் காகவும் மருந்துக்காகவும்.

"பிலிப்... பிலிப்..."

லாராவின் குரல் எங்கோ வெகு தூரத்தில் ஒலிப்பது போல அவனுக்குக் கேட்டது. கண்ணைத் திறந்தான். லாராவும் ஹோவார்டும் இரண்டிரண்டாக நிற்பது போல அவனுக்குத் தெரிந்தது.

வாய் உலர்ந்திருந்தது. தொண்டை வறண்டிருந்தது. "என்ன நேர்ந்தது?" என்று முனகினான்.

"லேசாகக் காயம்." என்றாள் லாரா. "சரியாகி விடும்."

பிலிப் பார்வையைத் தாழ்த்தினான். இடது கையில் பலத்த கட்டுப் போட்டிருப்பதைக் கண்டான். வெள்ளம் போல் எல்லாம் நினைவில் வந்தன. "என்னை... என்னை... ஒருத்தன் வழிமறித்தான். என் பர்ஸையும் வாட்சையும் பறித்துவிட்டு என் கையை வெட்டினான்..."

அவனால் பேசவே முடியவில்லை.

ஹோவார்டு சொன்னான்: "இசை மன்றத்தின் காவல்காரன் நீங்கள் தெருவில் கிடப்பதைப் பார்த்தான். நிறைய ரத்தம் சேதாரம் ஆகியிருக்கிறது உங்களுக்கு."

கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பியது. மீண்டும் தன் கையைப் பார்த்துக் கொண்டான். "என் கையை மணிக்கட்டில் வெட்டினான் அந்த ஆள். காயம் எப்படி இருக்கிறது? ரொம்ப மோசமா?"

"தெரியவில்லை டார்லிங்." என்றாள் லாரா. "நிச்சயமாகச் சரியாகி விடும். டாக்டர் இதோ வந்து கொண்டிருக்கிறார் உங்களைப் பார்க்க."

ஹோவார்டு அவனுக்குத் தைரியமூட்டும் வகையில், "இந்தக் காலத்தில் டாக்டர்கள் எவ்வளவோ அற்புதமாகச் சிகிச்சைகள் செய்கிறார்கள்." என்றான்.

பிலிப்பைத் தூக்கம் மறுபடி ஆட்கொண்டது.

"அவனிடம் சொன்னேன், எது வேண்டு மானாலும் எடுத்துக் கொள் என்றேன். அவன் என் கையை வெட்டியிருக்கத் தேவையில்லை. எதற்காக வெட்டினான்? வெட்டி யிருக்கவே தேவையில்லையே..."

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு டாக்டர் டென்னிஸ் உள்ளே வந்தார். அவர் முகத்தைக் கண்ட அந்தக் கணமே பிலிப்புக்குப் புரிந்துவிட்டது. அவர் என்ன சொல்லப் போகிறாரென்று.

மூச்சைப் பிடித்துக் கொண்டு, "சொல்லுங்கள்." என்றான்.

டாக்டரிடமிருந்து நெடு மூச்சு வெளிப்பட்டது. "நல்ல நியூஸ் எதுவும் சொல்கிற மாதிரி இல்லை, மிஸ்டர் பிலிப்."

"ரொம்ப மோசமா?"

"மாணிக்கட்டில் நுண்ணிய நரம்புகள் வெட்டப்பட்டு விட்டன. ஆகவே கௌயை அசைக்க முடியாது. ஒரு நிரந்தரமான மரப்பு ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர வேறு சில நரம்புகளும் துண்டுபட்டு விட்டது." தன் கையில் அந்த இடங்களைச் சுட்டிக் காட்டி விளக்கினார். "இதோ இந்த நரம்பு துண்டிக்கப்பட்டதால் கட்டை விரலையும் முதல் மூன்று விரல்களையும் அசைக்க முடியாது. இதோ இந்த நரம்பு துண்டிக்கப்பட்டதால் எல்லா விரல்களுமே பாதிக்கப்பட்டு விட்டன."

பிலிப் கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டான். தாளமுடியாத அதிர்ச்சி திடுப்பென அவனைக் காலோடு தலை மூடிக் கொண்டது. ஒரு நிமிடம் கழித்து மெதுவே கேட்டான். "அதாவது இனி மேல்... இனிமேல் என் இடது கையை உபயோகிக்கவே முடியாது என்றா சொல்கிறீர்கள்?"

"ஆமாம். உண்மையில் நீங்கள் உயிரோடு தப்பியதே பெரிய அதிர்ஷ்டம். ரத்தக் குழாயில் வெட்டியிருக்கிறான். ரத்தம் கொட்டிக் கொட்டி உங்கள் உயிரே போயிருக்கும். தப்பினீர்கள். மணிக் கட்டில் அறுபது தையல் போட்டிருக்கிறோம்."

"கடவுளே, கடவுளே," என்று பரிதாபமாக முனகினான் பிலிப், "டாக்டர், நீங்கள் எதுவுமே செய்ய முடியாதா?"

"செய்யலாம். உங்கள் இடக்கையில் சில செயற்கை உறுப்புகளைப் பொருத்த முடியும். அப்போதும்கூட ரொம்பக் கொஞ்சமாகத்தான் கையை இயக்க முடியும்."

"ஐயோ! இதைக் காட்டிலும் அவன் என்னைக் கொன்றே இருக்கலாமே?" என்று பிலிப்பின் உள்ளம் கதறியது.

"கையில் காயம் ஆற ஆற ரொம்ப வலி இருக்கும். அதைக் கட்டுப்படுத்த மருந்துகள் தருகிறோம். கொஞ்ச நாளில் அந்த வலி போய்விடும்."

‘அந்த வலி போய்விடும். ஆனால் அசல் வலி? என் உள்ளத்தில் ஏற்பட்டு விட்ட வலி? அது போகவே போகாதே!’ என்று எண்ணிக் கொண்டான் பிலிப், பயங்கரமான எண்ணங்கள் அவனைச் சூழ்ந்து கொண்டன. இதிலிருந்து தப்பிக்க மாட்டோம்... தப்பிக்கவே மாட்டோம்...

ஒரு போலீஸ் அதிகாரி பிலிப்பைச் சந்திக்க ஆஸ்பத்திரிக்கு வந்தார். பிலிப்பின் படுக்கையருகே நின்று அவனையே பார்த்தவாறிருந்தார். பழங்காலத்து ஆசாமி. வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். இம்மாதிரிக் கொடூரங்களைப் பலமுறை பார்த்திருக்கும் களைப்பு அவர் கண்களில் தென்பட்டது.

"என் பெயர் மான்ஸினி, நடந்ததைக் கேள்விப் பட்டேன். ரொம்ப வருத்தமாக இருக்கிறது, மிஸ்டர் பிலிப். இதைக் காட்டிலும் உங்கள் காலை வெட்டியிருக்கலாம். ஏனென்றால்..."

"நீங்கள் சொல்வது புரிகிறது." என்றான் பிலிப் சுருக்கமாக.

ஹோவார்டு உள்ளே வந்தான், "லாரா வந்து... அவளை..." என்றவன் பிலிப்புடன் ஒர் அன்னியரும் இருப்பதைக் கண்டான். "ஸாரி," என்று கூறித் திரும்ப முனைந்தான்.

"இங்கேதான் எங்கேயோ இருந்தாள்?" என்றான் பிலிப். "இவர் போலீஸ் அதிகாரி மான்ஸினி. இவர் ஹோவார்டு."

மான்ஸினி ஹோவார்டையே கூர்ந்து பார்த்தார். "உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது. நாம் இதற்கு முன் சந்தித்திருக்கிறோமா?"

"இல்லையே..."

மான்ஸினியின் முகம் பிரகாசமடைந்தது. "ஹோவார்டு! ஆமாம்! நீங்கள் ஹோவார்டுதானே? நீங்கள் சிகாகோவில் பேஸ்பால் வீரராக இருந்தீர்கள் இல்லையா?"

"ஆமாம். எப்படி உங்களுக்கு...?"

"ஒரு பேஸ்பால் சீசன்போது நான் அங்கே ட்யூட்டி பார்த்தேன். நீங்கள் எவ்வளவு பிரமாதமாக விளையாடினீர்கள்! பேஸ்பால் ஆட்டத்தில் ரொம்ப மேலே வருவர்கள் என்று எல்லாரும் சொன்னார்கள்."

"நல்லது. கொஞ்சம் மன்னிக்கணும்." என்றவன் பிலிப்பிடம், "லாராவுக்காக வெளியே காத்திருக்கிறேன்." என்று கூறிவிட்டு வெளியேறினான்.

மான்ஸினி தன் விசாரணையைத் தொடர்ந்தார் பிலிப்பிடம். "உங்களைத் தாக்கியவனின் முகத்தைப் பார்த்தீர்களா?"

"ஆமாம். கட்டு மஸ்தான ஆள். சுமார் ஆறடி இரண்டங்குல உயரம். ஐம்பது வயது இருக்கலாம்."

"அவனை மறுபடி பார்த்தால் அடையாளம் காட்ட முடியுமா?"

"முடியும்." என்றான் பிலிப். அந்த முகத்தை அவனால் மறக்க முடியுமா என்ன?

"உங்களிடம் ஏகப்பட்ட வழிப்பறித் திருடர்களின் படங்களைக் காட்டி, உங்களைத் தாக்கியவன் இவர்களில் எவனாவது இருக்கிறானா என்று அடையாளம் காட்டச் சொல்லிக் கேட்க முடியும். ஆனால் அதில் நேரம்தான் வீண்." அவர் தன் நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டார். "உங்களிடமிருந்து அவன் என்னென்ன பறித்தான்"

"என் பர்ஸும், கைக் கடியாரமும்."

"என்ன மாதிரி கடியாரம்?"

அதன் பெயரைச் சொன்னான் பிலிப்.

"குறிப்பாக அதில் ஏதேனும் அடையாளம் உண்டா? பெயர் கியர் பொறித்து..."

அது லாரா அவனுக்குப் பரிசளித்த கடியாரம். "ஆமாம், அதன் பின்புறம் பிலிப்புக்கு லாரா அன்புடன் என்று பொறித்திருக்கும்."

மான்ஸினி அதைக் குறித்துக் கொண்டார். "மிஸ்டர் பிலிப், ஒரு கேள்வி கேட்க வேண்டும். அந்த ஆளை முன்னாடி எங்காவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?"

அந்த கேள்வி பிலிப்புக்கு ஆச்சரிய மூட்டியது. "முன்னாடி பார்த்திருப்பதா? இல்லையே? ஏன்?"

"ஒன்றுமில்லை, கேட்டேன்." என்று சொல்லிவிட்டு நோட்டுப் புத்தகத்தை மூடி னார் மான்ஸினி. "எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஒரு வகையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் மிஸ்டர் பிலிப்."

"அப்படியா?" பிலிப்பின் குரலில் கசப்பு நிறைந்திருந்தது.

"ஆமாம். இந்த நகரத்தில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான வழிப்பறிகள் நடக்கின்றன. ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருக்க எங்களுக்கு நேரம் கிடையாது. ஆனால் எங்கள் பெரிய போலீஸ் அதிகாரி உங்களுடைய விசிறி. நீங்கள் பாடியுள்ள அத்தனை இசைத்தட்டுக்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். உங்களை இப்படித் தாக்கிய வேசி மகனை எப்பாடு பட்டாவது பிடித்தாக வேண்டும் என்பதில் ரொம்பத் தீவிரமாக இருக்கிறார். உங்கள் கடியாரத்தைப் பற்றிய விவரங்களை நாட்டில் உள்ள எல்லா அடகுக் கடைகளுக்கும் அனுப்பப் போகிறோம்."

"அவனைப் பிடித்து விட்டால் என் கையைத் திருப்பித் தரமுடியுமா?" என்றான் பிலிப் வெறுப்புடன்.

"என்ன?"

"ஒன்றுமில்லை."

"விரைவில் தகவல் சொல்கிறோம். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்."

வெளியே வராந்தாவில் லாராவும், ஹோவார்டும் காத்திருந்தார்கள்.

"மேடம், உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்." என்றார் மான்ஸினி. "உங்களுக்குத் தெரிந்து உங்கள் கணவருக்கு விரோதிகள் யாரேனும் உண்டா?"

லாராவின் நெற்றி சுருங்கியது. "விரோதிகளா? இல்லையே? ஏன் கேட்கிறீர்கள்?"

"அவரிடம் பொறாமை கொண்டவர்கள் யாராவது இருக்கலாம். சங்கீதக்காரர்கள். அவரைக் காயப்படுத்த வேண்டுமென்று எண்ணியிருக்கலாம்."

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. இது ஒரு சாதாரண வழிப்பறிதானே? இல்லையா?"

"உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன், வழக்கமான வழிப்பறி ரகமாக இது இல்லை. உங்கள் கணவனின் பர்ஸையும் வாட்சையும் பறித்துக் கொண்டதற்குப் பிறகு அவருடைய கையை வெட்டியிருக்கிறான்."

"அதனால்?"

"வேண்டுமென்றே அப்படிச் செய்திருக்க வேண்டும். இத்தனைக்கும் உங்கள் கணவர் அவனை எதிர்த்துச் சண்டை கிண்டை எதுவும் போடவில்லை. வழிப்பறி செய்தவன் பையனாக இருந்தாலாவது போதை மயக்கம் என்று சொல்லலாம். ஆனால் இவன் பெரிய ஆள்."

அவர் போவதையே பார்த்துக்கொண்டு நின்றார்கள் இருவரும்.

"அடக் கடவுளே! யாரோ செட்டப் பண்ணியிருக்கிறார்கள் என்கிற மாதிரி அல்லவா பேசுகிறார்" என்றான் ஹோவார்டு.

லாராவின் முகம் வெளிறிப் போயிருந்தது.

அதைக் கவனித்த ஹோவார்டு மெதுவாகச் சொன்னான்: "ஒரு வேளை பால் மார்ட்டினின் அடியாள் எவனாவது செய்திருப்பானோ? ஆனால் அவர் எதற்காக அப்படி ஆள் அமர்த்தி..."

லாராவுக்கு வார்த்தையே வரவில்லை. "அவர்... எனக்கு நல்லது செய்வதாக நினைத்திருக்கலாம். பிலிப் அடிக்கடி என்னைப் பிரிந்து வெளியூர்களுக்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. பிலிப்புக்குச் சூடு கொடுக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார். ஹோவார்டு... ஐயோ..." அவன் தோளில் அவள் முகம் புதைத்துக் கண்ணீரை அமுக்கிக் கொண்டாள்.

"அவன் சுத்தப் பொறுக்கி அவனிடம் எதுவும் வைத்துக் கொள்ளாதே என்று எவ்வளவு முறை சொன்னேன்?" என்றான் ஹோவார்டு.

60

லாரா கண்களைத் துடைத்துக் கொண்டாள். "பிலிப்புக்குச் சரியாகிவிடும். சரியாகத்தான் வேண்டும்."

மூன்று நான் சென்றது, பிலிப்பை ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தாள் லாரா. உடல் வாடி, ஆடிப் போயிருந்தான் அவன்.

வாசலில் நின்று அவர்களை வரவேற்றாள் மரியன், ஒவ்வொரு நாளும் அவள் ஆஸ்பத்திரிக்குப் போவதும் அவன் சொல்லியனுப்புவதை வந்து சொல்வதுமாக இருந்தாள்.

உலகெங்கிலுமிருந்து அவனுக்கு அனுதாபச் செய்திகள் வந்து குவிந்த வண்ணமிருந்தன. அவன் விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்தனைகள், கடிதங்கள், போன் கால்கள். அவனுடைய விசிறிகள் மனம் நொறுங்கிப் போயிருந்தார்கள். பத்திரிகைகள் இந்த நிகழ்ச்சியை வைத்து. நியூயார்க் நகரில் வன்முறை தாண்டவமாடுவதைக் கண்டித்து எழுதின.

டெலிபோன் மணியடித்தது. லாரா அப்போது தனது நூலக அறையில் இருந்தாள்.

"உங்களுக்குத்தான் மேடம்...- பால் மார்ட்டின் என்று ஒருவர் கூப்பிடுகிறார்." என்றாள் மரியன்.

"நான்... நான் அவருடன் பேச முடியாது." என்றாள் லாரா. நிற்கவே தள்ளாடுகிற மாதிரி உடம்பு நடுங்கியது.

திடீரென்று லாராவின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது.

ஹோவார்டிடம் லாரா சொன்னாள்: "இனிமேல் நான் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கப் போகிறேன். பிலிப்பைப் பார்த்துக் கொள்ள வேண்டும்."

"புரிகிறது. லாரா. தாராளமாய் அப்படியே செய்."

பிலிப் குணமடைய வேண்டுமென்று கூறி நல்வாழ்த்துக் கார்டுகள் கொட்டிக் கொண்டேயிருந்தன. கடவுளே பார்த்து அனுப்பிய மாதிரி மரியன் துணை நின்றாள். தன் சொந்த வேலைகளைத் துறந்தாள். அவர்களுடைய அன்றாட வேலைகளில் இடைஞ்சல் செய்யாமல் இருந்தாள். "இந்தக் கடிதங்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள், மேடம். தான் கவனித்துக் கொள்கிறேன்." என்றாள்.

"தாங்க் யூ..."

பிலிப்பின் மானேஜரான வில்லியம் பல தடவை போன் செய்தார். ஆனால் பிலிப் பேசவில்லை. "எனக்கு யாருடனும் பேசப் பிடிக்கவில்லை." என்று கூறிவிட்டான்.

ரொம்பவும் வலி இருக்குமென்று டாக்டர் டென்னிஸ் சொன்னது சரிதான். வலி உயிர் போகிற மாதிரி இருந்தது. வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிடு இதைச் கூடுமான வரையில் தவிர்த்துப் பார்த்தான் பிலிப். முடியவில்லை.

எப்போதும் அவனருகிலேயே இருந்தாள் லாரா, "உலகத்தின் தலைசிறந்த டாக்டர்களை வரவழைத்து வைத்தியம் பார்க்கப் போகிறேன், டார்லிங். உங்கள் கையைச் சரி செய்வதற்கு ஏதாவது ஒரு வழி இல்லாமல் போகாது. ஸ்விட்ஸர்லாந்தில் ஒரு டாக்டர்..."

பிலிப் தலையை அசைத்தான். "அதெல்லாம் பிரயோசனப்படாது." கட்டுப்போட்ட கையைப் பார்த்துக் கொண்டான். "இல்லை... நான் முடமானவன்... முடமானவன்தான்."

"இன்னொரு முறை இந்த மாதிரி பேசாதீர்கள்!" என்று கடுமையாகச் சொன்னாள் லாரா. "ஆயிரம் காரியங்கள் உங்களால் செய்ய முடியும். இவ்வளவுக்கும் காரணம் நான் தான் என்று என்னை நானே திட்டிக் கொள்ளாத நாளில்லை. அன்று நான் ரெனோவுக்குப் போகாமல் இருந்திருந்தால், அன்றைய இசை நிகழ்ச்சியின் போது நான் உங்களுடன் இருந்திருந்தால், உங்களுக்கு இந்த விபத்து நேர்ந்திருக்காது."

பிலிப் வெறுப்புடன் சிரித்தான். "நான் வீட்டில் அதிகமாக இருக்க வேண்டும் என்று நீ ஆசைப் பட்டாய். இப்போது நான் போவதற்கு எந்த இடமும் கிடையாது."

லாரா தழுதழுத்த குரலில் சொன்னாள்: "யாரோ ஒர் அறிஞர் சொன்னார் - நீ எதற்கு ஆசைப்படுகிறாயோ அதைப் பற்றி எச்சரிக்கையாக இரு. ஏனென்றால் அது கிடைத்தாலும் கிடைத்து விடும்" என்று. நீங்கள் வீட்டில் இருக்கவேண்டுமென்று தான் ஆசைப்பட்டேன். ஆனால் இந்த மாதிரி இல்லை. நீங்கள் வேதனைப் படுவதைப் பார்க்க எனக்குத் தாளவே இல்லை."

"என்னைப் பற்றி கவலைப்படாதே." என்றான் அவன். "சில காரியங்களைச் செய்ய வேண்டுமென்று என் மனசுக்குள் நினைத்திருந்தேன். அதற்குள் திடீரென்று இப்படி நிகழ்ந்து விட்டது. அந்தக் காரியங்கள் இன்னும் பூர்த்தியாக வில்லை.

சில ஒப்பந்தங்களில் லாராவிடம் கையெழுத்து வாங்குவதற்காக அவள் வீட்டுக்கு வந்திருந்தான் ஹோவார்டு...

"ஹலோ பிலிப், எப்படி இருக்கிறீர்கள்?" என்று அவன் விசாரித்ததும்

"ஆகா! அற்புதம்!" என்று வெடுக்கெனப் பதிலளித்தான் பிலிப். "ரொம்பப் பிரமாதம். இது போல் எப்போதும் இருந்ததில்லை!"

"நான் மடத்தனமாகக் கேட்டு விட்டேன். ஸாரி."

"என்னைப் பொருட்படுத்தாதீர்கள்," என்று மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னான் பிலிப், "கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை," என்றவன் வலது கையினால் தன் நாற்காலியில் குத்தினான்.

"அந்த அயோக்கிய ராஸ்கல் என் வலது கையை வெட்டியிருக்கக் கூடாதா? இடது கையினால் பியானோவில் வாசிக்கக் கூடிய பாட்டுக்கள் ஒரு டஜன் போல இருக்கின்றன. அதை நான் சுலபமாக வாசித்திருப்பேன்."

முன்னொரு நாள் ஒரு பார்ட்டியில் கேட்ட சம் பாஷணை ஹோவார்டுக்கு ஞாபகம் வந்தது. ‘ஓ! இடது கையால் வாசிக்கக் கூடிய பாட்டுக்கள் எவ்வளவோ இருக்கிறதே! அரை டஜன் இசையமைப் பாளர்கள் இடக்கைக்குப் பாட்டு அமைத்திருக்கிறார்கள்’ என்று கூறிய ஒருவர் சில இசையமைப்பாளர்களின் பெயரையும் குறிப்பிட்டது ஹோவார்டுக்கு நினைவுக்கு வந்தது.

அந்தப் பார்ட்டியில் பால் மார்ட்டின் இருந்தார். அவரும் அந்தப் பேச்சைக் கேட்டிருந்தார்.

பிலிப்பைப் பரிசோதிப்பதற்காக டாக்டர் வந்தார். பிலிப்பின் கைக் கட்டைக் கவனமாகப் பிரித்தார். நீளமான, ஆத்திரமான ஒரு வடு அங்கே இருந்தது.

"கையை வளைக்க முடிகிறதா பாருங்கள்." என்றார் டாக்டர்.

பிலிப் முயற்சி செய்தான், முடியவில்லை.

"வலி எப்படி இருக்கிறது?" என்று டாக்டர் கேட்டார்.

"ரொம்பத்தான் வலிக்கிறது. ஆனால் அந்தப் பாழாய்ப் போன வலி நிவாரண மாத்திரைகள் வேண்டவே வேண்டாம், டாக்டர்."

"எதற்கும் நான் வேறு சில மாத்திரைகளை எழுதித் தருகிறேன். வலிக்கிறபோது கட்டாயம் சாப்பிடுங்கள். நிஜமாகவே சொல்கிறேன், இன்னும் சில வாரங்களில் வலி நின்று விடும்." அவர் எழுந்து கொண்டார். "ஐம் ஸாரி பிலிப். நான் உங்களுடைய பெரும் விசிறி."

"என் இசைத் தட்டுக்களை வாங்குங்கள்." என்று பிலிப் சிடுசிடுத்தான்.

செக்ரட்டரி மரியன் ஒரு நாள் லாராவிடம் கேட்டாள். "ஏன் மேடம், ஒரு மஸ்ஸாஜ்காரர் - தெரபிஸ்ட் என்பார்களே அவரைக் கூப்பிடலாமா? மிஸ்டர் பிலிப் பின் கைக்கு அவர் சிகிச்சை அளித்துப் பார்க்கட்டுமே?"

லாரா யோசனை செய்தாள். "முயற்சி பண்ணலாம், ஒன்றும் நஷ்டமில்லை."

ஆனால் பிலிப்பிடம் அவள் அந்த யோசனையைக் கூறியபோது அவன் மறுத்துத் தலையசைத்தான், "வேண்டாம். அதிலென்ன லாபம்? டாக்டர்தான் எதுவும் நடக்காது என்று சொல்லி விட்டாரே?"

"டாக்டர் சொல்வது தப்பாக இருக்கலாமில்லையா?" என்றாள் லாரா உறுதியுடன். "எல்லா முயற்சிகளையும் தான் செய்து பார்க்க வேண்டும்."

மறுநாள் இளைஞரான ஒரு தெரப்பிஸ்ட் லாராவின் வீட்டுக்கு வந்தார். லாரா அவரைப் பிலிப்பிடம் அழைத்துச் சென்றாள். "இவர் பெயர் ராஸ்மன். கொலம்பியா ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறார். உங்களுக்கு சிகிச்சை செய்ய வந்திருக்கிறார்." என்று அறிமுகப்படுத்தினாள்.

"என் வாழ்த்துக்கள்," என்றான் பிலிப் கசப்பாக. "நான் கையைப் பார்க்கட்டுமா மிஸ்டர் பிலிப்?"

பிலிப் கையை நீட்டினான். ராஸ்மன் அதைக் கவனமாக ஆராய்ந்தார். "பல தசைநார்கள் சேதமாயிருக்கிறது. எதற்கும் என்ன செய்ய முடியுமென்று பார்ப்போம். விரல்களை அசைத்துப் பாருங்கள்."

பிலிப் முயற்சி செய்தான்.

"அப்படியொன்றும் அசையவில்லைதான். அதற்குப் பயிற்சி கொடுக்கிறேன்."

பயிற்சியில் வலி தாள முடியாததாக இருந்தது.

அரை மணி நேரம் அவர் பயிற்சிகள் சொல்லித் தந்தார். முடிவில் "நாளைக்கு மறுபடி வருகிறேன்." என்று எழுந்து கொண்டார்.

"வேண்டாம், சிரமப்படாதீர்கள்." என்றான் பிலிப்.

லாரா உள்ளே வந்தாள், "ஏன் பிலிப், முயற்சி செய்து பார்க்கக் கூடாதா?"

"செய்து பார்த்து விட்டேன்." என்று அவன் சீறினான். "உனக்குப் புரியவில்லையா லாரா? என் கை செத்தே போய்விட்டது. யாராலும் அதற்குத் திரும்ப உயிர் கொடுக்க முடியாது."

"பிலிப்..." அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது.

ஸாரி... நான்... வந்து, கொஞ்சம் டயம் கொடு." என்றான் பிலிப்.

அன்று இரவு, பியானோ ஒலி கேட்டு லாரா விழித்துக் கொண்டாள்.

படுக்கையிலிருந்து எழுந்து வரவேற்பு அறையின் கதவருகே நின்று பார்த்தாள்.

பிலிப் தன் வலது கையினால் பியானோவை மெல்லத் தட்டிக் கொண்டிருந்தான், நிமிர்ந்து பார்த்தவன் லாராவைக் கவனித்தான்.

"ஸாரி... உன் தூக்கத்தைக் கெடுத்து விட்டேனா?"

லாரா அவனருகே வந்தாள். "டார்லிங்..."

"பெரிய ஜோக்தான்! இல்லையா லாரா? நீ கல்யாணம் செய்து கொண்டது ஒரு பியானோ கலைஞனை. வாழ்க்கையை முடித்துக் கொள்வதோ ஒரு முடவனுடன்."

அவன் இடையை இறுக்கி அணைத்துக் கொண்டாள் லாரா, "நீங்கள் முடவன் அல்லவே அல்ல. எவ்வளவோ காரியங்கள் தங்களால் செய்ய முடியும்."

"பாட்டியம்மா மாதிரி பேசாதே."

"ஸாரி... நான் என்ன சொல்கிறேன் என்றால்..."

"புரிகிறது, லாரா. என்னை மன்னி." வெட்டப்பட்ட கையை உயர்த்திக் காட்டினான் அவன். "இதை இன்னும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை."

"படுக்கலாம் வாருங்கள்."

"நீ முன்னே போ, நான் அப்புறம் வருகிறேன்."

லாரா போன பிறகு இரவு பூரா விழித்தபடி உட்கார்ந்திருந்தான் பிலிப். தன் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தனை செய்த வண்ணம்.

அவனுக்குள் சீற்றம் பொங்கியது. எதிர்காலமா! என்ன எதிர்காலம்!

ஒவ்வொரு இரவும் பிலிப்பும் லாராவும் சேர்ந்து உணவு அருந்தினார்கள். அதன் பின்னர் சிறிது படித்து விட்டு, அல்லது டெலிவிஷன் பார்த்துவிட்டு, படுக்கச் செல்வார்கள்.

பிலிப் மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னான். கணவன் என்கிற முறையில் தான் மோசமாக இருக்கிறேன், லாரா. எனக்கு. எனக்கு ஸெக்ஸில் அவ்வளவாக விருப்பம் வரமாட்டேன் என்கிறது. ஆனால் அது உன்னுடைய குறை அல்ல, என்னை நம்பு.

லாரா படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். அவள் குரல் நடுங்கியது. "பிலிப், உங்களை உடம்புக்காக நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. உங்கள் மீது தீராத காதல் கொண்டேன். இன்றும் கொண்டிருக்கிறேன். அதனால்தான் கல்யாணம் செய்து கொண்டேன். இனி நம் வாழ்க்கையில் ஸெக்யோ கிடையாது என்றால்கூட எனக்குச் சந்தோஷம்தான். நீங்கள் என்னை அணைத்துக் கொண்டு, ‘உன்னைக் காதலிக்கிறேன்.’ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். எனக்கு அதுவே போதும்."

"நிச்சயமாய் உன் மீது எனக்குக் காதல்தான்." என்றான் பிலிப்.

டின்னர் பார்ட்டிகளுக்கும் நிதியுதவி நிகழ்ச்சிகளுக்கும் இடைவிடாத அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் எதற்கும் பிலிப் போகவில்லை. அபார்ட்மெண்ட்டை விட்டு வெளியே போகவே அவன் விரும்பவில்லை.

அலுவலக மீட்டிங்குகள் அனைத்தையும் தன் வீட்டிலேயே நடைபெறுமாறு அவள் ஏற்பாடு செய்திருந்தாள். பகல் வேளைகளில் கட்டாயமாக வெளியே போக வேண்டியிருந்தால் மரியானைக் கூப்பிட்டு, "சில மணி நேரம் நான் வெளியே போக வேண்டியிருக்கிறது. பிலிப்பைப் பார்த்துக் கொள்." என்பாள்."

"நிச்சயமாய்," என்று அவள் உறுதி கூறுவாள்.

ஒரு நாள் காலை லாரா பிலிப்பிடம், "டார்லிங், உங்களை விட்டுப் போகவே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு நாள் கிளீவ்லண்ட் வரை போக வேண்டியிருக்கிறது. சமாளித்துக் கொள்வீர்களா?" என்று கேட்டாள்.

"தாராளமாய். நான் அவ்வளவு மோசமில்லை. போய்விட்டு வா. என்னைப் பற்றிக் கவலைப்படாதே." என்றான் பிலிப்.

அன்று அவன் பதிலெழுத வேண்டிய கடிதங்கள் சிலவற்றை டைப் அடித்து எடுத்து வந்தாள் மரியன், "இவற்றில் கையெழுத்துப் போடுகிறீர்களா மிஸ்டர் பிலிப்"

"ஒ. கொடு. நல்லவேளை, எனக்கு வலது கை இருக்கிறது இல்லையா?" என்றான் பிலிப். அவன் குரலில் எரிச்சல் தென்பட்டது. மரியமை நோக்கி, "ஸாரி. உன்னிடம் என் எரிச்சலைக் காட்டி விட்டேன்." என்றான்.

மரியன் அமைதியாகப் பதிலளித்தாள். "பரவாயில்லை, மிஸ்டர் பிலிப். நீங்கள் ஏன் நாலு இடங்களுக்குப் போய் உங்கள் சினேகிதர்களைப் பார்க்கக் கூடாது?

"என் சினேகிதர்கள் எல்லோருக்கும் வேலை இருக்கிறது!" என்று கடு கடுப்புடன் பதிலளித்தான்.

அவன். "என் சினேகிதர்கள் எல்லாரும் சங்கீதக்காரர்கள். இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார்கள். ஏன் மரியம் இப்படி முட்டாள்தனமாகப் பேசுகிறாய்?"

புயலென அறையை விட்டு வெளியேறினான் பிலிப்.

61

சப்புடன் திட்டி விட்டுச் சென்ற பிலிப்பையே பார்த்தவாறு நின்றிருந்தான் மரியம்.

ஒரு மணி நேரம் கழித்து அலுவலக அறைக்குத் திரும்பி வந்தான் பிலிப். மரியம் டைப் செய்து கொண்டிருந்தாள்.

"மரியம்..."

அவள் நிமிர்ந்து பார்த்தாள். "எஸ், மிஸ்டர் பிலிப்?"

"தயவு செய்து என்னை மன்னித்துவிடு. நான் அப்படி முரட்டுத்தனமாகப் பேசியிருக்கக் கூடாது. நிதானம் இழந்து விட்டேன்."

"எனக்குப் புரிகிறது." என்றாள் அவள் அமைதியாக.

அவன் அவள் எதிரில் உட்கார்ந்தான். "நான் ஏன் வெளியே போவதில்லையென்றால், நான் ஏதோ ஒரு விசித்திர ஜந்து மாதிரி உணர்கிறேன்." என்றான். "எல்லாரும் என் கையைத்தான் பார்ப்பார்கள். நிச்சயம். நான் எவருடைய பரிதாபத்தையும் விரும்பவில்லை."

அவள் அவனைப் பார்த்தபடி இருந்தாளே தவிர, பதிலேதும் கூறவில்லை.

"நீ என்னிடம் மிகவும் கருணையுடன் இருக்கிறாய். அதை நான் பாராட்டுகிறேன், நிஜமாகவே பாராட்டுகிறேன். ஆனால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நீ கேள்விப்பட்டிருப்பாயே, பெரிய ஆளாக இருக்க இருக்க, விழும்போது பெரிய காயமாக ஏற்படும், என்று, நல்லது. நான் பெரிய ஆளாக இருந்தேன் மரியம், ரொம்பப் பெரிய ஆளாக! நான் பியானோ வாசிப்பதைக் கேட்க எவ்வளவு பேர் வந்தார்கள்! ராஜாக்கள்... ராணிகள்..." அவன் குரல் தழுதழுத்தது. "உலகமெங்கிலும் மக்கள் என் இசையைக் கேட்டார்கள். நான் சீனாவிலும் ரஷ்யாவிலும் இந்தியாவிலும் ஜெர்மனியிலும் கச்சேரிகள் நடத்தினேன்." அவனுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. கன்னங்களில் கண்ணீர் உருண்டு விழத் தொடங்கின. "கொஞ்ச நாளாக நான் நிறையவே அழுகிறேன். நீ கவனித்தாயா?" தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள அவன் போராடினான்.

மரியம் மென்மையாகச் சொன்னான், "ப்ளீஸ். அழாதீர்கள். எல்லாம் சரியாகிவிடும்."

"ஆகாது! எதுவும் சரியாகாது. எதுவுமே! நான் உருப்படாமல் போய்விட்ட முடவன்!"

"அப்படிச் சொல்லாதீர்கள். உங்களால் நூறு காரியங்கள் செய்ய முடியுமென்று மிஸஸ் பிலிப் சொல்கிறார். அது சரிதான். இந்த வலி நீங்கியதும் அதையெல்லாம் நீங்கள் செய்ய ஆரம்பிப்பீர்கள்."

பிலிப் ஒரு கைக்குட்டையை எடுத்துத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் "சே! வரவர நான் சுத்த அழுமூஞ்சிக் குழந்தையாக ஆகிவிட்டேன்!"

"அழுவதால் ஏதாவது பலன் கிடைத்தால் சரி. அழுங்கள்." என்றாள் மரியம்.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தான். "உனக்கு என்ன வயதாகிறது?’

"இருபத்தாறு."

"இருபத்தாறு வயதில் சாமியார் மாதிரி பேசுகிறாயே!"

"இல்லை. உங்கள் மனம் என்ன பாடுபடுகிறது என்று எனக்குப் புரிகிறது. அவ்வளவுதான். அந்த விபத்து நடந்திராமல் இருந்தால் எவ்வளவோ நன்றாகத் தான் இருந்திருக்கும். ஆனால் நடந்தது நடந்துவிட்டது. இந்த நிலைமையில் வேறு என்ன செய்ய முடியும் என்றுதான் நீங்கள் பார்க்க வேண்டும்."

"நீ உன் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறாய், பாவம்."

"சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா?"

"தாங்க்ஸ். வேண்டாம். பகடை விளையாட்டு உனக்குப் பிடிக்குமா?"

"நிறையப் பிடிக்கும், மிஸ்டர் பிலிப்."

"என்னுடன் பகடை விளையாடுவதென்றால் முதலில் என்னை பிலிப் என்றே கூப்பிடு." என்றான் பிலிப்.

"பிலிப்." என்றாள் அவள்.

அது முதல் ஒவ்வொரு நாளும் அவனும் அவளும் சேர்ந்து தாயம் உருட்டிப் பகடை விளையாடத் தொடங்கினார்கள்.

வழக்கறிஞர் டெர்ரி ஹில் போன் செய்தார். "லாரா, உனக்கு ஒரு கெட்ட செய்தி சொல்ல வேண்டும்." என்றார்.

எதையும் கேட்பதற்கு மனத்தை ஆயத்தம் செய்து கொண்டாள் லாரா, "சொல்லுங்கள்."

"சூதாட்ட விசாரணைக் கமிஷன் உன்னுடைய காஸினோ லைசன்ஸைப் ஸஸ்பெண்ட் செய்திருக்கிறது. விசாரணை முடிந்த பிறகுதான் தடை நீக்குவார்கள், உன் மீது கிரிமினல் குற்றங்கள் சாட்டக் கூடும்."

என்ன அதிர்ச்சி!

எனினும் பால் மார்ட்டினின் வார்த்தைகள் ஞாபகம் வந்தன. ‘கவலைப்படாதே. அவர்களால் எதையும் நிரூபிக்க முடியாது.’

"டெர்ரி, நாம் எதுவும் செய்ய முடியாதா?" என்றாள்.

"இப்போதைக்கு எதுவும் முடியாது. பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திரு. என்ன செய்யலாமென்று நான் பார்க்கிறேன்." என்றார் வழக்கறிஞர்.

ஹோவார்டிடம் அவள் சொன்ன போது அவன் திடுக்கிட்டுப் போனான். "ஐயோ கடவுளே! நம்முடைய மூன்று கட்டிடங்கள் அடைமானத்தில் இருக்கிறது. அந்தக் கடனை அடைக்க ரெனோ காஸினோவின் வருமானத்தை அல்லவா நம்பிக் கொண்டிருக்கிறோம்? லைசன்ஸைத் திரும்பத் தருவார்களா இல்லையா?"

"தெரியவில்லையே?"

சிறிது யோசனைக்குப் பின் ஹோவார்டு சொன்னான்: "நல்லது, சிகாகோ ஒட்டலை விற்றுவிடுவோம். அதைக் கொண்டு இரண்டன் சொத்துக்கள் மீதுள்ள கடனை அடைப்போம். ரியல் எஸ்டேட் பிஸினஸ் குட்டிச் சுவராய்ப் போய்க் கொண்டிருக்கிறது. பாங்க்குகளும் சேமிப்பு நிறுவனங்களும் கடன் வழங்கும் ஸ்தாபனங்களும் எக்கச்சக்கமான நெருக்கட்டியில் இருக்கின்றன. ஏகப்பட்ட பேர் கடையை மூடி விட்டார்கள்."

"எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிவிடும்." என்றாள் லாரா.

"சீக்கிரத்திலேயே சரியானால் தான் தேவலை. நமது கடன் பாக்கிகளுக்காகப் பாங்க்குகள் நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்."

"கவலைப்படாதீர்கள்," என்றாள் லாரா நம்பிக்கையுடன். "பாங்க்கிற்கு நாம் பத்து லட்சம் கொடுக்க வேண்டியிருந்தால் பாங்க் நமது எஜமான். ஆனால் பத்து கோடி கொடுக்க வேண்டியயிருந்தால் நாம்தான் பாங்க்கின் எஜமான். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அவர்களுக்குத்தான் கஷ்டம். ஆகவே எனக்கு எதுவும் நேராதபடி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்."

மறுநாள் ‘பிஸினஸ் வீக்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதன் தலைப்பில், லாரா சாம்ராஜ்யத்தில் ஆட்டம் - ரெனோ காஸினோ விஷசாயமாக லாரா மீது கிரிமினல் குற்றச்சாட்டு இரும்புப்பட்டாம்பூச்சி தாக்குப் பிடிக்குமா? சாம்ராஜ்யம் நிலைக்குமா?’ என்றிருந்தது.

லாரா சீற்றத்துடன் அந்தப் பத்திரிகையைக் குத்தினாள். "என்ன தைரியம் இவர்களுக்கு இப்படிச் செய்தி வெளியிட! வழக்குப் போடப் போகிறேன் இவர்கள் மீது!"

"அதெல்லாம் சரியாய் வராது." என்றான் ஹோவார்டு.

லாரா ஆர்வத்துடன், "லாரா டவர்ஸ் மொத்தமும் வாடகைக்கு விட்டாயிற்று இல்லையா, ஹோவார்டு?" என்று கேட்டாள்.

"எழுபது சதவிகிதம் விட்டாயிற்று. அதற்கு மேலேயும் போய் கொண்டிருக்கிறது. சதர்ன் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் இருபது ஃப்ளோர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்ட்டர்நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் காரர்கள் பத்து ஃப்ளோர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்."

"கட்டிடம் முடியட்டும். பணம் கொட்டும். நம்முடைய பிரசினைகள் மொத்தமும் தீர்ந்துவிடும். இன்னும் எத்தனை நாளில் கட்டிடம் முடியும்?"

"ஆறு மாதமாகும்."

லாராவின் குரலில் பரபரப்பும் உற்சாகமும் கொப்புளித்தன. "யோசித்துப் பாருங்கள் ஹோவார்டு. உலகத்திலேயே உயரமான அடுக்குமாடிக் கட்டிடத்துக்கு நாம் சொந்தக்காரர்களாக இருக்கப் போகிறோம்! அற்புதமான அழகான கட்டிடம்!"

தன் மேஜைக்குப் பின்னே சட்டமிட்டு மாட்டப் பட்டிருந்த லாரா டவர்ஸ் படத்தைப் பார்த்தாள் லாரா. சுற்றிலுமுள்ள கட்டிடங்கள் அந்தக் கண்ணாடி மீது பிரதிபலித்தன. கட்டிடத்தின் கீழ்ப் பகுதிகள் வனப்பானவை. மேல் பகுதிகளில் அபார்ட்மெண்ட்கள், லாராவின் நிறுவனங்கள்.

"இதைப் பற்றி அட்டகாசமாக விளம்பரங்கள் பண்ண வேண்டும்." என்றாள்.

"பண்ணலாம்," என்றான் ஹோவார்டு மூணு முணுப்பாக.

"ஏன்? என்ன விஷயம்?"

"ஒன்றுமில்லை. ஸ்டீவ் மர்ச்சிஸன் ஞாபகம் வந்தது. இந்த இடத்தைப் பிடிக்க வேண்டுமென்று தலை கீழாக நின்றாரே அவர்!"

"அவரைத்தான் முறியடித்து விட்டோமே?"

"ஆமாம். முறியடித்து விட்டோம்." என்றான் ஹோவார்டு, சுரத்தில்லாத குரலில்.

விளம்பரப் பிரிவின் தலைவனான ஜெர்ரியைக் கூப்பிட்டனுப்பினாள் லாரா.

"லாரா டவர்ஸ் திறப்பு விழாவில் ஏதாவது ஸ்பெஷலாகச் செய்ய வேண்டும். ஏதாவது ஐடியா சொல்லு."

"பிரமாதமான ஐடியா இருக்கிறது. திறப்பு விழா செப்டம்பர் பத்தாம் தேதிதானே?"

"ஆமாம்."

"அந்தத் தேதியில் என்ன விசேஷமென்று உங்களுக்குத் தெரியவில்லை?"

"ஒ அது என் பிறந்த நாள்!"

"அதேதான்" ஜெர்ரியின் முகத்தில் பிரகாசமான புன்னகை படர்ந்தது. "கட்டிடத்தின் திறப்பு விழாவை யொட்டி ஒரு பிரமாதமான பிறந்த நாள் பார்ட்டி கொடுங்கள்."

ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தாள் லாரா, "அருமையான ஐடியா! பெரிய புள்ளிகள் எல்லாரையும் கூப்பிடுவோம். நாம் போடுகிற சத்தம் உலகமெங்கும் கேட்க வேண்டும் ஜெர்ரி, விருந்தாளிகள் பட்டியலொன்று தயார் செய். இருநூறு பேர், எல்லோரும் பெரும் புள்ளிகள், நீயே சொந்தப் பொறுப்பில் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும்."

ஜெர்ரி புன்னகையுடன், "அட்டகாசம் பண்ணி விடுவோம். நான் ஒரு பட்டியல் தயாரித்துத் தருகிறேன். நீங்கள் ஒப்புதல் கொடுங்கள்."

லாரா பிஸினஸ் வீக் பத்திரிகையரின் மீது மற்றொரு குத்து விட்டாள். என்னை யாரென்று நினைத்து விட்டார்கள் இவர்கள் பார்த்து விடுகிறேன், என்றாள் கோபமாக

"மன்னிக்கணும் மேடம்," என்று கூறியபடி உள்ளே வந்தாள் மரியம். "நேஷனல் பில்டர்ஸ் அசோசியேஷனின் செக்ரட்டரி உங்களுடன் பேச வேண்டும் என்கிறார். போன வெள்ளிக் கிழமை இரவு டின்னர் பார்ட்டிக்கு உங்களுக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்களாம். நீங்கள் வரவில்லையாம்."

"வரச் சௌகரியப்படவில்லை என்று சொல்லு. நான் மன்னிக்கும்படி கேட்டேன் என்று சொல்லு." என்றாள் லாரா.

"சரி மேடம்." என்று கூறிவிட்டு மரியம் திரும்பிச் சென்றாள்.

பிலிப் சொன்னான்: "லாரா, இப்படி நீ துறவி மாதிரி இருக்கக் கூடாது. இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நீ போக வேண்டியது எவ்வளவு முக்கியம்!"

"இங்கே உங்களுடன் இருப்பதைக் காட்டிலும் முக்கியமானது எனக்கு எதுவும் கிடையாது. பாரிசில் நமக்குக் கல்யாணம் செய்து வைத்தாரே ஒரு குள்ளமான மனிதர், அவர் என்ன சொன்னார்? இன்பமோ துன்பமோ சுகழோ துக்கமோ நாம் பிரியக் கூடாது என்று சொல்ல வில்லை?" அவன் புருவத்தைச் சுறுக்கி யோசனை செய்தான். "அப்படித்தான் ஏதோ அவர் சொல்லியிருக்க வேண்டும், பிரெஞ்சு மொழியில் சொன்னார். எனக்குப் பிரெஞ்சு தெரியாது."

பிலிப் புன்னகை செய்தான். "லாரா, உன்னை ரொம்பப் பாராட்டுகிறேன். இருந்தாலும் என்னவோ உன்னை நரகத்துக்கு இழுத்துக் கொண்டு போகிறேன் என்றே தோன்றுகிறது."

லாரா அவனை அணைத்துக் கொண்டாள். "தப்பான வார்த்தை. சொர்க்கம் என்று சொல்லுங்கள்."

அன்று பிலிப் உடைகளை அணிந்து கொண்டிருந்தான். லாரா அவனுக்குப் பொத்தான்களைப் போட்டு விட்டாள். பிலிப் கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டான். "ஹிப்பி மாதிரி கோரமாக இருக்கிறேன். முடி வெட்டிக் கொண்டு எத்தனை நாளாகிறது!"

"மரியமிடம் சொல்லி பார்பர் ஷாப்பில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைக்கச் சொல்லட்டுமா?"

அவன் தலையை அசைத்தான். "வேண்டாம் லாரா. ஸாரி, வெளியே போய் வர இன்னும் எனக்குத் துணிச்சல் வரவில்லை."

அடுத்த நாள் காலை பிலிப்பின் வீட்டுக்கே பார்பர் வந்து விட்டார். அவருடன் நகங்களை வெட்டிச் சுத்தப் படுத்தும் உதவியாளரும் வந்தார், பிலிப் திடுக்கிட்டான், "என்ன இது?"

"மலையிடம் நாம் போகவில்லையென்றால் மலை நம்மிடம் வரவேண்டியதுதான்! இனி ஒவ்வொரு வாரமும் இவர்கள் இங்கே வருவார்கள்." என்றாள் லாரா.

"அற்புதமான பெண் நீ" என்று பிலிப் மனம் நெகிழ்ந்து சொன்னான்.

"போகப் போகப் பாருங்கள்." என்றாள் அவள்.

அதற்கு மறுநாள் ஒரு தையல்காரர் வந்து அவனுக்கு அளவெடுத்தார். சாம்பிள் துணிகளையும் காட்டினார்.

"என்ன லாரா இதெல்லாம்?" என்றான் பிலிப்.

"உங்களுக்கு நல்ல துணிமணியே இல்லை. துணி அலமாரியைப் போய்ப் பாருங்கள். ரொம்ப மோசமாயிருக்கிறது."

"இருந்து விட்டுப் போகட்டுமே? நான் வெளியே எங்கே போகப் போகிறேன்?" என்று பிலிப் ஆட்சேபித்தான், என்னும் தையல்காரர் ஷர்ட்டு சுளுக்கும் சூட்டுகளுக்கும் அளவு எடுத்துக்கொள்ள அனுமதித்தான். சில நாள் கழித்து ஒரு செருப்புக் கடைக்காரர் வந்தார், "இது வேறயா?" என்றான் பிலிப். "உங்களுக்கு நல்ல காலணியே இல்லை."

"நான்தான் சொன்னேனே? வெளியே எங்கே கிளம்பப் போகிறேன் நான்?"

"தெரியும் டார்லிங், ஆனால் கிளம்புகிற அன்று எல்லாம் ரெடியாக இருக்க வேண்டாமா?"

அவளை இறுகத் தழுவிக் கொண்டான் பிலிப். "உனக்கு நான் ஏற்றவனேயில்லை, கண்ணே!"

"இதே வார்த்தையைத்தான் நானும் உங்களிடம் ரொம்ப நாளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்." என்றாள் லாரா புன்னகையுடன்...

62

லாராவின் அலுவலகத்தில் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது.

ஹோவார்டு சொன்னான்: "லாஸ் ஏஞ்செல்ஸில் நாம் கட்டுவதாக இருந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ளைப் விட்டு விடும்படியிருக்கும். பாங்க்கில் கடன் தர மாட்டேன் என்கிறார்கள்."

"அதெப்படிச் சொல்ல முடியும்?" என்று லாரா திகைத்தாள்.

"சொல்கிறார்களே! நாம் ஏற்கெனவே அதிகமாய்க் கடன் வாங்கிவிட்டோமாம்!"

"இருக்கட்டுமே? நம்முடைய மற்றக் கட்டிடங்களின் மீது கடன் வாங்கி இதை அடைத்துவிட்டுப் போகிறோம்! அப்புறம் என்ன?"

ஹோவார்டு பொறுமையாகப் பதில் சொன்னான். "லாரா, ஏற்கெனவே நாம் கழுத்து மட்டத்துக்குக் கடன் வாங்கிவிட்டோம். அதைத் தவிர, லாரா டவர்ஸ் அடுக்கு மாடிக் கட்டிடத்துக்காக ஆறு கோடி டாலர் தர வேண்டியிருக்கும்."

"அது தெரியும். ஆனால் கட்டிடம் இன்னும் நாலு மாதங்களில் முடிவடைந்துவிடுமே? கடனைப் புரட்டிக் கொள்ள முடியும், லாரா டவர்ஸ் வேலை குறித்த நேரப்படி நடந்து கொண்டிருக்கிறதா இல்லையா?"

"நடந்து கொண்டிருக்கிறது," என்று சொல்லி விட்டு அவளையே சிந்தனையுடன் நோக்கினான் ஹோவார்டு. ஒரு வருடத்துக்கு முன்பு என்றால் லாரா இப்படியொரு கேள்வி கேட்டிருக்கவே மாட்டாள். என்னென்ன வேலை என்னென்ன நிலையில் இருக்கிறது என்ற தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பாள். "நீ ஆபீசுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வந்து வேலைகளைக் கவனித்தால் நல்லது லாரா." என்றான். "சில முடிவுகளை நீ மட்டும்தான் செய்ய முடியும்."

லாரா தலை குனிந்தாள். "நல்லது. நான் நாளை காலையிலிருந்து வருகிறேன்." என்றாள் அரை மனத்துடன்...

மரியம் பிலிப்பின் அறைக்கு வந்தாள். "உங்கள் மானேஜர் வில்லியம் டெலிபோனில் கூப்பிடுகிறார், உங்களுடன் பேச வேண்டுமாம்."

"அவரிடம் நான் பேசுவதற்கில்லை, சொல்லிவிடு." என்றான் பிலிப்.

மரியம் டெலிபோனிடம் சென்று, "ஸாரி, மிஸ்டர் வில்லியம். மிஸ்டர் பிலிப் இங்கே இல்லை. அவரிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்றாள். பிறகு டெலிபோனில் ஒரு நிமிடம் கேட்டுவிட்டு, "சரி."

அவரிடம் சொல்கிறேன். தாங்க் யூ," என்று கூறி, ஃபோனை வைத்தாள். பிலிப்பிடம் வந்து, "உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று கவலையுடன் சொன்னார்." என்றாள்.

"என் இசை நிகழ்ச்சிகளின் மூலம் அவருக்குக் கமிஷன்கள் கிடைக்கும். அது நின்றுவிட்டதால் அதைப் பற்றிப் பேச நினைக்கிறார் போலிருக்கிறது."

"இருக்கலாம்" என்று மரியம் மென்மையாகக் கூறினாள். "உங்களுக்கு விபத்து ஏற்பட்டதில் அவருக்கு உங்கள் மீது ரொம்ப வெறுப்பு."

"சேச்சே! நான் சொன்னது அப்படியா தெரிந்தது?"

"ஆமாம்."

பிலிப் சொன்னான்: "எப்படித்தான் நீ என்னுடன் மல்லாடுகிறாயோ!"

மரியம் புன்னகை செய்து "அப்படியொன்றும் கஷ்டமாயில்லை." என்றாள்.

மறு நாள் வில்லியம் மறுபடி ஃபோன் செய்தார். அப்போது பிலிப் அறையில் இல்லை. மரியம் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு, பிலிப்பை தேடிக் கொண்டு சென்றாள்.

"வில்லியம் உங்களைக் கூப்பிட்டார்." என்றதும் பிலிப் கடுப்புடன், "இன்னொரு தரம் அவர் போன் பண்ணினால் இனிமேல் என்னைக் கூப்பிட வேண்டாம் என்று சொல்லிவிடு." என்றான்.

"அதை நீங்களே அவரிடம் சொல்லி விடுங்கள்." என்றாள் அவள், "வியாழக்கிழமை பகல் ஒரு மணிக்கு நீங்களும் அவரும் ஓட்டலில் சாப்பிடுகிறீர்கள்."

"என்னது? நான்..."

"அவர் லே சர்ச் என்ற ஓட்டலைச் சொன்னார். கொஞ்சம் சின்ன ரெஸ்டாரண்ட்டாக இருந்தால் தேவலை என்று எனக்குத் தோன்றியது. கையிலிருந்த குறிப்பு நோட்டைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்: "ஃபுஸ் ரெஸ்டாரண்டில் வியாழன் ஒரு மணிக்கு அவர் உங்களைச் சந்திப்பார். உங்களை அழைத்துப் போகும்படி டிரைவரிடம் சொல்லி வைக்கிறேன்."

கடு கோபத்துடன் அவளை முறைத்துப் பார்த்தான் பிலிப். "என்னைக் கேட்காமலே என் சந்திப்புக்களை நீ ஏற்பாடு செய்கிறாயா?"

மரியம் அமைதியாகப் பதிலளித்தாள், "உங்களைக் கேட்டிருந்தால் வருவதற்கில்லை என்று சொல்லியிருப்பீர்கள். அதனால் தான் உங்களைக் கேட்கவில்லை, நான் செய்தது தப்பு என்றால் என்னை டிஸ்மிஸ் பண்ணிவிடுங்கள்."

ஒரு நீண்ட நிமிடம் அவளையே கூர்ந்து பார்த்தவாறு இருந்தான் பிலிப். மெல்ல மெல்ல அவன் முகத்தில் புன்சிரிப்புப் படர்ந்தது. "ஃபுஸ் ரெஸ்டாரண்ட் என்றா சொன்னாய்? சரி. நானும் சைனீஸ் உணவு சாப்பிட்டு ரொம்ப நாளாகிறது." என்றான்.

லாரா தன் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் பிலிப் அவளிடம் சொன்னான்: "வியாழக் கிழமை மத்தியானம் ஃபுஸ் ரெஸ்டாரண்ட்டில் வில்லியமைச் சந்தித்துச் சாப்பிடப் போகிறேன்."

"அட, பிரமாதம்! எப்போது முடிவு செய்தீர்கள்?"

"நான் எங்கே முடிவு செய்தேன்? மரியமே எனக்காக முடிவு செய்துவிட்டாள். நான் வெளியே போய் வருவது நல்லது என்று அவள் நினைக்கிறாள்."

"அப்படியா!" என்றாள் லாரா, ‘இதையே நான் சொன்னபோது இவர் ஒப்புக் கொள்ளவில்லை.’ என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்டாள். "நல்ல யோசனனயுள்ள பெண்தான் மரியம்."

"ஆமாம், கெட்டிக்காரி."

நான் ஒரு முட்டாள் என்று எண்ணிக் கொண்டாள் லாரா. இப்படி இரண்டு பேரையும் சேர்ந்திருக்கும்படி விட்டிருக்கக் கூடாது. அதுவும் பிலிப் தற்சமயம் ரொம்பவும் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறார்...

மரியாமைத் தொலைத்துத் தலைமுழுக வேண்டும் என்று அவள் தீர்மானித்துக் கொண்டதும் அப்போது தான்.

அடுத்த நாள் மாலை லாரா அலுவலகத்திலிருந்து திரும்பியபோது மரியமும் பிலிப்பும் பகடை விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

‘நாங்கள் ஒரு காலத்தில் ஆடிக்கொண்டிருந்த விளையாட்டு’ என்று லாராவுக்குத் தோன்றியது.

"இப்படி நீ இரட்டை இரட்டையாய்ப் போட்டுக் கொண்டிருந்தால் என்றைக்கு நான் உன்னைத் தோற்கடிப்பது?" என்று கூறிச் சிரித்துக் கொண்டிருந்தான் பிலிப்.

அதையே கவனித்தபடி கதவருகே நின்றிருந்தாள் லாரா.

பிலிப் சிரிப்பதைக் கேட்டு எவ்வளவு காலமாகிறது!

நிமிர்ந்து பார்த்த மரியம் லாராவைக் கவனித்ததும், "குட் ஈவ்னிங் மேடம்." என்றாள்.

பிலிப் சட்டென்று எழுந்து வந்து, "ஹலோ டார்லிங்" என்று கூறி அவளை முத்தமிட்டான். "இவள் என்னை உண்டு இல்லை என்று பண்ணிக் கொண்டி ருக்கிறாள்." என்று மரியமைக் காட்டினான்.

"அதற்கு ஒரு முடிவு கட்டிவிடுகிறேன்." என்று லாரா மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள்.

"எனக்கு ஏதும் வேலை இருக்கிறதா மேடம்?" என்று மரியம் கேட்டாள்.

"இல்லை, மரியம், நீ வீட்டுக்குக் கிளம்பு, காலையில் பார்க்கிறேன்."

"தாங்க் யூ. குட் நைட்."

"குட் நைட் மரியம்."

அவள் செல்வதைப் பார்த்தபடி இருவரும் நின்றார்கள்.

"நல்ல கம்பெனி அவள்." என்றான் பிலிப்.

லாரா அவன் கன்னங்களை வருடினாள். "சந்தோஷம் டார்லிங்."

"ஆபீசில் நிலைமையெல்லாம் எப்படி?"

"அருமையாயிருக்கிறது." என்றாள் லாரா.

தனது பிரச்சினைகளைச் சொல்லி அவன் மனத்தில் சுமையேற்ற அவள் விரும்பவில்லை. அவள் மறுபடியும் ரெனோவுக்குப் போய், சூதாட்ட விசாரணைக் கமிஷனுடன் பேச வேண்டியிருந்தது. ரெனோ ஒட்டலில் சூதாட்ட லைசன்ளை அர்கள் ரத்து செய்துவிட்டால், வருமானத்துக்கு வேறு வழி தேட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் லைஸன்ஸ் ரத்தாகாமல் பார்த்துக் கொண்டால் ரொம்ப நன்றாயிருக்கும்...

"பிலிப் இனிமேல் நான் ஆபீசில் அதிக நேரம் இருந்து வேலை பார்க்கும்படி இருக்கும். இல்லாவிட்டால் ஹோவார்டே எல்லா முடிவுகளையும் செய்ய வேண்டியிருக்கிறது." என்றாள்.

"கவலைப்படாதே, நான் பார்த்துக் கொள்வேன்."

"நாளை அல்லது மறுநாள் நான் ரெனோவுக்குப் போக வேண்டியிருக்கும். நீங்களும் என்னுடன் வாருங்களேன்."

பிலிப் மறுத்துத் தலையை அசைத்தான். "நான் இன்னும் தயாராகவில்லை." என்றவன் தன் கையைப் பார்த்துக் கொண்டான். "ஊகூம், இன்னும் கொஞ்ச நாளாகும்."

"ஆல் ரைட் டார்லிங் இரண்டு மூன்று நாளில் வந்து விடுவேன்."

மறுநாள் காலை மரியம் வேலைக்கு வந்தபோது லாரா அவளுக்காகக் காத்திருந்தாள், பிலிப் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

"மரியம். என் பிறந்த நாளுக்காகப் பிலிப் ஒரு வைர பிரேஸ்லெட் கொடுத்தாரே, தெரியுமில்லையா?" என்று லாரா கேட்டாள்.

"தெரியும், மேடம்."

"அதைக் கடைசியாக எங்கே பார்த்தாய் என்று நினைவு இருக்கிறதா?"

அவள் மோவாயைத் தடவி யோசனை செய்தாள். "உங்கள் படுக்கை அறை டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்ததைப் பார்த்தேன்."

"நிச்சயமாகப் பார்த்தாயா?"

"ஆமாம். ஏன்... ஏதாவது பிரசினையா?"

"அப்படித்தான் தோன்றுகிறது. அதைக் காணோம்."

மரியம் அவளை வெறித்துப் பார்த்தாள். "காணோமா? யார் அதை."

"எல்லா வேலைக்காரர்களையும் விசாரித்து விட்டேன். எதுவும் தெரியாது என்கிறார்கள்."

"நான் போலீசைக் கூப்பிட்டு..."

"அவசியமில்லை. உனக்குச் சங்கடம் ஏற்படுத்த வேண்டாமென்று பார்க்கிறேன்."

"என்ன சொல்கிறீர்கள்? புரியவில்லையே..."

"புரியவில்லை? விஷயத்தை இத்தோடு விட்டு விடலாம். அதுதான் உனக்கு நல்லது."

அதிர்ச்சியுடன் லாராவையே பார்த்தவாறு இருந்தாள் மரியம், "நான் அந்த பிரேஸ்லெட்டை எடுக்க வில்லை. உங்களுக்கே அது தெரியும்."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ வேலையை விட்டு நின்று கொள்."

இப்படிச் சொல்கிறோமே என்று லாராவுக்குத் தன் மீதே வெறுப்பு ஏற்பட்டது.

‘ஆனால் யாரும் பிலிப்பை என்னிடமிருந்து பிரிக்க அனுமதிக்க மாட்டேன். யாராயிருந்தாலும் சரி...’

காலைச் சிற்றுண்டி அருந்த பிலிப் வந்தபோது லாரா சொன்னாள். "சொல்ல மறந்துவிட்டேன். இங்கே நமது அபார்ட்மெண்ட்டில் வேலை செய்ய ஒரு புது செக்ரட்டரி அமர்த்தியிருக்கிறேன்."

பிலிப் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான். "ஏன், மரியமுக்கு என்ன ஆச்சு?"

"அவள் வேலையை விட்டு விட்டாள், அவளுக்கு... ஸான் பிரான்ஸிஸ்கோவில் ஒரு வேலை கிடைத்திருக்கிறதாம்..."

பிலிப்பின் வியப்புத் தணியவில்லை, "அடடா! அவளுக்கு இங்கே வேலை செய்வது பிடித்திருக்கிறது என்று நினைத்தேனே..."

"இருக்கலாம். ஆனால் அவள் போகிறேன் என்கிறபோது நாம் தடுப்பது சரியல்ல, இல்லையா?" என்றாள் லாரா. ‘என்னை மன்னியுங்கள்’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டாள்.

"ஆமாம், நாம் தடுக்க முடியாதுதான்." என்றான் பிலிப், "அவளுக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்புகிறேன். எங்கே அவள்?"

"போய்விட்டாள்."

"ஹும்! பகடை விளையாட வேறொரு கூட்டாளி தேட வேண்டியதுதான்." என்றான் பிலிப்.

"எனக்குக் கொஞ்சம் நிலைமைகள் சீராகட்டும், உங்களுடன் விளையாட நானே வருகிறேன்." என்றாள்.

புஸ் ரெஸ்டாரெண்ட்டில் பிலிப் தன் முன்னாள் மானேஜர் வில்லியமைச் சந்தித்தான். ஓர் ஓரமாக உட்கார்ந்து அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வில்லியம் சொன்னார். "உங்களைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம், பிலிப், உங்களைப் பல முறை கூப்பிட்டேன். நீங்கள்..."

"தெரியும். ஸாரி, யாருடனும் பேச எனக்குப் பிடிக்கவில்லை."

"உங்கள் கையை வெட்டிய அவனைப் பிடித்து விடுவார்கள் இல்லையா?"

"வழிப்பறிகள் ரொம்பச் சாதாரணம் என்கிறார்கள்! போலீசில், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையாம். பூனை காணாமல் போயிற்று என்றால் எவ்வளவு நடவடிக்கை எடுப்பார்களோ அவ்வளவு நடவடிக்கை தான் வழிப்பறிக்கும் என்கிறார்கள். ஆகவே அந்த ஆளை அவர்கள் பிடிக்கப் போவதில்லை."

வில்லியம் தயக்கத்துடன். "நீங்கள் இனிமேல் பியானோ வாசிக்க முடியாது என்று சொல்கிறார்களே..." என்று இழுத்தார்.

"அது உண்மைதான்." என்று பிலிப் முடமாகிப் போன தனது கையைத் தாக்கிக் காட்டினான். "இதில் உயிரே இல்லை."

வில்லியம் அவன் முன்னே குனிந்து, ஆர்வத்துடன், "ஆனால் நீங்கள் உயிருடன்தான் இருக்கிறீர்கள், பிலிப், உங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது."

"எதிர்காலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?"

"ஏன், இசை சொல்லித் தருகிற ஆசிரியராக இருக்கலாமே?"

பிலிப்பின் உதடுகளில் ஒரு கசப்பான சிரிப்பு நிலவியது. "விதியின் வேடிக்கையைப் பாருங்கள்! என்றாவது இசை நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்திக் கொண்டு ஓய்வெடுக்கும் சமயம் வரும்போது ஆசிரியராக இருக்கலாம் என்று நினைத்திருந்தேன்."

"நல்லது, அந்த நாள் இப்போது வந்து விட்டது. உங்களைக் கேட்காமல் நானாகவே உரிமை எடுத்துக் கொண்டு ராசெஸ்டரில் இருக்கும் ஈஸ்ட்மன் ஸ்சாவின் தலைவருடன் பேசினேன். நீங்கள் அங்கே ஆசிரியராக வருவதாயிருந்தால் எவ்வளவு வேண்டு மானாலும் தருகிறேன் என்கிறார்கள்."

பிலிப்பின் புருவங்கள் சுருங்கின. "அப்படியானால் நான் அந்த ஊருக்கல்லவா போக வேண்டியிருக்கும்? லாராவின் தலைமை அலுவலகங்கள் இங்கே நியூயார்க்கில் இருக்கிறது." அவன் தலையை அசைத்தான், "என்னால் அவளைப் பிரிந்திருக்க முடியாது. அவள் என்மீது எத்தனை பிரியம் வைத்திருக்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியாது வில்லியம்."

"அது உண்மைதான். இருந்தாலும்..."

"என்னைக் கவனித்துக் கொள்வதற்காக பிஸினஸைக் கவனிப்பதைக்கூட லாரா விட்டு விட்டாள். அவள் மாதிரி பரிவும் பிரியமும் உள்ள பெண்ணை நான் பார்த்ததேயில்லை. அவனிடம் நான் பைத்தியமாக இருக்கிறேன்."

"பிலிப். ஈஸ்ட்மன் ஸ்கூல் விஷயமாய் நான் சொன்னதை யோசனையாவது செய்யுங்கள். செய்வீர்களா?"

"நான் மிகவும் நன்றி சொன்னேன் என்று அவர்களிடம் சொல்லுங்கள். ஆனால் என் பதில் என்னவோ அதேதான்."

"உங்கள் மனசை மாற்றி கொண்டால் எனக்குத் தெரிவிப்பீர்களா?"

"முதலில் - உங்களுக்குத்தான் தெரிவிப்பேன்." என்றான் பிலிப்.

வீட்டுக்கு அவன் திரும்பிய போது மரியம் அங்கே இருந்தாள்.

63

முன்னாள் மானேஜர் வில்லியமைச் சந்தித்து விட்டுப் பிலிப் வீடு திரும்பியபோது லாரா எங்கோ வெளியே சென்றிருந்தாள். ராசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் அழைப்பைப் பற்றி வில்லியம் கூறிய விஷயம் அவனுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. - இசை சொல்லிக் கொடுப்பது எவ்வளவு இனிமை யான வேலை! ஆனால் ராசெஸ்டருக்கு வரும்படி லாராவை அழைக்க முடி யாது. அவள் இல்லாமல் நான் மட்டும் போவதும் முடியாது. -

இருப்புக் கொள்ளாமல் அவன் இங்குமங்குமாய் உலவிக் கொண்டிருந்தபோது வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

"யார்? லாராவா?" என்றான். வந்தது மரியம்.

"ஓ, ஸாரி, பிலிப். யாரும் இல்லையென்று நினைத்து விட்டேன். சாவியைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போவதற்காக வந்தேன்." என்றாள்.

பிலிப் திகைத்தான். "இந்நேரம் நீ சான்பிரான்ஸிஸ் கோவில் இருப்பாய் என்றல்லவா நினைத்தேன்"

அவள் புதிராக அவனைப் பார்த்தாள். "சான் பிரான்சிஸ்கோவா? ஏன்?"

"உனக்கு அங்கேதானே புது வேலை கிடைத் திருக்கிறது?"

"புது வேலையா? எந்தப் புது வேலையும் எனக்கு இல்லையே?"

"பின்னே, லாரா சொன்னாளே?"

சட்டென்று மரியமுக்குப் புரிந்தது. "சரி, சரி. என்னை ஏன் வேலையிலிருந்து நீக்கினேன் என்று லாரா சொல்லவில்லை போலிருக்கிறது?"

"வேலையிலிருந்து நீக்கினாளா? நீயாகவே வேலையை விட்டு விட்டதாக அல்லவா சொன்னாள்? உனக்கு அதிக சம்பளத்தில் வேறு வேலை கிடைத்திருப்பதாக..."

"தப்பான தகவல்."

பிலிப் மெதுவாகச் சொன்னான். "கொஞ்சம் உட்கார்ந்து பேசு."

இருவரும் எதிரெதிராக உட்கார்ந்தார்கள். "என்ன விஷயம் என்ன இதெல்லாம்?" என்று பிலிப் கேட்டான்.

மரியமிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

"உங்கள் மனைவி என்னை... நான் உங்களை மயக்கப் பார்க்கிறேன் என்று நினைக்கிறார்..."

"என்ன உளறல் இது!"

"நீங்கள் அவருக்கு ஒரு வைர பிரேஸ்லெட் பரிசளித்தீர்கள் இல்லையா? அதை நான் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். என்னை டிஸ்மிஸ் பண்ண அது ஒரு சாக்கு. அதை எங்கேயோ மறைவாக எடுத்து வைத்திருக்கிறார், நிச்சயம்."

"நான் நம்ப மாட்டேன்." என்று மறுத்தான் பிலிப். "அந்த மாதிரி காரியத்தை லாரா ஒரு நாளும் செய்ய மாட்டாள்."

"உங்களை யாரும் தன்னிடமிருந்து பறித்துவிடக் கூடாது என்பதற்காக அவர் எதுவும் செய்வார்."

குழம்பிப் போனவனாக அவளையே பார்த்தவாறிருந்தான் பிலிப். "நான்... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, லாராவிடம் பேசுகிறேன்..."

"வேண்டாம். ப்ளீஸ், வேண்டாம். நான் இங்கு வந்ததே அவருக்குத் தெரியாமலிருப்பதுதான் நல்லது. மரியம் எழுந்து கொண்டாள்."

"நீ இனி என்ன பண்ணுவாய்?"

"கவலைப்படாதீர்கள். வேறு வேலை தேடிக் கொள்வேன்."

"மரியம்... நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றால்..."

"எதுவுமில்லை."

"நிச்சயமாய்?"

"நிச்சயமாய். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்." என்று சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்.

அவள் போவதைச் சங்கடத்துடன் பார்த்தபடி நின்றான் பிலிப். லாரா அப்படியொரு ஏமாற்று வேலை செய்வாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை. ஏன் அவள் தன்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது.

ஒருவேளை மரியம் நிஜமாகவே அந்தப் பிரேஸ்லெட்டைத் திருடியிருப்பாளோ? அதைச் சொல்லி நம்மை வருத்தப்படுத்த வேண்டாம் என்று லாரா நினைத்திருப்பாளோ?

‘இருக்கலாம்... மரியம் பொய் சொல்கிறாள்.’ என்று எண்ணிக் கொண்டான் அவன்.

சிகாகோவில் தெற்கு ஸ்டேட் வீதியில் கடைகளில் நடுமத்தியில் இருந்தது அந்த அடகுக் கடை.

ஜெஸ்ஸி ஷா உள்ளே நுழைந்தான். மேஜையடியில் இருந்த முதியவர் நிமிர்ந்து நோக்கி, "குட்மார்னிங். என்ன வேண்டும் உங்களுக்கு?" என்றார்.

மேஜை மீது ஒரு கைக்கடியாரத்தை வைத்தான் ஜெஸ்ஸி ஷா. "இதற்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?"

அடகுக் கடைக்காரர் அதைக் கையிலெடுத்துக் கூர்ந்து கவனித்தார். "பியாஜெட் வாட்சா? நல்ல கடியாரம்..."

"ஆமாம். ரொம்ப உசத்தியான கடியாரம். இதை அடகு வைக்கவே எனக்கு மனசில்லை. என்ன செய்ய? எனக்குக் கொஞ்சம் கஷ்டமான டைம். நான் சொல்வது புரிகிறதில்லையா?"

அடகுக் கடைக்காரர் தோள்களைக் குலுக்கிக் கொண்டார். "புரியாமலென்ன? இங்கே வருகிறவர்கள் சொல்கிற சோகக் கதைகளைக் கேட்டால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள்."

"கொஞ்ச நாளில் இதை மீட்டுக் கொண்டு விடுவேன். திங்கள் கிழமை ஒரு புதிய தொழில் ஆரம்பிக்கப் போகிறேன். அதற்கு ரொக்கமாய் ஏகப்பட்ட பணம் தேவையாயிருக்கிறது."

அடகுக் கடைக்காரர் அந்த வாட்சை இன்னும் கூர்மையாக ஆராய்ந்தார். அதன் பின்புறம் சில எழுத்துக்களைச் சுரண்டியிருப்பது தெரிந்தது. வந்தவனைப் பார்த்து, "ஒரு நிமிஷம் இருங்கள். கடியாரத்தில் உள் பக்கம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிடுகிறேன். இப்போதெல்லாம் பாங்காக்கிலிருந்து போலி வாட்சுகள் நிறைய வருகின்றன. திறந்து பார்த்தால் உள்ளே ஒன்றும் இருப்பதில்லை."

வாட்சை எடுத்துக் கொண்டு உள் அறைக்குப் போனார். கண்ணில் பூதக் கண்ணாடியைச் செருகிக் கொண்டு, சுரண்டியுள்ள இடத்தை பார்த்தார் "பிலி.. கா... ஓ... ன் லா..." என்று எழுத்துக்கள் தெரிந்தன.

கடைக்காரர் ஒரு அலமாரியைத் திறந்து போலீசிலிருந்து வந்திருந்த ஒரு சுற்றறிக்கையை எடுத்து பார்த்தார். வாட்சைப் பற்றிய விவரங்கள் இருந்தன. பின்புறம் "பிலிப்புக்குக் காதலுடன் லாரா" என்று பொறிக்கப்பட்டிருக்கும் என்ற தகவலும் கொடுத்திருந்தார்கள்.

டெலிபோனைக் கையிலெடுத்தார். அதற்குள் வெளியேயிருந்து அவன் உரத்த குரல் கேட்டது.

"என்ன பெரியவரே, நான் அவசரமாய்ப் போக வேண்டும், வாட்சுக்குப் பணம் கொடுப்பீரா இல்லையா?"

"இதோ வந்துவிட்டேன்" என்று கூறிவிட்டு முன்புறம் வந்தான் கடைக்காரர். "இதன் மீது ஐந்நூறு டாலர் தருகிறேன்." என்றார்.

"அவ்வளவுதானா? இதன் மதிப்பு..."

"ஐந்நூறு டாலர்தான் தர முடியும். வேண்டாமென்றால் விடுங்கள்."

"சரி, சரி. கொடுங்கள்." என்று முணுமுணுத்தான் அவன்.

"இதைப் பூர்த்தி செய்யுங்கள்." என்று ஒரு பாரத்தை நீட்டினார் அவர்.

"கொடுங்கள்."

‘ஜான் ஜோன்ஸ் 21, ஹன்ட் ஸ்ட்ரீட்’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான் அவன்.

சிகாகோவில் ஹன்ட் ஸ்ட்ரீட் என்று எந்தத் தெருவும் கிடையாது என்று அடகுக் கடைக்காரருக்குத் தெரியும். இவன் பெயர் ஜான் ஜோன்ஸ் அல்ல என்பதும் சர்வ நிச்சயம்.

அவன் ரொக்கத்தை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டான். "ரொம்ப நன்றி. கொஞ்ச நாளில் வருகிறேன்."

"நல்லது."

அவன் தலை மறைந்ததும் அவர் டெலிபோனை எடுத்துப் போலீசுக்கு டயல் செய்தார்.

இருபது நிமிடத்துக்கெல்லாம் ஒரு போலீஸ்காரர் வந்து சேர்ந்தார்.

"அவன் இங்கே இருக்கிற போதே போன் செய்வதற்கென்ன?" என்று அதட்டினார்.

"அதற்குத்தான் முயற்சி பண்ணினேன். அவன் அவசரப்பட்டான். ஓட்டம் பிடிக்கிற மாதிரி இருந்தான்."

அவன் பூர்த்தி செய்து கொடுத்த பாரத்தை வாங்கிப் பார்த்தார் போலீஸ்காரர்.

"அதில் என்ன பிரயோசனம்?" என்றார் கடைக்காரர். "பொய்ப் பெயரும் பொய் விலாசமும்தான் கொடுத்தாருப்பான்.

போலீஸ்காரர் சிடுசிடுத்தார். "அப்படியெல்லாம் ஏமாற்றிவிட முடியாது. இதை அவனே கைப்பட எழுதினானா?"

"ஆமாம்."

"அப்படியானால் மடக்கி விடுவோம்." என்று சொல்லிவிட்டு, அந்தப் பாரத்தை ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றார் போலீஸ்காரர்.

அதிலிருந்த கைரேகையை வைத்துக் கம்ப்யூட்டர் மூன்றே நிமிடத்தில் கண்டு பிடித்துவிட்டது குற்ற வானியின் பெயரை: ஜெஸ்ஸி ஷா.

முன்னறையில் உட்கார்ந்திருந்த பிலிப்பிடம் ஒரு வேலைக்காரன் வந்தான். "மன்னிக்கணும் சார். உங்களை டெலிபோனில் கூப்பிடுகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் மான்ஸினியாம்...."

"நானே பேசிக்கொள்கிறேன்." என்ற பிலிப் டெலிபோனை எடுத்தான் "ஹலோ."

"மிஸ்டர் பிலிப்?"

"ஆமாம்."

"நான் இன்ஸ்பெக்டர் மான்ஸினி பேசுகிறேன். நீங்கள் ஆஸ்பத்திரியில் இருந்தபோது வந்து பார்த்தேனே."

"ஓ, ஞாபகம் இருக்கிறது."

"உங்களுக்கு லேட்டஸ்ட் செய்தி சொல்ல வேண்டு மென்றுதான் கூப்பிட்டேன். ஒரு சின்ன அதிர்ஷ்டம். எங்கள் பெரிய அதிகாரி உங்களுடைய விசிறி - வாட்ச் பற்றிய தகவல்களை எல்லா அடகுக் கடைகளுக்கும் அனுப்பப் போகிறார் என்று சொன்னேனல்லையா?"

"வாட்சைக் கண்டு பிடித்துவிட்டார்கள். சிகாகோவில் அதை அடகு வைத்திருக்கிறான் ஒருவன். அவனைப் போலீசில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆளைப் பார்த்தால் அடையாளம் சொல்ல முடியும் என்று சொன்னீர்கள்."

"ஆமாம். சொல்வேன்."

"சந்தோஷம். நான் மறுபடி போன் செய்கிறேன்." என்றார் இன்ஸ்பெக்டர் மான்ஸினி.

லாராவைப் பார்ப்பதற்காக அவளுடைய அலுவலகத்துக்கு வந்தார் விளம்பரப் பிரிவின் தலைவரான ஜெர்ரி. உற்சாகமும் பரபரப்பும் நிறைந்ததாக இருந்தது அவர் பேச்சு.

"பிறந்த நாள் பார்ட்டிக்கு பட்டியல் தயாரிக்கச் சொன்னீர்களே, தயாரித்துவிட்டேன்." என்றார். "அருமையான ஐடியாக நினைக்க நினைக்க உற்சாகமாக இருக்கிறது. உலகத்திலேயே உயரமான கட்டிடத்தின் திறப்பு விழாவுடன் உங்களுடைய நாற்பதாவது பிறந்த தயாரித்திருந்த பட்டியலைக் காட்டினார். "துணை ஜனாதி தயாரித்திருந்த பட்டியலைக் காட்டினார். "துணை ஜனாதி பதியின் பெயரையும் சேர்த்திருக்கிறேன். உங்கள் மீது அவருக்கு அபார மதிப்பு."

லாரா மேலோட்டமாய்ப் பார்த்தாள். வாஷிங்டனிலும், ஹாலிவுட்டிலும், நியூயார்க்கிலும், லண்டனிலும் யார் யாரெல்லாம் பெரும்புள்ளிகளோ, அவர்கள் பெயர்களெல்லாம் இடம் பெற்றிருந்தன. அரசாங்க அதிகாரிகள், திரையுலக நட்சத்திரங்கள், ராக் பாடகர்கள்... அருமையான பட்டியல்...

"பிரமாதம்! எல்லா ஏற்பாடுகளும் செய்யுங்கள்." என்றாள் லாரா.

பட்டியலை வாங்கிப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டான் ஜெர்ரி "நல்லது. அழைப்பிதழ்கள் அச்சிட்டு அனுப்பிவிடுகிறேன். கார்லோஸ் ஒட்டலில் பால்ரூம் மண்டபத்தை ரிசர்வ் பண்ணச் சொல்லியிருக்கிறேன். உணவு மெனு உங்கள் விருப்பப்படி செய்வார்கள். இருநூறு பேருக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறேன். கொஞ்சம் கூடினாலும் அல்லது குறைந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் அப்புறம்... ரெனோ காஸினோ பற்றி மேற்கொண்டு ஏதாவது நியூஸ் உண்டா?"

வழக்கறிஞர் டெர்ரி ஹில்லுடன் அன்று காலை தான் பேசியிருந்தாள் லாரா. பெரிய அதிகாரிகள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள், லாராமீது கிரிமினல் குற்றச்சாட்டு தாக்கல் செய்வார்கள் என்று தோன்றுகிறது என்று அவர் கூறியிருந்தார்.

"அதெப்படி முடியும்? பால் மார்ட்டினோடு டெலி போனில் பேசினேன் என்றால் சரியாய்ப் போச்சா? அது என்ன பிரமாத ருசு? உலக அரசியலைப் பற்றி நாங்கள் பேசியிருக்கலாம். அவருடைய அல்பர் நோய் எப்படி இருக்கிறது என்று பேசியிருக்கலாம். வேறே ஆயிரம் விஷயம் இருக்கும்."

"லாரா, என்மீது கோபித்துக் கொள்ளாதீர்கள். நான் உங்கள் பக்கம்தான் இருக்கிறேன்." என்று அவர் சொன்னார்.

"அப்படியானால், என்னத்தையாவது செய்து தொலையுங்கள். நீங்கள் என் வழக்கறிஞர். என்னை இந்த இக்கட்டிலிருந்து மீட்பது உங்கள் பொறுப்பு,’ என்று லாரா சொல்லியிருந்தாள்.

ஜெர்ரி இப்போது அதைப் பற்றிக் கேட்டதும், "ரெனோவில் ஒன்றும் பிரசினை இல்லை. எல்லாம் சரியாயிருக்கிறது." என்றாள்.

"சந்தோஷம். சனிக்கிழமையன்று - நீங்களும் பிலிப்பும் மேயருடைய டின்னருக்குப் போகிறீர்கள்" என்று சொன்னார்கள்.

"ஆமாம்."

ஜெர்ரி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்.

மேயருடைய டின்னரைப் பற்றி லாராவுக்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது. அதற்கு வருவதற்கில்லை என்று சொல்ல நினைத்திருந்தாள். ஆனால் அவள் போகத்தான் வேண்டும் என்று பிலிப் வற்புறுத்தினான்.

"இவர்களுடைய தயவெல்லாம் உனக்கு இருக்க வேண்டும் லாரா. இவர்களை அவமதிக்கக் கூடாது. நீ கட்டாயம் போகவேண்டும்." என்றான்.

"நீங்கள் இல்லாமல் போக மாட்டேன் டார்லிங்."

பிலிப் ஒரு பெருமூச்சுடன், "ஆல்ரைட், நானும் உன்னுடன் வருகிறேன். என் சன்னியாச வாழ்க்கைக்கு முடிவு கட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது." என்றான்.

சனிக்கிழமை மாலை டின்னருக்குப் போகப் பிலிப் டிரெஸ் செய்து கொண்டான். லாராதான் சட்டைப் பொத்தான்களை மாட்டி விட்டு, கஃப்லிங்க்குகளைப் பொருத்தினாள். டையையும் தானே கட்டி விட்டாள்.

தன் கையாலாகாத்தனத்தை எண்ணி மனசுக்குள். வெறுப்படைந்தவனாக அவன் நின்றான். "பச்சைக் குழந்தை மாதிரி ஆகி விட்டது என் நிலைமை," என்று முணுமுணுத்தான்.

"என்ன சொல்கிறீர்கள்?"

"ஒன்றுமில்லை."

"ஆ! இப்போது என்ன பிரமாதமாய் இருக்கிறீர்கள், தெரியுமா? மேயருடைய பார்ட்டியிலேயே நீங்கள்தான் சிறந்த ஆணழகனாக விளங்கப் போகிறீர்கள்" என்றாள் லாரா.

"தாங்க்ஸ்."

"நானும் டிரெஸ் பண்ணிக் கொண்டு வருகிறேன். சீக்கிரம் புறப்பட வேண்டும். பார்ட்டிக்குத் தாமதமாய் வருகிறவர்களை மேயருக்குப் பிடிக்காது."

"நான் லைப்ரரி அறையில் காத்திருக்கிறேன்." என்றான் அவன்.

முப்பது நிமிடங்களுக்கெல்லாம் லாரா லைப்ரரி அறைக்கு வந்தாள். கிறங்க அடிக்கும் வண்ணம் இருந்தது அவளுடைய உடை. அவளுடைய அலங்காரத்தை அணு அணுவாகப் பார்த்து ரசித்த பிலிப் திடுக்கிட்டான்.

அவளுடைய கையைக் கண்டதும், மணிக்கட்டில் பளபளத்தது அவன் பரிசளித்த அந்த வைர பிரேஸ்லெட்.

சனிக்கிழமை இரவு பூரா பிலிப்புக்குத் தூக்கமே வரவில்லை.

பக்கத்தில் படுத்திருக்கும் லாராவைப் பார்த்தான்.

வைர பிரேஸ்லெட்டைத் திருடியதாக மரியம் மீது குற்றம் சாட்ட எப்படி மனம் துணிந்தாள் இவள்?

லாராவை அப்பட்டமாகக் கேட்டு விட வேண்டும் மென்று அவன் மனம் துடித்தது. ஆனால் அதற்கு முன் மரியமுடன் பேச வேண்டுமென்று தோன்றியது.

ஞாயிற்றுக்கிழமை விடிகாலை எழுந்து ஓசையின்றி உடை மாற்றிக் கொண்டான்.

64

திகாலையில் லாரா தூங்கிக் கொண்டிருந்த போது வெளியே நழுவிய பிலிப், ஒரு டாக்ஸியைப் பிடித்து மரியமின் அபார்ட்மெண்ட்டை அடைந்தான். அழைப்பு மணியை அடித்துவிட்டுக் காத்திருந்தான்.

தூக்கக் கலக்கத்துடன் ஒரு குரல், "யாரது?" என்று கேட்டது.

"நான்தான் பிலிப். உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும்."

சட்டென்று கதவைத் திறந்து கொண்டு மரியம் வந்தாள்.

"என்ன பிலிப், இந்த நேரத்தில்? ஏதாவது பிரசினையா?"

"நான் பேச வேண்டும்."

"உள்ளே வாருங்கள்."

அபார்ட்மெண்ட்டுக்குள் போனான் அவன். "ஸாரி. உன்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டேன். ஆனால் ரொம்ப முக்கியமான விஷயம். அதனால்தான் வந்தேன்."

"என்ன ஆயிற்று?"

ஒரு பெருமூச்சு அவனிடமிருந்து வெளிப்பட்டது. "அந்த வைர பிரேஸ்லெட்டைப் பற்றி நீ சொன்னது சரிதான். நேற்றிரவு லாரா அதை அணிந்திருப்பதைப் பார்த்தேன். உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள் கிறேன்... ஏனென்றால், நான்கூட உன்னை... சந்தேகம்... ஸாரி என்று சொல்லத்தான் வந்தேன்."

மரியம் அமைதியாகச் சொன்னாள். "நீங்கள் லாரா சொன்னதை நம்பியதில் ஒன்றும் தப்பில்லை. அவர் உங்கள் மனைவி."

"இன்று காலையில் அவளையே கேட்கத்தான் போகிறேன். அதற்கு முன் உன்னிடம் பேச வேண்டு மென்று தோன்றியது."

மரியம் அமைதியாகச் சொன்னாள். "நீங்கள் வந்தது பற்றிச் சந்தோஷம், ஆனால் உங்கள் மனைவியிடம் எதுவும் கேட்காமலிருப்பதுதான் நல்லது."

"ஏன் கேட்கக்கூடாது?" என்றான் பிலிப். "எதற்காக அப்படி ஒரு பொய் அவள் சொன்னாள்"

"ஏனென்று உங்களுக்குத் தெரியவில்லை?"

"நிஜமாகவே தெரியவில்லை. அர்த்தமில்லாமல் இருக்கிறதே?"

"அவரை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் நான் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். லாரா உங்களிடம் வெறிபிடித்த மாதிரி காதலாக இருக்கிறார். உங்களை யாரும் பறித்துவிடாமல் பிடித்து வைத்துக் கொள்வதற்காக அவர் எதுவும் செய்வார். வாழ்க்கையில் அவர் யாரையேனும் நிஜமாகவே காதலித்தார் என்றால் அது நீங்கள் ஒருவராகத்தான் இருக்கமுடியும். நீங்கள் அவருக்கு வேண்டும். உங்களுக்கும் அவர் வேண்டும். உங்களுக்கு அவரிடம் நிறையக் காதல். இல்லையா பிலிப்?"

"ஆமாம்."

"அப்படி யானால் இந்த விஷயத்தை இத்தோடு விட்டுவிடுங்கள். அவரிடம் இதைப் பற்றிக் கேட்பதால் ஒரு லாபமுமில்லை. அது மட்டுமில்லை. உங்கள் இருவருக்குமிடையே உள்ள உறவு கெட்டுப் போகும். மறந்து விடுங்கள் இதை. எனக்குச் சுலபமாக வேறு வேலை கிடைக்கும்."

"அது சரி மரியம்.... இதெல்லாம் நியாயம் இல்லையே?"

மரியம் சோகமாய்ப் புன்னகை செய்தாள், "வாழ்க்கையில் எல்லாமே நியாயமாக நடப்பதில்லை பிலிப்." என்றாள். ‘அப்படி நடப்பதாக இருந்தால் நானல்லவா உங்கள் மனைவியாக இருந்திருக்க வேண்டும்!’ என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்டவள், "கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடி ஆகும்." என்றாள்.

"குறைந்தபட்சம் உனக்காக நான் ஏதாவது செய்கிறேன், மரியம். இதை ஈடு செய்கிற மாதிரி பணம் ஏதாவது"

"தாங்க் யூ. ஆனால் எதுவும் வேண்டாம்."

இன்னும் என்னென்னவோ சொல்ல வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால் என்ன சொல்லி என்ன பயன்? இவருக்கு அவளிடம் மட்டற்ற காதல்...

"நீங்கள் புறப்படுங்கள், பிலிப், உங்கள் மனைவி காத்திருப்பார்." என்றாள்.

சிகாகோவில் வபாஷ் அவென்யூ என்னுமிடத்தில் ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. இருபத்தைந்து மாடிகள் கொண்ட அலுவலகக் கட்டிடம். பாதிக் கட்டிடம் பூர்த்தியாகியிருந்தது.

ஒரு போலீஸ் கார் அங்கே நின்றது. ஆனால் போலீஸ் என்று எழுதப்படாமல் சாதா கார் மாதிரி இருந்தது. அதிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் இறங்கினார்கள். அவர்களும் மப்டியில் இருந்தார்கள்.

கட்டிடத்தை நெருங்கியவர்கள் அங்கிருந்த ஒரு தொழிலாளியிடம், "யார் இங்கே மேஸ்திரி?" என்று கேட்டார்கள்.

"அதோ அவர்." பருமனும் உயரமுமான ஒருவனைக் காட்டினான் அந்தத் தொழிலாளி.

சிற்றாள்களைத் திட்டி, விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார் அந்த மேஸ்திரி. போலீஸ்காரர்கள் அவரிடம் போய், "நீங்கள்தான் இங்கே மேஸ்திரியா?" என்று கேட்டார்கள்.

மேஸ்திரி ஒரே எரிச்சலில் இருந்தார். "மேஸ்திரி கீஸ்திரி எல்லா இழவும் நான்தான். என்ன வேண்டும் உங்களுக்கு? எனக்கு வேலை இருக்கிறது."

"இங்கே ஜெஸ்ஸி ஷா என்று ஓர் ஆள் வேலை செய்கிறானா?"

"ஷாவா? ஆமாம். அதோ இருக்கிறான்." பத்துப் பன்னிரண்டு மாடிகளுக்கு மேலே ஒரிடத்தில் கர்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஓர் ஆளைக் காட்டினார் மேஸ்திரி.

"அவனைக் கொஞ்சம் கீழே வரச் சொல்கிறீர்களா?"

"எதுக்காக? முடியாது. அவனுக்கு வேலை இருக்கிறது."

போலீஸ்காரர்களில் ஒருவர் தன் அடையாள அட்டையைக் காட்டினார்.

மேஸ்திரியின் குரல் மாறியது.

"எ... என்ன விஷயம்? எதிலாவது மாட்டிக் கொண்டிருக்கிறானா?"

"ஒன்றுமில்லை. அவனிடம் கொஞ்சம் பேச வேண்டும்."

"ஒ.கே. அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஓர் ஆளைக் கூப்பிட்டார் மேஸ்திரி. "மேலே போய் ஜெஸ்ஸியை இங்கே வரச் சொன்னேன் என்று சொல்லு!"

"இதோ..." சில நிமிடங்களில் ஜெஸ்ஸி ஷா வந்து சேர்ந்தான்.

"இவர்கள் உன்னை ஏதோ கேட்க வேண்டுமாம்." என்று சொல்லிவிட்டு மேஸ்திரி போய்விட்டார்.

இருவரையும் பார்த்து ஜெஸ்ஸி ஷா இளித்தான். "கொஞ்ச நேரத்துக்கு வேலையிலிருந்து கட்டிக் கொண்டால் தேவலை என்று நினைத்திருந்தேன். நல்லவேளை. கூப்பிட்டீர்கள். என்ன வேண்டும்?

போலீஸ்காரர்களில் ஒருவர் பையிலிருந்து ஒரு கைக்கடியாரத்தை வெளியெடுத்தார். "இது உன் வாட்சா?"

ஜெஸ்ஸி ஷாவின் இளிப்பு தேய்ந்தது. "இல்லையே."

"நிச்சயமாய்?"

"நிச்சயமாய்த்தான், அவன் தன் கையைக் காட்டினான். "நான் ஒரு சீக்கோ வாட்ச் வைத்திருக்கிறேன்."

"இதை நீ அடகுக் கடையில் அடகு வைத்தாயே?"

ஷா தயங்கினான். "ஒ. ஆமாம், ஆமாம். அந்தப் பிசினாரி ஆள் ஐந்நூறு டாலர்தான் கொடுத்தான். ஆனால் இதன் மதிப்பு..."

"இது உன்னுடையது இல்லை என்று சொன்னாயே?"

"என்னது இல்லைதான்."

"பின்னே இது ஏது உனக்கு?"

"கிடைத்தது."

"எங்கே?"

"என் வீட்டுக்குப் பக்கத்திலேயே தெரு ஓரமாய்க் கிடந்தது."

கொஞ்சம் கொஞ்சமாய்த்தன் கற்பனையை விரித்துக் கொண்டே போனான் அவன், "புல்வெளியில் கிடப்பது தெரிந்தது. உடனே காரை நிறுத்திப் போய்ப் பார்த்தால் இது கிடக்கிறது. வெயிலில் பளபளவென்று மின்னியதால்தான் என் கண்ணுக்குப் பட்டது."

"உன் அதிர்ஷ்டம் அன்றைக்கு மேகமூட்டம் போடாமல் நன்றாய் வெயில் காய்ந்திருக்கிறது."

"ஆமாம், ஆமாம்."

"ஷா, உனக்குப் பிரயாணம் செய்யப் பிடிக்குமா?"

"ஊகூம்."

"அடப் பாவமே! நீ நியூயார்க் வரையில் ஒரு சின்னப் பிரயாணம் பண்ண வேண்டியிருக்கிறது. மூட்டை முடிச்சைக் கட்டு, நாங்கள் உனக்கு உதவி செய்கிறோம்."

ஜெஸ்ஸி ஷாவின் வீட்டை அடைந்ததும் அவனுடைய அறையைச் சோதனை போட்டார்கள் இரு போலீஸ்காரர்களும்.

"இருங்கள், இருங்கள்! சோதனை போட வாரண்ட் வைத்திருக்கிறீர்களா?" என்று ஜெஸ்லி ஷா கத்தினான்.

"அப்படி எதுவும் எங்களுக்குத் தேவையில்லை. உனக்கு மூட்டை முடிச்சுக் கட்ட உதவி செய்கிறோம் அவ்வளவுதான்."

போலீஸ்காரர்களில் ஒருவர் அலமாரிபைப் பார்த்தார். உயரத்தில் ஓர் அட்டைப்பெட்டி இருந்தது. அதைக் கீழே இறக்கினார். திறந்து பார்த்தார்.

"பையன் ரொம்ப அதிர்ஷ்டக்காரன்!" என்று மற்றவரை நோக்கிக் கூவினார் அவர், "இந்தப் பெட்டிக்குள் அதிர்ஷ்ட தேவதை நோட்டு நோட்டாய்க் கொண்டு வந்து கொட்டியிருக்கிறது!"

லாரா அலுவலகத்தில் இருந்தாள்.

இன்ட்டர்காமில் அவள் செகரட்டரி கேத்தி கூப்பிடடாள், "டில்லி உங்களுடன் பேச வேண்டுமாம், மேடம்." என்றாள்.

"கொடு." என்று சொல்லிப் போனை எடுத்தாள் லாரா... "ஹலோ!"

"இன்று காலை இங்கே ஒரு சின்னப் பிரசினை மேடம்." என்றார் டில்லி. அவர் லாரா டவரில் வேலைகள் திட்டப்படி நடக்கிறதா என்பதைக் கவனிக்கும் பிராஜெக்ட் மானேஜர்.

"என்ன பிரசினை?"

"ஒரு சின்னத் தீ விபத்து. ஆனால் உடனே அணைத்துவிட்டோம்."

"எப்படி? எங்கே?"

"ஏர்கண்டி ஷனிங் யூனிட்டில் ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்தது. சொர்ட் சர்க்யூட் என்று தோன்றுகிறது, யாரோ தப்பாக ஒயரை மாட்டியிருக்கிறார்கள்."

"ரொம்பச் சேதமா?"

"அப்படி யில்லை மேடம். இரண்டொரு நாள் நம் வேலைகள் தாமதப்படும். சேதாரங்களை அகற்றி ஒயர்களைச் சரி செய்கிறோம்."

"முதலில் அதைக் கவனியுங்கள். எனக்கும் அவ்வப் போது தகவல் தெரிவியுங்கள்." என்றாள் லாரா.

அன்று அவள் வீடு திரும்பிய போது களைத்துச் சோர்ந்து போயிருந்தாள்.

"உன்னைப் பற்றி எனக்குக் கவலையாக இருக்கிறது, லாரா," என்றான் பிலிப். "நான் செய்யக்கூடியது ஏதாவது இருந்தால் சொல்லு செய்கிறேன்."

"ஒன்றுமில்லை, டார்லிங் தாங்க்யூ." என்றவள் புன்னகையை வரவழைத்துக் கொண்டாள். "ஆபீசில் சில்லறை சில்லறையாய் ஏதாவது பிராப்ளம்..."

பிலிப் அவளை அணைத்துக் கொண்டான், "லாரா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ? நான் உன் மீது பைத்தியமாக இருக்கிறேனாக்கும்."

லாரா அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். ‘இதுதான் நான் விரும்புவது. இதுதான் எனக்குத் தேவை’ என்று அவள் மனம் எண்ணியது. "டார்லிங், என் சில்லறை பிரசினைகளெல்லாம் முடியட்டும். இருவரும் எங்காவது போகலாம். நாம் இரண்டு பேர் மட்டும்."

"ஒப்பந்தம்!" என்றான் பிலிப்.

லாராவின் எண்ணங்கள் ஓடின. ‘மரியமை என்ன செய்தேன் என்பதை என்றைக்காவது ஒருநாள் இவரிடம் ஒப்புக் கொள்ள வேண்டும். நான் செய்தது தப்புதான். ஆனால் இவரை மட்டும் இழந்திருந்தேனானால் எனக்கு உயிரே போயிருக்கும்.’

அடுத்த நாள் டில்லி மறுபடியும் டெலிபோனில் கூப்பிட்டார்.

"வரவேற்பு ஹால் தரையில் பதிப்பதற்கு மார்பிள் கற்கள் ஆர்டர் கொடுத்திருந்தோமே, அதை ரத்துப் பண்ணி விட்டீர்களா?"

"நான் ஏன் ரத்துப் பண்ணுகிறேன்?" என்றாள் லாரா திகைப்புடன்.

"எனக்குத் தெரியாது. யாரோ ரத்து செய்திருக்கிறார்கள். மார்பிள் கற்கள் இன்றைக்கு டெலிவரி ஆகியிருக்க வேண்டும். வரவில்லை. கூப்பிட்டுக் கேட்டால், இரண்டு மாசம் முன்பு நாம் அதை ரத்து செய்திருக்கிறோம் என்கிறார்கள்."

லாரா கொதித்துப் போனாள். "இதனால் வேலைகள் ரொம்பத் தாமதமாகுமா?"

"திட்டமாய்ச் சொல்ல முடியவில்லை."

"மறுபடி ஆர்டர் கொடுக்கிறோம் என்று சொல்லுங்கள். சீக்கிரமாய் மார்பிள்களை அனுப்பச் சொல்லுங்கள்."

அவள் போனை வைத்த சமயம் ஹோவார்டு உள்ளே வந்தான்.

"பாங்க்குகளில் ரொம்ப நெருக்குகிறார்கள், லாரா. இன்னும் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும் என்று தெரியவில்லை."

"லாரா டவர்ஸ் முடிவடைகிற வரையில்தான். கிட்டத்தட்ட முடிந்துவிட்டதே? இன்னும் மூன்று மாதத்தில் மொத்தமும் முடிந்து விடும், ஹோவார்டு."

"அவர்களிடம் அதைச் சொல்லிவிட்டேன்." அவன் பெருமூச்சு விட்டான், "ஆல்ரைட். மறுபடியும் அவர்களுடன் பேசிப் பார்க்கிறேன்."

கேத்தி இன்ட்டர்காமில் கூப்பிட்டாள். "மிஸ்டர் டில்லியிடமிருந்து போன், மேடம்."

ஹேவார்டிடம், "போய் விடாதீர்கள். கொஞ்சம் இருங்கள்." என்று சொல்லிவிட்டு, "என்ன?" என்றாள் போனில்.

"இன்னொரு பிராப்ளம், மேடம்."

"சொல்லுங்கள்."

‘லிப்டுகள் தப்பும் தவறுமாய் வேலை செய்கின்றன. மேடம். ப்ரோக்ராம்களும் ஸிக்னல்களும் கோளாறாக இருக்கிறது. கீழே போவதற்குப் பொத்தானை அழுத்தினால் மேலே போகிறது. பதினெட்டாவது மாடிக்குப் பொத்தானை அழுத்தினால் தரைக்குப் போகிறது. இந்த மாதிரி கோளாறுகளை நான் பார்த்ததேயில்லை."

"வேண்டுமென்றே யாராவது சதி வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?"

"சொல்ல முடியாது. ஒருவேளை அஜாக்கிரதை யாகவும் இருக்கலாம்."

"அதையெல்லாம் சரிசெய்ய எத்தனை நாளாகும்?"

"வந்து பார்க்கும்படி சில பேரைக் கூப்பிட்டிருக்கிறேன். அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்."

"நிலவரம் தெரிந்ததும் எனக்குப் போன் செய்யுங்கள்." என்று கூறி ரிசீவரை வைத்தாள் லாரா.

"என்ன விஷயம்? பிரசினை ஒன்றுமில்லையே?" என்று ஹோவார்டு கேட்டான்.

அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை அவள். "ஹோவார்டு, ஸ்டீவ் மர்ச்சிஸதனைப் பற்றிச் சமீபத்தில் ஏதாவது காதில் விழுந்ததா?" என்றாள்.

அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான், "இல்லையே? ஏன்?"

"இல்லை, சும்மாதான் கேட்டேன்." என்றாள் லாரா.

65

லாரா ஸ்தாபனங்களுக்குக் கடன் உதவி அளித்து வரும் பல பாங்க்கர்கள் ஒன்று ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.

அவர்களுடைய முகங்களில் கவலை படர்ந்திருந்தது. காரணம், லாரா டவர்ஸ் மட்டு மல்ல, அவர்கள் நிதி உதவி செய்து வரும் நிறுவனங்கள் பலவும் கஷ்டத்தில் இருந்தன. அரசாங்கத்தின் புதிய கொள்கைகளின் விளைவாக, எல்லா நிறுவனங்களும் நெருக்கடியில் திக்கு முக்காடிக் கொண்டிருந்த சமயம் அது.

மொத்தம் ஆறு பாங்க்கர்கள் அந்த அறையில் கூடியிருந்தார்கள். ஹோவார்டு அவர்கள் எதிரில் உட்கார்ந்திருந்தான். சூழ்நிலை இறுக்கமாக இருந்தது.

"ஆறு கோடி டாலருக்கு மேலாக வசூலாக வேண்டியிருக்கிறது எங்களுக்கு," என்றார் பாங்க்கர்களின் பிரதிநிதியாக இருந்த ஒருவர், "ஆகவே லாரா ஸ்தாபனங்களுக்கு இனி மேல் உதவி செய்வதற்கில்லை."

"நீங்கள் இரண்டு விஷயத்தை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்." என்றான் ஹோவார்டு, "முதலாவதாக, எங்கள் ரெனோ காஸினோவின் லைசன்ஸை எந்த நிமிடத்திலும் புதுப்பித்து விடுவார்கள். அங்கிருந்து பணம் வர ஆரம்பித்துவிட்டால் பிறகு எந்தப் பற்றாக் குறையையும் எங்களால் சமாளிக்க முடியும். இரண்டாவதாக, லாரா டவர்ஸ் வேலைகள் குறித்த நேரப்படி நடந்து வருகின்றன. இன்னும் தொண்ணூறே நாளில் கட்டிடம் முடிந்து விடும். இப்போதே எழுபது சதவிகிதத்துக்கு மேல் வாடகைக்கு எடுத்துக் கொண்டு விட்டார்கள். கட்டிடம் முடியும்போது மிச்சமுள்ள இடத்துக்கு தான், நீ என்று போட்டி போடுவார்கள். ஆகவே, உங்கள் பணம் இதைவிடப் பத்திரமாக இருக்க முடியாது. லாரா ஸ்தாபனங்களை இயக்குவது லாரா என்கிற பெண்ணல்ல. லாரா என்கிற மந்திரவாதி."

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு அவர்களின் பிரதிநிதி சொன்னார்: "சரி, எங்களுக்குள் கலந்து பேசி உங்களுக்கு முடிவைத் தெரிவிக்கிறோம்."

"தாராளமாய். நான் மிஸ் லாராவிடம் நடந்த விஷயங்களைச் சொல்கிறேன்." என்று எழுந்து கொண்டான் ஹோவார்டு.

சொன்னது போலவே லாராவிடம் பேசினான். "பாங்க்காரர்கள் நம் பக்கம் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது லாரா. ஆனால் ஒன்று. இன்னும் கொஞ்ச நாள் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் இன்னும் சில சொத்துக்களை - அஸ்ஸெட்களை விற்க வேண்டும்."

"செய்யுங்கள்." என்றாள் லாரா.

இப்போதெல்லாம் அவள் அதிகாலையிலேயே ஆபீசுக்கு வந்து கொண்டிருந்தாள். இரவு வெகுநேரம் கழித்துதான் வீடு திரும்பினாள். அவளும் பிலிப்பும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதுகூட அரிதாயிருந்தது.

தன் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவள் போராடிக் கொண்டிருந்தாள்.

எத்தனை தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறாள் என்பதை அவள் பிலிப்பிடம் சொல்லவேயில்லை. ‘அவருக்கே எவ்வளவோ பிரசினைகள், பாவம். என் பிரசினைகளையும் அவர் தலையில் சுமத்துவானேன்?’ என்று எண்ணிக் கொண்டாள்.

திங்களன்று காலை பிராஜக்ட் மானேஜர் டில்லி போன் செய்தான். "நீங்கள் கொஞ்சம் இங்கே வந்து விட்டுப் போனால் தேவலை, மேடம்." என்றான்.

சுரீலென்று ஒரு பய உணர்ச்சி அவள் அடி வயிற்றைக் குத்தியது. "என்ன பிரசினை?" என்றாள்.

"நீங்கள் நேரே வந்து பார்த்தால் நல்லது."

"இதோ வருகிறேன்."

ஹோவார்டுக்குப் போன் செய்தாள். "ரெடியாக இருங்கள். போகும் வழியில் அழைத்துக் கொள்கிறேன். லாரா டவர்ஸில் மறுபடியும் ஒரு பிரசினையாம்."

அரை மணி நேரத்துக்கெல்லாம் அவர்கள் கட்டிட வேலை நடை பெற்றுக் கொண்டிருக்கும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

"என்ன பிரசினையென்று டில்லி சொன்னானா?" என்று ஹோவார்டு கேட்டான்.

"இல்லை. ஆனால் அது எதுவானாலும், தற்செயலாக நடந்தது என்று இனிமேல் நான் நம்பப் போவதில்லை. நாம் லாரா டவர்ஸ் கட்டிக் கொண்டிருக்கும் மனையை வாங்க வேண்டுமென்று ஸ்டீவ் மர்ச்சிஸன் தலைகீழாக நிற்கிறார் என்று முன்பொரு முறை நீங்கள் சொன்னீர்களே, ஞாபகம் இருக்கிறதா? மனையை நாம் தட்டிக் கொண்டு போய் விட்டோம்." என்றாள் லாரா.

கட்டிடத்தை அவர்கள் அடைந்தபோது பெரிய பெரிய கண்ணாடிப் பலகைகள் தரையில் அடுக்கப்பட்டிருந்தன. இன்னும் பல பலகைகள் லாரியிலிருந்து இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

டில்லி அவர்களிடம் வேகமாக வந்தான். "உங்களைப் பார்த்த பிறகுதான் எனக்கு மூச்சு வருகிறது."

"என்ன விஷயம்?"

"நாம் ஆர்டர் கொடுத்தபடி கண்ணாடிகள் வராமல் வேறு ஏதோ வந்திருக்கிறது. நிறமும் தப்பாக இருக்கிறது. அளவும் தப்பாக இருக்கிறது. கட்டிடத்தில் இவைகளைப் பொருத்துவது முடியவே முடியாத காரியம்."

லாராவும் ஹோவார்டும் ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள். "நம் அளவுக்குத் தக்கபடி இங்கேயே இதை வெட்டிக் கொள்ள முடியாதா?"

டில்லி தலையை அசைத்தான். "ஊகூம். நடவாத காரியம். மலை மலையாகக் கண்ணாடித் தூள்கள்தான் குவியும்."

"யாருக்கு நாம் ஆர்டர் கொடுத்தோம்?" என்று லாரா கேட்டாள்.

"நியூ ஜெர்ஸி கிளாஸ் கம்பெனி."

"நான் அவர்களுடன் பேசிக் கொள்கிறேன். எந்தத் தேதிக்குள் வேறு கிளாஸ் வரவேண்டும்?"

டில்லி சிறிது நேரம் கணக்கிட்டான், "இரண்டு வாரத்துக்குள் கிடைத்துவிட்டால் குறித்த நேரத்தில் வேலைகளை முடித்துவிடலாம். கொஞ்சம் அடித்துப் பிடித்து வேலை செய்ய வேண்டும். பரவாயில்லை."

"போகலாம்." என்றாள் லாரா, ஹோவார்டிடம்.

ஜெர்ஸி கிளாஸ் கம்பெனியில் மானேஜர் பெயர் ஆட்டோ கார்ட் போனில் உடனே கிடைத்தார். "வணக்கம், மேடம். உங்களுக்கு ஏதோ பிரச்சினை என்று சொன்னீர்களாமே?" என்றார்.

"பிரசினை எனக்கு இல்லை, உங்களுக்கு" என்று வெடித்தாள் லாரா, "நாங்கள் கொடுத்த ஆர்டர்படி கண்ணாடிகளை அனுப்பாமல் தப்பாக அனுப்பியிருக்கிறீர்கள். இன்னும் இரண்டே வாரத்துக்குள் சரியாக சரக்கை அனுப்பவில்லையென்றால், உங்கள் மீது வழக்குப் போட்டு உங்கள் கம்பெனியை இருந்த இடம் தெரியாமல் பண்ணிவிடுவேன். முப்பது கோடி திட்டம் உங்களால் நின்று போயிருக்கிறது. தெரியுமா?"

"எனக்கு எதுவும் புரியவில்லை. கொஞ்சம் லயனில் இருங்கள்." என்று சொன்னவர் ஏறத்தாழ ஐந்து நிமிடம் கழித்துத்தான் வந்தார். "ரொம்ப ரொம்ப ஸாரி, மேடம். ஆர்டரைத் தப்பாகக் குறித்துவிட்டார்கள். என்ன நடந்த தென்றால்..."

"என்ன நடந்தது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை." என்று லாரா சீறினாள், "எங்கள் ஆர்டரைப் பார்த்துச் செய்து அனுப்பி வையுங்கள்."

"கட்டாயம் செய்கிறேன் மேடம்."

‘அப்பாடா’ என்றிருந்தது லாராவுக்கு. "எவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும்?"

"இரண்டு மாதத்திலிருந்து மூன்று மாதத்துக்குள்."

"என்னது? இரண்டு மூன்று மாதமா? முடியவே முடியாது! இப்பவே வேண்டும்."

"உங்களுக்குச் சௌகரியம் பண்ணிக் கொடுக்கத் தான் நாங்களும் நினைக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏற்கெனவே நிறைய ஆர்டர்கள் கைவசம் இருக்கிறது."

"புரியாமல் பேசுகிறீர்களே! இது எமர்ஜென்ஸி."

"புரிகிறது மேடம். எங்களால் எவ்வளவு செய்ய முடியுமோ செய்கிறோம். இரண்டு மூன்று மாதத்துக்குள் உங்களுக்கு டெலிவரி கொடுக்கிறோம். அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது."

டொம்மென்று போனை வைத்தாள் லாரா, "என்னால் நம்பவே முடியவில்லை, என்றவள் டில்லியிடம், "வேறு ஏதாவது கம்பெனியில் கேட்டுப் பார்க்கலாமா?" என்றாள்.

டில்லி நெற்றியைத் தேய்த்துக் கொண்டான், "இவ்வளவு கடைசி நிமிடத்தில் செய்யக் கூடியவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே! இருந்தாலும், முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். நமக்கு முன்னால் ஆர்டர் கொடுத்தவர்கள் காத்திருப்பார்கள்."

"லாரா, ஒரு நிமிடம் இப்படி வா." என்று ஹோவார்டு அவளைத் தனியே அழைத்துச் சென்றான். "இதைச் சொல்லவே பிடிக்கவில்லை. இருந்தாலும்..."

"சொல்லுங்கள்." என்றாள் அவள்.

"உன் சினேகிதர் பால் மார்ட்டின் இருக்கிறாரே, அவருக்கு இங்கேயெல்லாம் ஆட்கள் இருக்கும். அல்லது தெரிந்தவருக்குத் தெரிந்தவர் என்று யாரேனும் இருப்பார்கள்."

"நல்ல யோசனை, ஹோவார்டு. அவரைப் பார்த்துப் பேசுகிறேன்."

இரண்டு மணி நேரம் கழித்து பால் மார்ட்டினின் அலுவலகத்தில் இருந்தாள் லாரா...

"நீ போன் செய்தபோது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?" என்றார் பால் மார்ட்டின், "ரொம்ப நாளாகிறது நீ என்னுடன் பேசி. அடேயப்பா! நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமோ?"

"தாங்க் யூ, பால்."

"நான் என்ன செய்ய வேண்டும், சொல்லு."

லாரா தயக்கத்துடன் சொன்னாள், "எனக்கு ஏதாவது தொல்லை வரும்போது உங்களிடம்தான் வருகிற மாதிரி ஆகிறது."

"நான் எப்போதும் உனக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறேன். இல்லையா?"

"ஆமாம், நீங்கள் நல்ல நண்பர்." அவள் பெருமூச்சு விட்டாள். "எனக்கு இப்போது ஒரு நல்ல நண்பர்தான் தேவை."

"என்ன பிரசினை, அதைச் சொல்லு. மறுபடியும் வேலை நிறுத்தமா?"

"இல்லை. லாரா டவர்ஸ் பற்றிய விஷயம்."

அவர் நெற்றியைச் சுருக்கினார். "ஏன், திட்டப்படி, வேலை நடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்களே?"

"நடந்து கொண்டிருக்கிறது. இல்லை, நடந்து கொண்டிருந்தது. என் பிராஜெக்டைக் குலைப்பதற்காக ஸ்டீவ் மர்ச்சிஸன் சதி வேலை செய்கிறார் என்று தோன்றுகிறது. என் மீது அவருக்கு சாரு வஞ்சம், திடீர் திடீரென்று கட்டிடத்தில் என்னென்னவோ கோளாறுகள் முளைக்கின்றன. இதுவரையில் எப்படி எப்படியோ சமாளித்து வந்துவிட்டோம். இப்போது ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. கட்டிடத்தை முடிக்க வேண்டிய தேதியே தாமதமாகி விடும் என்று தோன்றுகிறது. அப்படி நேர்ந்தால் இரண்டு பெரிய நிறுவனங்கள் வாடகை எடுத்துக் கொள்ளாமல் வாபஸ் வாங்கி விடுவார்கள். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது." தன் கோபத்தைக் கட்டுபடுத்திக் கொள்வதற்காக அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள்.

பிறகு தொடர்ந்தாள். "நியூ ஜெர்ஸி கிளாஸ் கம்பெனி என்பவர்களிடம் ஆறு மாதம் முந்தி ஆர்டர் கொடுத்திருந்தோம். இன்று அனுப்பியிருக்கிறார்கள். எல்லாம் தப்பான கண்ணாடி."

"அவர்களைக் கேட்டாயோ?"

"கேட்டேன். சரியானபடி செய்து அனுப்ப இரண்டு மூன்று மாதம் ஆகும் என்கிறார்கள். அது வருகிறவரையில் ஒரு வேலையும் நடக்காது. ஆட்கள் எல்லாரும் சும்மா நிற்கிறார்கள். அந்தக் கட்டிடம் மட்டும் குறித்த நேரத்தில் முடியவில்லை என்றால் என் கதி அதோகதி தான்."

பால் மார்ட்டின் அவளைக் கூர்ந்து நோக்கிவிட்டுச் சொன்னார், "இல்லை, அப்படியெல்லாம் ஆகாது. என்ன செய்யலாமென்று நான் பார்க்கிறேன்."

நிம்மதி அவள் தொண்டையை அடைத்தது. "பால்... நான்..." நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை

அவளுக்கு. "தாங்க் யூ."

அவர் அவள் கைகளைப் பற்றிக் கொண்டார். "இந்த ராட்சத மிருகம் இன்னும் செத்துவிடவில்லை, லாரா. நாளை உனக்குத் தகவல் தெரிவிக்கிறேன்."

மறுநாள் காலை லாராவின் அறையிலிருந்த போன் மணி அடித்தது. லாரா அவலுடன் எடுத்து, "பால்?" என்று கேட்டாள்.

"ஹலோ லாரா. என் சினேகிதர்கள் சிலருடன் பேசினேன். கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் எப்படியும் முடித்துவிடலாம். திங்கள் கிழமையிலிருந்து ஒரு வாரத்துக்குள் சரியான கண்ணாடிகளை டெலிவரி செய்வதாக வாக்களித்திருக்கிறார்கள்." என்றார் பால் மார்ட்டின்.

ஆனால் கண்ணாடி வருவதாக இருந்த தினத்தன்று வரவில்லை, பால் மார்ட்டினை மறுபடி கூப்பிட்டாள் லாரா.

"கண்ணாடி இன்னும் வந்து சேரவில்லை, பால்," என்றாள்.

"அப்படியா?" சிறிது மெளனத்துக்குப் பின் சொன்னார்: "சரி, நான் கவனிக்கிறேன்." என்றார். அவர் குரல் மென்மையாக ஆகியது. "இதிலே ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், பேபி, நான் உன்னுடன் பேச மறுபடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இப்போது."

"ஆமாம்... வந்து... பால், அந்தக் கண்ணாடி மட்டும் வரவில்லையென்றால்..."

"கட்டாயம் வரும். நம்பிக்கையோடு இரு." என்றார் பால் மார்ட்டின்.

66

ந்த வாரக் கடைசியிலும் வரவில்லை கண்ணாடிகள்.

ஹோவார்டு கவலையுடன் லாராவிடம் வந்தான். "பிராஜக்ட் மானேஜர் டில்லியுடன் இப்போது தான் பேசினேன், லாரா. கண்ணாடிகள் வெள்ளிக் கிழமைக்குள் வந்து விட்டால் சமாளித்துக் கொள்ளலாம் என்கிறார். இல்லையோ, நாம் தொலைந்தோம்."

வியாழக்கிழமை வரையில் பேச்சு மூச்சு இல்லை.

டவர்ஸ் வேலை நடக்குமிடத்துக்குச் சென்றாள் லாரா. தொழிலாளிகள் யாரும் இல்லை. அறைகுறையான அடுக்கு மாடிக் கட்டிடம் வானை முட்டக் கம்பீரமாக நின்றது. அற்புதமான கட்டிடமாக இருக்கப் போகிறது. அவளுக்கு ஒரு நினைவுச் சின்னம் போல் விளங்கப் போகிறது.

‘இது நிறைவேறாமல் விடமாட்டேன்!’ என்று கடும் சீற்றத்துடன் தனக்குள் சூளுரைத்துக் கொண்டாள் அவள்.

பால் மார்ட்டினுக்கு மறுபடி போன் செய்த போது

"ஸாரி, மிஸ்டர் பால் மார்ட்டின் வெளியே போயிருக்கிறார். ஏதாவது சொல்ல வேண்டுமா அவரிடம்?" என்று கேட்டாள் அவர் செக்ரட்டரி.

"வந்ததும் எனக்குப் போன் பண்ணச் சொல்லுங்கள்." என்று சொல்லிவிட்டு ஹோவார்டிடம், "எனக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகிறது - அந்த நியூஜெர்ஸி கிளாஸ் தொழிற்சாலை ஸ்டீவ் மர்ச்சிஸக்குச் சொந்தமாக இருக்குமோ என்று விசாரித்துப் பாருங்கள்." என்றாள்.

முப்பது நிமிடத்துக்கெல்லாம் ஹோவார்டு திரும்பி வந்தான். அவன் முகம் வெளிறிப் போயிருந்தது.

"என்ன? அந்தக் கண்ணாடித் தொழிற்சாலை யாருடையது என்று தெரிந்ததா?" என்று லாரா கேட்டாள்.

"தெரிந்தது." என்றான் அவன் மெதுவான குரலில். "டெலாவர் என்ற ஊரில் அந்தக் கம்பெனியை ரெஜிஸ்டர் செய்திருக்கிறார்கள். எட்னா என்ட்டர்ப்ரைஸ் என்ற நிறுவனத்துக்கு அது சொந்தமானது."

"எட்னா என்ட்டர்ப்ரைஸ்பா?"

"ஆமாம். ஒரு வருடத்துக்கு முன்பு அதை வாங்கியிருக்கிறார்கள். எட்னா என்ட்டர்ப்ரைஸ்ஸின் சொந்தக்காரன் பால் மார்ட்டின்." என்றான் ஹோவார்டு.

அதிர்ச்சியில் சிலையாகி நின்றாள் லாரா. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

லாரா நிறுவனங்களைப் பற்றிக் கன்னாபின்னா வென்று செய்திகள் வரத் தொடங்கின. லாராவை வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்த அதே நிருபர்கள் இப்போது அவளைத் தாக்கலானார்கள்.

விளம்பர ஏற்பாடுகளைச் செய்து வரும் ஜெர்ரி குழப்பத்துடன் ஹோவார்டிடம் வந்து, "எனக்கு ரொம்பக் கவலையாக இருக்கிறது." என்றான்.

"எதைப் பற்றி"

"நீங்கள் பத்திரிகைகளைப் பார்க்கவில்லையா?"

"பார்த்தேன், பார்த்தேன். அவர்கள் காட்டில் மழை" என்றான் ஹோவார்டு.

"பிறந்த நாள் விழாவை நினைத்தால் பயமாயிருக்கிறது." என்றான் ஜெர்ரி. "எல்லாருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவிட்டேன். பத்திரிகைகளில் கண்டபடி வதந்திகள் வருவதால் ரொம்பப் பேர் விழாவுக்கு வருவதற்கில்லை என்று சொல்லிவிட்டார்கள். வந்தால் தங்களையும் வதந்தி தொற்றிக் கொள்ளும் என்று பயப்படுகிறார்கள் போலிருக்கிறது! அயோக்கிய ராஸ்கல்கள்! நிலைமை பயங்கரமாக இருக்கிறது."

"என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?"

"விழாவை ரத்து செய்துவிடலாம். ஏதாவது நொண்டிச் சாக்குச் சொல்லி விடுகிறேன்."

"நீ சொல்வதும் சரிதான், லாராவுக்கு எந்த விதத்திலும் தர்ம சங்கடம் ஏற்படக் கூடாது. விழாவை ரத்து செய்துவிடு." என்றான் ஹோவார்டு.

"இப்போதே அதற்கு ஏற்பாடு செய்துவிடுகிறேன். லாராவிடம் நீங்கள் சொல்லிவிடுகிறீர்களா?"

"சொல்கிறேன்."

வழக்கறிஞர் டெர்ரி ஹில் லாராவைப் போனில் கூப்பிட்டார்.

"ரெனோ காஸினோ விசாரணைக் கமிஷனிடமிருந்து தாக்கீது வந்திருக்கிறது, லாரா, போயே ஆக வேண்டும். இல்லாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிப்பார்கள். நாளை மறுநாள் நாம் அங்கே இருக்க வேண்டும். நானும் உங்களுடன் வருகிறேன்." என்றார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் மான்ஸினி ஜெஸ்ஸி ஷாவை விசாரணை செய்தார். அதன்படி பதிவாகியிருந்த விவரம்:

மான்ஸினி: குட் மார்னிங் மிஸ்டர் ஷா. நான் போலீஸ் அதிகாரி மான்ஸினி. என் கேள்வியையும் உங்கள் பதிலையும் ஒரு ஸ்டெனோகிராபர் குறிப்பெடுத்துக் கொள்கிறார். அதில் உங்களுக்கு ஆட்சேப மில்லையே?

ஜெஸ்ஸி ஷா: இல்லை.

மா: ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் யாரும் தேவையில்லை என்று சொல்லிவிட்டீர்களாமே?

ஜெ: எனக்கு எந்த வழக்கறிஞரும் தேவையில்லை. கடவுளுக்குப் பொதுவாகச் சொல்கிறேன் - அந்த வாட்ச் எனக்கு ஒரு தெருவில் கிடைத்தது. அவ்வளவுதான், இவர்கள் என்னை நாய் மாதிரி இங்கே இழுத்துக் கொண்டு வந்து அடைத்திருக்கிறார்கள்.

மா: மிஸ்டர் ஷா உங்களுக்குப் பிலிப்பைத் தெரியுமா?

ஜெ: தெரியாது. எதற்காக அவரை நான் தெரிந்து கொள்ள வேண்டும்?

மா: அவரைத் தாக்கும்படி சொல்லி யாரும் உங்களுக்குப் பணம் கொடுக்கவில்லை?

ஜெ: நான்தான் சொல்கிறேனே? பிலிப்பைப் பற்றி நான் கேள்விப்பட்டது கூடக் கிடையாது.

மா: சிகாகோ போலீசார் உங்கள் அறையிலிருந்து ரொக்கமாக ஐம்பதாயிரம் டாலர் கைப்பற்றியிருக்கிறார்கள். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது?

ஜெ: (மெளனம்.)

மா: மிஸ்டர் ஷா?

ஜெ: சூதாட்டத்தில் எனக்குக் கிடைத்தது.

மா: எங்கே சூதாட்டம்?

ஜெ: கால்பந்து விளையாட்டில்... பந்தயம் கட்டியிருந்தேன், ஜெயித்தேன்.

மா: நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டக்காரர்தான்.

ஜெ: ஆமாம். நிச்சயமாய்.

மா: தற்சமயம் சிகாகோவில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள். இல்லையா?

ஜெ: ஆமாம்.

மா: எப்போதாவது நியூயார்க்கில் வேலை பார்த்ததுண்டா?

ஜெ: ஒரு முறை பார்த்திருக்கிறேன்.

மா: நியூயார்க்கில் குவீன்ஸ் என்ற இடத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தபோது நீங்கள் கிரேனான இயக்கியதாகவும் அப்போது பில் விட்மன் என்ற ஃபோர் மன் கொல்லப்பட்டார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சரிதானா?

ஜெ: ஆமாம். அது ஒரு விபத்து.

மா: அந்த வேலையில் எத்தனை நாள் இருந்தீர்கள்?

ஜெ: எனக்கு நினைவில்லை.

மா: நான் நினைவுபடுத்துகிறேன். சரியாய் எழுபத்திரண்டு மணி நேரம் வேலை பார்த்திருக்கிறீர்கள். அந்தக் கிரேன் விபத்து நடப்பதற்கு முதல் நாள் சிகாகோவிலிருந்து வந்தீர்கள். இரண்டு நாளைக்கெல்லாம் சிகாகோவுக்குத் திரும்பிப் போய்விட்டீர்கள். சரிதானா?

ஜெ: இருக்கலாம்.

மா: அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தந்துள்ள விவரத்தின் படி, பிலிப் தாக்கப்படுவதற்கு இரண்டு நாள் முன்பு நீங்கள் சிகாகோவிலிருந்து மறுபடியும் நியூயார்க்குக்கு வந்திருக்கிறீர்கள். மறுநாளே சிகாகோவுக்குத் திரும்பி விட்டீர்கள். அவ்வளவு குறுகலான விஜயத்துக்கு காரணம் என்ன?

ஜெ: சில நாடகங்களைப் பார்ப்பதற்காக வந்தேன்.

மா: என்னென்ன நாடகம் பார்த்தீர்கள் என்று நினைவு இருக்கிறதா?

ஜெ: இல்லை. ரொம்ப நாளாகிறது.

மா; கிரேன் விபத்து நடந்த சமயம் நீங்கள் யாரிடம் வேலைக்கு இருந்தீர்கள்?

ஜெ: லாரா என்ட்டர்பிரைஸஸ்.

மா; சிகாகோவில் நீங்கள் கட்டிட வேலை பார்த்தது எந்தக் கம்பெனியில்?

ஜெ: லாரா என்ட்டர்பிரைஸஸ்.

ஹோவார்டு லாராவுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தான். பத்திரிகைகளில் வரும் மோசமான வதந்திகளை எப்படி முறியடிப்பது என்று ஒரு மணி நேரமாக அவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்.

ஆலோசனை முடிந்து லாரா எழுந்து கொண்டாள், "வேறு ஒன்றும் விசேஷமில்லையே?" என்றாள்.

ஹோவார்டு புருவத்தைச் சுளித்தான். லாராவிடம் ஏதோ சொல்ல வேண்டுமென்று யாரோ சொன்னார்களே... என்ன அது? ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றான். முடியவில்லை.

‘சரி, அது அப்படி ஒன்றும் முக்கியமானதாக இருக்காது.’ என்று எண்ணிக் கொண்டான்.

பிலிப்பிடம் வேலையாள் வந்து, "உங்களைப் போனில் கூப்பிடுகிறார்கள், சார். இன்ஸ்பெக்டர் மான்ஸினியாம்." என்றான்.

பிலிப் போனை எடுத்து, "வணக்கம் இன்ஸ்பெக்டர், என்ன விஷயம்" என்றான்.

"உங்களுக்கு ஒரு நியூஸ் சொல்ல வேண்டும், மிஸ்டர் பிலிப்"

"சொல்லுங்களேன், ஆள் பிடிபட்டு விட்டானா?"

"நேரில் வந்து பேசுவது நல்லதென்று நினைக்கிறேன். உங்களுக்குச் சௌகரியப்படுமா?"

"தாராளமாய்."

"அரைமணியில் வருகிறேன்."

பிலிப் போனை வைத்தான். டெலிபோனில் பேச முடியாத அளவுக்கு அப்படி என்ன விஷயமாக இருக்கும்? வியப்பாக இருந்தது.

சொன்னபடியே அரை மணிக்கெல்லாம் மான்ஸினி வந்து சேர்ந்தார். வேலைக்காரன் அவரைப் பிலிப்பிடம் அழைத்து வந்து விட்டுச் சென்றான்.

"வணக்கம் மிஸ்டர் பிலிப்."

"வணக்கம், என்ன விஷயம்?"

"உங்களைத் தாக்கிய ஆளைக் கண்டு பிடித்து விட்டோம்."

"கண்டு பிடித்து விட்டீர்களா? ஆச்சரியமாக இருக்கிறதே!" என்றான் பிலிப், "வழிப்பறிக்காரர்களைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம் என்றீர்களே?"

"இவன் சாதாரண வழிப்பறிக்காரன் அல்ல." பிலிப்பின் நெற்றி சுருங்கியது. "புரியவில்லையே?"

"அவன் ஒரு கட்டிடத் தொழிலாளி. சிகாகோவிலும் நியூயார்க்கிலும் வேலை பார்க்கிறவன். கிரிமினல் குற்றவாளி என்று போலீஸ் ரெகார்டில் இருக்கிறது, வழி மறித்துத் தாக்குவது. பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து திருடுவது - இந்த மாதிரிக் குற்றங்கள் செய்தவன். அவன் உங்கள் கைக்கடியாரத்தை அடகு வைத்திருந்தான். கைரேகையை வைத்து ஆளைப் பிடித்தோம்."

மான்ஸினி ஒரு கைக்கடியாரத்தை நீட்டினார். "இது உங்கள் வாட்ச் தானே? பாருங்கள்."

பிலிப் அதையே வெறித்து நோக்கினான். அன்று கையிலிருந்து வாட்ச்சைப் பறித்ததும் கையை வெட்டியாதும் கண் முன்னே மீண்டும் நினைவு வந்தன. அதைத் தொடவே அவனுக்குப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாகக் கை நீட்டி வாட்ச்சை வாங்கினான். அதன் பின்புறத்தைப் பார்த்தான்.

சில எழுத்துக்கள் சுரண்டப்பட்டிருந்தன். "ஆமாம், என்னுடையதுதான்," என்றான்.

வாட்ச்சைத் திரும்ப வாங்கிக் கொண்டார் மான்ஸினி. "கொஞ்ச நாள் இதை நாங்கள் வைத்திருக்கிறோம். சாட்சியத்துக்கு வேண்டியிருக்கும். நாளைக் காலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வாருங்கள், அணி வகுப்பில் அவனை நீங்கள் அடையாளம் காட்ட வேண்டும்."

தன்னை இந்தக் கதிக்கு ஆளாக்கியவனை நேருக்கு நேர் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பு வந்த உடனே பிலிப்பின் உள்ளத்தில் திடீரென்று ஆத்திரம் பொங்கியது. "கட்டாயம் வருவேன்." என்றான்.

"போலீஸ் பிளாஸா நம்பர் ஒன்று. அறை எண் 323. பத்து மணி."

"நல்லது." என்றான் பிலிப், "இவன் சாதாரண வழிப்பறி ஆள் அல்ல என்று சொன்னீர்களே, அது எதனால்?"

இன்ஸ்பெக்டர் மான்ஸினி சிறிது தயங்கிவிட்டு, "உங்களைத் தாக்கும்படி அவனைக் கூலிக்கு அமர்த்தியிருக்கிறார்கள்." என்றார்.

திகைத்து வெறித்து அவரை நோக்கினான் பிலிப். "என்ன சொல்கிறீர்கள்?"

"உங்களை அவன் தாக்கியது ஒன்றும் விபத்து அல்ல. மிஸ்டர் பிலிப், உங்கள் கையை வெட்டுவதற்காக ஐம்பதாயிரம் டாலர் கொடுத்திருக்கிறார்கள் அவனுக்கு."

"நான் நம்ப மாட்டேன்." என்றான் பிலிப் மெதுவாக. "என்னை முடமாக்குவதற்காக ஐம்பதாயிரம் டாலர் யார் கொடுப்பார்கள்?"

"உங்கள் மனைவி. அவனை அமர்த்தியவர் உங்கள் மனைவி." என்றார் இன்ஸ்பெக்டர் மான்ஸினி.

பிலிப் புரண்டு புரண்டு படுத்தான் படுக்கையில், அதிர்ச்சி அவனை உறைய வைத்திருந்தது.

‘உங்கள் மனைவிதான் அவனை அமர்த்தியிருந்தாள்...’

லாரா? லாராவா? அப்படியொரு பயங்கரமான காரியத்தை லாரா செய்திருக்க முடியுமா? எதற்காகச் செய்ய வேண்டும்? என்ன காரணம்?

எதற்காகத் தினம் தினம் பியானோ சாதகம் செய்கிறீர்கள்? இசை நிகழ்ச்சி எதுவும் இப்போது கொடுக்கப் போவதில்லையே?’ என்று முன்னொரு நாள் லாரா சொன்னது ஞாபகம் வந்தது.

"நீங்கள் எங்கேயும் போக வேண்டியதில்லை. எனக்குக் கணவன் வேண்டும். பகுதி நேரக் கணவனல்ல... நீங்கள் என்ன, சேல்ஸ்மேனா ஊர் ஊராகப் போய்க் கொண்டிருப்பதற்கு’ என்று லாரா சொன்னது ஞாபகம் வந்தது.

‘நீங்கள் கொடுத்த வைர பிரேஸ்லெட்டை நான் திருடியதாகக் குற்றம் சாட்டினாள் உங்கள் மனைவி. உங்களைப் பிடித்து வைத்துக் கொள்ளவதற்காக அவள் எதுவும் செய்வாள்...’ என்று மரியம் சொன்னது ஞாபகம் வந்தது.

‘லாராவுடன் பேசிக் கொண்டிருந்தேன். உங்கள் இசை நிகழ்ச்சிகளைக் குறைத்துக் கொள்ளப் போகிறீர்களாமே?’ என்று மானேஜர் வில்லியம் சொன்னது ஞாபகம் வந்தது.

லாரா... லாரா... லாரா...

67

போலீஸ் பிளாஸா ஒன்றாம் எண் ஸ்டேஷனில் அரசாங்க வழக்கறிஞர், போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர் மான்ஸினி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அரசாங்க, வழக்கறிஞர் சொல்லிக்கொண்டிருந்தார்: "இதிலே சம்பந்தப்பட்டிருப்பது யாரோ ஒரு தரம்கெட்ட பெண் அல்ல. லாரா. ஏகப்பட்ட செல்வாக்குப் படைத்தவள். உங்களிடம் எந்த அளவுக்கு ஆதாரம் இருக்கிறது. இன்ஸ்பெக்டர்?"

"லாரா என்ட்டர்ப்ரைஸஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் கேட்டு உறுதி செய்து கொண்டேன். லாராவின் அனுமதியின் பேரில் தான் ஜெஸ்ஸி அமர்த்தப்பட்டிருக்கிறான். கட்டிட வேலைகளில் யாரையேனும் அவளாகவே தேர்ந்தெடுத்து நியமித்தது அதற்கு முன் உண்டா என்று அவர்களைக் கேட்டேன். கிடையாது என்று சொன்னார்கள்." என்றார் இன்ஸ்பெக்டர் மான்ஸினி.

"வேறு என்ன ஆதாரம்?"

"பில் விட்மன் என்று ஒருவர் அங்கே இருந்தார். தனக்கு லாராவுக்கும் ஏதோ உறவு ஏற்பட்டிருக்கிறது என்றும், சீக்கிரத்தில் தான் பணக்காரராக ஆகப் போவதாகவும் அந்த ஆள் எல்லாரிடமும் ஜம்பம் அடித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நாளைக்கெல்லாம் ஒரு கிரேன் விபத்தில் அவன் இறந்து விட்டான். அந்த கிரேனை அந்தச் சமயம் இயக்கிக் கொண்டிருந்தது ஜெஸ்ஸி ஷா தான், முதலில் சிகாகோவில் வேலைக்கு இருந்தவன் இந்த ஜெஸ்ஸி ஷா. அங்கிருந்து நியூயார்க்குக்கு வரவழைக்கப்பட்டிருந்தான். கிரேன் விபத்து நேர்ந்த பிறகு மறுபடியும் சிகாகோவுக்கே திரும்பி விட்டான். அது வேண்டுமென்றே செய்த விபத்துதான் என்பதைப் பற்றிச் சந்தேகமே கிடையாது. அத்துடன் இன்னொரு விஷயம். அவன் நியூயார்க்கிற்கு வந்து போவதற்கான விமான டிக்கெட்டை லாரா என்ட்டர்ப்ரைஸஸ்தான் வாங்கியிருக்கிறது."

"பிலிப் தாக்கப்பட்டதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?"

"அதுவும் அதே கதைதான்." என்றார் இன்ஸ் பெக்டர் மான்ஸினி. "அந்தத் தாக்குதலுக்கு இரண்டு நாள் முன்பு சிகாகோவிலிருந்து ஜெஸ்ஸி ஷா வந்திருக்கிறான். பிலிப்பின் கை வெட்டுப்பட்டதற்கு மறுநாள் திரும்பப் போய்விட்டான். கை நிறையப் பணம் கிடைத்திருந்த போது அந்த வாட்சை எங்காணும் தூர எறிந்து விட்டுப் போயிருக்கலாம். அப்படி அவன் செய்திருந்தால் நாம் அவனைப் பிடித்திருக்கவே முடியாது. மாறாக, பேராசை பிடித்து அந்த வாட்சின் மீது பணம் வாங்கலாமென்று அடகுக் கடைக்குப் போனான். நம்மிடம் மாட்டிக் கொண்டான்."

போலீஸ் கமிஷனர் கேட்டார்.

"சரி. இந்தத் தாக்குதலுக்கு நோக்கம் என்ன? எதற்காக அவள் தன் கணவனின் கையை வெட்ட ஆள் அமர்த்த வேண்டும்?"

"அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் சிலரை விசாரித்தேன். கணவன் மீது ஒரே பைத்தியமாக இருக்கிறாளாம் லாரா. இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டது ஒரே ஒரு விஷயத்தில்தான் - அவன் இசை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் போவது அவளுக்குப் பிடிக்கவில்லை. வீட்டிலேயே அவன் தங்கியிருக்க வேண்டும் என்பது அவள் விருப்பம்."

"இப்போது தங்கியிருக்கிறான்?"

"அதே."

அரசாங்க வழக்கறிஞர் கேட்டார்: "அவள் என்ன சொல்கிறாள். இதை மறுக்கிறாளா?"

"இன்னும் அவளிடம் நேரடியாக மோதவில்லை. இந்த வழக்கு கோர்ட்டில் நிற்குமா என்று முதலில் உங்கள் கருத்தைக் கேட்க நினைத்தோம்."

"ஜெஸ்ஸி ஷாவைப் பிலிப் அடையாளம் காட்டுவார் என்கிறீர்களா?"

"ஆமாம்."

"அப்படியானால் நீங்கள் யாராவது லாராவைப் போய்ப் பார்த்து வாருங்கள். அவள் என்ன சொல்கிறாள் என்று கேளுங்கள்." என்றார் அரசாங்க வழக்கறிஞர்.

இன்ட்டர்காம் ஒலித்தபோது ஹோவார்டுடன் பேசிக் கொண்டிருந்தாள் லாரா.

"இன்ஸ்பெக்டர் மான்ஸினி என்று ஒருவர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார், மேடம்." என்றாள் ஆபரேட்டர்.

லாரா முகம் சுளித்தாள் "என்ன விஷயமாம்?"

"சொல்லவில்லை."

"சரி. இங்கே அனுப்பு."

இன்ஸ்பெக்டர் மான்ஸினி குழப்பத்தில் இருந்தார். அசைக்க முடியாத சாட்சியம் என்று எதுவும் இல்லாமல் லாராவை எப்படி மடக்குவது என்று தடு மாற்றமாக இருந்தது அவருக்கு. ‘எதற்கும் முயற்சி பண்ணிப் பார்த்துவிடுவோம், என்ற எண்ணத்தில்தான் வந்திருந்தார். ஹோவார்டை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை.

"வணக்கம் இன்ஸ்பெக்டர்." என்றாள் லாரா.

"வணக்கம்."

"ஹோவார்டை உங்களுக்குத் தெரியுமா?"

"மிக நன்றாய்த் தெரியும். சிகாகோவில் சிறந்த பேஸ்பால் ஆட்டக்காரராக இருந்தவராயிற்றே."

"என்ன விஷயமாய் வந்தீர்கள் இன்ஸ்பெக்டர்?" என்று லாரா கேட்டாள்.

‘இதுதான் ரொம்ப இக்கட்டான கட்டம்.’ என்று எண்ணிக் கொண்டார் இன்ஸ்பெக்டர். முதலில் இவளுக்கு ஜெஸ்ஸி ஷாவைத் தெரியும் என்பதை ஒப்புக் கொள்ள வைக்கலாம். பிறகு அங்கிருந்து மேலே தொடரலாம்.

"உங்கள் கணவரின் கையை வெட்டிய ஆளை நாங்கள் கைது செய்து விட்டோம்." என்று கூறியவர்

அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தார்.

"என்ன... என்ன? நீங்கள்..." என்றாள் லாரா.

ஹோவார்டு குறுக்கிட்டு, "எப்படி அவனைப் பிடித்தீர்கள்?" என்று கேட்டான்.

"லாரா பிலிப்புக்குப் பரிசளித்த கடியாரம் அவனிடம் இருந்தது. அதை அடகு வைக்க வந்தபோது மாட்டிக் கொண்டான்." என்றார் இன்ஸ்பெக்டர். பிறகு அவள் முகத்தை மீண்டும் ஆராய்ந்தவாறு, "அந்த ஆளின் பெயர் ஜெஸ்ஸி ஷா." என்றார்.

லாராவின் முகத்தில் கடுகத்தனை மாற்றமும் தெரியவில்லை. ‘நல்ல நடிகை. இந்தப் பெண்மணி சிறந்த நடிகை.’ என்று எண்ணிக் கொண்டார்.

"அவனை உங்களுக்குத் தெரியுமா?"

"ஊகூம். எனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்?"

முதல் தடவையாகத் தடுமாறுகிறாள் என்று இன்ஸ்பெக்டர் நினைத்தார். இனி மடக்கி விடலாம்.

"சிகாகோவில் உங்கள் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்த போது அங்கே அவன் வேலைக்கு இருந்தான். இங்கே குவின்ஸ் பகுதியில் வேலை நடந்த போது ஒரு கிரேனைத் தட்டி, ஒர் ஆளைச் சாகடித்தான்." தன் குறிப்பு நோட்டைப் பார்த்துக் கொள்கிற மாதிரி பாசாங்கு செய்தார் இன்ஸ்பெக்டர். "செத்துப் போன ஆளின் பெயர் பில் விட்மன். விசாரணையின்போது அது தற்செயலான விபத்து என்று முடிவு செய்தார்கள், ஆனால்..."

லாரா மிடறு விழுங்கினாள். "சரி."

அவர் மேலே பேசுமுன் ஹோவார்டு சொன்னான்: "இதோ பாருங்கள் இன்ஸ்பெக்டர், எங்கள் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொருவர் பெயரையும் நாங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க முடியுமா?"

"உங்களுக்கு ஜெஸ்ஸி ஷாவைத் தெரியாது?"

"தெரியாது. லாராவுக்கும் தெரியாதென்று..."

"அதை அவர் வாயாலேயே சொன்னால் நன்றாயிருக்கும்."

"அப்படியொரு ஆளைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இல்லை." என்றாள் லாரா.

"உங்கள் கணவரைத் தாக்குவதற்காக அவனுக்கு ஐம்பதாயிரம் டாலர் தரப்பட்டிருக்கிறது."

"என்னால்... என்னால் நம்பவே முடியவில்லை." என்றாள் லாரா. திடீரென்று அவள் முகம் வெளிறி விட்டது.

‘இப்போது மாட்டிக் கொண்டு விட்டாள்’ என்று எண்ணினார் இன்ஸ்பெக்டர், "இதைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது என்றா சொல்கிறீர்கள்?" என்றார்.

லாரா அவரை வெறித்து நோக்கியவாறிருந்தாள், அவள் கண்கள் அனல் கக்கின, "நீங்கள் சொல்வதைப் பார்த்தால்... என்ன தைரியம் உங்களுக்கு இப்படிச் சொல்ல! பிலிப்பைத் தாக்குவதற்கு யாரோ பணம் கொடுத்து ஆள் அமர்த்தியிருக்கிறார்கள் என்றால்... யார் அவர்? எனக்குத் தெரிந்தாக வேண்டும்."

"உங்கள் கணவரும் இதையேதான் சொல்கிறார்."

"பிலிப்புடன் இதைப் பற்றிப் பேசினீர்களா என்ன?"

"ஆமாம். நான்..."

அடுத்த நிமிடம் அலுவலகத்தை விட்டுப் புயலாய்ப் பறந்தாள் லாரா.

வீட்டை அவள் அடைந்த போது, பிலிப் தன் துணிமணிகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். ஒற்றைக் கையால் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்ததால், கசாமுசாவென்று கிடந்தன துணிகள்.

"பிலிப்... என்ன செய்கிறீர்கள்?"

அவன் லாராவை நோக்கித் திரும்பினான், யாரோ ஒரு புதிய நபரைப் பார்ப்பதுபோல் உணர்ச்சியற்றிருந்தது அவன் முகம்... "நான் போகிறேன்." என்றான்.

"ஏன்? நீங்கள் அந்த அந்தப் பயங்கரக் கதையை நம்புகிறீர்களா என்ன?"

"லாரா! மேலும் மேலும் பொய் பேசாதே."

"இல்லை, நான் பொய் பேசவில்லை. தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு எந்த விதத்திலும் நான் காரணமல்ல, இந்த உலகத்தில் எதற்காக வேண்டியும் உங்களுக்கு நான் துன்பம் ஏற்படுத்தமாட்டேன். நான் உங்களைக் காதலிக்கிறேன், பிலிப், காதலிக்கிறேன்."

அவன் நிமிர்ந்து. அவளை நோக்கினான். "அந்த ஆள் உன் கீழே வேலை பார்த்தவன் என்று போலீசில் சொல்கிறார்கள். என்னை... என்னை அப்படிச் செய்வதற்காக அவனுக்கு ஐம்பதாயிரம் டாலர் தரப்பட்டிருக்கிறது என்கிறார்கள்."

அவன் பேச்சை மறுத்துத் தலையைப் பலமாக அசைத்தாள் லாரா. "அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. என்னை நீங்கள் நம்புகிறீர்கள் இல்லையா?"

அவன் பதிலேதும் கூறாமல் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு நீண்ட நிமிடத்துக்கு அப்படியே நின்றிருந்தாள் லாரா. பிறகு அந்த அறையை விட்டுப் புயலென வெளியேறினாள்.

பஜார் பகுதியில் இருந்த ஒர் ஓட்டலில் பிலிப் தங்கியிருந்தான். அன்று இரவு முழுதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. லாரா தன்னுடன் பேசியதெல்லாம் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து அவனை வாட்டின.

‘உங்களுடைய சங்கீத ஃபவுண்டேஷன் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாம் சந்தித்துப் பேசினால் என்னாலான உதவியை அதற்குச் செய்ய முடியும்.’

‘உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...’

‘நீங்கள் ஸ்கார்லெட்டி இசையைப் பியானோவில் வாசிக்கும் போது எனக்கு நேபிள்ஸ் நகரத்திலேயே இருக்கிற மாதிரி இருக்கிறது...’

நான் கல்லையும் சிமெண்ட்டையும் இரும்பையும் கொண்டு கனவுகள் காண்கிறவள், அந்தக் கனவுகளை உண்மையாக்குகிறேன்...

"உங்களைப் பார்ப்பதற்காகவே ஆம்ஸ்டர்டாமுக்கு வந்தேன்...’

‘நானும் உங்களுடன் மிலானுக்கு வரட்டுமா? என்ன சொல்கிறீர்கள்?’

லாராவின் கதகதப்பு, இரக்கம், பரிவு... அவளைப் பற்றி நாம் நினைத்ததெல்லாம் தப்புதானா கடைசியில்...

பிலிப் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தபோது இன்ஸ்பெக்டர் மான்ஸினி அவனுக்காகத் தயாராய்க் காத்திருந்தார். அவனை உள்ளே இருந்த ஹாலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே சற்றே உயரமான ஒரு மேடை இருந்தது. அங்கே பல பேர் வரிசையாக நிறுத்தப் பட்டிருந்தார்கள்.

"உங்களைத் தாக்கிய ஆள் அந்த வரிசையில் இருக்கிறான். அவனை நீங்கள் அடையாளம் காட்டுங்கள் போதும்." என்றார் இன்ஸ்பெக்டர்.

‘காட்டினால் அடுத்து என்ன செய்வார்கள்? அதை வைத்து லாராவின் பெயரைச் சந்திக்கு இழுப்பார்கள்...’

பிலிப்பின் மனம் தவித்தது...

நின்றிருப்பவர்களை நிமிர்ந்து பார்த்தான்.

அங்கே ஆறு பேர் இருந்தார்கள், எல்லோரும் ஏறத்தாழ ஒரே உயரம், பருமன், ஒரே வயது, அவர்களின் நடுவில் ஜெஸ்ஸி ஷா இருந்தான்.

அவனைக் கண்டபோது பிலிப்பின் தலை சுழன்றது. ‘ஊம்... எடு உன் பர்லை!’ என்று அன்றைக்கு அவன் சொன்ன குரல் காதில் ஒலித்தது. மணிக்கட்டை அந்தக் கத்தி வெட்டியபோது அடைந்த அந்த மரண வேதனை சுரீரென்று இப்போதும் வலித்தது.

லாரா அப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருப்பாளா?

"நான் காதல் கொண்ட ஒரே நபர் நீங்கள்தான்" என்று அவள் சொன்னது ஞாபகம் வந்தது.

68

குற்றவாளியைப் பிலிப் அடையாளம் காட்ட வேண்டுமென்பதற்காகப் போலீஸ் ஸ்டேஷனில் அந்த ஆறு பேரும் நின்றிருந்தார்கள். பிலிப்பைத் தாக் கிய ஜெஸ்ஸி ஷாவும் அவர்களில் ஒருவனாக நின்றிருந்தான்.

ஆனால் பிலிப் தயங்கியபடியே இருந்தான்.

"நன்றாக அவர்களைப் பாருங்கள், மிஸ்டர் பிலிப்." என்றார் இன்ஸ்பெக்டர் மான்ஸினி.

பிலிப்புக்கு அது காதில் விழவில்லை.

‘இனிமேல் நான் வீட்டிலேயே தங்கி வேலைகளைக் கவனிக்கப் போகிறேன். பிலிப்புக்கு நான் துணையாக இருக்க வேண்டும்.’ என்று அன்றொரு நாள் லாரா சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது.

"மிஸ்டர் பிலிப்..." என்றார் இன்ஸ்பெக்டர்

‘உலகத்திலேயே மிகச் சிறந்த டாக்டர்களை வர வழைத்து உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்.’ என்று லாரா சொன்னதும்... அவனுக்காக ஒவ்வொரு நிமிடமும் அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டதும்... அவனுக்காகப் பரிவு காட்டியதும்...

"மிஸ்டர் பிலிப், குற்றவாளியைத் தயவு செய்த அடையாளம் காட்டுகிறீர்களா?" என்றார் இன்ஸ்பெக்டர்.

‘உங்கள் மீது எனக்குக் கொள்ளைக் காதல், பிலிப். அதனால்தான் உங்களை மணந்து கொண்டேன். இப்போதும் என் காதல் அப்படியேதான் இருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் இடையே ஸெக்ஸ் இல்லாவிட்டால் நான் துளிகூடக் கவலைப் படமாட்டேன். என்னை இறுக அணைத்துக் கொள்ளுங்கள். உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லுங்கள், அது போதும்.’ என்று சொன்னாளே... அது போலி வார்த்தையல்ல. உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தை.

அபார்ட்மெண்ட்டை விட்டுப் புறப்பட்டபோது அவள் கடைசியாகச் சொன்னது. ‘உங்களுக்கு நேர்ந்த விபத்துக்கும் எனக்கும் கொஞ்சம் கூடச் சம்பந்தம் கிடையாது, பிலிப், உலகத்திலேயே எதற்காக வேண்டியும் உங்களுக்கு நான் துன்பம் ஏற்படுத்தமாட்டேன்.’

"மிஸ்டர் பிலிப்..." என்று மீண்டும் குரல் கொடுத்தார் மான்ஸினி.

‘போலீஸில் எங்கேயோ ஏதோ ஒன்று பண்ணியிருக்கிறார்கள்’ என்று பிலிப் நினைத்தான். கடவுளே! லாராவை நான் நம்புகிறேன். அவள் அந்தக் காரியத்தை ஒரு நாளும் செய்திருக்க முடியாது...

மான்ஸினி மறுபடி சொன்னார். "இவர்களில் உங்களைத் தாக்கியவன் யார், மிஸ்டர் பிலிப்?"

பிலிப் அவரை நோக்கி மெல்லத் திரும்பினான். "எனக்குத் தெரியவில்லை." என்றான்.

"என்னது?"

"அவனைத் தெரியவில்லை."

"உங்களை அவன் தாக்கியபோது அவன் முகத்தை நன்றாய்ப் பார்த்ததாய்ச் சொன்னீர்களே?"

"ஆமாம். சொன்னேன்."

"அப்படியானால் இவர்களில் யார் அவன் என்று காட்டுங்கள்."

"இல்லை... இவர்களில் அந்த ஆள் இல்லை." என்றான் பிலிப்.

இன்ஸ்பெக்டர் மான்ஸினியின் முகத்தில் கடுமை தெரிந்தது. "நிச்சயமாய்த்தான் சொல்கிறீர்களா?"

"வெகு நிச்சயமாய்" என்று கூறிவிட்டுப் பிலிப் எழுந்து கொண்டான்.

"நல்லது மிஸ்டர் பிலிப். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி."

‘லாராவைப் பார்க்க வேண்டும். உடனே பார்த்தாக வேண்டும்.’ என்று தீர்மானித்துக் கொண்டான் பிலிப்.

ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடி தன் மேஜையடியில் உட்கார்ந்திருந்தாள் லாரா.

பிலிப் என் பேச்சை நம்ப மறுத்துவிட்டாரே! அது தான் அவள் உள்ளத்தில் பயங்கரமாய் வலித்தது.

பால் மார்ட்டின்...

நிச்சயமாய் இவ்வளவுக்கும் பின்னால் இருப்பது அவராகத்தான் இருக்கும். ஆனால் ஏன் அவர் அப்படிச் செய்ய வேண்டும்?

‘உன்னைச் சரியானபடி உன் கணவர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொன்னது நினைவிருக்கிறதா? அப்படியொன்றும் கவனித்துக் கொள்வதாகத் தெரியவில்லையே?’ என்று பால் மார்ட்டின் கூறியது ஞாபகம் வந்தது. அவள் மீது கொண்ட காதல் காரணமாக அப்படிச் செய்தாரா? அல்லது வெறுப்பு ஏற்பட்டதால் அப்படிச் செய்தாரா?

ஹோவார்டு உள்ளே வந்தான்.

அவன் முகம் வெளுத்துக் கவலை நிரம்பியிருந்தது.

"இப்போதுதான் போனில் பேசிவிட்டு வருகிறேன், லாரா. லாரா டவர்ஸ் நம் கையைவிட்டுப் போய்விட்டது. குறித்த காலத்தில் நாம் கட்டிடத்தை முடித்துத் தராததால் சதர்ன் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமும், இன்ட்டர்நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் பாங்கிங் நிறுவனமும் வாபஸ் வாங்கிவிட்டார்கள். நம்முடைய அடமானங்களையும் கடன்களையும் சமாளிக்க எந்த வழியும் தெரியவில்லை. சே! கிட்டத்தட்ட முடிந்துவிட்ட கட்டிடம் உலகத்திலேயே உயரமான கட்டிடம் நான்... ஸாரி, லாரா. அதைப்பற்றி நீ எவ்வளவு பெரிதாய் நினைத்திருந்தாய் என்று எனக்குத் தெரியும்..."

லாரா அவனை நோக்கித் திரும்பினாள். அந்த முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனான் அவன்.

முகம் வெளிறி... கண்களின் கீழே கருவளையம் கட்டி... உடம்பில் சக்தியெல்லாம் வடிந்து வற்றிவிட்ட மாதிரி

"லாரா... நான் சொன்னது உன் காதில் விழுந்ததா? லாரா டவர்ஸை நாம் இழந்துவிட்டோம்..."

அவள் பேசினாள். அவள் குரலில் தென்பட்ட அமைதி இயற்கைக்கு விரோதமாக இருந்தது.

"நீங்கள் சொன்னது காதில் விழுந்தது. ஹோவார்டு. கவலைப்படாதீர்கள். நமது மற்றக் கட்டிடங்களின் மீது கடன் வாங்கி, எல்லாக் கடன்களையும் அடைத்து விடுவோம்..."

அவளுடைய நிதானம் அவனைப் பயம் கொள்ளச் செய்தது, "லாரா. இனிமேல் எதன் மீதும் கடன் வாங்குவதற்கு முடியாது. எல்லாவற்றின் மீதும் வாங்கியாகி விட்டது. நீ திவாலாகிவிட்டதாக அறிவிக்கும்படி கோர்ட்டில் மனு கொடுக்க வேண்டியிருக்கும்."

"ஹோவார்டு..."

"என்ன?"

"ஒரு பெண் அளவுக்கு மீறிக் காதலிக்கிறாள் என்று சொல்கிறார்களே, அப்படியொன்று உண்டா ஹோவார்டு?"

"என்ன சொல்கிறாய்?"

அவள் குரல் செத்திருந்தது. "பிலிப் என்னை விட்டுப் போய்விட்டார்..."

அவள் தோற்றமும் பேச்சும் ஏன் அப்படி இருந்தன என்று இப்போது அவனுக்குப் புரிந்தது.

"லாரா- நான்... ரொம்ப ஸாரி லாரா..." என்றான்.

அவள் முகத்தில் ஒரு விசித்திரமான புன்னகை படர்ந்தது. "வேடிக்கையைப் பார்த்தீர்களா, ஹோவார்டு? நான் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் இழந்து கொண்டிருக்கிறேன். முதலில் பிலிப்... இப்போது என் கட்டிடங்கள்... இதற்குப் பெயர் என்ன தெரியுமா ஹோவார்டு - இது தான் விதி என்பது, விதி எனக்கு எதிராக இருக்கிறது. விதியை எதிர்த்துப் போராட முடியாது. இல்லையா ஹோவார்டு?"

அவள் இதயத்தில் அப்படி யொரு வேதனை இருந்து அவன் பார்த்ததே இல்லை. அவனையே இரண்டாகக் கிழத்துப் போட்ட மாதிரி இருந்தது. "லாரா..."

"விதியின் விளையாட்டு இன்னும் முடியவில்லை. ஹோவார்டு. இன்று பிற்பகல் ரெனோவுக்குப் போகிறேன். அங்கே காஸினோ வரிசாரணைக் கமிஷனின் முன் நிற்கப் போகிறேன்..."

இன்ட்டர்காம் ஒலித்தது.

"இன்ஸ்பெக்டர் மான்ஸினி வந்திருக்கிறார்." என்றான் ஆபரேட்டர்.

"உள்ளே அனுப்பு."

லாராவைப் புதிராகப் பார்த்தான் ஹோவார்டு. "மான்ஸினியா? அவருக்கு இங்கே என்ன வேலை?"

லாரா பெருமூச்சுவிட்டாள். "அவர் இங்கே வருவது என்னைக் கைது செய்வதற்காக."

"கைது செய்வதா? உன்னையா? என்ன சொல்கிறாய் நீ?"

அவள் குரல் மிக அமைதியாக இருந்தது. "பிலிப்பின் கையை வெட்ட ஏற்பாடு செய்தது நான்தான் என்று போலீஸில் நினைக்கிறார்கள்."

"என்ன அபத்தம்! ஒருநாளும் அவர்கள்."

கதவைத் திறந்து கொண்டு இன்ஸ்பெக்டர் மான்ஸினி உள்ளே நுழைந்தார். ஒரு நிமிடம் அவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்ற பின் நெருங்கி வந்தார்.

"உங்களைக் கைது செய்ய வாரண்ட் கொண்டு வந்திருக்கிறேன்."

ஹோவார்டின் முகம் வெளுத்தது. சுரகரத்த குரலில், "இன்ஸ்பெக்டர், லாராவை நீங்கள் கைது செய்ய முடியாது. அவள் எந்தக் குற்றமும் செய்யவில்லை." என்றான்.

"சரியாகச் சொன்னீர்கள் மிஸ்டர் ஹோவார்டு. நான் லாராவைக் கைது செய்யப் போவதில்லை. நான் அரெஸ்ட் வாரண்ட் கொண்டு வந்திருப்பது உங்களைக் கைது செய்யத்தான்." என்றார் இன்ஸ்பெக்டர்.

போலீஸ் விசாரணையின் போது இன்ஸ்பெக்டர் மான்ஸினி கேட்ட கேள்விகளும் ஹோவார்டு அளித்த பதில்களும் வருமாறு:

மான்ஸினி: ஒரு வழக்கறிஞரை வரவழைத்து வைத்துக் கொண்டு அவர் முன்னிலையில் பேசுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அதை வேண்டாம் என்று சொல்கிறீர்கள்.

ஹோவார்டு: எனக்கு வழக்கறிஞர் தேவையில்லை. எப்படியும் நான் இங்கே வருவதாகத்தான் இருந்தேன். லாராவுக்கு எது நேர்ந்தாலும் எனக்குப் பொறுக்காது.

மா: பிலிப்பைத் தாக்கும்படி சொல்லி ஜெஸ்ஸி ஷாவிற்கு நீங்கள் ஐம்பதாயிரம் டாலர் கொடுத்தீர்களா?

ஹோ: ஆமாம்.

மா: ஏன்?

ஹோ: பிலிப் அவள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருந்தான். தன்னுடன் வீட்டிலேயே தங்கியிருக்கும்படி அவள் அவனைக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் வெளியூர்களுக்குப் போய்க் கொண்டேயிருந்தான்.

மா: ஆகவே அவன் கையை வெட்டும்படி ஏற்பாடு செய்தீர்கள்?

ஹோ: நான் அப்படிச் சொல்லவில்லை. அவ்வளவு தூரம் அவன் போவானென்று நான் எதிர்பார்க்க வில்லை. அவனுக்கே அந்தச் சமயத்தில் அப்படித் தோன்றியிருக்கிறது...

மா: பில் விட்மனைப் பற்றிச் சொல்லுங்கள்.

ஹோ: அவன் கடைத்தேர்ந்த கயவன். லாராவைப் பிளாக்மெயில் பண்ண முயற்சி செய்தான். அவள் வாழ்க்கையையே அவன் பாழடித்திருப்பான்.

மா: ஆகவே அவனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தீர்களா?

ஹோ: ஆமாம் - லாராவின் பொருட்டு.

மா: நீங்கள் அப்படிச் செய்தது லாராவுக்குத் தெரியுமா?

ஹோ: நிச்சயமாய்த் தெரியாது. தெரிந்தால் என்னை அப்படிச் செய்ய அவள் அனுமதித்திருக்க மாட்டாள். நான்தான் அவளைக் காப்பாற்றுவது என்று முடிவெடுத்தேன். நான் எது செய்திருந்தாலும் அது லாராவுக்காக, அவளுக்காக நான் உயிரையும் கொடுப்பேன், நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா, இன்ஸ்பெக்டர்? இதில் நான் சம்பந்தப்பட்டிருப்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

இன்ஸ்பெக்டர் பதில் சொல்லவில்லை, விசாரணை முடிந்தது.

போலீஸ் பெரிய அதிகாரி மான்ஸினியிடம் கேட்டார்:

"பிலிப்பைத் தாக்க ஜெஸ்ஸி ஷாவை அமர்த்தியது ஹோவார்டு என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?"

"ஒரு சின்ன விஷயத்தில் அவர் கோட்டை விட்டுவிட்டார். நான் கூடக் கடைசி நிமிடத்தில்தான் அந்த விஷயத்தைக் கவனித்தேன். ஜெஸ்ஸி ஷாவின் பழைய குற்றங்கள், தண்டனைகள் பற்றிய குறிப்புக்களைப் பார்த்தபோது, சிகாகோவில் அவன் ஒரு பேஸ்பால் கிளப்பில் சில பேஸ்பால் பொருள்களைத் திருடினான் என்று தெரிந்தது. அப்போது அவனுக்கு வயது பதினேழு. அதே கிளப்பில் ஹோவார்டு ஒரு பேஸ்பால் ஆட்டக்காரனாக இருந்தான் என்பதும் விசாரணையில் தெரிந்தது. இருவரும் பேஸ்பால் போட்டிகளில் சகாக்களாக விளையாடியிருக்கிறார்கள், ஜெஸ்ஸி ஷாவைத் தனக்குத் தெரியவே தெரியாது என்று ஹோவார்டு கூறினான். ஆனால் சிகாகோ ஸன்டைம் பத்திரிகையில் விளையாட்டு விமரிசனங்கள் எழுதும் ஒரு நண்பரிடம் நான் விசாரித்தேன். இருவரையும் நன்றாய் ஞாபகம் இருக்கிறது என்றும், இருவரும் நெருங்கிய தோழர்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதிலிருந்து லாரா என்ட்டர்ப்ரைஸ்ஸில் வேலை வாங்கித் தந்தது ஹோவார்டாகத்தான் இருக்குமென்று ஊகீத்தேன். ஹோவார்டு சிபாரிசு செய்ததால் தான் லாரா அவனுக்கு வேலை போட்டுத் தந்திருக்கிறாள். மற்றப்படி ஜெஸ்ஸி ஷாவை அவள் பார்த்துக்கூட இருந்திருக்கமாட்டாள்." என்றார் மான்ஸினி.

"திறமையாய் வேலை செய்திருக்கிறீர்கள்." என்று மேலதிகாரி அவரைப் பாராட்டினார்.

அதை மறுத்துத் தலையசைத்தார் மான்ஸினி. "உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா? இதில் நான் செய்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நாம் வேறாவார்டைக் கைது செய்யாமல் லாராவைப் பிடித்திருந்தால்கூட ஹோவார்டு தானாகவே முன்வந்து குற்றவாளி தான் தான் என்று ஒப்புக் கொண்டிருப்பான். லாராவிடம் அவனுக்கு அப்படியொரு பிரியம்."

லாராவின் உலகம் நொறுங்கிக் கொண்டிருந்தது.

ஹோவார்டா? நடந்துவிட்ட அந்தப் பயங்கரத்துக் கெல்லாம் பொறுப்பாளி ஹோவார்டா?

"எனக்காக அவர் இதைச் செய்திருக்கிறார். ஆகவே அவருக்கு உதவி செய்ய வேண்டியது என் கடமை என்று அவள் எண்ணிக் கொண்டாள்."

கேத்தி இன்ட்டர்காமில் கூப்பிட்டாள். "கார் காத்திருக்கிறது மேடம். நீங்கள் ரெடியா?"

"இதோ."

காஸினோ விசாரணைக் கமிஷனின் கட்டளைக் கிணங்க ரெனோவுக்கு புறப்பட்டாள் லாரா.

ஐந்து நிமிடம் சென்றிருக்கும். பிலிப் அவள் அலுவலகத்துக்கு டெலிபோன் செய்தான். லாரா இருக்கிறாளா என்று கேட்டான்.

"ஸாரி மிஸ்டர் பிலிப். இப்போதுதான் ரெனோவுக்கு புறப்பட்டார்."

ஏமாற்றம் பிலிப்பின் உள்ளத்தைத் தைத்தது. அவளைப் பார்த்து மன்னிப்புக் கேட்க, அவன் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தான்.

அடுத்து வேறோர் இடத்திற்குப் போன் செய்தான். பத்து நிமிடம் பேசினான். பிறகு தன் மானேஜர் வில்லியமைக் கூப்பிட்டான்.

"வில்லியம், இனிமேல் நான் நியூயார்க்கிலேயே தங்கி, சங்கீத ஆசிரியராக வேலை பார்க்கப் போகிறேன்." என்றான்.

69

ரெனோ.

வழக்கறிஞர் டெர்ரி ஹில்லிடம் லாரா கேட்டாள்: "என்ன நடக்கும்?

டெர்ரி ஹில் சொன்னான்: "எதுவும் நடக்கலாம், உங்கள் சாட்சியத்தைக் கேட்பார்கள். கேட்டு நீங்கள் நிரபராதி என்ற முடிவுக்கு வரலாம். அந்த பட்சத்தில் உங்கள் காஸினோ உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அல்லது உங்களுக்கு எதிராகப் போதுமான அளவு சாட்சியம் இருக்கிறது என்ற முடிவுக்கு வரலாம். அப்படி வந்தால் உங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பார்கள். நீங்கள் ஜெயிலுக்குப் போக நேரிடும்."

லாரா ஏதோ முணுமுணுத்தாள், "என்ன?" என்றார் அவர்.

"ஒன்றுமில்லை. விதி, எல்லாம் விதி என்று என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். அது ஞாபகம் வந்தது." என்றாள் லாரா.

ரெனோவில் காஸினோ விசாரணைக் கமிஷன் லாராவை நான்கு மணிநேரம் விசாரணை செய்தது.

ஓட்டலையும் காஸினோவையும் அவள் எப்படி வாங்கினாள் என்பதைப் பற்றித் துருவித் துருவிக் கேட்டார்கள். விசாரணை அறையை விட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர் டெர்ரி ஹில் அவள் கையை அழுத்தி, "ரொம்ப நன்றாகப் பதில் சொன்னார்கள், லாரா. நிச்சயமாய் அவர்கள் மனத்தில் ஒரு நல்லெண்ணம் ஏற்படுத்தியிருப்பீர்கள். உங்களுக்கு எதிராக வலுவான சாட்சியம் எதுவும் அவர்களிடம் கிடையாது. ஆகவே காஸினோ லைசென்ஸ் திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு." என்று சொல்லிக் கொண்டே யிருந்தவர். பாதியில் நிறுத்தினார், அதிர்ச்சியும்டன்.

லாரா திரும்பிப் பார்த்தாள்.

பால் மார்ட்டின் வராந்தாவின் மறுகோடியில் வந்து கொண்டிருந்தார். முதன் முதல் அவரைச் சந்தித்த போது எப்படி இருந்தாரோ அதேபோல் ஒரு பழங்கால் சூட் அணிந்து நரைத்த முடியைப் படியச் சீவி விட்டிருந்தார்.

டெர்ரி ஹில், "ஐயோ கடவுளே! அவன் இங்கே சாட்சி சொல்ல வந்திருக்கிறான்!" என்றவர் லாரா வின் பக்கம் திரும்பி, "அவனுக்கு உங்கள் மீது வெறுப்பு என்று எனக்குத் தெரியும். அந்த வெறுப்பு கொஞ்சமா அல்லது ரொம்ப அதிகமா?" என்று கேட்டார்.

"நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? புரியவில்லையே?"

"லாரா, உங்களுக்கு எதிராகச் சாட்சி சொன்னால் மன்னிப்புத் தருவதாக அவனிடம் சொல்லியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி அவன் சொன்னால் நீங்கள் தொலைந்தீர்கள். ஜெயிலுக்குப் போகும்படி நேரும்."

தொலைவில் வந்து கொண்டிருக்கும் பால் மார்ட்டினைப் பார்த்தாள் லாரா. "எனக்கு எதிராகச் சாட்சி சொன்னால் அவன் பெயரும்தானே கெடும்? அவனுக்கும்தானே அழிவு?"

"அதனால்தான் கேட்டேன். அவனுக்கு உங்கள் மீதுள்ள வெறுப்புக் கொஞ்சமா அல்லது ரொம்ப அதிகமா என்று. தான் அழிந்தாலும் பரவாயில்லை. நீங்கள் அழிய வேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு அவனுக்கு வெறுப்பு உண்டா?"

"எனக்குத் தெரியவில்லை." என்றாள் லாரா. அவளுக்கு வார்த்தையே வரவில்லை.

பால் மார்ட்டின் அவளருகே வந்தார். "ஹலோ லாரா, கொஞ்ச நாளாக உனக்கு எல்லாமே கோளாறாகிக் கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன்." என்றார். அவர் கண்களில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. "ரொம்ப ஸாரி, லாரா."

ஹோவார்டு முன்பொருமுறை சொன்னது லாராவுக்கு நினைவு வந்தது. "இவன் சிசிலி நாட்டிலிருந்து வந்தவன். மாஃபியா இயக்கத்தைச் சேர்ந்தவன், அவர்கள் மன்னிப்பதும் கிடையாது. மறப்பதும் கிடையாது."

‘ஹோவார்டு சொன்னது உண்மை. என்னை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற வெறி இவர் மனதில் ஆழமாக இருந்து வந்திருக்கிறது. நான்தான் அதை அறியாது போனேன்’ என்று எண்ணிக் கொண்டாள் அவள்.

பால் மார்ட்டின் நகரவிருந்தான்.

"பால்..."

"என்ன?" என்றபடி நின்றார் அவர்.

"உங்களுடன் பேச வேண்டும்."

ஒரு நிமிடம் அவர் தயங்கினார். பிறகு, "சரி," என்றார். தலையைத் திருப்பி, வெராந்தாவின் இன்னொரு மூலையில் இருந்த அலுவலக அறையொன்றைக் காட்டினார். அந்த அறை காலியாக இருந்தது. "அங்கே போய்ப் பேசலாமே?"

அவர்கள் இருவரும் செல்வதைப் பார்த்தபடியே நின்றார் டெர்ரி ஹில், கதவை அவர்கள் சாத்திக் கொண்டார்கள். என்னதான் பேசிக் கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ளத் துடியாய்த் துடித்தவாறு காத்திருந்தார் அந்த வழக்கறிஞர்.

பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை.

"என்ன வேண்டும், லாரா?" என்றார் பால் மார்ட்டின்.

அவருடன் பேசுவது கஷ்டமாக இருக்கும் என்பது அவள் எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்படுவோம் என்று நினைத்திருக்கவில்லை. குரல் தழுதழுக்க, "என்னை நீங்கள் விட்டு விட வேண்டும்." என்றாள்.

அவர் புருவங்களை உயர்த்தினார். "விட்டு விடுவதா? எப்படி முடியும்? உன்னை நான் பிடித்துக் கொள்ளவேயில்லையே?" என்றார்.

மூச்சு விடுவதே கஷ்டமாக இருந்தது அவளுக்கு. "பால், என்னைத் தண்டித்ததெல்லாம் போதாதா?"

கல்லைப் போல அவர் நின்றார். அவர் மனத்தில் என்ன ஒரு எண்ணங்கள் ஒடுகின்றன என்பதை அவர் முகத்திலிருந்து கண்டு கொள்ள முடியவில்லை.

"நாம் இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலம் அற்புதமானது, பால். பிலிப்பை விட்டுவிட்டால், என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் நெருங்கியவர் நீங்கள்தான். உங்களுக்குப் பட்டிருக்கும் நன்றிக் கடனை என்னால் ஒரு போதும் தீர்க்க முடியாது. உங்கள் மனசை நோகடிக்க நான் என்றைக்குமே எண்ணியதில்லை. தயவு செய்து என் தான் நம்புங்கள்."

ஆவளால் பேச முடியவில்லை. இருந்தாலும் சமாளித்து கொண்டு தொடர்ந்தாள். "என்னை அடியோடு ஒழிக்கக் கூடிய சக்தி உங்களுக்கு இருக்கிறது. ஆனால் உண்மையாகவே என்னை அழிக்க வேண்டும் என்பது தான் உங்கள் ஆசையா? சொல்லுங்கள், பால், என்னை ஜெயிலுக்கு அனுப்புவதில் உங்களுக்குச் சந்தோஷம்தானா?" சிரமத்துடன் கண்ணீரை அடக்கிச் கொண்டாள். "பால், உங்களிடம் பிச்சை கேட்கிறேன். தயவு பண்ணி எனக்கு என் வாழ்க்கையைத் திரும்பக் கொடுங்கள், ப்ளீஸ். என்னை விரோதியாக நடத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்."

பால் மார்ட்டின் அசையாமல் நின்றார். அவருடைய கருவிழிகள் எந்த உணர்ச்சியையும் வெளிக் காட்டவில்லை.

"உங்களிடம் மன்னிப்பை யாசிக்கிறேன், பால். போராடுவதற்கான சக்தி என்னிடம் இனிமேல் இல்லை. நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் பால். ஜெயித்து விட்டீர்கள்." அழுகை அவள் தொண்டையை அடைத்தது.

கதவை யாரோ தட்டினார்கள். விசாரணைக் கமிஷன் சேவகன் உள்ளே வந்தான். "கமிஷன் உங்கள் சாட்சியத்தைக் கேட்பதற்குக் காத்திருக்கிறார்கள், மிஸ்டர் பால்." என்றான்.

நீண்ட நேரம் லாராவையே பார்த்தபடி நின்றார் பால் மார்ட்டின். பின்னர் ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பி நடந்தார்.

70

லாரா எண்ணிக் கொண்டாள், "எல்லாம் முடிந்து விட்டது.... என் வாழ்க்கை முடிந்து விட்டது..."

டெர்ரி ஹில் வேகமாக அவனிடம் வந்தார். "விசாரணைக் கமிஷனிடம் அவன் என்ன சொல்லப் போகிறானோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்! நாம் எதுவும் செய்வதற்கில்லை. கண்ணை மூடிக் கொண்டு காத்திருக்க வேண்டியதுதான்."

விசாரணைக் கமிஷனின் அறைக்கு வெளியே லாராவும் வழக்கறிஞர் டெர்ரிஹில்லும் காத்திருந்தார்கள். ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு யுகமாய்க் கழிந்தது.

ஒரு வழியாய்ப் பால் மார்ட்டின் வெளியே வந்தார். அவர் முகத்தில் சோர்வும் களைப்பும் படர்ந்திருந்தது, "எவ்வளவு கிழவராகிவிட்டார்!" என்று லாரா எண்ணிக் கொண்டாள். இதற்குக் காரணம் நான்தான் என்று நான் மீது பழி போடுவார்...

அவர் அவளையே கூர்ந்து நோக்கியவாறு ஒரு நிமிடம் தயங்கினார். பிறகு அவளிடம் வந்தார்.

"உன்னை என்னால் என்றைக்கும் மன்னிக்க முடியாது. காரணம், நீ என்னை முட்டாளடித்து விட்டாய். ஆனால் ஒன்று, என் வாழ்க்கையில் மிகச் சந்தோஷமான காலத்தை அளித்தவள் நீதான். ஆகவே உனக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். விசாரணைக் கமிஷனிடம் உன்னைக் காட்டிக் கொடுக்கும்படியாக எதுவும் சொல்லவில்லை, லாரா." என்றார்.

அவள் கண்களில் குபுக்கென்று நீர் நிறைந்தது. "பால்... பால்... உங்களுக்கு நான் எப்படி... எப்படி..."

"அதை நான் உனக்குத் தரும் பிறந்த நாள் பரிசாக வைத்துக் கொள். ஹாப்பி பர்த்டே, பேபி."

சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். பிறகே அவர் சொன்ன வார்த்தைகள் சட்டென உறைத்தது அவளுக்கு.

இன்று அவளுடைய பிறந்த நாள்!

ஒன்றன் மேலொன்றாக என்னென்னவோ நடந்ததில் அவள் அடியோடு மறந்தே போய்விட்டாள்! ஐயோ! இன்று பார்ட்டி இருக்குமே? நியூயார்க்கில் லாரா ப்ளாசாவில் இருநூறு பெரும் புள்ளிகள் காத்திருப்பார்களே! டெர்ரி ஹில்லிடம், "நான் இன்றிரவு நியூயார்க்கில் இருந்தாக வேண்டும். எனக்காகப் பெரிய பார்ட்டி காத்திருக்கிறது. நான் போவதற்கு அனுமதிப்பார்களா?" என்றாள்.

"ஒரு நிமிஷம் இருங்கள்." என்று கூறிவிட்டு அவர் விசாரணைக் கமிஷனின் அறைக்குள் திரும்பி ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தவர், "நீங்கள் நியூயார்க் போகலாம். விசாரணைக் கமிஷன் காலை தீர்ப்பளிக்குமாம். ஆனால் அது சும்மா சம்பிரதாயத்துக்குத் தான். உங்களை விடுவித்துவிட்டார்கள். இன்று விழா முடிந்ததும் திரும்பி விடுங்கள். நாளை இங்கே இருக்க வேண்டும்." என்றவர், "வந்து... உங்கள் சினேகிதர் பால் மார்ட்டின் சொன்னது உண்மைதான். உங்களைக் காட்டிக் கொடுக்கும்படி அவர் எதுவுமே சொல்லவில்லை." என்றார்.

அரை மணிக்கெல்லாம் லாரா நியூயார்க்கை நோக்கி போய்க் கொண்டிருந்தாள்.

டெர்ரி ஹில் அவள் முகத்தைப் பார்த்துக் கவலையுடன், "உடம்பு ஒன்றுமில்லையே?" என்றார்.

"ஒன்றுமில்லை." என்று புன்னகையுடன் அவருக்குப் பதிலளித்தாள் அவள்.

அவளைக் கௌரவிப்பதற்காக இன்று இரவு இருநூறு முக்கியமான பிரமுகர்கள் குழுமியிருப்பார்கள். இனிமேல் தலை நிமிர்ந்து வாழலாம். மறுபடியும் லாரா கேமரானாக...

லாரா பிளாசாவின் பிரதானமான நடன மண்டபத்தில் அவள் நின்றிருந்தாள். சுற்று முற்றும் ஒரு முறை பார்த்தாள். இந்தக் கட்டிடத்தை நான் படைத்தேன். வானை முட்டும் எவ்வளவோ கட்டிடங்களை நான் படைத்தேன். அமெரிக்காவெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையே அவை மாற்றியமைத் திருக்கின்றன.

இப்போது அவையனைத்தும் யாரோ ஊர் பேர் தெரியாத பாங்க்காரர்களுக்குப் போய்ச் சேரப் போகிறது.

அவளுடைய அப்பாவின் குரல் அவள் காதில் துல்லியமாக ஒலித்தது. ‘எல்லாம் விதி... விதி எனக்கு எதிராகச் சதி செய்கிறது...’

க்ளேஸ் பே நகரமும் அங்கே தான் வளர்ந்த சிறிய லாட்ஜும் அவளுக்கு ஞாபகம் வந்தன.

பள்ளிக்கூடத்துக்குச் சென்ற அந்த முதல் நாளும், ஆசிரியரின் கேள்விக்கு அசட்டுத்தனமாக ஏதோ சொல்ல, அதைக் கேட்டு எல்லோரும் சிரித்ததும், தான் அச்சத்தால் நடுங்கிப் போனதும் ஞாபகம் வந்தது. லாட்ஜில் இருந்தவர்களின் முகங்கள் ஞாபகம் வந்தன. முக்கியமாக, பில்ரோஜர்ஸ்... ரியல் எஸ்டேட் பிஸ்னஸில் கவனம் கொள்ள வேண்டிய முதல் விஷயம் ஒபிஎம் - அதர் பபிள்ஸ் மணி - ‘மற்றவர்களின் பணம்...’ என்று அவர் சொன்னது... பிறகு சார்லஸ் முகம்... எனக்குப் பிடித்தமான உணவு இந்த ஊரில் கிடைக்கவில்லை... என்று அவர் சொன்னது.

"எனக்கு இந்த மனையை. ஐந்து வருடக் குத்தகைக்கு விடுவீர்களா?’

"முடியாது லாரா. பத்து வருடக் குத்தகைக்குத்தான் விடுவோம். பிறகு மக்காலிஸ்டரின் முகம், உனக்கு நான் கடன் தரவேண்டுமென்றால் அதற்கு நீ பதிலுக்குப் ஏதேனும் தரவேண்டும்... உனக்கு ஆண் பள்ளை சினேகம் உண்டா?’

ஹோவார்டின் முகம், ‘நீ இந்த விஷயத்தை அணுகும் முறையே தப்பு.’

‘நீங்கள் என்னிடம் வேலைக்கு வருவீர்களா?’ இதைத் தொடர்ந்து வெற்றிகள்... அற்புதமான, உலகத்தையே பிரமிக்க வைத்த வெற்றிகள்...

பிறகு பிலிப்... அவளுடைய ஹீரோ. அவள் உள்ளம் கவர்ந்த காதலன்... அந்தக் காதல்...

அவள் அடைந்துள்ள நஷ்டங்களுள் மிகப் பெரிய நஷ்டம் அதுதான்...

"மேடம்..." என்று ஒரு குரல் கேட்டது.

திரும்பனாள்.

விளம்பரப் பிரிவின் தலைவனான ஜெர்ரி நன்றிருந்தான். "நீங்கள் ஊரிலிருந்து வந்துவிட்டதாகச் சொன்னார்கள்." என்றபடி அவளை நோக்கி வந்தவன், "உங்கள் பிறந்த நாள் பார்ட்டிதான்... இப்படி ஆகிவிட்டது ஸாரி." என்றான்.

அவள் நிமிர்ந்து பார்த்தாள், திகைப்புடன். "என்ன... என்ன ஆகிவிட்டது?"

அதனும் திகைப்புடன் அவளை வெறித்து நோக்கினான். "ஹோவார்டு உங்களிடம் சொல்லவில்லையா?"

"என்ன சொல்லவில்லையா?"

"நம்மைப் பற்றி மோசமான செய்திகள் கிளம்பியதால் பிறந்த நாள் விழாவுக்கு வரமுடியாதென்று பலபேர் தெரிவித்தார்கள். ஆகவே நாமாகவே விழாவை ரத்து செய்து விடுவது கெளரவமாயிருக்கும் என்று முடிவு பண்ணினோம். உங்களிடம் சொல்லச் சொல்லி ஹோவார்டிடம் சொன்னேனே? அவர் சொல்ல வில்லை?"

லாராவுக்குப் புரிந்தது. என்னவோ தெரியவில்லை, கொஞ்ச நாளாய் எனக்குப் பயங்கரமாய் ஞாபக மறதி ஏற்பட்டு வருகிறது என்று முன்னொரு நாள் ஹோவார்டு சொன்னது நினைவு வந்தது.

"சரி, பரவாயில்லை," என்று மெல்லச் சொன்னாள் லாரா. பிறகு அந்த வனப்பு மிக்க மண்டபத்தைக் கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொண்டாள். "பதினைந்து நிமிட நேரம் இங்கே சந்தோஷமாக இருந்தாயிற்று." என்று சொல்லிக் கொண்டாள்.

"என்ன?" என்றான் ஜெர்ரி.

"ஒன்றுமில்லை." வாசலை நோக்கி அவள் நடந்தாள்.

"மேடம், கொஞ்சம் உங்கள் ஆபீஸ் அறைக்குப் போகலாம். சில பேப்பர்களில் நீங்கள் கையெழுத்திட வேண்டியிருக்கிறது." என்றான் அவன்.

"நல்லது." அநேகமாய் இந்தக் கட்டிடத்துக்கு இன்னொரு முறை நாம் வரும்படி இருக்காது என்று எண்ணியபடி அவனுடன் லிப்டுக்குச் சென்றாள்.

லிப்டு மேலே ஏறிக் கொண்டிருந்தபோது ஜெர்ரி, "ஹோவார்டைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இவ்வளவுக்கும் அவர்தான் காரணம் என்று நம்பவே முடியவில்லை." என்றான்.

மறுத்துத் தலையசைத்தாள் லாரா. "காரணம், அவரல்ல. நான்தான். என்னாலேயே என்னை மன்னிக்க முடியாது."

"இல்லை, உங்கள் மீது தவறு இல்லை." என்றான்.

திடீரென ஒரு தனிமையுணர்வு அவளைப் பிடித்துக் கொண்டது. யாருடனாவது கொஞ்ச நேரம் சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது.

"ஜெர்ரி, நீ இன்னும் சாப்பிடவில்லையென்றால் நாம்."

"மன்னிக்கணும் மேடம். எனக்கு வேலை இருக்கிறது." என்றான் அவன்.

"சரி, பரவாயில்லை."

லிப்டு நின்றது. கதவு திறந்தது. இருவரும் வெளியே வந்தார்கள்.

"நீங்கள் கையெழுத்திட வேண்டிய பேப்பர்கள் மீட்டிங் அறை மேஜையில் இருக்கிறது. மேடம்" என்றான் ஜெர்ரி.

"நல்லது."

மீட்டிங் அறையின் கதவு சாத்தியிருந்தது. ஜெர்ரி பின்னால் நின்று கொண்டான். அவளே கதவைத் திறந்தாள்.

திறந்தாளோ இல்லையோ -

நாற்பது குரல்கள் ஒரே சமயத்தில் முழங்கின: "ஹாப்பி பர்த் டே டு யூ.. ஹாப்பி பர்த் டே டு யூ..."

பிரமித்துச் சிலையாகி நின்றாள் லாரா.

கடந்த சில வருடங்கள் யாரெல்லாம் அவளுடன் சேர்ந்து உழைத்தார்களோ, அவர்கள் அத்தனை பேரும் அங்கே குழுமியிருந்தார்கள் - ஆர்க்கிடெக்டுகள், கான்ட் ராக்டர்கள், கட்டிட மேஸ்திரிகள்.

ஆரம்ப காலத்தில் அவளுக்கு உதவியும் ஊக்கமும் தந்த சார்லஸ் இருந்தார். புரொபசர் மேயர்ஸ் இருந்தார். ஹோரேஸ் இருந்தார். செக்ரட்டரி கேத்தி இருந்தாள்.

நோயிலிருந்து பிழைத்த ஜெர்ரியின் தந்தை இருந்தார்.

அவ்வளவு பேர் இருந்தபோதிலும் லாரா பார்த்தது ஒரே ஒருவரைத்தான். பிலிப்.

அவன் அவளை நோக்கி வந்தான், இரு கைகளையும் நீட்டியபடி.

ஆனந்தத்தில் அவளுக்கு மூச்சு திணறியது.

"லாரா..." அவன் குரலில் அன்பு நிறைந்திருந்தது.

அவனுடைய கைகளுக்குள் அவள் சிறைப்பட்டாள். முட்டிக் கொண்டு வரும் கண்ணீரை அடக்க அவள் போராடினாள்.

‘இதுதான் என் குடும்பம்... என் வீடு... இவர்களுக்குத்தான் நான் சொந்தம்." என்று அவள் தன்னுள் சொல்லிக் கொண்டாள். ரணமெல்லாம் ஆறியதுபோல, உள்ளமெங்கும் சாந்தி நிரம்பியது. பிலிப்பின் அணைப்பு அவளுக்குக் கதகதப்புக் கொடுத்தது. ‘இதுதான் - இது ஒன்றுதான் முக்கியமானது.’ என்று எண்ணிக் கொண்டாள்.

எல்லாரும் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். எல்லாரும் ஒரே சமயத்தில் பேசுவதுபோல் இருந்தது.

"பிறந்த நாள் வாழ்த்துக்கள், லாரா"

"இன்று நீங்கள் பிரமாத அழகுடன் இருக்கிறீர்கள் மேடம்?"

"உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டோம். இல்லையா?"

ஜெர்ரியை நோக்கித் திரும்பினாள் லாரா. "ஜெர்ரி, எப்படி இதையெல்லாம் செய்தாய்?"

அவன் தலையை அசைத்தான். "நானல்ல, எல்லாம் பிலிப்பின் ஏற்பாடு."

"ஓ, டார்லிங்!" என்று மறுபடி பிலிப்பை அணைத்துக் கொண்டாள் அவள்.

வெயிட்டர்கள் மதுக் கோப்பைகளைத் தட்டில் ஏந்தி வந்தார்கள்.

சார்லஸ் சொன்னார்: "எது நேர்ந்தாலும் சரி, உன்னை நினைக்கையில் எனக்குப் பெருமையாகவே இருக்கிறது, லாரா. உன்னை வித்தியாசமானவனாக, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவளாக, காட்டிக் கொள்ள வேண்டுமென்று நீ ஆசைப்பட்டாய். அதைச் செய்துவிட்டாய்."

"இந்தப் பெண்மணியினால்தான் நான் உயிர் பிழைத்தேன்." என்று ஜெர்ரியின் தந்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

"எனக்கும் அப்படித்தான்." என்று கூறிப் புன்னகை செய்தாள் கேத்தி.

"வாழ்க எங்கள் பாஸ்" என்று கூறி மதுக் கோப்பையை உயர்த்தினான் ஜெர்ரி. "இவரைப் போல எஜமானி எங்களுக்குக் கிடைத்ததில்லை. இனி கிடைக்கப் போவதுமில்லை."

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாழ்த்துக் கூறியவண்ணம் மதுக் கோப்பையை உயர்த்தி ‘சியர்ஸ்’ சொன்னார்கள். கடைசியில் பிலிப்பின் முறை வந்தது. எவ்வளவோ சொல்ல வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் ‘நான் காதலிக்கும் பெண் வாழ்க!’ என்று நாலு வார்த்தைக்கு மேல் அவனால் சொல்ல முடியவில்லை.

லாராவின் கண்கள் குளமாகி, வாய் திறந்து பேசவே சிரமப்பட்டாள். "நான்... நான் உங்களுக்கெல்லாம் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன்." என்றாள். "எந்த விதத்திலும் என்னால் அதைத் திருப்பித் தரமுடியாது. நான் சொல்லக் கூடியதெல்லாம்..." அவளுக்குத் தொண்டை அடைத்தது. "தாங்க் யூ."

பிலிப்பிடம் திரும்பியவள், "தாங்க் யூ டார்லிங். இதுதான் நான் மறக்கவே முடியாத பிறந்த நாள்." என்றாள். சட்டென டெர்ரி ஹில் சொன்னது ஞாபகம் வந்தது. "மறந்தே போனேன். இன்று இரவே நான் ரெனோவுக்குத் திரும்ப வேண்டும்."

"நான் ரெனோவைப் பார்த்ததேயில்லை. உன்னுடன் வரலாமா?" என்று சொல்லிச் சிரித்தான் பிலிப்.

முப்பதாவது நிமிடம் அவர்களுடைய சொகுசுக் கார் விமானதளத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

பிலிப்பின் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் லாரா.

‘நல்ல காலம், நான் எல்லாவற்றையும் இழந்து விடவில்லை. பிலிப் இருக்கிறார். என் எஞ்சிய வாழ்நாள் மொத்தத்தையும் இவருடன் ஆனந்தமாகக் கழிப்பேன். இழந்துவிட்ட நாட்களையெல்லாம் ஈடு செய்வேன். வேறெதுவும் எனக்கு முக்கியமல்ல, ஒரே முக்கியமான விஷயம் பிலிப்புடன் இருப்பதும், பிலிப்பைக் கவனித்துக் கொள்வதும்தான், வேறு ஒன்றும் எனக்கு வேண்டாம்...’

திடீரென்று அவள் பார்வை ஜன்னலுக்கு வெளியே சென்றது.

"என்ன லாரா?"

"டிரைவர், வண்டியை நிறுத்து," என்றாள் லாரா.

கிறீச்சென்று கார் நின்றது.

பிலிப் அவளைப் புதிராகப் பார்த்தான். அவர்கள் நின்றிருந்த இடத்துக்கு எதிரே ஒரு பெரிய திறந்த வெளி இருந்தது. செடிகளும் புதர்களும் மண்டிக் கிடந்த அந்தக் காலி மனையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் லாரா.

"லாரா..."

"பிலிப், அதைப் பாருங்கள்."

அவனும் பார்த்தான், "என்ன அங்கே?"

"என்ன...? தெரியவில்லை."

"இல்லை "

"ஆ.! பிரமாதமான இடம். எவ்வளவு அழகாக இதை மாற்றலாம்! அந்தக் கோடியிரில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்! நடுவிலே ஆடம்பரமான அபார்ட்மெண்ட்கள்! தனித்தனியாய் நாலு பெரிய கட்டிடங்கள் கட்டக்கூடிய அளவுக்கு மனை இருக்கிறது! உங்களுக்குத் தெரியவில்லை."

அவனை நோக்கித் திரும்பினாள் லாரா. "நான் என்ன பிளான் பண்ணுகிறேன் என்றால்..."

அவளுக்கே உரிய ஆர்வமும் பரபரப்பும் அவள் குரலிலே மோதிக் கொண்டு வெளிப்பட்டன.ஹ்மந்திரத்தால் கட்டுண்டவன் போல ஆசையுடன் அவளையே பார்த்தவாறு இருந்தான் பிலிப்.

முற்றும்