Image

http://www.pustaka.co.in

ஒளிவதற்கு இடமில்லை

இரண்டாம் பாகம்

Olivatharkku Idamillai

Part - 2

Author:

ரா. கி. ரங்கராஜன்

Ra. Ki. Rangarajan

For more books

http://www.pustaka.co.in/home/author//ra-ki-rangarajan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

முன்னுரை

ன்னுடைய ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு சரித்திரம் உண்டு. அதை எப்போது எழுதினேன், ஏன் எழுதினேன், என்ன ஆராய்ச்சிகள் செய்தேன் என்று யோசித்துப் பார்க்கையில் வேடிக்கையான நிகழ்ச்சிகள் ஞாபகம் வரும்.

ஆனால் 'ஒளிவதற்கு இடமில்லை' நாவலை எழுத நேர்ந்த சம்பவம் முற்றிலும் வித்தியாசமானது.

அப்போதெல்லாம் வருஷத்துக்கு மூன்று நாலு சிறப்பிதழ்கள் வெளியிடுவார்கள். ஒவ்வொன்றிலும் ஒரு பிரபல எழுத்தாளருடைய தொடர்கதை ஆரம்பமாகும். அந்த முறை எந்த எழுத்தாளரும் உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆகவே அமரர் எஸ்.ஏ.பி, “நீங்களே எழுதுங்கள்” என்றார் என்னிடம்.

'ஏற்கெனவே ஒரு தொடர்கதை என் பெயரில் வந்து கொண்டிருக்கிறது?' என்றேன். 'சின்னக் கமலா' என்ற தொடர்கதை இருபது இருபத்தைந்து அத்தியாயங்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயம் அது.

'அதனாலென்ன? அது பாட்டுக்கு அது வந்து கொண்டிருக்கட்டும். வேறு பெயரில் நீங்கள் எழுதுங்கள்,' என்றார் ஆசிரியர்.

என்னிடம் நாவல் எழுதுவதற்கான 'ஐடியா' எதுவும் அப்போது இருக்கவில்லை. இருந்தாலும், அவருடைய அன்புக் கட்டளையை எப்படி மீற முடியும்? 'ஒளிவதற்கு இடமில்லை' என்ற இந்த நாவலை, 'டி. துரைசாமி' என்ற புனை பெயரில் எழுத ஆரம்பித்தேன். டி. துரைசாமி என்று ஏன், எப்படிப் பெயர் சூட்டிக் கொண்டேன் என்பது எனக்கே தெரியவில்லை. 'சின்னக் கமலா' தொடர்கதை சுமார் இருபது வாரங்களில் முடிந்தது. அந்த இருபது வாரமும் 'ஒளிவதற்கு இடமில்லை'யும் வந்தது. ஒரே சமயத்தில் இரண்டு தொடர்கதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளன் நானாகத்தான் இருக்கும். இந்த இரண்டுக்கும் நடுவில் சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் முதலானவையும் எழுதிக் கொண்டிருந்தேன். அதெல்லாம் ஒரு பொற்காலம். எப்படி என்னால் முடிந்தது என்று இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இதைப் படிப்பவர்களும் நம்பமாட்டார்கள். எஸ்.ஏ.பி என்ற மகத்தான மனிதரின் மந்திரக்கோல் விளைவித்த அதிசயங்களுள் இதுவும் ஒன்று.

இந்த நாவலை எழுதிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சுஜாதா ஒருமுறை காரியாலயத்துக்கு வந்திருந்தார். பகல் உணவுக்கு என் வீட்டுக்கு வரும்படி அவரை அழைத்திருந்தேன். வந்தார். புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் இருவரும் நடந்து போய்க்கொண்டிருந்த போது, 'ஒளிவதற்கு இடமில்லை என்பது ஒரு பிரமாதமான தலைப்பு! இப்படி ஒன்று எனக்குக் கிடைக்கவில்லையே என்று பொறாமையாக இருக்கிறது!' என்று சொன்னது நேற்றுப்போல் பசுமையாயும் பெருமையாயும் இருக்கிறது. 'டி.துரைசாமி' என்ற பெயர் எந்த வானத்திலிருந்து குதித்ததோ - அதே வானத்திலிருந்துதான் 'ஒளிவதற்கு இடமில்லை'யும் குதித்திருக்க வேண்டும்!

இன்னொரு வேடிக்கையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

ஒரு தொடர்கதையைப் பற்றி பேசுவதற்காக என் வீட்டுக்கு வந்த டைரக்டர் கே. பாக்கியராஜ், 'எனக்கு ரொம்ப நாளாய் ஒரு ஆசை. டி. துரைசாமி என்ற ஒரு தொடர்கதை எழுதினாரே, அவரைப் பார்க்க வேண்டும்,' என்றார். 'இப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்' என்று நான் பதிலளித்ததும் அவர் திகைத்த திகைப்பு! 'ஒளிவதற்கு இடமில்லை' நாவலில் அவருக்கு மகா மோகம். அவருடைய 'பாக்யா' இதழில் மொத்தத் தொடர் கதையையும் வாராவாரம்! மறுபிரசுரம் செய்தார்.

ரா.கி. ரங்கராஜன்

*****

1

ஸூட்கேஸைக் குழந்தைப் பாண்டியனின் காலடியில் வைத்தான் நஞ்சுண்டன். ஒரு மோடாவை இழுத்துப் போட்டுக் கொண்டான். ஒரு பெருமூச்சுடன் அமர்ந்து, கைக்குட்டையால் நெற்றியை ஒற்றிக் கொண்டான்.

மனத்தில் ஒரு திட்டமிட்டுக் கொண்ட, தொண்டையைக் கனைத்தான். குழந்தைப் பாண்டியன், அரைத் தூக்கத்தில் இருந்தவர், கண்ணைத் திறந்தார். அவர் பார்வையில் நேர் எதிரே பட்டது, ஸூட் கேஸ்தான். உடனே தலையைத் திரும்பி நஞ்சுண்டனை நோக்கினார். அந்த வாட்டமான முகம் அவர் நெற்றியில் சுருக்கங்களை எழுப்பியது.

“என்ன நஞ்சுண்டன், எங்கேயாவது போகிறாயா?” என்றார்.

“உங்களை எழுப்பக் கூடாது என்று பார்த்தேன். ஆனால் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட மனம் வரவில்லை.” நஞ்சுண்டன் தலையை நிமிர்த்தவேயில்லை. கைக்குட்டையை மடிப்பதும் பிரிப்பதுமாய் இருந்தன விரல்கள்.

"புறப்படுகிறாயா? அதுதான் எங்கே, என்று கேட்கிறேன்.”

“அதிகமாகக் கேட்காதீர்கள். நீங்கள் தங்கமான மனிதர். உங்கள் குடும்பத்துக்கு ஒத்தாசை செய்ய வேண்டுமென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்தேன். அப்படியும், உங்கள் பெரிய மகள் கொலையாவதைத் தடுக்க முடியாமல் போயிற்று...”

"பழங் கதையை நான் கேட்கவில்லை. சட்டுப் புட்டென்று விஷயத்துக்கு வரப் போகிறாயா, இல்லையா?”

“என்னை மன்னியுங்கள்.” நஞ்சுண்டன் எழுந்து கொண்டான். “உங்கள் மனசைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. இந்தக் குடும்பத்தை ஏற்கெனவே சூழ்ந்திருக்கிற சிக்கல்களுடன் என்னாலும் ஒன்று ஏற்பட வேண்டாம்.”

“நர்ஸ், இந்தப் படுக்கையைக் கொஞ்சம் நிமிர்த்தி விடு” என்று அழைத்தார் குழந்தைப்பாண்டியன். இப்போதெல்லாம் அவரால் சிறிது சாய்ந்தாற் போல் அமரவும், கைகளையும் விரல்களையும் சிறிது இயக்கவும் முடிந்திருந்தது. அம்மணி அருகில் வந்தாள். தலைமாட்டில் இருந்த சிறிய சக்கரத்தைச் சுழற்றினாள். படுக்கை மெல்ல மேலெழும்பியது. சாய்ந்து கொண்ட குழந்தைப் பாண்டியன்.

“நீ வெளியே போய் இரு” என்று நர்ஸை அனுப்பினார். “கதவைச் சாத்தித் தாளிட்டுவிட்டு வா” என்றார் நஞ்சுண்டனிடம்.

சொன்னவாறு செய்துவிட்டுத் திரும்பினான் நஞ்சுண்டன்.

குழந்தைப்பாண்டியன் கேட்டார்: “நீ இங்கே வந்ததன் நோக்கம் மறந்துவிட்டதா?”

“மறக்கவில்லை. நிறைவேறிவிட்டது.”

"என்ன?" அவரையும் மீறிக் குழந்தைப் பாண்டியனின் உடல் குலுங்கியது ஒருமுறை. "என் அருமை மகளின் கொலைக்குக் காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடித்து விட்டதாகவா சொல்கிறாய்?"

“ஆமாம்.” அவர் முகத்தின் மீது தன் சிவந்த விழிகளைப் பதித்தான் சில வினாடிகளுக்கு. “ஏன் இந்தத் துப்பறியும் தொழிலை மேற்கொண்டோம் என்று இப்போது நான் வருந்திய மாதிரி எப்போதும் வருந்தியது கிடையாது. கடமையா சினேகிதமா என்று இப்போது நான் போராடிய மாதிரி எப்போதும் போராடியதில்லை. அதனால் தான் உங்களிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். மீண்டும் வேண்டிக் கொள்கிறேன். என்னை விட்டுவிடுங்கள். இந்தக் கேஸில் நான் சேகரித்த விவரங்கள் என்னுடனேயே இருக்கட்டும். நான் போகிறேன். போலீஸ் இலாகா, அவர்கள் சாமர்த்தியப்படி கண்டுபிடித்தால் பிடிக்கட்டும். கண்டு பிடிக்க முடியாமற் போனால் உங்கள் அதிர்ஷ்டம்.”

இவ்வளவு நீண்ட பேச்சைப் பொறுமையுடன் இடை மறிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தார் குழந்தைப் பாண்டியன். அவர் உள்ளம் திக் திக்கென்று அடித்துக் கொள்வது அவர் செவியிலேயே பயங்கரமாய் மோதியது. “நஞ்சுண்டன், நீ சொல்வதைப் பார்த்தால்... என் குடும்பத்திலேயே - இங்கேயே - கொலையாளி இருப்பது போலல்லவா தோன்றுகிறது? யார்... யாரை நீ குறிப்பிடுகிறாய்?” பேசப் பேச அவர் குரல் தாழ்ந்து கொண்டே வந்தது. நஞ்சுண்டன் ஸூட்கேஸைக் கையிலெடுத்துக் கொண்டான். “அந்த ஊகங்களையெல்லாம் உங்களுக்கே விட்டுவிடுகிறேன். ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் தாமதிக்க என் கால்கள் நடுங்குகின்றன. வருகிறேன்.”

"என் மீது ஆணை, நஞ்சுண்டன்!” உரக்க எழுந்தது குந்தைப்பாண்டியனின் கட்டளை. “சொல்லாமல் போகாதே. போனால், என் பிரேதத்தை மிதித்துக்கொண்டு போன மாதிரி!"

"ஸார்!” ஓடிவந்து அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான் நஞ்சுண்டன். "இப்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டீர்களே...” தலையைக் குனிந்தவாறு கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். பின் "சரி. உங்கள் மனத்தை வேதனைப் படுத்தக்கூடாது என்று பார்த்தேன்... இன்னொரு பயமும் உண்டு. நான் இவ்வளவு தயங்கிக் கொண்டு சொல்வதை நீங்கள் நம்பாமற் போனால்?”

“நிச்சயமாய் நம்புவேன். சொல்லு” என்றார் குழந்தைப்பாண்டியன். ஸூட்கேஸைத் திரும்ப வைத்து விட்டு, அறையில் மெல்ல உலவினான் நஞ்சுண்டன். "குழந்தைப்பாண்டியன் சார், சங்கிலி நிகழ்ச்சிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள், இல்லையா? ஒன்றைக் காரணமாகக் கொண்டு ஒரு விளைவு வரும். பிறகு அந்த விளைவு இன்னொரு விளைவுக்குக் காரணமாகும். அது போல, உங்கள் குடும்பத்தின் நிகழ்ச்சிகள் அமைந்து விட்டன.”

குழந்தைப் பாண்டியன் கண் கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

நஞ்சுண்டன் தொடர்ந்தான்: “என் முடிவைச் சொல்லுவதற்கு முன்பு இரண்டு சாட்சிகளை உங்கள் எதிரிலேயே பேசச் சொல்லுகிறேன். கேட்டுக் கொள்ளுங்கள்.” கட்டில் தலைமாட்டில் இருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு கதவுத் தாளையும் நீக்கினான். வேலைக்காரனொருவன் உள்ளே வந்தான்.

“சின்ன எஜமானி - ரேணுகா அம்மா ஸ்கூலுக்குப் போய்விட்டார்கள், இல்லையா?” என்று நஞ்சுண்டன் கேட்டான்.

"ஆமாங்க" என்றான் வேலையாள்.

“நல்லது, சமையற்காரப் பாட்டியை இங்கே வரச் சொல்” என்று அவனை வெளியனுப்பினான். சமையல் கிழவி ஒருபோதும் எஜமானரின் அறைக்குள் வந்தவளல்ல. வென்னீரோ, உணவோ எடுத்து வருவதுண்டு. ஆனால் வெளியே நின்றபடி நர்சுகள் மூலமோ, பெண்கள் மூலமோ அனுப்பி விடுவாள். ஆகையால் தயங்கிக் கொண்டு நின்றாள் கதவுக்கு மறுபுறம்.

"பரவாயில்லை. உள்ளே வாருங்கள்” என்றான் நஞ்சுண்டன். குழந்தைப் பாண்டியனின் பார்வையில் படாமல் ஒதுங்கி நின்றாள் கிழவி. கைகளையும் கட்டிக் கொண்டாள்.

"பாட்டியம்மா, எஜமானருக்கு ஒரு தகவல் தெரிவித்தேன். அதற்கு நீங்கள் சாட்சி சொல்ல வேண்டும். யாருக்காகவும் பயப்படாதீர்கள். யாருக்காகவும் தாட்சண்ணியம் பார்க்காதீர்கள். நடந்ததை நடந்தபடி சொல்ல வேண்டும்” என்றான் நஞ்சுண்டன்.

அவனுடைய பீடிகையே கிழவியை மேலும் நடுங்க வைத்துவிட்டது.

"நானா? என்ன... என்ன... சாட்சி?” என்றாள் அச்சத்துடன்.

"அன்றைக்கொரு நாள் ரேணுகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தீர்களே, நினைவில்லை? பிறகு வேலைக்காரியிடம் கூட ஒரு தடவை சொன்னீர்கள். நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.”

“எதைப்பற்றி?”

“சுகுமாரியைப் பற்றி. குளியலறையில் சுகுமாரி பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டதாக."

குழந்தைப் பாண்டியனின் முகம் சட்டென இருளடைந்தது. “சுகுமாரி பாடிக் கொண்டிருந்தாளா? எப்போது? ஆபரேஷனுக்குப் போய் வந்த பிறகா?”

கிழவி மெளனமாயிருந்தாள். “உங்களைத்தான் கேட்கிறார்” என்று நஞ்சுண்டன் தூண்டினான்.

வேறு வழியில்லை சமையற்காரிக்கு "வந்து... ஆமாம்... ஒருநாள் குளிக்கிற ரூமிலே பாடிக்கொண்டேயிருந்தாள். அவளுடைய பழைய குரல் அப்படியே இருந்தது. ஆபரேஷனுக்கு முன்பு இருந்ததே அதே மாதிரி. வேறே யாரோ பாடுகிறார்களாக்கும் என்று கூட நினைச்சேன். அப்புறம் சுகுமாரியே குளித்துவிட்டு வர்றதைப் பார்த்தேன். நான் வேறே ஒண்ணும் தப்பாய்ச் சொல்லிவிடவில்லை...”

“சரி, நீங்கள் போங்கள்” என்றான் நஞ்சுண்டன். சமையற்காரி போய்விட்டாள்.

"பாடுவதற்கு ஒரு குரல்... பேசுவதற்கு ஒரு குரலா...” குழந்தைப் பாண்டியன் தனக்குத்தானே பேசிக் கொண்டார். அல்லது நஞ்சுண்டனைக் கேட்டரோ?

“இரண்டாவது, சாட்சியையும் வரவழைக்கட்டுமா?” கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டான் நஞ்சுண்டன். “அடடா! நீங்கள் ஹார்லிக்ஸ் அருந்த வேண்டிய நேரமல்லவா இது?”

“எனக்கு எதுவும் வேண்டாம், நஞ்சுண்டன், எதுவும் வேண்டாம். இப்போது என் மனம் படுகிற தவிப்பில், பானம் இல்லாமலா அழுகிறேன். நீ சொல்ல வேண்டியதைச் சொல்.”

“இல்லையில்லை. சுவரை வைத்துத் தான் சித்திரம். உங்கள் உடம்பு நன்றாயிருந்தால்தான் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி.” அருகிலிருந்த கப்போர்டிலிருந்து புட்டியும் பாலும் கோப்பைகளும் எடுத்தான். மெதுவாகவே கலக்கலானான்.

“அந்த இரண்டாவது சாட்சியையும் கூப்பிடு” என்று குழந்தைப்பாண்டியன் மன்றாடினார்.

"முதலில் இது.” இதமான புன்னகையுடன், அவர் வாயில் கோப்பையை வைத்து அருந்தச் செய்தான். பின்னர் வாஷ் பேஸினில் அதை வைத்துவிட்டு, கதவை மீண்டும் திறந்தான். “வா" என்று அழைத்தான் வெளியே காத்திருந்தவனை.

குழந்தைப்பாண்டியன் பிரமித்தார் உள்ளே வந்தவனைக் கண்டதும். யாரிந்தச் சீனக் கிழவன்?

ஸூவானின் மாமனான கிழவன், கையைக் கட்டிக் கொண்டான். பல நாளாய் இங்கே வசித்து வருவதால் தமிழ் நன்றாய்ப் பேசுவான்” என்றான் நஞ்சுண்டன் குழந்தைப்பாண்டியனிடம். பிறகு கிழவனிடம் “சொல்லப்பா”

மறுபடியும் இளித்தான் லின் டாங். “சுகுமாரியம்மா டாக்டர் பாலசந்தரோட நர்ஸிங் ஹோமிலே இருந்தப்போ எனக்குப் பழக்கமானாங்க. அவங்க தங்கை ரேணுகாவையும் எனக்கு நல்லாத் தெரியும். பலகை வாராவதியண்டை சுகுமாரியை...” சீனக் கிழவன் தயங்கினான்.

“பரவாயில்லை, சொல்லு. ஐயா எல்லா அதிர்ச்சிக்கும் தயாராய்த்தான் இருக்கிறார்" என்றான் நஞ்சுண்டன்.

“சுகுமாரியைக் கொலை பண்ணினாங்க ஒருத்தர். கயிற்றைப் போட்டுக் கழுத்திலே இறுக்கினப்போ நானும் பக்கத்திலே தான் இருந்தேன். இரண்டு பேருமாய்த் தான் மகாபலிபுரம் படகிலே தூக்கிப் போட்டோம்...” குழந்தைப்பாண்டியன் படபடத்தார். "இரண்டு பேர் என்றால் யார்? யார் அந்த இன்னொருவர்?”

“பார்த்தீர்களா, பார்த்தீர்களா? இப்படி நீங்கள் அலட்டிக் கொள்ளக்கூடாது, என்று எவ்வளவு தடவை சொன்னேன்?” அவரை ஆசுவாசப்படுத்தினான் நஞ்சுண்டன். பிறகு சீனக் கிழவனிடம் திரும்பினான். “அதிக விவரங்கள் வேண்டாம். கழுத்திலே கயிற்றை முறுக்குகிறபோது சுகுமாரி என்ன கத்தினாள்? அதை மட்டும் சொல்லு.”

குழந்தைப்பாண்டியன், லின் டாங்கின் மஞ்சள் முகத்தையும் பூனைக் கண்ணையும் ஒட்டிய கன்னங்களையும் நோக்கியவாறிருந்தார். சுவாசம் அனேகமாய் நின்று விட்டது. என்றே சொல்லாம். லின் டாங் தன் கோரமான இளிப்பை மறுபடி வெளியிட்டான். “சுகுமாரியம்மா கத்தினதா...? 'நீ... நீயா... நீயா ரேணுகா?' என்றுதான்.”

“என்ன?” குழந்தைப்பாண்டியன் துடித்தார் தரையில் விழுந்த மீன் போல. அவருக்குப் பேச்சு வரவில்லை. கண்கள் இருண்டன. “ரேணுகா... ரேணுகா... சொந்த அக்காவை! சகோதரியை! மாட்டேன், நம்ப மாட்டேன்...” நஞ்சுண்டன் பரிதாபத்துடன் கூறினான்: “இதைத்தான் அப்போதே சொன்னேன்.” சீனக் கிழவனிடம் சொன்னான்: “நீ போ.”

லின் டாங் போகவில்லை. "நான் கேட்டது?” என்றான் ஒருவிதத் திமிரான தொனியில்.

“எது?”

நஞ்சுண்டனின் புருவங்கள் ஏறியிறங்கின. "ஓ! அதுவா! இனிமேல் தான் எஜமானரிடம் பேசவேண்டும் அதைப் பற்றி இப்போது நீ போய் வா.”

குழந்தைப் பாண்டியன் பித்துப் பிடித்தவர்போல் திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தார்: “ரேணுகாவா... ரேணுகாவா...? இருக்காது...”

"பெரிய சோதனை முடிந்தது" என்றான் நஞ்சுண்டன். “எப்படி இதைச் சொல்லப் போகிறோம். என்று தவித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கட்டம் தாண்டியாயிற்று...”

“நஞ்சுண்டன்! பூரா விவரத்தையும் இப்போதே சொல்லிவிடு. கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஒன்றும் ஆகாது? என் மனம் இரும்பு. என் உடம்பு பாறாங்கல். இல்லாவிட்டால், நோயாளியாய் இத்தனை காலம் படுத்திருப்பேனா? இந்த வேதனைகளையெல்லாம் படாமல் என்றைக்கோ போயிருக்கமாட்டேனா?”

“அப்படியெல்லாம் பேசாதீர்கள்" என்றான் நஞ்சுண்டன். "சங்கிலி நிகழ்ச்சி என்றேனே, அதை விளக்குகிறேன் கேளுங்கள். டாக்டர் பாலசந்தருக்கும் ரேணுகாவுக்கும் காதல் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா?”

“ஓரளவு.”

“சுகுமாரிக்குத் தொண்டையில் தொந்தரவு ஏற்பட்டதும், ரேணுகாவுக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. அக்காவைத் தன் காதலனிடம் அழைத்துச் சென்று சிகிச்சை செய்ய வேண்டுமென்று. டாக்டர் பாலசந்தருக்கு இதனால் நல்ல பெயர் ஏற்படும். திருமணத்துக்கும் அது உதவி செய்யும். அதுதான் உங்கள் இளைய மகளின் எண்ணம். அதன்படித்தான் எல்லாம் நடந்தது. ஆனால் ஒரு தப்புக் கணக்குப் போட்டுவிட்டாள் ரேணுகா...”

"என்ன?" என்று கேட்கவில்லை குழந்தைப் பாண்டியன். குதிருக்குள் நெல் கொட்டுகிற மாதிரி அவருக்குள் வார்த்தைகள் விழுந்து கொண்டிருந்தன. ஆனால் அதைப் பற்றிய உணர்வில்லாமலே இருந்தார்.

நஞ்சுண்டன் நிறுத்தவில்லை. “சுகுமாரியும் பெண். ரேணுகாவின் வயதையொத்தவள். டாக்டர் பாலசந்தரின் இளமையும் அழகும் அவளையும் கவர்ந்துவிட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் - இப்படிப் பச்சையாகப் பேசுவதற்கு மன்னியுங்கள். வேறுவிதமாகச் சொல்லத் தெரியவில்லை எனக்கு தன் காதலைப் பலவிதமாக வெளிப்படுத்த சுகுமாரி முனைந்ததும், பாலசந்தருக்கு அது பிடிக்கவில்லை. ஆபரேஷனையும் ட்ரீட்மென்ட்டையும் சீக்கிரமாய் முடித்தான். சுகுமாரியை வீட்டுக்கு அனுப்பி விட்டான். அவன் தான் சொன்னானோ, அல்லது தானாக ஊகித்தாளோ, ரேணுகா தெரிந்து கொண்டுவிட்டாள். சங்கிலி நிகழ்ச்சியில் அடுத்த கணு ஆரம்பமாயிற்று.” குழந்தைப்பாண்டியன் இப்போது கவனமாய்க் கேட்கலூற்றார்.

"ரேணுகாவுக்கு அக்கா மீது துவேஷம் ஏற்பட்டது. அடக்கிக்கொண்டு பேசாதிருந்தாள். ஆனால் சுகுமாரி தன் தோல்வியைப் பொறுத்துக் கொள்ளத் தயாராயில்லை. காதலை நிராகரித்த டாக்டரிடம் அவளுக்கு ஏற்பட்ட குரோதம் கொஞ்ச நஞ்சமல்ல. அவனுக்கு அவமானம் உண்டாக்குவதென்று கங்கணம் கட்டிக் கொண்டாள். அதற்காகத்தான் வேண்டுமென்றே, குணமான ஆபரேஷனை குணமாகவில்லை என்று சொல்லவும் நடிக்கவும் ஆரம்பித்தாள். ஆனால் குளியலறையில் பாடுகிற சமயங்களில் தன்னைத் தானே காட்டிக்கொண்டு விட்டாள்.”

“நஞ்சுண்டன்! நீ சொல்வதெல்லாம் ஏதோ சினிமாவில் பார்ப்பது போல், நாவல்களில் படிக்கிற மாதிரி இருக்கிறதே தவிர, நிஜ வாழ்க்கையில் நடப்பது போலவே இல்லை.”

நஞ்சுண்டன் அனுதாபம் மிளிரப் புன்னகைத்தான்: “உங்களுக்கு வயதாகிவிட்டது. காதலின் சக்தியை - சதியை என்றுகூடச் சொல்லலாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது.”

“உண்மை” என்று ஒப்புக்கொண்டார் குழந்தைப் பாண்டியன்.” “அப்புறம்?”

“அக்கா செய்கிற பாசாங்கு தெரிந்ததும் ரேணுகாவுக்கு ஆத்திரம் பீரிட்டது. காதலனின் பெயரைக் கெடுத்தாளே என்று பொருமினாள். அக்கா செய்த பிரசாரத்தால், பாலசந்தரின் அமெரிக்கப் பயணம் - சுருங்கச் சொன்னால் எதிர்காலம் - பாழானது தெரிந்ததும் அந்த ஆத்திரம் பன்மடங்கு அதிகரித்தது. என்ன காரணத்தாலோ ஒரு சீனனும் பழக்கமாகியிருந்தான். அவனைத் துணை வைத்துக் கொண்டாள். சுகுமாரி புது வீட்டுக்குப் போன சமயம், தனியே அழைத்துச் சென்று, கழுத்தை -”

"போதும், அதற்கு மேல் சொல்லாதே!” என்று குழந்தைப்பாண்டியன் குழந்தை போல் தேம்பினார்.

“மிச்சத்தையும் கேட்டுவிடுங்கள்” என்றான் நஞ்சுண்டன். “காதலின் சக்தி மறுபடி வேலை செய்தது. ரேணுகா செய்த கொலை பாலசந்தருக்குத் தெரிந்து விட்டது. ஆனால் போலீசார் அவன் பேரிலேயே சந்தேகம் கொள்கிறார்களென்று தெரிந்ததும், அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டான். சுகுமாரி கொலையான அதே நேரத்தில் பேஷண்ட்டையோ டாக்டரையோ பார்ப்பதற்காகவே அவன் வெளியே சென்றிருக்கிறான். ஆனால் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறான்.”

“நஞ்சுண்டன், நஞ்சுண்டன்! நீ சொல்வதெல்லாம் பொருந்தமாகத்தான் இருக்கிறது. இனி என்ன செய்ய வேண்டும்? அதைச் சொல் அதைச் சொல்?” கண்களிலிருந்து நீர் வழியப் பதறினார் குழந்தைப் பாண்டியன். “இதெல்லாம் ரேணுகாவுக்குத் தெரியுமா?"

“தெரியாது. தன்னை யாரும் சந்தேகிக்கவில்லை என்பது அவள் நினைப்பு. அப்படியே இருக்கட்டுமென்று விட்டு வைத்திருக்கிறேன்.”

“ரேணுகா... ரேணுகா...” தந்தை விம்மினார்.

“ஒரு மகளை ஏற்கெனவே நீங்கள் பறி கொடுத்தாகிவிட்டது. சட்டம், நீதி என்கிற பெயரால் இன்னொரு பெண்ணையும் இழப்பதா? அதற்கு நாம் உடந்தையாக இருப்பதா? கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.”

“ஆமாம், கூடாது.”

“ஆனால் ரேணுகாவைக் காப்பாற்றுவது நம் யார் கையிலும் இல்லை. சட்டத்தின் இரும்புப் பிடியில் அவள் சிக்கக் கூடாது. என்று பாலசந்தர் விரும்புகிறான். அதே போல், பாலசந்தர் தூக்குமேடை ஏறக்கூடாது என்று - ரேணுகாவும் தீர்மானித்தால்...? தானாகவே போலீசில் சென்று குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டால்?”

“ஐயையோ!" என்று மெய் நடுங்கினார் ரேணுகாவின் தந்தை.

“பயப்படாதீர்கள். ஒருவர் ஒப்புக் கொள்வதாலேயே சட்டம் தண்டித்துவிடாது. சாட்சியும் ஆதாரமும் வேண்டும். ரேணுகாவுக்கு ஒரே சாட்சி - சற்று முன் வந்தானே, அந்தச் சீனன்தான்.”

குழந்தைப்பாண்டியனின் கண்கள் ஆர்வத்தால் மின்னின. “அவனைச் சரிக்கட்டிவிடலாம் இல்லையா? நீ செய்வாய். உன்னால் முடியும், நஞ்சுண்டன்"

“முடியும் என்பதால்தான் இத்தனை தூரம் பேசுகிறேன்" என்றான் நஞ்சுண்டன். “ஊரை விட்டு, தேசத்தை விட்டு ஓடி விடுகிறேன் என்கிறான் அந்தக் கிழவன். அவன் கேட்பதை மட்டும் நாம் கொடுத்து விட வேண்டும்?”

“எதுவும் கொடுக்கலாம். என் சொத்து முழுவதையும் கேட்கட்டும். தருகிறேன். சொல்லு என்ன கேட்கிறான்?"

“வைர முருகன்” என்றான் நஞ்சுண்டன் அமைதியாக.

*****

2

குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும். அப்படியொரு பரிபூரண அமைதி அங்கே நிலவிற்று.

குழந்தைப் பாண்டியன் கண் கொட்டவில்லை. முகத்தை அண்ணாந்து, நஞ்சுண்டனையே பார்த்தவாறிருந்தார். சோகம், கோபம், ஆச்சரியம், குழப்பம், பயம் அத்தனையும் ஒரே சமயத்தில் அந்த முகத்தில் தென்பட்டன. ஒரு சில நிமிடங்களுக்குள் அடுத்தடுத்துத் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் அவரை ஆடப் பண்ணி விட்டன. ஒன்றின் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன்னே அடுத்தது தாக்கியது. அதற்குள் இன்னொன்று; மேலும் மற்றொன்று. பாவம், குழந்தைப்பாண்டியன் நோயிலே கூட இத்தனை வேதனையை அவர் அனுபவித்ததில்லை.

ரேணுகா, தன் சொந்தச் சகோதரியைக் கொலை செய்தாள் என்ற ஒரு செய்தியே போதாதோ அவர் நிம்மதியைக் கெடுக்க? எங்கிருந்து முளைத்தது இந்த வைர முருகன் விஷயம்?

நஞ்சண்டன் அவர் முகத்தில் இவ்வளவையும் படித்தான். “உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது. குழந்தைப்பாண்டியன் சார். இதெல்லாம் நான் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அது உங்களுக்குத் துரோகம் செய்ததாகும்.” என்றான்.

"நீ சொன்னதில் ஒரு தவறும் இல்லையப்பா, ஒரு தவறுமில்லை” என்றார் குழந்தைப்பாண்டியன். கண்ணில் பொங்கிக் கொண்டிருந்த நீர், ஓடுவதற்கு வழியில்லாமல், குட்டை மாதிரி அப்படியே நின்றது. "என் குடும்பம் சீர்குலையாமல் இருப்பதற்காக, அந்தச் சீனன் கேட்கிற விலை பெரிது மிகப் பெரிது. அதனால் தான் குழம்புகிறேன்.”

“உண்மை” என்று அனுதாபத்துடன் ஆமோதித்தான் நஞ்சுண்டன். “ஆனால் ஆரம்ப முதலே சீனர்கள் இதில் ஏனோ ஓர் அக்கறை காட்டி வந்திருக்கிறார்கள். உங்கள் பெரிய பெண் நர்ஸிங் ஹோமில் படுத்திருந்தபோது அவளை அடிக்கடி பார்க்க வந்தவன் ஒரு சீனன். அப்போதிலிருந்தே அவர்கள் ஒரு திட்டத்துடன் தான் வேலை செய்து வந்திருக்கிறார்கள். இப்போது உங்கள் இளைய மகள் அவர்களுக்குத் துணை செய்துவிட்டாள். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்கள். பிடித்துக் கொண்டார்கள்.”

குழந்தைப்பாண்டியனின் குழப்பம் முற்றும் நீங்கவில்லை. "வைர முருகனுக்கும் சைனாக்காரனுக்கும் என்ன சம்பந்தம்? அப்படியானால், விலையுயர்ந்த வேறு எத்தனையோ பொருள்களைப் கேட்கலாமே?”

“கேட்கமாட்டார்கள். வைர முருகனை வைரம் என்பதற்காக அவர்கள் கேட்கவில்லை. அதிலே ஏதோ ரகசிய சக்தி இருக்கிறதாம். அது அவர்களுக்குத் தேவையாம்.”

அறையின் வெளிப்புறமாகக் கண்ணைச் சுழற்றினார் குழந்தைப்பாண்டியன். “அவன் இருக்கிறானா, போய் விட்டானா?”

“அந்தச் சீனக் கிழவனா? போய்விட்டான்.”

"போகும்போது என் விஷயம்... என்று ஏதோ சொன்னானே, அது இதைப் பற்றித்தானா?”

"ஆமாம். ரேணுகா விஷயமா. அவன் போலீசில் வாயைத் திறவாதபடி அடைத்தாக வேண்டும். அதுதான் நம்முடைய உடனடி வேலை” என்றான் நஞ்சுண்டன். வேறோர் எண்ணத்தினால் குழந்தைப்பாண்டியனின் முகம் திடீரென்று தெளிவு ஏற்பட்டது. “ஆனால், ரேணுகாவை காட்டிக் கொடுத்தால் சீனன்தானே சேர்ந்து சிக்கிக் கொள்ள நேரிடும்? அந்த முட்டாள்தனத்தைச் செய்வானா?”

நஞ்சுண்டன் புன்னகை புரிந்தான். “சார். உங்களுக்குப் பெயர் வைத்தவர்கள் நல்ல தீர்க்கதரிசிகள். உங்களுக்கு இவ்வளவு குழந்தைத்தனமான மனம் இருக்குமென்று எப்படித்தான் கண்டு கொண்டார்களோ!” என்றான் கேலியாக. "இந்தச் சீனக் கிழவனுக்கு மட்டுமில்லை. பொதுவாகவே எந்தச் சீனனுக்கும் உயிர் ஒரு பொருட்டில்லை. கொரியாவா, வியட்நாமா - எப்படி ஈசல் படை மாதிரி பீரங்கி தீனியாகச் சாவின் வாயில் வந்து விழுந்து கொண்டேயிருக்கிறார்கள் பாருங்கள்! நினைப்பது நிறைவேறினால் சரிதான் - கூட்டம் கூட்டமாகச் சாகத் தயாராகிவிடுவார்கள் அவர்கள். அதனால் ரேணுகாவைக் காட்டிக் கொடுப்பது என்று தீர்மானித்து விட்டால், தன் உயிரைப் பற்றிக் கவலைப்பட மாட்டான் இவன். அல்லது, தன் தலைக்குத் தீம்பில்லாமலே ரேணுகாவுக்கு மட்டும் ஆபத்தைத் தேடி வைத்துவிட்டு கூட நழுவி விடுவான். எப்படிப் பார்த்தாலும் இவனை தாமாகவே ஊரை விட்டு வெளியேற்றி விடுவதுதான் உத்தமம். அதற்கு அவன் கேட்கிற பொருளைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.”

"ஒரு விஷயத்தை மறந்துவிட்டு நீ இவ்வளவும் பேசுகிறாய்!” குழந்தைப்பாண்டியன் சோகச் சிரிப்பொன்றை வெளியிட்டார்.

"என்ன அது?”

"பொருள் என்னுடையதே அல்ல. என் மீது நம்பிக்கை வைத்து, நான் மத்தியஸ்தம் செய்வேனென்று கொடுத்து விட்டுச் சென்றார்கள். அந்தப் பொருளைத் தூக்கி, வழியோடு போகும் ஒரு சீனனிடம் கொடுக்க எனக்கு என்ன உரிமை?”

“உரிமை கிடையாதுதான்." நஞ்சுண்டனின் முகத்தை அப்போது பார்ப்பவர்கள், பெரும் போராட்டமொன்று அவன் உள்ளத்துக்குள் நிகழுகிறது என்று நினைப்பார்கள். உண்மையில் அவன் மாபெரும் நடிகன். “குழந்தைப் பாண்டியன் சார், நான் இதை யோசிக்கவில்லை என்றா நினைத்தீர்கள்? நன்றாய் யோசித்தேன். ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு. ஒரு பாவத்தை மூட மற்றொரு பாவம். இப்படியே போனால் முடிவே கிடையாது. சத்தியம், நேர்மை, நாணயம். கொடுத்த வாக்கிலிருந்து மீறாமை - இவற்றையெல்லாம் எவ்வளவு பெரிதாகக் கருதுகிறவர் நீங்கள் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். உங்களுடைய இளைய மகள் - இப்போது ஒரே மகளாக இருப்பவள் - செத்துக் சுண்ணாம்பானாலும் சரி, நேர்மைப் பாதையிலிருந்து நழுவ நீங்கள் இணங்க மாட்டீர்களே! அதை நினைத்துத்தான் நானும் குழம்பினேன். அப்படிச் செய்யும்படி உங்களைக் கட்டாயப் படுத்தக் கூடாது. பெரும் பாவம். ஆகவே, ஆண்டவன் விட்ட வழிப்படி நடக்கட்டும் என்றுதான் ஓசைப்படாமல் வெளியேறிவிட நினைத்தேன். விதி சதி செய்துவிட்டது. உங்களிடம் இவ்வளவையும் சொல்லும் படி பண்ணி விட்டது.”

குழந்தைப் பாண்டியன் கண்களை மூடிக்கொண்டார். துன்பம் அவர் முகத்தின் குறுக்கும் நெடுக்குமாகக் கத்தி கிழித்தாற்போல் கோடுகளை ஏற்படுத்தியது. நஞ்சுண்டன் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டான். அதிலே கனமும் ஆழமும் ஏற்படுத்திக் கொண்டான்.

“குழந்தைப் பாண்டியன் சார், இவ்வளவையும் இப்போதே மறந்துவிடுங்கள். பதினைந்து நிமிடம் உங்களை அறியாமலே கண்ணயர்ந்துவிட்டீர்கள். அப்போது கண்ட கனவு இதெல்லாம். விட்டுது தள்ளுங்கள். போகும்போது நாம் கொண்டு செல்லப் போவது, மனைவி மக்களும், வைர முருகனும் சொத்து பத்துமல்ல; மனிதன் கடைசி வரை நேர்மையானவன் என்ற நற்பெயர்தான். அதைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மகள் என்பதற்காக ரேணுகாவைக் காப்பாற்ற முயலாதீர்கள். பார்க்கப் போனால் அவள் செய்தது பச்சைப் படுகொலை. அதற்குண்டான தண்டனையை அரசாங்கமோ ஆண்டவனோ தரட்டும். நீங்கள் பேசாதிருங்கள். நேர்மைப் பாதையிலிருந்து மாறாதிருங்கள். நடக்கிறபடி நடக்கட்டும்."

நஞ்சுண்டன்ட எழுந்திருக்கப் போனான். “இரு, இரு,” என்று அவசரமாகத் தடுத்தார் குழந்தைப் பாண்டியன். “நான் பேசியது தவறு. நேர்மை நாணயம் என்பதெல்லாம் கடைசியில் சுயநலம்தானே தவிர வேறில்லை, நாளைக்கு எனக்கு நற்பெயர் கிடைக்கும், மூன்றாம் நாள் சுவர்க்கத்திலே எனக்கு ஒரு சீட்டு போட்டு வைப்பார்கள் என்பதற்காக, இன்று என் குடும்பத்துக்கு நான் ஆற்ற வேண்டிய கடமையைத் தவற விடலாமா? என்ன தவறிழைத்திருந்தாலும் ரேணுகா என் பெண். தந்தை என்ற முறையில் கடைசி வரை அவளுக்காகப் போராடத் தான் போகிறேன்.”

நஞ்சுண்டன் “ஹூம்!” என்று சிரித்தான். “நினைத்தேன் கடைசியில் உங்கள் பாசம்தான் வெல்லும் என்று! சரி அப்படியானால்?”

"சீனக் கிழவன் கேட்கிறபடி வைர முருகனைக் கொடுத்துவிடுவோம். அவன் வாயை அடைத்து விடுவோம். கப்பலிலோ விமானத்திலோ அவனை ஏற்றிவைத்து ஊருக்கு அனுப்பிவிடுவோம். ஆனால் ஒரு கஷ்டம் இருக்கிறது.”

"என்ன கஷ்டம்?” என்று நஞ்சுண்டன் கேட்டான். “பாபநாசம் மைனர்கள் திருப்பிக் கேட்கும்போது என்ன செய்வது என்றா? கவலைப்படாதீர்கள். இந்தச் சீனனும் அவனுடைய கோஷ்டியாரும் பலே கைகாரர்கள். தயாராக ஒரு போலி முருகனைச் சிருஷ்டித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அசலை நான் பார்த்ததில்லை. ஆனால் அதற்கும் இதற்கும் கடுகத்தனை வேற்றுமைகூட, எப்படிப் பட்ட நிபுண்னாலும் கண்டுபிடிக்க முடியாதாம். விற்கச் சென்றால்தான் உண்மை வெளிப்படுமாம். பாபனாசம் மைனர்கள் அதைப் பூஜைக்குத்தான் வைத்துக் கொள்ளப் போகிறார்கள்? ஆகவே நாம் தைரியமாக அந்தப் போலியைக் கொடுத்துவிடலாம். இன்னும் பல பல வருடங்களுக்கு நமது மோசடி வெளியாகாமலே போய் விடும்.”

"கொலை, நாணயமின்மை, மோசடி பஞ்சமா பாதகங்களில் இனி எதுவும் பாக்கியில்லை!" வெறுப்புடன் நகைத்தார் குழந்தைப் பாண்டியன். “ஆனால் என் கஷ்டமென்று சொன்னது அதையல்ல. சுலபமாக மாற்றி விடலாம் தான். ஆனால் என்னிடம் இருந்தால் தானே?”

“எது?”

"வைர முருகனைத்தான் சொல்கிறேன். அது என்னிடம் இல்லையே?”

நஞ்சுண்டனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “இப்போது உங்களிடம் இல்லை?”

"இப்போதென்ன, எப்போதுமே இல்லை. ஆரம்ப முதலே இல்லை.”

“என்ன விளையாடுகிறீர்கள்?”

நஞ்சுண்டனுக்கு அவனையும் மீறிக் கோபம் வந்து விட்டது. கெட்டிக்காரன். உடனே மறைத்துக் கொண்டான். "என்னிடமே மறைப்பது என்று தீர்மானித்து விட்டீர்களா?”

“இல்லை, நஞ்சுண்டன். நிஜமாகவே சொல்கிறேன்” என்றார் குழந்தைப் பாண்டியன்.

அவர் பேச்சை ஏற்றுக் கொள்ள நஞ்சுண்டன் தயாராயில்லை. “நான் ஒரு துப்பறியும் நிபுணன், எனக்குத் தெரியாத விஷயமே இந்த வீட்டில் கிடையாது என்பதை மறந்து விட்டீர்கள். அவ்வளவு பெரிய கொலையைத் துப்புத் துலக்கியவனுக்கு, வைர முருகன் எங்கே இருக்குமென்றா தெரியாது?”

“அவ்வளவு பெரிய நிபுணனாக இருந்தும் இதிலே மட்டும் ஏமாந்துவிட்டாய்” என்றார் குழந்தைப் பாண்டியன். “ஏமாந்து போகிற மாதிரி அவ்வளவு சாமர்த்தியமாய்ச் செய்திருக்கிறேன்.” அத்தனை நெருக்கடியிலும் அவருக்குத் தன் சாதனையில் பெருமை போலும். மார்பு விரிந்தது. முகம் மலர்ந்தது.

நஞ்சுண்டனுக்கும் தன் சாமர்த்தியத்திலே தனிப் பெருமை. “நான் சொல்கிறேன் - அந்த வைர முருகன் இந்த அறைக்குள்ளேயே இருக்கிறது.”

“இங்கே?”

"அதுவும் நீங்கள் படுத்திருக்கின்ற பத்துப் பன்னிரண்டு சதுர அடிப் பிரதேசத்துக்குள்ளேயே.”

“விளையாடுகிறாய்.”

“நிரூபிக்கிறேன்." பஸ்ஸரை அழுத்தினான் நஞ்சுண்டன். வெளியே அனுப்பப்பட்டிருந்த நர்ஸ் அம்மணி வந்தாள்.

“படுக்கையைப் பழையபடி நீட்டினாற் போல் போடு” என்றான் அவளிடம்.

சக்கரத்தைச் சுழற்றினாள் அவள்.

குழந்தைப் பாண்டியனின் படுக்கை நீள வாட்டமாக மாறியது. "நீ போ" என்றான் நஞ்சுண்டன். அம்மணி வெளியேறினாள்.

குழந்தைப்பாண்டியனின் முகத்தை உற்றுப் பார்த்தவாறு நஞ்சுண்டன் சொன்னான்: "உங்கள் படுக்கை தலையணைகளை மாற்றும்போது நர்ஸை அடிக்கடி எச்சரிக்கிறீர்களே, ஏன்? இது அப்படியே இருக்கட்டும், அதை நகர்த்தாதே என்றெல்லாம் சொல்கிறீர்களே, எதற்காக?”

“எதற்காக என்றால்? நான் நோயாளி, பலவீனமானவன், தொந்தரவு செய்யாதே என்பதற்காகத்தான்.”

“இல்லையென்கிறேன் நான். இந்தப் படுக்கையில், இந்தக் கட்டிலில்தான் வைர முருகன் இருக்கிறது!”

ஏளனமாகச் சிரித்தார் குழந்தைப் பாண்டியன். "பூஜைக்குரிய வைர முருகனைப் போய் என் காலும் படுக்கையும், மருந்தும் அசுத்தமும் படக்கூடிய இடத்திலா வைப்பேன்? நல்ல கற்பனைவளமுள்ளவன் தான் நீ!”

“கற்பனையா, மெய்யா என்பதைத் தான் பார்த்து விடலாமே? கொஞ்சம் நகர்ந்து கொள்கிறீர்களா?”

"தாராளமாய்! என்னைப் புரட்டிப் புரட்டி அடிப்பதானாலும் சரி. சோதனை போட்டுக் கொள்" ஒருகணித்தாற்போல் திரும்பிக் கொண்டார் குழந்தைப் பாண்டியன். நஞ்சுண்டன் முதலில் அவருடைய தலையணையின் கீழே கையினால் துழாவிப் பார்த்தான். எதையும் காணவில்லை. தரையில் படுத்தபடி, கட்டிலின் கீழ்ப்புறத்தை ஆராய்ந்தான். ரகசிய அறை எதுவும் இருக்கவில்லை. மெத்தையின் உறைகளுக்குள், சுருக்கங்களுக்குள், பரிசோதித்தான். சந்தேகம் ஏற்படுகின்ற இடத்திலெல்லாம் விரலால் அழுத்தி அழுத்திப் பரிசோதித்தான்; நெருடியும் நெம்பியும் உருட்டியும் கிள்ளியும் பலவாறு சோதனைகள் நடத்தினான்.

ஊகூம். சரியான தோல்வி தான் அவனுக்குக் கிடைத்த பரிசு.

“என்ன, பார்த்தாகி விட்டதா?” புன்னகை பூத்தார் குழந்தைப்பாண்டியன்.

“இன்றோ நேற்றோ வைர முருகனை வெளியேற்றி விட்டீர்கள்.”

"இல்லை. ஆரம்பத்திலிருந்து வைர முருகன் இங்கே இருக்கவில்லை. இருக்கிற மாதிரி ஒரு நாடகம் நடத்தினோம் நானும் பாபநாசம் பட்டாமணியமும்” என்றார் குழந்தைப்பாண்டியன்.

“எதற்காக?” என்று கேட்ட நஞ்சுண்டன், ஏதோ சத்தம் கேட்டுத் தோட்டப் புறத்தைக் கவனித்தான். காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் ரேணுகா. பள்ளிக்கூடத்தில் இடைவேளை நேரம் அது. வழக்கப்படி சாப்பாட்டுக்காக வந்திருந்தாள்.

“ரேணுகா வருகிறாள். எதையும் அவளிடம் பேச வேண்டாம்" என்று நஞ்சுண்டன் எச்சரித்தான்.

“அந்த வார்த்தையை நான் தான் உன்னிடம் சொல்ல வேண்டும். எனக்கும் உனக்கும் அவள் ரகசியம் தெரிந்த மாதிரி துளியும் காட்டிக் கொள்ளாதே.”

நஞ்சுண்டன் மாடியிலுள்ள தன் அறைக்குச் சென்றான். வைர முருகன் விஷயத்தில் எதிர்பாராத ஏமாற்றம் அவனுக்கு. எனவே எரிச்சல் எரிச்சலாய் வந்து கொண்டிருந்தது தந்தையும் மகளும் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.

ரேணுகா செருப்பை வெளியே கழற்றிப் போட்டு விட்டு தந்தையின் அறைக்குள் வந்தாள். "சாப்பிட்டீர்களா, அப்பா? நன்றாய்த் தூங்கினீர்களா?” என்று கேட்டாள்.

"ஊம் ஊம்.” என்றார் குழந்தைப் பாண்டியன். என்ன முயன்றும், மனத்துக்குள் பொங்கும் வெறுப்பை அவரால் அடக்க முடியவில்லை. கேவலம் காமவெறி பிடித்து - அதற்குக் காதல் என்று பெயர் வேறே! - மூத்த சகோதரியைப் படுகொலை செய்தவளல்லவா இவள் என்று எண்ணினார். வெறுப்பு, வெறியாக ஆயிற்று.

“ஏனப்பா என்னவோ போல் இருக்கிறீர்கள்?” திரும்பத் திரும்பக் கேட்டாள். ரேணுகா.

"அது உன் மனச்சாட்சிக்கே தெரியும்!” என்று சொல்ல எண்ணினார் குழந்தைப்பாண்டியன். அடக்கிக் கொண்டார். இந்த ஒரே மகளையும் இழந்துவிடுவோமா என்ற அச்சம் அவரை உலுக்கிற்று. "ஒன்றுமில்லை. சற்று முன்புதான் தூங்க ஆரம்பித்தேன். அதற்குள் நீ வந்தாய். தூக்கம் கெட்டுவிட்டது. நீ சாப்பிடப் போ” என்றார். ஆனால் ரேணுகா போகவில்லை. தந்தையின் போக்கில் - பேச்சில் - நிச்சயமாய் ஒரு மாறுதல் தெரிந்தது. மாடி அறையை நோக்கினாள். நஞ்சுண்டனின் நஞ்சு ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறது என்று ஊகித்தாள். பல்லைக் கடித்தாள்.

*****

3

களை ஒன்றும் கேட்கக் கூடாது. தனக்கு எதுவும் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளக் கூடாது - இப்படித்தான் நினைத்தார் குழந்தைப்பாண்டியன். ஆனாலும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ரேணுகாவையே வைத்த கண் எடுக்காது நோக்கினார்.

"என்னப்பா அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றாள் ரேணுகா.

“சுகுமாரியின் விஷயம்தான், ரேணு. இருந்த நாளெல்லாம் நன்றாயிருந்து விட்டு, போகும் போது இந்தக் குடும்பத்துக்கு ஒரு அபவாதத்தை ஏற்படுத்திவிட்டுப் போய் விட்டாள் பார்த்தாயா?”

ரேணுகா தந்தையின் கையைப் பரிவுடன் வருடினாள். “அப்பா, அக்காமீது என்ன தப்புச் சொல்ல முடியும்? தான் கொலை செய்யப்பட வேண்டும், குடும்பத்துக்குக் கெட்ட ஏற்பட வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா.”

"மாட்டார்கள்தான். ஆனால் அந்த மாதிரியான சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்ளாமல் இருந்திருக்கலாமில்லையா?” என்றார் குழந்தைப் பாண்டியன். "ஏன் ரேணு, அவள் சுகுமாரி - ஏதாவது காதல் விவகாரத்தில் சிக்கியிருந்திருப்பாளா? உனக்கு அப்படித் தோன்றுகிறதா?” “இந்த விபரீத ஊகமெல்லாம் யார் உங்களுக்குச் சொல்லித் தருவது? நஞ்சுண்டனா?” ரேணுகா பல்லைக் கடித்தது வெளியே தெரியவில்லை. ஆனால் குரலில் தென்பட்ட கோபத்தை எப்படி மறைக்க முடியும்? 'ஹூம்! பேச்சை எடுத்தவுடனே என்னமாய்ப் படபடப்பு ஏற்படுகிறது இவளுக்கு!' என்று நினைத்துக் கொண்டார் குழந்தைப் பாண்டியன். என்ன இருந்தாலும் துப்பறியும் நிபுணன், துப்பறியும் நிபுணன்தான். நஞ்சுண்டன் கரெக்டாய்க் கண்டு பிடித்திருப்பான் போலிருக்கிறதே...

“ஏனம்மா, படுக்கையோடு படுக்கையாகக் கிடக்கும் ஒரு நோயாளிக்கு வேறென்ன வேலை? சிந்தனையாளர்களெல்லாம் ஆஸ்பத்திரி அல்லது சிறைச் சாலையில்தான் பிறக்கிறார்கள்!” மெல்லச் சிரித்தார் குழந்தைப் பாண்டியன் - தன் சந்தேகம் அவளுக்குத் தெரிந்து விடாதபடி. “சும்மா படுத்திருக்கிற நேரத்தில் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்றெல்லாம் யோசனை செய்தேன். சுகுமாரிக்கு ஏதாவது காதல் சிக்கல் நேர்ந்திருக்குமோ என்று தோன்றிற்று.”

"ஒரு சிக்கலும் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. மனசைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.” பேச்சை முறித்த மாதிரி ரேணுகா எழுந்து கொண்டாள். குழந்தைப் பாண்டியனின் சந்தேகம் சிறிது சிறிதாய் ஊர்ஜிதமாகிக் கொண்டிருந்தது. 'இவளுக்குச் சுறுசுறுவென்று கோபம் வருவானேன்?' என்று எண்ணிக் கொண்டார். இன்னும் கொஞ்சம் குடைய வேண்டும் என்ற ஆத்திரமும் ஏற்பட்டது. “என்ன இருந்தாலும், சுகுமாரியை நீ கட்டாயப்படுத்தி பாலசந்தரின் நர்ஸிங் ஹோமுக்கு அனுப்பியிருக்க வேண்டாம்” என்றார்.

“அதாவது?” விழியில் நெருப்புப் பொறி பறக்காத குறைதான். “மட்டமான, மூளையில்லாத, அரை வேக்காடு போலீஸ்காரர்கள் நினைக்கிற மாதிரி நீங்களும் பாலசந்தரைச் சந்தேகப்படுகிறீர்கள்? அப்படித்தானே?”

குழந்தைப் பாண்டியன், திருப்பிக் கேட்டார். “சந்தேகப்படக் கூடாதென்று நீ சொல்கிறாயா?”

“ஆமாம்.”

“ஏன்?”

“ஏனென்றால்? டாக்டர் பாலசந்தரை எனக்கு மிக நன்றாய்த் தெரியும் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.”

'அவரை நான் காதலிக்கிறேன்' என்பதைத் தவிர மற்ற எல்லா விதமாயும் சொன்னாள் ரேணுகா.

'பாலசந்தர் கொலையாளி அல்லவென்று ஏன் நிச்சயமாய்ச் சொல்கிறாய்? உண்மைக் கொலையாளி யாரென்று உனக்கத் தெரியும். அது நீதான். - இவ்வாறு நினைத்துக் கொண்டார் குழந்தைப் பாண்டியன்.’

“சாப்பிட்டு விட்டு ஸ்கூலுக்குப் போக வேண்டுமப்பா, நான். அமைதியாக இருங்கள். பொய்யும் புரட்டும் ஒரு நாள் தானாகவே தகர்ந்து விடும்.” அவளையறியாமலே விழிகள் மாடியை நோக்கிச் சென்றன. “போலீஸ் இலாகாவின் முட்டாள் தனமான கற்பனைகளை உண்மை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.”

"போலீஸ் இலாகாவை விட்டுவிடு. நாளைக்கு நஞ்சுண்டனே நீ அழைத்து வந்துள்ள ரமணனே சொல்கிறானென்று வைத்துக் கொள்? பாலசந்தர்தான் கொலையாளி என்று அப்போது?”

“சொல்ல மாட்டார் ஒரு நாளும்” என்று கூறிவிட்டு வெளியேறி விட்டாள் ரேணுகா. 'நீ அழைத்து வந்துள்ள ரமணன்.' என்று அப்பா கூறிய போது, நாக்கு நுனியில் மறுப்புக் காத்திருந்தது. 'அவன் ரமணனல்ல, போலிப் பேர்வழி. அயோக்கியன். நயவஞ்சகன். நம் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு நம்மையே பிளாக்மெயில் பண்ணும் ரெளடி' - இப்படியெல்லாம்கூவ வேண்டும் போல் தொண்டையில் குமுறியது.

எப்படி வெளியிடுவது? வெளியிடப் போய் இன்னும் என்னென்ன ஆபத்துக்கெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்ததாக ஆகிவிடுமோ? அறியாமல் ஆராயாமல் அவள் செய்த காரியம், எவ்வளவு சிக்கலான வலையில் தள்ளியிருக்கிறது.

டைனிங் ஹாலுக்குச் சென்று சாப்பாட்டுக்கு அமர்ந்தாள்.

சமையற்காரப் பாட்டி மிரள மிரள விழித்தாள். மாடியைப் பயத்துடன் நோக்கினாள். தயங்கித் தயங்கி ரேணுகாவை நெருங்கினாள். சற்றுமுன், தான் விசாரிக்கப் பட்ட செய்தியைத் தெரிவித்தாள்.

"ஓ! அவ்வளவுதானே! இதில் பயப்பட என்ன இருக்கிறது? பயப்படாதீர்கள்.” தைரியம் கூறினாள் ரேணுகா. ஆனால் பாட்டியின் அச்சம் அவளைப் பிடித்துக் கொண்டது. நஞ்சுண்டன் என்ன திட்டமிட்டிருக்கிறான்? சற்றுமுன் அப்பாகூட வித்தியாசமாகத்தானே பேசினார்? ஏன்?

சாப்பிட்டதாகப் பேர் பண்ணினாள். தந்தையின் அறை வாசலில் நின்றாள்.

“போய் வருகிறேனப்பா ஸ்கூலுக்கு” என்று குரல் கொடுத்தாள். காரைக் கிளப்பிக் கொண்டு சென்றாள். ஆனால் - பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை.

தெருக் கோடியில் ஒரு விற்பனை வரி அலுவலகம் இருந்தது. பெரிய காம்பவுண்டு சுவர். உள்ளே பல கார்கள் நின்றிருந்தன. அவற்றினிடையே தன் காரையும் நிறுத்தினாள். சுற்றுமுற்றும் எச்சரிக்கையாகப் பார்த்துக் கொண்டாள். தன் வீட்டை நோக்கித் திரும்பி நடந்தாள்.

தோட்டத்துக்குள் நுழைந்தவள், சுவர் ஓரமாகவே பதுங்கி நடந்தாள். பின்புறமாக வீட்டுக்குள் நுழைந்தாள். தந்தையின் அறைக்குப் பக்கத்து அறையில் நுழைந்திருந்த வேளை

யார் வருவது அந்த டாக்ஸியில்? கதவை லேசாகத் திறந்து கொண்டு எட்டிப் பார்த்தாள் ரேணுகா.

ஒன்றல்ல, இரண்டு டாக்ஸிகள் நுழைந்து கொண்டிருந்தன பங்களாவுக்குள். அடேயப்பா! ஒரே சமயத்தில் ஏகப்பட்ட விருந்தாளிகள் வருகிறார்கள் போலிருக்கிறதே?

அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. இரண்டு டாக்ஸியிலிருந்தும் ஏராளமான பேர் இறங்கவில்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர்தான். முதல் டாக்ஸியிலிருந்தும் வெளிப்பட்டவர் சற்று நடுவயதுக்காரர். மற்றதிலிருந்து இறங்கியவர் இளமையாயிருந்தார்.

முகத் தோற்றத்திலிருந்து ஒன்று நன்றாய்த் தெரிந்தது: இருவரும் சகோதரர்கள்.

சகோதரர்கள்? தனித் தனியாய் வந்து இறங்குகிறார்களே? அப்படியானால் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை கிடையாதா? மனத்தாங்கலா? ரேணுகா அவர்கள் தோற்றத்தைக் கூர்ந்து ஆராய்ந்தாள். சுகுவாசியென்று பறைசாற்றும் உடல்வாகு. கழுத்தில் மைனர் செயின்கள். அகலச் சரிகைப் போட்ட வேட்டி. தாம்பூலத்தோடு நெருங்கி உறவாடிய அதரங்கள். வெற்றிலைப் பெட்டி வெள்ளியில்

பளீரெனப் புரிந்துவிட்டது - தஞ்சை ஜில்லா மிராசுதார்களென்று. அப்படியானால், பாபநாசம் மைனர்கள் தான். இவர்கள் பெரிய மைனரும் சின்ன மைனரும்!

பெரிய மைனர் டாக்ஸியோட்டிக்குச் சத்தம் கொடுத்தபின், ஒரு சிறிய, ஸூட்கேஸை எடுத்துக் கொண்டார். பங்களாவுக்குள் நுழைந்தார். சிறிய மைனரின் கையில் எதுவுமில்லை. பர்ஸைத் திறந்தவர், ஓர் ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துத் தந்தார். மிச்சம் வாங்கிக் கொள்ளவில்லை. 'போ' என்று தலையசைத்துவிட்டுத் தமையனைப் பின் தொடர்ந்தார்.

“வாருங்கள், வாருங்கள். ஏன் இவ்வளவு திடீரென்று?" குழந்தைப்பாண்டியன் அவர்களை வரவேற்பது காதில் விழுந்தது ரேணுகாவுக்கு. “இவர் நஞ்சுண்டன்... என் குடும்ப சிநேகிதர்...”

இப்படிப் பரஸ்பர அறிமுகங்கள் நடைபெறுவதையும் செவிமடுத்தாள்.

இதற்கு மேலும் சும்மா இருக்கக்கூடாது. சமையல் பாட்டி தடுமாறிப் போவாள். வந்தவர்களுக்கு என்ன நோக்கம், என்ன வேலை என்பதையெல்லாம் இப்படி மறைந்திருந்தே கேட்பது முடியாது. போதாது.

நுழைந்தது போலவே ரகசியமாக வெளியேறினாள் ரேணுகா. தெருக்கோடியில் விட்டிருந்த காரை எடுத்துக் கொண்டாள். மீண்டும் பங்களாவுக்கே திரும்பினாள்.

“ஓரே தலைவலியாயிருந்தது, அப்பா. லீவு போட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே தந்தையின் அறைக்குள் நுழைந்தாள்.

குழந்தைப் பாண்டியனின் கால்மாட்டில் ஒருவரும் தலைமாட்டில், ஒருவருமாகப் பாபநாசம் மைனர்கள் அமர்ந்திருந்தார்கள். அது சற்றுத் தள்ளி நின்றிருந்தான் நஞ்சுண்டன். சகோதரர்கள், சுகுமாரியின் மறைவு குறித்துத் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள் போலும். குழந்தைப் பாண்டியனின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்த கொண்டிருந்தது. "இவள்தான் என் இளைய மகள்.” ரேணுகாவை அறிமுகம் செய்தார் குழந்தைப் பாண்டியன். பெரிய மைனர், பேச்சைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தவர் போலத் தொடர்ந்தார். “பட்டாமணியம் அப்படிச் செய்திருக்கக் கூடாது. உங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த ஆபத்துக்கெல்லாம் அதுதான் காரணம்!”

குழந்தைப் பாண்டியன் பெருமூச்சு விட்டார். "இல்லா விட்டால் இதே ஆபத்து இன்னொருவருக்கு நேர்ந்திருக்கப் போகிறது.”

“அப்படிச் சொல்லிவிட முடியுமா?”

“வைர முருகன் ஆரம்ப முதலே இந்த வீட்டில் இல்லையென்று சொன்னேனல்லவா?” நஞ்சுண்டனைப் பார்த்து அவர் விளக்க ஆரம்பித்தார். ரேணுகாவுக்கு அது புதிராயிருந்து. வைர முருகன் வீட்டில் இல்லையா? அது களவு போயிருப்பதாக அவள் பதறியதெல்லாம் அனாவசியம்தானா? பல வினாக்கள் அவள் நாக்கு நுனியில் அரும்பின. அடக்கிக் கொண்டாள்.

குழந்தைப்பாண்டியன் கூறினார்: "வைர முருகனைப் பட்டாமணியம் இங்கே எடுத்து வந்தது உண்மைதான். இவர்கள் இருவருக்கும் பொதுவாக நான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதும் உண்மைதான். ஆனால், ரயிலில் சென்னைக்க வரும்போது இரண்டு மூன்று விபத்து ஏற்பட்டன அவருக்கு. மாயவரத்தில் காப்பி சாப்பிடுவதற்காக இறங்கினாராம். எதிர் பிளாட் பாரத்தின் ஓரமாக நின்றிருந்த போது, அங்கே வந்த ஒரு கூட்ஸ் எஞ்சினின் முன்னால் அவரை யாரோ தள்ளப் பார்த்தார்களாம். நல்ல வேளை விழாமல் சமாளித்து விட்டாராம். கடலூரில் இறங்கியபோது யாரோ மேலே வந்து இடித்தார்கள். அவர் கையிலிருந்து வெற்றிலைப் பெட்டியைத் தட்டிக்கொண்டு போய் விட்டார்களாம்.”

"வைர முருகனைப் பறிக்கத்தான் அதெல்லாம்” என்றார் பெரிய மைனர். “ஆனால் பட்டாமணியத்தின் மனோதிடம் யாருக்கும் வராது. என்ன நேர்ந்தாலும் சரி, அந்த வைர முருகனை நழுவ விடுவதில்லை என்று மார்போடு அணைத்துக் கொண்டேயிருந்தாராமே!”

“ஆமாம்” என்றார் குழந்தைப்பாண்டியன். “இங்கே வந்ததும் என்னிடம் எல்லாவற்றையும் சொன்னார். வைர முருகனையும் எடுத்துக் கொடுத்தார். நான் எல்லோரையும் வெளியே போகச் சொன்னேன். ரகசியமாக அந்த யோசனையைச் சொன்னேன்.”

"என்ன யோசனை?” என்று முதன் முறையாக நஞ்சுண்டன் கேட்டான்.

“வைர முருகனை அவர் பட்டணத்துக்கு எடுத்து வருவது யாருக்கோ தெரிந்திருக்கிறது. நடு வழியிலேயே அபகரிக்க முயன்றிருக்கிறார்கள். முடியவில்லை. இந்தப் பங்களாவுக்குள் வந்து என்னிடம் ஒப்படைப்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். அவர்களை முட்டாளடிக்கலாம். என்று முடிவு செய்தேன். 'என்னிடம் வைர முருகனை’த் தந்திருப்பதாகவே எல்லோரும் எண்ணட்டும். அதை அபகரிக்க நினைப்பவன் இங்கேதான் முட்டிக் கொண்டிருப்பான். நீர் இதைப் பாபநாசத்துக்கே திரும்ப எடுத்துப் போங்கள், என்று பட்டாமணியத்திடம் சொன்னேன்.”

சின்ன மைனர் மெல்லச் சிரித்தார். முன் வரிசையில் ஒரு தங்கம் மின்னுவதை ரேணுகா கவனித்தாள். அவர் குரல் சன்னமாயிருந்தது. “துப்பறியும் கதைகளில் அந்த மாதிரிப் படித்திருக்கிறேன். ஒரு பொருளைக் களவாடத் திருடன் திட்டமிடுவான். அதை அந்தத் திருடனின் இருப்பிடத்திலேயே ஒளித்து வைத்து விடுவது. அவன் அங்கே மட்டும் தேட மாட்டான் சுவாரசியமான திட்டம்தான்.”

“ஆனால் ஆபத்தான திட்டம்." என்றார் பெரிய மைனர். அறையின் கூரையை நோக்கினாற் போல், ஒருவரோடொருவர் நேராகப் பேசிக் கொள்ளாமல், வேறு வேறு பக்கம் பார்த்துப் பேசுவது என்ன வேடிக்கை! அந்தப் பரபரப்பான சூழ்நிலையில் கூட ரேணுகாவுக்குச் சிரிப்பு வந்தது.

குழந்தைப்பாண்டியன் சொன்னார்: "பட்டாமணியம் என் திட்டத்துக்குச் சம்மதித்தார். சுகுமாரியிடம் பெட்டியைக் கொடுத்துப் பெட்டகத்தில் வைக்கச் சொன்னேன். அவளுக்குக்கூடத் தெரியாது - அந்தப் பெட்டியில் வைர முருகன் இல்லையென்று. பட்டாமணியம் தன் மடியில், வேட்டியில், வைர முருகனைக் கட்டியெடுத்துக் கொண்டு பாபநாசத்துக்கே திரும்பிப் போய்விட்டார்! அபார நெஞ்சுரம்தான் மனுஷனுக்கு!”

பெரிய மைனர் பேசினார்: “ஊருக்கு வந்து எங்களிடம் சொன்னார் விஷயத்தை. வைர முருகனை அவருடைய வீட்டிலேயே வைத்துக் கொள்ளப் போவதாகச் சொன்னார். எங்களுக்கு இஷ்டமேயில்லை. வைர முருகனை அபகரிக்க அவ்வளவு சதிகள் நடக்கும் போது, அவைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வது என்ன நியாயம்? நீங்கள் குடும்ப நண்பர். வைர முருகனிடம் எவ்வித சம்பந்தமுமில்லாதவர். உங்களை ஆபத்துக்களில் சிக்க வைக்க எங்களுக்கென்ன உரிமை இருக்கிறது? இதை எண்ணித்தான் சஞ்சலப் பட்டோம். அதேபோல் நேர்ந்து விட்டது, பாருங்கள். உங்கள் மூத்த பெண் சுகுமாரியிடம் வைர முருகன் இருப்பதாக நினைத்துத் தானே கொலை செய்திருக்கிறார்கள்?”

“ஆமாம், ஆமா.” என்றான் நஞ்சுண்டன். அவன் முகத்தில் ஓர் எரிச்சலைக் கண்டாள் ரேணுகா. இல்லாத பொருளுக்காகவா இந்த வீட்டில் இத்தனை பாடு பட்டோம். என்று அவன் நினைத்தானோ என்னவோ? “இப்போது நீங்கள் என்ன திட்டத்துடன் வந்திருக்கிறீர்கள்?”

பெரிய மைனர், கீழே வைத்திருந்த பெட்டியைக் கையில் எடுத்தார். மடியில் வைத்துக் கொண்டார். "ஒரு முறை வைர முருகன் கிடைக்காததால் கொலையாளி ஓய்ந்துவிட மாட்டான். இங்கே இருக்கிறது என்று தப்புக் கணக்கைத் திரும்பக் திரும்பப் போடுவான். திரும்பத் திரும்ப ஆபத்துக்கள் ஏற்படுத்துவான்.”

“ஆகவே?”

"ஆகவே, அவன் எவனாயிருந்தாலும் அவன் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பிக் கொள்வதென்று முடிவு செய்திருக்கிறோம். முன்பு, வைர, முருகனை உங்களிடம் கொடுத்த மாதிரி நடித்தோம். இப்போது திரும்பி வாங்கிக் கொண்டு போகிற மாதிரி நடிக்கப் போகிறோம்.”

அறையிலிருந்தவர்களில் யாரும் வாய் திறக்கவில்லை.

பாபநாசம் பெரிய மைனர் தனது சிறிய ஸூட்கேஸைத் திறந்தார். அறையே ஒளி வெள்ளத்தில் மூழ்கியது. வைர முருகனின் ஜாஜ்வல்யம், பார்ப்போரின் கண்களைக் குருடாக்கின.

“எவனோ ஒருவன், எங்கோ இருந்து கொண்டு, நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். வரும்போது இதை வெகு ரகசியமாகப் பட்டாமணியத்திடம் வாங்கிக் கொண்டு வந்தோம். இதோ இந்த நிமிடம் உங்களிடம் ஒப்படைக்கிறோம். திரும்பிப்போகும்போது, 'வைர முருகனைப் பத்திரமாய் எடுத்துப் போவேன். கவலைப் படாதீர்கள்!' என்று இரைந்து சொல்லிவிட்டுத்தான் டாக்ஸியில் ஏறப் போகிறேன். அதற்கப்புறம் ஆபத்து இந்த வீட்டை விட்டு விலகிவிடும். எங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்றார் பெரிய மைனர்.

எதையும் நம்ப முடியவில்லை ரேணுகாவினால், வைர முருகனிடமிருந்து நகர்ந்து நஞ்சுண்டன் மீது தாவியது அவள் பார்வை. அவனுடைய தீ விழிகளில் மின்னும் பேராசையைக் கண்டாள். மெய் நடுங்கினாள்.

நிசப்தத்தைக் கலைத்தார் குழந்தைப்பாண்டியன். “என்னைப் காப்பாற்றுவதற்காக நீங்கள் ஆபத்தில் சிக்க வேண்டும் என்பதில்லை. அதற்கு நாள் ஒப்புக் கொள்வதும் நியாயமில்லை. வேறொன்று கேட்கிறேன்.”

"கேளுங்கள்” என்றார் பெரிய மைனர்.

“இந்த வைர முருகனை உங்கள் இருவரில் யார் வைத்துக் கொள்வது என்பதைப் பற்றித்தானே தகராறு?”

“ஆமாம்.”

“இப்போது மட்டும் அது தீர்ந்துவிட்டதா? இல்லை, அதற்காக, என்னிடமே விட்டு வைக்க முடியும்?”

சின்ன மைனர், காலால் தரையில் மெல்லத் தாளமிட்டபடி மெளனமாயிருந்தார். பெரிய மைனர், “அந்தப் பிரச்னை... வந்து...” என்று முனகினார்.

“நான் சொல்வதைக் கேளுங்கள்" என்றார் குழந்தைப்பாண்டியன். “உங்கள் இரண்டு பேருக்கும் வேண்டிய இன்னொரு நபர் உண்டு. நீங்கள் அவரை மறந்து விட்டீர்கள். அவரிடம் வைர முருகனைக் கொடுத்து விடுங்கள். உரிமையுள்ளவர்தான் அவரும்.”

"யார் அவர்? யாரைச் சொல்கிறீர்கள்?" இரண்டு மைனர்களும் பரபரத்தார்கள்.

"இன்றைக்கு என்ன கிழமை? வெள்ளிதானே? பொறுங்கள், சற்று நேரத்தில் வருவார்” என்றார் குழந்தைப்பாண்டியன்.

*****

4

னைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். 'இன்றைக்கு அவர் வருவது வழக்கம் - சற்று நேரத்தில் வருவார்' என்று குழந்தைப்பாண்டியன் யாரைக் குறிப்பிடுகிறார்?

பாபநாசத்திலிருந்து வந்திருந்த மைனர் சகோதரர்களுக்குப் புரியவில்லை. சின்ன மைனர், வெற்றிலைச் செல்லத்தைத் திறந்தார். தூள் பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அதன் நறுமணம் அறையை நிறைத்தது. மென்று கொண்டே வினவினார்: "எங்களுக்கு வேண்டியவர்கள்... உரிமையுள்ளவர்கள்? யார் அப்படி?”

முறுவலித்தார் குழந்தைப்பாண்டியன். “பொறுங்கள் என்று சொன்னேனே பொழுது போவது கஷ்டமாயிருந்தால் ஒரு வழி இருக்கிறது.”

“என்ன?” என்று பெரிய மைனர் கேட்டார்.

“கதை சொல்லலாம்.” குழந்தைப்பாண்டியன் புன்னகையுடன் சொன்னார். அவருடைய பேச்சும் போக்கும் நஞ்சுண்டனுக்குப் புதிராயிருந்தன. ஒரு மகளைப் பறி கொடுத்தவர், இன்னொருத்தியை பறி கொடுக்காதிருக்கப் போராடுபவர் இவ்வளவு அமைதியாய்ப் பேச எவ்வாறு இவரால் முடிகிறது? வைர முருகனைக் களவாடித் தந்தால் தான், இளைய மகளை மீட்க முடியும். அதற்கு வழி செய்வதற்காகவே இத்தனையும் பேசுகிறார் என்று மட்டும் ஊகித்துக் கொண்டான்.

குழந்தைப்பாண்டியன், "கதை என்றால் கட்டுக் கதை அல்ல. நிஜகதையைப் பேசலாம் என்கிறேன். மைனர் சார், இந்த வைர முருகனுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி நீங்கள் சொல்லவேயில்லையே?” என்றார்.

சின்ன மைனர், "நூறு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்டதாம் இது. அதைத் தவிர வேறு தெரியாது" என்று பதிலளித்தார்.

பெரிய மைனர் அவரை ஒருமுறை ஏளனமாகப் பார்த்தார். 'உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்' என்பது போல. பிறகு குழந்தைப்பாண்டியனிடம் கூறினார்: “என் தாத்தா அதைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். எங்கள் மூதாதையர்களின் ஒருவர் பினாங்கில் இருந்த போது வைர முருகனை செய்தாராம். அவருடைய வியாபாரக் கூட்டாளியான ஒரு சீனாக்காரருக்கும் அதிலே பங்கிருந்ததாம்.”

நஞ்சண்டனும் குழந்தைப்பாண்டியனும் மின் வெட்டுப் போல் பார்வையைப் பரிமாறிக் கொண்டார்கள். அந்த நெருக்கத்தைக் காணும் போதெல்லாம் ரேணுகாவுக்குத் திகீரென்றது.

பெரிய மைனர் சொல்லலானார்: “அந்தச் சீனாக்காரனுக்குக் குழந்தை இல்லாதிருந்ததாம், அவர்கள் ஊர் வழக்கப்படி மந்திர தந்திரம், வைத்தியம் எல்லாம் செய்து கொண்டு பார்த்தான். பலனில்லை. அவனுடைய கூட்டாளியான எங்கள் கொள்ளுதாத்தா, 'முருகனுக்காக ஒரு சின்னக்கோவில் கட்டு' என்று யோசனை கூறினாராம். அவனும் கட்டினானாம். குழந்தையும் பிறந்ததாம்.”

“அந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகமா இது?” என்று குழந்தைப்பாண்டியன் குறுக்கிட்டார்.

"இல்லை. இது பிற்பாடு அவர்களுடைய கடையில் வைப்பதற்காகச் செய்ததாம். 'அன்பும் அருளும் அழகும் நிறைந்த தெய்வம் எங்கள் முருகன்' என்று சொல்வாராம் எங்கள் கொள்பாட்டனார். அந்தச் சீனன், 'இருக்கலாம். ஆனால், கீற்றமும் கோரமும் பயங்கரமுமாக இருக்கும் கடவுளிடம் தான் மக்கள் பயப்படுவார்கள்,' என்பானாம். ஆகவே, முருகனின் ஒரே வடிவத்தை இரண்டு விதமாகவும் இருக்கும்படி வைரத்தில் செய்தார்களாம். அந்த நாளில் இருவருமே பெரும் பணக்காரர்களாக இருந்ததால், மிக விலையுயர்ந்த வைரத்தில் செய்தார்கள். இதன் மதிப்பு எவ்வளவென்று கணக்கிடுவதை வெகு காலத்துக்கு முன்பே நிறுத்திவிட்டோம்.”

"இப்படிக் காட்டுங்கள் மறுபடி” என்றார் குழந்தைப் பாண்டியன்.

பெரிய மைனர், தன் சூட்கேஸிலிருந்து மீண்டும் வெளியே எடுத்தார் வைர முருகனை. குழந்தைப் பாண்டியனின் கண்ணெதிரே காட்டினார். இப்படித் திருப்புங்கள் - அப்படிச் சாயுங்கள் - இவ்வாறெல்லாம் குழந்தைப்பாண்டியனின் கோரிக்கைக்குத் தக்கபடி காட்டினார்.

"முருகனின் வடிவத்தில் தவறாமல் இருக்கிற அன்பும் அழகும்தான் இதிலேயும் தெரிகின்றன” என்றார் குழந்தைப்பாண்டியன்.

வைர முருகனை திரும்பப் பத்திரப்படுத்திக் கொண்டார் பெரிய மைனர். "எங்களுக்குத் தெரிந்தவரை இந்த விக்கிரகத்தில் எவ்விதக் கெட்ட சக்தியும் இருப்பதாக இதுவரை தெரிந்ததில்லை. ஆனால் அப்படி இருந்ததாயும், சீனாவில் பெரிய பெரிய புள்ளிகளுக்குக்கூட இதைக் கொண்டு கெடுதி ஏற்படுத்தியது உண்டென்றும் சொல்வார்கள். என்ன விதமான கெடுதி என்று தெரியாது. ஐம்பது அறுபது வருடங்களாக எங்கள் பாபநாசம் பங்களாவில் பூஜையறையில்தான் வைத்து வந்திருக்கிறோம். கெடுதலாக எதுவும் நேரிட்டதில்லை.”

“இத்தனை நாளில் யாரும் இதை உங்கள் வீட்டிலிருந்து அபகரிக்கப் பார்த்ததில்லையா?” என்று நஞ்சுண்டன் கேட்டான்.

“இப்போது பட்டாமணியம் வந்து சொன்னதுதான் முதல் தடவை” என்றார் சின்ன மைனர். ஆனால் பெரிய மைனர் முன்போலவே உதட்டைச் சுழித்தார். “நான் ரொம்பச் சின்னப் பையனாக இருந்த போது, ஒரு திருட்டு நடைபெற்றது. மலாய்க்காரனோ சீனாக்காரனோ ஒருவன் எங்கள் வீட்டுக்குள் புகுந்து திருடப் பார்த்தானாம். அடித்துத் துரத்திவிட்டார்களாம். இந்த வைர முருகனிடம் ஒரு பயங்கர சக்தி இருப்பதாகச் சீனர்கள் நினைக்கிறார்கள். ஆகவே அதைத் தங்களிடம் வைத்திருக்க விரும்புகிறார்களோ என்னவோ.”

“எனக்கு ஒரு சக்தியும் தெரிய” பேச ஆரம்பித்த சின்ன மைனர் சட்டென நிறுத்தினார்.

வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதே காரணம்.

“உரியவர் என்று சொன்னேனே," வந்து விட்டார்கள்.” குழந்தைப்பாண்டியன் அறிவித்தார். “ரேணுகா, நீ போய்ப் பார்.”

வெளியே எட்டிப் பார்த்தாள் ரேணுகா. வியப்போடு குழப்பமும் சேர்ந்தது. இன்றைக்கு எட்டாம் தேதி. வழக்கம் தவறாமல்... ஆனால்... ஆனால்...

“யார் வந்திருக்கிறார்கள். ரேணுகா?” நஞ்சுண்டன் கேட்டு வாய் மூடவில்லை.

"என்ன இது கூட்டம் இங்கே? பேஷண்ட்டைக் கவனித்துக் கொள்கிற லட்சணமா இது? நர்ஸ்? நர்ஸ் எங்கே போனாள்?" - கேள்வி மேல கேள்வியாக வீசிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

டாக்டர் நாமகிரி. “உங்களுக்குத்தான் எல்லோருமே காத்திருக்கிறோம், டாக்டர்” என்றார் குழந்தைப் பாண்டியன். “அடையாளம் தெரிகிறதா உங்கள் தம்பிகளை?”

பெரிய மைனர், சின்ன மைனர் இருவரிடமிருந்தும் ஒரே சமயத்தில் வியப்பொலி ஏற்பட்டது. "அக்காவா நாமகிரி”

“அக்கா!” ஒரே சமயத்தில் மைனர்கள் இருவரும் கூவினார்கள்.

வினாடிக்கூட இருக்காது. அதற்கும் குறைவான காலம்தான். டாக்டர் நாமகிரியின் கண்டிப்பான முகத்தில் ஒரு கேள்விக் குறி முளைத்தது. உடனே மறைந்தது.

"என்ன இங்கே சந்தைக் கூட்டம்? பேஷண்ட்டின் அறை என்று நினைத்தீர்களா, மார்க்கெட் என்று, எண்ணினீர்களா? நர்ஸ்! அம்மணி எங்கே போனாள்?” என்ற கெடுபிடியான வினாக்கள் வெடித்தன.

பாபனாசம் மைனர்கள் திறந்த வாய் மூடவில்லை. நஞ்சுண்டனும் ஒரு வகை சந்தேகத்துடன் குழந்தைப் பாண்டியனைக் கவனித்தான். தனக்குத் தெரிய ரகசியமொன்று அவரிடம் இருக்கிறதே! இதுபோல் இன்னும் பல வைத்திருப்பாரோ?

அவனுக்கு யோசிக்க அவகாசமில்லை. அதற்குள், “இதோ டாக்டர்!” என்ற நர்ஸின் குரல் கேட்டது. “தயவு செய்து எல்லோரும் வெளியே போங்கள்” என்றார் டாக்டர் நாமகிரி.

ஒரு நிமிடம் தயங்கிவிட்டு வெளியேறினார்கள் பாபனாசம் மைனர்கள். நஞ்சுண்டனும் ஹாலுக்கு வந்தான். உள்ளுக்குள் ஆத்திரமாய்ப் பொங்கிக் கொண்டிருந்தது அவனுக்கு.

பாபனாசம் மைனர்கள் திடீரெனக் குதித்த போது பகீரென்றிருந்தது முதலில். வைர முருகனை வாங்கிப் போக வந்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டான். ஆனால் வைர முருகன் இங்கேயேதான் இருக்கப் போகிறது என்று தெரிந்ததும் மறுபடி மகிழ்ச்சி ஏற்பட்டது. அதை எங்கிருந்தோ வந்த இந்த டாக்டர் கிழவியிடம் தூக்கிக் கொடுக்கப் போவதாகக் குழந்தைப்பாண்டியன் சொல்கிறாரே? மறுபடி கலக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து கோபமும் உதித்தது.

மைனர்கள் வெவ்வேறு திசையில் திரும்பினாற் போல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். தோட்டப் பக்கத்துச் சாளரத்தைத் திறந்துகொண்டு நின்றிருந்தான் நஞ்சுண்டன். சகோதரர்களின் பேச்சுக் குரல் அவன் காதில் விழுந்தது. ஆச்சரியத்துடன். திரும்பிப் பார்த்தான். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. தங்களுக்குள்ளேயே பேசுவது போலிருந்தது.

"முப்பது வருஷம் இருக்கும் என்றார் பெரிய மைனர்.”

"பட்டணத்தில் டாக்டராக இருப்பதாய் யாரோ என்னிடம் கூடச் சொன்னார்கள்" என்றார் சின்னவர்.

நஞ்சுண்டன், "மன்னிக்க வேண்டும்” என்றான் இருவருக்கும் பொதுவாக. "நான் குழந்தைப் பாண்டியனின் குடும்ப நண்பன். அவரே சொன்னாரே? அதனால், தெரிந்து கொள்ளலாம் என்று கேட்கிறேன். உங்களுக்குத் தப்பாகத் தோன்றினால் சொல்ல வேண்டாம்.”

“தப்பு எதுவுமில்லை. டாக்ரைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்?” என்றார் பெரிய மைனர்.

“ஆமாம். இனிமையான சந்திப்பாக இருக்க வேண்டியது, அதிர்ச்சி ஏற்படுத்திய மாதிரி தோன்றியதே? நீங்கள் பார்த்துக் கொண்டதே கிடையாதா உடன் பிறப்பாக இருந்த போதிலும்?” என்று நஞ்சுண்டன் கேட்டான்.

“உடன்பிறப்பு என்றா சொன்னீர்கள்? ஆமாம். ஆனால் எங்கள் தந்தையின் முதல் தாரத்துப் பெண்” என்றார் பெரிய மைனர் பெருமூச்சுடன். “எங்கள் அப்பா செய்த பல கொடுமைகளில் இதுவும் ஒன்று.”

சாத்தியிருந்த குழந்தைப்பாண்டியனின் அறைக் கதவு திறந்தது. நர்ஸ் அம்மணி எட்டிப் பார்த்தாள். "டாக்டரின் வேலை முடிந்துவிட்டது, அவருக்காகக் காத்திருப்பவர்களை வரச் சொல்கிறார்” என்றாள்.

நஞ்சுண்டன் நுழைந்தபோது, டாக்டர் நாமகிரி, வாஷ் பேசினில் கை கழுவிக் கொண்டிருந்தாள். குழந்தைப் பாண்டியன் அவளிடம் ஏதோ வாதாடிக் கொண்டிருந்தார்போலும். "நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று அவர் கூறுகூது கேட்டது. மற்றவர்கள் உள்ளே நுழைந்ததும் அந்தப் பேச்சு நின்றுவிட்டது. "நீங்கள் கொடுங்கள்” என்றார், பெரிய மைனரிடம். “உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபமில்லையே, என் ஏற்பாட்டில்? என்ன சின்ன மைனர் சார்.”

“எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றார் சின்ன மைனர். “எங்கள் தந்தை செய்த கொடுமைக்கு நாங்கள் பரிகாரம் பண்ண வேண்டுமென்றுதான் நினைத்திருந்தோம். எப்படிச் செய்வது என்று தெரியாதிருந்தது.”

நஞ்சுண்டனுக்கு விளக்கினார் குழந்தைப் பாண்டியன். “இவர்களுடைய தந்தையின் முதல் மனைவியின் மகள் நம் டாக்டர். தஞ்சாவூர் பெரிய மிராசுகளுக்குப் பல நல்ல குணங்களும் இருக்கும். இரண்டொன்று வேறுவிதமாயும் இருக்குமில்லையா? அந்த மாதிரி அவர் ஒரு தினுசு. முதல் மனைவியையும் குழந்தையையும் தள்ளி வைத்துவிட்டு இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டுவிட்டார். டாக்டரின் அம்மா ரொம்ப ரோஷக்காரி. தைரியசாலி. மகளைத் தன்னந்தனியாகவே வளர்த்துப் படிக்க வைத்து இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டார்.”

"த்ஸு த்ஸு” நஞ்சுண்டன் தன் பாராட்டையும் வியப்பையும் வெளியிட்டான்.

மேற்கொண்டு விவரித்தார் குழந்தைப்பாண்டியன். “முன்னொரு நாள், பாபாநாசத்திலிருந்து வெள்ளரிப் பிஞ்சு வந்தது. வாங்கிக்கொள்ள மறுத்து விட்டார். அப்புறம்தான் பட்டாமணியத்திடமும் வேறு சிலரிடம் விசாரித்தேன். உண்மையைக் கண்டுபிடித்தேன். பெரிய மைனர் சின்ன மைனர் இரண்டு பேரும் தங்கள் அன்புக்கு அடையாளமாக வைர முருகனை டாக்டருக்குக் கொடுத்து விடட்டும். என்ன சரிதானே?”

கேள்வி தன்னைப் பார்த்துக் கேட்கப்படுவதை உணர்ந்தான் நஞ்சுண்டன். “நீதி வழங்குவதில் நீங்கள் ஸாலமன்தான். இதில் யாருக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?” என்றான்.

டாக்டர் நாமகிரி முணுமுணுத்தார். “யார் காலின் கீழும் நிற்கக் கூடாது என்கிற உறுதியோடு இத்தனை வருடமும் ஓட்டிவிட்டேன். அதற்காகவே கல்யாணம்கூடச் செய்து கொள்ளவில்லை. எனக்கெதற்குப் பிறந்த வீட்டுப் பொருள்?”

“அப்படிச் சொல்லாதே, அக்கா. உன் பங்குக்கு என்று ஏதாவது கொடுத்தால்தானே வாங்கக் கூடாது. இது எங்கள் அன்பளிப்பு” என்றார் சின்ன மைனர்.

“முருகன் விக்கிரகம், மறுப்பது பாவம்” என்று பயமுறுத்தினார் பெரிய மைனர். “கையில் வாங்கிப் பார். இதன் அழகில் மயங்கிவிடுவாய்.”

டாக்டர் நாமகிரி, வைர முருகனை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். அதன் காந்தி அவள் முகத்தில் வர்ணஜாலங்களை விசிறியடித்தது. அதனாலோ என்னவோ, முகத்திலும், பேச்சிலும், மனத்திலும் ஒரு நெகிழ்ச்சிகூட ஏற்பட்டது. “நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கிறீர்கள். என் வீட்டுக்கு வந்து விருந்துச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும்.” என்று தன் தம்பிகளை அழைத்தாள். "ரேணுகா, இதை என் பையில் வை.”

ரேணுகாவுக்கு இன்னும் பிரமை தணியவில்லை. டாக்டர் நாமகிரியைப் பற்றிய தகவல்கள் அடுக்கடுக்காய், அடுத்தடுத்து வந்ததில் அவள் ஊமையாகிவிட்டாள். எதிர்பாராத விதமாகப் பெயர் சொல்லி அழைக்கப் பட்டதும் தூக்கிவாரிப் போட்டது. “எஸ் டாக்டர்" என்று கூறி, வைர முருகனை வாங்கிக் கொண்டாள். டாக்டரின் மெடிகல் 'கிட்'டுக்குள் வைத்தாள். மருந்துப் புட்டிகளும் ஊசிக் குழாய்களும் டார்ச்சும் தெரிமாமீட்டரும் அடங்கிய பையில், பல லட்சம் பெறுமான வைர முருகனும் இடம் பெற்றான்.

"நீ முன்னே போ, அக்கா. வைர முருகன் உன்னிடம் இருப்பது யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார் சின்ன மைனர். அது தனிக் கதை. அப்புறமாய்ச் சொல்கிறேன்.

இரண்டு நிமிடங்களில் அறை காலியாகிவிட்டது. வேலைக்காரன் மூலம் இரண்டு டாக்ஸி வரவழைத்தாள் ரேணுகா. வந்தது போலவே தனித்தனியாய்ப் புறப்பட்டார்கள் சகோதரர்கள். பெரிய மைனர், "வைர முருகனைப் பற்றி இனி துளியும் கவலைப்படாதீர்கள். எங்கள் பொறுப்பு!” என்று இரைந்து கூறினார்.

டாக்ஸிகள் போய் விட்டன. ரேணுகா வீட்டுக்குள் திரும்பினாள். அப்பாவின் அறையருகில் நஞ்சுண்டனின் பேச்சு அவளை நிறுத்தியது.

"கைப்பிடியில் இருந்தது அந்த வைர முருகன். வெகு சுபலமாகப் போலியை வைத்து மாற்றியிருக்கலாம். டாக்டரிடம் தூக்கிக் கொடுத்து அனுப்பிவிட்டீர்களே!”

குழந்தைப்பாண்டியன் மெல்லச் சிரித்தார்: “உலகம் தெரியாதவன் என்றாயே என்ன? நீதான் அப்படி. வைர முருகன் என் பொறுப்பில் இருக்கும் வரையில் என்ன மோசடி நடந்தாலும் நான்தானே சிக்குவேன்? இப்போது அப்படியில்லையே? இந்த வீட்டுக்குள் செய்யவிருந்த வேலையை டாக்டர் நாமகிரியின் வீட்டில் செய். பின்னால் கண்டுபிடிக்கப்பட்டாலும் பழி அங்கேயே போய்விடும்.”

திக்கென்றது ரேணுகாவுக்கு. வைர முருகனைக் களவாடுவதா? அதுவும் டாக்டரின் வீட்டிலிருந்தா! 'ஐயோ! அப்பா! நீங்கள் ஏன் இத்தனை இழிந்தவரானீர்கள்? இப்படிப்பட்ட துரோகத்தையும் மோசடியையும் வாயால் சொல்லக் கூட உங்களுக்கு எப்படி மனம் வந்தது? எதற்காக நஞ்சுண்டனின் சதியில் நீங்கள் சேர்ந்து கொள்கிறீர்கள்? பணத்தாசையா?' ரேணுகாவின் நெஞ்சு அலறிக் கொண்டேயிருந்தது.

*****

5

“ரேடியோ பீகிங். நேயர்களுக்குப் புரட்சி வணக்கங்கள்.”

ரமணன் தான் கேட்டுக் கொண்டிருந்தான். கோணலான உச்சரிப்புடன் தமிழில் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தது ஓர் அன்னியக் குரல். "வாங் சூ, சியாங் லீ என்ற இரண்டு புரட்சித் தோழர்கள் இன்று கல்கத்தா நகரில் ஒரு ஜீப் விபத்தில் காலமானார்கள். விரைவில் தாய்நாடு திரும்பவிருந்த இவர்களுடைய அகால மரணம் குறித்துச் சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம். வியட்நாமில் அமெரிக்கக் கூலிக் கும்பல் இன்று...”

மாடிப்படியில் மொத்து மொத்தென்று ஓசை கேட்டது. அப்பாவுவுக்குத்தான் அப்படிப்பட்ட காலடியோசை ரமணன் ரேடியோவை நிறுத்தினான். “என்ன ஆயிற்று?”

"சே! என்ன ஊர் சாமி வான் போத்த எண்ட, எண்ட போத்தவான்!” என்று முணுமுணுத்தவாறே பிரவேசித்தான் அப்பாவு.

“இரண்டும் போய்விட்டால் நாமும் போய் விடுவோம். சரி, பாலசந்தரின் மாமா என்று டெலிபோன் ஆள் அன்று சொன்னானே, அவரைப் பார்த்தாயே? அவர்தானா?”

“அவரேதான்” என்றான் அப்பாவு. “அன்றைக்கு வந்த டெலிபோன்காரர் இருந்தார் அவர் மூலமாய் அந்தப் பெரியவரைப் பார்த்தேன். சூடான பாபங்கா ஒந்தி. அரைப் பைத்தியம்தான். பேச்சே கிடையாது.”

“நான் போய்ப் பார்க்கலாம் இல்லையா?”

“ஆமாம். நீங்க வரப் போறீங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கிறேன். எதுக்காகன்னு விசாரிச்சாங்க. நீங்க அவருக்குத் தெரிஞ்சவர்னு சொல்லியிருக்கிறேன்.”

“எனக்குத் தெரிந்த இரண்டாவது பைத்தியம்!” என்றான் ரமணன்.

“முதல் பைத்தியம் யார்?”

"நீ!” என்று ரமணன் பதிலளித்ததும் அப்பாவுவின் முகம் போன போக்கு!

தலையைச் சலவைக் கல்லிலா செய்திருப்பார்கள்? அப்படியொரு பளபளப்பான - வழுக்கை. குடுக்கை போன்ற முகம். நல்ல சிவப்பு ஆனால் சின்ன உருவம்.

டாக்டர் பாலசந்தருடைய மாமாவாம் இந்த மனிதர். அவனுக்கும் இவருக்கும் இம்மி ஒற்றுமையாவது இருக்க வேண்டுமே? ஊகூம், குழந்தை போல் விழித்துக் கொண்டு, நாற்காலியில் பிடித்து வைத்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ரமணனுக்கு.

அவருடைய விலாசத்தைக் கொடுத்திருந்த டெலிபோன் சிப்பந்தி, "இப்படியே நாள் கணக்காய் உட்கார்ந்திருப்பார்” என்று விளக்கினார். பிறகு அவரை நெருங்கினார்: “சார்! உங்களைப் பார்க்கிறதுக்காக இவர் வந்திருக்கிறார். உங்கள் மருமானோட சினேகிதராம்!” என்று அவர் காதினருகே கத்தினார்.

ஜனார்த்தனம் - டாக்டர் பாலசந்தரின் மாமா பெயர் அதுதான் - மலங்க மலங்க விழித்தார். ரமணனையும் டெலிபோன்காரரையும் மாறி மாறிப் பார்த்தார்.

பின்கட்டுக் குடித்தனத்தைச் சேர்ந்த ஒரு கிழவி காப்பி போட்டு எடுத்து வந்தாள். "முன்னெல்லாம் தானே சமையல் பண்ணிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மருமான் ஜெயில்லே இருக்கிறான்னு தகவல் வந்த அன்னைக்கு அடுப்பிலே தண்ணி ஊத்திட்டு, இப்படியே ஆகி விட்டார்.” காப்பியை ஆற்றி ஜனார்த்தனத்திடம் நீட்டினாள் கிழவி. “தாத்தா! காப்பி சாப்பிடுங்க,” என்று இரைந்தாள்.

ஜனார்த்தனம் அசட்டுத்தனமாகச் சிரித்தார். இளித்த படியே காப்பியைப் பெற்றுக் கொண்டார். சிறிது சிறிதாக உறிஞ்சிக் குடிக்கலானார்.

அவருடைய கண்களில் தெளிவு ஓரளவு மிஞ்சியிருப்பதைக் கண்டான் ரமணன். நம்பிக்கை பிறந்தது. "பாலசந்தர் இவரை இப்படித் தனியே விட்டிருக்கக் கூடாது” என்றான்.

“நல்லாச் சொன்னீங்க! அவரு தெனம் வந்து கூப்பிட்டுக் கிட்டேயிருந்தாரு. இவருல்ல போகமாட்டேன்னு பிடிவாதமா இருந்திட்டார்?" என்றார் டெலி போன்காரர்.

“ஆனால் மருமானைப் பற்றி ரொம்பப் பெருமை. 'அவனை வளர்த்து ஆளாக்கிவிட்டோம்; அவன் எங்கேயாவது நன்றாய் இருந்தால் சரி. செய்த உபகாரத்துக்காக அவனிடம் போய் ஒண்டக் கூடாது' என்று எண்ணித்தான் தனியே இருந்தார்.”

ரமணன் கேட்டான்: “இவர் இப்படி இருக்கிறார் என்று டாக்டர் பாலசந்தரிடம் யாராவது போய்ச் சொன்னீர்களா?”

"அவர் இங்கே வருவார், போவார். பார்த்திருக்கிறோம். மற்றப்படி எங்களுக்கு அவரிடம் பழக்கமே கிடையாதே?” என்றார் டெலிபோன் சிப்பந்தி. "அத்தோடு பயம் வேறே!”

"என்ன பயம்?"

“ஆமாம் சார். அவரைப் பற்றிக் கேள்விபட்டு இவர் இப்படி ஆகிவிட்டார். இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரும் இப்படி ஆகிவிட்டால்?”

ரமணன் புன்னகை செய்தான். "டாக்டர் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு அவ்வளவு பலவீனமான உள்ளம் இருக்காது." ஜனார்த்தனத்தையே மீண்டும் உற்றுப் பார்த்தான். என்ன பரிதாபம்! ஒரு மனிதர் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரைப்பற்றி இத்தனை பேர் உரக்கப் பேசுகிறார்கள்! அவர் சம்பந்தமில்லாதது போல் விலகி நிற்கிறார்.

"சரி. இவரை என் பொறுப்பில் விட்டுவிடுங்கள். சரியான மனநோய் நிபுணரிடம்தான் காட்ட வேண்டும்...” ரமணன் மோவாயைத் தடவிக் கொண்டான்.

"டாக்டர் நாமகிரிக்கு இப்போது நல்ல பெயர் சார்.” வாசற்புறத்திலிருந்து ஒரு புதுக் குரல் வந்தது. இளைஞனொருவன் நின்றிருந்தான், தோளில் ஒரு காமிராவுடன்.

“என் பேரன்" என்று விளக்கினாள் கிழவி. "போட்டோ பைத்தியம். இவருக்கும் இவனுக்கும் ரொம்ப சினேகம்.”

அந்த இளைஞன் உள்ளே வந்தான். "தாத்தா, செளக்கியமாய் இருக்கிறீர்களா?” என்று குரல் கொடுத்தான். பதில் எதையும் அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்பது, அவன் கேட்ட தோரணையிலேயே விளங்கியது.

"என் போட்டோக்களையெல்லாம் பாராட்டிக் கொண்டிருந்த ஒரு ரசிகர் இவர்தான், சார்.” இளைஞனிடமிருந்து ஒரு சோகச் சிரிப்பு வெளிப்பட்டது. "டாக்டர் பாலசந்தர் அரெஸ்டாவதற்கு முதல் நாள்கூட நன்றாய்ப் பேசிக் கொண்டிருந்தார் இவர். நர்ஸிங் ஹோமைச் சில ஸ்னாப்கள் எடுத்திருந்தேன். காட்டினேன். சந்தோஷப்பட்டார்.” தன் காற்சட்டை, ஸ்லாக் முதலியவற்றைத் துழாவினான் அவன் சிறிதும் பெரிதுமான பல புகைப்படங்கள் வெளியே விழுந்தன. நெகடிவ்கள் பிரிண்ட்டுகள். புகைப்படக் கடை பில்கள் பிலிம் சுருள் வைத்த காலிப் பெட்டிகள் இப்படிப் பல.

ஏழெட்டுப் படங்களை பொறுக்கி ரமணனிடம் காட்டினான் டாக்டர் பாலசந்தரின் நர்ஸிங் ஹோம் பல தோற்றங்களில் காட்சியளித்தன. நர்ஸ்கள், நோயாளிகள், அவர்களைப் பார்க்க வருவோர் போவோர் அனைவரும் ஆங்காங்கே தென்பட்டார்கள்.

ரமணன் அசிரத்யைாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். டாக்டர் நாமகிரியின் பக்கமாகத் திருப்பிவிடப் பட்டிருந்த சிந்தனை. அந்த வழியிலேயே சென்று கொண்டிருந்தது. நியூராலஜியில் அவளை விட்டால் ஆளில்லை. நர்ஸ் மேரிகூட அவளிடம்தான் இருப்பதாக முன்னொரு நாள் சொன்னாள். அவளையும் சிபாரிசுக்கு வைத்துக்கொண்டு, இந்த ஜனார்த்தனைத்தைக் காட்ட வேண்டும். எப்படியும் இவரைப் புத்தி சுவாதீனமுள்ளராகச் செய்ய வேண்டியது அவசியம். பாலசந்தரைப் பற்றிய விவரங்களை இவர் கொடுத்தால்தான் உண்டு...

பார்த்த புகைப்படங்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென்று திடுக்கிட்டான்.

நர்ஸிங் ஹோம் வெராந்தாவைக் காட்டுகின்ற ஒரு படத்தில் -

ரமணன் சுகுமாரியைப் பார்த்ததில்லைதான். ஆனால் அவள் புகைப்படத்தைக் கண்டதுண்டு. ரேணுகாவின் ஜாடையும் தெரிந்தது. ஆகவே, வெராந்தாவில் ஓரமாக நின்றிருப்பவள் சுகுமாரிதான் என்பதில் அவனுக்குச் சந்தேகம் விழவில்லை.

சுகுமாரி தனியே இருந்திருந்தால் கூட ரமணனுக்குக் குறுகுறுப்பு ஏற்பட்டிருக்காது.

அவள் பேசிக் கொண்டிருந்தாள் - ஒரு சீனனுடன். "நன்றாய் எடுத்திருக்கிறேன். இல்லையா சார்?” என்றான் அந்த வாலிபன்.

"அருமை” என்று பாராட்டினான் ரமணன். "இந்தப் படங்கள் என்னிடமே இருக்கட்டும். பாலசந்தரைப் பார்க்கும்போது காட்டுகிறேன்.”

போட்டோ வாலிபனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. "வைத்துக் கொள்ளுங்கள், சார்” என்றான். “டாக்டர் நாமகிரியை என்றைக்குச் சந்திக்கலாம் என்று எங்கேஜ்மண்ட் தீர்மானித்துக் கொள்கிறேன். முதலில் பிறகு வந்து இவரை அழைத்துச் செல்கிறேன்.”

ஸூவான் கடுகடுவென்று கோபத்தோடு வரவேற்றாள். அவள் மாமனோ டூத் பிக்கினால் பல்லைக் குத்திக் கொண்டே, “நீயும் உன் சுற்றுவளைசல் திட்டமும்!” என்று சிடுசிடுத்தான். “அந்த நஞ்சுண்டன் எல்லோரும் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு ஓடி விடப் போகிறான். என்னவோ சாட்சி அது இது என்று கூப்பிட்டானேயென்று குழந்தைப் பாண்டியன் பங்களாவுக்குப் போனேன். அவன் சொல்லித் தந்திருந்த படியெல்லாம் தலையாட்டினேன். பிறகு என்னை அனுப்பி விட்டான். வைர முருகனை எடுத்துக்கொண்டு வரப் போகிறான், வரப்போகிறானென்று காத்துக் கொண்டேயிருக்கிறோம்...”

"வருவான், வருவான்.” புன்னகை செய்தான் ரமணன்.

"இப்போ நீ எதற்கு வந்திருக்கிறாய்? நாங்கள் இருக்கிறோமா, செத்துவிட்டோமா என்று பார்க்கவா?”

“சே, சே! அந்த மாதிரி சந்தேகமெல்லாம் எனக்குக் கிடையாது. நான்தான் தினம் ரேடியோ பீகிங் கேட்கிறவனாயிற்றே? உனக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் செய்தியில் சொல்ல மாட்டார்களா? இன்றுகூட, கல்கத்தாவில் இரண்டு பேர் இறந்து போனதைச் சொன்னார்களே, வாங் சூ, சியாங் லீ.”

சாட்டையடியா வீசினான்? இல்லையே? எதனால் அவர்கள் கண்களில் அவ்வளவு பீதி?

“வாங் சூ, சியாங் லீ?”

"ஆமாம். கல்கத்தாவில் ஒரு ஜீப் மோதிவிட்டதாம். ஏன், அவர்கள் -”

யார் என்று கேட்கவிருந்த ரமணனுக்குத் திடீரென்று நினைவு வந்தது.

வாங் சூவும் சியாங் லீயும். வைர முருகனைத் தேடிப் புறப்பட்டவர்கள் அல்லவா? ஓட்டல் நான்கிங்கின் ரெஜிஸ்டரில் முறையே 128, 172வது எண்ணைப் பெற்றவர்கள் அல்லவா? அந்தப் பெயர்களின் கீழே சிவப்புப் பென்ஸிலால் அடிக்கோடு கூட இடப் பட்டிருந்தே!

"பீகிங்கின் கை நீளமானது. மிக நீளமானது.” அச்சத்துடன் கிழவன் முணுமுணுத்தான்.

ஸூவான் கண்களைப் படபடவென்று கொட்டினாள். “கல்கத்தாவில் நடந்தது விபத்தல்ல. விபத்து மாதிரி தோற்றமளிக்கும் கொலை!”

“கொலை?"

"ஆமாம். பீகிங் அரசாங்கத்தின் ஆட்கள் செய்திருக்கிறார்கள்.”

“எதற்கு?”

“எதற்கா? தேசபக்தியைத் துறந்ததற்கு! கடமையை மறந்ததற்கு!” ஸூவான் வெறுப்புடன் சிரித்தாள். “வைர முருகனைக் கண்டுபிடிக்க அமர்த்தப்பட்டவர்கள் இந்த வாங் சூவும், சியாங் லீயும் திடீரென்று அவர்கள் காணாமற் போனபோதே எங்களுக்குச் சந்தேகம் தான். அதற்காகத் தான் பெயர்களின் கீழே கோடிட்டு வைத்திருந்தோம். பீகிங்கின் கண்கள் எங்களுடையதைக் காட்டிலும் கூர்மையானவை. இருவரும் துரோகிகளாக மாறி வேறெங்கோ ஓட முயல்கிறார்களென்று கண்டு பிடித்திருக்கிறது. தண்டனையும், தந்திருக்கிறது.”

ரமணனுக்கு ஒரே ஆச்சரியம். "எதை வைத்துச் சொல்கிறாய்?”

“இரண்டு சாதாரணச் சீனப் பிரஜை இறந்ததை வானொலியில் ஒலி பரப்பினால் வேறென்ன அர்த்தம்?” ஸூவானின் விழிகளில் மருட்சி மின்னிற்று. “மற்றவர்களுக்கு அது எச்சரிக்கை.”

கிழவனின் குரல் நடுங்கியது: “வைர முருகனைக் கைப்பற்ற இனியும் தாமதம் பண்ணினால், நமக்கும் ஜீப் சக்கரத்தில்தான் முடிவு. அதுதான் அர்த்தம்.”

“அவ்வளவுக்கு விட்டுவிட மாட்டேன். பயப்படாதீர்கள்.” ரமணன் பையிலிருந்து அந்தப் புகைப்படத்தை வெளியிலெடுத்தான். இதில் இருப்பவன் வாங் சூவா, சியாங் லீயா?”

ஸூவான் திகைப்புடன் அதை ஆராய்ந்தாள். கிழவனும் அவளுக்கும் பின்புறமாக நின்று குனிந்து நோக்கினான். இருவரும் ஒருவரையொருவர் மீண்டும் பார்த்துக் கொண்டார்கள்.

ஸூவான் சொன்னாள் உறுதியாக: “இவன் வாங் சூவும் அல்ல; சியாங் லீயுமல்ல.”

“என்னது!”

கிழவன் கூறினான் மேலும் உறுதியாக: “சொல்லப் போனால் இவன் அசல் சீனாக்காரனேயல்ல. சிங்கப்பூர் மலேயா முதலிய நாடுகளில் வசிக்கும் கலப்பு இனப்பேர்வழி.”

பிரமிப்பு ரமணனை மூச்சடைக்க வைத்தது. “படத்தில் இருப்பவள், சுகுமாரி. கொலை சொய்யப் பட்டவள். வைர முருகனைப் பற்றித் தெரிந்திருந்தவள். இந்தச் சீனாக்காரனை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தவள். உங்களுக்கு இந்தச் சீனைத் தெரியாது?”

“முதல் தடவையாகப் பார்க்கிறோம்” என்றாள் ஸூவான்.

ரமணனின் ஏமாற்றம் அவன் முகத்தில் முத்திரை அடித்தது. ஸூவான் இரண்டு சீனர்களை அனுப்பியிருந்தது; அவர்கள் பெயரைக் கோடிட்டு வைத்திருந்தது; அவர்களுடைய எண்களும் சுகுமாரியின் டைரியில் குறித்திருந்த எண்களும் ஒன்றாயிருந்தது - எல்லாம் தற்செயல்தானா! ஸூவானின் ஆட்களில் ஒருவன்தான் சுகுமாரியுடன் தொடர்பு கொண்டவன் என்று நம்பியிருந்தது. வீணா!

அப்படியானால் இந்த மூன்றாவது சீனன் எங்கிருந்து முளைத்தான் எதற்காகச் சுகுமாரியை அடிக்கடி பார்த்தான்?

விடை இல்லாத கேள்வி அல்ல. அல்ல விடை இல்லாத கேள்வி!

“எங்கே கிளம்பி விட்டாய்?” என்று ஸூவானும் அவள் மாமனும் வினவினார்கள்.

ரமணனின் காதில் அது விழவில்லை. யோசனையுடன் கையை ஆட்டினான். 'ஓட்டல் நான்கிங்'கிலிருந்து வெளிப்பட்டு மவுண்ட்ரோடில் இறங்கினான்.

ரமணனின் சிந்தனைகள் மவுண்ட்ரோடுக்கென்ன தெரியும்? அது தன்பாட்டுக்குக் கோலாகலமாயிருந்தது. எண்ணெய் பூசிக்கொண்டவன், குளத்தில் முழுக்க முழுகினாலும் தண்ணீர் அவனை ஒட்டாது. அதுபோல், அத்தனை பரபரப்பினூடே ரமணன் டைவிரித்த போதிலும், சிந்தனை அவனை மூடியிருந்தது. சூழ்நிலை அவனைச் சாரவில்லை.

ஸூவான் உண்மைதான் சொல்கிறாள் என்று தோன்றியது. எனினும் ஒரு கண் வைக்கவேண்டும். அந்த மூன்றாவது சீனன் ஓட்டல் நான்கிங்குக்கு வருகிறானா என்று கவனிக்க வேண்டும்...

தாவூது அவன்தான் சரியன ஆள்.

பிளாஸாவுக்குப் பக்கத்தில் உள்ள தாவூதின் வழக்கமான இடத்துக்குச் சென்றான். சிறுவனைக் காணோம்.

தாவூதின் வாடிக்கையான டீக்கடையில் கேட்டான்.

“உடம்பு சொகமில்லை சார் பையனுக்கு. சும்மா சும்மா வந்து படுத்துடெறான்" என்றான் டீக்கடைக்காரன். பிறகு பின்புறம் குரல் கொடுத்தான்: “டேய் தாவூது, ஒரு ஐயா உன்னைத் தேடிட்டு வந்திருக்கிறாருடா..."

டீக்கடைக்குப் பின்னால் ஒரு தகர ஷெட் இருந்தது. வாடகைச் சைக்கிள் கடை மாதிரியான தோற்றம். அங்கிருந்து வந்தான் தாவூது.

“அட! எங்க சாருல்லே?” அவன் குரலில் மகிழ்ச்சி இருந்தது. உடலில் உற்சாகம் இருந்தது. ஆனாலும்...

ஏதோவொரு மாற்றம் அவன் தேகத்தில் தெரிந்தது. நிறமா? சருமத்தின் தன்மையா?

“என்ன சார், இத்தினி தொலைவு என்னைத் தேடிட்டு வந்திட்டீங்க?”

ரமணன் அதிர்ச்சியுற்றான். தாவூதின் கேள்வியினால் அல்ல அப்படிக் கேட்கும்போது, அவன் செய்து கொண்ட சேட்டையினால், காதையும் முதுகையும் அவன் சொறிந்து கொள்ளும் வேகத்தினால் டீக்கடைக்காரன் குறுக்கிட்டான்: "பார்த்தீர்களா சார்? இப்படித்தான் நாள் பூரா சொறிஞ்சுக்கிணே இருக்கிறான். ஆஸ்பத்திரிக்குப் போய்க் காட்டிட்டு வாடான்னா மாட்டேங்கிறான்...” தாவூது சிரித்தான்: “அவரு கிடக்கிறார், சார். சும்மானாச்சியம் சொல்றார். நீங்க எதுக்கு வந்தீங்க? சொல்லுங்க, செய்யிறேன்.”

ரமணனால் பேச முடியவில்லை. துயரம் அவன் தொண்டையை அடைத்தது; கண்ணை உறுத்தியது. அவனுக்குச் சந்தேகமறப் புலப்பட்டது: ஸூவானின் கொடிய ஊசி தாவூதின் உடம்பில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

அவன் மெய் நடுங்கினான்.

*****

6

ண்ணில் ரத்தம் வந்தது ரமணனுக்கு. தாவூதின் கையைப் பிடித்து நிறுத்தினான். "அரிப்பு எடுத்தால் பொறுத்துக் கொள். சொறியாதே. கொலைகாரப் பேர்வழிகள் அந்தச் சீனர்கள். அவர்கள் செய்திருக்கும் தீங்குக்குத் துணை போகக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும். தெரிகிறதா?”

“ஓ, ரைட் சார்” என்று தாவூது சிரித்தான். ரமணன் தன் பாக்கெட் நோட்டை வெளியிலெடுத்தான். ஒரு விலாசத்தைத் தேடினான். காகிதத் துண்டில் இரண்டு வரி எழுதித் தந்தான். "எனக்குத் தெரிந்த டாக்டர் இவர். சரும நோய் நிபுணர். என்ன மருந்து கொடுத்தாலும் சாப்பிடு. எல்லாம் இனாமாகவே செய்வார்.”

திருப்பித் திருப்பிக் காகிதத்தைப் பார்த்தான் தாவூது. “ரொம்பத் தாங்ஸ் சார், என்று குழந்தைத் தனமாக இளித்தான்.”

“ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். ஓட்டல் நான்கிங்கும் நாம் போனதோ, சீனர்களிடம் அகப் பட்டதோ, உனக்கு அவர்கள் ஊசி போட்டதோ வெளியே மூச்சு விடக்கூடாது. என்ன?”

“உற்சாகமாக, பயமில்லாமல் உன் தொழிலைச் செய்து கொண்டிரு. கடவுள் இருக்கிறார். அவருடைய அஸிஸ்டெண்ட் நான் இருக்கிறேன், என்ன?”

“ஓ.கே, சார்!”

"இந்த நோயோ வேறெந்த நோயோ உன்னை விழுங்காது. விழுங்குவதற்கு இந்த ரமணன் விட மாட்டான். என்ன?”

“எஸ் ஸார்!”

“ராஸ்கல்!” என்று செல்லமாக அவன் முதுகில் தட்டி விட்டு ஐந்து ரூபாயை எடுத்துத் தந்தான். “டாக்டரிடம் போக வர வைத்துக் கொள்.”

"வேணாம் சார். காலில்லை?”

“சீ! பிடிடா!"

“ஐயா கொடுக்கிறாங்க, வாங்கிக்கிடா!" என்றான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டீக்கடைக்காரன். ரமணனின் மோட்டார் பைக் ரோஷத்துடன் பறந்தது. எப்படியும் இந்த அறியாச் சிறுவனைச் சீனப் பயங்கரத்திலிருந்து காப்பாற்றியாக வேண்டும். அதற்கு என்ன விலை கொடுக்க நேரிட்டாலும் சரி. வைர முருகனைக் கைப்பற்றி, ஸூவானிடம் சேர்ப்பித்துத் தாவூதின் நோயைத் தடுக்க வேண்டியதுதான் முதல் வேலை.

அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவைகளை ரமணன் திட்டமிட்டான். ஐட்டம் ஒன்று: குழந்தைப்பாண்டியனின் வீடு.

பொது டெலிபோன் கூண்டினுள் புகுந்தான் ரமணன். ஒரு வினாடி தயக்கம் காட்டினான். காசு போட்டால், கனெக்ஷன் கிடைக்கிறதோ இல்லையோ? அருகில் பல கடைகள் இருந்தன. இருபதுக்கு இருபத்தைந்து பைசாவாகத் தந்தால் போதும். டெலிபோன் பண்ண அனுமதிப்பார்கள். ஆனால் அவர்கள் காதுபடப் பேச முடியாதே! அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. தொடர்பு கிடைத்து விட்டது. நர்ஸ் அம்மணி, “குட் மார்னிங்” என்றாள் பிசிறில்லாத கணீர் குரலில்.

"பாபுலர் மெடிக்கல் ஷாப்பிலிருந்து பேசுகிறோம். பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை...” என்று ஆரம்பித்தான். “வணக்கம் ரமணன் சார்” என்றாள் அம்மணி உடனே. "உஷ்! அருகில் யாரும் இல்லை?”

“நஞ்சுண்டன் வெளியே போயிருக்கிறான். ரேணுகாவும் வீட்டில் இல்லை. மாடியிலிருந்து பேசுகிறேன்.”

"விசேடம் உண்டா?”

"ஏராளமாய் வண்டி வண்டியாய்.”

“சுருக்கமாய்ச் சொல்லு.”

"ஒற்றை வரிகூடச் சொல்ல முடியாத நிலையில் இருகிறேன்.”

“ஏன் யாராவது வந்துவிட்டார்களா அதற்குள்?”

"அதில்லை. வண்டி வண்டியாய் விசேடமான நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றிருக்கின்றன. ஆனால் நான் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை.”

“எதனால்? ஏன் கோட்டை விட்டாய்?” என்றான் ரமணன் கோபத்துடன். முக்கியமான கட்டத்தில் அம்மணி ஏமாந்துவிட்டதை அவன் மன்னிக்கத் தயாராயில்லை. “நஞ்சுண்டன் என்னை அருகிலேயே வரவிடவில்லை, சார்.” அம்மணியின் குரல் உண்மையான வருத்தத்தினால் கனமாக ஒலித்தது. “நான் உங்கள் கையாள் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் என்னை நம்புவது கூடாது என்று மட்டும் அறிந்து கொண்டிருக்கிறான். ஆகவே, என்னை எவ்வளவு தொலைவுக்கு முடியுமோ அவ்வளவு அனுப்பிவிட்டான்."

"அப்படி அனுப்பும்படி என்ன நடந்தது நேற்று?”

"பாபனாசம் மைனர்களாமே, இரண்டு பேரும் வந்திருந்தார்கள். டாக்டர் நாமகிரி வந்திருந்தார். ரேணுகாவும். இருந்தாள். நஞ்சுண்டனும் இருந்தான். எல்லோரும் கதவைச் சாத்திக் கொண்டு குழந்தைப் பாண்டியனின் அறையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிடுமூஞ்சி டாக்டரம்மாகூடக் குழந்தைப் பாண்டியனின் குடும்ப விஷயத்தில் கலந்து கொண்டது தான் எனக்கு ஆச்சரியமாயிருந்தது.”

“சரி கடைசியில்?”

“எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள். பாபனாசம் மைனர்கள் கார் ஏறும்போது, 'வைர முருகன் எங்களிடம் பத்திரமாய் இருக்கும்! கவலைப்படாதீர்கள்' என்று இரைந்து சொல்லிவிட்டுப் போனார்கள்.”

"எப்போது அவ்வளவு இரைந்து வெளிப்படையாய்ச் சொல்லிவிட்டுப் போனார்களோ, அப்போது அவர்கள் வைர முருகனை எடுத்துப் போகவில்லை என்பது நிச்சயம்.”

"பிறகு?"

"டாக்டர் நாமகிரியும் புறப்பட்டுப் போய் விட்டார். நஞ்சுண்டன் எதுவும் நடக்காததுபோல் இருந்து வருகிறான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.”

“என்ன?”

“வைர முருகன் இப்போது இந்த வீட்டில் இல்லை. வெளியே போய்விட்டது எப்படிச் சொல்லுகிறேன் என்று கேட்காதீர்கள். எனக்கே தெரியாது. ஆனால் நான் சொல்வது நிச்சயம்.”

"எங்கே போயிற்று என்றும் தெரியாது?"

“ஊகூம்.”

ரமணன் போன் கூண்டுக்குள்ளிருந்து வந்தான்.

அவனுடைய நிகழ்ச்சி நிரலில் ஐட்டம் நம்பர் இரண்டு டாக்டர் நாமகிரி.

ஜனார்த்தனத்தின் விஷயமாக முயன்று பார்க்க வேண்டும். பாலசந்தரின் மெளனம் உடைந்தால் பல விஷயங்கள் சேர்ந்து உடையக் கூடும்.

டாக்டர் நாமகிரியின் கிளினிக்கும் வீடும் அருகருகாக இருந்தன. இரண்டுக்கும் சேர்ந்து ஒரு பொதுவான காம்பவுண்டு. கிளினிக்கின் சுவரோரமாக மோட்டார் பைக்கை நிறுத்தினான்.

"வணக்கம் சார்.”

நர்ஸ் மேரிதான்.

அவன் உள்ளே போய் விசாரிக்கு முன் அவள் அவன் வருகையைக் கண்டுவிட்டாள். போலும், 'ஒரு பிரபல டாக்டருக்குக்கூட இவ்வளவு நர்ஸ்களின் தொடர்பு இருக்காது. அங்கே அம்மணி, இங்கே மேரி! என்று எண்ணிக் கொண்டான்.’

“வணக்கம் மேரி, சௌக்கியமா? டாக்டர் இருக்கிறாரா உள்ளே?”

மேரி குறும்புத்தனமாகச் சிரித்தாள். "ஐயையோ! தமிழ் நாட்டின் அரிய பெரிய மூளைக்கே பழுது ஏற்பட்டு விட்டதா?”

“போக்கிரி!” என்று கையை ஓங்கினான். ரமணன்.

“பூஜையில் இருக்கிறார்” என்றாள் மேரி.

"பூ?”

“ஜை!” முடித்தாள் டாக்டர் நாமகிரியின் நர்ஸ். “நேற்றிலிருந்து ஒரு புதுத் தமாஷ் ஆரம்பமாகியிருக்கிறது.” அவள் குரல் தாழ்ந்து ஒலித்தது. நாற்புறமும் பார்த்துக் கொண்டாள். “தினம் சாய்ந்தரம் ஐந்து மணிக்கெல்லாம் டாணென்று கிளினிக்கு வந்து விடுவார். நேற்று இங்கே பேஷண்டுக்ள காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளைக் காணோம். என்னதான் நேர்ந்தது என்று பார்ப்பதற்காக டாக்டர் வீட்டுக்குள் போனேன். கதவைச் சாத்தித் தாளிட்டிருந்தார்கள். ஒரே ஊதுவத்தி சாம்பிராணி புகை. சாமி, கீமி சமாசாரமெல்லாம் எதுவும் டாக்டருக்குக் கிடையாதே என்று கதவிடுக்கில் பார்க்கிறேன்”

மேரி தன் கொட்டைப் பாக்கு விழிகளை மேலும் அகலப்படுத்திக் கொண்டு, ஒரு மூச்சு வாங்கினாள் நீளமாக. "என்ன கண்டாய்?”

“கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் இருக்கிறார் டாக்டரம்மா! அழகான சின்ன சந்தன மண்டபம். அதிலே ஒரு சுப்பிரமணிய சாமி விக்கிரகம்.”

படீரென்று எதுவோ அடித்தது ரமணனின் மூளையில். “சுப்பிரமணிய சாமி என்றால்?”

“உங்கள் கடவுள்களைப் பற்றி எனக்குத் தெரிந்தது கூட உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறதே! சுப்பிரமணிய சாமி தெரியாது? முருகன் என்பீர்களே, அது! கையில் வேல் பிடித்துக் கொண்டு, கச்சம் மாதிரி கட்டிக்! கொண்டு...”

“சரி, சரி எதில் செய்யப்பட்டிருந்தது. அந்த விக்கிரகம்? அதாவது, வெள்ளியா, செம்பா தங்கமா?”

“அதுதான் பெரிய ஆச்சரியம். விக்கிரகம் ஒரே டாலடித்தது! கண் கூசிப் போய்விட்டது எனக்கு. ஏகப்பட்ட வைரம் பதிந்திருந்தது. போலிருக்கிறது! எங்கே கிடைத்தோ, எப்படிக் கிடைத்ததோ! ஆனால் ரகசியமாய், பத்திரமாய் வைத்திருக்கிறார். டாக்டரம்மா! வேலைக் காரர்கள் யாருக்குமே தெரியாது.”

மேற்கொண்டு அவள் பேச்சு ரமணனின் செவியில் ஏறவில்லை. வைர முருகன் இங்கே வந்துவிட்டது. என்ற ஒரே தகவல் போதும் -

சோர்ந்திருந்த அவன், உணர்வுகளைத் தட்டியெழுப்ப.

“மேரி, நான் ஒரு பேஷண்டை அழைத்து வந்து டாக்டரம்மாவிடம் காட்ட வேண்டும். இந்தக் கிளினிக்கிலேயே அட்மிட் பண்ணிக் கொள்வார் இல்லையா?” என்றான்.

“பேஷண்டைப் பொறுத்தது அது. ஆனால் -” விரலைச் சுண்டிக் காட்டினாள் மேரி. "டாக்டரம்மா சரியானபடி கறந்து விடுவார்கள்.”

"எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.”

மோட்டார் பைக்கை உற்சாகத்துடன் உதைத்தான் ரமணன்.

மணி எட்டு அடித்தது. டாக்டர் நாமகிரியின் கிளினிக்கில் பரிசோதனைத் தியேட்டருக்கு வெளியே இருந்த நாற்காலி. கிளினிக்குகளுக்கே உரிய டெட்டால் நெடியும், நிசப்தமும் அந்த நீண்ட தாழ்வாரத்தில் நிறைந்திருந்தன.

"ஏமண்டி, ரத்தரந்தா இங்கே தங்கியிருக்க வேண்டியது தானா?” கிசுகிசுவென்று அலுத்துக் கொண்டான். அப்பாவு.

“ஆமாம். நீ இன்றிரவு இங்கே தங்கத்தான் வேண்டியிருக்கும். பின்னே எனக்குப் பொழுது போகாமல், பேச்சுத் துணைக்கு இருக்கட்டும் என்றா உன்னை அழைத்து வந்தேன்.”

“சார்!” பதறிப் போய் ரமணனின் கையைப் பற்றிக் கொண்டான் அப்பாவு. “அந்த அரைப் பைத்தியத்துக்குத் துணையாய் என்னையா இருக்கச் சொல்லப் போறீங்க? சால பயங்காவுந்தி சார்.”

“இன்று ஒரு ராத்திரி மட்டும் தான். நாளையிலிருந்து வேறு ஆள் போட்டு விடுகிறேன்.”

“ஏன் இன்று ராத்திரி மட்டும், ஏமி விசேஷம்?” “இந்தக் கட்டிடத்துக்கு ஒரு காம்பவுண்டு இருக்கிறது, இல்லையா? அதன் கொல்லைப்புறத்துக்கு ஒரு கதவு உண்டு. இன்று ராத்திரி ஒரு மணி சுமாருக்கு அந்தக் கவதின் தாழ்ப்பாளை நீ திறந்து வைக்க வேண்டும்.”

“போச்சுடா சாமி!” அப்பாவு எழுந்து ஓட்டம் பிடிக்கத் தயாரானான்.

ரமணன் மட்டும் சரேலென்று அவன் கையைப் பிடித்திருக்கவில்லையானால் போயே போயிருப்பான்.

“சார், சார்!” என்று கெஞ்சினான் அப்பாவு. “நீங்க என் கூடவே இருங்க. நெருப்பிலே குதிக்கணுமா? ரைட். சமுத்ரமுலோ திகாலனா? ஸரே! ஆனால், நீங்க இல்லாதப்போ, ஒரு எறும்பைப் பிடிச்சு அந்தண்டை போடறதுன்னா கூட உடம்பு நடுங்குது சார்! என்னை விட்டுடுங்க சார்!”

“உஷ்!” உதட்டில் குறுக்கே விரல் வைத்து எச்சரித்தான் ரமணன்.

தாழ்வாரத்தின் மறு கோடியில் டாக்டர் நாமகிரி வந்து கொண்டிருந்தாள். பின்னால் ஒரு சக்கர நாற்காலி, அதிலே ஜனார்த்தனம். நர்ஸ் மேரி அதைத் தள்ளி வந்து, வலப்புறமிருந்து அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

“டாக்டர் பாலசந்தரின் மாமாவா அந்தக் கேஸ்?” தனக்குத்தானே பேசிக் கொள்வது போலிருந்தது டாக்டரின் பேச்சு. “அவன் ஜெயிலுக்குப் போனதில் இப்படி ஆகி விட்டார் என்றா சொன்னீர்கள்?”

“ஆமாம்” என்று தலையசைத்தான் ரமணன். “சிகிச்சைக்காக இங்கே கொஞ்ச நாள் தங்க வேண்டியிருக்கும். நீங்கள் அவருக்குக் குடும்ப நண்பரா?”

“ஆமாம்.”

“செலவை யார் கொடுப்பார்கள்? நீங்களா, இல்லை, பாலசந்தரா?”

“நானே ஏற்றுக்கொள்கிறேன்” என்றான் ரமணன்.

“கூட ஒருத்தர் இருக்க வேண்டுமே, கிளினிக்கில்?”

"இவன் இருப்பான். எங்கள் வேலைக்காரன்.”

அப்பாவு வாயை ஒரு முறை திறந்து மூடினான்.

“என்ன சொல்கிறான்?” என்றாள். டாக்டர் நாமகிரி.

"ஒன்றுமில்லை.”

“நல்லது.”

சரக், சரக். செருப்புச் சத்தம் தேய்ந்து மறைந்தது. நர்ஸ் மேரிக்கு, இன்ஸ்ட்ரக்ஷன்கள் கொடுத்தவாறே சென்று விட்டாள் டாக்டர் நாமகிரி.

அப்பாவுவை நோக்கிக் குனிந்தான் ரமணன்.

“நினைவிருக்கட்டும். ராத்திரி ஒரு மணி.” மீண்டுமொரு முறை சொல்லிவிட்டு வாசல்புறம் வந்தான்.

கிளினிக்கும் டாக்டரின் வீட்டுக்கும் இடையே, ஐந்தடி அகலத்தில் ஒரு சந்து இருந்தது. ஆள் நட மாட்டத்தைக் காணோம். ரமணன் சும்மா பராக்குப் பார்ப்பவன் போல் சந்து வழியே நடந்தான். பின்புறக் காம்பவுண்டுச் சுவரை அடைந்தான். அதன் உயரம், பருமன், கதவின் அமைப்பு ஆகியவற்றைப் பார்த்து வைத்துக் கொண்டான். மோட்டார் பைக்குக்குத் திரும்பினான்.

மோட்டார் பைக்கில் ஏறவிருந்து வேளை.

“மிஸ்டர் ரமணன்!”

மேரிதான் கூப்பிட்டவள்.

“உங்களுடன் ஒரு நிமிஷம் பேசத்தான்.” என்றாள் அவள் ரகசியக் குரலில். "நானும் அப்போது பிடித்துக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்குக் கூடத் தெரியாதபடி ஒரு சதி வேலையா?”

“இப்போது விளக்குவதற்கு நேரமில்லை, மேரி பிற்பாடு ஆகட்டும்."

“சரி, சார். ஆனால் எச்சரிக்கை செய்து விடுகிறேன். இப்போதே.”

“என்ன?”

"டாக்டரம்மா ராப் பிசாசு. சாதாரணமாகத் தூங்கவே மாட்டாள். அதுவும் இந்த வைர முருகன் வந்த பிறகு... நேற்று இரவு அடிக்கடி ரோந்து வந்து கொண்டிருந்தாள், சொல்லிவிட்டேன்.”

“பூ!” ரமணன் பைக்கில் ஆரோகணித்தான்.

“பூவும் விழலாம், பாறாங்கல்லும் விழலாம். தலை ஜாக்கிரதை” என்றாள் மேரி.

*****

7

டாக்டர் நாமகிரியின் கிளினிக்கில், மணி பதினொன்று அடித்தது.

“சே! இதுவும் ஒரு பிழைப்பா! என்று அலுத்துக் கொண்டான் அப்பாவு. அவனுடைய பரம்பரையென்ன, குடும்பப் பெருமை என்ன! போயும் போயும் ஒரு பைத்தியத்துக்காக அவனைக் காவல் போட வேண்டும்?”

வெறுப்புடன் கட்டிலைப் பார்த்தான்.

ஜனார்த்தனம் - டாக்டர் பாலசந்தரின் மாமா அசைவில்லாமல் படுத்திருந்தார். சிலர் பாதிக் கண்ணைத் திறந்தவாறே தூங்குவார்கள். பார்க்கப் பயங்கரமாக இருக்கும். ஜனார்த்தனமோ முக்கால் கண்ணைத் திறந்தபடி நித்திரை செய்து கொண்டிருந்தார். அப்பாவுக்குக் குலை நடுக்கம் ஏற்படுத்தியது அந்தக் காட்சி.

ஙொய் என்று ஒரு சுவர்க் கோழியின் ரீங்காரம்தான் அவனுக்கு ஒரே துணை. நர்ஸ் ஒருத்தி இருக்கிறாள். ஆனால் எங்கே தூங்குகிறாளோ தெரியவில்லை. அண்டை அறைகள் இரண்டிலும் நோயாளி கிடையாது. எல்லாமாக, கிளினிக்கின் நிசப்தம் வினாடிக்கு வினாடி அதிகப்பட்டுக் கொண்டிருந்தது. ஜனார்த்தனம் நடுநடுவே ஏதாவது உளறும் போதெல்லாம் அப்பாவுக்கு ரத்தம் உறைந்தது.

இந்த லட்சணத்தில் நள்ளிரவு ஒரு மணிவரை விழித்துக் கொண்டிருக்க வேண்டுமாம்! பின்புறத்துக் கதவைத் திறந்து வைக்க வேண்டுமாம்! போதும், போதும் ரமணனுக்குச் சேவை! இதைக் காட்டிலும் ஊருக்குப் போய் ஆவக்காய் வியாபாரம் பண்ணலாம்!

மடியிலிருந்து சுருட்டையும் தீப்பெட்டியையும் எடுத்தான் அப்பாவு. பயத்துடன்தான். ஏனெனில் சாயந்தரமே ஒரு நர்ஸ் எச்சரிக்கை செய்திருந்தாள் சுருட்டுப் பிடித்தால் டாக்டரம்மா கொன்று விடுவார்கள் என்று!

இப்போது எல்லோரும் தூங்கியிருப்பார்கள். சுருட்டுப் புகையா எழுப்பப் போகிறது?

அப்பாவு சரக்கென்று குச்சியைக் கிழித்தான். கப்கப் கப்பென்று இழுத்தான் புகையை. பந்து பந்தாக வெளிப்பட்டது.

'ஆகா! என்ன சுகம்!' என்று ஒரு வினாடி நினைத்திருக்க மாட்டான் வெளியே நர்ஸின் காலடியோசை கேட்டது படக் படக்கென்று.

சட்டென எழுந்தவன். சுருட்டை ஓரத்தில் போட்டான் அவசரமாக.

“என்ன, விழிச்சிட்டிருக்கிறாயா?” என்றாள் உள்ளே வந்தவள். “அந்த ஐயா ஏதாவது முனகினாரா?”

"எப்ப நிறுத்தினார்?” என்றான் அப்பாவு அலுப்புடன்.

“சரி. பிளாஸ்கிலே அவருக்குப் பால் வைச்சிருக்கிறேன். ரொம்பப் பினாத்தினாரானால், எழுப்பிப் பாலைக் கொடு” என்று கூறிவிட்டு நர்ஸ் போய்விட்டாள்.

காலடிச் சத்தம் மறைகிறவரைக்கும் காத்திருந்தான் அப்பாவு. பிறகு சுருட்டை எடுப்பதற்காகத் திரும்பினான்.

இரண்டு அதிர்ச்சி காத்திருந்தது அவனுக்கு.

ஒன்று, அவன் சுருட்டு அணைத்திருந்தது ஒரு டம்ளருக்குள் விழுந்திருந்ததால்.

இரண்டு, அந்த டம்ளரில், அவன் குடிப்பதற்காக வைத்திருந்த டீ இருந்தது.

டீயும் கெட்டு, சுருட்டும் கெட்டதில் அப்பாவுவுக்கு வந்த கோபம் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தக் கோபம் நிரபராதியான ஜனார்த்தனத்தின் மீது திரும்பியது.

இந்த மனுசன் பினாத்துவாராம்! அவருக்குப் பால் கொடுக்கணுமாம்! என்று கோபத்துடன், நினைத்துக் கொண்டான். கப் போர்ட்டின் மீதிருந்த பிளாஸ்க் அவன் கண்ணில் பட்டது. திறந்தான். கோப்பையில் ஊற்றிக் கொண்டான். மடமடவென்று குடித்தான். 'போய்யா சரிதான்!' என்று ஜனார்த்தனத்துக்கு அழகு காட்டினான். நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.

நோயாளி நன்றாகக் தூங்க வேண்டுமென்பதற்காக அதிலே தூக்க மாத்திரை கலக்கப்பட்டிருந்தது.

அப்பாவுவுக்கு, பாவம், அது தெரியாது.

மணி பன்னிரண்டே முக்கால் ஆயிற்று. கிளினிக்கின் பின்புறத்தில் வந்து நின்றான் ரமணன். அது ஒரு சந்து. பல வீடுகளின் கொல்லைப்புறங்கள் அங்கே இருந்தன. ஆகவே, குப்பைக்கும் சகதிக்கும் பஞ்சமிருக்கவில்லை. ஒரு மணி ஆகிறவரையில் காத்திருந்தான்.

கிளினிக்கின் காம்பவுண்டுச் சுவர் உயரமாக இருந்தது. கதவின் மீது கையை வைத்தான். நகரக் காணோம். அழுத்தினான். ஊகூம். உட்புறத்துத் தாழ்ப்பாள் சிறிதுகூட விலக்கப்படவில்லை என்று புரிந்துவிட்டது. துரோகி அப்பாவு வஞ்சக அப்பாவு. கும்பகர்ண அப்பாவு. காலை வாரிவிட்டுவிட்டான்.

ரமணன் அதை எதிர்பார்த்திருந்தான் போலும். சுவரை அண்ணாந்தும் தடவியும் பார்த்தான். ஏறக்கூடியதாக இடுக்கு எதுவும் தட்டுப்படவில்லை. அப்படியே ஏறினாலும் வளர்பிறை நிலவின் ஒளியில் பளிச்சென்று உருவம் தெரியும். உதட்டைக் கடித்துக் கொண்டு யோசித்தான். அடுத்த கட்டத்துக்கும் அவன் தயாராகவே வந்திருந்தானோ? நிலைப்படிக்கு மேலாக, கை நுழையக் கூடிய அளவுக்கு ஒரு பொந்து இருந்தது. பிற்பாடு விளக்குப் பொருந்த்தலாமென்று துவாரம் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. காலின் கீழே சில கற்களை அடுக்கிக் கொண்டான். ஏறி நின்று, பொந்தின் வழியே கையைச் செலுத்தினான்.

அவன் முகம் மலர்ந்தது. உட்புறத்தில் மின்சார ஒயர் ஒன்று கை எட்டக்கூடிய உயரத்தில் ஓடுவரை செல்வதைக் கவனித்து, கைப் பையிலிருந்து ரப்பர் கையுறையை மாட்டிக் கொண்டு, கத்தரிக்கோலால் ஒயரை வெட்டினான். இன்னொரு பாக்கெட்டிலிருந்து மின்சாரத் துளையோடும் கருவியை எடுத்தான். ஜப்பானியத் தயாரிப்பு அது. பாக்கெட் லெளட்டிங் கருவி. அதன் ஒயர் முனைகளைப் பிரித்து, சுவரில் ஓடும் ஒயர். முனைகளுடன் இணைத்தான். இவ்வளவுக்கு வேலைகளும் பொந்தின் வழியாக ஒற்றைக் கையாலேயே நடைபெற்றன.

லெளட்டிங் கருவி இயங்க ஆரம்பித்துவிட்டதை அதன் கிர்ர்ர் என்ற ஓசையும் மெல்லிய சிவப்பு விளக்கும் எடுத்துக் காட்டின. அதன் கூர்மையான ஆணியை நிலைப்படிக் கதவின் நடுப்புறத்தில் பொருந்தினான். கிர்ர்ர் என்று பலகையைத் துளைக்கத் தொடங்கியது. மறு புறத்தில் தாழ்ப்பாள் இருக்கக்கூடிய இடத்தை ஊகித்து, அதைச் சுற்றித் துளையிட்டுக் கொண்டே சென்றான். கிர்ர்ர் என்ற ரீங்காரம் ஓயாமல் ஒலித்தது. மெல்லிய ஒலிதான். ஆனால் உள்ளே யாருக்கேனும் கேட்டிருக்குமோ? இருக்காது என்றே நம்பினான், மரங்களின் சலசலப்பு, சுவர்க்கோழியின் புலம்பல், பட்சிகளின் கீச்கீச் இவைகளில் தன் கருவியின் ஓசை அமுங்கிவிடும்.

நீள் சதுரமாகப் பலகை வெட்டப்பட்டுவிட்டது தாழ்ப்பாள் உட்பட அது பொத்தென்று விழுந்து ஓசையேற் படுத்தா வண்ணம் எச்சரிக்கையாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

கதவு இப்போது நன்கு திறந்து கொண்டது. ரமணன் உள்ளே நுழைந்தான். கருவியை நிறுத்திவிட்டு, வீட்டு மின்சாரக் கம்பியின் இணைப்பைத் துண்டித்தான். "சுவர் ஒயர்களை முன் போலவே சேர்த்துவிட்டு, கருவியையும் உறைகளையும் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். அடி மேலடி வைத்து டாக்டரின் வீட்டை நோக்கி முன்னேறினான்.

வீட்டுக்கும் கிளினிக்குக்கும் நடுவே இருந்த சந்து மிக இருட்டாயிருந்தது. அப்பாவு ஒருவேளை தூக்கம் கலைந்து எழுந்து வரமாட்டானா? கடுகளவு நம்பிக்கையுடன் தாமதித்துப் பார்த்தான். நம்பிக்கை பொய்த்தது. சந்திலிருந்து வீட்டு வராந்தாவுக்குத் தாவ ஓரடி எடுத்து வைத்தான்.

அவ்வளவுதான்

மடேலென்று ஓர் அடி விழுந்தது அவன் தோளில்!

கண் இமைக்கும் நேரத்துக்குள் திரும்பினான் ரமணன். புயலெனப் பாய்ந்தான். வந்த வழியே மின்னலெனக் கதவைக் கடந்து, சந்தைத் தாண்டினான். மேரி எச்சரித்தது சரிதான். டாக்டர் நாமகிரிதான். விழித்திருந்து ரோந்து சுற்றியிருக்கிறாள். அல்லது மின்சாரக் கருவியின் கிர்ர்ர் அவளை எழுப்பியிருக்கும். மின்னல் நேரத்துக்குள் இவ்வளவு எண்ணங்களும் ரமணனின் மனத்தில் ஓடின. அந்த ராட்சத அடியில் அங்கேயே சுருண்டு விழுந்திருப்பான். எப்படியும் தான் யாரென்று காட்டிக் கொள்ளக் கூடாது என்ற மன உறுதி ஒன்றுதான் அவனை விழாதபடி தடுத்தது. வைர முருகனைக் களவாட முயலுபவன் ரமணன் என்று டாக்டர் அறிந்துவிடக் கூடாது. அறிந்தால் இன்னொரு முயற்சிக்கு இடமில்லாமல் போய்விடும். அதனால்தான் ஓட்டம் பிடித்தான்.

தெருக்கோடி செல்லும் வரையில்தான் அவன் மன உறுதி நீடித்தது. பிறகு, மலையே விழுந்த மாதிரி, தோள் வலித்தது. அவன் கண்கள் இருண்டன. தலை சுற்றியது. அப்பா! பெண்பிள்ளையா அவள்! எப்படிப்பட்ட அடி! கிளினிக்கிலிருந்து எவ்வளவு தொலைவு போக முடியுமோ அவ்வளவு போய்விட விரும்பினான் ரமணன். ஆனால் முடியவில்லை. நடுச் சாலையில் விழக்கூடாது. விழக் கூடாது.

ரமணன் ஓடினான்... இது எந்த இடம்? எங்கே பார்த்த மாதிரி... இங்கே ஏதோ ஒரு வீடு... முன்பொரு முறை வந்திருக்கிறோம்... பாதி மயக்கம், பாதி, உணர்வு... ஓடினான். தேடினான், கதவுகளைப் பார்த்தான். சுழன்று சுழன்று நழுவுகிற பார்வையை இழுத்து நிறுத்திக் கொண்டு ஆராய்ந்தான்.

கடைசியில் விழுந்தான் ஒரு வீட்டின் வாசற்படியில்.

கதவை இடித்தாற்போல், விழுந்தானாகையால், உள்ளேயிருந்தவருக்குச் சத்தம் கேட்டிருக்க வேண்டும். ஒரு பெண் கையில் டார்ச்சுடன் வந்து கதவைத் திறந்தாள். அலங்கோலமாக விழுந்து கிடப்பவரைப் பார்த்ததும் ஆ என்று கத்திவிட்டாள். முகத்தில் விளக்கு அடித்துப் பார்த்தாள். "ஐயோ! இவரா!" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். பரபரவென்று உள்ளே ஓடினாள். தண்ணீரில் புடவைத் தலைப்பை நனைத்து எடுத்து வந்தாள்.

ரமணனின் முகத்தைத் துடைத்தாள்.

ரமணன் கண்ணைத் திறந்தான். எதுவும் புரியவில்லை. ஆயாசத்துடன் மீண்டும் மூடிக் கொண்டான். அவள் கை, அடிபட்ட தோளில் பட்டுவிட்டது, போலும். 'ஆ!’ என்று முனகினான். பிறகுதான் அவளும் கவனித்தாள், அந்தப் புடைப்பை.

"மெல்ல உள்ளே எழுந்து வாருங்கள்” என்றாள் அவள்.

கனவில் நடப்பவன் போல் தடுமாறி நடந்தான் ரமணன். இதமான தலையணையை உணர்ந்தான். வீங்கிப் புடைத்து விண் விண்ணென்று தெறிக்கும் தோளுக்கும், சூடான வென்னீர் ஒத்தடம் கொடுப்பதை உணர்ந்தான். அப்படியே துயிலின் மடியில் துவண்டான்.

அவள் அவன் சட்டைப் பொத்தான்களை நன்கு விலக்கி விட்டாள். தாராளமாக மூச்சு விடுவதற்காகப் பையிலிருந்த பொருள்களை எடுத்து வெளியில் வைத்தாள். ரப்பர் உறைகளையும் மின்சாரக் கருவிகளைக் கண்டு ஆச்சரியப் பட்டாள். நாட்குறிப்பு டைரியொன்றும் வெளி வந்தது. குறுகுறுப்புடன் அதைப் பிரித்தாள். குறிப்புக்கள் சுருக்கெழுத்தில் இருந்தன. எப்போதோ படித்த சுருக்கெழுத்தை நினைவுபடுத்திக் கொண்டு பார்த்தாள். வழக்கமான சுருக்கெழுத்து முறையை, ரமணன் தனக்குரிய ஒரு புது முறைப்படி இன்னும் சுருக்கிக் கொண்டிருக்கிறான் என்று புலப்பட்டது. அப்படியும்கூட இரண்டொரு சொற்களை அவள் கண்டுபிடித்தாள்.

அவை: நஞ்சுண்டன் - ரேணுகா குழந்தைப் பாண்டியன்.

அவள் பல்லைக் கடித்தாள். தனக்குள்ளேயே என்னென்னவோ எண்ணிக் கொண்டாள். அந்த எண்ணங்களாலும் ரமணனின்பாலுள்ள கவலையினாலும் இரவு பூரா அவள் கண் விழித்தபடியே இருந்துவிட்டாள்.

கீழ்வானம் வெளுக்கத் தொடங்கியது. பால் சைக்கிள்களின் மணியோசை, தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் விடிகாலை பஸ்ஸின் குழலொளி இப்படிப் பல சந்தடிகள் புறப்பட்டன.

ரமணன் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கமுள்ளவன். ஆகவே கண் விழித்துவிட்டான். இப்போது புலன்கள் நன்கு இயங்கின. தோளில் மட்டும் வலி தெரிந்தது. அதையொட்டி மற்ற நினைவுகளும் தொடர்ச்சியாக வந்தன.

“தேவையா?" என்று விசாரித்தாள் அவள்.

“அட! கடைசியில் உன் வீட்டில்தான் வந்து விழுந்தேனா!” ரமணன், சிரித்துக்கொண்டே எழுந்து உட்கார்ந்தான். "என் பங்குக்குக்கூடக் கடவுள் நடுநடுவில் வருகிறார் பார்!”

“உங்கள் பங்கில்தான் முழுக்க முழுக்க இருப்பார். நஞ்சுண்டனைப் போன்ற பாவிகளின் பங்கில் தான் இருக்க மாட்டார்"

“நீ மிகவும் உதவி செய்திருக்கிறாய். ராத்திரி என்னை மறந்து தூங்கியதிலிருந்தே தெரிகிறது.” உடைகளைச் சரிசெய்து கொண்டு தலையைச் சீவி விட்டுக் கொண்டான். “வரட்டுமா? ரொம்ப நன்றி. ஆனால் இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதே.”

“சொல்ல மாட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் இருங்களேன். பால் வந்துவிடும் காப்பி சாப்பிடலாம்.”

"பரவாயில்லை. இன்னொரு நாள் வருகிறேன்." தன் தோளை ஒரு முறை தட்டிக் கொண்டபின் புறப்பட்டான் ரமணன்.

அவன் போகும் திசையையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றாள் அவள். ஒரு பெருமூச்சு வெளிப் பட்டது. பல்லைக் கடித்தாள். உள்ளங்கைகளைப் பிசைந்து கொண்டாள். தனது சிறு வீட்டின் குறுக்கும் நெடுக்கும் நடை விரித்தாள்.

“கூடாது... கூடாது. ரேணுகாவின் வீட்டில் இனியும் அவனைத் தங்கவிடக்கூடாது. எல்லா உண்மையையும் ரேணுகாவுக்குச் சொல்லவிட வேண்டும். வருகிற ஆபத்து வரட்டும். மனத்தில் உறுதியுடன் வெளிக் கிளம்ப ஆயத்தம் செய்து கொண்டாள் நீலா.”

பங்களா காவல்காரன், முக்காலியைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தான். அது அவன் வழக்கமாக வீற்றிருக்கும் ஆசனம். மூன்று கால்களில் ஒன்று மட்டும் லொடலொடத்திருந்தது. ஆணி வைத்துச் சுத்தியினால் அடித்துக் கொண்டிருந்தான்.

"ரேணுகா அம்மாள் இருக்கிறார்களா, அப்பா?”

பெண் குரல் அவனைத் திரும்ப வைத்தது.

"ஓ, உள்ளே போங்கம்மா" என்று அனுமதி வழங்கினான். இரண்டு மூன்று முறை இவளை ரேணுகாவுடன் பார்த்திருக்கிறான் அவன். பள்ளிக்கூடத்திலே ஆசிரியையாக இருப்பவள் என்று தெரியும்.

முக்காலி ரிப்பேரில் அவன் மீண்டும் முழுகினான்.

நீலா தோட்டத்துக்குள் பிரவேசித்தாள். பங்களாவை நோக்கிச் செல்லும் சிமெட்டின் பாதை இருபுறமும் பூச்செடிகளுடன் அவளைச் சூழ்ந்திருந்தது. சின்னச்சிறு கிளைகள் தலையசைத்தன. ஆனால் வா வா என்று தன்னை வரவேற்பது போல் நீலாவுக்குத் தோன்றவில்லை. போ. போ அபாயம்! வராதே! இப்படி எச்சரிக்கை செய்வது போலவே தோன்றியது.

நஞ்சுண்டனின் கொடிய கூரிய கண்கள் தன்னை எங்கிருந்து கவனித்துக் கொண்டிருக்குமோ? நினைக்கும் போதே நடுக்கம் கண்டது உடலில். பங்களாவுக்குள் நுழைய அவள் விரும்பவில்லை. ரேணுகாவை வெளியே வரவழைத்தால் நல்லது. தோட்டத்தின் ஏதாவது ஒரு மூலையில் அபாயமில்லாமல் பேசிவிட்டுத் திரும்பலாம். நஞ்சுண்டனின் முகத்தில் விழிக்காமல் போய்விடலாம்.

எப்படி வரவழைப்பது ரேணுகாவை?

பூக்காரியொருத்தி, கம்மென்றும் மணம் வீசும் கூடையுடன் அவளைக் கடந்து சென்றாள். பங்களாவுக்குத் தான் போகிறாள்.

"இந்தாம்மா, பூக்காரி” என்று அழைத்தாள். "வாடிக்கையாய்ப் பூ கொடுக்கிறவளா நீ?”

"ஆமாம்மா" என்றாள் அவள்.

"எஜமானியம்மாளிடம் கொடுப்பாயா, இல்லை வேலைக்காரர்களிடமா?”

“எஜமானியம்மாவெல்லாம் வாங்குவாங்களா அம்மா? வேலைக்காரங்க கையிலே தான் கொடுப்பேன். இம்மாம் பெரிய தோட்டத்திலே இல்லாத பூவா? ஏதோ சாமிக்குப் போடறதுக்காக ரெண்டு முழம் வாங்குறாங்க.”

“நல்லவளா இருக்கிறாயே, எனக்காக ஒரு உதவி செய்வாயா?” என்று நீலா கேட்டாள்.

“என்னம்மா?" என்று திகைத்தாள் பூக்சரரி.

கைப்பையிலிருந்து ஒரு துண்டுக் காகிதம் எடுத்தாள் நீலா. “தோட்டத்தில் உனக்காகக் காத்திருக்கிறேன். அவசரமான விஷயம். நீலா.” என்று இரண்டு வரி எழுதினாள். பூக்காரியிடம் கொடுத்தாள்.

“கவனமாய்க் கேள். இன்றைக்கு மட்டும் பூவை வேலைக்காரர்களிடம் கொடுக்காதே. போன மாதம் உனக்குக் கொடுத்த பணத்திலே ஒரு ரூபாய் குறைவாய்க் கணக்கிட்டு விட்டார்கள் என்று தகராறு செய். எஜமானியம்மாளிடம் நேரில் பேசணும் என்று கேள்...”

பூக்காரி குறுக்கிட்டாள் அச்சத்துடன். “என்னம்மா பெரிய கையிலே போய்க் கலாட்டா செய்யச் சொல்றியே?”

“ஒரு கலாட்டாவும் நேராது. நான் ஜவாப். ரேணுகா அம்மாள் வருவார்கள். வந்ததும், பூவைக் கொடுக்கிற மாதிரி இந்தக் காகிதத்தைக் கொடுத்து விடு. என்ன? யாருக்கும் தெரிய வேண்டாம். ரகசியம்.”

“உன் முகத்தைப் பார்த்தால் நல்லவள்னு தோணுது. அதனாலே செய்யறேன்.” பூக்காரி அந்தக் காகிதத்துடன் உள்ளே சென்றாள்.

நீலாவின் நெஞ்சு படபடத்தது. சுற்றுப்புறமும் சூழ்நிலையும் மிக அமைதியாயிருந்தன. இருந்தாலும், எங்கேயோ ஓர் அபாயம் மறைந்து காத்திருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது.

*****

8

யோசித்தவாறு, குழந்தைப்பாண்டியனின் பங்களாவில் நின்றிருந்தாள் நீலா. இவ்வளவு நேரம் நடுத்தோட்டத்தில் நின்றவிட்டதே தப்பு, சிமெட்டிப் பாதையைத் தாண்டினாள். ஒரு வேப்ப மரத்தின் ஓரமாகச் சென்று, மறைவாக நின்று கொண்டாள். பூக்காரி உள்ளே போயிருந்தாள்.

இரண்டு நிமிடங்கள்தான். அவசர அவசரமாக இங்குமங்கும் பார்த்த வண்ணம் வந்தாள் ரேணுகா. கூடவந்த பூக்காரி, 'அதோ அங்கே' என்று தாழ்ந்த குரலில் கூறி, கண்ணால் சாடை காட்டினாள்.

“நீலா!” திகைப்புடன் முன்வந்தாள். ரேணுகா. கவலைகள், அவள் கண்களைச் சுற்றிக் கருவளையங்களாய்க் கோடிட்டிருந்தன. அவள் குரலில் பதற்றம் நிறைந்திருந்தது.

"இங்கே பேச வேண்டாம். சற்று மறைவாய்ப் பேசலாம். வா,” என்றாள் நீலா.

சற்றுமுற்றும் பார்த்தாள் ரேணுகா. "அதோ அந்தக் கார் ஷெட்" என்றவள், தோட்டத்தின் குறுக்காக நடந்தாள். தோழியின் கையை அவள் பற்றியிருந்தாள். இருவர் இருதயத்திலும் கப்பியுள்ள பதைப்பு, மணிக் கட்டின் துடிப்பிலே வெளிப்பட்டது.

ஷெட்டில் ஒரு கார் இருந்தது. அதை மெக்கானிக் ஒருவன் ரிப்பேர் பார்த்துக் கொண்டிருந்தான். வாலிப வயது. பானெட்டைத் திறந்து, தலையை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டிருந்தான். காலடியோசை கேட்டதும் நிமிர்ந்தான்.

“கொஞ்சம் வெளியே போய் இரு, தம்பி” என்று கட்டளையிட்டாள் ரேணுகா.

க்ரீஸ் படிந்த கைகளை வேஸ்ட் நூலில் துடைத்துக் கொண்டான் அவன். “வந்து... நஞ்சுண்டன்...” என்று ஏதோ கூறத் தொடங்கினான்.

“பரவாயில்லை. நீ போ. அவர் கேட்டால் நான் சொல்லிக் கொள்கிறேன். ஐந்து நிமிடம் தான். நாங்கள் போன பிறகு திரும்பி வரலாம். அதுவரை தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிரு.”

“சரிங்கம்மா.”

அவன் தலை மறைந்ததுமே, "என்ன நீலா? என்ன அவசரம்?” என்றாள் ரேணு.

“வந்து...” நீலாவுக்கு எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. "உன் வீட்டில் தங்கியிருக்கிறானே நஞ்சுண்டன்... அவன்... அவன்...”

ரேணுகா முறுவலித்தாள். “அவன் இல்லை 'அவர்' என்று எனக்குத் தெரியும்.”

நீலாவின் முகத்தில் குழப்பம், கூத்தாடியது. "எப்போது... அந்தப் பாவி என்னை முறைப்படி தாலி கட்டாமலே ஏமாற்றி...” அவள் முகம் கவிழ்ந்தாள். பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

பரிவுடன் தோழியின் தோளை அழுத்தினாள் ரேணுகா. "உன் மனதுக்குக் கஷ்டமான விஷயங்களை நீ சொல்லத் தேவையில்லை, நீலா. எனக்கே தெரியும். அன்று நீ இங்கே வந்துவிட்டுப் போனபோது, நஞ்சுண்டன் உன்னை பின்தொடர்ந்து வந்ததும், பாய்க் கடையருகே உனக்கும் அவனுக்கும் நடந்த பேச்சும் எனக்குத் தெரியும். நான் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன்.”

வியப்பினால் நீலாவின் குழந்தைக் கண்கள் அகன்றன. “தெரியுமா அவன் எப்படிப்பட்ட மோசடிக்காரன் என்று தெரிந்துமா உன் வீட்டில் இடம் கொடுத்து வைத்திருக்கிறாய்? துரத்திவிடு ரேணு. இன்றைக்கே அவனை விரட்டி விடும். இல்லாவிட்டால், என் வாழ்வை நாசம் செய்த மாதிரி உன் வாழ்வையும் நாசம் பண்ணி விடுவான். அவனுக்கும் பாம்புக்கும் ஓரே ஒரு வித்தியாசம்தான். பாம்பின் விஷம் உடனே வேலை செய்யும். இவன் விஷம் சற்றுத் தாமதமாகும்.”

"ஆமாம், நீலா. ஆமாம்.”

"பின்னே ஏன் அவனைத் தங்க அனுமதித்திருக்கிறாய்?”

“மோசடிக்காரனென்று தெரிந்தவுடனேயே அவனை விரட்டிவிடத்தான் எண்ணினேன், நீலா. ஆனால்... டாக்டர் பாலசந்தருக்கும் எனக்கும்... தெரியுமில்லையா உனக்கு?"

"உன் காதலர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்தான், பாவம். உன் அக்கா கொலை விஷயத்தில் சிறையிலிருக்கிறாராமே?”

“ஆமாம். அவருக்கு எதிராக ஏதேதோ சாட்சியம் வைத்திருப்பதாக நஞ்சுண்டன் சொல்கிறான்.”

“வெறும் அளப்பு! நம்பாதே!”

“சாதாரண நிலமையாயிருந்தால் நம்பமாட்டேன், நீலா! இது அப்படியில்லையே! வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலே தூக்குக் கயிற்றில் அல்லவா என் காதலரின் உயிர் ஊசலாடுகிறது! நஞ்சுண்டன் நிஜமாகச் சொல்கிறானா, அல்லது அளப்பா என்று விஷப் பரீட்சை செய்ய எனக்குத் துணிவில்லையே, நீலா? அத்துடன்...”

“அத்துடன்?”

“அவனை நல்லவனென்று என் அப்பாவிடம் முதலில் அறிமுகம் செய்துவிட்டேன். எப்படி மடக்கினானோ, இன்று அவனுடைய கைப்பொம்மையாக என் அப்பா ஆடுகிறார். அவனை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது. வெளியே சொல்ல முடியாது இடுக்கிப் பிடியில் நான் சிக்கியிருக்கிறேன், நீலா, சிக்கியிருக்கிறேன்.”

ரேணுகாவுக்கு அவளையும் அறியாமல் கண்ணில் நீர் துளித்துவிட்டது போலும். பதறிவிட்டாள் நீலா அதைப் பார்த்ததும். அவள் நெஞ்சில் உறுதி பிறந்தது. உறுதி, பாறையாக இறுகியது. பாறை, பேச்சாக வெடித்தது.

“ரேணு! அவனை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று மட்டும் சொல்லாதே. என்னால் அவனை ஒரே நிமிடத்தில் கம்பியெண்ணும்படி செய்ய முடியும். செய்யத்தான் போகிறேன். அவனுடைய கடிதங்கள், டயரிகள், புகைப்படங்கள் பல இருக்கின்றன என்னிடம்.”

“அவனுடைய பல மோசடிக் கதைகள் எனக்குத் தெரியும் அவனுடைய கூட்டாளிகளை அடையாளம் காட்ட முடியும். அதுவும், அவன் என்னை விட்டுப் பிரிந்த பிறகு, பல விஷயங்கள் தெரிந்திருக்கின்றன எனக்கு. புரியாதிருந்த பல நிகழ்ச்சிகள் புரிந்திருக்கிறது...”

ரேணுகாவின் புருவங்கள் உயர்ந்தன. அதன் பொருளைப் புரிந்து கொண்டாள் நீலா. "பின்னே நான் ஏன் இத்தனை நாள் பேசாமல் இருந்தேனென்று கேட்கிறாய்? அப்படித்தான் என் மானத்தைப் போக்கக்கூடிய போட்டோக்கள் பல அவனிடம் இருக்கின்றன. எதாவது உளறப்போய், அவைகளை வெளிப்படுத்திவிடுவான் என்று பயந்தே வாயைப் பொத்திக் கொண்டிருந்தேன்."

“இப்போது?”

“இப்போது துணிந்து விட்டேன். என் தோழி நீ. நீயும் உன் அப்பாவும் அக்காவும் நல்லவர்கள். அமைதியாயும் சந்தோஷமாயும் இருந்தது உங்கள் குடும்பம். அதிலே துயரத்தை விதைத்துவிட்டான் இந்தப் பாவி. எதைப் பொறுத்தாலும், அதைப் பொறுக்க முடியவில்லை என்னால். வருவது வரட்டும். என் மானம் போனாலும் போகட்டும். அவனுக்கு எதிரான தகவல்களை ஒன்று விடாமல் சேகரித்து, உன்னிடம் கொண்டு வந்து தருகிறேன், அதை வைத்துக் கொண்டு நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம். உன் காதலனையும் உன் தந்தையையும் உன் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.”

“பிறகு உன் கதி?”

"போகட்டும் எப்படியாவது! ரேணு! காலையிலே இந்தக் தோட்டத்துக்கு வந்து பார். புல்லின் நுனியிலே பனித்துளி இருக்கிறது. ஐந்து நிமிட அற்ப ஆயுள். அந்த ஐந்து நிமிடங்களுக்குள், பார்ப்பவர் உள்ளங்களுக்கு எத்தனை பரவசத்தைக் கொடுத்துவிட்டு மடிகிறது! மனிதன் நூறாண்டுக் காலம் நீண்ட ஆயுள் வாழ்ந்தாலும், பனித்துளி தரும் இன்பத்திலே ஆயிரத்திலொரு பங்கை அயலானுக்குத் தருகிறானா? இல்லையே? எனக்கு என்ன நேரிட்டாலும் சரி. துணிந்து விட்டேன்...”

ரேணுகா அவளைத் தழுவிக் கொண்டாள். “உன் பேச்சு, பயம் ஏற்படுத்துகிறது நீலா. யோசனை செய்வோம். பொறுத்துக் காரியமாற்றுவோம். போகலாம், வா.”

இருவரும் கார் ஷெட்டிலிருந்து வெளிவந்தார்கள். “நான் போய் வருகிறேன், ரேணுகா" என்று நீலா விடை பெற்றாள்.

காவல்காரனருகே நின்ற மெக்கானிக்கைக் கை தட்டிக் கூப்பிட்டாள் ரேணுகா. “ஷெட்டுக்குப் போகலாமப்பா. உன் வேலையைக் கவனி” என்று அனுமதி தந்தாள். மனச்சுமையுடன் பங்களாவுக்குள் திரும்பினாள். மெக்கானிக், கார் ஷெட்டுக்குச் சென்றான். காரின் கீழே குனிந்தான். “அண்ணே, எல்லா டயலாக்கும் நல்லாக கேட்டாச்சுதா? வாங்க வெளியே!” என்றான்.

காரினடியில் மல்லாந்து படுத்திருந்தவன், முதுகாலேயே நகர்ந்து வெளி வந்தான். மெக்கானிக் அவனைக் பாராட்டினான்.

“அதிர்ஷ்டக்காரர் அண்ணே நீ ரொம்ப சாமர்த்தியமா என்னை வெரட்டியவங்க, கார் அடியிலே படுத்திருக்கிற உங்களைக் கவனிக்காமல் விட்டாங்க. பாருங்க! வயசுப் பொண்ணுங்க பேச்சுண்ணாலே அது ஒரு தனி குஷிதான்! என்ன அண்ணே பேசிட்டாங்க?”

“தலை போகிற விஷயம் பேசிக்கொண்டார்கள்!” அரக்கத்தனமாகச் சிரித்தான் நஞ்சுண்டன். ஆம். அவன் நஞ்சுண்டன்.

“ஐந்து நிமிடப் பனித்துளியா! அதை இரண்டு நிமிடத்தில் முடிக்கிறேன், இரு!”

பல்லைக் கடித்துக் கொண்டு அவன் பேசியது மெக்கானிக்குப் புரியவில்லை.

“என்ன அண்ணே சொல்றீங்க?” என்றான்.

“சொன்னேன்" சுரைக்காய்க்கும் உப்பில்லை என்று! மூடடாவாயை!” சொற சொறப்பான கன்னத்தைத் தேய்த்துக் கொண்டான் நஞ்சுண்டன். பத்துக்குப் பன்னிரண்டடிப் பரப்புள்ள அந்தக் கார் ஷெட்டுக்குள், காரைச் சுற்றி வலம் வந்தான். திடீரென அவன் முகம் பிரகாசமடைந்தது. நின்றான். மெக்கானிக்கையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான். பிறகு புன்னகை பூத்தான். மெக்கானிக்கை அணுகினான். முதுகில் அன்புடன் தட்டி நிமிர்த்தினான்.

"என்னண்ணே?” குழறினான் இளைஞன். “எஜமானியம்மாளோடு பேசிக் கொண்டிருந்தாளே, அவளைப் பார்த்தாயில்லையா? நல்ல அழகாயில்லை?" என்றான் நஞ்சுண்டன்.

“ஆமாம் அண்ணே” என்று இளித்தான் மெக்கானிக்.

“என் மனைவி அவள்.”

"ஆ!” மெக்கானிக் இரண்டடி பின்னடைந்தான். “என்னை மன்னிச்சிடுங்க, அண்ணே. எனக்குத் தெரியாது நீங்க கேட்டீங்களேன்னு...”

“சீ போடா, முட்டாள்!” நஞ்சுண்டன் அலட்சியமாகச் சிரித்தான். “தாலி கட்டிய பெண்டாட்டியா கெட்டு விட்டது! ஏதோ பெயருக்கு அப்படிக் கூப்பிடுகிறேன்!” மெக்கானிகைக் காலேடு தலை ஆராய்ந்தான்.

“ஒரு வேலை சொல்கிறேன், செய்கிறாயா?”

“என்னண்ணே?”

நஞ்சுண்டன் மெக்கானிக்கின் காதில் இரண்டு வார்த்தைதான் கிசுகிசுத்திருப்பான்.

“ஐயையோ!" பயந்து நடுங்கிப் பின்வாங்கினான் மெக்கானிக். "என்னண்ணேங்க உங்க சம்சாரத்துக் கிட்டேயே போய் வாலாட்டச் சொல்றீங்க?”

"இன்னொரு தரம் அந்த வார்த்தையை உபயோகித்தால், இந்த ஸ்பானராலேயே தலையில் போடுவேன்!” செல்லமாக அவனைத் தட்டிக் கொடுத்தான் நஞ்சுண்டன். பர்ஸை வெளியிலெடுத்தான். வெடித்து விடும்போல் வீங்கியிருந்தது அது. நாலைந்து சற்றே இளைத்தது. "பிடி. கரும்பு தின்னக் கூலி.”

மெக்கானிக்கின் மிரட்சி பின்னும் அதிகரித்தது. “வேணாம் அண்ணே. காலிலே இருக்கிறதைக் கழட்டிக் கிட்டாங்கன்னா?”

வலுக்கட்டாயமாக அவனுடைய காக்கிச் சட்டையின் பையில் நோட்டுகளைத் திணித்தான் நஞ்சுண்டன். “அவ்வளவு நேருகிற வரையில் நீ ஏன் அங்கே நிற்கிறாய்?” மீண்டும் கிசுகிசுத்தான்.

"மெய்யாவா அண்ணே?” மெக்கானிக்கின் கண்கள் வெளியே விழுந்து விடுகிற மாதிரி பங்களாவைப் பார்த்தன.

“மெய்யோ, பொய்யோ? உனக்கேன் அதைப் பற்றிக் கவலை? நான் சொன்ன மாதிரி சொல்லிவிட்டுக் கிளம்பிவிடு மறு நிமிடமே. வேறே தப்புத்தண்டா எதுவும் நீ பண்ணவும் வேண்டாம். அவள், காலில் இருக்கிறதைக் கழற்றிக் கொள்ளவும் மாட்டாள். பிரமித்துக் திகைத்து, சிலையாக நிற்பாள். நீ வந்து விடு.”

மெக்கானிக் இளைஞன் சற்றுத் தடுமாறினான். நெஞ்சைத் தடவிக் கொண்டான். சட்டைப் பையில் நீட்டிக் கொண்டிருந்த நோட்டுக்கள் அவன் கையில் பட்டன.

“ரைட் அண்ணே" என்றான். "உனக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது. போய் வா.” ஆசி கூறி அனுப்பினான் நஞ்சுண்டன்.

நோட்டுப் பட்ட புத்தகங்களையெல்லாம். அடுக்கி ஷெல்பில் வைத்தான். நீலா மேஜை விளக்கை நிறுத்துவதற்காக ஸ்விட்சின் பக்கம் குனிந்தாள்.

கதவை யாரோ தட்டினார்கள். இந்த வேளையில் யார்? நஞ்சுண்டனா? பயத்துடன் திறந்தாள். முன்பின் தெரியாத ஆள். “அண்ணன் இல்லை நஞ்சுண்ட அண்ணன்?”

"இங்கே அவர் வருவதில்லை” என்றாள் நீலா வெடுக்கென்று.

“அண்ணனோட தோஸ்து நான்.” அவள் அனுமதியின்றியே அவன் உள்ளே வந்து விட்டான். “நான் கார் மெக்கானிக். அண்ணன் வர்றதாச் சொன்னாங்களே!” அனாவசியமாகச் சிரித்தான்.

நீலாவுக்குக் கோபம் வந்தது. அழையாமலே வீட்டுக்குள் நுழைய என்ன திமிர் இவனுக்கு! பேச்சு, சிரிப்பு, பார்வை எல்லாமே தூ!

“அண்ணனும் கிடையாது, தம்பியும் கிடையாது. இடத்தைக் காலி செய், முதலில்!" என்றாள் கடுமையாக...

“ராவு இன்னேரத்துக்குமேலே எங்கே போகச் சொல்றீங்க? அண்ணன் காலையிலே வருமில்ல? அதுவரையில் இங்கே தங்கிக்கிறேன். என்ன!”

நீலாவுக்கு வியர்த்துக் கொட்டியது. பீதி ஒருபுறமும் ஆங்காரம் மறுபுறமும் அவளை ஆட்டி வைத்தன. 'டேய், மரியாதையைாய் வெளியே போகிறாயா, இல்லையா? ஒரு கூச்சல் போட்டேன் என்றால் அக்கம் பக்கத்திலிருக்கிறவர்கள் வந்து உன்னை எலும்பெல்லாம் எண்ணி விடுவார்கள்!”

"அட தெரியும், கண்ணு! அலட்டிக்காதே. குழந்தைப் பாண்டியன் பங்களாவில் வேலை பார்த்தவன் தான் நானும்!”

“அதனாலே?”

“அதனாலே உன் யோக்கியதை பூராத் தெரியுங்கறேன். அவர் படுக்கையின் கீழே, உன் லவ் போஸ் போட்டோவெல்லாம் வைச்சிட்டிருக்கிறது தெரியாதுன்னு நினைக்காதே! பணக்காரங்கன்னா மட்டும் பல்லிளிப்பாயா? என்கிட்டே கூடப் பணம் இருக்குது!” பையைத் தட்டிக் காட்டினான் அவன்.

"போடா வெளியே!” என்றாள் நீலா ஆவேசமாக அவள் நெஞ்சுக்குள் ஒரு பயங்கர பூகம்பம்! குழந்தைப் பாண்டியனிடம் கிழட்டு நோயாளியிடம் அவளுடைய ஆபாசப் புகைப்படங்களா! அடப் பாவி நஞ்சுண்டா! தந்தையைப் போலிருந்த அந்த நல்லவரையுமா தீண்டி விட்டாய் நீ! அதனால்தான் அன்று தன்னை அருகில் கூப்பிட்டு, அன்புடன் பேசினாரா! ரேணுகாவுக்குத் தெரிந்தால் எத்தனை அவமானம்! எவ்வளவு இழிவு!

நீலாவின் ரத்தம் கொதித்தது. கண்கள் சிவந்தன. பின்னர் இருண்டன.

வந்தவன் வெளியேறிவிட்டான் வெற்றியுடன். அவன் ஊன்றியவித்துதான் ஆங்கார விருட்சமாக விடுவிடுவென்று வளர்ந்து விட்டதே!

நீலா பல்லைக் கடித்துக் கொண்டாள். எப்பாடு பட்டேனும் குழந்தைப் பாண்டியனின் வசமிருக்கும் புகைப் படங்களைக் கைப்பற்ற வேண்டும்! அந்த முயற்சியில் உயிரே போனாலும் சரி!

*****

9

டெலிபோன் டயலைச் சுற்றினாள் நர்ஸ் அம்மணி. "ஹலோ, பாபுலர் மெடிக்கல் ஷாப்பா? பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை அனுப்புவதாகச் சொன்னீர்களே.”

ஆரம்பித்தவள் திடுப்பென... நிறுத்தினாள்... அறையின் வாசலில் நஞ்சுண்டன் நின்றிருந்ததே காரணம்.

டெலிபோனைத் திரும்ப வைத்தாள் அம்மணி. வெளியேற முயன்றாள். ஆனால் வழியை அடைத்துக் கொண்டு நின்றான் நஞ்சுண்டன். "ஏன் நர்ஸ்? பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை வேண்டாமா? ஏன் போன் செய்யாமல் வைத்து விட்டாய்?” மரண அமைதி நிரம்பி வழிந்தது அவன் குரலில்.

அம்மணி பதில் பேசவில்லை. நஞ்சுண்டன் தானே போனை எடுத்தான். "பாப்புலர் மெடிக்கல் ஷாப்பின் போன் நம்பர் என்ன, நர்ஸ்?”

அப்போதும்... பேசாமல் நின்றாள் அம்மணி. மேஜை மீது கிடந்த டெலிபோன் டைரக்டரியை நஞ்சுண்டனே புரட்டினான். 'பாபுலர் மெடிக்கல் ஷாப்' என்ற முகவரிக்கான எண்ணைக் கண்டு பிடித்தான். டயலைச் சுழற்றினான். "ஹலோ! இங்கே குழந்தைப் பாண்டியனின் வீட்டிலிருந்து பேசுகிறோம். பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை அனுப்புவதாகச் சொன்னீர்களே, என் அனுப்பவில்லை?” சிரிப்பு வெடித்தது அவன் குரலில். "என்ன, அப்படி ஏதும் சொல்லவில்லையா? ஓகோ, கொஞ்சம் இருங்கள்.”

அம்மணியின் முகம் வெளுத்திருந்தது. அங்கிருந்து நகர்ந்தால் போதுமென்று அவள் பதைப்பது கால்களின் நடுக்கத்திலிருந்து புலப்பட்டது.

நஞ்சுண்டன் ரிஸீவரின் வாயைப் பொத்திக் கொண்டான். "எந்த மாத்திரையும் அனுப்புவதாக அவர்கள் சொல்லவில்லையாமே? குழந்தைப்பாண்டியன் என்று எவரையுமே தெரியாதென்கிறார்களே?”

அவன் பார்வை நர்ஸின் மீதே அசையாது நின்றது. மேலும் சில வினாடிகள் ஓடின. “ஸாரி சார்” என்று டெலிபோனில் கூறிவிட்டு ரிஸீவரைத் திரும்ப வைத்தான்.

ஒன்று, இரண்டு, மூன்று.

தன்னை நோக்கி அவன் வைக்கும் ஒவ்வோர் காலடியும் அம்மணியை அச்சத்துக்குள்ளாக்கிற்று.

நாலு, ஐந்து, ஆறு.

நஞ்சுண்டனின் கரிய அடர்ந்த புருவங்கள் அவள் விழிகளுக்கு வெகு அருகே நெருங்கி நின்றன.

“நர்ஸ்" என்றழைத்தான் நஞ்சுண்டன் கனமான குரலில். “பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை ரொம்பக் காலமாக வாங்கிக் கொண்டு வருகிறாய். இல்லையா? ரொம்ப அதிகமாகக் கூட வாங்கி விட்டாய். த்சொ. த்சொ, உடம்புக்கே ஆகாதம்மா.”

அம்மணி ஒருவழியாய்த் தன் நாவைக் கண்டு பிடித்தாள். “வழி விடுங்கள்.”

"வழி, விடுங்கள் என்றா சொல்கிறாய்?" நஞ்சுண்டன் இளித்தான். “வழி காட்டுங்கள் என்று சொல்லம்மா இன்னும் பொருத்தமாக இருக்கும். நான் காட்டத்தான் வந்திருக்கிறேன். இதோ பார்."

பாண்ட் பையிலிருந்து ஓர் அட்டையை எடுத்து நீட்டினான்.

அவள் திடுக்கிட்டாள். "என்ன இது?”

"ரயில் டிக்கெட் கொச்சிக்கு.”

“கொச்சிக்கா?”

“ஆமாம். அங்குதானே உன் அம்மா தனியாய் இருக்கிறாள்? இன்றிரவே புறப்படும். பாவம், ரொம்ப அபாயத்தில் இருக்கிறாளாம்.”

“பொய் பொய்!” சீறினாள் அம்மணி. “என் அம்மாவுக்கு ஒன்றுமில்லை. நான் எங்கேயும் போக மாட்டேன். என்னை அனுப்ப உனக்கு எவ்வித உரிமையும் கிடையாது."

நஞ்சுண்டன் கடகடவென்று சிரித்தான். “நர்ஸ்! நீ ஒரு குழந்தை. யாருடைய பேச்சையோ கேட்டுக்கொண்டு இங்கே உளவு பார்க்கிறாய். ஒப்புக் கொள்கிறேன்: உன்னை இயக்குபவர் யாரென்று எனக்குத் தெரியவில்லைதான். ஆனால் அதற்காக உன் திருப்பணியைத் தொடர்ந்து நான் அனுமதித்துக் கொண்டிருக்கப் போவதில்லை.” பாண்டியன் மறு பையிலிருந்து ஓர் அஞ்சலட்டையை எடுத்தான் நஞ்சுண்டன். "படித்துப் பார். உன் அம்மா எழுதியிருக்கிறாள். இன்று காலை வந்தது.”

நடுங்கும் கரங்களுடன் அதைப் பெற்றுக் கொண்டு படித்தாள் நர்ஸ் அம்மணி. மலையாளத்தில் எழுதப் பட்டிருந்தது. அந்தக் கார்டு. அதன் சாராம்சம்:

“அன்புள்ள அம்மணிக்கு, உன்னைப் பற்றிப் பலவிதமான செய்திகள் எனக்கு வந்திருக்கின்றன. உன்னை உடனே இங்கே வரவழைத்துக் கொள்ளாவிட்டால் என் உயிருக்கே அபாயமாம். எனக்கு இதெல்லாம் புரியவில்லை. பயமாயிருக்கிறது. நீ சென்னையில் இருக்க வேண்டாம். உடனே புறப்பட்டு விடு.”

கடிதத்தைப் படித்ததும் அம்மணி வெடுக்கென நிமிர்ந்தாள். "எல்லாம் உன் வேலை! உன்னை... உன்னை...”

அலட்சியத்தில் தோய்த்தெடுத்த அட்டகாசச் சிரிப்பு வெளிப்பட்டது நஞ்சுண்டனிடமிருந்து. “அம்மணி! நீ ஒரு குழந்தை என்றேனே, எவ்வளவு உண்மை! இது யாருடைய வேலையாயிருந்தால் என்ன? அதுவா பிரச்னை? நீ இங்கேயே மேலும் இருப்பதால் உன் அம்மாவுக்கு அபாயம். நீ சிக்கியிருப்பது எத்தனை பயங்கரச் சுழல் என்று உனக்குத் தெரியாது. இடையூராக வருவோரை ஒரே நொடியில் நசுக்கக்கூடிய ஒரு பெரிய சக்திக்கு எதிராக நீ வேலை செய்து வருகிறாய். அந்தச் சக்திதான் உன் அம்மாவை எச்சரிக்கிறது. உனக்கும் நல்ல புத்திமதி கூறுகிறது. கேளம்மா அதன் பேச்சை. சமர்த்துப் பெண்ணல்லவா! உனக்கு ஏதாவது நேர்ந்தால் உன் அம்மாவுக்கு வருத்தம். உன் அம்மாவுக்கு ஆபத்து நேரிட்டால் உனக்கு வருத்தம். ஏனம்மா வம்பு?”

அம்மணி விடுவிடுவென்று கீழே இறங்கிச் சென்றாள். ஆனால் நஞ்சுண்டனுக்கு எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. அம்மணியின் முடிவைப் பற்றி. நிச்சயம் புறப்பட்டுவிடுவாள் ஊருக்கு. ஸூவானும் அவளுடைய ஆட்களும் எவ்வளவு கெட்டிக்காரர்கள்! எத்தனை சுறுசுறுப்பானவர்கள்! இந்த நர்ஸ் இடைஞ்சல் செய்கிறாள் அடிக்கடி என்று ஒரு வார்த்தை தான் எப்போதோ சொன்னான். உடனே அம்மணியின் பூர்வோத்திரங்களை விசாரித்து, என்ன சுறுசுறுவென்று அவளுடைய அம்மாவைத் தேடிக் கண்டு பிடித்து மிரட்டி விட்டார்கள்!

சிரிப்பை அடக்கிக் கொண்டு நஞ்சுண்டன் கீழே வந்தான். குழந்தைப் பாண்டியனின் அறைக்குப் பக்கத்து அறையில் அம்மணி தன் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. ரேணுகா, தந்தைக்காகப் பழரசம் பிழிந்து கொண்டிருந்தாள்.

மூவருக்கும் கேட்கும்படியாக நஞ்சுண்டன் இரைந்தே பேசினான்: "அதிகமாய்க் கவலைப்படாதே, நர்ஸ். ஒன்றும் இருக்காது. இரண்டு நாளில் திரும்பி விடலாம். பார்.”

"என்னது? என்ன விஷயம்? என்றார் குழந்தைப் பாண்டியன் திகைப்புடன். வெறுப்புப் பார்வையை வீசினாள் ரேணுகா அவன் மீது.

"ஒன்றுமில்லை” என்றான் நஞ்சண்டன். “நர்ஸ் அம்மணியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். ஊரிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. பாவம், அழுது கொண்டே புறப்படுகிறாள்.”

“ஊருக்கா? என்னிடம் சொல்லவில்லையே?” ரேணுகாவின் பார்வை சாட்டையாய்ச் சாடியது நஞ்சுண்டனை. “என்ன அம்மணி?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து சென்றாள்.

“என்ன திடீரென்று...” என்று முணுமுணுத்தார் குழந்தைப் பாண்டியன். நர்ஸ் அம்மணி திறமைசாலி. அவளைப் போல் இன்னொருத்தி கிடைக்க வேண்டுமே? அந்தக் கவலை அவர் முணுமுணுப்பில் தென்பட்டது.

சட்டென அவர் பக்கம் அமர்ந்தான் நஞ்சுண்டன். பழத்தைப் பிழிந்தபடியே தாழ்ந்த குரலில் குழந்தைப் பாண்டியனிடம் சொன்னான்: “அந்த நர்ஸ் ஒரு சீன உளவுக்காரி.”

“நிஜமாய்?” குழந்தைப் பாண்டியனின் விழிகள் தெறித்து விழுந்துவிடும் போல் ஆகின.

“உஷ்!” நஞ்சுண்டனின் குரல் இன்னும் கிசுகிசுத்தது. “வைர முருகனுக்காக அவள் வேலை செய்து வந்திருக்கிறாள். முதல் நாள் நான் வந்ததுமே கண்டு விட்டேன்... உங்களுக்கு நாலைந்து டிராங்கவலைஸர் மாத்திரைகளை ஒரே தடவையில் கரைத்துக் கொடுக்கப் பார்த்தாளே, நினைவில்லை?"

“ஆமாம்... ஆமாம்...” குழந்தைப் பாண்டியனின் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.

“நான் அதிகம் கிளறவில்லை. கொஞ்சம் மிரட்டினேன். மரியாதையாய் வெளியேறிவிட ஒப்புக் கொண்டாள். பேசாமல் அனுப்பிவிடுங்கள்.”

திகிலுடன் குழந்தைப் பாண்டியன் கேட்டார்: “இவளைச் சீனாக்காரனின் உளவாளி என்கிறாயே? வைர முருகன் இங்கிருந்து போய்விட்டது இவளுக்குத் தெரியாமலா இருக்கும்? அதன் பிறகும் ஏன் இங்கே தங்கியிருக்கிறாள்?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை, ஒரு வேளை”

“ஒரு வேளை?”

“ரேணுகாதான் சுகுமாரியைக் கொலை செய்தாள் என்று இவள் ஊகித்திருப்பாளோ? அதை ஊர்ஜிதம் செய்து கொண்ட பிறகு நம்மிடம் பணம் பறிக்கலாமென்று காத்திருக்கிறாளோ என்னவோ? அதற்கு இடம் தராமல் முன்னதாகவே”

அவன் சொல்லி முடிக்குமுன் சீறிக் கொண்டு திரும்பி வந்தாள் ரேணுகா, "என்னவோ இதில் சூது இருக்கிறது அம்மணி இப்படியொன்றும் திடீரென்று புறப்பட மாட்டாள். கேட்டால் எதுவும் சொல்ல மாட்டேனென்கிறாள். நிச்சயமாய், நிச்சயமாய்...” நஞ்சுண்டனையே வெறித்து நோக்கினாள்.

நஞ்சுண்டன் சிரித்தான். “சொல்ல மாட்டேன் என்றாலே, அவள் மீது ஏதோ தப்பு இருப்பதாகத்தானே அர்த்தம்? குடையாதே, ரேணுகா. பாவம், மன்னித்து அனுப்பிவிடலாம்.”

கையில் ஸூட் கேஸூம் கண்ணல் நீருமாக வந்தாள் நர்ஸ் அம்மணி. குழந்தைப்பாண்டியனின் கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். “நான் போய் வருகிறேன்" என்றாள் கம்மிய தொண்டையில்.

“உம், ஊம்” என்றார் குழந்தைப் பாண்டியன்.

“அப்பா! அம்மணியின் சம்பளம் பாக்கியோடு நூறு ரூபாய் சேர்த்துக் கொடுக்கும்படி மானேஜரிடம் சொல்கிறேன்" என்றாள் ரேணுகா.

"கொடுக்கச் சொல், கொடுக்கச் சொல்” என்று அவசரப்படுத்தினார் குழந்தைப்பாண்டியன். பல காலமாக எவள் அவருக்கு அந்தரங்கப் பணிவிடைகளெல்லாம் செய்தாளோ, அந்த நர்ஸை ஏறிட்டுப் பார்க்கவும் அவர் நடுங்கினார்.

“நான் வேண்டுமானால் நம் காரில் ஸ்டேஷன் வரை கொண்டு போய் விட்டு விட்டு வரட்டுமா?” அன்பொழுக வந்தது நஞ்சுண்டனின் கேள்வி.

“ரொம்ப நன்றி.” அம்மணியல்ல. ரேணுகாதான் பல்லைக் கடித்தபடி பதிலளித்தாள்.

இரண்டு பெண்களும் வெளியேறி விட்டார்கள்.

“ஹூம்! சீனாக்காரனின் உளவாளிகள் இரண்டு பேரில் ஒருத்தி ஒழிந்தாயிற்று” என்றான் நஞ்சுண்டன்.

"இன்னொருத்தி இருக்கிறாளா என்ன?” திடுக்கிட்டார் குழந்தைப் பாண்டியன். “யார் அவள்?”

"இவளைப் பற்றிச் சொன்னதையே நீங்கள் நம்பவில்லை. அவள் பேரைச் சொன்னால் என்னைப் பைத்தியக்காரன் என்பீர்கள்.”

“இல்லை, சொல்லு.”

வாசற்புறம் ஒரு தடவை பார்த்துக் கொண்டான் நஞ்சுண்டன். பின்னர்: “உங்கள் மகளின் சினேகிதி தான் உங்களுக்கும் தெரிந்தவள்தான் நீலா.”

“நீலா!” மிரள மிரள விழித்தார் குழந்தைப் பாண்டியன். அவருடைய குழப்பமும் பீதியும், வேறொருவருக்கானால் பரிதாபம் ஏற்படுத்தியிருக்கும். நஞ்சுண்டனுக்கோ வேடிக்கையாக இருந்தது.

“நீலாவேதான்” என்றான் மீண்டும் அழுத்தமாக. “சீனாக்காரர்கள் சில பேருடன் அவள் அடிக்கடி குலவுகிறாள். நான் கவனித்துக் கொண்டு வருகிறேன். வைர முருகன் இங்கே இருப்பதாக எண்ணிக் கொண்டு ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் இந்த அறையில் கூட நுழைவாள் பாருங்கள்.”

"நுழையட்டும் அவளுக்குப் பாடம் கற்பிக்கிறேன். சே என்ன மோசடியான உலகம்!” குழந்தைப் பாண்டியனின் கண்கள் பனித்தன. “ஏனப்பா, இவ்வளவு துருவித் துருவிக் கண்டுபிடித்து எல்லாம் செய்கிறாள். அந்த வைர முருகன் விஷயத்தையும் தீர்த்து விடேன்.”

"ஆமாம், ஆமாம் அதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

"யோசிப்பதற்கு என்ன அதிலே? டாக்டர் நாமகிரியின் வீட்டிலே இருக்கிறது வைர முருகன். சீனாக்காரர்கள்தான் ஒரு போலி வைர முருகன் தயாரித்து வைத்திருப்பதாகச் சொல்கிறாய். சாமர்த்தியமாய் மாற்றி விடு. உனக்கா சொல்லித் தர வேண்டும்? செய்யப்பா? செய்து, அந்தச் சீனாக்காரனை வாயை அடைத்து விடு. அவனும் அவன் ஆட்களும் இங்கே வரவே வேண்டாம். மிஞ்சியிருக்கிற என் ஒரே மகளை என்னிடமிருந்து அபகரிக்கவும் வேண்டாம். அவள் செய்த பைத்தியக்காரக் கொலையை யாருக்கும் தெரியாமல் மறைந்துவிடப்பா, மறைத்துவிடு.”

“பயப்படாதீர்கள், குழந்தைப் பாண்டியன் சார். நான் வேறு எதற்கு இருக்கிறேன்?” கைக்குட்டையால் அவர் கண்களைத் துடைத்தான் நஞ்சுண்டன். “சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்திருக்கிறேன். எதுவும் தலைக்கு மேல் போய்விடவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.”

"இருக்கிறேனப்பா, இருக்கிறேன்.” குழந்தைப் போல் விசும்பினார் குழந்தைப்பாண்டியன்.

டாக்டர் நாமகிரி கிளினிக்கில் இல்லை. வீட்டில் தன், அறையில் இருந்தாள்.

“உட்காருங்கள்” என்றாள் அருகில் நிழலாடியதும். வைர முருகன் வந்த வேளையோ என்னவோ, சிடுசிடுப்புக் குறைந்திருந்தது. ஆனால் தலை நிமிர்ந்து பாராமல் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள், டைரியில் அதை மூடி வைத்து. விட்டுப் பார்த்தவள், திகைத்தாள்.

நஞ்சுண்டனைக் கண்டதும் அவளுக்கு ஏற்பட்ட நினைவு, குழந்தைப் பாண்டியனைப் பற்றித்தான்.

"அவருக்கு ஒன்றுமில்லையே - குழந்தைப் பாண்டியனுக்கு?” என்றாள்.

“நோ. நோ. உங்கள் கண்காணிப்பில் இருக்கிறராயிற்றே? என்ன கெடுதல் நேர்ந்துவிடும்." என்றான் நஞ்சுண்டன்.

தன் உச்சந்தலை குளிர்ந்ததை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை டாக்டர் நாமகிரி. ஆனால் பூத்து விட்ட புன்சிரிப்பையும் மறைக்க இயலவில்லை. "பின் வேறென்ன விஷயமாக வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

“நீங்களும் உங்கள் விலையுயர்ந்த உடைமையும் பத்திரமாக இருக்கிறீர்களா என்று பார்த்துப் போக வந்தேன்" என்றான் நஞ்சுண்டன்.

“நான் பத்திரமாயிருப்பதைத் தான் நீங்களே பார்க்கிறீர்களே? உடைமை என்பது?”

“வைர முருகனைக் குறிக்கிறது.”

வீட்டின் உட்புறம் டாக்டரின் பார்வை சென்றது. “பூஜையறையில் பத்திரமாயிருக்கிறது. ஏன் அதைப் பற்றித் திடீர்க் கவலை?”

"உங்கள் சகோதரர்கள் சொல்லியிருப்பார்களென்று நினைத்தேன் - சீனர்களுக்கும் வைர முருகனுக்குமுள்ள சம்பந்தம் பற்றி. சொல்லவில்லை?”

டாக்டர் நாமகிரியின் முகம் கறுத்தது. “அவர்கள் அதிக நேரம் என்னுடன் தங்கியிருக்கவில்லை. சாப்பிட்டானதும் புறப்பட்டு விட்டார்கள். ஆனால், வைர முருகனை அபகரிக்க யாராவது முயன்று, கொண்டிருப்பார்களென்று மட்டும் எச்சரித்தார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாதே என்று சொல்லியனுப்பினேன். ஏன்? இப்போது...”

"அது பத்திரமாக இருக்கிறதா என்று பாருங்கள் முதலில்” என்று நஞ்சுண்டன் முடித்தான்.

டாக்டர் நாமகிரியைக் கவலையும் பரபரப்பும் ஆட்கொண்டன. “வாருங்கள், போய்ப் பார்க்கலாம்” என்று எழுந்து கொண்டாள்.

நஞ்சுண்டனின் முகத்தில்தான் எத்தனை திருப்தி! எவ்வளவு மகிழ்ச்சி! 'முதலில் வைர முருகன் வைக்கப் பட்டுள்ள இடத்தைத் தெரிந்து கொள்வோம். பிறகு...'

ஆனால் அவன் எண்ணங்களில் மண் அள்ளிப் போடுவதுபோல் ஒரு நர்ஸ் விரைந்து உள்ளே வந்தாள். "டாக்டர்! டாக்டர்! அந்தப் புதுப் பேஷண்ட்.”

“சரி, சரி” என்று அலட்சியத்துடன் உள்ளே செல்லவிருந்தாள் டாக்டர் நாமகிரி. ஆனால் மறுகணமே அவள் தொழிலறிவு விழித்துக் கொண்டது. திரும்பி, “மேரி! புதுப் பேஷண்ட் என்றா சொன்னாய்?” என்றாள்.

*****

10

'புதுப் பேஷண்ட்' என்றதும் ஏன் டாக்டர் நாமகிரிக்கு இத்தனை அக்கறை? நஞ்சுண்டனுக்குப் புரியவில்லை. “ஆமாம், டாக்டர் முதல் தடவையாக இன்று தான் ஏதோ முனகுகிறார்” என்றாள் நர்ஸ்.

“வெறும் முனகலா? வார்த்தையா?” கேட்டுக் கொண்டே நர்ஸின் பின்னால் வேகமாகச் சென்றாள் டாக்டர். நஞ்சுண்டனுடன் பேசிய பேச்சும், அவன் காத்திருக்கும் விஷயமும் மறந்தே போயின. “என்ன வார்த்தை என்று உற்றுக் கேட்டாயா?”

“எதுவும் புரியவில்லை, டாக்டர், அதனால் தான் உடனே வந்துவிட்டேன் உங்களிடம்.”

"குட்”

டாக்டர், நர்ஸ் இருவரின் உருவங்களும் கிளினிக்கின் தாழ்வாரங்களில் மறைந்தன. நஞ்சுண்டன் உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றான் சில வினாடிகள். கைக்கு எட்டுவது போலிருப்பது தாடலென நழுவுவது இது முதல் தடவையல்ல! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது தான். ஆனால் வைர முருகனைக் கூட ஒதுக்கச் செய்து விட்ட அந்த வினோத நோயாளி யார்? அந்த நோயாளி பேசத் தொடங்கியதில்தான் அப்படி என்ன ஆச்சரியம்?

டாக்டர் சென்ற வழியே பின் தொடர்ந்தான். ஓர் அறையின் வாசலில் மூன்று நாலு பேர் நின்றிருந்தார்கள். பயத்துடனும் ஆவலுடனும் அறைக்குள் அடிக்கடி எட்டிப் பார்த்தவாறிருந்தார்கள் அவர்கள். டாக்டர் அந்த அறையில் தான் இருக்கிறாரென்று கண்டான் நஞ்சுண்டன்.

அறைக்கு நடுவே ஒரு கட்டில் காணப்பட்டது. அதிலிருந்து கிழவரை நோக்கிக் குனிந்தவாறிருந்தார். டாக்டர் நாமகிரி இரண்டு நர்ஸ்கள் பக்கத்தில் நின்றிருந்தனர். கிழவர் ஏதோ முணுமுணுக்கிறார்; அது என்னவென்று அறிந்து கொள்வதிலே அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்குப் புரிந்தது நஞ்சுண்டனுக்கு.

“இவருடன் கூட ஒரு ஆந்திர வேலைக்காரன் இருப்பானே, எங்கே?" என்று டாக்டர் நாமகிரி நர்ஸிடம் விசாரித்தாள்.

"இப்போதுதான் டீ குடித்து விட்டு வருவதாகப் போனான்” என்றாள். மேரி. “ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து விட்டு இவரை அழைத்து வந்தோம். ஏதோ பேசுகிற மாதிரி தோன்றியது. உடனே வந்து உங்களைப் கூப்பிட்டேன்.”

"இரு.” டாக்டர் நாமகிரி கிழவரிடம் மறுபடி குனிந்தாள். அவர் உதட்டினிடம் காதை வைத்துக் கேட்டாள். அவள் முகம் மலர்ந்தது. "பாலு... பாலு என்கிறார்... ஆமாம்... பாலசந்தர் என்கிறார்.” வெற்றிப் புன்னகை அவள் முகத்தில் தவழ்ந்தது. "ரெகவர் ஆகிவிடுவார் இரண்டொரு நாளில்.”

இரண்டு நர்ஸுகளுக்கும் முகத்தில் ஆனந்தம் கூத்தாடியது. டாக்டரின் வெற்றி அவர்களுக்கும் வெற்றி தானே? ஆனால் அதை அப்பட்டமாகக் காட்டிக் கொள்ள முடியுமா? “எஸ் டாக்டர்.” என்று பணிவோடு ஆமோதித்தார்கள்.

நஞ்சுண்டனுக்கு முகத்தில் இருளடித்தது. பாலசந்தர்... எந்தப் பாலசந்தர்? அவன் உள்ளத்தக்குள்ளே எதுவோ குறுகுறுத்தது.

அறைக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கிளினிக்கைச் சேர்ந்த வேலையாட்கள்தான். அவர்களில் ஒருவனை முதுகில் தட்டினான். வெராந்தாக் கோடிக்கு அழைத்துச் சென்றான்.

"யாரப்பா அந்தப் பேஷண்ட்?" என்றான்.

“பரிதாபமான கேசுங்க, அந்தப் பேஷண்ட்” என்று வேலைக்காரன் பதில் கொடுத்தான். “அவரோட மருமான் ஒரு டாக்டர். பாலசந்தர்னு பேர் பேப்பரிலே பார்த்திருப்பீங்களே?”

நஞ்சுண்டனின் இதயத்தில் ஏதோவொன்று படபடவென்று இறக்யைடித்துக் கொண்டது. அதை மறைத்துக் கொண்டான். "இல்லையப்பா என்ன வந்திருந்தது பேப்பரில்?”

"அந்த டாக்டர் மேலே ஒரு கொலைக் கேஸ் இருக்குதுங்களாம் ஒரு பொண்ணைக் கொலை செய்தாருன்னு. அந்த டாக்டர் என்னடான்னா வாயைத் திறந்து உண்மையைச் சொல்லமாட்டேங்கிறாராம். அந்த டாக்டரோட மாமன் தான் இந்தக் கிழவனாரு. டாக்டரைப் பத்தி இவருக்கு ஏதாவது தெரிஞ்சிருக்கும்னு பார்க்கிறாங்க. ஆனால், இந்தக் கிழவனார், பாவம், மருமானைப் போலீசில் பிடிச்சுப் போனது முதல் இந்த மாதிரி பிரமை பிடிச்சுக் கிடக்கிறார். இங்கே ட்ரீட்மெண்ட் கொடுக்கிறாங்க. இன்னைக்குத் தான் ஏதோ முனகுறாரு. நான் வர்றேன் சார். அம்மா வந்திட்டாங்க.”

அவன் அவசர அவசரமாக நழுவி விட்டான். நர்ஸ்களிடம் பேசியவாறே திரும்பி வந்தார் டாக்டர் நாமகிரி. நஞ்சுண்டனுக்கு டாக்டரின் பேச்சு காதில் விழுந்தது.

"பாலு, பாலசந்தர் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். அனேகமாய், நாளை ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு, நன்றாகவே பேச ஆரம்பித்து விடுவார்.”

நஞ்சுண்டன் அசையாமல் நின்றான். பாண்ட்டின் இரு பாக்கெட்டுகளிலும் அவன் கைகள் புகுந்திருந்தன. இல்லாவிட்டால் எந்தக் கழுத்தையோ முறிப்பதற்கு அவை துடிப்பது வெளியில் தெரிந்திருக்கும்!

பாலசந்தரின் மாமனா இந்தக் கிழவன்! எங்கிருந்து முளைத்தான்? இவன் பேசத் தொடங்கினால் என்னவெல்லாம் சொல்வானோ? பாலசந்தர் பிடிவாதமாக மௌனம் சாதிப்பதாலல்வா இத்தனை நாளும் கவலையற்று இருக்க முடிந்தது! பாலசந்தர் வெளியிட மறுக்கும் எந்த ரகசியத்தையாவது இந்தக் கிழவன் சொல்லி விட்டால்? பாலசந்தர் நிரபராதி என்று விடுதலையாகி விட்டால்...? அப்புறம் ரேணுகாவின் மீது என்ன பிடிப்பு இருக்க முடியும்? கூடாது, கூடாது.

கிழவன் வாயைத் திறக்கக் கூடாது. திறக்கும்படி விடக் கூடாது. கைகளை முறுக்கிக் கொண்டான். வெறுப்புடன் அவனுக்கு ஒரே அலுப்பும் சலிப்புமாயிருந்தது.

சே! எத்தனை பேரைத் தொலைத்துத் தலைமுழுக வேண்டியிருக்கிறது!

“கெட் அவுட்! கெட் அவுட் என்றால் கெட் அவுட்!”

ரமணன் கடுங்கோபத்தில் இருந்தான். தோளிலே விழுந்த அடியின் கடுமை அவனுக்கல்லவா தெரியும்!

அப்பாவு நகரவில்லை. பரிதாபமாகக் கையைப் பிசைந்தான். "மன்னிச்சுக்குங்க, சாமி. ஏமோ தெலிகண்ட நித்தர போத்தினி. மனுஷனாப் பொறந்தால் உடம்பு அசதி சகஜம் தானுங்களே?” என்றான் தழுதழுக்கும் குரலில்.

“நிறுத்து முதலில் உன் தத்துவச் சொற்பொழிவை! பெரிய சாக்ரடீஸ் அவதாரம்!” ரமணனின் குரல்தான் ஓங்கியிருந்ததே தவிர, கோபம் சற்றுத் தணிந்திருந்தது. "உடம்பு அசதி சகஜம்தான். ஆனால் முட்டாள் தனம் சகஜமில்லை. நோயாளிக்குக் கொடுப்பதற்காகத் தூக்க மாத்திரை வைத்திருந்தால் அதை நீ ஏன் எடுத்து விழுங்கினாய்?”

அப்பாவு தலையைக் குனிந்து கொண்டான: “வெறும் பால் என்று நினைத்துச் சாப்பிட்டேன். சார், அதிலே தூக்க மாத்திரை கலந்திருப்பாங்கன்னு நாகு ஏமி தெலியுது?”

“வெறும் பால் என்றால் மட்டும் நீ சாப்பிட்டு விடலாமா? கைச் செலவுக்கு நான் கொடுக்கவில்லை? நோயாளிக்காக வைத்திருப்பதைப் போய் ஏன் திருடுகிறாய்?”

"மன்னிச்சுடுங்கன்னு தான் சொல்லிவிட்டேனே! சும்மா போட்டு...” என்று முணுமுணுத்தான் அப்பாவு.

இது 'டேஞ்சர் பாயிண்ட்’ என்று ரமணனுக்குத் தெரியும். ஓட ஓட விரட்டினால் அப்பாவு முறைத்துக கொண்டு விடுவான். அப்புறம் அவனைச் சமாதானப் படுத்த ஒரு முழு நாள் மெனக்கெட வேண்டும்.

“சரி, சரி. இப்போது பாட்டுக்கு வந்துவிட்டாயே? அந்த கிழவர் எங்கேயாவது வாக்கிங் கிளம்பி விட்டால்?” என்றான்.

“நர்ஸ் மேரிகிட்டே சொல்லிவிட்டு வந்திருக்கிறேனுங்க. பார்த்துப்பாங்க” என்று அப்பாவு தெரிவித்தான்.

"அப்படியாவது எதற்காக வந்தாய்? இங்கே பட்டணமா கொள்ளை போகிறது?” என்று ரமணன் சீறினான்.

"மஞபுசிதானிக்கி காலம் லேது.” அப்பாவும் பெருமூச்சு விட்டான். “அந்தக் கிழவனாரைப் பத்திச் சொல்லாட்டிப் போனால் அப்பாலே கோபிச்சுக்கப் போறீங்களேன்னு ஓடி வந்தேன்...”

ரமணன் ஆர்வம் விழித்துக் கொண்டது: “என்ன? ஜனார்த்தனத்துக்கா? என்ன அவருக்கு?'

“என்னவோ சாக்கு ட்ரீட்மெண்டாமே, அது கொடுத்தாங்க. நேத்துதான் மொத்தத் தடவையா வாயைத் திறந்து ஏதோ முனகினாராம். இன்னிக்கு நாளைக்கு நல்லாப் பேச ஆரம்பிச்சிடுவார்னு சொல்லிக்கிட்டாங்க”

ரமணன் பாண்ட் பையில் கை விட்டான். “அப்பாவு! உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்?”

"பாதாம் அல்வாங்க.” அப்பாவுவின் கறுப்புப் பற்கள் அத்தனையும் வெளித் தெரிந்தன.

“அரை வீசை வாங்கித் தின்று இடம் கிடைக்கிற ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகித் தொலை!” ஐந்து ரூபாய் நோட்டை அப்பாவுவிடம் வீசியெறிந்தபடியே கோட்டை மாட்டிக் கொண்டான் ரமணன்.

"எதுக்குங்க இது?”

“நீ சொன்ன நல்ல செய்திக்காக.”

“அங்கேயா போறீங்க?”

“ஆமாம்.”

அப்பாவு வழி மறித்தான். "உங்களை வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க அந்த டாக்டரம்மா.”

“ஏன்?” திகைத்தான் ரமணன். "அதென்னவோ! நான் தான் போய்க் கேட்டேன், ஐயாவை அழைச்சிட்டு வரட்டுமான்னு. 'ஐயாவும் வேண்டாம், பையாவும் வேண்டாம்னு' “சொல்லிட்டுப் போயிட்டாங்க. ட்ரீட்மெண்ட் சமயத்தில் யாரும் பக்கத்திலே இருக்கக் கூடாதாம். வார்டுக்குப் பட்ட லேது. நர்ஸ் சொல்லிச்சு.”

“கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்.”

மாடிப் படியில் இறங்கும் சமயம், டெலிபோன் கிணுகிணுத்தது, "எந்தக் கவர்னரானாலும் நான் இல்லையென்று சொல்லு!" - இரண்டு படி இறங்கியிருப்பான்.

"அம்மணி கூப்பிடுதுங்க” என்ற அப்பாவுவின் தகவல் அவனைத் திரும்பச் செய்தது. “அம்மணியா? அவள், கவர்னரைக் காட்டிலும் கொஞ்சம் மேலே” ரமணன் திரும்பி வந்து டெலிபோனை எடுத்தான்.

"என்ன அம்மணி?" அம்மணி ஏதோ சொன்னாள். சரியாய்க் கேட்கவில்லை பின்னால் ஒரே கூச்சல், சமுத்திர இரைச்சல், சந்தடி, “கொஞ்சம் இரைந்து பேசு. மூர்மார்க் கெட்டிலிருந்து பேசுகிற மாதிரியல்லவா ஒரே கூச்சலாயிருக்கிறது?”

"ஆமாம். அதற்கு அருகில் தான் - ஸென்டிரல் ஸ்டேஷனிலிருந்து பேசுகிறேன்.”

“என்னது!"

"ரமணன் சார், என்னை மன்னியுங்கள். இனிமேல் நான் குழந்தைப் பாண்டியன் வீட்டிலிருந்து உளவறிந்து தெரிவிக்க முடியாது. ஊருக்குப் போகிறேன்.”

ரமணன் மேஜை நுனியில் தொற்றினாற்போல் அமர்ந்தான். அம்மணியிடனம் வழக்கமான தைரியம் காணப்படவில்லை. பின்னணியிலுள்ள கூச்சலுக்கு மேலாக உரத்துப் பேசப் பயப்படுகிறாள். குரலில் லேசான பதற்றம் தென்படுகிறது. இதெல்லாம் ஏன்?

“அம்மணி! எதையும் மறைக்காமல், ஒளிக்காமல் சொல்லப் போகிறாயா இல்லையா?” என்று அதட்டினான். "இல்லை. எனக்கு ரெயிலுக்கு நேரமாகிறது. நான் கொச்சிக்குப் புறப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். ஊரில் என் அம்மா உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விடுவார்களாம். பயமுறுத்துகிறார்கள்.”

“யார்?”

“அவன்தான் - குழந்தைப் பாண்டியன் பங்களாவில் இருக்கிறானே, அவன் தான்!"

“நஞ்சுண்டனா? அம்மணி! நீ முதல் நம்பர் அசடு! அவனைக் கொஞ்ச நாளில் நசுக்கி விடுவேன்! என்னை நம்பு!”

“உங்கள் மீது எனக்குப் பரிபூரண நம்பிக்கைதான். ஆனால், 'ரிஸ்க்' எடுத்துக் கொள்ளக் கூடிய நிலையில் நான் இல்லை. நீங்கள் எனக்கு எவ்வளவோ உபகாரம் செய்திருக்கிறீர்கள், ரமணன் சார். அதற்கெல்லாம் திருப்பிச் செய்ய முடியதவளாக இருக்கிறேன்...”

“அம்மணி...! அம்மணி...!”

“பதிலில்லை. ரெயிலின் உறுமல் மங்கலாகக் கேட்டது. அடுத்த வினாடி டெலிபோன் கொக்கியில் மாட்டப்பட்டுவிட்டது.”

கைக்கடியாரத்தைப் பார்த்தான். கொச்சி எக்ஸ்பிரஸ் இன்னேரம் பிளாட்பாரத்துக்கு டாட்டா காட்டிக் கொண்டிருக்கும். வெறுப்புடன் டெலிபோனை வைத்தான். கீழிருந்து அவனுடைய மோட்டார் பைக் குரல் கொடுத்தது. அப்பாவு எஞ்சினை ஸ்டார்ட் பண்ணியிருந்தான்.

யோசனையுடன் இறங்கியவன் ஆரோகணித்தான் வண்டியில். அப்பாவு தானாகவே முந்திக் கொண்டு, “நேனுராலேது சாரு. இன்னைக்கு ஒரு ராத்திரியாச்சும் நிம்மதியாத் தூங்கறேங்க” என்றான். ரமணன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவன் மோட்டார் பைக் டாக்டர் நாமகிரியின் கிளினிக்கை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

ரேணுகா இப்போது திக்கற்றவளாகிவிட்டாள். நஞ்சுண்டனின் கொடி, குழந்தைப்பாண்டியனின் பங்களாவிலே ஓங்கிப் பறக்கிறது. ஆனால் இதெல்லாம் இப்போது முக்கியமல்ல. ஜனார்த்தனம் அவருடைய வாயிலிருந்து வரப் போகிற வார்த்தைகள். டாக்டர் பாலசந்தரின் உயிரைக் காப்பாற்ற அந்தக் கிழவர் தரப்போகும் ஒளடதம். அதுதான் முக்கியம். அது ஒன்றுதான் இந்த நிமிடம் முக்கியம்.

குட் ஈவினிங், டாக்டர். டாக்டர் நாமகிரி நின்றாள். ரமணனை அடையாளம் புரிந்து கொண்டதும் புருவங்கள் நெற்றிக்கு ஏறின. "உங்கள் பேஷண்டைக் கவனிக்கத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.”

“அது தெரிந்துதான் நானும் வந்தேன்.”

“ஏன், நீங்கள் மெடிகல் ஸ்டூடண்டா? ஷாக் ட்ரீட்மெண்டை நேரில் ஸ்டடி செய்ய வேண்டுமா?” என்றாள் டாக்டர் நாமகிரி.

“இல்லை...”

ரமணன் தர்ம சங்கடத்துடன் புன்னகை செய்தான். "நான் தான் அவரை பேஷண்ட் ஜனார்த்தனத்தை இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்...”

"அதனால்?” டாக்டரின் வழக்கமான சிடுசிடுப்புத் தலை தூக்கியது. “அருகிலிருந்து பார்ப்பதற்கு உரிமை உண்டு என்று சொல்கிறீர்களா?”

“அப்படியில்லை..."

"யாருக்கு எப்படிப்பட்ட ட்ரீட்மெண்ட் கொடுப்பது என்று எனக்குத் தெரியும் எந்தக் கற்றுக்குட்டியும் என் அருகில் இருந்து கொண்டு சொல்லித் தரத் தேவையில்லை.”

அவனை விலக்கிக் கொண்டு மேலே நடந்தாள் டாக்டர் நாமகிரி. ரமணன் அவள் பின்னாலேயே ஓடினான். “டாக்டர்! எனக்குத் தப்பான நோக்கம் எதுவும் கிடையாது. முதல் தடவையாக ஜனார்த்தனம் வாய் திறந்து பேசப் போகிறார். அந்தச் சமயத்தில் நான் அவர் அருகில் இருக்க வேண்டியது அவசியம்.”

"ஏன்? நீங்கள் போலீஸ் அதிகாரியா?”

“இல்லை... ஆனால்...”

“வழி விடுங்கள்.” டாக்டர் நாமகிரியின் கண்கள் கோபத்தால் சிவந்தன. "ட்ரீட்மெண்டின் போது என் அஸிஸ்டெண்டுகளைத் தவிர வேறு யாரும் என் அருகில் இருக்கக் கூடாது. அதற்குச் சம்மதமானால் வைத்தியம் செய்கிறேன்... இல்லையோ, இப்போதே உங்கள் பேஷண்டை நீங்கள் அழைத்துப் போங்கள். எனக்கு ஒரு 'பாதர்' விட்டது. என்ன?”

ரமணன் தலைகுனிந்து நின்றான். ஒரு நிமிஷம் காத்திருந்து பார்த்த பின்னர், டாக்டர் நாமகிரி, ட்ரீட்மெண்ட் அறையை நோக்கி மேலே நடந்தாள்.

ரமணன் நிமிர்ந்து பார்த்தபோது கதவு சாத்திக் கொண்டிருந்தது. ஜனார்த்தனத்துக்கு 'ஷாக் ட்ரீட்மெண்ட்' ஆரம்பமாகியிருக்கும். 'ஹூம்! என்ன ஏமாற்றம்!' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ரமணன் ஏமாற்றம் மட்டுமல்ல, அபாயமும் காத்திருக்கிறது என்று அவனுக்கு அப்போது தெரியாது.

*****

11

'நான் கிங் ஓட்ட’லில் இரவு விளக்குகள் அழுது கொண்டிருந்தன. மாரிக் காலத்து முன்னிரவு நேரம். நாலைந்து ஈசல்கள் நீலக் குழாய் விளக்குகளைச் சுற்றிச் சுற்றிப் பறந்தன. ஆனால் அதைக்கூட ஓசையுடன் ஆர்ப்பாட்டமாகச் செய்துவிடக் கூடாதென்று பயப்படுகின்றன போலும். சதி செய்கிற மாதிரி, சூழ்ச்சி பண்ணுகிற மாதிரி, ரகசியமாக அவை பறந்தன. களைத்துப் போய், விளக்குகளின் நுனியிலே தொற்றிக் கொண்டன. வேறு சில ஒரு வழியாய்ச் செத்து மடிந்தன.

ஹாலில், இரண்டு மூன்று மேஜைகளில் உள்ளூர் சீனர்கள் அமர்ந்திருந்தார்கள். பணம் வசூலிக்கும் மேஜையடியில் ஸூவான் இருந்தாள். ரேடியோவிலிருந்து மெல்லிய ஐரோப்பிய இசை வெளியிட்டுக் கொண்டிருந்தது. ஹாலைப் பார்த்தாற்போல் வலது கோடியில், கைகழுவும் அறை. அங்கிருந்த வெள்ளை மேஜையில் பீங்கான் தட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஸூவானின் மாமனான கிழவன் லின் டாங், ஒவ்வொன்றாகத் தட்டுக்களை எடுத்தான். குழாயில் கழுவினான். சிவப்புத் துவாலையில் துடைத்தான். அருகிலிருந்த அலமாரியில் அடுக்கினான். எட்ட இருந்து பார்ப்பவர்களுக்கு, அவன் தன் கருமமே கண்ணாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அவன் கண்கள் ஓட்டலின் வாசற்புறத்தையே நொடிக்கொரு தடவை நோக்கிக் கொண்டிருந்தன.

மேஜையடியில் அமர்ந்திருந்த ஸூவானும் அப்படித் தான். கணக்குப் பேரேடுகளை வெளியெடுத்தாள்; கூட்டினாள்; திரும்ப வைத்தாள். 'காஷ்' பெட்டியில் சில்லறைகளை எண்ணினாள். சரி பார்த்தாள். அவள் கண்களும் தெருப் புறத்தையே அடிக்கடி நோக்கின.

ஸூவானின் பார்வையும் அவள் மாமனின் பார்வையும் நடுநடுவே ஒன்றையொன்று சந்திப்பதும் உண்டு. அந்தச் சந்திப்பில் ஒரு திகில் தெரிந்தது; ஒரு பீதி தென்பட்டது. அன்று பகல் அவர்களுக்கு வந்த டெலிபோன் செய்தியை இருவரும் நினைவில் வைத்திருந்தார்கள்; மறக்க முயன்றால் கூட முடியவில்லை.

“எட்டு மணி பதினைந்து நிமிடத்துக்கு ஒரு பிரமுகர் வருகிறார். இருவரும் எங்கும் போக வேண்டாம்” என்பதே அந்த டெலிபோன் செய்தி.

"ஹலோ! நீ யார்? யார் பேசுவது?” என்று கிழவன் லின் டாங் திரும்பத் திரும்பக் கேட்டான்.

டெலிபோன் உயிரற்றதாகிவிட்டது.

கடியாரம் எட்டுப் பத்தைத் தாண்டிவிட்டது. ஸூவானும் லின்டாங்கும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்தது. சரியாய் எட்டு பதினைந்துக்கு ஒரு படகுக் கார், காம்பவுண்டினுள் நுழைந்தது. புளியமரத்தின் கீழே அதை நிறுத்தினான், காக்கி உடுப்பும் சிவப்பு முண்டாசும் அணிந்திருந்த டிரைவர். விறைப்பாக நின்று கொண்டு பின்கதவைத் திறந்து விட்டான் அவன்.

குள்ளமான, இரட்டை நாடியான சீனப் பெண்ணொருத்தி இறங்கி வந்தாள். முப்பது வயதிருக்கும். மேனாட்டுப் பாணியில் அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டும் தொப்பியும் அவளை ஒரு காமிக் நடிகை போல் காட்டின. ஆனால் அவள் நடையிலோ தோரணையிலோ கோமாளித் தனம் இருக்கவில்லை. அமர்த்தலும் கம்பீரமுமாக அவள் உள்ளே நுழைந்தாள்.

எல்லா மேஜைகளிலுமிருந்த சீனர்களின் பார்வை அவள் மீது பாய்ந்தது. ஆனால் அவள் அதை லட்சியம் செய்யக் காணோம். ஹாலின் மறுகோடியிலிருந்து தனிமையான மேஜையை அவள் நாடினாள். கைப்பையை மடியில் வைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். நாற்புறமும் நோக்கினாள். அந்த ஹாலிலிருந்து மற்ற அத்தனை பேரும் அவளுடைய அடிமைகள் என்ற எண்ணம் அந்தப் பார்வையில் பிரதிபலித்தது.

லின் டாங் மட்டுமே கவனிக்கும் முறையில் ஸூவான் தலையை அசைத்தாள். 'இந்த ஆள்தான். கவனி' என்று அதற்குப் பொருள். ஐஸ் வாட்டார் எடுத்து வந்தான் லின் டாங். வந்தவளின் மேஜையில் வைத்தான். "குட் ஈவனிங், மேடம்" என்றான்.

அவள் திருப்பி, 'குட் ஈவனிங்,' சொல்லவில்லை. “டீயும் பிஸ்கெட்யும்” என்றாள் ஆங்கிலத்தில்.

உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கிழவன் சமையலறைக்குச் சென்றான். அவள் கேட்டவற்றுடன் திரும்பினான்.

மற்ற மேஜைகளில் அவரவர் தங்கள் சிற்றுண்டியில் கவனத்தைத் திரும்பிக் கொண்டு விட்டார்கள். ரேடியோவின் இசையும் சற்று உரத்திருந்தது. தேனீரை அவள் கையிலெடுத்தாள். ஆனால் உறிஞ்சவில்லை. கைப்பையிலிருந்து சாக்குக் கட்டி போன்ற ஒரு மஞ்சள் பொருளை எடுத்தாள். தேனீரின் மேல் தொட்டாள். வெளிர் சிவப்பாயிருந்த தேனீர், நீல நிறமாக மாறியது.

கவனித்துக் கொண்டிருந்த கிழவனின் முகமோ வெள்ளை நிறமாக மாறியது. அவள் தேனீர்க் கேப்பையை மேஜையின் ஓரமாக நகர்த்தினாள். "நான் உங்கள் நண்பன் தான். மயக்கம் தரத் தேவையில்லை. வேறு தேனீர் எடுத்து வா.” அந்தக் கட்டியைக் கைக்குட்டையில் துடைத்து விட்டு, பைக்குள் திரும்ப வைத்துக் கொண்டாள் அவள்.

வெளிறிய கிழவன் முகம், இயற்கையான மஞ்சளைத் திரும்பப் பெற்றது. ஒரு புன்னகை செய்துவிட்டுத் திரும்ப எடுத்துச் சென்றான். தேனீர்க் கோப்பையை.

இந்த ரகசிய நாடகம் ஹாலில் வேறு எவருக்கும் தெரியவில்லை. ஸூவான் மட்டுமே கண்கொட்டாது கவனித்துக் கொண்டிருந்தாள்.

லின் டாங் அவளருகில் எதையோ எடுப்பது போல் குனிந்தான். கூடவே ஒரு கிசுகிசுப்பு: “நம்ம ஆள்தான்."

"பரவாயில்லை.” உதட்டை திறவாமலே ஸூவானும் பதில் கொடுத்தாள். "ஆனாலும் ஏதோ கடுமையான உத்தரவுடன் வந்திருக்கிறாள்."

“அப்படித்தான் தோன்றுகிறது."

லின் டாங் வேறு தேனீர் எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியின் மேஜையை அடைந்தான். “வந்த ரகசியம்?”

“போகும்போது சொல்கிறேன்.” அவள் பிஸ்கெட்டுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுவைத்தாள். தேனீரைச் சொட்டுச் சொட்டாய்க் குடித்தாள்.

“பில்?”

லின் டாங் பில் எழுதி வந்து அவளிடம் கொடுத்தான். அவள் பணம் எடுப்பது போல் பைக்குள் கைவிட்டுத் தேடினாள்.

ஆனால் கரென்ஸி நோட் எதுவும் அவள் வெளியே எடுக்கவில்லை... ஏற்கெனவே சீன லிபியில் எழுதி வைத்திருந்த ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்துக் கொண்டாள். பதற்றமின்றி எழுந்தாள். ஸூவானின் மேஜையில் கையால் மூடியபடியே பில்லுடன் அந்தக் காகிதத்தையம் வைத்தாள். கண்ணால் ஒரு பார்வை அவ்வளவுதான். ஸூவான் அதைப் பெற்றுக் கொண்டதும் போய்விட்டாள்.

படகுக் காரின் கதவைத் திறந்து விட்டான் யூனிபாரம் அணிந்த டிரைவர். கார் பறந்துவிட்டது. ஸூவான், பணத்தை மேஜைக்குள் போட்டுக் கொள்வது போலவே அந்தக் காகிதத்தையும் போட்டுக் கொண்டாள்.

கிழவன் அவளை நெருங்கி வந்தான். மேஜை செருகு அறைக்குள்ளேயே அந்தக் காகிதத்தைப் பிரித்தாற்போல் வைத்திருந்தாள் ஸூவான்.

இருவருமாக அதைப் படித்தார்கள். அச்சத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

துண்டுக் காகிதத்தின் சாராம்சம்: “வைர முருகனுக்காகப் பீகிங்கில் அவசரப்படுத்துகிறார்கள். ஒரு மாதம் தான் கெடு. சேர்ப்பிக்காவிட்டால் உங்களையும் துரோகிகள் பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்கும். துரோகிகளின் முடிவு நீங்கள் அறிந்ததே.”

நண்பன்.

கடிதத்தை நிதானமாக ஆயிரம் சுக்கல்களாக கிழித்தாள் ஸூவான். ரேடியோவின் ஒலியை மேலும் பெரிதாக்கிவிட்டு மாமனுடன் தாழ்ந்த குரலில் பேசினாள்...

“நாம் என்னதான் செய்ய முடியும்? ஒன்றுக்கு இரண்டாகத் தூண்டில் போட்டு வைத்திருக்கிறோம். நஞ்சுண்டனாவது கொண்டு வந்து தருவான். அல்லது ரமணனாவது செய்வான். மேலிடத்தாருக்குப் பொறுமையில்லை." என்றாள் ஸூவான். மாமன் சொன்னான்: “நஞ்சுண்டன் அயோக்கியன். ரமணனைத் தான் நாம் நம்ப வேண்டும். அந்தப் பையன் தாவூதைக் காப்பாற்றுவதற்காக அவன் எதுவும் செய்வான்.” ஸூவான் கேலியாகச் சிரித்தாள். "மாமா! நீ வயசில் பெரியவனாலும், உலக அறிவில் ரொம்பச் சாதாரணம். அந்தப் பையன் தாவூதைச் சமீபத்தில் நீ பார்த்தாயோ?”

"இல்லையே? ஏன்?”

“ஒன்பதரை மணிக்குக் காட்டுகிறேன். பொறு.”

அவள் சொல்லிவிட்டாளே தவிர, கிழவன் தவித்தான், பாவம், ஒன்பதே காலுக்குத் தான் நம்பிக்கைக்குரிய வேறோர் ஆள் வருவது வழக்கம். அவன் வந்ததும், பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு ஸூவான் வெளியே புறப்பட்டாள். லின் டாங்கும் பின் தொடர்ந்தான்.

தியேட்டர்களில் இரவுக் காட்சிகள் முடிந்து மவுண்ட் ரோடில் கூட்டம் வழிந்து கொண்டிருந்தது. ஆங்கிலப் படம் நடக்கும் தியேட்டர்களில் மூன்றாவது காட்சிக்கான க்யூ வளர்ந்து கொண்டிருந்தது.

“அதோ பார்” என்று சுட்டிக் காட்டினாள், ஸூவான். ஆங்கிலப் படக் கொட்டகையொன்றில் எண்பத்து நான்கு பைசா க்யூவில் நின்றிருந்தான் தாவூது, முன்னாலிருக்கும் 'தோஸ்து' ஒருவனுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

இவர்கள் சுட்டிக் காட்டுவதை அந்தச் சினேகிதன் கவனித்து விட்டான் போலும். தாவூதுவும் திரும்பிப் பார்த்தான். ஸூவானையும் லின்டாங்கையம் கண்டதும் அவன் முகம் இருளவில்லை. மலர்ந்தது. சினேகிதனிடம் சொல்லி விட்டு அவர்களை நோக்கி வந்தான்.

"என்ன அக்கா, சௌக்கியமா?” என்று ஸூவானிடம் உறவு கொண்டாடினான்.

“நீ இன்னும் சாகவில்லை?” என்றான் கிழவன் எரிச்சலுடன்.

"அதற்குத்தான் மூன்று மாதம் டயம் கொடுத்திருக்கிறாயே? அதுவரையிலும் சந்தோஷமாய், இருந்துவிட்டு, சினிமாவெல்லாம் நிறையப் பார்த்துவிட்டுச் செத்துப் போகிறேன். வயிற்றெரிச்சல் படாதே!” சிரித்துக் கொண்டே திரும்பிப் போய்விட்டான் அவன். ஸூவானும் லின் டாங்கும் திரும்பி நடந்தார்கள்.

“அடிக்கடி இவனைச் சினிமாத் தியேட்டர்களில் இதே போல் சந்தோஷமாகத்தான் பார்க்கிறேன்" என்றாள் ஸூவான்.

“ஆனால் நம் மருந்து நன்றாய் வேலை செய்து கொண்டிருக்கிறது. அவன் தேகத்தின் நிறமே மாறி விட்டது” என்றான் லின் டாங்.

“அதனால் நமக்கு என்ன லாபம்? இரும்புக் கம்பியானால் நெருப்பிலே காட்டி வளைக்கலாம். நம் தேவைப்படி உபயோகிக்கலாம். நூலாயிருந்தால்? அது சிரித்துக் கொண்டே சாகிறேன் என்கிறதே!” ஸூவான் வெறுப்புடன் சிரித்தாள். "மாமா! நமக்கு உதவக்கூடியவன் ரமணன் அல்ல. நஞ்சுண்டன்தான். காலையில் முதல் வேலையாக அவனைப்பிடி.”

ஆனால் லின் டாங் அவ்வளவு சிரமப்படத் தேவையிருக்கவில்லை. நான்கிங் ஓட்டலுக்கு, அவர்கள் திரும்பிய போது நஞ்சுண்டனே காத்திருந்தான்.

காத்திருந்ததோடு மட்டுமல்ல. "உங்களுக்கு வைர முருகன் உடனடியாக வேண்டுமா?” என்று தானாகவே கேட்கவும் கேட்டான்.

"ஆமாம்” என்று இரண்டு குரல்கள் சேர்ந்து பதிலளித்தன.

“அப்படியானால் நான் கேட்கும் ஒத்தாசைகளைச் செய்யுங்கள்” என்று நஞ்சுண்டன் தன் பேரத்தைத் தொடங்கினான். "முதல் ஒத்தாசை, மின்சார விஷயங்கள் தெரிந்த ஓர் ஆள்.”

ஜனார்த்தனம் மரக் கட்டைபோல் படுத்துக் கிடந்தார். அவருடைய தலையைச் சுற்றி ஒரு வளையம் பொருத்தப்பட்டிருந்தது. பெட்டின் அருகில் அவற்றின் நுனிகள் இருந்தன. வளையத்தில் நீண்ட மின்சாரக் கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன.

ஜனார்த்தனத்தின் வாயில் ஒரு சிறிய மரத் துண்டு செருகப்பட்டிருந்தது. கூச்சலிடும்போது நாக்கைக் கடித்துக் கொண்டுவிடக் கூடாதென்றே அந்தத் தடுப்பு.

இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கொரு முறை ஜனார்த்தனம் மெல்ல ஒரு துள்ளல் துள்ளுவார். ஏதாவது முனகுவார் பிறகு அடங்கி விடுவார்.

நோயாளியின் முக மாறுதல்களை அருகிலிருந்தபடியே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் டாக்டர் நாமகிரி. அளவுக்குட்பட்டு மின்சாரம் பாய்ச்சப் படுகிறதா என்பதை அவள் விழிகள் கண்காணித்து வந்தன.

திடீரென்று ஒரு காட்டுக் கூச்சல் எழுந்தது. ஜனார்த்தனத்தின் தொண்டையிலிருந்து. அடுத்த வினாடி படுக்கையில் தள்ளிப் புரண்டார். சரிந்து விழுந்தார் மறுபுறம்.

அனைத்தும் இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் நடந்து விட்டன. “என்ன? என்ன?" என்று டாக்டர் நாமகிரி கத்த, நர்ஸ்கள் சிகிச்சையறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியேற முயல விளக்குகள் படீரென்று அணைந்தன. மொத்தப் பேரும் இருளில் மூழ்கிவிட்ட நேரத்தில் ஜனார்த்தனத்தின் முனகல் மட்டுமே வெளிப் பட்டது.

டாக்டர் நாமகிரிக்கு ஆவேசமே வந்துவிட்டது அந்த அமளியைக் கண்டு. இவ்வளவுக்கும் காரணம் யாரென்று உடனேயே ஒரு முடிவுக்கும் வந்துவிட்டாள்.

“அந்த ஆள் இந்தக் கிழவரைக் கொண்டுவந்து சேர்த்தானே, அவன் தான். உள்ளே நுழைவதற்காக என்னென்னவோ முயற்சி பண்ணினான். நான் தடுத்து விட்டேன். அவனைப் பிடியுங்கள்!” என்று கூச்சலிட்டாள்.

அந்தக் கூச்சல் மடியுமுன்பே நர்ஸ்கள் வெளியே பாய்ந்தார்கள் ரமணனைப் பிடிப்பதற்காக.

இப்படிப்பட்ட திடீர் நிகழ்ச்சிகள் டாக்டர் நாமகிரிக்குப் பழக்கமில்லை. திகைத்து மரமாகிச் சிறிது நேரம் நின்றாள்... பிறகே, விழுந்து கிடக்கும் நோயாளியின் நினைவு வந்தது. அவசரமாய்த் திரும்பினாள்.

ஜனார்த்தனம், கட்டில் மீது பாதி உடம்பும் தரையிலே பாதி உடம்புமாக அலங்கோலமாய்க் கிடந்தார். தலை, தரையில் பலமாக மோதிவிட்டதால் ரத்தம் கசிந்திருந்தது.

அவரைத் தானே தூக்கி மீண்டும் படுக்கையில் கிடத்தினாள். சிறிய டார்ச் விளக்கை அடித்து மின்சாரக் கருவிகளைக் கவனித்தாள். திடுக்கிட்டாள்.

அளவுக்கு மீறிய மின்சாரம் பாய்ச்சப்பட்டிருப்பது தெரிந்தது! உடனேயே ப்யூஸாகிவிட்டதால் கரெண்ட் நின்றிருக்கிறது.

ஜனார்த்தனத்தின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள் டாக்டர் நாமகிரி. தலையிலே காயம் பட்டுள்ள இடத்தைப் பரிசோதித்தாள்.

சிகிச்சையளித்த டாக்டர் என்ற முறையில் ஆத்திரம் பொங்கி வந்தது அவளுக்கு.

இனி எந்தச் சிகிச்சையாலும் ஜனார்த்தனத்தைப் புத்தி சுவாதீனமுள்ளவராகத் திருப்ப முடியாது. கடவுளாகப் பார்த்து ஓர் அதிசயத்தை நிகழ்த்த வேண்டும். அந்த அதிசயத்தில் அவர் மூளை திரும்ப வேண்டும். அதைத் தவிர வேறு வழியேயில்லை.

சந்தேகமின்றி இது வேண்டுமென்றே யாரோ செய்த வேலைதான். யாராயிருக்கும்? யார்? யார்?

மின்சார மீட்டர் பெட்டிகள் உள்ள பின்புறத்து அறைக்குச் செல்லத் திரும்பினாள்.

மின்னல் போல் இன்னோர் எண்ணம்: இவ்வளவு சூழ்ச்சியும் வைர முருகனுக்காக இருக்குமோ?

இருட்டை லட்சியம் செய்யாமல் தன் வீட்டை நோக்கி ஓடினாள் டாக்டர் நாமகிரி. சுவரில் சிராய்த்துக் கொண்டு, கதவில் மோதிக்கொண்டு, படிகளில் இடித்துக் கொண்டு, பூஜை அறைக்குத் தாவினான்.

வைர முருகன் பத்திரமாக இருக்குமா? இருக்குமா?

சிறகொடிந்த பறவைபோல் டாக்டர் நாமகிரி படபடத்தாள்.

*****

12

ளீர்! பளீர் பளீர்! யாரோ கையைச் சொடுக்கிய மாதிரி டாக்டர் நாமகிரியின் கிளினிக்கிலும் இல்லத்திலும் விளக்குகள் ஏற்றிக் கொண்டன. செத்தேன் பிழைத்தேன் என்று இருள் ஓடித் தொலைந்தது. நள்ளிரவுக்குச் சற்று முன்னதான நேரமாகையால், நிசப்தத்தைக் குலைத்தன அமளி துமளிகள்.

டாக்டர் நாமகிரி தன் பூஜை அறையை நோக்கி ஓடினாள். அதற்குள் பின்னாலிருந்து வந்த பல கூக்குரல்கள் அவளைத் தடுத்து நிறுத்தின.

"என்ன? அந்த ஆள் கிடைத்தானா இல்லையா!” நாமகிரி அதட்டினாள்.

“அவனைக் காணோம், டாக்டர். ஓர் இடம் விடாமல் தேடி விட்டோம்” என்றாள் நர்ஸ் மேரி.

"பேஷண்ட்டுடன் கூடவே இருந்து வந்தானே ஓர் ஆந்திர வேலைக்காரன் - அவன்? அவனையாவது பிடித்தீர்களா இல்லையா?” சீறினாள் டாக்டர் நாமகிரி.

இன்னொரு நர்ஸ் பயந்து, பயந்து, “அவன் எங்கே போனானென்றே தெரியவில்லை...” என்று இழுத்தாள்.

"குட்டிச் சுவரில் போய் முட்டிக்கொள்ளுகள்! உங்களையெல்லாம் வேலைக்கமர்த்திச் சம்பளம் கொடுக்கிறேனே, என் புத்தியை அடித்துக்கொள்ள வேண்டும்!” மேலும் வெடித்தாள் டாக்டர். "தொலையுங்கள், என் கண் முன்னே நில்லாமல் இதைச் சொல்லத்தானா அப்படி அலறிக் கொண்டு ஓடி வந்தீர்கள்?”

"அதில்லை டாக்டர்... வந்து...” மேரி, தன் தோழியின் முகத்தைப் பார்த்தாள். அவள், 'நீயே சொல்லு! நீயே சொல்லு!’ என்று பதறுகிற மாதிரி கண்ணால் சாடை காட்டினாள்.

“சொல்லித் தொலையுங்களேன்!” நர்ஸ்களின் கழுத்தை முறிக்கிற மாதிரி பாய்ந்து வந்தாள் டாக்டர்.

“வந்து... எலக்ட்ரிக் மீட்டர்கள் இருக்கிற ரூமிலே ஏதோ சந்தடி கேட்டது. போய்ப் பார்த்தோம்... நம்ம வாட்ச்மேனை யாரோ தலையிலே அடித்துக் கீழே தள்ளியிருக்கிறார்கள்.”

"என்ன! என்ன!” ஒரே எட்டில் டாக்டர் நாமகிரி பின்புறத்துச் சிறிய அறையை அடைந்தாள். அந்த எட்டடிக்கு ஆறடி அறையிலே, சுவர் மூலையில் சாய்ந்து சரிந்து கிடந்தான் வாட்ச்மேன். தலையிலிருந்து காதில் வழிந்திருந்த ரத்தம் அவன் கன்னத்தில் உலர்ந்திருந்தது. அதற்குள் கிளினிக்கைச் சேர்ந்த இன்னோர் உதவியாள் அவனுக்கு முதலுதவியாகத் தலையில் அவசர பாண்டேஜ் போட்டிருந்தான்.

வாட்ச்மேன், எஜமானியம்மாளைக் கண்டதும் எழுந்து உட்கார முயன்றான். டாக்டரின் கடமையுணர்ச்சி முந்திக் கொண்டது. காயத்தின் தன்மையைப் பரிசோதித்தாள்.

"பயப்படாதே, அதிக ஆழமில்லை” என்று அவனுக்குக் கை கொடுத்து எழுப்பினாள். "இவனுக்கு ஒரு படுக்கை தயார் செய், மேரி.”

“யாரோ இருட்டிலே ஆள் போகிற மாதிரி தெரிஞ்சது, அம்மா...” டாக்டரின் பின்னாலேயே தள்ளாடி நடாத வண்ணம் வாட்ச்மேன் கூறினான். "இங்கே வந்தேன்... படீர்னு ஒரு அடி மண்டையிலே விழுந்ததுதான் தெரியும்...”

“ஆள் யாரென்று அடையாளம் தெரியவில்லை?”

“இல்லீங்க... வாட்டசாட்டமான ஆள்தான். சின்ன வயசு... தாடி வைச்சிருந்தானுங்க... என் கையிலே பட்டுது...”

“தாடி - ”

“ஆமாங்க... சின்னத் தாடி காலேஜ் ஸ்டூடண்ட்ஸுங்க ஸ்டைலாய் வைச்சுக்கிறாங்களே அந்த மாதிரி... நான் விழறப்போ அவன் மூஞ்சியிலே என் கை பட்டுது...”

“அவன்தான்! குறுந்தாடி அவனுக்குத்தான் இருந்தது!" டாக்டர் நாமகிரியின் பழைய பதற்றம் மீண்டும் தொற்றிக் கொண்டது. ரமணனின் குறுந்தாடி முகம் அவள் கண்ணெதிரே நின்றதுதான் காரணம். “அந்த அயோக்கியனாகத்தான் இருக்க வேண்டும். ஜனார்த்தனத்தைக் கொண்டு வந்து சேர்க்கிற சாக்கில்...”

பூஜையறையை நோக்கித் தான் ஓடிய காரணமும் கூடவே நினைவு வந்தது டாக்டருக்கு. “மேரி நீ வாட்ச்மேனை அழைத்துப் போய், காயத்தை டிரஸ் பண்ணிவிடு. இஞ்செக்ஷன் கொடுத்துப் தூங்கப் பண்ணு. இதோ நான் வருகிறேன். விளக்குகள் நன்கு எரிந்து கொண்டிருந்தன. இருளில் தடுமாறத் தேவையிருக்கவில்லை. வீட்டுக்குள் சென்று, பூஜையறையை அடைந்தாள். கதவு சாத்தியிருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சு. யாரும் புகவில்லை. என்ற நம்பிக்கை. ஊகூம். ஊகம் தப்பு.”

கதவைத் திறப்பதற்காகத் தள்ளினாள், திறந்து கொள்ளவில்லை. ஓங்கி மோதினாள். திறக்கவில்லை. உட்புறம் தாழிடப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணரச் சில வினாடிகள் பிடித்தன நாமகிரிக்கும். ஏன் உள் தாழ்ப்பாள்? அப்படியானால். யார் இருக்கிறார்கள். உள்ளே? “யாரங்கே உள்ளே? கதவைத் திற!” கதவை டக் டக்கென்று தட்டினாள் டாக்டரம்மா.

அவள் குரலில் போலீஸ் அதிகாரியின் ஆணை இருந்தது. உள்ளேயிருந்து எவ்வித மறுமொழியும் இல்லை.

“கதவைத் திறக்கப் போகிறாயா, இல்லையா” அதற்கும் பதில் கிடையாது. நர்ஸ்கள் இருவரும் இதற்குள் வந்து விட்டார்கள்.

"டாக்டர், ஏற்கெனவே வாட்ச்மேன் அடிபட்டிருக்கிறான். இங்கே ஓர் ஆள் வேறே. எனக்கென்னமோ போலீசைக் கூப்பிடுவது தான் மேலென்று தோன்றுகிறது...” என்று ஒருத்தி கூற, மேரி அதை எதிர்த்தாள், "சே, சே! இது சாதாரண விஷயம்தான். போலீசைக் கூப்பிட்டால்தான் பெரிது பண்ணி விடுவார்கள்” இவ்வளவு அமளியிலும் ரமணனுக்கு ஏதோ பங்கு உண்டு என்று அவளுக்குத் தோன்றிவிட்டது. எனவே அவனைக் காப்பாற்ற முயன்றாள். ஆனால் முதலாமவளின் பேச்சுத் தான் டாக்டரம்மாவின் புத்தியில் ஏறியது. "இவன் கதவைத் திறக்கிற வழியாயில்லை. நீ டோய் ஹண்ட்ரடுக்குப் போன் பண்ணு” என்றாள் அவளிடம்.

பத்து நிமிடத்தில் ஒரு இரண்டு போலீஸ்காரர்களும் ஒரு ஜீப்பில் வந்து இறங்கினார்கள். டாக்டரம்மாவிடமிருந்து சுருக்கமாக விஷயத்தை அறிந்து கொண்டார் இன்ஸ்பெக்டர். பூஜையறைக் கதவை டக் டக்கென்று இரண்டு முறை தட்டினார். “நான் போலீஸ் அதிகாரி கட்டளையிடுகிறேன். வெளியே வருகிறாயா இல்லையா?” என்று உறுமினார்.

கிணற்றில் கல்தான்.

“உடை” என்று உத்தரவு கொடுத்தார் போலீஸ்காரர்களுக்கு, ஐந்தாறு மோதல்கள்தான் மடாலென்று மல்லாந்து விழுந்தன கதவுகள்.

“காணவில்லை! காணோம்! வைர முருகன் திருட்டுப் போய் விட்டது!” பூஜை மேடையில் காலியாக இருந்த இடத்தைக் கண்டதுமே வீரிட்டாள். டாக்டர் நாமகிரி.

"இதோ திருடன்" மூலையில் ஒண்டியிருந்த ஆளைக் கப்பென்று பிடித்தனர் போலீஸ்காரர்கள்.

“நான்... நான் திருடன் இல்லீங்க! எனக்கும் எதுவும் தெரியாதுங்க...” என்று நடுங்கினான் அப்பாவு.

ஆம். அறைக்குள் இருந்தவன் அப்பாவுதான்.

“இவன்... அந்த ஜனார்த்தனத்தின் கூட இருந்த ஆள் அல்லவா...? நான், ஊகித்தது சரிதான்... இரண்டு பேருமாய்ச் சேர்ந்து நாடகம் ஆடியிருக்கிறார்கள்...” மூச்சு இரைக்க இரைக்கக் கத்தினாள் டாக்டர் நாமகிரி.

“எங்கேடா, சாமி விக்கிரகம்? கொடு இப்படி!” போலீஸ்காரர்கள் அப்பாவுவை உலுக்கினார்கள்.

"சாமி விக்கிரகமா? எனக்கென்ன சாமி தெரியும்? எங்க எஜமானார்...”

“யார் உங்க எஜமானர்?”

"ரமணனுங்க பெரிய துப்பறியும் நிபுணர்...”

போலீஸ் இன்ஸ்பெக்டர் புருவத்தைச் சுளித்தார்: “நான் கேள்விப் பட்டதே இல்லையே?”

“உங்களைத் தவிர எல்லாரும் கேள்விப்பட்டிருப்பாங்க... அவர், இங்கே கிழவருக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கிறதைப் பார்க்கணும்னு ஓட்டலிலிருந்து புறப்பட்டாரு. டாக்டரம்மா காரு, வரவே வேணாம்னு சொல்லியிருந்தாங்க. ஏதாச்சும் கல்டா பண்ணிடப் போறாரேன்னு இங்கே வந்தேன்... அப்பத்தான் இங்கே லைட்டு அணைஞ்சிருந்தது. யாரோ ஓடற மாதிரி தெரிஞ்சுது... எனக்குப் பயமாப் போச்சுது...

இந்த ரூமுக்குள்ளே புகுந்து தாழ்ப்பாள் போட்டுக் கிட்டேன்...”

"என்னடா மூட்டை அளக்கிறாய்?” என்று கையை ஓங்கினார் இன்ஸ்பெக்டர்.

“இன்ஸ்பெக்டர்! இவன் சொல்வதெல்லாம் உண்மைதான். நீங்கள் நம்பலாம்...” ரமணன் திடீரென்று அவர்கள் நடுவில் வந்து நின்றான்.

டாக்டர் நாமகிரியின் ஹிஸ்டீரியா உச்சத்தைப் பிடித்தது. “இவன் தான். இவனேதான்! வைர முருகனை இவன்தான் திருடியிருக்கிறான்!”

“தாராளமாய் என்னைச் சோதனை போட்டுக் கொள்ளுங்கள்” புன்னகை தவழ்ந்தது ரமணனின் முகத்தில். “மடியிலே கட்டி வைத்திருக்கிற அளவுக்கு இவன் மடையனில்லை” என்றாள் டாக்டரம்மா. “வேறெங்கேயோ பத்திரப்படுத்தி விட்டு வந்திருப்பான்!”

"ஆல்ரைட், ஆல்ரைட்!” என்றார் இன்ஸ்பெக்டர் எரிச்சலுடன். "ஒன் நாட் டூ! அந்த ஆந்திரக்காரனை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் வை. மிஸ்டர் ரமணன், உங்கள் வீடு எங்கே இருக்கிறது?”

“இன்ஸ்பெக்டர் சார், நீங்கள் புதியவர். என்னைத் தெரியாமல் பேசுகிறீர்கள். அஸிஸ்டென்ட் கமினர் தணிகாசலத்தைக் கேட்டால் என்னைப் பற்றிச் சொல்வார்...”

“யாரையும் நான் கேட்கத் தேவையில்லை. என் இன்வெஸ்டிகேஷனை என் இஷ்டப்படி நடத்துவதை எந்த மேலதிகாரியும் தடுக்கமாட்டார்கள். நடவுங்கள்!” இன்ஸ்பெக்டரின் குரல் அதட்டலாக ஒலித்தது.

"ஹூம்..." புன்சிரிப்புடன் பெருமூச்சை விடுத்தவாறு ரமணன் புறப்பட்டான். “சாமி!” என்ற அப்பாவுவின் தீனக் குரல் அவனைத் தடுத்தது. திரும்பினான். கோபம் வந்தது. “உன்னை வீட்டில் இருக்கச் சொன்னேனா, என்னையே கண்காணிக்கப் புறப்பட்டு வரச் சொன்னேனா? படு நன்றாய். ஜெயில் களி ரொம்ப ருசியாக இருக்கும்...! போகலாம், இன்ஸ்பெக்டர்.”

வெளியே பலபலவென்று பொழுது விடிந்து கொண்டிருந்தது.

ஜீப் நின்றது. இன்ஸ்பெக்டர் தெருவில் குதித்தார். இந்தண்டையும் அந்தண்டையும் இருந்த வீடுகளை ஆராய்ந்தார். இரு வீடுகளுக்கும் நடுவே, ஏறத்தாழச் செங்குத்தாய்ச் செல்லும் படிகளைக் கவனித்தார்.

“இறங்குங்களேன், மிஸ்டர் ரமணன்” என்றார் ஜீப்பை விட்டு இறங்காமலேயிருந்த ரமணனிடம்.

“ஓ இறங்கலாமா சுதந்திரமாய்?” எகத்தாளமாய்ச் சிரித்தான் ரமணன். "ஐ தாட் ஐ வாஸ் அண்டர் அரெஸ்ட்.”

“ஸெர்ட்டன்லி யூ ஆர்” என்றார். இன்ஸ்பெக்டரும் விட்டுக் கொடுக்காமல். “இருந்தாலும் நாங்கள் மூன்று பேர் காவல் இருக்கிறோமே? நீங்கள் முயன்றால் கூட ஓட, முடியாது.”

“நன்றி.” ஜீப்பிலிருந்து இறங்கி அவரருகில் நின்று கொண்டான். சம்பந்தமில்லாத இடத்தைப் பார்ப்பது போல் தன் ஜாகையைத் தானே அலட்சியமாக நோட்டம் விட்டான்.

“இது தானே உங்கள் இருப்பிடம்?” என்றார் இன்ஸ்பெக்டர். “ஆமாம் இன்ஸ்பெக்டர். உங்களுடைய துப்பறியும் திறமையைப் பெரிதும் போற்றுகிறேன்.”

இன்ஸ்பெக்டருக்கு நெற்றிக் கண் இருந்திருந்தால் இன்னொரு மன்மதன் எரிந்திருப்பான். "இக்கட்டான நிலைமையில்கூட உமது நாக்குத் துடுக்குப் போகவில்லையே?”

“ஐயோ, அதை ஏன் கேட்கிறீர்கள்? என் நாக்கு ஒரு மகா போக்கிரி. இக்கட்டான நிலைமை என்றால், பால் பாயசம் குடித்த மாதிரி. வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாய்த் துள்ளும்” என்றான் ரமணன்.

"இரண்டு தரம் வெட்டு வாங்கினால் சரியாகி விடும்" என்றார் இன்ஸ்பெக்டர். "வாருங்கள்” என்று கூறிப் படியேறலானார். ரமணன் அவரைப் பின் தொடர்ந்தான். ஜீப்பிலிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் ரமணனின் பின்னே வந்தார்கள். மேல் படியை அடைந்த இன்ஸ்பெக்டர் நின்றார். “சாவியைக் கொடுக்கிறீர்களா?” என்று கை நீட்டினார்.

ரமணனிடமிருந்து பதிலைக் காணோம்.

“சாவி கேட்டேன்.” குரலையும் உயர்த்தி, சுட்டு விரலாலும் ரமணனின் மார்பில் குத்தினார் இன்ஸ்பெக்டர்.

"ஆ! சாவி? ஆமாம். இதோ.” ரமணன் தன்னினைவுக்கு வந்தவனாகச் சாவியை எடுத்துத் தந்தான். அந்தப் பூட்டு - அது பூட்டப்பட்டிருந்த விதம் இரண்டும் அவனைத் திகைக்க வைத்திருந்தன. பூட்டின் மீதே கண்ணாக இருந்ததால்தான் இன்ஸ்பெக்டரின் கேள்வியை அவன் கவனிக்கத் தவறிவிட்டான்.

பூட்டு, அவனுடையதுதான் சந்தேகமில்லை. பழங்காலத்துத் திண்டுக்கல் பூட்டு. ஆனால் அது பூட்டப் பட்டிருந்த விதம், வழக்கத்துக்கு விரோதமாயிருந்தது.

சாவி நுழைக்கும் துவாரம் நம்மைப் பார்த்தாற் போலிருக்குமாறு ரமணன் பூட்டுவது கிடையாது. பூட்டின் அகலமான முதுகுப் புறம்தான் பார்ப்பவர்களுக்குத் தெரியும். திறக்கும்போது அதைத் தலைகீழாகத் தூக்கி நிறுத்திக் கொண்டு சாவியை நுழைத்துத் திறக்க வேண்டும். அப்படித்தான் பூட்ட வேண்டுமென்று அப்பாவுவுக்கும் உத்தரவு. என்ன தலை போகிற அவசரமானாலும் வேறுவிதமாகப் பூட்டிக் கொண்டு அப்பாவு போகமாட்டான்.

ஆனால் இப்போது?

இன்ஸ்பெக்டர் பூட்டைத் திறந்து, தாளை விலக்கி, கதவை நகர்த்திய இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளேயே ரமணன் ஊகித்துவிட்டான்.

யாரோ அவசர அவசரமாக உள்ளே வந்துவிட்டு, அவசர அவசரமாக வெளியேறியிருக்கிறார்கள்! சாவித் துவாரம் நேராகத் திறப்பவரைப் பார்த்தாற் போல் இருந்தது! இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். ரமணனும் உள்ளே நுழைந்தான். கட்டிலையும் மெத்தையையும் அணுகிய போது இரண்டாவது அதிர்ச்சி காத்திருந்தது.

*****

13

றைக்குள்ளே நுழைந்தவுடனேயே ரமணன்கூட அதைக் கவனிக்கவில்லை. அவன் கண்ணுக்கு முதலில் ஒரு வித்தியாசமும் புலப்படவில்லை. வந்தவன் கெட்டிக்காரன் தான். சுவடு தெரியாமல் வேலை செய்திருக்கிறான். 'மடையன் அப்பாவு!' என்று ரமணன் பல்லைக் கடித்தான். இங்கே காவல் காத்திருக்க வேண்டிய சமயத்தில் அங்கே வந்து ஒண்டிக் கொண்டிருக்கிறான்! முட்டாள், முட்டாள்!

இன்ஸ்பெக்டர் வலப்புறம் இருந்த அறைக்குள் சென்றார். மேஜைகளும் நாற்காலிகளும் தரதரவென்று இழுக்கப்பட்டன. ஸூட் கேஸ்கள் திறக்கட்டன. அலமாரிகள் புரட்டப்பட்டன. மற்ற இரு போலீஸ்காரர்களும் இடப்புறமிருந்த அறையைத் தலைகீழாக்கினார்கள்.

சும்மா உலவுகிற மாதிரி, நடுவிலிருந்த படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டான் ரமணன். அங்கேதான் அதிர்ச்சி காத்திருந்தது.

எல்லாம் அப்படியப்படியே தான் இருந்தன. தலைமாட்டிலிருந்த அலாரம் மெல்லச் சூள் கொட்டிக் கொண்டிருந்தது. முக்காலின் மீது தண்ணீர் ஜக், ஆங்கிலப் பத்திரிகைகள், கையடக்கக் கீதைப் பிரதி, வேர்க் கடலைகள் கொண்ட கண்ணாடிப் புட்டி, டிரான்ஸிஸ்டர் - துளியும் நகரவில்லை. யாரும் தொடவில்லை. ஆனால்

ஆ! மெல்லத் திரும்பிப் பார்த்துக் கொண்டான் ஒரு முறை. இன்ஸ்பெக்டரும் அவருடைய உதவியாளர்களும் தங்கள் தங்கள் வேலைகளில் முனைந்திருந்தார்கள்.

ரமணன் திரும்பவும் தன் படுக்கையின் பக்கம் பார்வையைத் திரும்பினான்.

கட்டிலிலிருந்த மெத்தை - நேற்றிரவு அவன் அரை வினாடியும் படுக்காத மெத்தை அங்குலம் கூடச் சுருக்கமில்லாமல் வெள்ளைத் தாளை விரித்தாற் போலிருக்க வேண்டிய மெத்தை -

ரமணனின் கூரிய கண்ணுக்கே புலப்படும் விதத்தில் மிக லேசாய்க் கசங்கியிருந்தது. காற்றினால் ஏற்பட்ட கலைப்பு அல்ல: யாரோ கை வைத்து அழுத்தியதால் விளைந்த கசங்கல்.

இரண்டாவது காட்சியொன்று அவனை மேலும் உசுப்பியது. பூட்டைப் போலத்தான் தலையணையும் ரமணனுக்கு, அதுவும் தலைகீழாக இருக்க வேண்டும். தலையணை உறையின் மீது ஒரு பச்சைக் கிளி எம்பிராய்டரி போட்டிருக்கும். அதன் மீது தலையை வைத்துக் கொள்ள ரமணனுக்குப் பிடிக்காது கிளிப் படம் மெத்தையைத் தொடுகிற மாதிரி, ரமணன் தூங்குவான். அப்பாவுக்குக் கண்டிப்பான கட்டளை அது. இப்போது, தலையணை புரட்டப் பட்டிருந்தது. கிளியின் படம் வெளிப்புறம் தெரிகிற மாதிரி தலையணை மாற்றப் பட்டிருந்தது.

மெல்லத் தலையணையை ஓரங்குலம் தூக்கினான் ரமணன். பளீரென வீசிய ஒளி அவன் கண்ணைக் குருடாக்கியது. சட்டென்று தலையணையைப் பழையபடி மூடினான் வெளியே வந்தான் எதுவும் நடவாதது போல், எதைக் கண்டும் மிரளாதவன் போல், அவன் மனத்துக்குள் ஒலித்த ஆயிரம் மில்களின் இரைச்சல்கள் யாரே கேட்க வல்லார்?

சட்டத்தின் காவலர்கள் கருமமே கண்ணாயிருந்தனர்.

“ஹூம்! சே!” ரமணன் மூக்கை உறிஞ்சினான். ஏதோவொரு துர்நாற்றத்தைக் கண்டுபிடித்தாற்போல் முகத்தைச் சுளித்தான். “சட்! நாற்றம் இந்த மெத்தையில் தான்! சோம்பேறி வேலைக்காரன் எனக்கென்று வாய்த் தான் மொட்டை மாடியிலே கொண்டு போய் வெய்யிலில் போட்டு வை என்று தினம் சொல்கிறேன். கேட்டால் தானே”

வாய்விட்டு, போலீஸ்காரர்களுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் காதில் விழுகிற மாதிரியே முணு முணுத்தான் ரமணன். முணுமுணுத்தபடியே, கட்டிலிருந்து மெத்தையைத் தலையணையோடு ஒரு சுருட்டுச் சுருட்டி எடுக்க முயன்றபோது -

"ஏன் சிரமப்படுகிறீர்கள். ரமணன்?” - இன்ஸ்பெக்டர் அவனை மெல்ல விலக்கினார். அவன் கையில் லிருந்து மெத்தையையும் தலையணையையும் கனிவோடு வாங்கித் திரும்ப வைத்தார் கட்டிலின் மீது. சுருட்டியதைப் பிரித்தார் பழையபடி தலையணையை எடுத்தார்.

“இதன் பெயர் என்னவென்று தயவு செய்து சொல்கிறீர்களா ரமணன்?” என்றபடி கையிலெடுத்துக் காட்டினார்.

ரமணன் ஒரு வினாடி கண்களை மூடிக்கொண்டான். இன்ஸ்பெக்டரின் உள்ளங்கையிலிருந்த 'வைர முருக’னின் பிரகாசம் அவைகளைக் கூச வைத்தது.

“என்னது? ஏது?” என்று ரமணன் திடுக்கிட்டு முடிக்கவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் காட்டத்துடன் “என்ன மிஸ்டர், நாடகம் நடத்துகிறீரா?” என்றார்.

“அதைக் காட்டுங்கள். நான் பார்க்க வேண்டும்” என்று பரபரத்தான் ரமணன். அதிகாரியின் கையில் உள்ள வைர முருகன் அசலா அல்லது போலியா என்பதை அறிந்து கொள்ளவே அவன் துடித்தான்.

"நீ அதைப் பார்க்கத் தேவையில்லை.” இன்ஸ்பெக்டர் அவன் பதைப்பைப் புரிந்துகொள்ளவில்லை. கைக்குட்டையினால் சுற்றிக் கொண்டார். வைர முருகனை ஜவான்களில் ஒருவர் ரமணனைத் திமிறாதவாறு மடக்கிக் கொண்டார். மற்றவர், போலீஸ் வேறு அழைத்து, வருவதற்காகப் புறப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் டயலலைச் சுழற்றினார்.

"டாக்டர் நாமகிரியா? தயவு செய்து உடனே இங்கே வாருங்கள். உங்கள் வைர முருகன் கிடைத்துவிட்டது.” என்றார்.

மறு முனையிலிருந்து மகிழ்ச்சி நிறைந்த பதில்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இன்ஸ்பெக்டர் அதை செவியாறப் பருகவிடாமல் ரமணனின் ஆத்திரக் குரல் குறுக்கிட்டது.

"இன்ஸ்பெக்டர்! நீங்களும் டாக்டரம்மாவும் மடத்தனத்தின்மேல் மடத்தனமாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கையில் வைத்திருப்பது போலி வைர முருகனாகத்தான் இருக்கும். அசலை எடுத்துக் கொண்டு ஒருவன் இன்னேரம் சிட்டாய் பறந்து கொண்டிருக்கிறான். என்னையும் சிக்கவைத்து, உங்களையும் குழப்புவதற்காக வேண்டுமென்றே ஒரு போலி முருகனை இங்கே 'பிளான்ட்' பண்ணியிருக்கிறான்! அவனைப் பிடியுங்கள். முதலில் நான் எங்கேயும் ஓடிவிட மாட்டேன்...”

"ஷட் அப்!” என்று சீறினார் இன்ஸ்பெக்டர். “அவனாம் அவன் நீதான் கையும் மெய்யுமாய்ப் பிடிபட்டிருக்கிறாயே! இன்னொருத்தன் யார்? யாரப்பா அவன்?”

"நஞ்-” வாயைத் திறந்த ரமணன் மூடிக்கொண்டான். எல்லாவற்றையும் போலீசில் உடைத்துவிடக் கூடிய நிலையில் அவன் இல்லையே! இதில் அவன் ஒருவன் மட்டும் சிக்கியிருக்கவில்லை. ரேணுகா, குழந்தைப் பாண்டியன். பாலசந்தர், நீலா, ஸூவான், லின் டாங், தாவூது - இன்னும் பல பேர் அறிந்தும் அறியாமலும் கலந்து விட்ட மர்மச் சுழல் இது. தலையைச் தொட்டால் வாலுக்கு வர முடியாது. வாலைப் பிடித்தால் தலைக்கு வர இயலாது. எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின்பு, குற்றவாளிக்கு, மட்டுமே ஆபத்து என்றும் ஏற்படாது. நிரபராதிக்கும் ஊறு நேரலாம்...

வாசலில் காரின் சத்தம் கேட்டது. வயதுக்கு மீறிய வேகத்துடன் படியேறித் தாவி வந்தாள் டாக்டர் நாமகிரி. "இதுவா பாருங்கள்” வைர முருகனை அவளிடம் காண்பித்தார் இன்ஸ்பெக்டர். ரமணனும் கழுத்தை நீட்டிப் பார்க்க முயன்றான். போலீஸ்காரரின் புஜம் அவனை அடைய விடவில்லை.

மறுவினாடி நாமகிரியின் குற்றச் சாட்டுக் குரல் அந்த அறையையே அதிர வைத்தது. "இதுதான்! இதுவேதான்! நான் அப்போதே சொல்லவில்லை, இவன் பக்காத் திருடன் என்று?”

“எக்ஸ்க்யூஸ் மி” என்று ரமணன் குறுக்கிட்டான். “திருட்டுப் போன சமயத்தில் நான் உங்கள் வீட்டில் இருந்தேன். பிறகு இன்ஸ்பெக்டருடன் இங்கே வந்தேன். உங்கள் வைர முருகனைக் கையிலேயே எடுத்து வைத்திருந்தேன், என்கிறீர்களா?”

“செய்திருப்பாய்! செய்திருப்பாய்!” என்றாள் டாக்டர் நாமகிரி. “இவ்வளவு மெத்தனமாய் வேலை செய்தவன் ஒண்டியாகவா செய்திருப்பாய்? எத்தனை பேரை உதவிக்கு அழைத்து வந்தாயோ? டக்கென்று ஒருவனிடம் கொடுத்தனுப்பியிருப்பாய்!”

"ஆமாம்! கொடுத்தனுப்பிவிட்டு, நானாகவே இன்ஸ்பெக்டரின் முன்னால் வந்து, நானாகவே மாட்டிக் கொண்டு, நானாகவே இங்கே அழைத்து வந்தேன்!” ரமணனின் சீற்றம் வழக்கமான நிதானத்தையும் பறக்கடித்துவிட்டது. இவ்வளவு முட்டாள்தனமாக முடிவு கட்டுபவர்களால்தான் உலகமே குட்டிச்சுவராகிறது என்ற எண்ணம் அவன் ஆத்திரத்தை வளர்த்தது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் இடைமறித்தார்: “இவனிடம் வீண்பேச்சு ஏன்? நீங்கள் போங்கள். நான் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகிறேன் இவனை. வைர முருகன் தற்போதைக்கு என்னிடம் இருக்கட்டும். தகவல் அனுப்புகிறேன். பிறகு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்.”

“ஜாக்கிரதை, ஜாக்கிரதை. இவன் பலே கைகாரன்,” என்று ரமணனைச் சுட்டிக் காட்டினாள் டாக்டர் நாமகிரி. “இனிமேல்தான் நானும் அந்த ஜனார்த்தனம் என்கிற கிழவரைப் பற்றிக் கவனிக்கணும். அவருக்கு வைத்தியம் என்கிற சாக்கில்தான் இவன் வந்தான். அதிலே எத்தனை மோசடியோ...”

டாக்டரம்டமா பேசிக்கொண்டே படியிறங்கினாள். போலீஸ் வேன் வந்துவிட்ட ஓசையும் கீழே கேட்டது.

உதட்டை மடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் ரமணன், போலீஸ் லாரியின் உட்புறத்தில். இந்தப் புறமும் அந்தப் புறமும் இரண்டு போலீஸ்காரர்கள் காவல். எதிரில் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் மடியிலே, கைக் குட்டையில் சுற்றிய வைர முருகன்.

மவுண்ட்ரோடை அடையும் ஒரு சிறிய தெருவில் லாரி, சென்று கொண்டிருந்தது.

கைக்குட்டைக்குள் இருந்த சிறிய விக்கிரகத்தின் மீதே இருந்தன ரமணனின் கண்ணும் கருத்தும். அவன் சிந்தித்தான்.

நாமகிரியின் கிளினிக்கில் அமளி ஏற்படுத்தியவன் நஞ்சுண்டன்தான் சந்தேகமில்லை. ஜனார்த்தனத்துக்கு அபாயம் ஏற்படுத்தியவனும் அவனே. வைர முருகனைக் களவாடிச் சென்றவனும் அவன்தான். ஐயமில்லை. ரமணனின் வீட்டில் முருகன் சிலையொன்றை ஒளித்து வைத்தவனும் நஞ்சுண்டன்தான். அப்படியானால் ரமணன் என்று ஒர் எதிரி இருப்பதையும் அவன் கண்டு கொண்டு விட்டான்...

கைக்குட்டையால் சுற்றப்பட்டிருப்பது போலி வைர முருகன்தான். நிச்சயமாய்ப் புலப்பட்டது ரமணனுக்கு. அசலை எடுத்துக்கொண்டு நஞ்சுண்டன் ஓடியிருக்கிறான். எங்கே? எங்கே?

ஸூவானிடம்தான் என்றால் கவலையில்லை. தாவூது உள்படப் பல பேருடைய பிரசினை தீரும். பிற்பாடு வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். அப்படியில்லாமல், ஸூவானையே ஏமாற்றிவிட்டு, வைர முருகனுடன் நஞ்சுண்டன் ஓடத் திட்டமிட்டிருந்தால்...?

ரமணன் ஓரக் கண்ணால் இரண்டு போலீஸ்காரர்களையும் இன்ஸ்பெக்டர்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்ஸ்பெக்டரிடம் இருப்பது அசல் முருகனா, போலி முருகனா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அது, முதல் வேலை. பிறகு, ஸூவானையும் லின்டாங்கையும் சந்திக்க வேண்டும். இரண்டாவது வேலை. சீ! என்ன மடத்தனமாய் இப்படிச் சிக்கிக் கொண்டோம்!

திடீரெனப் போலீஸ் லாரி நின்றது. "என்ன?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். போலீஸ்காரர்கள் பதில் கூறுமுன், கோஷங்கள் பதில் கூறின. மவுண்ட்ரோடில் ஒரு பெரிய ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அரசியல் ஊர்வலம். “அது போன பிற்பாடுதான் சார் நாம் போக முடியும்” என்றார் போலீஸ் லாரியின் டிரைவர்.

“ஏன், வேறு வழியில்லை?”

“எப்படியும் மவுண்ட்ரோட்டைக் கிராஸ் பண்ணியாகணுமே சார், ஊர்வலம் மூன்று மைல் நீளமிருக்கிறது.”

“ஓகோ.”

மூடியிருந்த கதவை லேசாகத் திறந்துகொண்டு இன்ஸ்பெக்டர் வெளியே நோக்கினார். குறுகுறுப்பைத் தவிர்க்க முடியாத போலீஸ்காரர்களும் எட்டிப் பார்த்தார்கள் - சற்றே ரமணனிடமிருந்து விலகி.

மின்னல் நேரம்தான் அந்த அவகாசம். ரமணனுக்கு அதுவே போதுமானதாயிருந்தது.

குபீரென்று வெளியே பாய்ந்தான். பாயும்போதே இன்ஸ்டபெக்டரின் கையிலிருந்த கைக்குட்டைப் பொட்டலத்தையும் ஒரு தட்டுத் தட்டிப் பறித்துக் கொண்டான்.

இன்னொரு மின்னல் பாய்ச்சல். சாலையோரத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களை ஊடுருவிப் பிளந்தான். சாலையை அடைந்தான்.

ஊர்வலத்தோடு ஊர்வலமாக ஐக்கியமானான் அடுத்த நிமிடம்.

ஏதேதோ 'வாழ்க' கேட்டன. ரமணனும் வாழ்த்தினான். ஏதேதோ 'ஒழிக' ஒலித்தன. ரமணனும் ஒலித்தான். கூவிக்கொண்டே, கையை வீசிக் கொண்டே, ஊர்வலத்தின் நடுவுக்குள் புகுந்து புகுந்து முன்னேறி முன்னேறிப் போய்க் கொண்டேயிருந்தான். லட்சோ பலட்சம் எள் மணிகளில் அவனும் ஓர் எள்ளாகிவிட்டான்! அவனைக் கண்டு பிடிக்கவே முடியாது.

போலீஸ்காரர்கள் இருவரும், "பிடி! பிடி!” என்று பாயவிருந்தனர்.

“உஸ்! வேண்டாம்!" என்று அவர்களை அவசரமாகத் தடுத்தார். இன்ஸ்பெக்டர். “ஊர்வலத்தில் புகாதே! இன்னும் பெரிய அமளியாகிவிடும். என்ன ஏது என்று பரபரப்பு ஏற்படும். போலீஸ்காரர்கள் ஊர்வலத்தைக் கலைக்கிறார்கள் என்று நம் மீது பாய்வார்கள். அப்புறம் அவ்வளவுதான்... கடவுளே!” தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார் அந்த அப்பாவி அதிகாரி.

ஆனால் ரமணனின் அதிர்ஷ்டம் சில நிமிடங்களுக்குத் தான் நீடித்தது. உற்சாகமாகவும் ஆவேசமாயும் சென்று கொண்டிருந்தது ஊர்வலம். இனிப் பயமில்லை என்று ரமணன் நினைத்தான். எப்படி ஊர்வலத்திலிருந்து விடுபட்டு விலகி நழுவுவது என்று ஆராயத் தொடங்கினான்.

திடீரென்று

ஊர்வலத்தின் பின் பகுதியில் ஏதோ கலாட்டா. யார் ஆரம்பித்தார்கள், எப்படி ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை. சர்சர்ரென்று கற்களும் புட்டிகளும் மண்ணும் மழையாய்ப் பொழிந்தன ஆகாயத்தில். கண் மண் தெரியாமல் புழுதிப் படலம் பறந்தது. அமைதியாகச் சென்று கொண்டிருந்த முன் பகுதியும் இதனால் குலைந்தது. “விடாதே! பிடி! தாக்கு!” என்ற மூர்க்கமான குரல்கள் பல திசைகளிலும் புறப்பட்டன.

அமளி, அடிதடி, கலவரம், கண்ணீர்ப் புகை... சந்தடி சாக்கில் நழுவியோட முயன்றான் ரமணன். ஆனால் போலீஸ் கையொன்று அவனைக் கப்பென்று பிடித்தது.

“போட்டா கையிலிருக்கிற கல்லை! போடு!” - போலீஸ் குறுந்தடி ரமணனின் கழுத்தைப் பதம் பார்த்தது.

“கல்லா! ஏது கல்?” ரமணன் திகைத்தான்.

“சீ! கர்சீப்பிலே பின்னே என்ன தங்கக் கட்டியா எடுத்துப் போகிறே?” வலுக்கட்டாயமாகப் பறித்தார். போலீஸ்காரர்.

உள்ளே ஒளிவிட்ட வைர முருகன் அவர் கண்ணைக் குருடாக்கினான்.

“என்ன...”

ரமணனால் ஓட முடியவில்லை. எந்தப் போலீசின் பிடியிலிருந்து பத்து நிமிடம் முன்பு தப்பி வந்தானோ, அதே போலீசின் கரம் அவனை மடக்கிவிட்டது!

போலீஸ் ஸ்டேஷனில் ரமணனுக்கு ஒரே ஒரு தஞ்சம்தான் இருந்தது.

“சார், நாகர்கோவிலுக்கு மெஸேஜ் அனுப்புங்கள். அஸிஸ்டென்ட் கமிஷனர் தணிகாசலத்தைக் கேளுங்கள்” என்றான் திரும்பத் திரும்ப.

"செய்கிறேன், அதுவரையில் என் விருந்தாளியாக இரு, ராஜா!” என்றார் இன்ஸ்பெக்டர்.

வெகுநேரம் கழித்து லாக்கப் கதவுகள் கிறீச்சிட்டன. நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்ட ரமணன் கண்ணைக் கசக்கிக் கொண்டான்.

இன்ஸ்பெக்டர்தான் உள்ளே வந்தார். “சாரி, மிஸ்டர் ரமணன்” என்றார். அவர் கையில் தந்திக் காகிதம் ஒன்று இருந்தது.

ரமணன் பெருந்தன்மையாகப் புன்னகை செய்தான். "என்ன, அஸிஸ்டென்ட் கமிஷனர் தணிகாசலத்திடமிருந்து பதில் வந்துவிட்டதா?”

“ஆமாம். நான் உங்களைப் பற்றித் தப்பாகக் கணக்கிட்டுவிட்டேன்,” என்றார் இன்ஸ்பெக்டர்.

"பரவாயில்லை.” ரமணனின் பெருந்தன்மை விரிந்தது. “இப்போது நான் போகலாமல்லவா?”

“இன்ஸ்பெக்டரைத் தாண்டிக் கொண்டு செல்ல அவன் முயன்றான். இரும்புக் கரங்கள் அவனை ஒரே நெட்டில் பின்னுக்குத் தள்ளின.”

"என்ன இன்ஸ்பெக்டர்?" கீழே விழுந்தான் ரமணன். கொள்ளியாய்ச் சிவந்திருந்தன போலீஸ் அதிகாரியின் விழிகள்.

“அஸிஸ்டென்ட் கமிஷனர் தணிகாசலத்தையா சாட்சிக்குக் கூப்பிட்டாய் அருமையாய், அபாரமாய்ச் சாட்சி சொல்லியிருக்கிறார் உனக்காக! இதோ பார்!"

நாகர்கோவிலிருந்து வந்திருந்த தந்தி ரமணனின் கண்முன் படபடத்தது. டைப்படித்து ஒட்டிய வரிகள் அவனைத் தலைசுற்ற வைத்தன.

"ரமணன் என்று எவரையும் எனக்குத் தெரியாது. அப்படிச் சொன்னால் நம்ப வேண்டாம். சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்கலாம். தணிகாசலம்.

ரமணனின் தலையில் ஒரு தட்டுத் தட்டி அவனைத் தள்ளினார் இன்ஸ்பெக்டர். அவன் மீண்டும் நிமிர்ந்தபோது லாக்கப் கதவுகள் சாத்திக் கொண்டுவிட்டன.”

*****

14

“நர்ஸ்! நர்ஸ்!” கூப்பிட்டுக் கூப்பிட்டுக் குழந்தைப்பாண்டியனுக்குத் தொண்டை வரண்டுவிட்டது. மூன்றாம் முறையாக, ஈனசுரத்தில், “நர்ஸ்!” என்று அழைத்தார். களைப்புடன் கண்ணை மூடிக் கொண்டார்.

நர்ஸ் அம்மணியாக இருந்திருக்கும் பட்சத்தில், அவர் கூப்பிட வேண்டிய அவசியமே நேராது. அவளாகவே எவ்வப்போது என்னென்ன தேவைப்படும் என்று குறிப்பறிந்து செய்வாள். நர்ஸ் அம்மணியை நினைத்து ஒரு நிமிடம் மனம் கலங்கினார் குழந்தைப் பாண்டியன். ஆனால் அடுத்த நிமிடமே அவருக்குக் கோபம் ஏற்பட்டது. அம்மணியின் பணிவும் உபசரணையும் வெறும் வெளி வேடம்தானே? சீனாக்காரப் பயல்களுக்காக ஒற்று வேலை பார்த்த மோசடிக்காரி அவள்... அதனால் தான் அப்படி நடந்து கொண்டாள். புதிய நர்ஸ், நஞ்சுண்டனால் அமர்த்தப்பட்டவள். இரவில் தங்குவது கிடையாது. பகலிலும் நினைத்த நேரத்தில் வருவாள். நினைத்த நேரத்தில் போய்விடுவாள்.

“அதனாலென்ன? பணிவு வேடம் போட்டுக் கொண்டு உளவு வேலை பார்ப்பவளைக் காட்டிலும்! வேலையில் முன்னே பின்னேயுள்ளவளானாலும் நம்பகமாக இருக்கிற நர்ஸே மேல். தனக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டார் குழந்தைப்பாண்டியன்.”

“கூப்பிட்ட மாதிரி இருந்ததே என்ன வேண்டும்?” - எங்கிருந்தோ எழுந்து வந்தாள் புது நர்ஸ். இளமையும் துறுதுறுப்பும் போட வேண்டிய யூனிபாரத்தை வயோதிகமும் சிடுசிடுப்பும் அணிந்திருந்தன.

“என் கைக்கருகே கட்டிலில் ஒரு பஸ்ஸர் இருக்கிறதே, அது வேலை செய்யவில்லையோ? அழுத்திப் பார்த்தேன். மணி அடிக்கவில்லையே?” என்று குழந்தைப் பாண்டியன் கேட்டார்.

“நான் தான் ஒயரை வெட்டி டிஸ்கனெக்ட் பண்ணி விட்டேன்” என்று தயங்காமல் பதில் தந்தாள் நர்ஸ்.

“ஏன்? ஏன்...?”

“அது ஏன் ஒரு தலைவலி? நான்தான் நீங்கள் குரல் கொடுத்ததும் வந்துவிடுகிறேனே? பஸ்ஸர் சத்தம் கேட்டால் எனக்கு வயிற்றைப் புரட்டுகிறது. சரி, எதற்குக் கூப்பிட்டீர்கள்?”

“தண்ணீர் கொண்டு வாம்மா” என்றார் குழந்தைப் பாண்டியன் பரிதாபமாக.

"ஓ” என்று உற்சாகமாகச் சொல்லவில்லை புதிய நர்ஸ். “கொஞ்சம் முன்புதானே இரண்டு டம்ளர் குடித்தீர்கள்?” என்று சொல்லிக்கொண்டே போனாள். நஞ்சுண்டன் உள் வந்து மெளனமாக அவரருகில் உட்கார்ந்தான். நர்ஸ் தண்ணீர் கொடுத்துவிட்டு வெளியேறினாள் கைகளை வீசிக்கொண்டே.

“கவனித்தாயா?” என்றார் குழந்தைப் பாண்டியன் வெறுப்புடன்.

“கவனித்தேன். அதைப் பற்றித்தான் யோசனை செய்து கொண்டே வந்தேன்.” கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டு திரும்பினான் நஞ்சுண்டன். “கூலிக்கு வேலை செய்கிற நிலையிலுள்ளவர்கள் திமிராக நடந்து கொண்டால் அதற்கு ஒரே ஓர் அர்த்தம்தான் உண்டு. நம்முடைய குடுமி அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது.”

“நீ என்ன சொல்கிறாய் நஞ்சுண்டன்?”

“அம்மணி நம்மிடம் சிக்கியிருந்தாள். மிரட்டியதும் ஓடும்படி ஆகிவிட்டது. இந்தப் புதியவளை நல்லவள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவளுக்கு உங்களைப் பற்றியோ, ரேணுகவைப் பற்றியே என்னவோ தெரிந்திருக்க வேண்டும். இதைப் பாருங்கள்.”

ஒரு சிறிய பிளாஸ்டிக் பொத்தானை அவர் கண் முன்னால் காட்டினான் நஞ்சுண்டன். பைசாக் காசைவிடச் சற்றுப் பெரிதாக, நீள்வட்டமாக இருந்தது அது. நல்ல சிவப்பு நிறம். அதன் முகப்பில் மாசேதுங்கின் முகம் வெள்ளைக் கோட்டில் வரையப்பட்டிருந்தது.

கலவரமும் குழப்பமும் நிறைந்த குரலில், “ஏது இது?” என்று வினவினார் குழந்தைப்பாண்டியன்.

“புது நர்ஸின் அறையருகே கிடந்தது. இவளும் சீனாக்காரனின் கையாளாக மாறிவிட்டாள் போலிருக்கிறது. ஆனால் நாம் மிரட்டி வெளியேற்ற முடியாதபடி எதையோ தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாள். அதனால்தான் இந்தத் திமிரும் அலட்சியமும்!”

"இனிமேல் எல்லோரையும் காட்டிலும் நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். வைர முருகன் இன்னும் உங்களிடம் இருப்பதாகத்தான் சீனர்கள் நினைத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆகவே, இந்த அறைக்குள் நுழைய யாரேனும் முயற்சி பண்ணலாம். அப்போது - ”

நஞ்சுண்டன் வெளியே எடுத்து நீட்டிய பொருளைக் கண்டதும் குழந்தைப் பாண்டியனின் முகம் பீதியினால் வெளுத்தது.

“என்ன... ஏன்...” என்றார்.

நஞ்சுண்டன் கொடுத்தது, ஒரு கைத்துப்பாக்கி.

"வைத்துக் கொள்ளுங்கள் இதை உங்கள் பாதுகாப்புக்கு. கையில் தயாராக ஆனால் போர்வையின் கீழே இருக்கட்டும். யாருக்கும் தெரிய வேண்டாம். இரவு வேளையில், அத்து மீறி இங்கே யாராவது நுழைந்தால் - உங்களுக்குக் கைத்துப்பாக்கி உபயோகித்துப் பழக்கம் உண்டல்லவா?”

"உண்டு, ஓரளவு. ஆனால்... இது அவசியம்தானா நஞ்சுண்டன்?”

முக்காலும் அவசியம். ஆனால் ஜாக்கிரதையாகக் கையாளுங்கள். இடுப்புக்குக் கீழே - காலில் மட்டுமே சுடுங்கள். போலீசில் தக்கபடி சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.”

கைத்துப்பாக்கியை அவரது உள்ளங்கையில் வைத்து, போர்வையைப் போர்த்தினான் நஞ்சுண்டன்.

இரவு மணி பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. நள்ளிரவின் பெருமூச்சுகள் ஓய்ந்துவிட்டன. முணு முணுப்புக்கள் தேய்ந்துவிட்டன; அமைதியின் மடியிலே இரவுக் குழந்தை தூங்கத் தொடங்கியது.

கட்டிலில் படுத்திருந்த அந்த வயோதிகருக்குத் தூக்கமில்லை. இன்று மட்டுமல்ல. குழந்தைப்பாண்டியன் நித்திரையை இழந்தது. கை கால்களின் ஆளுகையை எப்போது அவர் இழந்தாரோ, அன்றே அவருடைய உறக்கமும் தொலைந்துவிட்டது. மாத்திரைகளும் ஊசிகளும்தான் அவரைப் பலவந்தமாக நித்திரையில் ஆழ்த்தி வந்தன.

இன்று, அவைகளின் உதவியும் பலிக்கவில்லை. உலக மொத்தமும் ஒடுங்கிவிட்ட வேளையில், கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு படுக்கையில் கிடந்தார் குழந்தைப்பாண்டியன். வலப்புறம் இருந்தது. சிறிய கப்போர்டு, அதன் வெள்ளைப் பரப்பின் வைக்கப் பட்டிருந்த அலாரம் பளபளக்கும் இரு கைகளையும் அகல விரித்துக் கொண்டிருந்தது. பன்னிரண்டு முப்பத்தைந்தைக் காட்டிக் கொண்டிருந்த முட்கள், 'எப்படியோ போ எப்படியோ போ, என்று சொல்கின்றனவா என்ன?’

குழந்தைப் பாண்டியனின் கண்ணில் நீர் பொங்கியது. கன்னங்களில் வழிந்தது. அதைத் துடைக்கக்கூட யாருமில்லை. தலையை இப்படியும் அப்படியும் திருப்பி, தலையணைக்கு ஈரத்தைத் தந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திடீரெனத் தன் மூத்த மகளைப் பற்றிய நினைவு அவரைக் குடைந்தெடுத்தது.

'சுகுமாரி - என் செல்வ மகளே!' என்று நெஞ்சுக்குள் புலம்பினார். அடுத்த வினாடி, கோபம் புயலென வீசியது அவர் உள்ளத்தில். புத்திரியைக் கொலை செய்த பாதகனை யாரென்று தெரியாமலே எண்ணிக் குமுறினார்.

கை விரலில், போர்வையின் மறைவில், துப்பாக்கி புரண்டு கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் இக்குடும்பத்தைக் குலைக்க முனைகின்றதே ஒரு கும்பல்? நினைக்கும்போதே ஆவேசம் கொந்தளித்தது. 'இனியொரு முறை அப்படியெல்லாம் நடக்கவிடேன்,' என்று தனக்குத் தானே உறுதி சொல்லிக் கொண்டார். வைர முருகனை அபகரிக்கிற சாக்கில் வந்தாலும் சரி; வேறெந்த உருவிலே புகுந்தாலும் சரி, அதை -

திடீரென்று அவருடைய புலன்கள் கூர்மையாகின. படுக்கையிலேயே எப்போதும் கிடப்பதால், ஆறாவது புலனொன்று சுறுசுறுவென்று இருப்பது வழக்கம். வாடிக்கைக்கு விரோதமான, வித்தியாசமான ஓசை கேட்கும் போது, அந்த வினாடியே அந்த ஆறாவது புலன் விழித்துக் கொள்ளும்; ஓய்ந்திருக்கும் மற்ற ஐந்தையும்கூட எழுப்பிவிட்டுவிடும். அந்த வழக்கப்படி குழந்தைப் பாண்டியன் இப்போது உஷாரானார். தோட்டத்திலே மெல்லியே காலடியோசை கேட்பதை அவர் உணர்ந்தார். கைத் துப்பாக்கியின் குதிரையிலே விரலைப் பொருத்திய வண்ணம் மூச்சை அடக்கிக் கொண்டு காத்திருந்தார்.

அவருக்கு நேர் எதிரில் பெரிய ஜன்னலொன்று இருந்தது. அதன் இரு கதவுகளும் திறந்து வைக்கப் பட்டிருந்தன, காற்றோட்டத்துக்காக. கம்பிகள் ஏதுமற்ற ஜன்னல். காலடியோசை அதை நோக்கித்தான் வருகின்றது என்று கணக்கிட்டார் குழந்தைப்பாண்டியன்.

கைத்துப்பாக்கியைப் போர்வைக்குள்ளாகத்தான் வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதன் முகம், திறந்த ஜன்னலையே ஆசையுடன் நோக்கிக் கொண்டிருந்தது.

இதோ வருகிறது வாடா சதிகாரா, வா. இன்று உன்னை மடக்காமல் விடுவதில்லை.

உருவத்தின் தலை கொஞ்சம் கொஞ்சமாக ஜன்னல் பக்கம் உயருவதைக் கவனித்தார் குழந்தைப்பாண்டியன். பிறகு, முழு உருவமும் ஜன்னலை அடைத்துக் கொண்டது. வெளியே இருந்த மங்கிய வெளிச்சத்தில், கறுப்பு அட்டையை வெட்டி வைத்த மாதிரி தோன்றியது. அதன் உயரம், பருமன், நிறம் முதலிய எதுவும் புலப்படவில்லை. ஆணா பெண்ணா? ஊகிக்க முடியவில்லை.

குழந்தைப் பாண்டியனுக்கு மார்பை அடைத்துக் கொள்கிற மாதிரி இருந்தது வியர்வையின் ஈரத்திலும், உள்ளத்தின் படபடப்பிலும், கையினின்னு துப்பாக்கி நழுவி விழுந்துவிடுமோ என்று அஞ்சினார். வருகின்ற உருவம் தன்னை முந்திக் கொண்டு விடுமோ என்றும் பயந்தார். அதற்கு முன், தான் முந்திவிட வேண்டும் என்றும் எண்ணினார்.

எண்ணம் செயலாகுமுன் அந்த உருவம் அறைக்குள் குதித்தது. அல்ல, குதிக்க முயன்றது.

குழந்தைப்பாண்டியனின் விரல் மறுவினாடியே இயங்கியது. கைத்துப்பாக்கி தன் கடமையை ஆற்ற, ஆர்வத்துடன் பாய்ந்தது.

“ஆ!” என்ற கூக்குரலுடன் அந்த உருவம் அறைக்குள் விழுந்தது. தூக்கிவாரிப் போட்டது குழந்தைப் பாண்டியனுக்கு. குரல் - பெண் குரல் அல்லவா?

யார் இந்தப் பெண்? ஏன் வந்தாள்? அவர் சிந்தனை எட்டுத் திசைகளில் பறந்தது. அதே சமயம், "அப்பா! என்னப்பா!” என்று அடுத்த அறையிலிருந்து ஓடி வந்தாள் ரேணுகா. ஆனால் தந்தையின் அறையில் அவள் பிரவேசிப்பதை ஒரு வலுவான கரம் தடுத்தது. குறுக்கிடும் கைக்கு உடையவன் நஞ்சுண்டன் என்பதையும் அவள் உணர்ந்தாள்.

“விடு வழியை! அப்பாவை என்ன செய்துவிட்டாய் நீ! உன்னைச் சும்மா விடமாட்டேன்!" என்று கத்தினாள்.

நஞ்சுண்டன் அமைதியாக ஆனால் அழுத்தமாக அவளை வாசலிலே நிறுத்தி வைத்தான். "பதற்றம் காட்ட இது சமயமல்ல, ரேணுகா. உன் அப்பாவுக்கு ஒரு கெடுதலும் நேரவுமில்லை நேரவும் நேராது. நான் உத்தரவாதம் அதற்கு. வேறு ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்கிறது. நல்ல வேளை, நம்மைத் தவிர யாரும் எழுந்திருக்கவில்லை. இப்போது நீ உள்ளே வராதே. என்ன, ஏது என்று பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்.”

“அவனைத் தள்ளிக் கொண்டு செல்ல முயன்றாள் ரேணுகா. நீ எனக்கு உபதேசம் செய்ய வேண்டியது அனாவசியம். நீ நகரப் போகிறாயா? அல்லது கூச்சல் போட்டு ஆட்களையெல்லாம் வரவழைக்கட்டுமா?”

“ரேணுகா!”

அதட்டலான குரல் நஞ்சுண்டனுடையதல்ல. படுக்கையிலிருந்து குழந்தைப்பாண்டியன் தான் இரைந்தார். அவருடைய குரல் அவ்வளவு கடுமையாக ஒலித்து அவள் கேட்டதே கிடையாது.

“ரேணுகா! உன் விவாதத்தை நிறுத்து முதலில். நஞ்சுண்டன் சொல்கிறபடி கேள். அவருக்குத் தெரியும் எதெது எவ்வப்போது செய்ய வேண்டுமென்று. எதிர்த்துப் பேசாதே பேசினால் நீ என் மகளேயல்ல.”

இடி விழுந்தாற்போல் ஒரு கணம் அசையாது நின்றாள் ரேணுகா. இருட்டில் பளபளத்த அவளுடைய நெருப்பு விழிகள் நஞ்சுண்டனைச் சுட்டெரித்தன.

“சரி அப்பா.” மெல்லக் கூறிவிட்டு நிலைப் படியிலிருந்து பின்புறம் நகர்ந்தாள் ரேணுகா.

கதவைச் சாத்தினான் நஞ்சுண்டன். “எச்சரித்தபடியே நடந்து விட்டதே!” என்றான் குழந்தைப்பாண்டியனிடம்.

“ஆமாம், ஆமாம். யாரென்று பார் சீக்கிரம். யாரோ பெண் போல் அல்லவா இருந்தது. எங்கே அடிபட்டிருக்கிறதென்று பார்.”

நஞ்சுண்டன் விரைவாகவும் பதற்றமில்லாமலும் செயலாற்றினான். விளக்குகளை அவன் போடவில்லை. இரண்டொரு நிமிடங்களுக்கு அவன் விழுந்து கிடந்த உருவத்தினருகே மெனக்கெட்டான். அந்தச் சந்தடிகள் குழந்தைப்பாண்டியனின் செவியில் ஒலித்தன. ஆனால் என்ன செய்கிறான் என்று தெரியவில்லை.

"ஹூம்.” நெடுமூச்சொன்றை வெளியேற்றிவிட்டுக் கட்டிலுக்கருகே திரும்பினான் நஞ்சுண்டன்.

“என்ன பார்த்தாயா? ரொம்ப அடியா? யார் அது? பெண்தானா? அல்லது பெண் மாதிரி குரலுள்ள ஆணா?” குழந்தைப்பாண்டியனிடமிருந்து கேள்விகள் சீட்டு அடுக்கை விசிறி அடித்த மாதிரி புறப்பட்டு வந்தன.

“காலுக்குக் கீழே சுடும்படியாகத்தானே நான் சொல்லியிருந்தேன்?” என்றான் நஞ்சுண்டன்.

“அப்படித்தானே சுட்டேன்... ஏன், வேறெங்கானும் பட்டிருக்கிறதா?”

"நடு மார்பில் - இருதயத்தில்" என்றான் நஞ்சுண்டன். "உயிர் போயாயிற்று.”

“என்ன?”

குழந்தைப்பாண்டியன் தன்னையும் மீறி எழுந்து உட்கார்ந்து விடுவார் போலிருந்தது.

“அமைதி, அமைதி. காலில் கையில் பட்டிருந்தால், தற்காப்பு என்று சொல்லலாம். இதைப் போலீசார் கொலை என்றுகூடச் சொல்லக்கூடும். பரவாயில்லை. நடந்தது நடந்து விட்டது. இனி அடுத்ததைப் பார்ப்போம்.”

குழந்தைப்பாண்டியனின் நாக்குக் குழறியது. “நஞ்சுண்டன்! வந்தவன் வந்தவள் - இறந்தா போய்விட்டான்? நன்றாகப் பார்த்தாயா?"

“நன்றாகப் பார்த்துவிட்டேன். சந்தேகத்துக்கு இடமில்லாமல் உயிர் போயாயிற்று,” என்றான் நஞ்சுண்டன். “பெண் என்று நீங்கள் சொன்னதும் சரிதான்.”

“அவள் - ”

“நீலா - உங்கள் மகளின் தோழியாக இருந்தவள்.”

“நீலா - ஐயோ, அந்தப் பெண்ணையா நான் கொலை செய்துவிட்டேன்” துடித்தார் குழந்தைப்பாண்டியன். மறுகணமே ஒரு திடீர் ஞாபகம் வந்தது. மனம் அமைதியாயிற்று. “ஆமாம். இந்த நீலாவும் ஒரு சீன உளவாளிதான் என்று முன்பொரு முறை சொன்னாயல்லவா? வைர முருகனுக்காகத்தான் வந்திருப்பாளோ?”

“அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன்.” நஞ்சுண்டன் பின்கை கட்டியவாறு கட்டிலை ஒருமுறை வலம் வந்தான். மீண்டும் குழந்தைப் பாண்டியனின் அருகே உட்கார்ந்தான். “உங்கள் மனசுக்கு வருத்தம் தரக் கூடாதென்றுதான் பார்க்கிறேன். ஆனால் முடியவில்லை. இந்த நீலாவின் மரணத்தில் மிகவும் சம்பந்தப்பட்ட இன்னொருவர் இருக்கிறார். அது, நம் பிரசினையை மேலும் சிக்கலாக்குகிறது.”

“யார் - யாரைச் சொல்கிறாய்?"

“உங்கள் இரண்டாவது மகள் - ரேணுகா.”

“என்ன அவளுக்கு இதிலே?”

"பொறுங்கள் விடிவதற்கு இன்னும் வெகு நேரம் இருக்கிறது. உலகம் விழித்துக் கொள்ளவில்லை. இரவோடிரவாக எதையும் மறைத்துச் சமாளித்துவிடலாம். உங்கள் மகளைக் காப்பாற்ற நான் இருக்கிறேன். கவலைப் படாதீர்கள் குழந்தைபாண்டியன், கவலையே படாதீர்கள்” என்றான் நஞ்சுண்டன். குழந்தைப்பாண்டியன், யாருக்கும் கேட்காதபடி விம்மிக் கொண்டிருந்தார்.

*****

15

திடுப்பென்று அறைக்குள் புகுந்துவிட்டாள் ரேணுகா.

ஆனால் அதற்கும் தயாராயிருந்தான் நஞ்சுண்டன் அவளை வாசலிலேயே தடுத்தவன், “உன் தந்தைக்கு மரியாதை தரக்கூட மறந்துவிட்டாயா ரேணுகா? சற்று முன் சொல்லவில்லை, வெளியிலேயே நிற்கும்படி?” என்றான்.

குழந்தைப்பாண்டியனின் குரல் குறுக்கிட்டது: “இல்லை நஞ்சுண்டன், எப்போது இவ்வளவு பரபரக்கிறாளோ, அப்போது தெரிந்து கொள்ளட்டும். ரேணுகா, இந்த அறைக்குள் ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. போதுமா?”

"கொ - கொ-” விழிகள் குத்திட்டு நின்றன ரேணுகாவுக்கு. ஜன்னல் பக்கம் அவள் பார்வை ஓடியது.

“ஆனால் யாரென்று நீ தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.” சொல்லிக்கொண்டே, விழுந்து கிடந்த சவத்தினருகே சென்றான் நஞ்சுண்டன். அதன் முகத்தின் மீது தன் கைக்குட்டையைப் போட்டு மூடினான். “சற்று நேரம் அங்கேயே இரு. முதலில் இதை மறைப்பதற்கு வழியைச் செய்வோம்.”

“அப்பா!”

“அதுதான் கேட்டாயே!” குழந்தைப்பாண்டியன் கசப்புடன் அதட்டினார். "என்ன செய்யப் போகிறாய், நஞ்சுண்டன்?”

"விஷயம் எல்லை மீறிப் போய்விட்டது. நாலாமவருக்குத் தெரியாமல், நம் வீட்டுத் தோட்டத்திலேயே ரகசியமாய்ப் புதைக்க வேண்டியதுதான்.”

ரேணுகாவுக்குத் தலை சுற்றியது. அது எத்தனை கோரமான விஷயம், எவ்வளவு சாதாரணமாக விவாதிக்கப் படுகிறது!

“செய் நஞ்சுண்டன்” என்று குழந்தைப்பாண்டியன் அனுமதி கொடுத்தார்.

மயான நிசப்தம் என்றால் அதைத்தான் சொல்ல வேண்டும். குழந்தைப்பாண்டியனின் அறையில் பேச்சு மூச்சுக் கிடையாது. எதிரியின் பாசறையில் வெடி மருந்து வைப்பவனைப்போல, ஓசையின்றி நடைபெற்றன காரியங்கள். நஞ்சுண்டன், சுறுசுறுப்பின் உரு; பரபரப்பின் வடிவம்; அதே சமயம், அமைதியின் உறைவிடம்.

"இரு” என்று ரேணுகாவை வாசலுக்கு வெளியே நிறுத்தினான். ஒரு பழைய போர்வையை நர்ஸின் அறையிலிருந்து எடுத்தான். நீலா கிடக்குமிடத்துக்கு எடுத்து வந்து விரித்தான். அதிலே பிரேதத்தைத் தூக்கி வைத்தான். முகத்தை மீண்டும் இன்னொரு துணியால் மூடினான்.

குழந்தைப்பாண்டியனால் எழுந்திருக்க முடியவில்லை. அந்த இயலாமையின் கொடுமையை அவர் இன்றுதான் முற்ற முழுக்க அனுபவித்தார். நஞ்சுண்டன் நகர நகர அவர் கண்களும் நகர்ந்தன. அவனுடைய அசைவுக்கேற்ப அவர் பார்வை நாயென ஓடியது. நஞ்சுண்டனின் நடை, அவருடைய இருதயத்தை மிதித்துக் கொண்டு செல்வதாகவே இருந்தது. "ஆச்சா, ஆச்சா?” என்று அவர் அரை வினாடிக்கொரு முறை கேட்டுக் கொண்டிருந்தார். “இதோ”, என்று நஞ்சுண்டன் பதிலளிக்கப் பதிலளிக்க, பதட்டம்தான் அதிகமாகிக் கொண்டிருந்தது அவருக்கு.

“ரேணுகா, இனி நீ உள்ளே வரலாம். வா." நஞ்சுண்டன் அழைத்தான். அதற்குமுன் கடைசித் தடவையாக நீலாவின் உடல் மீது ஒரு பார்வையைச் செலுத்தினான். முகம் நன்கு மூடியிருந்தது. ரேணுகாவினால் இன்னாரெனக் கண்டுகொள்ள முடியாது. தற்காலிகமாக அப்படியே இருக்கட்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு வேளை உண்டு. சுட்டுக் கொல்லப்பட்டவள் நீலாதான் என்று தெரிவிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் தெரிவிக்கலாம்.

நெஞ்சம் பதைக்க ஓடி வந்தாள் ரேணுகா. சாபத்தால் கல்லாகிப் போனவள்போல், அசைவற்று நின்றாள் சடலத்தின் அருகில். முகம் தெரியவில்லை. இருப்பினும் இந்த வாளிப்பான உடல், இளமையான பிராயம்...

குழந்தைப்பாண்டியனின் எச்சரிக்கை விரைந்து வந்தது. மகள் அசம்பாவிதமாகக் கத்தி கலாட்டா செய்து விடப் போகிறாளே என்ற அச்சம் அவருக்கு.

“ரேணுகா! சத்தம் கித்தம் போடாதே. நஞ்சுண்டன் சொல்கிறபடி நடந்துகொள் அவருக்கு ஒத்தாசை செய்” என்றார்.

ரேணுகாவுக்குக் குழப்பம் கூத்தாடியது. தந்தைக்குப் பதிலிறுக்கவில்லை. தரையிலே கிடக்கும் சடலத்தையே அவள் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

“எனக்கு எவ்வித ஒத்தாசையும் தேவையில்லை. கால்மாட்டில் பிடித்தால் போதும்" என்றான் நஞ்சுண்டன். “கொல்லைப்புறம் வரையில் தூக்கி வர வேண்டும். அவ்வளவுதான்.”

ஒரு பெருமூச்சுப் புறப்பட்டது ரேணுகாவிடமிருந்து. அவள் மெய் நடுங்கியது. சாக்குக் கட்டியைத் தவிர வேறு தொட்டறியாதவள், ஒரு பிரேதத்தைத் திருட்டுத்தனமாகத் தூக்க வேண்டி நேரிட்டதே! புத்தகங்களைத் தவிர வேறு புரட்டியிராதவள், சில்லிட்ட கால்களைப் பிடிக்கும்படி ஆயிற்றே! நினைக்கும் போதே ரேணுகாவின் நெஞ்சம் பதறியது. தன்னையும் தந்தையையும் இக்கட்டுக்கு மேல் இக்கட்டாகச் சிக்கவைக்கும் நஞ்சுண்டனை என்னதான் செய்வது!

"பிடி" என்றான் அவன், சவத்தின் தலைப்புறத்தைத் தூக்கிக் கொண்டு. அவள் பிடித்தாள், வேறு வழியில்லாமல்.

குழந்தைப் பாண்டியனைக் கடந்து சென்றது சவ ஊர்வலம். “மெல்ல, மெல்ல” என்று துடித்தார் அவர். “ஜாக்கிரதை! யாரேனும் விழித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்!”

“அந்தக் கவலையை என்னிடம் விடுங்கள்.” தலைமாட்டில் பிடித்திருந்த நஞ்சுண்டன், தைரியம் கூறிவிட்டு முன்னே சென்றான்.

இரவை மிதித்துக் கொண்டு இருவரும் வெளியேறினார்கள். ஹாலைத்தாண்டி, பின்கட்டை கடந்து, பங்களாவின் வால்புறத்தைத் தொட்டது அந்தச் சின்னஞ் சிறு சவ ஊர்வலம். நஞ்சுண்டன் பழக்கப் பட்டவன். ஆங்காங்கேயுள்ள கதவுகளைக் காலாலேயே திறந்தான். முதுகினாலேயே வழியுணர்த்தினான்.

தோட்டம் பிரம்மாண்டமானது. கடைசி எல்லையில் தோப்பு என்று சொல்லுமளவுக்குத் தென்னைகள் வளர்ந்திருந்த அங்கே இறக்கினார்கள் சுமையை. வழியில் நஞ்சுண்டன் பேசவில்லை; ரேணுகா பேச விரும்பவில்லை.

"மண்டி வெட்டி இருக்கிறதா, பார்" என்றான் நஞ்சுண்டன். ரேணுகா அப்போதும் மறுமொழி தரவில்லை. மெளனமாகச் சென்று அவன் கேட்டதை எடுத்து வந்தாள்.

"வெளிச்சம் தெரிய வேண்டாம். அணைத்து விடு” என்று நஞ்சுண்டன் கட்டளையிட்டான்.

அவள் விளக்கையும் அணைத்துவிட்டுத் தானும் உட்கார்ந்தாள். நஞ்சுண்டன் பாண்ட்டின் கால்களைச் சுருட்டிவிட்டுக் கொண்டான். தேர்ந்த தோட்டக்காரன் போல் கிடுகிடுவெனக் கொத்தத் தொடங்கினான். சரக் சரக்கென்று மண் கட்டிகள் பறந்து விழுந்தன. வேகமாகப் பள்ளம் உருவாகலாயிற்று. .

முட்டிக்காலிட்டவாறு அமர்ந்திருந்தாள் ரேணுகா. என்ன நம்பவியலாக் கொடுமை! அவள் ஆடி ஓடி விளையாடிய அழகிய தோட்டம், இன்று புதைகாடாகிறது! மலர் பறித்து மண் கோபுரங்கள் கட்டிய பூமி, ஒரு பயங்கரக் கதையைத் தன்னுள் புதைத்துக் கொள்கிறது! மனிதர்கள் வாழ்ந்த இடம் மயானமாகிறது!

யார் இவள்? யார் இவள்? தலைக்குள் வண்டு புகுந்த மாதிரி, கேள்வி அவள் அறிவைக் குடைந்தது. அவள் காலிலிருந்து இரண்டே அடி தூரத்திலிருக்கும் உயிரற்ற உடலைப் பார்த்தாள். இருட்டில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆராய்ந்தாள். பலனில்லை. தன் வயதையொத்த பெண் என்று மட்டும் ஊகிக்க முடிந்தது. அந்த வீட்டுக்குள், அதுவும் தந்தையின் அறைக்குள், நுழையக்கூடிய உரிமையும் அவசியமும் உள்ள பெண் எவளாயிருப்பாள்? ஒவ்வொரு பெயராக அவள் நினைவுப்படுத்திப் பார்த்த வேளையில் -

“பிடி” என்றான் நஞ்சுண்டன். புதைகுழி தயாராகி விட்டது. ரேணுகா யந்திரம் போல் எழுந்தாள். மீண்டும் சவத்தின் கால்புறத்தைப் பற்றிக் கொண்டாள். விறைத்துச் சில்லிட்டு, ஈர விறகுக் கட்டை போல் இருந்தன அந்தக் கால்கள்.

தூக்கினாள். வயிற்றின் மீது மடித்து வைக்கப் பட்டிருந்த கைகளிலொன்று சரிந்தது. அதைச் சரிப்படுத்தினாள். அவளறியாமலே தொட நேர்ந்தது. மறு வினாடியே திடுக்கிட்டாள்.

மெல்லிய நட்சத்திர வெளிச்சம் தான் அங்கே பரவியிருந்தது. இருந்தாலும், பளிச்சென்று ரேணுகாவின் கண்ணுக்குப்பட்டது சவத்தின் கைவிரலில் இருந்த அந்த மோதிரம்!

சாதாரண வெள்ளைக் கல் மோதிரம்தான் அது. அனேகமாக, வெள்ளியில் செய்து பவுன் முலாம் பூசியதாகக்கூட இருக்கும். ஆனால், அதன் வடிவம் ஆங்கில 'என்' எழுத்தைக் காட்டியது.

என்? ரேணுகாவுக்கு மூச்சு நின்றது. 'என்' என்ற முதலெழுத்துள்ள தோழி நீலாவின் பெயர் அவள் உதடுவரை வந்துவிட்டது. அடுத்து, அவள் அணிந்திருந்த ஸாரி ஆம் அதை அடிக்கடி நீலா கட்டிப் பார்த்திருக்கிறாள். உடலின் அமைப்பு நீலாவின் உயரம் பருமன்தான். அதெல்லாம் போக அந்த மோதிரத்தில், மூன்று கற்கள் பதிந்திருக்க வேண்டிய இடத்தில் இரண்டு தான் இருந்தன. நடுவிலே ஒரு கல் இல்லை. குழி மட்டும் இருந்தது. சந்தேகமில்லாமல் நீலாதான். நன்கு நினைவிருக்கிறது.

"இதிலே ஒரு கல் விழுந்துவிட்டது. எங்கே கொடுத்தால் பதித்துத் தருவார்கள்?” என்று ஒருநாள் ரேணுகாவைக் கேட்டாள்.

"எனக்குத் தெரிந்த நகைக் கடைக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று ரேணுகா வாக்களித்திருந்தாள்.

“நீலா!” - நெஞ்சு வெடிக்க ரேணுகா அலறியிருப்பாள். மிகக் கஷ்டப்பட்டு நிறுத்திக் கொண்டாள். இவ்வளவுக்கும் பின்னே மாபெரும் சிக்கல்கள் இருக்கின்றன. அப்பாகூட எதனாலோ இந்தச் சிடுக்கிலே கால் கொடுத்துவிட்டார் அதனால்தான் நஞ்சுண்டனின் செய்கைக்கெல்லாம் 'ஆமாம்' போடுகிறார். அவசரப்பட்டு ஏதாவது செய்து அப்பாவின் கஷ்டத்தை அதிகப்படுத்தி விடக் கூடாது - இந்த எண்ணம் காரணமாக ரேணுகா கத்தாமல் அடக்கிக் கொண்டாள்.

நஞ்சுண்டன் அவள் விழித்துக் கொண்டதை உணரவில்லை. இடுப்பு ஆழத்துக்குத் தோண்டியிருந்த பள்ளத்தில் சடலத்தை இறக்கினான். மண்ணைப் போட்டு மூடினான். காலால் சமனப்படுத்தினான். எட்டத்தில் கிடந்த கற்களையும் சருகுக் குப்பைகளையும் பொறுக்கி வந்து அந்த இடத்தில் பரப்பினான். பார்ப்பதற்கு எவ்வித வித்தியாசமும் தெரியாதவாறு செய்தான். சற்றுத் தள்ளி நின்று ஆராய்ந்தான். வேலையில் திருப்தி ஏற்பட்டது. “போகலாம்” என்றான்.

பின்தொடர்ந்தாள் ரேணுகா. வாயைத் திறக்கவில்லை. மூச்சுக் காட்டவில்லை. நஞ்சுண்டனுக்குச் சந்தேகம் முளைத்துவிடாதபடி மிக எச்சரிக்கையாக இருந்தாள். ஆனால் உள்ளுக்குள் அவள் மனம் வீரிட்டுக் கொண்டிருந்தது. நீலா! என் அருமைத் தோழி! நஞ்சுண்டனுக்கு வாழ்க்கைப்பட்டு நீ என்ன துன்பத்துக்கெல்லாமோ ஆளானாயே? போதாதா? கடைசியில், அவனுடைய சதியிலே சிக்கி, என் வீட்டிலேயே உயிர் துறப்பதற்காகவா எனக்குத் தோழியாக ஆனாய்? என் அன்பார்ந்த சினேகிதியே! இந்த நட்ட நடுநிசி வேளையில் என் வீட்டுக்குள் உன்னை வரத் தூண்டியது எது?

சாவி கொடுக்கப்பட்டுவள் போல் திரும்பவும் தந்தையின் அறைக்குள் சென்றாள் அவள். "முடிந்து விட்டது" என்று நஞ்சுண்டன் கூறுகின்ற சத்தத்தை அவள் செவிகேட்டது. நீலா இறந்து விழுந்த இடத்தை நஞ்சுண்டன் தானாகவே சுத்தப்படுத்துவதை அவள் கண்கள் கண்டன.

“தலையைச் சுற்றுகிறது, அப்பா. நான் படுக்கப் போகிறேன்...”

ரேணுகா வெளியேறினாள். ஆனால் தன் படுக்கையறைக்கு அல்ல. பக்கத்து அறைக்குத்தான்.

நஞ்சுண்டன் போகட்டும் என்று காத்திருந்தாள். பல நிமிடங்கள், மணிகள் நழுவின

அப்பாடா! ஒரு வழியாய் நஞ்சுண்டன் மாடிக்குச் செல்லும் சத்தம் கேட்டது?

அடி மேலடி வைத்து அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள் ரேணுகா. கட்டிலை நெருங்கினாள். "அப்பா!" என்று கிசுகிசுத்த குரலில் கூப்பிட எண்ணியவள், அதற்கு அவசியமில்லை என்று கண்டுகொண்டாள்.

குழந்தைப் பாண்டியன் கொட்டக் கொட்ட விழித்திருந்தவாறே படுத்திருந்தார்.

“அப்பா! இறந்தவள் உங்கள் கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறுப்படுகிறவள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?”

“உனக்குத் தெரிந்துவிட்டதா?” என்று குழந்தைப் பாண்டியன் எதிர் வினா போட்டார்.

“என் உயிர்த் தோழி, என் பள்ளிக் கூடத்தில் என்னைப் போலவே ஆசிரியையாக இருப்பவள் நீலா, அப்பா அவள்! தெரிந்துதான் சுட்டீர்களா அவளை! என் பிரியத்துக்குகந்த தோழி என்னைவிட்டுப் பிரியவே கூடாதென்று தான், நம் வீட்டுத் தோட்டத்திலேயே அவளைப் புதைப்பதற்கு ஏற்பாடு செய்தீர்களா?”

குழந்தைப்பாண்டியன் நிதானமாகக் கூறினார்:

“நீலா ஏன் இங்கே வரவேண்டும் என்று உனக்குத் தெரியாது?”

“ஆச்சரியமாய் இருக்கிறது அவள் வருகை!”

குழந்தைப்பாண்டியனின் கண்கள் கோபத்தினால் சிவந்தன. பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டிருந்தார் அவர். “ஒளிக்காமல், மறைக்காமல் சொல்கிறேன், கேள். சொந்தச் சகோதரியையே கொலை செய்தவள் நீ!”

“அப்பா!" தந்தையின் மார்பு மீது தலையை மோதிக் கொண்டு வீரிட்டுவிட்டாள் ரேணுகா. “அப்பா! என்ன பயங்கரக் குற்றச்சாட்டு அப்பா!" இதைச் சொல்ல உங்கள் நாக் கூசவில்லையா?

“கொலை செய்ய உன் கை கூசாதபோது, உன்னைப் பெற்ற எனக்கு மட்டும் நாக் கூசமா? மேலும் சொல்கிறேன், கேள். உன் குற்றம் அந்த நீலாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதை வைத்து. உன்னை மிரட்டுவதற்காக அவள் வந்திருக்கிறாள். இரண்டாம் மகளாவது உயிர் பிழைத்துப் போகட்டுமே என்று நான் தான் நீலாவைக் கொன்று, அவள் வாயை அடைத்துவிட்டேன். திருப்தியா?”

“ஐயையோ! அப்பா! யார் கெடுத்தார்கள் உங்கள் புத்தியை இப்படியெல்லாம்?”

"யாரும் என் அறிவைக் கெடுக்கவில்லை. உண்மையை உணர்த்தியவரின் பெயரை வேண்டுமானால் சொல்கிறேன் அதுகூட உனக்குத் தெரிந்திருக்கும் நஞ்சுண்டன்.”

“நஞ்சுண்டன்!" சீறிச் சிலிர்த்தெழுந்தாள் ரேணுகா. தன்னையும் மறந்த ஆவேசம் அவளை ஆட்கொண்டது. “அப்பா! அந்த நஞ்சுண்டன் யாரென்று தெரிந்தால் இப்படி நம்ப மாட்டீர்கள்! அந்தப் பாதகன்...”

எகத்தாளமாகச் சிரித்தார் அவள் தந்தை. "ஓகோ! நேற்று வரை துப்பறியும் நிபுணனாயும், நல்லவனாயும், குடும்ப நண்பனாயும் இருந்தவன், உன் குற்றத்தைக் கண்டு பிடித்தவுடனே பாதகனாகிவிட்டானா!”

"அப்பா! அவன் நல்லவனுமல்ல, நண்பனுமல்ல. அவன் துப்பறியும் நிபுணனே அல்ல. தெரியாத்தனமாய் நான் அழைத்து வந்துவிட்ட ஓர் அயோக்கியன்!”

"என்ன...” குழந்தைப்பாண்டியன் நீரில் மூழ்கினாற்போல் தடுமாறினார்.

“ஆம். எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல வேண்டிய வேளை வந்துவிட்டது” என்றாள் ரேணுகா.

நஞ்சுண்டன் வெளியே நிற்பது அவளுக்குத் தெரியாது.

*****

16

லகத்தின் சுழற்சியே நின்றுவிட்டதா? அசையும் பொருள்களெல்லாம் கற்சிலையாகி விட்டனவா?

பரிபூரண நிசப்தம் நிலவியது அந்தப் போலீஸ் ஸ்டேஷனில். லாக்கப்பின் கம்பிகளுக்குக் குறுக்கே ரமணனின் கரம் நீட்டியது நீட்டியபடியே நின்றுவிட்டது.

தந்தியைத் திரும்பப் பெற்றுக் கொண்டர் சப் இன்ஸ்பெக்டர். அழகாக நீவி மடித்தார். சலவை மடிப்புக் கலையாத பாக்கெட்டுக்குள் செருகிக் கொண்டார்.

“என்ன மிஸ்டர் ரமணன், திருப்தியாயிற்றா? அஸிஸ்டென்ட் கமிஷனர் தணிகாசலம் அநியாயமாய் இப்படிக் காலை வாரிவிட்டு விட்டாரே? என் மனமார்ந்த அனுதாபங்கள்" என்றார் ரமணனிடம்.

“மிக்க நன்றி. தயவு செய்து நாகர்கோவிலுக்கு ஒரு டிரங்க் கால் போடுகிறீர்களா?” ரமணன் அமைதியாகக் கூறினான். "நான் அவரிடம் நேரில் பேசிக் கொள்கிறேன்."

“சரிதான், அதுவேறே ஒரு தண்டச் செலவா?”

“இன்ஸ்பெக்டர், நீங்கள் பின்விளைவுகளை யோசிக்காமல் காரியம் செய்து கொண்டு போகிறீர்கள். நான் இப்போது உடனடியாகப் பேசியாக வேண்டும் மிஸ்டர் தணிகாசலத்துடன். ஏற்பாடு செய்யப் போகிறீர்களா, இல்லையா?”

“ஓ.கே.” என்றார் அந்தப் போலீஸ் அதிகாரி. டேஷனிலிருந்த ரைட்டர் டிரங்க் கால் பதிவு செய்தார். லாக்கப்பிலிருந்து ரமணன் விடுவிக்கப் பட்டான் தற்காலிகமாக.

இரண்டு சதுரங்க சாம்பியன்களைப்போல் எதிரெதிராக இருவரும் மௌனமாய் உட்கார்ந்திருந்தார்கள். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. டெலிபோன் மணி அடித்தது கடைசியில்.

பாய்தெடுக்க முனைந்தான் ரமணன். அதற்கும் முன்னே இன்ஸ்பெக்டர் எடுத்துக் கொண்டார் டிரங்க் காலானதால் வழக்கத்தைக் காட்டிலும் இரைந்தே பேச வண்டியிருந்தது. "எஸ் ஸார்... ஆமாம், தந்தி கிடைத்தது... சரி ஸார்... சரி சார்...”

ரமணன் கையை நீட்டிக் கொண்டேயிருந்தான். இன்ஸ்பெக்டர் பேசிக்கொண்டே போனார். கடைசியில், “என்ன சார்... ஆமாம், அந்த இதோ எதிரில்தான் இருக்கிறான்... ஓ!” என்றார் சிரித்துக்கொண்டே “இந்தப்பா, அஸிஸ்டென்ட் கமிஷனர் உன்னோடு பேச ஆசைப்படுகிறார்” என்று டெலிபோனை நீட்டினார். பிறகு ரமணனின் முகபாவத்தையும் அவன் பேச்சையும் ரசிக்கலானார்.

“நான் தான் ரமணன் பேசுகிறேன் சார்...” என்று ரமணன் ஆரம்பித்தான். சிறிது மெளனம்... “ஊம்... ஊம்...” என்று சொல்லச் சொல்ல அவன் முகபாவம் மாறிக்கொண்டே வந்தது.

இன்ஸ்பெக்டர் கிண்டல் செய்தார்: “என்ன சொல்கிறார்? எப்படி?” என்று கீழ்க் குரலில் கேட்டுக் கண்ணைச் சிமிட்டினார்.

திடீரென்று ரமணன் கூவினான்: “என்ன! தெரியவில்லையா? என்னை, ஸார்! ரமணனை! நீங்கள்...”

பேச்சு நின்றுபோய் விட்டது போலும். டெலிபோனைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். எட்ட வைத்துக் கொண்டு ஆராய்ந்தான். அவன் விழிகள் மிரள மிரள உருண்டன.

தடாலென்று டெலிபோனைப் போட்டுவிட்டுக் கீழே சாய்ந்தான். இன்ஸ்பெக்டர் அவனைத் தாங்கிப் பிடிக்க முனைந்தார். விழுந்தவன் உடனே எழுந்தான்.

கடகடவென்ற சிரிப்பு அவன் தொண்டையிலிருந்து வெடித்துக் கொண்டு கிளம்பியது.

“நான்தான் ரமணன்! நான்தான் கமிஷனர்! நான்தான் கவர்னர்! ஹாஹ்ஹா!” என்று பேய்போல் சிரித்தான்.

கான்ஸ்டபிள் ஒருவர் அச்சத்துடன் நெருங்கி வந்தார். “சார், ஆளுக்கு மூளைக் கலக்கம் போலிருக்கு” என்றார்.

"அப்படித்தான் அஸிஸ்டென்ட் கமிஷனரும் சொன்னார். இல்லாவிட்டால், அவரால் ஸ்பெஷலாய் நியமிக்கப்பட்டவன் என்று உளறுவானா?” என்றார் இன்ஸ்பெக்டர். “அந்த டாக்ரம்மா நாமகிரிக்குப் போன் போடு” என்றார் ரைட்டரிடம்.

ரமணன் சிரித்துக் கொண்டேயிருந்தான், கைத்தியக்காரனைப்போல.

சார், போன் ரைட்டர் டெலிபோனை நீட்டினார் இன்ஸ்பெக்டரிடம். “அம்மா, நான்தான் ஸ்டேஷனிலிருந்து பேசுகிறேன்” என்றார் இன்ஸ்பெக்டர். “வைர முருகன் திருடினானே, அந்த ஆள் ஒரு அரைப் பைத்தியம் என்று தோன்றுகிறது. அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம், தொலைந்து போகட்டும் என்று அஸிஸ்டென்ட் கமிஷனர் சொல்கிறார். உங்கள் பொருள் உங்களுக்குக் கிடைத்து விட்டது.

... என்ன டாக்டர், விட்டுவிடலாம் என்கிறீர்களா? ரொம்ப நன்றி.”

டெலிபோனை வைத்தார் இன்ஸ்பெக்டர். ஒரு ஜவானை அழைத்தார்: "இவனுடன் ஓர் ஆந்திர வேலைக்காரன் இருப்பானே, அவனைக் கூப்பிடு. இந்த அரைப் பைத்தியத்தை வீட்டுக்கு இழுத்துப் போகட்டும்.”

வெறும் தரையில் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான் ரமணன். அந்தப் போஸ் மட்டுமல்ல, அவன் செய்து கொண்டிருந்த வேலையும் பாட்டிமார்களை நினைவூட்டியது. தன் சிலாக்கிலிருந்த பொத்தான்களைப் பிய்த்துவிட்டு, வேலை மெனக்கெட்டு இன்னொரு புறத்தில் அவற்றை வைத்துத் தைத்துக் கொண்டிருந்தான்!

அப்பாவுவுக்குத் தொண்டையிலே விம்மல். கண் முனையிலே கண்ணீர். தலைக்குள்ளே குழப்பம்.

“என்ன சார் இது வேலை? நாதெகிற இஸ்தான நேனு குட்டியீளு?”

“ஊஹும். மாட்டாய். இது ரொம்பத் தலைபோகிற வேலை" என்றான் ரமணன். விகாரமான சிரிப்பு ஒன்று அவன் முகத்தில் பரவியிருந்தது. தலை கலைந்தது. பாண்ட்டில் ஒரு கால் சுருட்டியும். ஒரு கால் நீட்டியும் இருந்தன. மேலே சட்டையோ பனியனோ கிடையாது. திறந்த மார்பு.

அப்பாவுவுக்கு அழுகையே வந்தது. “தலை போகிற வேலையா? நல்லா இருக்கிற பொத்தானைப் பிய்ச்சிட்டு மறுபடி தைக்கிறீங்க! பார்க்கிறவங்க உங்களைப் பிச்சிடு வாடுன்னி செப்புதிரு."

"அடேய் அப்பாவு! உலக மொத்தமும் பைத்தியம் தான். எல்லாம் தலைகீழாய்ப் போய்விட்டது!” ரமணன் கடகடவென்று சிரித்தான். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வந்தது முதற்கொண்டு இந்தச் சிரிப்பு அவனை விட்டுப் பிரியவில்லை... "இல்லாத போனால் அஸிஸிடென்ட் கமிஷனர் தணிகாசலத்துக்கு இப்படிப் பைத்தியம் பிடிக்குமா? நான் சொல்கிறேன் கேள், அப்பாவு! தணிகாசலத்தக்கு ஸ்பெஷல் நரகம்தான். தணிகாசலம், வணிகாசலம், கொணிகாசலம், மணிகாசலம் வவ்வவ்வவ்வே!” சிறு குழந்தை மாதிரி ரமணன் அழகு காட்டினான்.

“ஆமாங்க, ஆமாங்க” என்று அப்பாவு அவனை அவசரமாகச் சாந்தப்படுத்தினான்.

"அப்பாடா! ஒரு பெரிய வேலை முடிந்தது.” சிலாக்கைத் திருப்பி மடித்துப் பீரோவுக்குள் வைத்தான் ரமணன். “பார்த்தாயா அப்பாவு? இனிமேல் யாரும் சொல்ல மாட்டார்களே, ரமணனுக்குப் பொத்தான் தைக்கத் தெரியாதென்று? சரி, இன்றைக்கு எனக்குக் கல்யாணமாச்சே! ஆமாம், அஸிஸ்டென்ட் கமிஷனருக்கு இன்விடேஷன் அனுப்பினாயோ?”

அதற்குமேல் ரமணன் என்னவெல்லாம் உளறியிருப்பானொ? மாடியிலே யாரோ வருகிற ஓசை கேட்டது. ரமணன் தான் எழுந்து சென்று எட்டிப் பார்த்தான். அடுத்த வினாடி உற்சாகமாக ஒரு குதி குதித்தான். “அப்பாவு! இங்கே பார்! கல்யாணப் பெண் வந்தாச்சு! கல்யாணப் பெண் வந்தாச்சு! கெட்டி மேளம்! கெட்டி மேளம்! எங்கேடா தொலைந்தார்கள் இந்த நாதஸ்வரப் பேர்வழிகள்?”

மாடியிலே ஏறிவந்தவன், ரமணனின் இந்தக் கத்தலையும் பித்துக்குளித்தனத்தையும் கண்டு மிரண்டிருக்க வேண்டும். காலடியோசை பாதியிலே நின்றுவிட்டது. அப்பாவு ரமணனைக் கையைப் பிடித்துக் கட்டிலிடில் உட்கார வைத்தான். பிறகு மாடிப் படிக்குச் சென்று யாரென்று பார்த்தான். "அட! தாவூதில்ல?" என்றான் ஆச்சரியத்துடன். ரமணனின் சொந்தப் பட்டாளத்தில் தாவூது ஒருவன் என்று அவனுக்குத் தெரியும்.

கட்டிலில் கால்மீது கால் போட்டுப் படுத்திருந்த ரமணன், “தாவூதுவா? அதுவா என் பெண்டாட்டியின் பெயர்?” என்றான்.

தாவூது தயக்கத்துடன் மேலே ஏறி வந்தான். “சார் என்னவோ தமாஷ் பண்ணுகிறாரே என்ன?”

“அது தமாஷ் இல்லை, தாவூது” கண்ணைத் துடைத்துக் கொண்டான். அப்பாவு. அப்போதுதான் தாவூதின் தோற்றத்தையும் நன்கு கவனித்தான் போலும். காலோடு தலை ஒரு பழைய கறுப்புப் போர்வையைப் போர்த்துக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். அப்படியும்கூட முகத்திலும், கையிலும் ஒரோர் பகுதிகள் வெளித் தெரிந்தன. அவ்வாறு தெரிந்த இடங்கள், கண்ணைக் குடைந்தெடுக்கக் கூடியனவாக இருந்தன. ஆம். தாவூதின் சருமத்தில் கூழாங்கல் அளவுக்குக் கறுப்புக் கறுப்பாகத் தடிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. வினாடிக்குப் பத்து முறை அவன் சொறிந்து கொண்டிருந்தான்.

அப்பாவுவுக்கு மூச்சை அடைத்தது. "தாவூது, என்ன உனக்கு?"

“அதை அப்பாலே சொல்கிறேன், சாருக்கு என்ன? நீ ஏதோ சொல்ல வந்தியே, அதைச் சொல்லு” என்றான் தாவூது.

"அவருக்கு... அவருக்கு...”

அப்பாவு குரலைத் தாழ்த்திக் கொண்டான். “பைத்தியம் - மூளைக் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு பெரிய அதிர்ச்சியாலே நேற்று முதல் இப்படி ஆகிவிட்டது. ஏமி சேஸேதினே தெல்லே!"

வாயடைத்துப் போய் நின்றான் தாவூது. “நிசம்மாவா...? நிசம்மாவா அப்பாவு? நான் அவரை இப்பவே பார்க்கணும். வழியை விடு.”

அவனை மறித்தான் அப்பாவு, “வேண்டாம். இப்பத்தான் கொஞ்ச நேரமாய் அடங்கிக் கிடக்கிறார். ஓய்வாயிருக்கட்டும். தூங்கினால் சரியாகிறதா, பார்ப்போம். எனக்கு ஒண்ணுமே புரியலை... சரி, உனக்கு என்ன நேர்ந்தது? உடம்பிலே என்ன கோளாறு?”

வெறுப்புடன் சிரித்தான் சிறுவன் தாவூது. “ஈ தின்னிப் பசங்க இல்லே, சீனங்க, அவங்க கொடுத்த ப்ரசென்ட்.” திடீரென அவன் முகம் சிவந்தது. பற்களைக் கடித்தான். “அப்பாவு எனக்கு இப்பத்தான் புரியுது இது அந்தப் பாவிங்க செய்த வேலையாத்தான் இருக்கும். ஏதோ மந்திரவேலை பண்ணியிருப்பாங்க நம்ம சாருக்கு. அப்பாவு எனக்கு இந்த மாதிரி ஒரு கொடுமை பண்ணினதைக்கூட நான் பெரிசாய் நினைக்கலை. ஆனால், சாருக்குக் கெடுதல் செய்திருக்கிறாங்களே, அதை நான் மன்னிக்கவும் போகிறதில்லை, சும்மா விடவும் போறதில்லை. நீ கதவைத் தாள் போட்டுக் கீழே வா. பேசலாம். நமக்காச்சு அவங்களுக்காச்சு. இரண்டிலே ஒண்ணு பார்த்திடுவோம்.”

அப்பாவு மெல்லத் திரும்பிச் சென்று ரமணனின் அறைக்குள் எட்டிப் பார்த்தான். ரமணன் கண்ணை மூடிய படி அசையாது படுத்திருப்பது தெரிந்தது. அடிமேலடி வைத்து வெளியே வந்தான். கதவை வெளிப்புறம் பூட்டி, சாவியை வேட்டியில் முடிந்து கொண்டான்.

தெருக் கோடியை அடைவதற்குள் தாவூது தன் கதையைச் சொல்லி முடித்தான். அப்பாவு ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டான்.

“நீ சாரோட வேலைக்காரனாச்சே, அவரோடு தைரியத்திலே நூத்திலே ஒரு பங்கு உனக்கு இருக்குமா?” என்றான் தாவூது.

“என்ன அப்படிச் சொல்லிட்டே, பையா?” மீசையை முறுக்கினான் அப்பாவு "சிம்மானிக்கு புட்டிந்தி பில்லி அவுனா? என்ன செய்யணும் உனக்கு அதைச் சொல்லு. செய்து காட்டறேனா, இல்லையா பார்.”

“சாரோட முழு மூளையை நம்மளோட இரண்டு அரைமூளை ஈடுபண்ணுதா பார்ப்போம்.”

தாவூது முன்னே நடக்க, பின்னே தொடர்ந்தான் அப்பாவு. “நான்கிங் ஓட்டலுக்குத்தானே போகிறோம்?”

"ஆமாம். நான் ஒரு திட்டம் வைச்சிருக்கிறேன். பழிக்குப் பழியும் தீர்த்துக்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் என் நோயையும் குணப்படுத்திக்கலாம். அப்பாவு, இன்னொரு வாட்டியும் கேட்டிடறேன். உனக்குத் துணிச்சல் இருக்குதா?”

“அட சரிதான் கண்ணு. சீக்கிரங்கா நடுவு” என்றான் அப்பாவு.

கிழவன் லின் டாங்கின் அறை, இருட்டில் முழுகியிருந்தது. அயர்ந்த தூக்கத்தில் கிடந்தான். சாதாரணமாக, பல சீன நாட்டுத் துர்த் தேவதைகள் அவன் கனவில் நடமாடுவதுண்டு. இன்று அவைகளின் அட்டகாசம் தாங்கவொண்ணாததாக இருந்தது. அதிலும், தலையிலே மூன்று கொம்பும், முதுகிலே நீண்ட வாலும் கொண்ட ஒரு தேவதை அவனைத் துரத்திக் கொண்டேயிருந்தது. அதன் கையிலே ஒரு நீண்ட ஈட்டி. அம்மாடி! அதன் கூரிய முனையில் தான் எவ்வளவு பளபளப்பு! ஐயோ! அந்த முனையை அவனை நோக்கியல்லவா நீட்டுகிறது! இதோ குத்துகிறது! குத்துகிறது!

“விடு விடு என்னை!” திமிறிக் கொண்டே எழுந்தான் லின் டாங். கனவல்ல. அவன் புஜத்தை யாரோ நிஜமாகவே அழுத்திக் கொண்டிருக்கிறார்கள்! மெய்யாகவே சுரீரென்று குத்துகிறார்கள்!

கடைசி முயற்சியாக ஒரு திமிறலுடன் விடுபட்டான் லின் டாங்.

"முடிச்சாச்சு வேலை!" என்ற ஒரு குரலும் கேட்டது அருகில்.

“யாரது!” ஸ்விட்சைப் போட்டான் சீனக் கிழவன். பளீரென்ற விளக்கின் ஒளி அறையெங்கும் பரவியது. “யார்! நீயா?” தாவிப் பிடித்தான் தாவூதை. “என்னடா கையிலே!"

தாவூது அவனுடைய அரக்கப்பிடியிலே நெளிந்தபடி, உள்ளங்கையை விரித்துக் காட்டினான். ஊசி போடும் ஸிரிஞ்சுக் குழல் இருந்தது. “நீ எனக்கப் போட்டியே, அதே ஊசி மருந்து! இங்கே தான் அஞ்சு நிமிஷம் முந்தி திருடினேன். என் உடம்பைப் பார்த்தியா? நல்லாப் பார்த்துக்க. இன்னும் கொஞ்ச நாளிலே நீயும் இப்படி ஆகிவிடுவாய்!"

லின் டாங்கின் குடைக் கம்பி உடம்பு நடுங்கி ஆடியது. ஆனால் உடனேயே ஒரு தெம்பு. “டேய், பொடிப் பயலே! என்கிட்டேயா வேலை காட்டறே? என்னைக் காப்பாற்றிக்க எனக்குத் தெரியும்!”

தாவூது நகைத்தான்: "மாற்றுமருந்து வைத்திருக்கிறதாக அன்னைக்குப் பீற்றிக்கிட்டியே, அதை வைச்சு சொல்றியா? பெரியவரே, அந்த மருந்து பணால்! அதையெல்லாம் உடைத்து எறிஞ்சிட்டுத்தான் இங்கே வந்தேன்!”

“என்ன! உண்மையாகவா?”

தனது மருந்து அறையை நோக்கி ஓடினான் லின் டாங்.

இன்னோர் மறைவிலிருந்த அப்பாவு, கண்ணைக் கொட்டவில்லை. கிழவன் ஓடுவதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

*****

17

தையும் ரேணுகா விட்டுவிடவில்லை. ரமணன் என்று நம்பிக்கொண்டு நஞ்சுண்டன் வீட்டுக்கு அழைத்து வந்ததில் தொடங்கினாள்; உண்மையில் அவன் இன்னானென அறிந்து கொண்டதை விவரித்தாள்; டாக்டர் பாலசந்தர் எதிராக, அபாயமான ஆதாரம் என்ன வைத்திருக்கிறானோ என்றஞ்சி, அவனுக்குத் தான் கட்டுப்பட்டுக் கிடப்பதைக் கூறி முடித்தாள்.

விடிவிளக்கின் நீல ஒளியையே பார்த்தவண்ணம் இருந்தார் குழந்தைப்பாண்டியன். எங்கேயோ ஒரு பல்லி சூள் கொட்டியது அவருக்கு அனுதாபம் தெரிவிப்பது போல்.

“அப்பா, என்மீது கோபப்படாதீர்கள், அப்பா. என்னைப் பெற்ற அம்மா இருந்தால், என் மனசில் இருப்பதையெல்லாம் சொல்லியிருப்பேன். டாக்டர் பாலசந்தர்மீது நான் கொண்டுள்ள காதலை உங்களிடம் எப்படி வெளியிட முடியும்? அப்பா, பாலசந்தர் இல்லாமல் நான் வாழ முடியாது. அவர்மீது கொண்டுள்ள தீவிரமான காதல்தான் என் அறிவை மறைத்துவிட்டது. இந்தச் சதிகாரன் செய்த சூழ்ச்சிக்கெல்லாம் என்னை உடந்தையாக்கிவிட்டது. சொந்த தகப்பனாரான உங்களையே ஏமாற்றிவிட்டேன்... என்னை மன்னியுங்கள், அப்பா...”

கசப்புடன் புன்சிரிப்புக் காட்டினார் குழந்தைப் பாண்டியன். “அந்த நஞ்சுண்டன் ரொம்பக் கெட்டிக்காரன், ரேணுகா. காதலின் பெயரைச் சொல்லி உன்னைக் கட்டுப் படுத்தினான். பாசத்தின் பெயரைச் சொல்லி என்னைக் கட்டுப்படுத்திவிட்டான்... எங்கே உன்னையும் இழந்து விடுவேனோ என்ற பயத்தினால், அவன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினேன் நான்! ரேணுகா, நீயாவது வயதில் சிறியவள். என் அறிவு எங்கே போயிற்று...”

“மெல்ல அப்பா, மெல்ல” என்று எச்சரித்தாள் ரேணுகா. “நாம் ஏதாவது முரட்டுத்தனமாகச் செய்து, மேலும் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது...”

“நீ சும்மா இரு." என்று மகளை அடக்கினார் தந்தை. “நம்மீது ஒரு குற்றமும் இல்லை இந்த நிமிடமே போலீசை வரவழைத்து... அவனை...”

அவர் கூறி முடிக்கவில்லை. “வணக்கம்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் நஞ்சுண்டன்.

"கெட் அவுட்!” சக்தி முழுவதையும் திரட்டிக் கூவினார் குந்தைப் பாண்டியன். “அயோக்கிய ராஸ்கல்! என்னையும் என் மகளையும் ஏமாற்றவா. பார்த்தாய்? உன்னை... உன்னை...”

“இதோ கழுத்து. முறித்துக் கொல்லுங்களேன்!” கிண்டலாக. அவர் பக்கம் குனிந்தான் நஞ்சுண்டன். “உங்களால் முடியாவிட்டால். உங்கள் மகளைச் செய்யச் சொல்லுங்கள் இரண்டு பேருக்கும் அதில் நிறையப் பழக்கம் உண்டே!”

“மூன்று நிமிடம் அவகாசம் தருகிறேன். மரியாதையாக அதற்குள் வெளியேறிவிடு!” வெறுப்பை உமிழ்ந்து கொண்டு பேசினாள் ரேணுகா.

“முப்பது வருடம் அவகாசம் கொடுப்பதானாலும் சரி, இந்தப் பங்களாவைவிட்டு வெளியேறும் உத்தேசம் எனக்கில்லை.”

"என்ன திமிர்!”

“திமிரல்ல. கருணை.”

“கருணையா? அடடா! யார் மீது?”

“உங்கள் இரண்டு பேர் மீது தான்.” சிகரெட்டொன்றைப் பற்றவைத்துக் கொண்டான் நஞ்சுண்டன். நர்ஸ் வழக்கமாக அமரும் முக்காலியை அருகில் இழுத்துக் கொண்டான். குழந்தைப்பாண்டியனின் உட் பக்கத்தில் அமைதியுடன் உட்கார்ந்தான். "உலக, முழுவதும் தேடினாலும், உங்களைப்போல் அப்பாவியான தந்தையையும் அசடான மகளையும் பார்க்க முடியாது. சாயந்தரம் ஆறு மணி வேளையில் மவுண்ட்ரோடின் நட்ட நடுவே படுத்திருக்கிற ஆட்டுக் குட்டி, 'போங்கள் வேறு பக்கம்!' என்று பஸ்களிடமும் கார்களிடமும் சொல்வது போல் இருக்கிறது நீங்கள் என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்வது!”

“அழகாகப் பேசி எங்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது நஞ்சுண்டன்!” உறுமினார் குழந்தைப் பாண்டியன். "போனால் போகிறதென்று உன்னைச் சும்மா விடுகிறேன். இதற்கு மேலும் வாதாடினால் போலீசைத் தான் கூப்பிட வேண்டியிருக்கும்.”

“ஓ! தாராளமாய்ச் செய்யலாமே!” புகை வளையங்களை உத்தரத்தை நோக்கிச் செலுத்தினான் நஞ்சுண்டன். குரூரப் புன்னகையொன்று அவன் உதட்டில் முளைத்தது. "ஒரு வேளை ரேணுகாவைத் தூக்குக்கு அனுப்ப வேண்டியிருக்குமே என்று போலீசைக் கூப்பிடத் தயங்குகிறீர்களோ!”

“டேய்! நிறுத்தடா உன் அளப்பை! பழைய கதையெல்லாம் இனி பலிக்காது. என் ரேணுகா பத்தரைமாற்றுத் தங்கம்...”

“த்ஸு, த்ஸு ஆனால் பத்தரை மாற்றுத் தங்கங்கள், இப்படியெல்லாம் கடிதம் எழுதலாமா?”

“எப்படியெல்லாம்?”

குழந்தைப்பாண்டியனும், ரேணுகாவும் நஞ்சுண்டனைத் திகிலுடன் நோக்கினார்கள். அவன் தன் பாண்ட் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தான். “படிக்கிறேன் கேட்கிறீர்களா?”

“என்ன அது?” என்று ரேணுகா கத்தினாள்.

“சற்று முன் நீலா வந்தபோது அவள் கொண்டு வந்தது. அவள் இடுப்பிடில் இருப்பதை புதைப்பதற்கு முன் எடுத்து வைத்துக்கொண்டேன். நீ உன் அன்பார்ந்த தோழிக்கு எழுதிய கடிதம்...”

“பொய்! பொய்! நீலாவுக்கு நான் ஒரு நாளும் ஒரு வரிகூட எழுதியது கிடையாது!"

அவளை லட்சியம் செய்யாமல் படித்துக் காட்டினான் நஞ்சுண்டன்: “அன்புள்ள நீலாவுக்கு, பள்ளிக் கூடத்துக்கு நான் ஏன் ஒழுங்காக வருவதில்லை என்று கேட்டிருக்கிறாய் உன் கடிதத்தில். கொஞ்ச நாளாய் எனக்கு மனமே சரியில்லை. என் உடன்பிறந்த அக்காவே எனக்குத் இப்படித் துரோகம் செய்வாள் என்று நான் நினைக்கவில்லை. என் காதலர் டாக்டர் பாலசந்தரை மயக்கி, என்னிடமிருந்து அவரைப் பிரித்து...”

“சீ! சீ!” பாய்ந்து பறிக்க முயன்றாள் அந்தக் காகிதத்தை ரேணுகா. சரேலென நகர்ந்து கொண்டான் நஞ்சுண்டன். “குழந்தைப்பாண்டியன்! இது உங்கள் குமாரியின் கையெழுத்தா இல்லையா, பாருங்கள்!” என்று அவர் கண் முன்னே நீட்டினான்.

தந்தையும், மகளும் கண் கொட்டாது அதை நோக்கினார்கள். அசலாய் அச்சாய், ரேணுகாவின் கையெழுத்திலேயே இருந்தது. கையொப்பம் கூட அப்படியே.

"போர்ஜரி! மோசடி!” ஆவேசமாய் ஒலித்தது ரேணுகாவின் குரல். "நான் இதை எழுதவேயில்லை!”

“நான் நம்புகிறேன், குமாரி ரேணுகா. ஆனால் போலீசில் நம்ப வேண்டுமே? இங்கே நீலா கொண்டு வந்தது ஒரே ஒரு கடிதம். அதற்கு நீ எவ்வளவு பணம் தருவதாகச் சொல்லியிருந்தாயோ நீலாவின் வீட்டில் சோதனை போடும்போது இதுபோல் இன்னும் எத்தனை கடிதங்கள் கிடைக்குமோ! அந்தக் கடிதங்களில் நீ என்னென்ன எழுதியிருக்கிறாயோ! நீ தான் ஒன்றாம் நெம்பர் அசட்டுப் பெண்ணாயிற்றே!”

கற்சிலையாகிவிட்டார்கள் குழந்தைப்பாண்டியனும் மகளும். நஞ்சுண்டன் பேசுவது, மிரட்டுவது, காட்டுவது எல்லாம் மோசடி, ஏமாற்று என்று அவர்களுக்குத் தெரிந்தது. அதே சமயம், அவன் விரித்த வலையில் தாங்கள் பலமாகச் சிக்கியிருக்கிறோம் என்ற பயமும் உதித்து விட்டது, அவர்கள் உள்ளத்தில்.

அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான் நஞ்சுண்டன்; தொடர்ந்தான்: "இந்தக் கடிதத்தில் காதல் பொறாமையைப் பற்றிச் சொல்லியிருக்கிறாய். நீலாவின் வீட்டில் இருக்கக்கூடிய வேறு கடிதங்களில் மற்றக் காரணங்களையும் எழுதியிருக்கக் கூடுமல்லவா? உதாரணமாக, கேவலம் ஒரு தொண்டை ஆபரேஷனைக் கூடச் சரியாய்ப் பண்ணத் தெரியவில்லை என்று ஊர் பூரா சுகுமாரி தமுக்கடிக்கத்ததால்தான் டாக்டர் பாலசந்தருக்குக் கிடைத்திருக்க வேண்டிய அமெரிக்கப் பயணம் கிடைக்காமல் போயிற்று என்று எழுதியிருக்கிறாயோ என்னவோ! டாக்டர் பாலசந்தர் மனம் உடைந்து போனதால், அக்காவைக் கொலை செய்தால்கூடத் தேவலை என்று எழுதியிருப்பதாக வைத்துக் கொள்வோம். போலீசார் கையில் அது கிடைத்தால் என்ன ஆகும்? டாக்டர் பாலசந்தருக்கு உன் கொலை ரகசியம். தெரிந்ததால்தான், தன்மீதே பழியைப் போட்டுக்கொண்டு உன்னைக் காப்பாற்றப் பார்க்கிறார் என்று முடிவு செய்யமாட்டார்களா...?”

“அயோக்கியா! மோசக்காரா!” வார்த்தை கிடைக்காமல் திண்டாடினார் குழந்தைப்பாண்டியன். "என் பெண்ணை இப்படியெல்லாம் சிக்க வைக்க வேண்டும் மென்பதற்காகவே நீ திட்டமிட்டுச் சதி பண்ணியிருக்கிறாய்! நிறையக் கடிதங்களைப் போர்ஜரி செய்து வைத்திருக்கிறாய்... அதற்கு... அதற்கு...”

"அதற்கு நீங்கள் முத்தாய்ப்பு வைத்துவிட்டீருகள் கொஞ்சம் முன்பு நீலாவைக் கொலை செய்ததன் மூலம்! முதலாவதாக, நீலா எதற்காக இங்கே வரவேண்டும்?”

“ஏனா? உன்னைத் தேடித்தான்!" வெகு நேரத்துக்குப் பின்னர் ரேணுகாவுக்கு உணர்வு வந்தது போலும். “தெரியாதென்று நினைக்காதே! நீலாவின் கணவன் நீ. அவளை ஏமாற்றிக் கைவிட்டுவிட்டவன்!"

"ஓ! அதற்கு நியாயம் கேட்டகத்தான் நள்ளிரவில் இங்கே வந்தாளா?” எக்காளத்துடன் சிரித்தான் நஞ்சுண்டன். “ரேணுகா! என்னைக் கணவனென்று உரிமை கொண்டாட ஒருவித சாட்சியமும் இல்லாமல்தான் உன் தோழி கடைசிவரை தவித்தாளே! அவ்வளவு ‘வீக்பாயிண்ட்'டையா நீ போலீசுக்கு எடுத்துச் சொல்லப் போகிறாய்?”

குறுக்கிட்டார் குழந்தைப் பாண்டியன்: "இப்போதே நாகர்கோவிலுக்குத் தந்தி கொடுத்து அஸிஸ்டெண்ட் கமிஷனர் தணிகாசலத்தை வரவழைக்கிறேன்!”

“ஐயோ பாவம்! அவர் வந்து என்ன செய்யப் போகிறார்! 'கண் சரியாய்த் தெரியாததால் இவனை ரமணன் என்று நினைத்துவிட்டேன்,' என்று சொல்வாரா? அப்படிச் சொன்னால் அவரைக் காட்டிலும் அசடு வழிகிற மடப் போலீஸ் அதிகாரி இருக்க முடியாது. அல்லது நீங்கள் நீலாவை ரகசியமாகச் சுட்டுக் கொலை செய்தது சரிதான் என்று பாராட்டுவாரோ...”

நஞ்சுண்டன் மேலும் பேசுமுன் வெளி வெராந்தாவில் ஏதோ சந்தடிகேட்டது. லேசான காலடியோசை. "சார்... சார்...” என்று யாரோ மெல்லக் கூப்பிட்டார்கள்.

ரேணுகாவும் குழந்தைப்பாண்டியனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் மிரட்சியுடன். இருவர் பார்வையும் சுவரிலிருந்து கடியாரத்தை நோக்கிச் சென்றது. மணி இரண்டறை. விடிகாலைக்குச் சிறிது நேரமே இருக்கும் நிசி வேளை. ஊர் மொத்தமும் ஒடுங்கிக் கிடக்கிறது. இப்போது வந்து யார் கூப்பிடுவது?

நஞ்சுண்டன் வெளியே சென்று, "யார்?” என்று கேட்டான். ரேணுகா பின்னாலேயே வந்து ஸ்விட்சைத் தட்டினாள். “இப்படி அழைத்து, வா,” என்று கட்டிலிருந்தே குரல் கொடுத்தார் குழந்தைப்பாண்டியன்.

இளைஞனொருவன் உள்ளே வந்தான். ஹிட்லர் மீசை. டைப்ரைட்டடர் கீ போர்டு போலப் படிப்படியாய் உயர்ந்த கிராப்பு. சற்றுப் பயந்தவன் மாதிரி சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு, “நீலாம்மா வந்தாங்களே எங்கே?” என்று கேட்டான்.

தந்தைக்கும் மகளுக்கும் தூக்கிவாரிப் போட்டது. யாரிந்தப் புதியவன்? நீலாவை எப்படி...

தயக்கமற்ற குரலில் பேசியவன் நஞ்சுண்டன்தான். “யாரப்பா நீ? நீலாம்மாவா? யாரவர்கள்? இங்கே ஏன் வரவேண்டும்?”

வந்தவன் குழம்பிப் போனான்: “நான்... நான் கோடம்பாக்கத்தில் நீலாம்மாவோட... வீட்டுக்குப் பக்கத்திலே குடியிருக்கிறவன்... எதுவானாலும் நான் தான் அவங்களுக்கு உதவி செய்வேன். ஒரு முக்கியமான வேலை இருக்குது துணைக்கு வா. எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தாலம் நேரும்னு சொல்லி என்னை அழைச்சுக்கிட்டு வந்தாங்க, இங்கே ஆனால் தெருக்கோடியிலே என்னை நிறுத்திவிட்டு பங்களாவுக்குள்ளே போயிட்டு வந்திடறேன்னு சொல்லிட்டுப் வந்தாங்க. இந்த வீட்டுக்குள்ளேதான் நுழைஞ்சாங்க. கண்ணாலே பார்த்தேன் ரொம்ப நேரமாக் காத்திட்டிருக்கிறேன். அவங்க வரவே காணோமேன்னு...”

தந்தையும் மகளும் தவித்து நிற்க, நஞ்சுண்டன்தான் தனக்கே உரிய சுறுசுறுப்புடன் எழுந்தான். “தம்பி நீ ஏதோ தப்பான வீட்டிலே நுழைந்து விசாரிக்கிறாய். வா" என்று அவன் தோளில் கை வைத்து அழுத்தி, வாசல்புறத்தை நோக்கி அவனைத் தள்ளினாற் போல் இழுத்துச் சென்றான். வெராந்தாவை அடைந்ததும் பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். “கரெக்டாய் உள்ளே புகுந்து, கரெக்டாய் நடித்து விட்டாய்!” என்று காதோடு பாராட்டினான். பிறகு

“காலையில் வாப்பா, விசாரிக்கலாம்” என்று உரக்கக் கூறி அவனை அனுப்பிவிட்டு உள்ளே திரும்பினான்.

தந்தையும் மகளும் பதுமைபோல் அமர்ந்திருந்தார்கள். பீதி கூத்தாடியது அவர்கள் பார்வையில். அதை அதிகரிக்கிறாற் போல் பெருமூச்சு விட்டான் நஞ்சுண்டன்.

"ஹும்! நம் மூவருக்கு மட்டுமே தெரியுமென நினைத்திருந்த ரகசியம் நாலாவது ஆளுக்கும் எட்டி விட்டது. இனி அவன் வாயை மூடவும் நான்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்!"

"வேண்டியதில்லை!” என்று சீறினார் குழந்தைப் பாண்டியன். “நாங்கள் போலீசில் உண்மையெல்லாம் சொல்லிவிடுகிறோம்!”

"ஹாஹ்ஹா!" நஞ்சுண்டன் பெரிதாய் நகைத்தான். “குழந்தைப்பாண்டியன் சார், உங்களைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா, பரிதாபப்படுவதா, கோபப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நெருடிக்கடியில், இப்படிப் பட்ட நிலைமையில் உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் இருக்கிற ஒரே நண்பன் நான்தான் என்னையும் உதறுகிறேன் என்கிறீர்களே!”

“அடடா! என்ன நண்பன் என்ன நண்பன்!” குத்தலாக மொழிந்தாள் ரேணுகா...

“என்னதான் அஸிஸ்டென்ட் கமிஷனர் உங்கள் நண்பராக இருந்தாலும், உண்மை உண்மைதானே? அதை எப்படித் திரிக்க முடியும்?” என்று நஞ்சுண்டன் தொடர்ந்தான். "ரேணுகா அவள் அக்காவைக் கொலை செய்வதற்கு 'மோடிவ்' இருக்கிறது. அந்தக் கொலையைப் பற்றி நீலா தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆகவே அவளையும் ரேணுகாவோ நீங்களோ கொலை செய்ய மோடிவ் ஏற்பட்டுவிட்டது. கொலை செய்துமாயிற்று என்பதற்கு, இதே வீட்டுத் தோட்டத்திலேயே அத்தாட்சியும் இருக்கிறது...”

அவன் சொல்லச் சொல்லக் குழந்தைப்பாண்டியனின் முகம் வெளுக்கலாயிற்று. ரேணுகாவும் தன் நடுங்கும் விரல்களால் தந்தையின் கரத்தைத் தொட்டாள். இருட்டிலேயே இரண்டு குழந்தைகள் ஒன்றையொன்று பிடித்துக்கொண்டு தைரியம் பெற முயலுவது போலிருந்தது அந்தக் காட்சி. வெறுமே உண்மையை ஒப்புக் கொண்டு விட்ட மாத்திரத்தில் தாங்கள் விடுபட்டு விடமாட்டோம் என்பது இருவருக்கும் புரிந்தது.

நஞ்சுண்டன் அதைக் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் கவனித்தாகக் காட்டிக் கொள்ளவுமில்லை. தன் குரலின் தோரணையை மட்டும் மாற்றிக் கொண்டான். அதிலே பரிவு வழிந்தோடியது.

"குழந்தைபாண்டியன், நான் ஏமாற்றியதும் மோசடி செய்ததும் இருக்கட்டும். உங்கள் மீது ஒரு குற்றமுமில்லை. எல்லாப் பழியும் இந்தப் பாவி நஞ்சுண்டனின் தலையில் தான் என்று நிரூபித்து விடுவதாகவே வைத்துக் கொள்ளவோம். சரி, என்ன ஆயிற்று? கோர்ட்டில் விடுதலை பெறுகிறவர்களெல்லாம் நாட்டில் உயர்ந்து விடுகிறார்களா என்ன? யோசித்துப் பாருங்கள். சிறையில் வாழ்ந்துவிட்டு வெளிவந்த நபரைக்கூடச் சமூகம் ஏற்றுக் கொள்ளும். ஆனால், நிரபராதி என்ற பட்டத்தோடு விடுதலையாகி வருகிறவனைச் சந்தேகக் கண்ணுடன் தான் பார்க்கும். இறங்கிய மதிப்பு இறங்கியதுதான். ஒருநாளும் திரும்ப ஏறாது.”

“அதனாலே...?” என்று குறுக்கிட்டார் குழந்தைப் பாண்டியன். ஏதோ இன்னுமொரு விபரீதம் வரப்போகிறது என்று அவர் உள்ளுணர்வு கூறியது. நெஞ்சு படபடத்தது.

“ஏற்கெனவே குழந்தைப்பாண்டியனின் குடும்ப கெளரவம் குலைந்து சிதறியிருக்கிறது. சுகுமாரியின் கொலையைப் பற்றி நூறு நாக்குகள் ஆயிரம் விதமாக வம்பளக்கின்றன. அதைத் தொடர்ந்து இன்னொரு கொலை! அதுவும் குழந்தைப்பாண்டியனின் வீட்டுக்குள்! பிரேதம் எங்கே என்றால் அவர் வீட்டுத் தோட்டத்துக்குள்! குழந்தைப்பாண்டியனுக்கும் ரேணுகாவுக்கும் இதிலேயெல்லாம் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று கனம் கோர்ட்டார் தீர்ப்பளிக்கலாம், சார். ஆனால் உங்கள் பண பலத்தைக் கொண்டு தப்பினீர்கள் என்று தான் ஊர்வாய் பேசும். வயதும் பருவமுமாகக் கல்யாணத்துக்குத் தயாராகி நிற்கிறாளே இதோ ரேணுகா, இவளுடைய எதிர்காலம் குட்டிச் சுவரிலும் படு குட்டிச் சுவர்தான். அப்புறம்! பாயிண்ட் ஆவ் நோ ரிடர்ன் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா, குழந்தைப்பாண்டியன்?”

குழந்தைப்பாண்டியன் தீனமாகத் தலையசைத்தார்.

"போர் விமானத்தை எதிரியின் எல்லைக்கு ஓட்டிச் செல்கிறானே, அந்த விமானிக்குத் தெரிந்த வார்த்தை அது. எதிரியின் எல்லையைத் தாண்ட வேண்டியதுதானா, குண்டு வீச வேண்டியதுதானா என்று எதிரியின் எல்லையை அடைகிற வரையில்தான் அவன் யோசித்துக் கொண்டே விமானத்தை ஓட்ட முடியும். அதற்குள் திரும்பிவிட்டால் தான் உண்டு. எல்லையைத் தாண்டிவிட்டால், 'பாயிண்ட் ஆஃப் நோரிடர்ன்.' அதற்கப்புறம் நேரே குண்டு வீசப் போக வேண்டியதுதானே தவிர, கையை வீசிக்கொண்டு திரும்ப முடியாது...”

“அது மாதிரி?” என்றார் குழந்தைப்பாண்டியன்.

நஞ்சுண்டன் உடனே பதில் தரவில்லை. எழுந்து கொண்டான். ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு வெளியே நோக்கினான். விடியும் காலைப் பொழுது மங்கிய வெளிச்சத்தை உதிர்த்துக் கொண்டிருந்தது.

ஒருவழியாய் அவன் திரும்பினான். “அந்த மாதிரி, நீங்களும் ஓர் எல்லையைத் தாண்டிவிட்டீர்கள். இனிமேல் திரும்பலாமா என்று யோசிப்பதில் அர்த்தமில்லை. மேற்கொண்டும் துணிய வேண்டியதுதான். உங்களையும் ரேணுகாவையும் இந்தக் குடும்ப கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்வதுதான் அடுத்த வேலை. அந்த விஷயத்தில் உங்களுக்குக் கை கொடுக்கக்கூடியவன்."

இருவரும் அவனை நிமிர்ந்து பார்த்தார்கள்.

“இந்த நஞ்சுண்டன்தான்” என்று தன் மார்பின் மீது கை வைத்துக் கொண்டு கூறினான் அவன். “இந்த நஞ்சுண்டனை, நிரந்தரமாக உங்களுக்கு வேண்டியவனாக்கிக் கொள்ள ஒரே வழி - “

மீண்டும் சற்றும் நிறுத்திவிட்டு முடித்தான்.

“உங்கள் மாப்பிள்ளையாக ஆக்கிக் கொள்வது தான்.”

*****

18

தாவூதின் சிரிப்பு அலை அலையாக நான்கிங் ஓட்டலின் நாலு திக்குகளிலும் பரவிக் கொண்டிருந்தது. சிதறிய சலங்கை மணிகளைப்போல, கிழவன் லின் டாங்கின் ஓட்டத்தின்போது அந்தச் சிரிப்பு எதிர்ப்பட்டுக் கொண்டேயிருந்தது.

போகிற வழியெல்லாம் விளக்குகளைப் போட்டுக் கொண்டே ஓடினான் அவன். பீதி அவனை ஆட்டுவித்தது. சற்று முன் தாவூது ஊசி போட்ட இடம் சுருக் சுருக்கென வலித்தது. அந்த வலியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு வலுவான அச்சத்தில் அவன் செத்துக் கொண்டிருந்தான். அருவருப்பான, பயங்கரமான அந்த நோய் அவனையே பிடித்துவிடுமோ? அதை அகற்றும் மாற்று மருந்து கிடைக்காதா?

சந்தடி கேட்டு ஸூவானும் விழித்துக் கொண்டாள். அவன் பின்னாலேயே ஓடிவந்தாள். ஆனால் அவளுக்கும் முன்னால் லின் டாங் தன் அறையை அடைந்துவிட்டான். வெறி பிடித்தவனாக அலமாரியைத் திறந்தான். மாற்றுப் போட வேண்டிய ஊசி மருந்துக் குப்பியை அவன் விழிகள் பரபரப்புடன் தேடின.

“இதோ!” பாய்ந்தெடுத்தான். அந்தச் சிறிய குப்பியை. "இதோ இருக்கிறது! உடைத்து அழித்து விட்டதாகச் சொன்னானே முட்டாள்! இதே பத்திரமாக இருக்கிறது!”

"இருக்கிறதா! ரொம்ப "வந்தனம்!” குபீரென எங்கிருந்தோ வந்தது அப்பாவுவின் கட்டைக் குரல். தொடர்ந்து அப்பாவுவே பாய்ந்து வெளிப்பட்டான் இருட்டின் கர்ப்பத்திலிருந்து. அடுத்த வினாடி, கிழவனின் கையிலிருந்து குப்பி வெடுக்கெனப் பறிக்கப்பட்டது.

“இந்த மருந்தை நீ எங்கே வைச்சிருக்கிறாயோன்னு தெரியாமல் தான் இத்தனை நாடகமும் ஆடினோம்! நீயே உன் கையாலே எடுத்துக் கொடுத்துவிட்டாய்!” திரும்ப இருளில் மறைந்துவிட்டான் அப்பாவு. ஆனால் அவன் குரல் மட்டும் கேட்டது. “பயப்படாதே கிழவா! உனக்கு நாங்கள் ஒரு ஊசியும் போடலை. தாவூது குத்தியது வெறும் தையல் ஊசிதான்!”

அப்பாவுவுக்கு ஜோடி சேர்ந்த மாதிரி சிறுவன் தாவூதின் சிரிப்பும் கலந்தொலித்தது.

துரத்திக்கொண்டு வாசலுக்குப் பாய்ந்தான் கிழவன். பெண்ணின் கரமொன்று குறுக்கே மறித்தது. ஸூவான் தான்.

“தொலையட்டும் அந்தச் சின்ன மீன்கள்! விட்டு விடு. பெரிய மீன்களைக் கவனிப்போம் இனிமேல்” என்றாள் அவள்.

“நான் போவது அவர்களைத் துரத்திக்கொண்டு அல்ல!” கிழவன் கட்டிடத்தின் மறுபக்கத்தை நோக்கி ஓடினாள். “எனக்கு வேறொரு பயங்கர சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.” தங்களுடைய சொந்த உடைமைகளை வைத்துள்ள அறையை நோக்கித்தான் லின்டாங் ஓடினான். பரபரவென்று அறையைத் திறந்தான். தளமெங்கும் மொசைக் செய்யப்பட்டிருந்தது. நட்ட நடுவே ஒரு வெளிர் நீல மொசைக் கல். அதை லின் டாங் நகர்த்தினான். அடியிலே ஒரு பூட்டு அதைத் திறந்தான். ஒரு மூடியைத் தூக்கினான். அந்த நிலவறையில் என்னென்னவோ இருந்தன. நகைகள், தங்கக் கட்டிகள், வெள்ளிப் பதுமைகள். ஆனால்

“பார்த்தாயா? காணோம்! வைர முருகனைக் காணோம்!” கூவினான் கிழவன் அதிர்ச்சியுடன்.

பின்னாலேயே கை கட்டிக் கொண்டு வந்து நின்றாள் ஸூவான். ஆனால் அவளிடம் பதற்றம் காணப்படவில்லை. நிதானத்துடன் கூறினாள்: “போலி முருகன் என்று சொல்லு.”

"போலியோ அசலோ, நம்மிடமிருந்து வைர முருகன் எங்கே போயிற்று?”

“நஞ்சுண்டனிடம்.”

“நஞ்சுண்டனிடமா? எப்படி? எப்போது? ஸூவான்! நீ... நீ...”

"ஆமாம். நான் தான். கொடுத்திருக்கிறேன். அசல் வைர முருகன் அவன் களவாடித் தர வேண்டுமல்லவா ஒரு போலி இருந்தால்தானே அதைச் சுலபமாகச் செய்யலாம்? கேட்டான், கொடுத்தேன். இன்னேரம் அசலைத் திருடி முடித்திருப்பான். நம் கைக்கு வரவேண்டியதுதான் பாக்கி.”

படக் படக்கென்று நிலவறையின் கதவுகளைச் சாத்தினான் கிழவன். அவன் செய்கையில் வெறுப்பும் கசப்பும் பிரதிபலித்தன. "ஹூம்! வயதுக் கோளாறு. நீ என்ன செய்வாய்?”

ஸூவானின் கண்கள் சிவந்தன. “என்ன உளறுகிறாய்?”

"உண்மையைச் சொன்னேன். அந்த நஞ்சுண்டன் ஒரு அயோக்கியன். அசலோ போலியோ எதுவும் அவனிடம் தந்திருக்கக் கூடாது. நம் நெற்றியிலே பட்டையாய்ப் போட்டானானால் என்ன செய்வாய்? மேலிடத்தில் கேட்கும்போது என்ன பதில் கொடுப்பாய்? இவ்வளவையும் யோசிக்காமல் காரியம் செய்திருக்கிறாய் என்றால் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.”

“என்ன?”

“காதல்.”

“சீ வாயைக் கழுவு. அந்தக் குரங்கு மூஞ்சியை நினைத்தாலே எனக்குக் குமட்டிக் கொண்டு வருகிறது. நாளை மாலை கடற்கரை ஓட்டலுக்கு வரச் சொல்லியிருக்கிறான் நஞ்சுண்டன். அங்கே தெரிந்துவிடும், பொறு.”

கடற்கரை ஓட்டலின் தோட்டமாடி, இனிமையின் உறைவிடமாயிருந்தது. கொடிகளில் மலர்ந்திருந்த புஷ்பங்கள், கடலிலிருந்து வரும் காற்றுக்கு மணம் ஏற்றின. பிறைச்சந்திரன் பவனி வந்து கொண்டிருந்தான் ஒய்யாமாக.

"ஸூவான்! உன் ஓட்டலை ரொம்பக் கர்நாடகமாய் வடத்திருக்கிறாய். பணச் செலவைப் பாராமல் இந்த மாதிரி ரூஃப் கார்டன் ஒன்று ஏற்படுத்தி அழகு படுத்தக் கூடாதா?”

ப்ரூட் ஸாலட் திராட்டசையை ஸ்பூனில் வைத்துச் சீராட்டியபடி பேசினான் நஞ்சுண்டன்.

சீனர்கள் இருவரும் அவன் உற்சாகத்தில் பங்கு கொள்ளவில்லை. வெறும் தேனீர்க் கோப்பைகள்தான் அவர்கள் பக்கத்திலிருந்தன.

"ரூஃப் கார்டனை அமைப்பது இருக்கட்டும். வைர முருகன் என்ன ஆயிற்று?” என்றான் லின் டாங். "சிடுமூஞ்சி டாக்டரம்மா ஒருத்தி அதற்குப் பூப்போட்டு மணியடித்துத் தூபம் காட்டிக் கொண்டிருக்கிறாள்!” சிரித்தான் நஞ்சுண்டன். "அது வெறும் கண்ணாடி முருகன் என்று அவளுக்குத் தெரியாது, பாவம்!"

ஸூவானின் குரலில் ஆர்வம் மின்னியது. “அப்படியானால் அசலைக் கைப்பற்றிவிட்டாயா?”

நஞ்சுண்டன் மார்பை நிமிர்த்திக் கொண்டான். "டாக்டரம்மா வீட்டில் அமர்க்களம் ஏற்படுத்தி, வைர முருகனை அப்புறப்படுத்தியாயிற்று. அது மட்டுமல்ல. ரமணனின் பக்கம் போலீசைத் திருப்பியாயிற்று. அவர்கள் அங்கே நான் வைத்திருந்த போலி முருகனைக் கண்டெடுத்து, டாக்டரம்மாவிடம் கொடுத்தாயிற்று. அதிர்ச்சி தாங்காத ரமணன் இந்த நிமிடம் பைத்தியம் பிடித்துப் பாயைப் பிராண்டிக் கொண்டிருக்கிறான். சந்தேகம் இருந்தால் போய்ப் பார்த்துவிட்டு வா.”

ஸூவான் பெருமிதத்துடன் மாமனைப் பார்த்தாள். 'என்னவோ சொன்னீர்களே, பார்த்தீர்களா?' என்று கேட்டது அந்தப் பார்வை.

லின் டாங் அவ்வளவு சீக்கிரம் மகிழ்ந்து விடவில்லை. “சரி, அசல் வைர முருகனை எங்களிடம் கொடுப்பதற்கு ஏன் நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்றான் நஞ்சுண்டனிடம்.

“ஆமாம். நாள் நட்சத்திரம் தான்.” மர்மப் புன்னகை வெளியிட்டான் நஞ்சுண்டான். "இன்னும் கொஞ்ச நாளில் எனக்குக் கல்யாணம் நடக்கவிருக்கிறது.”

“ஓகோ” என்றான் லின் டாங்.

“மணப்பெண் யாரென்று தெரிய வேண்டாமா?”

“யார்?”

"ரேணுகா குழந்தைப்பாண்டியனின் மகள்.”

லின் டாங்கும் ஸூவானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். “புளியங்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாய்” என்று பாராட்டினாள் ஸூவான்.

“அந்தக் கல்யாணத்துக்காகத் தான் காத்திருக்கிறேன். வைர முருகனை அப்போது கல்யாணப் பரிசாக”

நஞ்சுண்டன் முடிக்கவில்லை. கிழவன் லின் டாங் ஆங்காரத்துடன் அவன் சட்டையைப் பிடித்தான். காலரை உலுக்கினான். "ஏய்! ஏமாளியென்று நினைத்துக் கொண்டாயா எங்களை? பிச்சைக்காரப் பயல் நீ! கல்யாணப் பரிசு உனக்கு! இத்தனை காலமும் நாங்கள் காத்திருந்தது உனக்கு வைர முருகனைத் தாரை வார்க்கவா! ஒரு நாளும் நடவாது தம்பி!”

கிழவனின் கையைச் சுண்டு விரலால் தட்டிவிட்டான் நஞ்சுண்டன். இளக்காரமான நகைப்பு அவன் முகத்தில் பரவியது. “உனக்கு இருக்கிற அற்பப்புத்திதானே எல்லாரிடமும் தெரியும்? பொறுமையாய்க் கேள். உன் வைர முருகன் எனக்கு வேண்டவே வேண்டாம். அதன் பெறுமானத்தைப் போல் மூன்று மடங்கு எனக்கு ரேணுகா மூலம் வந்துவிடும். கல்யாணம் முடியட்டும், உன் முகத்திலே அதைத் தூக்கியெறிகிறேன். என் கல்யாணப் பரிசாக உனக்குத் தருகிறேன். அதை என்று சொல்ல வந்தேன்!”

லின் டாங்கின் முகத்தில் அசடு வழிந்தது. ஆனால் ஸூவான் இப்போது சந்தேகமுற்றாள். “வைர முருகனைச் சேர்ப்பிக்க நல்ல நாளொன்றும் பார்க்க வேண்டாம். இப்போதே கொடுத்தால் கூட வாங்கிக் கொண்டு போய் விடுகிறோம். கொடு.”

அவளுடைய இளமையான மோவாயைச் செல்லமாய்க் கிள்ளினான் நஞ்சுண்டன். “ஸூவான், நீ ஒரு பச்சைக் கிளி. உன் உதடு ஒரு மதுக்கிண்ணம். உன் பேச்சு ஒரு கொம்புத்தேன். இருந்தாலும் இந்த நஞ்சுண்டன் சுத்த மரக்கட்டை. நீ சொல்வதற்கெல்லாம். தலையாட்ட மாட்டான், மடையன்.”

“விஷயத்துக்கு வா” கடுகடுத்தாள் ஸூவான்.

“வந்தேன். நீயும் லின் டாங்கும் வேண்டுமானால் என் திருமணத்தை வரவேற்கலாம். ஆசி கூறலாம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் ஏராளமான பேர் எனக்கு இருக்கிறார்கள். அவர்களில் எவரும் அந்தக் கல்யாணத்தைத் தடை செய்யாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.”

“நாங்களா?”

"ஆமாம். இந்திய ராணுவத்துக்குக்கூட இல்லாத அறிவு, ஆள்கட்டு ஐந்தாம் படை எல்லாம் உங்களுக்குத் தானே உண்டு? மலையை நம்புகிற மாதிரி உங்களை நம்பியிருக்கிறேன். என் கல்யாணத்துக்கு எந்தப் பக்கத்திலிருந்தும் எவ்வித ஆபத்தும் வராமல் இந்த நிமிடம் முதல் கண்காணியுங்கள். எங்கே எந்த எதிரி முளைத்தாலும் நசுக்குங்கள். ரேணுகாவின் கழுத்தில் தாலி ஏறிய மறு வினாடியே உங்கள் கைக்கு வைர முருகன் வந்துவிடும்.”

“என்ன உத்தரவாதம்?”

நகைத்தான் நஞ்சுண்டன். “அதே தாலிதான். நான் வார்த்தை மீறினால் ரேணுகா விதவையாகிவிட மாட்டாளா? உங்கள் கண்டிப்பு எனக்குத் தெரியாதா?”

“இப்போது வைர முருகன் எங்கே?”

“என் பெயர் நஞ்சுண்டன். பாப்பா இல்லை” என்று சிரித்தான் நஞ்சுண்டன். “வைர முருகன் என்னைவிட்டு ஒரு கணமும் இணைபிரியாதிருக்கிறது. ஏன் கவலைப் படுகிறாய்? நான் கேட்டுக்கொண்டபடி எனக்குப் பாதுகாப்புக் கொடு. உன்னுடைய ஆயிரம் கண்களும், உன்னுடைய ஆயிரம் செவிகளும் எனக்குப் போலீசாக இருக்கட்டும். பிறகு வைர முருகன் தன்னாலே வந்து சேரும் உன்னிடம்.”

சில வினாடிகளுக்கு நிசப்தம் நிலவியது. பிறகு ஸூவான் சொன்னாள்: “அனேகமாக இதுதான் உனக்குக் கடைசிச் சந்தர்ப்பம். அப்புறம் வருத்தப்படாதே.” லின்டாங் பக்கம் திரும்பினாள் "வா, போகலாம்.”

தெருக்கோடியை அடையுமட்டும் இருவரும் பேசவில்லை. பின்னர் லின் டாங் சொன்னான்: “அவனுக்குச் சொன்னாயே, அதே வார்த்தைதான் உனக்கு நான் சொல்வேன்.”

“கடைசிச் சந்தர்ப்பம் என்றா?” “ஆமாம். நஞ்சுண்டனுக்கு நீ அளவுக்கு மீறி இடம் கொடுத்து விட்டாய் இந்தச் சூதாட்டம் விபரீதமாக முடிந்தால்"

“முடிந்தால்?"

“அதற்கப்புறம் நான் உன் மாமனல்ல. எமன்” என்று லின்டாங் முடித்தான். வாய்விட்டு நகைத்தாள் ஸூவான்.

உதட்டைக் கடித்தபடி நின்றான் லின் டாங்.

“என்ன மாமா யோசனை?” என்றாள் ஸூவான்.

“அந்த ரமணன் விஷயம்” என்றான் கிழவன். "பத்து நஞ்சுண்டனை, ஏப்பமிடக்கூடிய பெரிய ஆள் அவன். அவனுக்காகவது பைத்தியம் பிடிப்பதாவது!”

"ஏன்? நேற்று வைர முருகனைக் காணோம் என்றதும் உனக்குக்கூடத் தான் பிடித்தது! மாமா, அதிர்ச்சி எப்படிப்பட்ட ஆளையும் கவிழ்த்துவிடும்.”

“ரமணனைத் தவிர" என்றான் லின் டாங். “பார்த்துவிடலாம் வா...!”

“சரி, சந்தேகம் ஏன்? ரமணன் வீடு பக்கம்தான்" என்றான் ஸூவான்.

மாடிப் படியின் குறுக்காக அமர்ந்திருந்தது. அந்தப் பித்துக்குளி உருவம். அதைச் சுற்றிலும் வேர்கடலைத் தோல்கள்.

“யாரைப் பார்க்க வந்தீங்க? துப்பறியும் நிபுணர் ரமணனையா? அவருக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குது யாரையும் பார்க்கமாட்டார். போய் வாங்க!" என்று கையை வீசியது அந்தக் கிறுக்கு உருவம்.

அதன் கிழிசல் உடை; நீளமாய் வளர்ந்துவிட்ட குறுந்தாடி; கரகரத்த தொண்டை ரமணனா அது!

ஸூவானும் லின் டாங்கும் மாடிப்படி ஏறாமல் திரும்பினார்கள்.

“அசல் பைத்தியம்தான். சந்தேகம் தீர்ந்ததா.” என்றாள் ஸூவான்.

“ஊஹும்” லின் டாங் தலையசைத்தான். “நீதான் மேலும் மேலும் ஏமாந்து கொண்டிருக்கிறாய்.”

“ஷட் அப்!” ஸூவானின் வாய் மட்டுமல்ல, கையும் பளீரென்று வீசியது லின் டாங்கின் கன்னம் சிவந்தது. அதைத் தடவிக்கொண்டே திருதிருவென்று விழித்தான் கிழவன்.

டாக்ஸியொன்றை நிறுத்தினாள் ஸூவான். இருவரும் ஏறிக்கொண்டார்கள். டாக்ஸி புறப்பட்டது.

“என்னை மன்னித்துவிடு மாமா!” என்றாள் ஸூவான் திடீர்ப் பணிவுடன். “நம் பின்னாலேயே வந்து கொண்டிருந்தானே ஒரு காக்கிச் சட்டை ஆள், அவன் சந்தோஷப்படட்டும் என்று தான் உன்னை அடித்தேன். நம் இருவருக்கும் சண்டை ஏற்பட வேண்டுமென்பது அவன் ஆசை.”

லின் டாங் திகைத்தான்: “யாரவன்? காக்கிச் சட்டை ஆளா? நான் கவனிக்கவில்லையே?"

"இந்த ஸூவானைக் கண்காணிக்கிற நேரத்தில் பாதியை நீ வெளியுலகத்தில் செலுத்தினால் போதும், எல்லாம் புலப்படும்.”

“யாரந்த ஆள்?”

“மத்திய அரசாங்கத்தின் ரகசியப் போலீஸ்” என்றாள் ஸூவான். “இனிமேல் ரமணனிடமிருந்தோ நஞ்சுண்டனிடமிருந்தோ நமக்கு அதிக ஆபத்துக் கிடையாது. டெல்லியே நம்மை நேரடியாகக் கவனிக்கத் தொடங்கி விட்டது.”

*****

19

தெரு முனையில் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்தாள் ரேணுகா. நஞ்சுண்டனின் அறைக்குச் செல்லும் மாடிப்படிகளில் ஏறினாள். நிசியிருட்டு அவளைத் தழுவிக் கொண்டது.

விதியின் பொல்லாத கரம் என்னென்ன விபரீதங்களை விளைவிக்கிறது!

இப்போதுதான் போலிருக்கிறது. இதேபோல் ஓர் இரவில், இதே இடத்துக்கு ரமணனைத் தேடி வந்ததெல்லாம். ரமணன் என்று நினைத்துக்கொண்டு நஞ்சுண்டன் என்ற பாவியை அல்லவா அழைத்துப் போனோம்! அது, தாலி என்ற நச்சுக் கயிற்றை அல்லவா அவள் கழுத்தில் இறுக்கப் பார்க்கிறது!

"இணங்காதீர்கள் அவன் மிரட்டலுக்கு!” என்று குழந்தைப்பாண்டியனிடம் அவள் எவ்வளவோ மன்றாடிப் பார்த்துவிட்டாள். பயனில்லை. 'எனக்கு மிஞ்சியிருக்கும் ஒரே செல்வம் நீதான். உன்னைப் பறிகொடுக்க மாட்டேன்!' என்று சொல்லிக்கொண்டே, நஞ்சுண்டன் என்ற பாழ் கிணற்றிலே அவளைத் தள்ள அவர் முடிவெடுத்துவிட்டார்! ரமணன்தான் அவளுக்கு இனி ஒரே புகலிடம். அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாம்! நஞ்சுண்டன் கூறுகிறான். ரமணன் வைரமுருகனைத் திருடிவிட்டு அகப்பட்டுக் கொண்டானாம். டாக்டர் நாமகிரி சொல்கிறார். ரேணுகாவுக்கு ஒரே குழப்பமாயிருந்தது. ரமணனைச் சந்தித்துப் பேசினால் எல்லாம் புரிந்துவிடும். அந்த நம்பிக்கையுடன் புறப்பட்டு வந்தாள் ரமணனிடம். ஆனால்

ஐயோ! என்ன கோலம் இது! ரமணனா இவன்! கிறுக்குச் சிரிப்பு! அலங்கோல உடை! சுவரிலே வாத்துப் போல், முயல் போல் நிழல்களைக் காட்டிக் கொண்டிருக்கிறானே!

உள்ளே நுழைந்தாள் ரேணுகா.

“அடேய் அப்பாவு!” என்று உறுமினான் ரமணன். “எத்தனை தரம் உனக்குச் சொல்லியிருக்கிறேன்?”

“என்ன... ஏமி செப்புதிரி?" அப்பாவு விழித்தான்.

“தடதடவென்று யாரும் என் ஆஸ்தான மண்டபத்துக்குள் நுழையக் கூடாது! புரிகிறதா?”

"ஆமாங்க." அப்பாவுவின் கண்ணில் நீர் கோத்தது. ரேணுகாவைப் பரிதாபமாகப் பார்த்தான். ரேணுகாவின் முகமோ மேலும் இருளடைந்திருந்தது.

ரமணன் இருவரையும் பொருட்படுத்தாமல் பேசினான்: “அரண்மனைக்கு வெளியே ஆராய்ச்சி மணி கட்டியிருக்கிறோமா, இல்லையா? அது எதற்காக?”

"அது... அது...” அப்பாவு கையைப் பிசைந்தான் “இவங்களைப் போல... மாகராஜுனி சுசேதனிக்கு ஓச்சே வால்லு... அடிக்கிறதுக்காக!”

"ஆ! கெட்டிக்காரன்! இன்று முதல் உன்னை என் முதல் மந்திரியாக நியமித்திருக்கிறேன்! இருபதாயிரம் பவுன் சம்பளம் வாங்கிக்கொள்!” ரமணனின் பார்வை ரேணுகாவின் பக்கம் திரும்பியது. “அடேய் முட்டாள் அப்பாவு! இந்த மகாராணியம்மாள் எவ்வளவு நேரமாய் நின்று கொண்டிருக்கிறார்கள்! ஒரு சிம்மாசனம் கொண்டு வந்து போடுவதற்கென்ன?”

“இதோ!” என்று ஒரு நாற்காலியைக் கொணர்ந்து போட்டான் அப்பாவு.

"போய் ஒரு கப் பால் வாங்கிவா" என்று அடுத்த கட்டளை பிறந்தது ரமணனிடமிருந்து.

"இல்லை, எனக்கு எதுவும் வேண்டாம். நான் சாப்பிட்டுத்தான் வந்தேன்.”

"உனக்கா? பால் வாங்கிவரச் சொன்னது உனக்கில்லை. இதோ இந்த முயல்களுக்கு.” சுவரில் விழுந்திருந்த முயல் நிழல்களைக் காட்டினான் ரமணன். “பாவம், நேற்று ராத்திரியிலிருந்து எதுவுமே ஆகாரம் போடவில்லை. எவ்வளவு இளைத்துப் போய்விட்டது. பார்!” அப்பாவு கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

"டேய்!” பல்லைக் கடித்தான் ரமணன். “என்ன செல்ல முயல் இரண்டும் பட்டினி என்றால், அதற்கு நீ ஏண்டா அழுகிறாய்? போய் பால் வாங்கி வரப் போகிறாயா இல்லையா?"

"இதோ எஜமான்” என்று அப்பாவு டம்ளரைத் தூக்கிக்கொண்டு ஓடினான். பதுமை போல நின்றிருந்தாள் ரேணுகா. கண்டதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொண்டதை நம்ப இயலவில்லை.

ரமணன் அமைதியாக எழுந்து கொண்டான். வெராந்தாவுக்குச் சென்று தெருவை எட்டிப் பார்த்தான். “யாரும் உன்னைப் பின்தொடர்ந்து வரவில்லையே? நன்றாய்க் கவனித்துக் கொண்டுதானே இங்கே வந்தாய்?”

ரேணுகாவுக்கு மூச்சு நின்றது. அவன் அமைதியாகப் பேசிய தோரணை முகத்தில் தென்பட்ட தெளிவு.

“உங்களுக்கு... நீங்கள்...” என்று தடுமாறினாள்.

புன்னகை பிறந்தது ரமணனின் உதட்டில். "ஏன் எனக்கு என்ன? மூளையெல்லாம் உருப்படியாய்த்தான் இருக்கிறது. நீ குழந்தைப்பாண்டியனின் மகள், உன் பெயர் ரேணுகா. நீ நஞ்சுண்டனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாய் - எல்லாம் எனக்குத் தெரிந்தது தான். இந்தக் கடைசிக் கட்டத்திலாவது நான் கைகொடுப்பேன்" என்கிற நம்பிக்கையுடன் நீ வந்திருக்கிறாய்.”

"அப்படியானால் நீங்கள் கிறுக்குப் போல்”

ரமணனின் புன்சிரிப்பு மேலும் விரிந்தது. “நோயாளி தான் டாக்டரிடம் ரகசியத்தைச் சொல்ல வேண்டும். கட்சிக்காரன்தான் வக்கீலிடம் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். டாக்டரும், வக்கீலும் தங்கள் ரகசியத்தை நோயாளியிடமும், கட்சிக்காரனிடமும் சொல்ல வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. இருந்தாலும் நீ ரொம்பக் குழம்பிப் போயிருப்பதாலும், பயந்திருப்பதாலும் சொல்கிறேன்: இந்தப் பைத்தியக்கார வேடம் நானும் அஸிஸ்டென்ட் கமிஷர் தணிகாசலமும் செய்து கொண்டிருக்கிற ஒப்பந்தம்.”

ரேணுகா திகைத்தாள்.

"தணிகாசலமா சொல்லியிருக்கிறார்கள்? எதற்காக?"

“வைர முருகன் சீனர்களின் கைக்கோ, சீன தேசத்துக்கோ போய்விடக் கூடாதென்று ரொம்பத் தீவிரமாய் இருக்கிறார்களாம், மத்திய அரசாங்கப் போலீசில். அதனால் நான் சிறிது காலம் ஒதுங்கியிருக்க வேண்டியதாயிற்று. வைர முருகன் வைத்திருப்பவன் பயமில்லாமல் வெளியே நடமாடட்டும் என்பதற்காக, எனக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஒரு நாடகம் நடத்திவிட்டார்கள். அஸிஸ்டென்ட் கமிஷனருடன் டிரங்க் டெலிபோனில் பேசியபோதுதான் இவ்வளவும் எனக்கே தெரிந்தது. அதே சமயம், சும்மா சிபாரிசு பண்ணுகிற மாதிரி, போலீஸ் லாக்கப்பிலிருந்து எனக்கு விடுதலையும் வாங்கித் தத்ரூபமாகப் பண்ண வேண்டுமென்று தான் நான் இந்த அரைப் பைத்தியம்...”

அவன் பேச்சை வெட்டியது டெலிபோனின் கிணுகிணுப்பு.

ரேணுகா எடுக்கப் போனாள். "ஷ்! இரு!” என்று தடுத்தான் ரமணன்.

டெலிபோன் நின்றுவிட்டது. பிறகு மீண்டும் அடித்தது - ஒரு முறை. மறுபடி நின்றுவிட்டு, இரண்டு தடவை அடித்தது. ரமணன் கையிலெடுத்து, "ரமணன் ஹியர்” என்றான். ரிஸீவரைப் பொத்திக் கொண்டு ரேணுகாவுக்கு விளக்கமும் கொடுத்தான்: “மணி இப்படி விட்டு விட்டு அடித்தால் போலீஸ் இலாகாவில் கூப்பிடுவதாக அர்த்தம்.”

போனின் மறுமுனையில் பலவீனமாக யாரோ பேசினார்கள். ஆண் குரல் என்று மட்டுமே தோன்றியது. “ஹலோ! காதில் விழவில்லை. கொஞ்சம் உரக்கப் பேசுங்கள்” என்றான் ரமணன்.

"பேச முடியவில்லை... பலமான காயம் எனக்கு. தத்தித் தவழ்ந்து ஒரு டெலிபோன் கூண்டை எட்டி விட்டேன்.”

"யார் - யார் நீ?”

"என்னைத் தெரியாது உங்களுக்கு. சென்டிரல் கிரைம் பிராஞ்சு - வல்லபன் என்று என்று பெயர். லின் டாங்கின் மீது கண் வைப்பதற்காக... அமர்த்தப் பட்டவன்...”

“சரி?” பரபரத்தான் ரமணன். அருகில் வந்து என்னவென்று ஜாடை காட்டிக் கேட்ட ரேணுகாவையும் கவனிக்கவில்லை. "நீ இப்போது எங்கே இருக்கிறாய்? அதைச் சொல்லு. நான் வந்து உதவி செய்கிறேன்.”

“அவசியமில்லை. அதைக் காட்டிலும் முக்கியமான வேலை இருக்கிறது. அதனால்தான்... அதனால்தான்... உங்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எனக்குக் கட்டளை... இருந்தாலும், வேறு யாரையும் நம்பாமல் உங்களிடம் சொல்கிறேன்..."

“இன்னும் சொல்லவில்லை விஷயத்தை.” ஒரு மத்திய குற்ற இலாகாவைச் சேர்ந்தவன் இவ்வளவு மசமசப்பாயிருக்கிறானே என்று ரமணனுக்கு ஆத்திரம் வந்தது.

“அவர்கள்... ஸூவானும் நஞ்சுண்டனும் சைதாப்பேட்டை... பஜாருக்குப் பக்கத்தில் வெள்ளாள முத்தையா தெருவில்... 18ம் நம்பர் வீட்டில் இருக்கிறார்கள். உள்ளே ரகசியமாக நுழைய முயற்சி பண்ணினேன்... பார்த்து விட்டார்கள். அடித்து அந்த வீட்டின் பின்பக்கம் ஒரு ரூமில் தள்ளினார்கள்... நான் குற்றுயிரும் குலையுயிருமாய் அங்கே கிடப்பதாக அவர்களுக்கு... எண்ணம்... அவர்களுக்கே தெரியாது நான் தப்பிவிட்டேன் என்று.”

“சரி, தாமதிக்காதே. அருகிலுள்ள டாக்டர் வீட்டுக்கோ ஆஸ்பத்திரிக்கோ உடனே போய்க் காயத்தைக் கவனி. கேட்பவர்களிடம், கீழே விழுந்து அடிபட்டதாக மட்டும் சொல்லு."

“நான் ஸென்டிரல் கிரைம் பிராங்சு சார்” என்று பீற்றிக் கொண்டான் அவன். சிரிப்பு வந்தது ரமணனுக்கு.

டெலிபோனைக் கொக்கியில் சரியாகக்கூட மாட்டவில்லை. சட்டையைத் தலைகீழாய் அணிந்து கொண்டான். “நான் போக வேண்டும்" என்று புறப்பட்டான்.

அவன் அவசரம் ரேணுகாவுக்குப் புரிந்தது. ஆகவே எங்கே போகிறீர்கள் என்று கேட்கவில்லை. “அடுத்தாற் போல் நான் செய்ய வேண்டியது?” என்று மட்டுமே கேட்டாள்.

“பவுடரைக் குறைச்சலாய்ப் போட்டுக் கொள்வது!” என்றான் ரமணன். அபாயத்தை நெருங்கும் போது ஏற்படும் உற்சாகமும் உல்லாசமும் அவனைத் தொற்றிக் கொண்டு விட்டன. செவ்வந்திப் பூக்கள் இரண்டை எடுத்து இரண்டு காதிலும் செருக்கிக்கொண்டு கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டான். “அடுத்த சில நாட்களுக்கு நீ எதுவும் செய்ய வேண்டாம், ரேணுகா. ஜனார்த்தனத்தை மட்டும் கவனிக்க ஏற்பாடு செய். அவருடைய கேஸில் மறுபடி டாக்டர் நாமகிரி அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு படிக்கு ஒரு காலாக இறங்கிக் கொண்டே பேசினான் ரமணன். "டாக்டர் நாமகிரியிடம் தனியாகச் சொல்லு. ஆனால் நஞ்சுண்டனுக்குத் தெரிய வேண்டாம். நீ சதி செய்வது தெரியக்கூடாது. முகத்தை முழ நீளம் தொங்கப் போட்டுக்கொள். வேறு வழியில்லாமல் அந்தப் பாவியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள நேரிட்டதோ என்று நீ குமைகிற பாசாங்கு, முகத்தில் தெரிய வேண்டும்...”

“முடிவில் அப்படியே நேர்ந்துவிட்டால்?”

“இந்த ரமணன் பொடாஸியம் ஸயனேட் சாப்பிட்டு உயிர் துறந்துவிடுவான்.” மோட்டார் சைக்கிளில் ஏறி உதை விட்டான்.

பாலுடன் எதிரில் வந்தான் அப்பாவு. “சார், கேட்டீர்களே?” என்று டம்ளரை நீட்டினான்.

"அந்த அம்மாள் பாதியும் நீ பாதியும் குடி.”

மோட்டார் பைக் பறந்துவிட்டது. “மூளை சரியில்லாத சமயத்தில் இப்படி மோட்டார் பைக் ஓட்டாறார் பாருங்க! கடவுளே! இவருக்கு ஒண்ணும் ஆகாமல் இருக்கணும்!” என்று அப்பாவு கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

ரேணுகா அவன் முதுகில் தட்டிக் கொடுத்தாள். “கடவுளுக்கே ஏதாவது ஆனால்கூட உன் ஐயா காப்பாற்றுவார் கவலைப்படாதே.”

சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வரையில்தான் மோட்டார் பைக் பறந்தது. அங்கே ரமணன் இறங்கிக் கொண்டான். எதிர்ச் சரகிலிருந்து ஒரு சிறிய தெருவுக்கு வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றான். தெருவிளக்கு எதுவும் எரியக் காணோம். வீடு வீடாகப் பார்த்துக் கொண்டே சென்றான். ஒரே ஒரு வீட்டில் மட்டும் காம்பவுண்டு கேட் திறந்திருந்தது. உள்ளே தள்ளிக் கொண்டு போனான். சிறிய தோட்டம் இருளில் மூழ்கியிருந்தது. காம்பவுண்டு சுவரின் மறுபுறத்து மறைவில் வண்டியை நிறுத்திவிட்டு வெளியே வந்தான். யாரும் கவனிக்கவில்லை. மோட்டார் பைக்கைப் பத்திரப் படுத்தியாயிற்று.

ஓட்டமும் நடையுமாகப் பஜார் தெருவை நோக்கி விரைந்தான். போகும் போதே தன் உடை, கிராப், முதலிய திருப்தியான அளவு அலங்கோலமாயிருக்கும்படி 'சரி' செய்துகொண்டான்.

இங்கொன்று அங்கொன்றாக மினுக் மினுக் வெளிச்சம்தான். 'வேளாளமுத்தையா தெருவைக் கண்டுபிடிக்கச் சிறிது சிரமம் ஏற்பட்டது. கடைசியில் கிடைத்தது. பத்து நிமிடம் வீண். சரி, பதினெட்டாம் நம்பர் எண்... தூக்கம் பிடிக்காத கிழவரொருவர் லொக் லொக்குடன் திண்ணையில் எழுந்து உட்கார்ந்து ரமணனை முறைத்தார். ஒரு நாய் சில கெஜதூரம் அவனைப் பின்தொடர்ந்தது. வேறு நடமாட்டம்.

ஓ! இதென்ன? இருட்டில் நிறுத்தப்பட்டிருந்ததால் மோதிக்கொண்டே விட்டான் அந்தச் சின்னஞ் சிறிய காரின் மீது. சமாளித்து நிமிருமுன் வீட்டுக் கதவு திறந்தது. இரண்டு உருவங்கள் வெளிப்பட்டன. அவன் நழுவு முன்,

“ஹலோ!”

ஸூவான் ரமணனின் கையைப் பிடித்துவிட்டாள் என்ன எஃகுப் பிடி! "உனக்குப் பைத்தியம் என்ற சொன்னார்களே... ஆமாம், அடடா! மூளையை அதிகம் கசக்கிக்கொண்டால் இப்படித் தான் ஆகும் போலிருக்கிறது.” வருத்தத்தினால் அவள் உதடுகள் குவிந்தன.

“யார் ஸூவான் இது?” பின்னாலேயே வந்து நஞ்சுண்டன் கேட்டான். சிகரெட் புகைந்து கொண்டிருந்தது அவன் கையில்.

"இவனைப் பார்த்ததேயில்லையா இதுவரை? உன்னையும் என்னையும் கவிழ்ப்பதற்காகத் தலைகீழாய் நின்ற மிஸ்டர் ரமணன் துப்பறியும் மேதை இவர்தான்!”

"இவர்தானா! அடப்பாவமே! மனிதன் நல்ல அறிவாளியாய், உருப்படியான மூளையுடன் இருந்தபோது சந்திக்க வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. அன்று வைர முருகனைப் 'பிளாண்ட்' செய்யப் போனபோதுகூட இவன் இருக்கவில்லை.” நஞ்சுண்டன் ரமணனின் அருகில் வந்தான். சிகரெட்டின் நெருப்பு முனையை ரமணனின் கழுத்தில் வைத்தான்.

“ஆ!” துள்ளி நகர்ந்தான் ரமணன்.

“நல்ல வேளை! தேக உணர்வுகள் கெடாமலிருக்கிறது. நாம் போவோமா ஸூவான்?”

"இதோ.” ஸூவான் தன் கையிலிருந்து தோல் பெட்டியைக் காரில் வைத்தாள். ஓட்டுமிடத்தில் அமர்ந்தாள். நஞ்சுண்டன் அருகே உட்கார்ந்தான்.

"ஏய்! இப்படித்தான் ஊர் சுற்றிக் கொண்டு, இருக்கிறதா? வீட்டில் போய்ப் படு." கதவைப் பிடித்துக் கொண்டு நின்ற ரமணனுக்கு இதமாய் எடுத்துரைத்தாள் ஸூவான்.

ரமணன் அவளெதிரில் ஒரு கர்ணம் போட்டுவிட்டு எழுந்தான். பிறகு, “இந்தா, ஐந்நூறு ரூபாய். வைத்துக் கொள்” என்று காதுகளில் செருகியிருந்த இரண்டு செவ்வந்திப் பூக்களை எடுத்து அவளிடம் கொடுத்தான். நான் காரிலே போய் ரொம்ப நாளாகுது. கொஞ்ச தூரம் வர்றேன் என்ன?”

“பாவம்” என்றாள் ஸூவான். நஞ்சுண்டனைக் கேள்விக் குறியுடன் நோக்கினாள்.

“எனக்கு ஆட்சேபமில்லை” என்றான் நஞ்சுண்டன்.

“பின் ஸீட்டில் உட்கார்ந்து கொள். ஆனால் வாலைச் சுருட்டிக் கொண்டு இருக்கணும். குறும்பு பண்ண மாட்டாயே?”

“சீ, சீர மூச்சு விடுவேனா!” தன்னைச் சுற்றிப் பல பேர் இருப்பதுபோல், “மூச்! மூச்! மூச்!” என்று ஒவ்வொருவருக்கும் சாடை காட்டிவிட்டு, காரில் ஏறிக்கொண்டான் ரமணன்.

அடையாறு பாலத்தின் பக்கம் திரும்பாமல், நேரே தாம்பரம் பாதையில் கார் விரைந்தது. இரவுக் காற்று ரமணனின் செவிகளில் மோதியது. கண் மட்டுமின்றி, அவனது எல்லாப் புலன்களும் விழித்துக் கொண்டிருந்தன.

“நீ சைதாப்பேட்டையில் ரொம்பத் தாமதம் செய்து விட்டாய்.” குற்றம் சாட்டினாள். ஸூவான்.

“என்ன செய்யட்டும்? அந்தக் குரோம்பேட்டை பங்களாவின் சாவி, சற்றுமுன் சந்தித்தோமே அந்தச் சிங்கிடம் தான் இருக்கிறது. நாம் வருவது தெரியாமல் அவன் நைட் ஷோ சினிமாவுக்கு போய்விட்டான். அவன் வந்து சாவி கொடுத்ததும் புறப்பட்டுவிட்டேன்.”

"என்னவோ, குரோம்பேட்டை பங்களாவைப் பெரிதாய்ச் சொல்கிறாய். என்னைக் கேட்டால், நான்கிங்ங் ஓட்டலிலேயே அதை-?” திரும்பிப் பார்த்துக் கொண்டாள் ஸூவான்.

“எதை? வைர முருகன் என்று தைரியமாய்ச் சொல்வேன். மாஜி துப்பறியும் மேதை கேட்டுக் கொண்டிருக்கிறாரே என்று பயமா?” என்றான் ஸூவான்.

"எவ்வளவு சுலபமாய் நம்மை நம்பிவிட்டார்கள்!” என்று எண்ணி மகிழ்ந்து கொண்டான் ரமணன்.

ஸூவானின் குள்ளநரிப் புத்தியைப் பற்றி அவன் அறிந்தது அவ்வளவுதான்!

*****

20

குரோம்பேட்டை பங்களாவை நோக்கிக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தாள் ஸூவான்.

பின் சீட்டில் பைத்திய வேடத்தில் இருந்த ரமணன் காதைத் தீட்டிக் கொண்டிருந்தான்.

ஸூவான் சொன்னான் நஞ்சுண்டனிடம்

“இது நான்கிங் ஓட்டலில் இருந்தால் எவ்வளவோ பந்தோபஸ்து. என்னவோ இந்தக் குரோம்பேட்டை பங்களாவில் தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, எடுத்து வருகிறாய்?”

பெருமூச்சுடன் தோல் பையைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

“ஸூவான் வைர முருகன் நான்கிங் ஓட்டலில் இருப்பதும் உன்னிடம் இருப்பதும் ஒன்றுதானே! அப்படி ஒரேயடியாய் நான் கொடுத்து விடுவேனா? கவலைப் படாதே. குரோம்பேட்டையில் உன் கண்ணெதிரில் அதைப் பத்திரப்படுத்தி வைக்கிறேன். பூட்டி, சாவியை என்னிடம் வைத்துக் கொள்கிறேன். ரேணுகாவின் கழுத்தில் தாலியேறிய அடுத்த முகூர்த்தம், ஸூவானின் கையில் சாவியேறும்!”

“அந்தக் குரோம்பேட்டை பங்களாவில் யார் இருக்கிறார்கள்?”

"மிஸ்டர் பிசாசு, மிஸஸ் பிசாசு இரண்டே பேர்தான்.” கடகடவென்று சிரித்தான் நஞ்சுண்டன். “பாழடைந்த பங்களா அது. சொந்தக்காரன் எங்கேயோ மலேயாவில் இருக்கிறான். சைதாப்பேட்டையில் பார்த்தோமே அந்த சிங், மலேயாக்காரனுடைய வேலையாள். அதனால்தான் சாவி வைத்திருக்கிறான். குரோம்பேட்டை பங்களாவுக்கு ஒரு மைல் அக்கம்பக்கமாக எவனும் நெருங்கமாட்டான்."

"ஏதோ வைர முருகன் பத்திரமாக இருக்குமானால் சரி...”

டிரங்க் சாலையை விட்டு இடப்புறமாகக் கார் திரும்பியது. பனங்காடு போன்ற பகுதியின் நடுவே ஓர் ஒல்லியான தெரு. குண்டும், குழியுமான பாதையில் ஸூவானின் கார் விழுந்து எழுந்து நடைபோட்டது.

“சரியான பிசாசு மண்டபம் தான்.”

எதிரில் தெரிந்த பங்களா, இருட்டை கொண்டே படைக்கப்பட்ட மாதிரி காட்சியளித்தது.

இருவரும் இறங்கினார்கள்.

"ஏய்! இருக்கிறாயா, தூங்கிவிட்டாயா?” நஞ்சுண்டன் அதட்டினான்.

"சீ, சீ தூங்குவேனா? ஸூவான் ராணிக்குக் கல்யாணம்! நான் மட்டும் பார்க்க வேண்டாமா?” ரமணன் இறங்கிக் கொண்டு, ஸூவானின் கவுனைப் பிடித்துக் கொண்டான்.

“சீ விடு!” அவன் கையை வெட்டிவிட்டாள் அவள்.

"ஸூவான்... ஸூவான்...”

ரமணன் கெஞ்சினான்.

“அட! இந்தப் பைத்தியத்திடம் ஏன் மல்லாடுகிறாய்? அதுவும் வந்தால் வந்தால் வந்து தொலையட்டும்!” என்றான் நஞ்சுண்டன் வெறுப்புத் தொனிக்க.

“ஸலாம் பாபு! ஸலாம் மேரே புல்புல்!” ரமணன் கர்ணம் போட்டுக் கொண்டே அவர்களுக்கு முன்பு பங்களாவை அடைந்தான்.

படபடவென்று அவர்கள் முகத்தில் மோதினாற் போல் ஓடின பல வெளவால்கள். நஞ்சுண்டன் வெராந்தா முன் கதவைத் திறந்தான். நாலாயிரம் செக்கு நகர்வது போலக் கிறீச் கிறீச் சென்ற ஓசைகள் ரத்தத்தை உறைய வைத்தன. உள்ளே இருள். தனிமை.

ரமணன் எட்டிப் பார்த்தான்.

"என்ன, ஏதாவது தெரிகிறதா? இப்போது பார்.”

இடிபோல் ரமணனின் முதுகிலே ஒரு குத்து விழுந்தது!

“இருட்டில் தெரியவில்லையா, ரமணன்? நான் தான் ஸூவான்தான் - கொடுத்தேன் அன்புப் பரிசு! ஆளைத் தெரியாவிட்டாலும் குரலைத் தெரிகிறதா பார்!”

வழியம் ரத்தத்தைத் துடைக்காமல் பிரமித்துப் போனான் ரமணன். ஸூவானின் பேச்சில், பிற்பாதி சூன் குரலாக அல்லவா ஒலிக்கிறது!

"தெரிகிறதா ரமணன்” ஸூவான் மீண்டும் கேட்டாள். “ஸென்டிரல் கிரைம் பிராஞ்சு வல்லபனை இன்னுமா அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை? ஹஹாஹ! ஹாஹ்ஹா!”

நஞ்சுண்டனின் குரல் வெளிப்பட்டது: “ஸூவான் நீ ஒரு ஜீனியஸ். நிஜமாகவே நான் நினைக்கவில்லை இவ்வளவு சுலபமாய் உன் வலையில் விழுந்து, நாய் மாதிரி இப்படிப் பின்னால் வருவானென்று போலீஸ் இலாகாவில் அவனைக் கூப்பிடுகிற மாதிரி நிறுத்தி நிறுத்தி டெலிபோன் அடித்தாயே, அப்போதுகூட எதிர்ப்பார்க்கவில்லை!”

ஸூவான் ரமணனிடம் சீறினாள்: “டேய் முட்டாய்! உன் பைத்திய வேடம், ஒரு பச்சைக் குழந்தையைக் கூட ஏமாற்றது. இந்த ஸூவானும் லின் டாங்குமா ஏமாறுவார்களென்று நினைத்தாய்? இந்தா வைர முருகன்! சாகிற வரையில் இங்கே அடைபட்டுக் கிடக்க வேண்டுமல்லவா எறும்புக்கும் தேளுக்கும் எட்டுக் கால் பூச்சிக்கும் உணவாக? அதுவரை இந்த வைர முருகனைச் சாப்பிடு பாவம்!”

தோல்பை ரமணனின் தலைமீது விழுந்தது. மறுவினாடி ஆழ, ஆழ, பாதளாத்தில் அவன் புதையலானான். வைரமுருகன் இருப்பதாக அவன் நினைத்திருந்த தோல் பையில் இருப்பது வெறும் செங்கல்தான் என்பதே அவனுடைய கடைசி நினைவு. அதன் பிறகு இருள், இருள், மேலும் இருள்.

அடுத்த நாள்.

“எங்கே கிளம்புகிறாய்?”

ஹாலில், பிரம்பு நாற்காலியில் சிகரெட் புகையும் கையுடன் அமர்ந்திருந்த நஞ்சுண்டன் கேட்டான்.

தந்தையிடம் சொல்லிக் கொள்வதற்காக அவரது அறையில் நுழைந்திருந்தாள் ரேணுகா. நிலைப்படிக்கு இந்தப் பக்கம் ஒரு காலும் அந்தப் பக்கம் ஒரு காலுமாக நின்று திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையில் கனல் வீசியது.

“நான் எங்கே போனால் உனக்கென்ன?”

“வேண்டாம் அம்மா.” குழந்தைப்பாண்டியன் வேதனையுடன் மன்றடினார். “எதற்கு அவனுடன் வாதாடுகிறாய்?”

“நன்றாய்ச் சொன்னீர்கள்.” சிகரெட்டை எறிந்து விட்டு எழுந்து வந்தான் நஞ்சுண்டன். ரேணுகாவிடம் செல்லமாய்க் கொஞ்சினான்: “இந்தப் பாட்டியம்மா கொண்டை, கோரமான நெற்றிப் பொட்டு, தரித்திரம் பிடித்த புடவை பார்த்தாலே தெரிகிறதே பள்ளிக் கூடத்துக்குத்தான் புறப்படுகிறாய் என்று? அதைத்தான் வேண்டாம் என்கிறேன். வாத்தியார் வேலைக்குப் போகுமளவுக்குச் சோற்றுக்கில்லாத பட்டினிப் பட்டாளமா என் மனைவி?”

"அந்த உரிமை வந்த பிறகு பேசு. நான் இன்னும் சுருக்கை மாட்டிக் கொள்ளவில்லை என் கழுத்தில்.” படபடப்பாகச் சொற்களை வீசிவிட்டு வெளியேறினாள் ரேணுகா.

உண்மையில் அவள் பள்ளிக் கூடத்துக்குப் புறப்படவில்லை. நீலாவைக் காணோம் என்ற பேச்சு அங்கே நிச்சயமாய் எழும். அவளையும் நாலுபேர் கேட்பார்கள். என்ன பதில் சொல்வாள்? அவள் முகத்தைப் பார்த்தே அந்தப் பயங்கர உண்மையைக் கண்டுபிடித்து விட்டார்களானால்...!

நினைக்கும் போதே நடுக்கமாயிருந்தது அவளுக்கு. ஒரு சிக்கலிலிருந்து விடுபடும் முன்பே இன்னொன்றில் மாட்டிக் கொள்ளும்படி நேரிட்டுவிட்டதே! எதிலிருந்து முதலில் விடுபடுவது? அவளுக்கே புரியவில்லை. எனினும், முந்தின தினம் ரமணன் கூறிய சொற்கள்தான் அவள் செவியில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. “பாலசந்தரின் மாமா ஜனார்த்தனத்தைக் காப்பாற்ற முயற்சி செய். டாக்டர் நாமகிரியிடம் சொல்லு” என்று ரமணன் சொன்னான். ஆனால் டாக்டர் நாமகிரி இரண்டு நாளாய் ஊரில் இல்லை. இன்று காலையில் தான் வந்தாளாம். அவளைப் பார்க்கவே ரேணுகா புறப்பட்டாள். ஆனால் அவளுடைய பதற்றத்துக்கும் டாக்டரின் நிதானத்துக்கும் எத்தனை தூரம்!

“டாக்டர்! அந்த ஜனார்த்தனத்தை எப்படியாவது பேச வையுங்கள்!” என்று டாக்டரம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு அவள் மன்றாடினாள்.

"பேச வைத்தால், உடனே அவர் அந்த முட்டாள் பாலசந்தரைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றி விடுவார்! இல்லையா? அதுதானே உன் கனவு?” என்று சிரித்தாள் டாக்டர் நாமகிரி. “நீ ஒரு பைத்தியம்! உன் அப்பா ஒரு பைத்தியம். முதலில் உங்களுக்குத்தான் இங்கே சிகிச்சை கொடுக்க வேண்டும். யார் யோக்கியன், யார் அயோக்கியன் என்றே தெரிவதில்லை உங்களுக்கு!”

'எவ்வளவு உண்மையான பேச்சு!' என்று எண்ணிக் கொண்டாள் ரேணுகா. “இருந்தாலும் டாக்டர்... ஜனார்த்தனம் வாய்விட்டுப் பேசினால் சில விஷயங்கள் தெரியலாம்...”

“சரி, சரி. நான் முடிந்த வரையில் பார்க்கிறேன். அந்தத் திருடன் ரமணனாலே எல்லாம் கெட்டது. ரொம்பக் கஷ்டாகிவிட்டது ஜனார்த்தனத்தின் கேஸ்... நீ போய் வா. எனக்கு வேலை இருக்கிறது...”

மேற்கொண்டு பேச முடியவில்லை டாக்டர் நாமகிரியுடன். சோர்ந்த உள்ளத்துடன் வீடு திரும்பினாள். வாசல் கேட் சாத்தியிருந்தது. ஹாரனை அடித்தாள் தோட்டக்காரனுக்காக.

அவன் வருகிறவரையில் சில வினாடிகள் காத்திருக்க நேர்ந்தது சாலையில்.

அந்தச் சில வினாடிகள் அவள் வாழ்வையே மாற்றியமைத்துவிட்டன! ஏனெனில், அவள் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது!

“மிஸ் சுகுமாரி" யாருமே உச்சரிப்பதில்லை இப்போதெல்லாம்! பின்னே...

“உங்களைத்தான் கூப்பிட்டேன், மிஸ் சுகுமாரி! வேறே ஏதாவது ஃபாரின் ஆர்ட்டிகிள்ஸ் வேண்டுமா என்று...”

திகைப்புடன், ஸ்விட்சிலிருந்து சாவியை எடுத்து விட்டுத் திரும்பினாள் ரேணுகா.

அவள் முன்பின் பார்த்திராத ஒரு சீனன் - இல்லையில்லை... இவனை எங்கோ, எப்போதோ பார்த்திருக்கிறோம்.

ரேணுகாவைப் போலவே அவனும் திகைத்துப் போனான், முகத்தைப் பார்த்ததும். ஆனால் உடனே சமாளித்துக் கொண்டு புன்னகை செய்தான். நடுத்தர வயதுக்காரனாக, இனிமையான சுபாவமுள்ளவனாக அவன் இருந்தான்.

“மன்னியுங்கள்... உங்கள் மிஸ் சுகுமாரி என்று நினைத்துவிட்டேன். நீங்கள் அவள் தங்கையில்லை? அசப்பில் ஒரே சாடையாய் இருந்ததால் கூப்பிட்டு விட்டேன்...”

அந்தச் சீனாக்காரன் திரும்பிப் போகவிருந்தான். “நில்லுங்கள்!” என்றாள் ரேணுகா அதட்டலாக. இவனை எங்கே பார்த்திருக்கிறோம்? மண்டையைக் குடைந்தது உறுத்தல். நினைவு வரவில்லை. “என் அக்காதான் மிஸ் சுகுமாரி. எதற்காக அவளைத் தேடுகிறீர்கள்?”

சீனாக்காரன் இளித்தான். "அதை நான் யாரிடமும் சொல்வதற்கில்லை. மிஸ் சுகுமாரி என்னை ரொம்பக் கோபிப்பார்கள்...”

“நடிக்கிறீர்களா, அல்லது தெரியாமல் பேசுகிறீர்களா?”

"ஏன்... என்ன...” அவன் குழப்பம் வெளிப்படையாயத் தெரிந்தது முகத்தில்.

"என் அக்கா இறந்து போய்ப் பல மாதமாகிறது. சாதாரணச் சாவு அல்ல. கொலை! கொலை செய்யப்பட்டு இறந்து விட்டாள்.”

சீனாக்காரன் பயந்து ஓட்டம் பிடிக்க நினைத்த மாதிரி திரும்பினான். ஆனால் அவன் கால்கள்தான் ஒத்துழைக்கவில்லையோ அல்லது மனச்சாட்சி தான் இடம் கொடுக்கவில்லையோ, அசையாமலே நின்றான். “மிஸ் சுகுமாரி... மிஸ் சுகுமாரி கொலை செய்யப்பட்டாரா? எவ்வளவு நல்ல பெண்! எவ்வளவு வேடிக்கையான, தமாஷான சுபாவம்...!” உண்மையான வருத்துத்துடன் முனகினான்.

ரேணுகாவின் உள்ளத்துக்குள் எதுவோ ஒன்று தூண்டியது... இவன் நல்லவன்... இவனால்தான் அக்காவைப் பற்றிய மர்மம் வெளியாகப் போகிறது... இவனைக் கேள், கேள்! விடாதே!

“ஐயா, தயவு செய்து உண்மையை என்னிடம் சொல்லுங்கள். அக்காவை நீங்கள்-?" திடீரென்று மின்னலடித்தாற்போல் நினைவு வந்தது. இவனை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று சாட்டையடி மாதிரி ஞாபகம் வந்தது. "நீங்கள்... நீங்கள்... என் அக்கா டான்ஸில் ஆபரேஷன் செய்து கொண்டபோது, டாக்டர் பாலசந்தரின் நர்ஸிங் ஹோமுக்கு வந்திருந்தீர்கள் இல்லை? அவளை ரகசியமாய் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தீர்கள் இல்லை? தயவுசெய்து சொல்லுங்கள். உங்கள் பதிலிலே பல பேரின் வாழ்வு ஊசலாடிக் கொண்டிருக்கிறது...”

அந்தக் சீனாக்காரன் அதிர்ச்சியிலிருந்து முற்றும் விடுபடவில்லை. ஆகவே பேச்சுத் தடுமாற்றமாகவே வந்தது. எனினும், ரேணுகாவுக்கு உதவி செய்யும் ஆர்வம் அதிலே தென்பட்டது. "மிஸ் ரேணுகா... நான் ஒரு ஸ்மக்ளர் கடத்தல் பொருள்களை விற்கிறவன். ஹாங்காங், மலேசியா, ஜப்பான் முதலான இடங்களிலிருந்து கேமிரா, ரேடியோ கிராம், ப்ளாஷ்லைட், டேப் ரெகார்டர் போலப் பல சாமான்களை வரவழைக்கிறேன். பணக்காரர்கள் பல பேர் எனக்கு அறிமுகம் உண்டு. நானாக அவர்களை அணுகி, ஏதாவது அயல்நாட்டுப் பொருள்கள் தேவையா என்று விசாரிப்பேன். அல்லது வந்திருக்கும் பொருள்களில் ஏதாவது வாங்கிக் கொள்கிறார்களா என்று கேட்பேன். அந்த முறையில்தான் உங்கள் அக்காவின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. நல்ல உயர்தரமான டேப் ரெகார்டர் ஒன்று வேண்டுமென்று மிஸ் சுகுமாரி என்னிடம் சொல்லியிருந்தார்...”

"டேப் ரெகார்டரா? நீங்கள் கொடுத்தீர்களா? வீட்டுக்குக் கொண்டு வரவேயில்லையே?" ரேணுகா பிறகுதான் உணர்ந்தாள் - தான் காரில் அமர்ந்தபடியும் அந்தச் சீனாக்காரர் வெளியே நின்றபடியும் பேசுகிறார் என்பதை. “காரில் உட்காருங்கள்” என்று பின் கதவைத் திறந்து விட்டாள்.

அந்தச் சீனாக்காரன் உடனே ஏறிக் கொண்டான். குரலையும் தாழ்த்திக் கொண்டான். "உங்கள் அக்கா ரொம்ப வேடிக்கையான சுபாவம் உள்ளவர் என்று உங்களுக்குத் தெரியாதா? டேப் ரெகார்டர் வந்திருக்கிறது என்று நான் சொன்னதும் வாங்கிக் கொண்டார். பணமும் கொடுத்தது விட்டார்.”

ஒரு மர்மம் தீர்ந்தது. “ஆயிரத்தைந்நூறு ரூபாய் தானே?” என்றாள் ரேணுகா. ஆமாம். ஆனால் டேப் ரெகார்டரை உங்கள் பங்களாவுக்குக் கொண்டுவரச் சொல்லவில்லை. “பலகை வாராவதியில் ஒரு புதுப் பங்களா கட்டிக் கொண்டிருந்தீர்களே, அங்கே கொண்டு வந்து ரகசியமாய்த் தரச் சொன்னார்...”

பலகை வாராவதி வீடு! சுகுமாரி கொலை செய்யப்பட்ட இடத்துக்குச் சமீபம்!... ரேணுகாவுக்கு வியர்த்தது. "எதற்காக அங்கே கொண்டுவரச் சொன்னாள் அக்கா?”

“அதுதான் சொன்னேனே, அவர் ஒரு தமாஷ் பேர்வழி. தொண்டை ஆபரேஷன் செய்து கொண்டாரில்லையா? அதிலே தன் குரல் அடியோடு கெட்டுப் போய் விட்டது என்று பாசாங்கு செய்து, உங்களையும் உங்கள் அப்பாவையும் பயமுறுத்துவதென்று அவர் ஒரு திட்டம் போட்டிருந்தார்...”

ரேணுகா கண்ணை மூடிக்கொண்டாள். தெய்வத்துக்கு அவள் உள்ளம் நன்றி செலுத்தியது மௌனமாக. ஆக, அவள் காதலன் டாக்டர் பாலசந்தர் முட்டாள் அல்ல. கெட்டிக்கார டாக்டர் தான். அக்கா பொய் சொல்கிறாள் என்று ரேணுகாமீது அவர் கோபித்ததெல்லாம் நியாயம் தான்...

சீனாக்காரனை ரேணுகா கேட்டாள்: “சரி, அவள் பாசாங்குக்கும் உங்கள் டேப் ரெகார்டருக்கும் என்ன சம்பந்தம்?”

சீனாக்காரன் புன்னகை செய்தான்: "அதிலே ரகசியமாய்த் தன் உண்மையான குரலைப் பதிவு செய்து கொள்வதாய்த் திட்டம் போட்டிருந்தார் உங்கள் அக்கா. என்ன பதிவு செய்யப் போகிறார் என்பதைக்கூட என்னிடம் சொல்லியிருந்தார். 'அட அப்பாவித் தங்கயே! அப்பாவி அப்பாவே! என் குரல் நன்றாய்த்தான் இருக்கிறது! இதோ ஒரு பாட்டுப் பாடுகிறேன் கேளுங்கள்...' என்று சொல்வாராம். பிறகு ஒரு பாட்டுப் பாடிப் பதிவு செய்து கொள்வாராம். அதை திடீரென்று வீட்டில் ஒலிபரப்பி, உங்களையெல்லாம் தூக்கிவாரிப் போடப் பண்ணப் போகிறேன் என்றார்...”

ரேணுகாவின் கன்னத்தில் நீர் வழிந்தது. அக்கா! அருமை அக்கா! உன் குறும்புத்தனமே உன் உயிருக்கு உலை வைத்து விட்டதோ?

"அதேபோல் பதிவு செய்தாளா?”

"எனக்குத் தெரியாது. ஒரு நாள் சாயந்தரம், டேப் ரெகார்டரைப் பலகை வாராவதி புது வீட்டில், பாதி கட்டியிருந்த கீழ் அறையில், ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு வந்து தரும்படி சொன்னார். அங்கே காத்திருந்தார். நானும் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டுப் போய்விட்டேன். மறுநாளே சென்னையை விட்டுக் கிளம்பும்படி ஆகிவிட்டது. இந்தியா பூராவிலும் எனக்குக் கஸ்டமர்கள் இருக்கிறார்கள். கல்கத்தா, பம்பாய். என்று சுற்றிவிட்டு நேற்றுதான் மதறாசுக்குத் திரும்பினேன்...”

கிட்டத்தட்ட மயங்கியே விழுந்து விட்டாள் ரேணுகா. திடீரென்று கேட்ட புதிய செய்திகள் அவளை ஆட்டி அலைக்கழித்தன. புது வீட்டில் டேப் ரெகார்டரைப் பெற்றுக் கொண்ட அக்கா, அதை வீட்டுக்கு எடுத்து வரவேயில்லை ஏன், வீட்டுக்கு வரவேயில்லை? பிறகு, அவள் உயிரற்ற உடலைத்தான் மகாபலிபுரத்தில் காண முடிந்தது. அப்படியானால் அந்த டேப் ரொகார்டர் எங்கே? அதில் அவள் ஏதேனும் பதிவு செய்தாளா, இல்லையா?

சுளீரென்று இன்னோர் ஞாபகம் எழுந்தது.

"அக்காவுக்குச் சிறிய டைரி ஏதேனும் கொடுத்தீர்களா?” என்று கேட்டாள்.

“ஆமாம். ஒரு சீன டைரி தந்தேன். ஹாங்காங் டேப் ரெகார்டர் கம்பெனி கொடுப்பது அது, டேப்பில் என்னென்ன பதிவு செய்திருக்கிறோம், எந்த நம்பரிலிருந்து எந்த நம்பர் வரை என்ன விஷயம் பதிவாயிருக்கிறது என்று குறித்துக் கொள்ளலாம்...”

பரபரப்புடன், “உங்கள் விலாசத்தைக் கொடுங்கள். இரண்டொரு நாளைக்கு எங்கேயும் போகதீர்கள். நான் அவசரமாய் இந்தத் தகவல்களை ஒருவரிடம் உடனே தெரிவிக்க வேண்டும்” என்றாள் ரேணுகா.

அவளல்ல, அவள் ஓட்டி வந்த கார்தான் மணிக்கு ஐம்பது மைல் வேகத்தில் பறந்தது. ஆனால் அவளே அப்படி ஓடிவந்த மாதிரி மேல் மூச்சுக் கீழ்மூச்சு வாங்கியது. ரமணன் வீட்டுக்கு எதிரே வண்டியை நிறுத்தினாள். ரமணனின் வீட்டுப் படிகளைத் தாவியேறினாள். மாடியை அடைந்தாள்.

அறைக்குள் லேசான இருட்டுப் பரவியிருந்தது. “ரமணன்!” என்று உள்ளே நுழைந்தாள் ரேணுகா.

அவன், அவளுக்கு முதுகைக் காட்டினாற்போல் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

"ரமணன் அக்காவைக் கொன்றை கொலைகாரனைக் கண்டு பிடித்துவிட்டேன்! அந்தப் பாவி நஞ்சுண்டன் தான் என் அக்காவைக் கொலை செய்திருக்கிறான். உடனே போங்கள் பலகை வாராவதிக்கு! நாங்கள் கட்டிக் கொண்டிருக்கிறோமே புது வீடு, அங்கே போய்ப் பாருங்கள்! கீழ் அறையில் டேப் ரெகார்டர் ஏதாவது அகப்படுகிறதா என்று தேடுங்கள்! நஞ்சுண்டன்தான் கொலை செய்தான் என்பதற்கான ஆதாரம் நிச்சயமாய் அங்கே...”

கழுத்தை முறித்த மாதிரி ரேணுகாவின் பேச்சு நின்றது. அவன் உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலி மெல்ல அவள் பக்கம் திரும்பியது. முதுகைக் காட்டிக் கொண்டிருந்த அவன் முகத்தையும் காட்டினான்.

“ரொம்ப நன்றி, ரேணுகா.”

ஐயோ! அவன் குரல்

“நீயா!" என்று நடுங்கினாள் ரேணுகா. அவள் ரத்தம் உறைந்தது.

"ஆமாம்! நானேதான்” என்று ஒரு பயங்கரச் சிரிப்புடன் அவளை நெருங்கி வந்தான் நஞ்சுண்டன். “ஒரு சீனாக்காரனுடன் நீ பதற்றமாக வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும் இங்கே தான் வருவாயென்று ஊகித்தேன். என்ன பேசினாய் என்பதைச் சிரமமில்லாமல் இங்கே தெரிந்து கொண்டுவிடலாம் என்று முடிவு பண்ணித்தான் முன்னால் வந்து காத்திருந்தேன்...”

கப்பென்று அவள் கையை பிடித்து முறுக்கினான் நஞ்சுண்டன். ரத்தக் காட்டேரி போல் அவன் முகம் சிவப்பு நெருப்பாகப் பளபளத்தது. குரூர நகை அவன் முகத்தைக் கோரமாக்கியது. “அக்காவைக் கொலை செய்தாலும் தங்கையை மணக்கலாம் என்று நினைத்திருந்தேன். நடவாது போலிருக்கிறது. அங்கே ரமணனையும் அனுப்பியாயிற்று. அக்கா போன வழியிலேயே தங்கையையும் அனுப்ப வேண்டியதுதான்!” என்றான் அவன்.

வீலென்று கத்த நினைத்தாள் ரேணுகா. ஆனால் தொண்டையிலிருந்து சத்தம் எழும்ப மறுத்தது. நஞ்சுண்டன் அவளைப் பக்கத்து அறையில் தள்ளி, கயிற்றினால் கட்டினான் கைகால்களை... ஞாபகமாக, வாயிலும் துணியை அடைத்தான். "மூன்றாவது கொலையைச் செய்ய இப்போது நேரமில்லை. முதல் கொலைக்கு ஏதோ தடயம் இருப்பதாகச் சொன்னாயே, அதை முதலில் அழித்துவிட்டு வருகிறேன். வந்து, உன்னைச் சாவகாசமாகச் சாகடிக்கிறேன்!”

தடதடவென்று அவன் இறங்கிச் சென்றான்.

நஞ்சுண்டன் வெளியேறிச் சில நிமிடங்கள் கழிந்திருக்கும். கட்டிலின் கீழிருந்து ஒரு பயந்த குரல் கேட்டது.

"போய்ட்டானா அயோக்கியப் பயல்? எங்க ஐயா மட்டும் இருந்திருக்கணும்! வாடு வீம்ப்பு தோலுரி தோன்சேஸ்துடு!”

கையும் காலும் கட்டப்பட்டு, வாயில் அடைத்த துணியுடன் துவண்டு கிடந்த ரேணுகா ஆச்சரியத்துடன் திரும்பினாள். ரமணனின் ஆந்திர வேலைக்காரன் இருப்பானே, அவன் குரல் மாதிரி அல்லவா இருக்கிறது!

அவனேதான். கட்டிலின் கீழிருந்து வெளியே வந்தான் மெல்ல முகத்திலும் சட்டையிலும் ஒட்டிக் கொண்டிருந்த தூசிகளைத் தட்டி விட்டான். ரேணுகாவின் அருகில் வந்து, அவள் கட்டுக்களை அவிழ்க்காலானான்.

"அந்த டாக்டரம்மா வூட்டுக்குப் போயிருந்தேன். ஒரு பெரிய நீயூஸ் தெரிஞ்சுது. ஓடிவந்தேன். எங்க ஐயாகிட்டே சொல்ல. அவரைக் காணோமேன்னு நினைச்சிட்டிருக்கிறப்போ, அந்த நஞ்சுண்டன் வந்தது தெரிஞ்சுது. எக்கடமான மண்டலோ நாலுடு வேசேஸ்துடோ இனி பயந்து, கட்டில் கீழேயே ஒளிஞ்சுக்கிட்டேன்” என்று விளக்கினான் அப்பாவு.

ரேணுகாவுக்கு அவனுடைய வீர வரலாற்றில் அக்கறை ஏற்படவில்லை. “டாக்டரம்மா வீட்டிலே பெரிய நியூஸ் என்றாயே, என்ன அது?” என்றாள் ஆர்வம் துடித்தெழ.

“அதுவா... நான் சொல்வேன்?”

“அப்பாவு, தீபாவளிக்கு உனக்கு என்னென்னவோ வாங்கித் தர நினைத்திருக்கிறேன். அப்புறம்...”

அப்பாவு வாயெல்லாம் பல்லானான். “என்ன தெரியுமா, அம்மா? அந்தச் கிழவர் இல்லே, ஜனார்த்தனம், அவரை டாக்டரம்மா பாக சொஸ்தம் சேசினாரு. இன்னைக் காலையிலே கிழவர் பேசினாரு... 'எங்கே என் மருமான் டாக்டர் பாலசந்தர்?'னு நல்லா கேட்டார்...”

கண்களை மூடிக் கடவுளுக்கு நன்றி செலுத்தினாள் ரேணுகா... "அப்புறம்?”

"டாக்டரம்மா பக்குவமாய்க் கேட்டாங்க, 'உங்க மருமான் அடிக்கடி எங்கேயோ ரகசியமாய்ப் போகிறாரே, எங்கே அது?' அப்படின்னு. கிழவர் கொஞ்ச நேரம் யோசனை பண்ணினாரு. அப்பாலே, 'அது... அவன் அம்மாவை என் தங்கச்சியை பார்க்கத்தான் அப்படீன்னாரு.'

“அம்மாவைப் பார்க்கவா! அந்த அம்மாள் எங்கே இருக்கிறார்களாம்?"

"பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்"

“என்ன!”

"ஆமாங்க. பதினைஞ்சு இருபது வருசமாய்ப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே இருந்து வர்றாங்களாம் அந்த அம்மா. அதை ஒரு குடும்ப ரகசியமாய் வைச்சுக் காப்பாத்திட்டிருக்கிறாங்களாம். டாக்டரும் கிழவரும் மாறி மாறி ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்துக்கிட்டிருக்கிறாங்களாம். வால்லு சச்சி போதானு ஆனாக்கா ரகசியன்னி பையிட்டா சொப்பருண்டா!”

ரேணுகா கண்ணைத் துடைத்துக் கொண்டாள். பாலசந்தர்! பாலசந்தர்! இந்த ஒரு ரகசியத்தைக் காப்பாற்றுவதற்காகவா, கொலைக் குற்றத்தைக்கூட ஏற்கத் துணிந்தீர்கள்? இப்போது எனக்கு எல்லாம் புரிகிறது. சுகுமாரி கொலை செய்யப்பட்ட தினத்தன்றும் நீங்கள் உங்கள் அம்மாவைப் பார்ப்பதற்காக மனநோய் விடுதிக்குச் சென்றிருக்கிறீர்கள்! அதை என்னிடம் கூடவா சொல்லியிருக்கக் கூடாது. பாலசந்தர் பாலசந்தர்! உங்கள் அம்மா மனநிலை சரியில்லையென்று தெரிந்தால் நான் என் காதலை உதறிவிடுவேனென்றா அஞ்சினீர்கள்? அவ்வளவு பலவீனமாகவா நம் காதல் இருக்கிறது! இல்லை பாலசந்தர், இல்லை...!

அவள் எண்ணத்தின் வேகத்தை தடுத்தது டெலிபோனின் அழைப்பு.

குஷியாய்ச் சீட்டி புறப்பட்டது தாவூதின் வாயிலிருந்து. தாம்பரம் டிரங்க் சாலையில் அவன் கால்கள் துள்ளி நடை போட்டன.

அவனுடைய சீட்டியையும் உற்சாகத்தையும் பார்க்கிறவர்கள், தாங்க இயலாத நோயொன்றை அவன் தாங்கிக் கொண்டிருக்கிறானென்று சற்றேனும் நம்ப முடியுமா? முடியாது. கறுப்பும் அழுக்குமாய் ஒரு போர்வை போர்த்துக் கொண்டிருக்கிறானே, அதை அகற்றிப் பார்த்தால்தான் தெரியும்.

ஆனால் அவன் இன்று கவலையில்லாதிருப்பதற்கு விசேட காரணமும் உண்டு. லின் டாங்கிடம் கைப்பற்றிய மருந்து அவன் பாக்கெட்டில் இருக்கிறதே! முன்பு ரமணன் சிபாரிசு செய்திருந்த ஒரு டாக்டர் சாதா மருந்துகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். இப்போது அசல் மருந்து அகப்பட்டு விட்டது. அதை அவரிடம் கொடுத்துப் போடச் சொல்ல வேண்டியதுதான்.

அந்த நோக்கத்துடன், பல்லாவரத்திலுள்ள டாக்டரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான் தாவூது. சீக்கிரத்தில் ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். ரமணன் சாரிடம் தன் வீரப் பிரதாபங்களையெல்லாம் விவரிக்க வேண்டும். இந்த ஆசையுடன் பல்லாவரத்தை அடைந்தவனை, தோல்விதான் வரவேற்றது. டாக்டர் வீடு பூட்டிப் பட்டிருந்தது. வாசலில் இருந்த போர்டைக் கூடக் காணோம்.

எதிர் சாரியிலிருந்த லாண்டிரியில் சென்று விசாரித்தான். கடைக்காரர் நல்லவர். “என் தம்பி, டாக்டர் இரண்டு வருஷமாய்க் குரோம்பேட்டையில் சொந்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறாரே உனக்குத் தெரியாதா? வீடு கட்டி முடிந்துவிட்டது. போனவாரம் அங்கே குடியோ போப் விட்டார்” என்றார்.

“ஐயா, அந்தப் புது விலாசத்தைக் கொஞ்சம் கொடுங்கள்.” என்று கெஞ்சினான் தாவூது. லாண்டிரிக் காரர் அண்டை அயலில் விசாரித்துச் சொன்னார். “பனங்காடு முதல் தெரு, கடைசி வீடு.”

மீண்டும் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு குரோம்பேட்டைக்கு நடையைக் கட்டினான் அந்த ஷூ பாலிஷ் சிறுவன். குரோம்பேட்டையை அவன் அடைந்தபோது பிற்பகல் நேரமாக இருந்தது. மெயின் சாலையிலிருந்து கொஞ்சம் பிரிந்தவுடனேயே 'பனங்காடு தெரு' என்று பெயர்ப் பலகை அவன் கண்ணில் பட்டது. தன் அதிர்ஷ்டத்தைத் தானே மெச்சிக் கொண்டு அதன் வழியே விரைந்தான். ஆனால் இங்கொன்று அங்கொன்றாக இருந்த வீடுகள் குறைந்து கொண்டே போய், கடைசியில் நடமாட்டமே இல்லாத பாதையாகி விட்டது.

தாவூது திகைத்தான். இந்த மாதிரி இடத்திலேயா வீடு கட்டிக் கொண்டிருப்பார் டாக்டர்?

அப்போதுதான் அந்தத் தெருவின் சந்து முனையில் இருந்து இன்னொரு பெயர்ப் பலகையையும் பார்த்தான் தாவூது. சிரிப்பு வந்தது. 'பனங்காடு இரண்டாம் தெரு' என்றல்லவா எழுதியிருந்தது. அங்கேயே சரியாய்க் கவனிக்காமல் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். டாக்டரின் புது வீடு உள்ள முதல் தெரு பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கும்.

திரும்ப நினைத்த தாவூது நின்றான். சாலையோரமாகக் கிடந்த ஒரு புதுக் கைக்குட்டை அவன் கவனத்தை இழுத்தது. ஒரு சிறிய செடியின் இடுக்கிலே படபடத்துக் கொண்டிருந்தது. அது. குனிந்து எடுத்தான். இந்த மாதிரி கட்டம் போட்ட லுங்கி கைக்குட்டை... வியப்புடன் ஓரத்தைப் பார்த்தான். 'ஆர்' என்று சலவைக் குறி இருந்தது. 'ஆர்' என்றால் ரமணன். அவன் மனம் படபடத்தது. கைக்குட்டையை முகர்ந்து பார்த்தான். வேர்க்கடலையின் மணம் வீசியது! அப்படியானால் சந்தேகமில்லாமல் ஸாரேதான்!

தாவூது சுற்றுமுற்றும் பார்த்தான். இங்கே எப்போது, எதற்காக ரமணன் சார் வந்தார்? தொலைவில் ஒரு பாழடைந்த பங்களா அல்லவா தெரிகிறது.

ஓட்டமும் நடையுமாய் அந்த இடத்தை அடைந்தான். ஈ காக்கையைக் காணோம். இடிந்த வராந்தாப் படியில் ஏறி உள்ளே சென்றான். ஹாலையடுத்த பழைய கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால்... ஆனால்... யாரோ முனகுகிற மாதிரி சத்தம் காதில் விழுகிறதே? உற்றுக் கேட்டான். ஆமாம். முனகல் ஒலிதான். சாவித் துவாரத்தின் வழியே பார்த்தான். இருட்டில் ஏதோ உருவம் அசைகிற மாதிரி இருந்தது.

“சார்! சார்!” என்று கத்தினான். “நான்தான் சார்! தாவூது!”

“ஊம்...” என்று பதில் வருவது இப்போது துல்லியமாகக் கேட்டது. "கதவைத் திற... எப்படியாவது...”

அது போதாதா தாவூதுக்கு? பூட்டின் அளவையோ கதவின் பருமனையோ பொருட்படுத்தாமல் ஒரு மோது மோதினான். புண்பட்ட மேனி நகர வேதனையில் துடித்தது. ஆனால் கதவு கொஞ்சம் திறந்து கொடுக்கிற மாதிரி இருந்தது. மறுபடி மோதினான். எதுவோ துள்ளி விழுந்தது. திடுக்கிட்டான் தாவூது. விழுந்தது, அவன் அரும்பாடு பட்டுப் பெற்ற ஊசி மருந்துதான்! உடையவில்லை. உருண்டு சென்று கதவுக்கும் தரைக்கும் மிடையில் இருந்த இடுக்கில் வசமாகச் சிக்கிக் கொண்டது!

கைக்குக் கிடைத்த குச்சியினாலும் விரலாலும் அதை எடுக்க முயன்றான். வரவில்லை.

“திறந்தாயா - தாவூது?”

ரமணனின் குரல் கேட்டது. தாவூது, எழுந்து கொண்டான். ஊசி மருந்து குப்பி இசகுபிசகாகச் செருகிக் கொண்டிருந்தது. கதவை இப்படி நகர்த்தினாலும் சரி, அப்படி நகர்த்தினாலும் சரி, குப்பி தரையோடு நசுங்குவது நிச்சயம். மருந்து மண்ணில் கலக்க வேண்டியதுதான்.

தாவூது புன்சிரிப்புடன் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டான். சாரைக் காப்பாத்தறதுதான் இப்ப முக்கியம். இந்த மருந்து இல்லாமல் என் உயிர் போவதானால் போயிருக்கட்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

மேலும் பலமாக மூன்று நான்க முறை மோதினான் நினைத்தபடியே, மருந்துக் குப்பி நரநரவென்று நசுங்கி மருந்துத் திரவம் மண்ணோடு மண்ணாக மாறியது சிறிதும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தாவூது தன் கருமத்திலேயே கண்ணாயினான்.

மேலும் நாலு மோதலில், பூட்டு பட்டென உடைந்தது. கடைசி முறையாக, ஏக்கத்துடன் மருந்துப் புட்டியின் தூள்களைப் பார்த்துவிட்டு, உள்ளே ஓடினான் தாவூது.

தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டிருந்தான் ரமணன். “தாங்ஸ் தாவூது, ரொம்பத் தாங்ஸ்.” தேதியைக் காட்டும் கடியாரத்தைப் பார்த்தான். ஒன்றரை நாட்களுக்குமேல் இங்கே அடைந்தா கிடந்திருக்கிறோம்! ஓர் உசுப்பு உசுப்பிக் கொண்டான் தன்னை பாதி சக்தி திரும்பி விட்டது.

திறந்த கதவை நோக்கி ஓடினான். உடைந்த சீசாத் தூள்கள் கண்ணில் பட்டன. "என்ன தாவூது இது?"

"அது ஒண்ணுமில்லே, சார். உங்க வேலையைக் கவனியுங்க" என்றான் தாவூது.

இரமணன் தெருவுக்கு சுதந்திரக் காற்றுக்குமாக வாசலை நோக்கி ஓடினான். கிட்டத்தட்ட அரைமணி ஓடிய பிறகு மெயின் சாலை வந்தது. ஒரு செளகார்க்கடையில் டெலிபோன் இருப்பது அவன் கண்ணில் பட்டது. பாண்ட் பையைத் தடவிப் பார்த்தான். நல்ல வேளை, பைத்திய வேடத்தின் நடுவேயும் கொஞ்சம் சில்லறை போட்டுக் கொள்ள மறக்கவில்லை.

காசை முன்னால் தந்துவிட்டு, டயலைப் பின்னால் செய்தான்.

“அப்பாவு! நான்தான் ரமணன்...”

“நான்தான் ரேணுகா!” என்று பதில் அவனைத் தூக்கிவாரிப் போட வைத்தது. “ரேணுகாவா?” என்றான் திகைத்தவனாக.

"ஆமாம். நீங்கள் என்று நினைத்து, இங்கேயிருந்த நஞ்சுண்டனிடம் ஒரு பெரிய ரகசியத்தைச் சொல்லி விட்டேன். அவன் பலகை வாராவதி புது வீட்டுக்குப் போயிருக்கிறான். நீங்கள் உடனே அங்கே போங்கள்! கீழ் அறையில், எங்கேயோ ஒரு டேப் ரெகார்டர் இருக்கலாம். அக்காவின் கொலை பற்றிய ரகசியம் அதிலே இருக்குமென்று தோன்றுகிறது...”

மேற்கொண்டு அவள் பேசுமுன் ர்ர்ர்ர் என்ற டயல் ஒலி கேட்டது. டெலிபோனை வைத்துவிட்டு ரமணன் பறந்து விட்டான். டாக்ஸியில் சைத்தாப்பேட்டையை அடைந்து, ஒளித்து வைத்திருந்த மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்படச் சில நிமிடங்களே பிடித்தன அவனுக்கு.

பாதி கட்டப்பட்டிருந்த அந்த வீட்டை நின்று ஆராய்ந்தான் ரமணன். இருட்டி விட்டதால் அக்கம் பக்கத்தில் நடமாட்டத்தைக் காணோம். சுற்றுப் புறத்தைக் கவனித்தான் நிசப்தமாயிருந்தது.

பூனைபோல் நடந்து, வீட்டை நெருங்கினான். கீழ்ப் பகுதியிலுள்ள அறைகள் அனேகமாய்ப் பூர்த்தி அடைந்திருந்தன. மேல் மாடிகள் கட்டப்பட்டு வருவதால் சாரங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மூன்று அல்லது நான்கு அடுக்குகள் உள்ள கட்டிடமாக அதை அமைக்கக் குழந்தைப் பாண்டியன் தீர்மானித்திருந்தார். ஆகவே, மூங்கில் சாரங்களின் உயரம் தலை சுற்றவைக்கும்படி ஓங்கியிருந்தன. வீட்டுக்குள் நுழைந்தான் ரமணன். சட்டென நின்றான்.

மிதியடிகளின் தடம் தெரிந்ததே காரணம். காலையில் பெய்திருந்த மழையினால், ஈரச் செருப்புக்களின் சுவடு நன்கு பதிந்திருந்தது. ஆண் செருப்பு என்றும் தெரிந்தது. ஆனால் அதல்ல ரமணனின் திகைப்புக்குக் காரணம்.

சற்று முன்தான் பதிந்தாற்போல, ஈரத்துடன் இருந்தன அந்தக் காலடிகள்! அதாவது, கொஞ்சம் முன்பு தான் யாரோ வந்திருக்க வேண்டும்.

நஞ்சுண்டன் முந்தி விட்டான்! ஏமாற்றம் ரமணனின் உள்ளத்தைக் கப்பியது. எதற்கும் பார்க்கலாமென்று, காலடிச் சுவடுகளைக் கொண்டு, இடப்பக்கத்து அறைக்குள் புகுந்தான். இங்கேதான் அந்த டேப்ரெகார்டர் இருந்திருக்க வேண்டும்.

எங்கே?

சுவரிலே உள்ள பெரிய அலமாரி திறந்து கிடந்தது. காலியான அலமாரிதான். ஆனால் கீழ்த்தட்டிலுள்ள பலகையொன்று பெயர்க்கப்பட்டிருந்தது. அங்கே

டேப் ரெகார்டர் மெஷின் திறந்து கிடந்தது. புத்தம் புதிய, அயல்நாட்டு மேக். எனினும் தூசி படிந்திருந்தது. ஆர்வத்துடன் அதை நெருங்கிப் பார்த்தான் ரமணன். அடுத்த ஏமாற்றம் காத்திருந்தது.

டேப்பை மாட்டுகிற இடம் காலியாயிருந்தது. பதிவாகியிருக்கக்கூடிய நாடாவைக் கழற்றி எடுத்துச் சென்றுவிட்டான் நஞ்சுண்டன்

ஒரே பாய்ச்சலில் வாசலுக்கு வந்தான் ரமணன். சுடுகாட்டு அமைதி நிலவிக் கொண்டிருந்தது அங்கே. எங்கேயோ ஒரு காக்கை கத்துவதைத் தவிர வேறு ஒலியில்லை. இருந்தும் ரமணன் அசையாமல் நின்று, செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். நஞ்சுண்டன் எங்கேயும் போய்விடவில்லை, இங்கே எங்கேயோதான் இருக்கிறான் என்று ஏதோ ஓர் உணர்வு அவனுக்குச் சொல்லியது.

அதே, உணர்வுதான் அவனை எச்சரித்திருக்குமோ?

சரேலென ஓரடி பின்வாங்கிக் கொண்டான் ரமணன். படீரென்ற ஓசையுடன் தரையில் வேகமாக விழுந்து நாலாக உடைந்து தெறித்தது ஒரு முழுச் செங்கல்! மயிரிழை தவறியிருந்தால் ரமணனின் மண்டை சுக்கு நூறாகியிருக்கும்!

குபீரெனச் சாரத்தின் மேல் தாவினான் ரமணன். ஆம். சற்று உயரத்தில் ஓர் உருவம் சரசரவென்று ஓடுவது அவன் கண்ணில் தென்பட்டுவிட்டதே காரணம்.

மேலே ஏற ஏற, அந்த உருவம் நஞ்சுண்டன்தான் என்பது புரிந்துவிட்டது. ரமணன் வீட்டை நெருங்கி வரும் போதே பார்த்துவிட்டு, சாரத்தின் மீதேறிப் பதுங்கியிருந்திருக்கிறான். ஒரே கல்லில் தீர்த்து விட முடியுமா என்று பரீட்சையும் பண்ணிப் பார்த்திருக்கிறான்.

கூவினான் நஞ்சுண்டன்: “டேய்! உயிர்மேல் ஆசை இருந்தால் பின்னால் வராதே.”

ரமணன் சிரித்துக் கொண்டே பதிலளித்தான்: “உன் உயிர்மேல் எனக்கு ரொம்ப ஆசை, நஞ்சுண்டன்! அதை எடுத்துக் கொள்ளத்தான் வருகிறேன். இரு!”

மூங்கில் கம்புகளைக் குரங்கு போல் பிடித்துத் தாவித் தாவி ஏறினான் ரமணன். தப்பித் தவறி, கீழே தரையை நோக்கிப் பார்வை செல்லும்போது அவன் தலை சுற்றியது. அதே சமயம் மேலே மேலே போய்க் கொண்டிருக்கும் நஞ்சுண்டன், அங்கங்கே பாதி கட்டிய இடங்களிலிருந்து கற்களைப் பெயர்த்து வீசிக் கொண்டேயிருந்தான். டக்டக் கென்று தலையை வளைத்துக் கொண்டு தப்பினாலும், முதுகிலும் தோளிலும் கையிலும் - அம்மம்மா!

திடீரென்று நஞ்சுண்டன் ஓடுவதை நிறுத்தி விட்டான். அபாயகரமாக ஓரே கையால் மூங்கிலைப் பிடித்தவாறு ஆடிக் கொண்டிருந்தான் அவன். மறுகையால் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தான். “ஐயோ! என் கண்! என் கண்!” என்று அவன் வீரிடுவது ரமணனின் காதில் விழுந்தது.

“என்ன ஆயிற்று உன் கண்ணுக்கு?" ரமணன் இரைந்து கேட்டான்.

"தெரியவில்லை! கண்குருடாகிவிட்டது! ஐயோ! ஒன்றுமே - ”

மேலே ஒரு வார்த்தையும் பேசுமுன் நஞ்சுண்டனின் கை, சாரத்தில் பிடித்திருந்த பிடிப்பைத் தவறவிட்டது. கால், சாரத்திலிருந்த பிணைப்பை நழுவவிட்டது.

வீலென்ற மரணக்கூச்சலுடன் தலை குப்புற விழுந்தான் நஞ்சுண்டன் வெகு உயரத்திலிருந்து. ஏறியதைக் காட்டிலும் வேகமாக இறங்கினான் ரமணன். பார்த்தான். ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தான் நஞ்சுண்டன். மண்டை சிதறியிருந்தது. உயிர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆ! என்ன அது!

சற்றுத் தள்ளி, பல சிதறல்களாகக் கிடந்தது வைர முருகன்.

பொறுக்கக்கூடிய பகுதிகளாகக் கிடப்பவற்றை எடுத்துக் கொண்டான். தனித் தனி வைரங்களாக எவ்வளவு சிதறியிருக்குமோ! இருட்டில் தேடமுடியாது. போலீசார் தான் வந்து கண்டெடுக்க வேண்டும்.

இன்னும் சிறிது தூரத்தில், டேப் ரெகார்டரின் நாடாச் சுருள் ரிப்பன் போல் பிரிந்து கிடந்தது. அதையும் எடுத்துக் கொண்டான்.

அலங்கோலமாகக் கிடக்கும். நஞ்சுண்டனை ஒரு முறை பார்த்தான். பரிதாபப்பட வேண்டும் போல் தோன்றியது. படவில்லை.

மறுநாள் காலை பத்து மணி சுமாருக்கு, குழந்தைப் பாண்டியனின் பங்களா பல விதங்களில் அமளிப்பட்டுக் கொண்டிருந்தது.

வீட்டின் பின்புறத் தோட்டத்தில் ஒரு போலீஸ் படை நீலாவைப் புதைத்த இடத்தில் தோண்டிக் கொண்டிருந்தது. ரமணன் நடுநாயகமாய் நின்று கொண்டிருந்தான்.

குழந்தைப்பாண்டியனின் அறையில் அவருடைய கட்டிலருகே அமர்ந்திருந்தார்கள் ரேணுகாவும் டாக்டர் பாலசந்தரும். இருவர் கைகளும் ஒன்றையொன்று லேசாகத் தொட்டுக் கொண்டிருந்தன. கண்கள் ஆசையுடன் ஒன்றையொன்று கவ்வின. ரேணுகாவின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது. ஏன் இருக்காது? அவளல்லவா அதிகாரிமேல் அதிகாரியாகப் பேட்டி கண்டு, ராத்திரியோடு ராத்திரியாக பாலசந்தர் விடுதலையாவதற்கு வழி செய்தவள்!

குழந்தைப் பாண்டியனின் நோயாளி முகத்தில் இன்றுதான் சற்று ஆரோக்கியம் தென்பட்டது. ஆனால் கவலைக் கோடுகள் அடியோடு ஒழிந்து விடவில்லை. "பாலசந்தர்! இன்று காலை டாக்டர் நாமகிரி போன் செய்து, என்ன சொன்னார் தெரியுமா?” என்றார்.

"என்ன சார் சொன்னார்கள்?” என்றான் பாலசந்தர்.

“அவரால்தான் உங்கள் அமெரிக்கப் படிப்புக் கெட்டு விட்டதாம். தானே முயற்சியெடுத்து, அந்தத் தவறைச் சரிசெய்துவிடப் போகிறேன் என்றார்கள். ஆனால் நான் ஒரு நிபந்தனை போடப்போகிறேன்.”

"என்ன நிபந்தனை சார்?"

“ரேணுகாவின் கழுத்தில் முடிச்சைப் போட்டு விட்டுத்தான் நீங்கள் பிளேன் ஏற வேண்டும்! இல்லா விட்டால் விடமாட்டேனாக்கும்!”

அவர்கள் சந்தோஷச் சிரிப்பொலியின் மத்தியில் ரமணன் உள்ளே வந்தான்.

“நீ அந்தக் கோரத்தை வந்து பார்க்காமல் இருந்ததே நலம்", என்று ரேணுகாவிடம் கூறிவிட்டு, குழந்தைப் பாண்டியனின் அருகில் அமர்ந்தான். "போலீசார் எடுத்துப் போய்விட்டார்கள், சார். அதிலே உங்களுக்கு ஒரு முக்கிய சம்பந்தம் இருக்கிறது.”

"நான்தானே கொலைகாரன்!" என்றார் மனம் நொந்த குழந்தைப்பாண்டியன்.

"அதுதான் இல்லை. நீங்களல்ல கொலைகாரன் என்று ருசுவாகிவிட்டது!" என்றான் ரமணன். “நீலாவின் உடலில், வலது காலில் ஒரு தோட்டாக் காயம் இருக்கிறது. அது தான் நீங்கள் சுட்டது. இன்னொரு தோட்டாக் காயம் மார்பில் இருக்கிறது.”

"இன்னொன்றா! நான் ஒரு தோட்டாதானே சுட்டேன்!” என்று ஆச்சரியப்பட்டார் குழந்தைப் பாண்டியன்.

“அதுதான் விசேடம். மார்புக் காயம்தான் மரண காயம். நீங்கள் சுட்டதும் கீழே விழுந்தவளை நெருங்கிப் பரிசோதித்தான். அல்லவா நஞ்சுண்டன்! அப்படிப் பாசாங்க செய்தபடியே, தான் வைத்திருந்த இன்னொரு துப்பாக்கியை நீலாவின் மார்பில் வைத்து, சத்தமில்லாத படி இன்னொரு தடவை சுட்டுக் கொலை செய்திருக்கிறான்!”

"பாவி! பாவி!” என்றார் குழந்தைப்பாண்டியன் அவர் நெற்றியில் முத்திட்ட வியர்வையைப் புடவையினால் ஒற்றினாள் ரேணுகா.

“அப்படியானால் இது இரண்டாவது கொலை! முதல் கொலையைப் பற்றி - சுகுமாரியின் கொலை பற்றி - திட்டமாகத் தெரிந்துவிட்டதா?” என்று பாலசந்தர் கேட்டான்.

ரமணன் வெளியே சென்று டேப் ரெகார்டரையம் ஒரு நாடாச் சருளையும் கொணர்ந்து வைத்தான். நாடாவை மாட்டி, ரெகார்டரை இயக்கினான்.

முதல் சில நிமிடங்களுக்கு ஐரோப்பிய சங்கீதம் கேட்டது. சீன மொழியில் ஏதேதோ அறிவிப்புக்கள் ஒலித்தன. “கம்பெனி ரெக்கார்டரை விற்கும்போது, அவர்களே பதிவு செய்து தரும் வழக்கமான பாடல்கள்" என்று ரமணன் விளக்கினான். ரெகார்டரில் 128 என்ற நம்பர் வந்ததும் திடீரென்று தமிழக் குரல் கேட்டது!

"ஓ, நீயா?" - இது சுகுமாரியின் இயற்கையான, இனிமையான குரல்.

“என் ஆச்சரியமாயிருக்கிறதா? புது வீடு கட்டுகிறார்களே, பார்க்கலாம் என்று வந்தேன்.” - இது நஞ்சுண்டனின் குரல்.

“உன் திருட்டுத் தனங்களை ரேணுகாவுடனேயே நிறுத்திக் கொள். என்னைப் பின்தொடர்ந்து வர வேண்டாம்.”

“என் திருட்டுத்தனமா! ஹாஹ்ஹா! மிஸ் சுகுமாரி! இப்போது தாங்கள் தங்கள் சொந்தக் குரலில், இனிமையாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா? உங்கள் மோசடி வெளிப்பட்டு விட்டது. மிஸ் சுகுமாரி!”

டேப் ரெகார்டரில் சில வினாடிகள் நிசப்தம்.

“ஏன் திகைத்துவிட்டீர்கள்? பயப்படாதீர்கள். நான் ஒருவரிடமும் சொல்லமாட்டடேன்... ஏதோவொரு பெரிய மோசடிக்காக நீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்கள். எனக்குரிய கூலியைக் கொடுத்தால் அந்த மோசடிக்கு நானும் ஒத்துழைப்பேன்.”

“என்ன உன் கூலி?”

“வைர முருகன்!"

"என்னது!"

“வைர முருகன் என்றேன்!”

“கெட் அவுட் யூ ராஸ்கல்!”

“சுகுமாரி! நாவை அடக்கு.”

“இப்போது போகிறாயா இல்லையா?”

டக் டக்கென்று நஞ்சுண்டன் வெளியேறும் சத்தம் கேட்டது. ரெகார்டில் 172வது எண் வந்தது. பேச்சு முடிவடைந்துவிட்டது.

பெட்டியை மூடினான் ரமணன்.

“எனக்குக் குழப்பமாயிருக்கிறது" என்றார் குழந்தைப் பாண்டியன். பாலசந்தரம் ரேணுகாவும் ரமணனின் முகத்தை ஆவலுடன் நோக்கினார்கள்.

“குழப்பம் எதுவுமில்லை. டேப் ரெகார்டரில் தன் குரலைப் பதிவு செய்து கொள்வதற்காக எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருக்கிறாள் சுகுமாரி. அப்போது யாரோ வருவது தெரியவே அலமாரிக்குள் வைத்துச் சாத்தி விட்டாள். ஆனால் ஓடும் ரெகார்டரை நிறுத்தவில்லை. கதவும் லேசாய்த் திறந்திருக்கிறது. உயர்ந்த ரக ரெகார்ட் ராகையால் மொத்த உரையாடலையும் பதிவு செய்து கொண்டே இயங்கியிருக்கிறது. சுகுமாரி கோபத்துடன் கத்தியதும், அக்கம்பக்கத்தில் வேறு ஆட்கள் இருக்கக் கூடும் என்று பயந்து நஞ்சுண்டன் போய்விட்டடான். பிறகுதான், டேப் ரெகார்டரில் அது பதிவாகியிருப்பதை சுகுமாரி கவனித்திருக்கிறாள். நஞ்சுண்டனின் சாயத்தை அது வெளுக்கட்டும் என்று அலமாரியின் கீழ்த்தட்டில் அதை மறைத்தாற்போல் எப்படியோ வைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டிருக்கிறாள். பிற்பாடு அதை யாரும் கவனிக்காமலே இருந்துவிட்டார்கள். அது அனேகமாகக் கட்டி முடிந்துபோன அறைதானே! வெளியே வந்தவளை, நஞ்சுண்டன் ஒளிந்திருந்து மடக்கிவிட்டான். வைர முருகனைக் கேட்கிற அளவுக்குப் பேரம் பேசிவிட்டதால் இனி அவளை உயிருடன் விடுவது ஆபத்து என்று தீர்மானித்துக் கொலை செய்துவிட்டான். அருகிலிருந்து ஓர் அனாதைப் படகிலே பிரேதத்தைப் போட்டுவிட்டுப் போய்விட்டான். அவ்வளவுதான் விஷயம்.”

சொல்லி முடித்தான் ரமணன். இறந்தவளின் நினைவு ஒரு சுமையான மெளனத்தை ஏற்படுத்தியது அந்த அறைக்குள் குழந்தைப்பாண்டியன் தன் மகளைப் பற்றி, ரேணுகா தன் தமக்கையைப் பற்றி, பாலசந்தர் தன் பேஷண்டைப் பற்றி, எண்ணுவதிலே மூழ்கியிருந்தனர். வெளியே காரின் ஹாரன் ஒலி கேட்டது.

"டாக்டர் நாமகிரி வருகிற நேரம்” என்றாள் ரேணுகா.

குழந்தைப்பாண்டியன் நினைவு வந்தவராக, “வைர முருகன் என்ன ஆயிற்று?” என்று ரமணனை வினவினார்.

"எல்லாத் தூள்களையும் பொறுக்கிப் போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்றான் ரமணன். “வைர முருகனைப் பற்றிய ரகசியம் அப்போதுதான் தெரிந்தது.”

"என்ன?" என்றார்கள் மூவரும்.

"எதிரியின் கண்ணைக் குருடாக்குவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறார்கள் சீனக்கொடுமையாளர்கள் அதை. ஒரு குறிப்பிட்ட விதத்தில் வைர முருகனை மடக்கும்போது, இரண்டு பெரும் வைரங்களின் ஒளி சேர்ந்து, பார்ப்பவனின் கண்ணில் வேல் போல் பாயுமாம். ஒரு ரகசிய தஸ்தாவேஜை எவனாவது படித்துவிட்டதாகச் சந்தேகம் வந்தால் அவனை வாழ்நாள் பூராக் குருடனாக்குவது சீனர் தண்டனை. அவனை வரவழைத்து, வைர முருகனைச் சும்மா காட்டுகிற மாதிரி பார்க்க வைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மடக்கியும் காட்டுவார்கள். உடனேயே அவன் பார்வை போய்விடாது. சில நாள்கள் கழித்து அந்த ஒளியின் சக்தி வேலை செய்யும். ஆனால் அவனுக்கு வைர முருகனால்தான் அப்படி நேர்ந்தது என்று தெரியாது! இப்படிச் சென்ற நூற்றாண்டுகளில் பல அயல் நாட்டுத் தூதர்கள், அதிகாரிகள் ஆகியோரைக் குருடாக்கியிருக்கிறார்கள்...”

ரேணுகா, குறுக்கிட்டாள்: “அப்படியானால் நஞ்சுண்டனும்...”

“தன் வினை தன்னைச் சுடும்! வைர முருகனை நஞ்சுண்டன் தன்னிடமே தானே வைத்திருந்தான் அத்தனை நாளும்? எவ்வளவு தடவை, எப்படியெல்லாம் அதைத் திருப்பியும், மடக்கியும் பார்த்தானோ! அதன் ஒளி பாய்ந்து விட்டது. என் அதிர்ஷ்டம் அல்லது அவன் துரதிர்ஷ்டம் - சாரத்தில் ஏறி ஓடும்போது பார்வை போய்விட்டது.”

டெலிபோன் அடித்தது மாடியில். ரமணன் சென்று கேட்டுவிட்டு வந்தான் "இன்னொரு நல்ல நியூஸ், மீனம்பாக்கம், விமான நிலையத்தில் பிளேன் ஏறித் தப்பியோடவிருந்த சமயத்த்த்த்தில் ஸூவானும், லின்டாங்கும் கைது செய்யப்பட்டு விட்டார்கள்.”

“என்ன கூட்டம் பேஷண்டின் அறையில்! விலகுங்கள்! ஊம், ஊம்!” வழக்கமான சிடுசிடுப்புடன், கையில் ஊசிப் பெட்டியுடன் உள்ளே நுழைந்தாள் டாக்டர் நாமகிரி. ரமணனை நேருக்குநேர் சந்தித்ததும், "ஓ... நீயா... ஐ திங்க் ஐ ஓ யூ ஏன் அபாலஜி” என்றாள் தன் சிடுசிடுப்பைக் குறைத்துக் கொண்டு. “போலீஸ் கமிஷனர் உன்னைப் பற்றிச் சொன்னார் காலையில், நான் தப்பாக நினைத்திருந்தேன்.”

“அதனாலென்ன டாக்டர்?” கும்பிட்டுவிட்டு வெளியேறினான் ரமணன்.

"எங்கே கிளம்பிவிட்டாய், ரமணன்? இரு. உனக்குப் பெரிய பாராட்டு விழாவெல்லாம் நடத்த வேண்டும்” என்று குழந்தைப்பாண்டியன் குரல் கொடுத்தார்.

ரமணன் நிற்கவில்லை. டாக்டர் நாமகிரியின் கையிலிருந்த ஊசிப் பெட்டி அவனுக்குத் தாவூதை நினைவுபடுத்திவிட்டது. அந்தச் சிறுவன் செய்த மகத்தான தியாகம் சட்டென அவனுக்குப் புரிந்தும் போயிற்று.

ரமணன்களும் போலீஸ் கமிஷனர்களும் அல்ல அவர்களுக்கு உயிரூட்டும் கரங்களாக, முகம் தெரியாத மாணிக்கங்களாக, ஆயிரக்கணக்கான தாவூதுகள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்களே, அவர்களால்தான். இந்த உலகில் நீதி நிலைபெறுகிறது நியாயம் தழைக்கிறது.

தாவூது! புழுதியின் செல்வனே! இதோ வருகிறேன், உன்னைக் காப்பாற்ற.

ரமணனின் மோட்டார் பைக் பறந்தது. சாகசங்களும் சண்டைகளும் அவனுக்காகக் காத்திருக்கின்றன. அவனுக்கு ஓய்வுக்கு நேரமில்லை. அவன் ஒளிவதற்கு இடமில்லை.

நிறைந்தது